கவனமற்ற தொழுகையாளி
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ
عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும்
கேடுதான். அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். திருக்குர்ஆன்:- 107:4, 5
தொழுகையில் கவனம் சிதறாமல்
இருப்பது அவசியமாகும். அவ்வாறு மன ஓர்மையோடு தொழுகையில் ஈடுபடும்போது தான் இறையருள்
கிடைக்கக்கூடும்.
அவசர அவசரமாக
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது
ஒரு மனிதர் பள்ளிவாசலுக்கு வந்து (அவசர அவசரமாக) தொழலானார். (தொழுது முடித்ததும்) அவர்
வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் பதில் சலாம் சொல்லிவிட்டு, ( ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ ) “நீர் திரும்பச் சென்று தொழுவீராக. ஏனெனில், நீர் முறையாகத் தொழவில்லை” என்று சொன்னார்கள்.
அந்த மனிதர் திரும்பிப்போய்
முன்பு தொழுததைப் போன்றே மீண்டும் தொழுதுவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சலாம் சொன்னார்.
அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வ அலைக்கஸ் ஸலாம் (உன்மீதும் சாந்தி நிலவட்டும்)
என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, நீர் (முறையாகத்) தொழவில்லை.
எனவே, திரும்பச் சென்று தொழுவீராக என்று கூறினார்கள்.
இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், ( وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ
غَيْرَهُ فَعَلِّمْنِي ) “சத்திய
(மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிடச் சிறந்த முறையில் எனக்குத்
தொழத் தெரியாது. எனவே, எனக்கு (தொழுகை முறையை)க்
கற்றுத்தாருங்கள்” என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள், ( إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ
مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى
تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى
تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا ) “நீர் தொழுகைக்கு நின்றதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர்
கூறுவீராக. பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதிக்கொள்வீராக. பிறகு (குனிந்து) ருகூஉச்
செய்வீராக. அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி நேராக நிற்பீராக.
பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக. அதில் சற்று நேரம் நிலைகொள்வீராக. பின்னர் தலையை
உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக. பிறகு இதே (நடை)முறையை உமது தொழுகை முழுவதிலும்
கடைப்பிடிப்பீராக” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-757, முஸ்லிம்-662, அபூதாவூத்-730, திர்மிதீ-279, நசாயீ-874, இப்னுமாஜா-1050
தொழுகையில் நிற்றல், குனிதல், சிரம் பணிதல் போன்ற
ஒவ்வொரு நிலையையும் நிறுத்தி நிதானமாக செய்ய வேண்டும். அதாவது, ஒவ்வொரு நிலையையும்
செய்யும் போதும் அசைவு அடங்கி சற்று நிலைகொண்டபின், அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும்.
முதல் நிலையின் அசைவு
முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே அடுத்த நிலைக்குச் செல்லக்கூடாது. அமைதி மேற்கொள்ளுவது
தொழுகையின் ஓர் அங்கமாகும். இது கடமையும்கூட. இவ்வாறு செய்யாதவர்களின் தொழுகை நிறைவேறாது
என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.
சுருங்கக்கூறின், தொழுகையில் நிதானம் தேவை. அதைத்தான் நபியவர்கள் இந்த நபிமொழியின்
மூலம் கற்றுத் தந்துள்ளார்கள்.
இமாமை முந்திக்கொண்டு
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள்.
தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, ( أَيُّهَا النَّاسُ إِنِّي إِمَامُكُمْ فَلاَ
تَسْبِقُونِي بِالرُّكُوعِ وَلاَ بِالسُّجُودِ وَلاَ بِالْقِيَامِ وَلاَ بِالاِنْصِرَافِ
فَإِنِّي أَرَاكُمْ أَمَامِي وَمِنْ خَلْفِي
) “மக்களே! நான் (உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும்
உங்களுடைய) இமாம் ஆவேன். எனவே, (தொழுகையில்) குனிதல் (ருகூஉ), சிரவணக்கம் (சஜ்தா), நிற்றல் (கியாம்) மற்றும் (சலாம் கொடுத்துத்) திரும்புதல் ஆகியவற்றில்
என்னை முந்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களை எனக்கு
முன்னாலும் பார்க்கிறேன்; எனக்குப் பின்னாலும் பார்க்கிறேன்” என்று
கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-729
பேராசான்
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَمَا يَخْشَى الَّذِي يَرْفَعُ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ
أَنْ يُحَوِّلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ ) (தொழுகையில்) இமாமுக்கு
முன்னால் தமது தலையை உயர்த்துகின்றவர், அவருடைய தலையைக் கழுதையின்
தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா? அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவர்கள் நூல்:- புகாரீ-691, முஸ்லிம்-731
அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى
السَّمَاءِ فِي الصَّلاَةِ أَوْ لاَ تَرْجِعُ إِلَيْهِمْ ) தொழும்போது
வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் அதை நிறுத்திக்கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய
பார்வை திரும்பிவராமல் போகட்டும். அறிவிப்பாளர்:-
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-734
தொழுகையில் இமாமை முந்திக்கொண்டு
ருகூஉ அல்லது சுஜூது செய்கின்றவர் தொழுகையை அவசரமாக முடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
ஆனால், இறுதில் இமாம் சலாம்
கொடுத்த பிறகு தானே அவர் தொழுகையை முடிக்க முடியும். அப்படியிருக்க, இவர் அவசரப்படுவதில்
என்ன அர்த்தம் உள்ளது?
இவரது அறியாமை, கழுதையின்
அறியாமையைப் போன்று உள்ளது. அறியாமையைக் குறிக்க கழுதையைக் குறிப்பிடுவது மக்களின்
பழக்கம். அந்த முறையில் அறியாமைக்கு ஒரு குறியீடாகவே இங்கு கழுதை குறிப்பிடப்பட்டுள்ளது
என்று சொல்லப்படுகிறது. (இரயிலில் பயணம் செய்பவர் அவசரப்பட்டு இரயிலுக்குள் ஓடுவதால்
என்ன பயன்? இரயில் போய் சேர்ந்தால் தானே அவர் ஊரை அடைய முடியும்?)
அல்லது இமாமை முந்திக்கொண்டு தொழுவது கடுமையான குற்றம்
என்பதை உணர்த்துவதற்காக கழுதையைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என எடுத்துக்
கொள்ளலாம். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
எப்படியாயினும், இமாம் பின்பற்றப்பட
வேண்டியவர். அவரை முந்திச் செல்வது கட்டமைப்பைச் சீர்குலைப்பதாகும். இது தொழுகையின்
தலைமைக்கு மட்டுமல்ல; நாட்டுத் தலைமைக்கும் பொருந்தும்.
தொழுகை திருடன்
அபூ கத்தாதா (ரலி) அவர்கள்
கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( أَسْوَأُ النَّاسِ سَرِقَةً الَّذِي يَسْرِقُ مِنْ صَلَاتِهِ ) "மக்களிலேயே மிகவும் மோசமான திருடன் யாரெனில் தனது
தொழுகையில் திருடுபவன் ஆவான்" என்று கூறினார்கள். அங்கிருந்தோர், "நாயகமே! அவன் தனது தொழுகையில் எவ்விதம் திருடுவான்?" என்று வினவினர். நபியவர்கள், ( لَا يُتِمُّ رُكُوعَهَا وَلَا سُجُودُهَا وَلَا
الْقِرَاءَةُ فِيهَا ) "அவன் தொழுகையின் ருகூஉ (குனிதலையும்) சுஜூத் (சிரவணக்கத்தையும்)
அதில் ஓதுதல் ஆகியவற்றை நிறைவாக செய்ய மாட்டான்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது
அஹ்மத், இப்னு குஸைமா, தப்ரானீ, ஹாகிம் மிஷ்காத்-885
அபூ அப்துல்லாஹ் அல்அஷ்அரீ
(ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களுக்குத் தொழ
வைத்த பின்னர் அவர்களில் சிலருடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளிவாசலுக்குள்
வந்து தொழுதார். அவர் பறவைகள் தானியங்களைக் கொத்துவதைப் போன்று ருகூஉ, சஜ்தாவைச் செய்தார்.
அதைக்கண்ட நபியவர்கள், ( أَتَرَوْنَ هَذَا، مَنْ مَاتَ عَلَى هَذَا، مَاتَ
عَلَى غَيْرِ مِلَّةِ مُحَمَّدٍ، يَنْقُرُ صَلاتَهُ كَمَا يَنْقُرُ الْغُرَابُ الدَّمَ ) "இவரைப் பார்த்தீர்களா?
இதே நிலையில் ஒருவர் மரணித்தால் அவர் முஹம்மதின்
மார்க்கம் அல்லாததில் மரணிக்கிறார். இவர், காகம் இரத்தத்தைக் கொத்தித் தின்பது போல் தொழுகையை
கொத்துகிறார்" என்று கூறினார்கள். நூல்:-
இப்னு குஸைமா-665, பைஹகீ, இப்னு அசாகிர், தாரிகுல் கபீர் இமாம் புகாரீ
ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹ்னீ
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. தொழுகையில் தமது ருகூஉவையும், சஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா
பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள். அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), ( ْوَلَو مُتَّ مُتَّ
على غيرِ الفِطْرَةِ الَّتي فَطَرَ اللهُ مُحَمَّدًا ﷺ عَلَيْهَا ) "நீர் தொழவே இல்லை. (இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களை
அல்லாஹ் எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமான ஒன்றிலேயே இறக்கிறீர்"
என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-791
அல்லாஹ்விடம் கொண்டு
செல்லப்படும்
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ مُصَلٍّ إِلَّا وَمَلَكَ عَنْ يَمِينِهِ وَمَلَكَ
عَنْ يَسَارِهِ فَإِنْ أَتَمَّهَا عَرْجًا بِهَا إِلَى اللَّهِ تَعَالَى وَإِنْ لَمْ
يُتِمَّهَا ضَرَبَا بِهَا وَجْهَهُ ) ஒவ்வொரு தொழுகையாளிக்கு
வலது இடது என இரு பக்கத்திலும் இரு வானவர்கள் இருப்பார்கள். ருகூஉ சுஜூதுகளை அமைதியாகச்
செய்து தொழுதால், அவர்களிருவரும் அத்தொழுகையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்விடம்
செல்வார்கள். அவசரமாகத் தொழுதால் அந்தத் தொழுகையை எடுத்து அவன் முகத்திலேயே அடித்துவிட்டு
போவார்கள். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- தாரக்குத்னீ, அல்கபாஇர் இமாம் அத்தஹபீ
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَوَضَّأَ أَحْسَنَ الْوُضُوءِ ثُمَّ قَامَ إِلَى الصَّلَاةِ فَأَتَمَّ
رُكُوعَهَا وَسُجُودَهَا وَالْقِرَاءَةَ فِيهَا قَالَتِ الصَّلَاةُ حَفِظَكَ اللَّهُ
كَمَا حَفِظْتَنِي ثُمَّ صَعِدَ بِهَا إِلَى السَّمَاءِ وَلَهَا ضَوْءٌ وَنُورٌ فَفُتِحَتْ
لَهَا أَبْوَابُ السَّمَاءِ حَتَّى يَنْتَهِيَ بِهَا إِلَى اللَّهِ تَعَالَى فَتَشْفَعَ
لِصَاحِبِهَ ) ஒருவர் அழகிய
முறையில் உளூ செய்து, பிறகு ருகூஉ, சுஜூதுகள், அதில் ஓதுதல் ஆகியவற்றை முறையாகப் பேணி தொழுதால், அப்போது அந்தத் தொழுகை
அவரை நோக்கி, "நீ என்னைப் பேணியதைப் போன்று அல்லாஹ் உன்னையும் பேணுவானாக"
என்று கூறும். பிறகு அந்தத் தொழுகையை வானத்தின் பக்கம் கொண்டு செல்லப்படும் அதற்கென்று ஒரு பிரகாசமான
ஒளி இருக்கும். அதற்கு வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படும். தொழுதவருக்கு
அந்தத் தொழுகை பரிந்துரை செய்யும்.
மேலும், ( وَإِذَا
لَمْ يُتِمَّ رُكُوعَهَا وَلَا سُجُودُهَا وَلَا الْقِرَاءَةُ فِيهَا قَالَتِ الصَّلَاةُ
ضَيَّعَكَ اللَّهُ كَمَا ضَيَّعْتْنِي ثُمَّ صَعِدَ بِهَا إِلَى السَّمَاءِ وَعَلَيْهَا
ظُلْمَةٌ فَأَغْلِقَتْ دُونَهَا أَبْوَابُ السَّمَاءِ ثُمَّ تَلِفَ كَمَا يَلُفُّ الثَّوْبُ
الْخَلْقَ فَيَضْرَبُ بِهَا وَجْهَ صَاحِبِهَا
) ருகூஉ, சுஜூதுகள், அதில் ஓதுதல் ஆகியவற்றை
முறையாகப் பேணாமல் தொழுதால், அப்போது அந்தத் தொழுகை அவனை நோக்கி,
"நீ என்னைப் வீணாக்கியதைப் போன்று அல்லாஹ் உன்னையும்
வீணாக்குவானாக" என்று கூறும். பிறகு அந்தத் தொழுகையை வானத்தில் பக்கம் கொண்டு
செல்லப்படும்போது அதற்கென்று ஒரு இருள் இருக்கும். அப்போது வானத்தின் கதவுகள் மூடப்படும்.
பிறகு அந்தத் தொழுகை கந்தல் துணியைப் போன்று சுருட்டப்பட்டு அதைத் தொழுதவன் முகத்தில்
வீசியெறியப்படும். அறிவிப்பாளர்:- உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, அல்கபாஇர் இமாம் அத்தஹபீ
அழகிய முறை
மைமூனா (ரலி) அவர்கள்
கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சஜ்தா செய்தால் தமது இரு கைகளையும் (விலாவிருந்து)
அகற்றி வைப்பார்கள். (எந்த அளவிற்கென்றால்) சிறிய ஆட்டுக் குட்டியொன்று நபியவர்களின்
இரு கைகளுக்கு அடியிலிருந்து கடந்து செல்ல நாடினால் கடந்து சென்றுவிட முடியும். நூல்:-
அபூதாவூத்-763, நசாயீ-1097, இப்னுமாஜா
அப்துல்லாஹ் பின் மாலிக்
இப்னு புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும்போது (சஜ்தாவில்)
தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கை (புஜங்)களையும் விரி(த்துவை)ப்பார்கள்.
நூல் புகாரீ-807
சஜ்தா செய்யும்போது
புஜங்களை (விலாவுடன் சேர்க்காமல்) இடைவெளி விட்டு வைக்க வேண்டும்; (தொடைகளைவிட்டு வயிற்றைப்)
பிரித்து வைக்க வேண்டும்.
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ ـ وَأَشَارَ
بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ،
وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ ) நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு கால் பாதங்களின்
நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தா செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
(நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது மூக்கை நோக்கி தமது கையால் (மூக்கு உட்பட என்பது
போல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து “நாம் ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக்
கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ்
பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-812
நம்மில் சிலர் சஜ்தாவில்
தமது கால் விரல்களின் இரு நுனிகளையும் பூமியில் படாதவாறு உயர்த்திவிடுகிறார்கள். அவ்வாறு
செய்யும்போது தொழுகை வீணாகிவிடும் என்பதை அறிய வேண்டும்.
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ
(ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தம் கைகளைப்
பரப்பி வைக்காமலும் அவற்றை (விலாவுடன்) ஒடுக்கி வைக்காமலும் சஜ்தா செய்தார்கள்.
நூல்:- புகாரீ-822
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். ( اعْتَدِلُوا
فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ انْبِسَاطَ الْكَلْبِ ) சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில்
யாரும், நாய் பரப்பிவைப்பதைப்
போன்று தம் கைகளைப் பரப்பி வைக்க வேண்டாம். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:-
புகாரீ-822
முழுமையாக
நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ حَافَظَ عَلَيْهَا كَانَتْ لَهُ نُورًا وَبُرْهَانًا
وَنَجَاةً يَوْمَ الْقِيَامَةِ وَمن لم يحافظ عَلَيْهَا لم يكن لَهُ نور وَلَا برهَان
وَلَا نجاة وَكَانَ يَوْمَ الْقِيَامَةِ مَعَ قَارُونَ وَفِرْعَوْنَ وَهَامَانَ وَأُبَيِّ
بْنِ خَلَفٍ ) யார் தொழுகையைப் பேணுதலுடன்
சரிவர தொழுது வந்தாரோ அவருக்கு மறுமைநாளில் ஒளியும், ஆதாரமும், ஈடேற்றமும் கிட்டும். அதனை பேணுதலுடன் சரிவர நிறைவேற்றாதவருக்கு
ஒளியும், ஆதாரமும், ஈடேற்றமும் கிட்டாமல் போகும். மேலும், அவர் மறுமைநாளில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் உபை பின் கலஃப் ஆகியோருடன் இருப்பார்.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது
அஹ்மத், தாரிமீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, மிஷ்காத்-578
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى سَجْدَتَيْنِ لَا يَسْهُو فِيهِمَا غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ
مِنْ ذَنْبِهِ ) யார் கவனக்குறைவு, மறதியின்றி இரண்டு ரக்அத்கள் தொழுதாரோ அவர் முன் பாவங்களை அல்லாஹ்
மன்னித்துவிடுகிறான். அறிவிப்பாளர்:-ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் நூல்:-
முஸ்னது அஹமத், மிஷ்காத்-577
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ تَعَالَى مَنْ أَحْسَنَ
وُضُوءَهُنَّ وَصَلَّاهُنَّ لوقتهن وَأتم ركوعهن خشوعهن كَانَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ
أَنْ يَغْفِرَ لَهُ وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ إِنْ
شَاءَ غَفَرَ لَهُ وَإِنْ شَاءَ عَذَّبَهُ ) (ஒரு நாளில்) ஐந்து
வேளை தொழுகையைத்தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்; அவற்றுக்காக அழகிய முறையில் (அங்கத்தூய்மை) செய்து, அவற்றுக்குரிய நேரத்தில் ஒரு ருகூஉவையும் இறையச்சத்தையும் முழுமையாக கடைப்பிடித்து
தொழுதால் அவரை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவ்வாறு செய்யவில்லையென்றால், அல்லாஹ்வின் வாக்குறுதி அவருக்கு இல்லை. அல்லாஹ் நாடினால் அவரை
மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான். அறிவிப்பாளர்:-
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-361, நசாயீ457, முவத்தா மாலிக், முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-570
இறையச்சத்துடன்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي إِنَّمَا يَقُومُ
يُنَاجِي رَبَّهُ فَلْيَنْظُرْ كَيْفَ يُنَاجِيهِ
) உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது நிச்சயமாக அவர் தன் இறைவனுடன் இரகசியமாக
உரையாடுகிறார். எனவே,
அவர் தம் இறைவனுடன் என்ன உரையாடுகிறார் என்பதை சிந்தித்துக்
கொள்ளட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், ஜாமிஉஸ் ஸஙீர்-2174
இமாம் சுயூத்தீ, ஸஹீஹ் ஜாமிஉ-1538 இமாம் அல்பானீ
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَلَا يَرْفَعُ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ فِي الْقِرَاءَةِ ) (தொழுகையில் குர்ஆன்) ஓதும்போது உங்களில் ஒருவர் மற்றவரைவிட (போட்டி போட்டு) குரல் உயர்த்த வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1135, முஸ்னது அஹ்மத், இப்னுகுஸைமா
ஒருவர் தொழுகையில் நின்றுவிட்டால் அவர் அல்லாஹ்வுடன் உரையாடத் தொடங்கிவிடுகிறார். எனவே, அல்லாஹ்வுடன் என்ன உரையாடுகிறார் என்பதைப் புரிந்து அவர் செயல்படட்டும். அத்துடன் உங்களில் ஒருவர் தொழும்போது அடுத்தவருக்கு இடையூறு ஏற்படும் வகையில் குரலை உயர்த்தி ஓத வேண்டாம். ஏனெனில், அடுத்தவர் அல்லாஹ்வுடன் உரையாடுவதில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.
ஹாதிமுல் அஸம்மு
(ரஹ்) அவர்களது தொழுகையைப் பற்றி ஒருவர் விசாரித்தார். அதற்கு அவர்கள் இவ்வாறு
பதிலளித்தார்கள். நான் தொழுகை நேரத்தை அடைந்தால் பரிபூரணமான முறையில் ஒளூ
செய்வேன். பின்னர் தொழுகை இடத்தை சென்றடைந்து
எம்முடைய உள்ளமும், உடல் உறுப்புகளும் அமைதி நிலைக்கு வரும் வரை
காத்திருப்பேன். பின்னர் தொழுகைக்காக நான் தயாராகுவேன். அந்நேரத்தில் தொலைவிலுள்ள
கஅபா எனும் இறையாலயம் எமது இரு கண்
புருவங்களுக்கு இடையே இருப்பதைப் போன்று எமக்கு தோன்றும்.
சொர்க்கம் எமது
வலது புறத்திலும், நரகம் எமது இடது புறத்திலும், இரு கால்களும் நரகத்திற்கு மேலுள்ள ஸிராத்துல்
முஸ்தகீம் பாலத்திலும் இருப்பதைப் போன்று கற்பனை செய்வேன். மலக்குல் மவுத் இஸ்ராயீல்
(அலை) அவர்கள் எமக்கு பின்புறம் காத்திருப்பதை போன்று நினைத்து கொள்வேன். மேலும்
இது எமது வாழ்வில் இறுதித் தொழுகை என எண்ணிக்கொண்டு, பயத்திற்கும் - எதிர்பார்ப்பிற்கும் இடையில் தொழுகையை துவங்குவேன். உறுதியான
நம்பிக்கையோடு தக்பீர் கட்டி, மிகுந்த
தாழ்மையோடும், பயபக்தியோடும் ருகூஃ, ஸுஜூதுகளை பூர்த்தி
செய்வேன். தொழுகையின் அனைத்து விஷயங்களிலும் பயபக்தியை கைவிடாமல் பேணுவேன். அதற்கு
பின்னர் எம்முடைய தொழுகையை இறைவன் ஏற்றுக்கொள்வானா? என்ற ஆழ்ந்த ஏக்கத்தில்
மூழ்கிவிடுவேன். நூல்:- இஹ்யா உலூமுத்தீன் - 1/151
இறையச்சத்தை மனதில்
கொண்டு தொழ வேண்டும். தேவையின்றி, தொழுகையில் கைகளை அசைப்பது, உடலை சொரிந்து கொண்டிருப்பது, தாடி மீசை போன்றவற்றை
தொட்டுக் கொண்டிருப்பது, மூக்கில் விரல் விட்டுக் கொண்டிருப்பது ஆகியவை பெரும் அவமரியாதைக்குரிய
செயலாகும். இத்தகைய செயல்களைக் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நாம் இறைவன் முன் நிற்கிறோம்.
அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
குட்டிக் கதை
ஒரு பள்ளிவாசலில் இமாம்
நான்கு ரக்அத்துகள் கொண்ட இஷா தொழுகையை தொழுவித்து முடித்தார். அப்போது பின்னால் தொழுத
(முக்ததிகளில்) ஒருவர் மட்டும், "இமாம்! இப்போது நீங்கள் மூன்று ரக்அத்துகள் தான் தொழுவித்தீர்கள்" என்றார்.
இமாம், "மற்ற எவரும் இது குறித்து
எதுவும் கூறாதபோது, நீங்கள் மட்டும் எப்படி
கூறுகின்றீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "இமாம்! நான் நான்கு கடைகள் வைத்திருக்கிறேன். நான்
இஷா தொழுகையின் ஒவ்வொரு ரக்அத்திலும் ஒவ்வொரு கடையின் கணக்குகளை சரிபார்த்து விடுவேன்.
இன்றைய இஷா தொழுகையில் மூன்று கடைகளின் கணக்குகளை மட்டும் தான் சரிபார்த்துள்ளேன்.
இன்னும் ஒரு கடையின் கணக்கு மட்டும் மீதமுள்ளது. எனவே, நீங்கள் மூன்று ரக்அத்துகள் மட்டும் தான் தொழுவித்தீர்கள் என்று
நான் உறுதியாக கூறுகிறேன்" என்று பதிலளித்தார்.
இது கதை என்றாலும் இன்றைக்கு
பலரின் தொழுகை நிலை இது தான். நம்முடைய
வாழ்க்கையில் மறந்தவைகளும், அடுத்து செய்யவேண்டியவைப்பற்றிய யோசனைகளும் தொழுகையில்
தானே வந்து போகிறது.
எனவே, தொழுகையின் சட்டங்களை
அறிந்து, அதில் ஓத வேண்டியவற்றை
முறை பிரகாரம் ஓதி, இறையச்சத்துடன் தொழுகையைப் பேணி வாழும் நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா
நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்:
9840535951
நல்ல முறையில் கட்டுரை....செம..பாரகல்லாஹ்
ReplyDelete