Search This Blog

Monday, 23 December 2024

அண்ணலாரும் அறிவியலும்

 

அண்ணலாரும் அறிவியலும்

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى

அவர் தன் இஷ்டப்படி எதையும் பேசுவதில்லை. இது அவருக்கு வஹ்யி (எனும் இறைச்செய்தி) மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை. திருக்குர்ஆன்:-53:3,4

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மனித குலத்திற்கு நன்மைகள் நிறைந்தது. நபியவர்களின் எந்த ஒரு நடைமுறையும் விஞ்ஞான ரீதியாக மறுபரிசீலனை செய்யத் தேவையிருக்காது.

 

நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன்.  திருக்குர்ஆன்:- 59:7

 

எல்லாம் உண்மையே!

 

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறும் எல்லா விஷயங்களையும் மனனம் செய்ய நாடி அவற்றை எழுதிவந்தேன். ஆனால், என்னை குறைஷியர் தடுத்தனர்.

 

“நபியவர்கள் கோபத்திலும் மகிழ்ச்சியிலும் பேசும் ஒரு மனிதராக இருக்கும் நிலையில் அவர்களிடமிருந்து நீர் செவியுறும் எல்லா விஷயங்களையும் எழுதுகிறீரே?" என்று கேட்டனர். எனவே, இதைக் கேட்ட நான் எழுதுவதை நிறுத்திவிட்டு, நபியவர்களிடம் சென்று இதைப்பற்றி முறையிட்டேன்.

 

அப்போது நபியவர்கள் தம் விரல்களால் வாயைச் சுட்டிக்காட்டி, ( اكْتُبْ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا يَخْرُجُ مِنْهُ إِلاَّ حَقٌّ ) "நீர் எழுதுவீராக! என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக! இதிலிருந்து உண்மையைத் தவிர வேறு எதுவும் வெளிவராது" என்று கூறினார்கள். குறைஷியரின் பேச்சைக் கேட்டு சில நாள்கள் எழுதுவதை நிறுத்தி இருந்த நான், அன்றிலிருந்து நபியவர்களின் அனைத்துப் பேச்சுக்களையும் மீண்டும் எழுதத் துவங்கினேன். நூல்:-  அபூதாவூத்-3161, முஸ்னது அஹ்மத்-6221, தாரிமீ-484 ஹாகிம்

 

குர்ஆனைத் தவிர மற்றதை எழுதி வைக்க வேண்டாம் என்று தடுத்திருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டும் நபிமொழிகளை எழுதி வைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கியிருந்தார்கள்.

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபியவர்களின் காலத்திலேயே நபிமொழிகளை தொகுத்து வைத்திருந்தார். எனவே, அவர் தொகுத்து வைத்திருந்த நபிமொழிகளின் தொகுப்பிற்கு "முஸ்னது அப்துல்லாஹ் பின் அம்ர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

மண்ணே மருந்து

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُغْسَلُ الإِنَاءُ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ سَبْعَ مَرَّاتٍ أُولاَهُنَّ أَوْ أُخْرَاهُنَّ بِالتُّرَابِ ) நாய் வாய்வைத்த பாத்திரம் ஏழு தடவை (தண்ணீரால்) கழுவப்பட வேண்டும். அவற்றின் முதல் தடவையோ அல்லது கடைசித் தடவையோ மண்ணிட்டு கழுவ வேண்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-172, முஸ்லிம்-469, திர்மிதீ-84

 

நாய் ஒரு பாத்திரத்தில் வாய் வைத்துவிட்டால் அந்தப் பாத்திரத்தில் உள்ள உணவுப் பொருளை கொட்டிவிட வேண்டும். மேலும், அந்தப் பாத்திரத்தை நன்றாகக் கழுவிட வேண்டும். ஏழு தடவை அந்தப் பாத்திரத்தை கழுவிட வேண்டும். முதல் தடவை(யோ அல்லது கடைசித் தடவையோ) மண்ணைப் பயன்படுத்தி இவ்வாறு செய்வது கட்டாயம் என்று அறிஞர்களில் சிலரும், ஏற்றது என்று வேறு சிலரும் கூறுகின்றனர். மேலும், நாயின் எச்சில் அசுத்தமானது என இதிலிருந்து அறிய முடிகிறது. நூல்:-  அல்மின்ஹாஜ், ஃபத்ஹுல் முல்ஹிம்

 

மேலை நாட்டு ஆய்வாளர் ஒருவர் நாயின் வாயில் இருந்து வரக்கூடிய எச்சிலில் பயங்கரமான நோய்களை உருவாக்கும் கிருமிகள் இருப்பதை கண்டறிந்து, இந்தக் கிருமிகளை அழிப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதற்கான ஆய்வில் இறங்கினார். எந்த மருந்தாலும் அவற்றைக் கொல்ல முடியவில்லை.  இறுதியில் அவர் தோற்றுப்போனார். வெறுத்துப்போய் கோபத்தில் ஆய்வுக்காக வைத்திருந்த அந்த எச்சிலை மண்ணில் வீசியெறிந்தார். பிறகு மண்ணில் கிடந்த அந்த கிருமிகளைப் பார்க்கிறார். அந்த கிருமிகள் அனைத்தும் செத்துப்போய் கிடந்தன. அவருக்கோ ஆச்சரியம். மீண்டும் ஆய்வை தொடர்ந்தார். இறுதியில் அந்த கிருமிகளை கொல்வதற்கு சரியான மருந்து மண் தான் என்று கண்டறிந்து வெற்றி கண்டார்.

 

உடலுறவு கொண்டபின்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهْوَ جُنُبٌ، غَسَلَ فَرْجَهُ، وَتَوَضَّأَ لِلصَّلاَةِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்ட நிலையில் உறங்க நினைத்தால், தனது மர்ம உறுப்பை கழுவிவிட்டு, தொழுகைக்கு அங்கத்தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். (அதன் பின்னர் உறங்குவார்கள்.) நூல்:-  புகாரீ-288, திர்மிதீ-111

 

உடலுறவு கொண்டபின் புணர்ச்சியினால் ஏற்படும் களைப்பு நீங்க, குளிர்ந்த நீரில் கை, கால், முகம், பிறப்புறுப்பு ஆகியவற்றை கழுவிக்கொள்வதின் மூலம் உடல் பலம் பெற்று விந்து உற்பத்தில் வளம்பெற்று, ஆண்மை பலம் பெறும் என்கின்றனர் ஆய்வாளர்கள். நன்றி:- தினமணிக்கதிர் 10-7-2005

 

நின்றுகொண்டு நீர் அருந்துவது

 

அபூ சஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم زَجَرَ عَنِ الشُّرْبِ قَائِمًا ) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு நீர் அருந்துவதை கண்டித்தார்கள். நூல்:- முஸ்லிம்-4117

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ فَلْيَسْتَقِئْ ) உங்களில் யாரும் நின்று கொண்டு (நீர்) அருந்த வேண்டாம். யாரேனும் மறந்து(போய் நின்றுகொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4119

 

நின்று கொண்டு நீர் அருந்திவிட்டவர் வாந்தி எடுக்க வேண்டும் என்பது, ஒரு விரும்பத்தக்க செயல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்; கட்டாயமன்று. நூல்:- அல்மின்ஹாஜ், தக்மிலா

 

தண்ணீரை நின்றுகொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ அருந்தினால் இரைப்பையும், நரம்புகளும் பலவீனமடைகின்றன. நின்ற நிலையில் தண்ணீர் பருகுவதால் நீரிழிவு வியாதி உண்டாகும் என்று இன்றைய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

 

தண்ணீரை உட்கார்ந்துகொண்டு தான் அருந்தவேண்டும். மாறாக, நின்றுகொண்டு தண்ணீரை அருந்தும்போது தண்ணீர் வயிற்றிற்கு அதிவேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா (ஹெர்னியா  எனும்) குடலிறக்கம் நோய் ஏற்படும்

 

நின்று கொண்டு தண்ணீரை அருந்தும்போது, நீரானது குடலில் நேராக பாய்வதோடு, குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. இப்படி தாக்குவதால் குடல் சுவர் மற்றும் இரைப்பை குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படும். இப்படியே நீண்ட நாள்கள் நின்றவாறு நீரைப் பருகி வந்தால், இரைப்பை குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, அதனால் செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும்.

 

சிறுநீரக பாதிப்பு: தண்ணீரை நின்றவாறோ அல்லது நடந்தவாறோ அருந்தினால், சிறுநீரகங்களின் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். இப்படி சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், அதனால் சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை அல்லது இரத்தத்தில் நச்சுக்கள் அப்படியே தங்கி, அதனால் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அதுவே உட்கார்ந்து அருந்தினால், நீரானது உடலின் அனைத்து இடங்களிலும் நுழைந்து நச்சுக்களை அடித்துக் கொண்டு சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுக்களை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

 

ஆர்த்ரிடிஸ்: சில ஆய்வுகளில் நின்றுகொண்டே தண்ணீர் அருந்தினால், ஆர்த்ரிடிஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாக சொல்கிறது. அதுவும் தண்ணீரை நின்றவாறு அருந்தினால், அது உடலின் மூட்டுப்பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இப்படியே நீண்ட நாள்கள் இப்பழக்கத்தைக் கொண்டால், நாளடைவில் அது மூட்டு வலிக்கு உட்படுத்தி, ஆர்த்ரிடிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.

 

நரம்புகள் டென்சன் ஆகும்: பொதுவாக நின்று கொண்டிருக்கும்போது சிம்பதெடிக் நரம்பு மண்டலமானது செயல்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும்இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்படுவது என்று உடலே சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும். அந்நேரம் அருந்தினால், நீரானது நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து வெளியேறும். ஆனால் உட்கார்ந்து இருக்கும்போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயல்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயல்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள் மற்றும் குடிக்கும் நீரை அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

 

அண்ணாந்து அருந்தினால்: டம்ளரில் வாய்வைத்து அருந்தினால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் குடித்தால் காது நோய்களுக்கு வழிவகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் அருந்தினதால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது,மூக்கு,தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.

 

சில குறிப்புகள்: உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதிய அளவில் தண்ணீரை உட்கார்ந்து அருந்த வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பருகி வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

காலையில் எழுந்ததும் 1-3 டம்ளர் தண்ணீர் அருந்தலாம்.

மதிய உணவுக்கு முன் 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் அருந்தலாம்.

இரவு உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் 2-3 கப் அருந்தலாம்.

டம்ளரில் நன்றாக வாய் வைத்து அருந்தவேண்டும்.

அவசரமின்றி மெதுவாகக் அருந்தவேண்டும்.

வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும்.

 

நம்மில் பலரும் நின்று கொண்டு நீர் அருந்துவதும், இடது கையால் அருந்துவதும், ஒரே மூச்சில் அவசரமாக அருந்துவதும் சர்வ சாதாரணமாகவே செய்கிறோம்.

 

ஒரே மூச்சில் அருந்தாதே: அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வந்தார்கள். மேலும், "இதுவே நன்கு தாகத்தைத் தணிக்கக் கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றுவதும் அழகிய முறையில் செரிக்கக் செய்யக் கூடியதும் ஆகும்" என்று கூறினார்கள். ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை ஊற்றிவிட்டு (அருந்தி) வருகிறேன். நூல்:- முஸ்லிம்-4126

 

தண்ணீரோ மற்ற பானங்களோ அருந்தும்போது ஒரு ஒரே மூச்சில் அருந்தக்கூடாது. அத்துடன் பருகும் பானத்தில் மூச்சு விடவும் கூடாது. மாறாக, இடையிடையே கோப்பையை வாயிலிருந்து எடுத்து, கோப்பைக்கு வெளியே மூச்சுவிட்டு, குறைந்தது மூன்று தடவையாவது இவ்வாறு செய்வது நல்லது. (இது நபிவழி ஆகும்.) வாங்கிய மூச்சை வெளியேற்றும்போது, அது கரியமில வாயுவாக (Carbon Dioxide) மாறிவிடும். அது பானத்தில் பட்டால் நோயை உண்டாக்க சாத்தியமுண்டு. அவ்வாறு இடைவெளி விட்டு அருந்தினால்தான் தாகம் தணிந்து, உடல் வெப்பமும் தணியும். ஒரே மூச்சில் அருந்தும்போது மூச்சு தடைபடுவதற்கும் வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

அசுத்தக் காற்றாகிய கரியமில வாயுவை பற்றி ஒரு சிறு குறிப்பின் மூலம் உணர்த்த முடியும். நான்கு சுவர்கள் உள்ள அறை ஒன்றில் ஜன்னல், வாசல் கதவுகளையெல்லாம் நன்றாக மூடிவிட்டு, இரண்டு மூன்று நாட்கள் சென்றபின், கதவைத் திறந்து கொண்டு உடனே உள்ளே சென்றால், அந்த அறைக்குள் அவியல் மாதிரியான ஒரு கடுமையான வெக்கை மற்றும் நாற்றம் வெளியாகும். அந்நாற்றத்தில் ஒருவன் அதிக நேரம் நின்று கொண்டிருந்தால், அவன் மயங்கி விழ கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அதைப்பற்றி பலர் அனுபவத்தில் அறிந்திருக்கலாம். இப்படி அந்த மூடிய அறைக்குள் ஏற்படக்கூடிய மயக்கம் உண்டாகும்படியான நாற்றக் காற்று தான் கரியமில வாயு என்பது.

 

அக்காற்று மனிதனின் இரத்தத்தில் அதிகமாகக் கலந்து மயக்கம் உண்டாக்கும் தன்மை உள்ளது. இத் தன்மையுள்ள வாயு, நம் வாயால் ஊதும் போதும், மூச்சு விடும்போதும், பிற பொருட்களில் படுகின்றது. அவ்வாறு பொருட்களில் படும்போது, அப்பொருள்கள் கெட்டுப்போக வாய்ப்புண்டு. சூடாக உள்ள பொருட்களில், முக்கியமாக - திரவமாக உள்ள பொருட்களில் கரியமிலவாயு இரண்டறக் கலந்துவிட்டால், அந்தத் திரவப் பொருள் கொஞ்சம் காரப் பொருளாக (Alkali) மாறி விடுகின்றன. இப்படி மாறிய பொருளை பருகினால் பல வகையான வயிற்று உபாதைகள் வரக்கூடும்  என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

சிறுநீர் கழிக்கும் முறை

 

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள்,     ( يَا عُمَرُ لاَ تَبُلْ قَائِمًا ) "உமரே! நின்று கொண்டு சிறுநீர் கழிக்காதீர்!" என்று (என்னிடம்) கூறினார்கள். அதன் பின்னர் நான் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததே இல்லை.   நூல்:- திர்மிதீ-12, இப்னுமாஜா-304

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஒழுங்கீனமான செயலாகும். நூல்:- திர்மிதீ-12

 

இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதற்கு வந்துள்ள விலக்கு, (ஹராம் எனும்) தடைசெய்யப்பட்டது என்ற பொருளில் வந்ததன்று. மாறாக, "ஒழுக்க போதனை" (தார்மீகப் பண்பு) என்ற அடிப்படையிலானதாகும்.

 

நமது மூத்திரக்கோச முனைக்கும் பித்தட்டுக்கும் இடையில் சிறுநீரைத் தாங்கி வரும் சுமார் பதினாறு அங்குலம் நீளங் கொண்ட இரு குழாய்கள் உள்ளன. முழங்கால்களை மடித்து, குந்தி இருந்து சிறுநீர் பெய்யும்போது 'வீ' (V) அமைப்பில் மடிந்து விடுகின்றன. மடிப்பின் மேற்பகுதியில் சிறுநீர் தேங்கி நிற்க, கீழ்நோக்கித் தொங்கும் மறு பகுதியில் உள்ள நீர் மட்டுமே மூத்திர கோசத்தின் நுனிவாய் மூலம் வெளியேறுகிறது. சிறுநீர் கழித்து முடிந்து முடிந்து எழுந்ததும், அந்நீர்த்துளிகள் சொட்டுச் சொட்டாக கீழ்நோக்கி இறங்குவதை அனைவரும் அனுபவிக்கிறோம்.

 

மடிப்புக்குழாயில் தேங்கி நிற்கும் நீரை, களிமண் (டேலா) கட்டி மூலம் ஒரு சிறுதுளியேனும் தேக்கம் இல்லாமல் உறிஞ்சப்பட வேண்டுமென்பதற்காகவே சிறுநீர் கழித்தலின் இறுதியில் கனைத்தல் செய்ய வேண்டும். என்றும் இடது கரத்தால் மண்வெட்டியை உபயோகித்து ஏறத்தாழ நாற்பது சுவடுகள் வரை மெல்ல நடைப்பதன் மூலம் மடிப்பின் இடையில் தேங்கி நிற்கும் சிறிதளவு சிறுநீரும், அவ்விடத்தில் எஞ்சாதபடி மண்கட்டியால் உறிஞ்சப்பட்ட பின்னர் தண்ணீரால் கழுவித் துப்பரவு செய்வதனால் உடலும் உடையும் சுத்தமாக இருப்பதற்கு உதவி புரிகிறது என்றும் இஸ்லாம் இயம்புகிறது.

 

நின்ற நிலையில் சிறுநீர் கழித்தல் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. (Ostatitis) சுக்கிலப்பை ஒவ்வாமை ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. போகப்போக சிறுநீர் அடைப்பு, சொட்டுச் சொட்டாக நீர் வந்துகொண்டே இருப்பது, கிட்னியில் கல், குடலிறக்கம், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள் உருவாக ஆரம்பிக்கின்றன என்கிறது மருத்துவ உலகம்.

 

படுக்கைக்கு வந்தால்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ إِزَارِهِ ثَلاَثَ مَرَّاتٍ فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ بَعْدَهُ ) ஒருவர் தனது படுக்கையில் இருந்து எழுந்து சென்ற பிறகு மீண்டும் நீங்கள் படுக்கைக்கு சென்றால் உங்கள் கீழங்கியின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். ஏனெனில், அதில் என்ன (விஷ ஜந்து) ஒளிந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6320, முஸ்லிம்-5257, அபூதாவூத்-4391, திர்மிதீ-3313

 

நாம் படுக்கை விரிப்பை உதறினால், உடனே அலர்ஜியால் தும்மல் வரும் அல்லவா? இந்தத் தும்மலுக்கு காரணம் “ஹவுஸ் டெஸ்ட் மைட்" எனும் கிருமிகள் தான். கண்ணுக்குத் தென்படாத இக்கிருமிகள், நம் உடலிலிருந்து உதிரும் பழைய தோலை சாப்பிடுகின்றன. இந்த கிருமிகளை மைக்ரோஸ்கோப் மூலமாகத்தான் பார்க்க முடியும். பார்ப்பதற்கு காண்டாமிருகத்தை போன்ற உருவ அமைப்புடன் இருக்கும். இவை தினமும் இரண்டாயிரம் முறை, கழிவுகளை வெளியேற்றுவதே அலர்ஜிக்கு காரணம். நன்றி:- தினமலர் வார மலர் 19-11-2017

 

சாப்பிட்ட பின் விரல்களை சூப்புதல்

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَ بِلَعْقِ الأَصَابِعِ وَالصَّحْفَةِ )  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “(உணவு உண்டு முடித்தவர் தம்) விரல்களை உறிஞ்சுமாறும் உணவுத் தட்டை வழித்து உண்ணுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், ( إِنَّكُمْ لاَ تَدْرُونَ فِى أَيِّهِ الْبَرَكَةُ ) உணவின் எந்தப் பகுதியில் (பரக்கத் எனும்) அருள்வளம் உள்ளது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றும் கூறினார்கள். நூல்:- முஸ்லிம்:4136

 

பரக்கத் என்றால் நம் புலனுக்குத் தெரியாத மறைமுக அருள் என்று பொருள். விரலைச் சூப்புவது இன்று அநாகரிகமாகப் பார்க்கப்படுகிறது. மேலைநாட்டவர்கள் சாப்பிடுவதற்கு கரண்டியைப் பயன்படுத்தி வருவதால் ஈர்க்கப்பட்டவர்கள் இதை அநாகரிகம் என்று சித்தரித்துவிட்டனர்.

 

மேலை நாட்டவர்கள் நம்மைப் போல் தினமும் குளிக்கமாட்டார்கள். மலம் கழித்தால்கூட துடைத்துவிட்டு போவார்களே தவிர, கழுவமாட்டார்கள். தண்ணீர் என்றால் அவர்களுக்கு அவ்வளவு அலர்ஜி. விரல்களால் சாப்பிட்டால் தண்ணீரைப் பயன்படுத்தவேண்டிய நிலை வரும் என்பதால், அவர்கள் கரண்டியால் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், விரல்களைப் பயன்படுத்தி சாப்பிடுவதும், விரல்களைச் சூப்புவதும் தான் சிறந்த நாகரிகமாகும்.

 

பொதுவாக, ஈரமான பொருளில் அல்லது திரவத்தில் விரல்கள் படும்போது விரல்களில் இருந்து ஒரு திரவம் சுரக்கும். அந்தத் திரவம் எளிதில் அப்பொருளை ஜீரணமாக்கி விடும் என்பதால் விரல்களைக் சூப்புவது தான் சரியான உண்ணும் முறையாகும்.

 

இதை அறிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சியாளர்களிடம் நாம் கேட்கத் தேவையில்லை. நாமே பரிசோதனை செய்து அறிந்துகொள்ளலாம்.

 

ஒரு குழம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு பாத்திரங்களில் ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தில் ஏதாவது ஒரு கரண்டியைப் போடுங்கள். இன்னொரு பாத்திரத்தில் உள்ள குழம்பில் சிறிது நேரம் விரலை வைத்து விட்டு எடுத்துவிடுங்கள்.

 

விரலை விட்ட குழம்பு சில மணி நேரங்களில் நொதித்துப் போய் இருப்பதையும், கரண்டியைப் போட்ட குழம்பு நொதிக்காமல் இருப்பதையும் நீங்கள் காணலாம். இதை சமையலறையில் உள்ள எல்லா பெண்களும் அறிவார்கள். உணவு நொதித்துப் போவதுதான் ஜீரணத்தின் ஆரம்ப நிலையாகும்.

 

எனவே சாப்பிட்ட பின் விரலைச் சூப்புவதால் விரலில் சுரக்கும் திரவம் உணவில் கலந்து அது எளிதில் ஜீரணமாகும் நிலைக்கு மென்மைப்படுத்துகிறது. நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நன்மை தரும், இது போன்ற நல்ல பழக்கங்களை நாம் யாருக்காகவும் விட்டுவிடக் கூடாது.

 

ஈ விழுந்துவிட்டால்...

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَامْقُلُوهُ فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ دَاءً وَفِي الآخَرِ شِفَاءً وَإِنَّهُ يَتَّقِي بِجَنَاحِهِ الَّذِي فِيهِ الدَّاءُ فَلْيَغْمِسْهُ كُلَّهُ ‏ ) உங்களில் ஒருவரது (உணவு மற்றும் பானங்கள் உள்ள) பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால், ஈயை முழுவதுமாக அமிழ்த்துங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றை நோய் இருக்கிறது. மற்றொன்றில் நிவாரணம் இருக்கிறது. அது நோயுள்ள இறக்கையின் புறமாகத்தான் முன்னோக்கி விழும். எனவே, அதை முழுவதுமாக மூழ்க வைத்து எடுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3320, அபூதாவூத்-3346, நசாயீ-4189, இப்னுமாஜா-4396

 

ஈயின் ஓர் இறக்கையில் விஷமும், மற்றொன்றில் விஷ முறிவும் உள்ளது. அது உணவுப்பொருள்களில் வந்து அமரும்போது இரண்டு இறக்கைகளையும் சேர்த்து அமிழ்த்துவதால் நிவாரணம் கிடைத்துவிடும். விஷமுள்ள இறக்கை இடப்பக்கத்திலும் விஷ முறிவு இறக்கை வலப்பக்கத்திலும் இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. நூல்:- தகீரத்துல் உக்பா, ஃபத்ஹுல் பாரீ

 

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல விலங்கியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். “ஈக்கள் பொதுவாக அசிங்கமான இடங்களிலும் கழிவுகளிலும் அதிகம் வாசம் செய்வதால் அவை கிருமித் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனால் ஈ இனமே அழிந்துவிடும் சாத்தியம் இருந்தும்கூட அவை எப்படித் தொடர்ந்தும் உயிர் வாழ்கின்றன என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான காரணத்தை அறிய ஆவல்கொண்டேன்.

 

எனவே, ஒருநாள் எத்தனால் திரவத்தில் கொஞ்சம் ஈக்களைப் பிடித்துப்போட்டு அதில் ஊறவைத்தேன். மறுநாள் அந்தத் திரவத்தைப் பார்த்தபோது அதன் மேல்பகுதியில் ஆடை போன்ற திரவம் படிந்திருந்தது. அதை எடுத்து ஆய்வு செய்தபோது, அது முழுக்க முழுக்க நோய் எதிர்ப்புச்சக்தியின் திரட்டு என்பதை அறிந்துகொண்டேன். ஒப்பீட்டளவில் மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்புச்சக்தியின் அளவைவிட ஈயின் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச்சக்தியின் அளவு பன்மடங்கு அதிகமாகவே உள்ளது” என்பதை அறிந்தேன்.

 

ஈக்கள் அதிகமாக குப்பை கூழங்களிலும் அழுகிய உணவுப் பொருள்களிலும் நகர்ப்புறங்களில் அழுகிய வாய்க்கால்களிலும் மலசலகூடங்களிலும் அதிகமாகச் சஞ்சரிக்கின்றன. ஓரிடத்தில் ஈயொன்று போய் அமர்ந்தால் அவற்றின் உடலிலும் கால்களிலும் உள்ள ஆயிரக்கணக்கான மயிர்களில் ஆயிரக்கணக்கான நுண்கிருமிகள் தொற்றிக்கொள்கின்றன. ஈக்கள் உணவுகளில் வந்து மொய்க்கும்போது அக்கிருமிகள் உணவுகளிலும் தொற்றிக்கொள்கின்றன. இதனால் மனிதன் பல நோய்களுக்கும் ஆளாகின்றான். ஆனாலும், அல்லாஹ் அதே ஈக்களில் நோயெதிர்ப்புச் சக்தியையும் வைத்துள்ளான். இன்று விஞ்ஞானம் கூறும் இத்தகவலை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார்கள்.


தவளையை கொல்லாதீர்கள்

 

அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது. மருத்துவர் ஒருவர் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் மருந்திற்காகத் தவளையைப் பயன்படுத்துவது குறித்து வினவியபோது, நபியவர்கள் அதை கொல்ல வேண்டாம் எனத் தடைசெய்தார்கள். நூல்:- அபூதாவூத்-4585, நஸாயீ-4280, தாரிமீ-1914

 

மற்ற உயரினங்களை காட்டிலும் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து தவளையை கொல்லாதீர்கள் என்று சொன்னதற்கு ஏதாவது காரணம் இருக்குமே! அது என்னவென்று அறிவியல் ஆய்வுகள் விவரிக்கிறது.

 

தற்காலத்தில் அதிகம் உடல் நலக்குறைவு வருவதற்கு  காரணமாய் இருப்பது கொசுக்கள் தான் என்பது பல கட்ட ஆய்வின் மூலம் நிருபணமாகியுள்ளது. இப்போது பரவலாக பேசப்படும் காய்ச்சலின் பெயர் டெங்கு காய்ச்சல் அது மிகவும் ஆபத்தானது.

 

அது பரவும் விதம் வீதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரிலிருந்தும், வீட்டில் இருக்கும் உடைந்த பிளாஸ்டிக் மற்றும் தேங்காய் நார்களில் தேங்கும் தண்ணீர்களில் இருந்தும் அது பரவுகிறது.

 

அந்தத் தண்ணீரில் அமரும் கொசுக்கள் அதிக இனப்பெருக்கம் பெற்று வீரியம் அடைந்து ஊருக்குள் உலா வர துவங்குகின்றன.

 

அது நம்மை கடித்த பின்பு பல்வேறு  கொடிய நோய்கள் நம்மை தாக்குகிறது. தாக்கும் அந்த கொசுக்களை கட்டுப்படுத்த முடியாமல்  நாம் திணறுகின்றோம்.

 

ஆனால் இவைகளை கட்டுப்படுத்தும் திறன் தவளைக்குத்தான் உள்ளது. அதாவது தவளைகள் நீர் நிலைகளில் உணவுக்காக இந்த கொசுக்களை பிடித்து உண்டுவிடும்.

 

இது நாள் வரை அப்படி உண்டு வந்ததால் கொசுக்கள் குறைந்திருந்தன, ஆனால், விவசாயத்துக்கு அடிக்கப்படும் மிக அதிகமான திறன்கொண்ட விஷத்தன்மை உடைய உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் நத்தை புழுக்கள் சாவதுடன் அவைகளை உண்ணும் தவளைகளும் செத்துவிடுகின்றன.

 

அவ்வாறு தவளைகள் சாவதால் நோய் கிருமியை பரப்பும் கொசுக்களை கட்டப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. எனவே, தவளைகளை  உயிரோடு வாழ வழிவகை காணவேண்டும்.

 

தவளைகளை கொல்வதின் மூலம் இன்னும் புதுவிதமான நோய்கள் வருவதற்கு காரணமாகிவிடும். மனித இழப்புகளும் தவிர்க்க முடியாமல் போய் விடும் என்று என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

 

தேனீயைக் கொல்லாதீர்கள்  

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ النَّمْلَةِ وَالنَّحْلِ وَالْهُدْهُدِ وَالصُّرَدِ ) நான்கு உயிரினங்களைக் கொல்வதை தடை செய்தார்கள். அவை: எறும்பு, தேனீ, ஹுத் ஹுத் பறவை, ஸுரத் கொல் பறவை ஆகியவையாகும். நூல்:-  அபூதாவூத்-4583, இப்னுமாஜா-3215, முஸ்னது அஹ்மத்-2907 தாரிமீ-1915

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الذبابُ كلُّهُ في النارِ إلَّا النحلَةُ ) தேனீயைத் தவிர, மற்ற அனைத்து ஈக்களும் நரகத்திற்குச் செல்பவை ஆகும். அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அல்கபீர் இமாம் தப்ரானீ, அல்முஃஜம் அபூயஅலா, மஜ்மஉஸ் ஸவாயித்          

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الذُّبَانُ كُلُّهَا فِي النَّارِ يَجْعَلُهَا عَذَابًا لِأَهْلِ النَّارِ إِلَّا النَّحْلَ ) தேனீக்களைத் தவிர, மற்ற அனைத்து ஈக்களுக்கும் நரகம் தான். அவற்றைக் கொண்டு நரகவாசிகளுக்கு வேதனை செய்யப்படும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- நவாதிரில் உசூல், தஃப்சீர் குர்துபீ அந்நஹ்ல் வசனம்-28

 

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தேனீக்கள் குறித்து,  "உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்” என்று கூறினார்.

 

மகரந்தத் தூள் ஒரு தாவரத்தில் இருந்து மற்றொன்றிற்கு கடத்தப்படும்போது மகரந்தச் சேர்க்கை நடக்கும். இதனால் தாவரங்கள் பல்கிப் பெருகும். 80% மகரந்தச் சேர்க்கைக்கு தேனீ, பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்களே காரணம் என்கிறது ஐ.நா. அறிக்கை.

 

தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்த தூள், அடுத்தடுத்த பூக்களின் மேல் அவை உட்காரும்போது பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்கு முக்கிய காரணம். பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்குக் கடத்துவதன் மூலமாக, தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்கின்றன என்றே சொல்லலாம்.

 

"தேனீக்கள் இல்லையென்றால் தக்காளி, வெங்காயம், இது போன்ற காய்கறிகள், தென்னை, வாழை, எண்ணெய் உற்பத்திக்கான பயிர்கள் பாதாம், வால்நட்டுகள், தேயிலை, காபி, கோகோ பீன்கள்,  ஆப்பிள், ஏலக்காய், பருத்தி போன்ற பல பயிர்களில் மகரந்தச் சேர்க்கைகள் பாதிக்கப்படும். இது மனித உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்  என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, தேன் உற்பத்திக்கு மட்டுமல்லாது, உலகளவிலான உணவு உற்பத்திக்கும் தேனீக்கள் இன்றியமையாததாக உள்ளன.

 

தேனீக்கள் என்பவை தேன் கொடுக்க மட்டும்தான் இந்த உலகத்தில் உள்ளன என்றுதானே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். 

 

தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கைக்காக மனிதர்கள் அதைக் கண்டிப்பாகப் பாதுகாக்க வேண்டும். உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர் இந்த தேனீக்கள்தான். தேனீக்களின் மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால், தாவர இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படும். பின்னர் உணவு உற்பத்தி குறைந்து, மனித அழிவின் தொடக்கமாக அது இருக்கும்.  

 

தேனீக்கள் மட்டுமல்லாது பல பூச்சிகளையும்கூட மனிதர்கள் ஓர் உயிராகவே மதிப்பதில்லை. மனிதர்கள் இந்த தேனீக்களை மிகவும் சாதாரணமான பூச்சிகளாகப் பார்க்கிறார்கள். அதற்கு கொடுக்கு மட்டும் இல்லையென்றால் எளிதாக அவற்றை அழிக்கவும் தயாராகவே இருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

எந்தெந்த வழிகளில் மனிதர்களால் தேனீக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதை பட்டியலிட்டு விளக்கினார் முனைவர் பிரியதர்ஷனன் தர்ம ராஜன். இவர் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான அசோகா அறக்கட்டளையின் மூத்த நிபுணர்.

 

சில பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளின் பயன்பாடு தேனீக்களை நேரடியாக கொல்லலாம் அல்லது அவற்றைக் கடுமையாக பலவீனப்படுத்தலாம். தேனீக்களின் அழிவுக்கு அவைதான் முக்கிய காரணம்.

 

தேனீக்கள் விளைநிலங்களையும் பூக்களையும் தேடிச் செல்வது உணவுக்காகவும், மகரந்தச் சேர்க்கைக்காகவும் தான். விவசாய நிலங்கள் அழிக்கப்படும்போது அவை உணவின்றி அழிவைச் சந்திக்கின்றன.

 

தேனீக்களில் காட்டுத் தேனீ வகைகள் தான் அதிகம். சாதாரண தேனீக்களைப் போல அல்லாமல், காட்டுத் தேனீக்களுக்கு மிகப்பெரிய வாழ்விடம் தேவைப்படுகிறது. காடுகள், மரங்கள் அழிக்கப்படும்போது, அவை கூடுகள் கட்டும், உணவு சேகரிக்கும் பகுதிகளும் சேர்ந்தே அழிகின்றன.

 

தற்போது அழிந்துவரும் உயிரினம் பட்டியலில் தேனீக்கள் இடம்பெற்றுள்ளது என்ற தகவல் பெரிய ஆபத்தாகும்.

 

யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள்.

 

தேனீக்களின் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவுசேகரிக்கச் சென்ற பணிபுரியும் தேனீக்கள் கொத்துக் கொத்தாகக் காணாமல் போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித்தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதென்றுத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில் வேறுகூடு தேடிப் போய்விடும்.

 

பணித்தேனீக்கள் இப்படித் தொலைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.

 

செயற்கை உரத்தில் உள்ள நியோநிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால்கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும்.

 

மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதைதானியத்தை’உருவாக்காது. மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்,செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும். இப்படி விவசாயத்தில் 'வணிக இலாபத்துக்காக’ மனிதன் செய்த பலமாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன.

 

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்துவருடங்களாக விவசாய உற்பத்தி,பெருமளவு குறைந்து வருவதற்குக்காரணம் தேனீக்களின் இறப்பு எனத்தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.

 

சுருங்கக்கூறின்: தேனீக்களின் எண்ணிக்கை குறைந்தால் அதனால் முதலில் நேரடியாகப் பாதிக்கப்படுவது மனிதர்கள் தான் என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

மேற்காணும் நபிமொழி, தேனீக்களை நேரடியாக கொல்வதையும், கண்டிக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துதல் மற்றும் காடுகள், மரங்கள், மலைகள் அழிக்கப்படுதல் மூலம் தேனீக்கள் கொல்லப்படுவதையும் கண்டிக்கிறது

 

எனவே, அல்லாஹுத்தஆலா நம்மை, அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் ஏற்று செயல்படுத்தி வாழும், நல்லடியார்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951


No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...