Search This Blog

Wednesday, 14 July 2021

நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம்


   وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ


குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி  இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடுமாடுஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 22:34

  

குர்பானி என்பது இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் உள்ளதாகும். இறைநேசத்திற்காக மட்டும் அர்ப்பணிக்கப்படும் அனைத்திற்கும் குர்பான் என்று சொல்லலாம். அது பணமாக, பொருளாக, பிராணியாக இருக்கலாம். எனினும், அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக அவனுடைய ஆணைக்கேற்ப "ஈதுல் அள்ஹா"வின் நாட்களில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே இஸ்லாமிய மார்க்கத்தின் வழக்கில் "குர்பானி" எனப்படும்.

 

அதனால் சமுதாயத்திற்கு என்ன பலன்? பொருளாதார வளர்ச்சிக்கு இது எந்த வகையில் உதவுகிறது? என்றெல்லாம் சிந்திக்காமல் இறை ஆணையை நிறைவேற்றல் என்ற ஒரு அம்சத்தை மட்டும் நினைவில் நிறுத்தி செய்யப்படும் வழிபாடே குர்பானி ஆகும். இந்த விஷயத்தில் நம்முடைய விருப்பு வெறுப்புக்கோ, சொந்த கருத்துக்கோ இடமளிக்காமல் இறை உத்தரவு ஒன்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

 

(நஃபில் எனும்) உபரியான தொழுகைநோன்புதர்மம் போன்ற நற்காரியங்களை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நேரம் காலம் நிபந்தனையல்ல. ஆனால்குர்பானி எனும் பலியிடுதல் மட்டும் துல்ஹஜ் மாதம் பிறை 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் செய்தால் தான் வணக்கமாகக் கருதப்படும். இந்த மூன்று நாட்கள் கழிந்து விட்டால் குர்பானி கொடுக்க இயலாது. (ஷாஃபி மத்ஹபின்படி நான்காவது நாளும் கொடுக்கலாம்.) ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களின் காலத்தில் இருந்தே இந்த குர்பானி என்ற வழக்கம் தொடங்கிவிட்டதாக திருமறை இயம்புகிறது.

 

எண்ணம்போல்

 

(நபியே!) ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை செய்தியை அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் குர்பானி செலுத்தியபோது அவர்களில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றொருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. (குர்பானி ஏற்கப்பட்ட) அவர், "இறையச்சமுடையோரிமிருந்தே அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்" என்று கூறினார்.    திருக்குர்ஆன்:- 5:27

 

ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களின் புதல்வர்கள் காபில், ஹாபில் ஆகிய இருவருக்கும் ஒரு பெண்ணை மணந்து கொள்வதில் தர்க்கம் ஏற்பட்டது. அவ்விருவரும் குர்பானி கொடுக்க வேண்டும். அவர்களின் எவருடைய குர்பானி ஏற்றுக்கொள்ளப்படுமோ அவர்தான் அப்பெண்ணை மணந்து கொள்ள தகுதியானவர் என்பது இறை உத்தரவாகும்.

 

காபில் என்பவர் விவசாயியாக இருந்தார். இவர் தம்மிடமிருந்த தொலியும் உமியும் கலந்த மட்டரகமான தானியங்களை வேண்டா வெறுப்போடு குர்பானி கொடுத்தார். ஹாபில் என்பவர் ஆடு மேய்ப்பவராக இருந்தார். இவர் தம்மிடமிருந்த தரமான நன்கு கொழுத்த ஆடு ஒன்றை மனநிறைவோடு குர்பானி கொடுத்தார். அக்கால முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அதன் அடையாளமாக வானிலிருந்து நெருப்பொன்று வந்து ஹாபிலின் குர்பானியைப் புசித்தது. காபிலின் குர்பானியை அப்படியே விட்டு விட்டது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

இறைவனுக்காக எதை அர்ப்பணித்தாலும் அதில் கருமித்தனமின்றி மனநிறைவோடு தரமானதையும் அழகானதையும் மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும். அல்லாஹ் உயர்வானவன் இறையச்சத்தோடு உயர்ந்த எண்ணத்தோடு வழங்குவதை மட்டுமே ஏற்றுக்கொள்வான். கருமித்தனத்தோடும், பிறர் புகழே நோக்கமாகக் கொண்டும் வழங்கும் எதையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. சலிப்புடன் வேண்டா வெறுப்போடு செய்யப்படும் நற்செயல்களால் அல்லாஹ் மகிழ்ச்சி அடைவதில்லை. என்பதை மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது.

 

பிற சமயத்தவர்களிடமும் பிராணிகளை பலியிடுதல் வணக்க வழிபாடுகளில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் சிலைகளுக்கும், சிலுவைகளுக்கும் பிராணியைப் பலியிட ஆரம்பித்துவிட்டனர். வேறு சிலரோ ஜின்னுகள், ஷைத்தான்களுக்கு பிராணிகளைப் பலியிட்டுக் கொண்டிருந்தனர். இஸ்லாம் அவைகளையெல்லாம் தடுத்து, உயிர் பலியிடுதல் அவைகளை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும்; வேறு எவருக்கும் பலியிடக்கூடாது என்று தடை விதித்துவிட்டது. அதையே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

சிறந்த வணக்கம்

 

அவற்றின் (பலியிடப்படும் பிராணியின்) மாமிசமோ அல்லது அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவதில்லை. உங்களுடைய இறையச்சம் தான் அவனை அடையும். திருக்குர்ஆன்:- 22:37

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், குர்பானி கொடுப்பதற்கு மூலகாரணம் என்னவென்று நபித்தோழர்கள் வினவினர். அண்ணலார், ( سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ) "அது உங்கள் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் வழிமுறையாகும்" என்று பதிலளித்தார்கள். நபித்தோழர்கள், "இதில் எங்களுக்கு என்ன நன்மை உண்டு" என்று மீண்டும் வினவினர். அண்ணலார், ( فِي الأُضْحِيَةِ لِصَاحِبِهَا بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ ) "குர்பானி பிராணியின் ஒவ்வொரு ரோமத்திற்காகவும் ஒரு நன்மை குர்பானி கொடுத்தவருக்கு  உண்டு" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:-  ஸைத் பின் அக்ரம்  (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1413, இப்னுமாஜா-3247 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ إِنَّهَا لَتَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلاَفِهَا وَإِنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللَّهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ فَطِيبُوا بِهَا نَفْسًا

துல்ஹிஜ்ஜா மாதம் பத்தாவது நாள் (யவ்முந் நஹ்ர்) அன்று ஒரு மனிதர் செய்யும் நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதுஇரத்தத்தை வழிந்தோடச்செய்யும் (இந்த குர்பானி) நற்செயலைவிட வேறெதுவுமில்லை. மறுமை நாளில் அந்த குர்பானி பிராணி தனது கொம்புகளுடனும் உரோமங்களுடனும் கால் குளம்புகளுடனும் (முழுமையாக) வரும். (குர்பானி பிராணியின்) அந்த இரத்தம், நிலத்தில் விழுவதற்குமுன் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, மனநிறைவோடு குர்பானி கொடுங்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1413, இப்னுமாஜா-3246

 

அல்லாஹ்வின் அன்பைப் பெற நமக்கு பிடித்தமான அனைத்தையும் அவனது பாதையில் அர்ப்பணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்குவது தான் குர்பானியின் உண்மையான நோக்கமாகும். பிராணிகளை பலியிட்டு அதன் இரத்தத்தையோ, மாமிசத்தையோ இறைவனுக்குப் படைப்பது குர்பானியின் நோக்கமல்ல. ஏனெனில், உலக மக்களை விட்டும் அவன் தேவையற்றவன் என்பதை மறந்துவிடக்கூடாது.

 

நிச்சயமாக அல்லாஹ் அவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கிறான். திருக்குர்ஆன்:- 3:97

 

குர்பானி குறித்து வந்துள்ள சிறப்புகள் அனைத்தும் இறையச்சத்தையும் மனத்தூய்மையையும் தன்னகத்தே கொண்டவருக்கு தான். இஸ்லாம் மென்மேலும் பரந்து விரிந்து வளர்ச்சி காண, நமது உடல், பொருள், ஆவி இதில் எதை அர்ப்பணிக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதற்கும் துணிந்து விடவேண்டும்.

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை தன் விருப்பமாக்கி, தமது வயோதிகத்தில் பெற்றெடுத்த செல்வ புதல்வரை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்க தயாரானார்கள். அல்லாஹ் அதை ஏற்று, அவர்களின் புதல்வரை பலியிடுவதற்கு ஈடாக ஓர் ஆட்டை பலியிட்டாலே போதுமானது என்றுரைத்தான் என்பது நாம் அறிந்த வரலாறாகும்.

 

அல்லாஹ்விற்கு விருப்பமான நற்செயலில் நாம் மனத்தூய்மையோடு ஈடுபட்டால் அனுமதிக்கப்பட்ட வகைகளில் நமக்கு பிரியமானதை நிச்சயமாக அல்லாஹ் தருவான் என்ற விளக்கமும் இந்த வரலாற்றின் மூலம் தெரிகிறது.

 

மேலானவனுக்காக

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (விடைபெறும் ஹஜ்ஜின் போது என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் உயர்தரமான ஒட்டகம் ஒன்றைப் பலிப்பிராணியாகக் கொண்டு வந்தார்கள். அ(தை வாங்குவ)தற்காக முன்னூறு பொற்காசுகள் கொடுத்தார்கள்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் உயர்தரமான ஒட்டகம் ஒன்றை பலிப்பிராணியாகக் கொண்டு வந்துள்ளேன். அதற்காக முன்னூறு பொற்காசுகள் (விலையாகக்) கொடுத்தேன். அதை விற்றுவிட்டு அதன் கிரயத்தில் (சாதாரண வகையைச் சேர்ந்த) பல ஒட்டகங்களை விலைக்கு வாங்(கி குர்பானி கொடுக்)கட்டுமா?" என்று கேட்டார்கள். அண்ணலார், ( لَا اِنْحَرْهَا إِيَّاهَا ) "வேண்டாம்; அதையே நீர் அறுப்பீராக" என்று கூறினார்கள் நூல்:-  அபூதாவூத், முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஹஜ் வசனம்-32

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குர்பானி பிராணிகளில் மிகவும் சிறந்தது, அதிக விலை மதிப்புள்ளதும் கொழுத்த பிராணியாக இருப்பதுமாகும். நூல்:- முஸ்னது அஹ்மத் 


உர்வா (ரலி) அவர்கள் தம் மக்களிடம், "நீங்கள் உங்களுடைய நண்பர்கள் எவருக்கும் அன்பளிப்புச் செய்ய வெட்கப்படும் எதையும், அல்லாஹ்வுக்கு அன்பளிப்புச் செய்ய (அதாவது குர்பானி கொடுக்க) முன் வராதீர்கள். ஏனெனில், நண்பர்களிலெல்லாம் மிகவும் மேலான நண்பன் அல்லாஹ் தான். மேலும், அவனுக்கே மிகவும் மேலானது அன்பளிப்புச் செய்ய வேண்டும்" என்று கூறினார்கள். நூல்:- முஅத்தா மாலிக்

 

தொத்தலும் வத்தலுமாக நிறைய பிராணிகளை குர்பானி கொடுப்பதைவிட, வாட்டசாட்டமாக பார்ப்பதற்கு கம்பீரமாக இருக்கக்கூடிய ஒரு பிராணியை உருப்படியாக குர்பானி கொடுப்பது சிறந்தது. குர்பானி கொடுப்பதற்காக ரூபாயை கொஞ்சம் அதிகமாக செலவளிப்பது தவறல்ல.

 

மட்டரகமான பொருளை நமது நண்பர் மற்றும் உறவினர்களுக்கு அன்பளிப்புச் செய்தால் அவர்களிடம் நமக்கு மதிப்பு குறைந்துவிடும் என்றெண்ணி, நம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது சிறந்த பொருளை அன்பளிப்புச் செய்ய விரும்புகிறோம் என்றால், எந்த பிரதிபலனையும் எதிர்பாராது உயர்ந்த நண்பனான அல்லாஹ்வுக்காக உயர்ந்த பொருளைக் கொடுப்பது தானே முறை ஆகும்.

 

குர்பானி கொடுக்காவிட்டால் மக்கள் குறை கூறுவார்கள் என்பதற்காகவோ அல்லது என்னாலும் குர்பானி கொடுக்கமுடியும் என்று பகட்டிற்காகவோ அல்லது ஏனோதானோ என்று கடமையை தட்டிக் கழிப்பதற்காகவோ நொண்டி, கண் குருடு, புல் சாப்பிட முடியாத அளவுக்கு நாக்கு அறுபட்டது, காது அறுபட்டது, எலும்பும் தோலுமாக மெலிந்திருப்பது இதுபோன்ற பல குறைகள் உள்ள பிராணிகள் மலிவு விலையில் கிடைப்பதை குர்பானி கொடுப்பது தவறாகும்.

 

அழகிய வழிமுறை

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா மாநகரில் தங்கியிருந்த பத்தாண்டு காலமும் குர்பானி கொடுத்து வந்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ 1427

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் (தமது மனைவி) ஆயிஷா (ரலி) அவர்கள் சார்பாக ஒரு மாட்டை அறுத்துப் பலியிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-2543


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن كَانَ لَهُ سَعَةٌ فَلَم يُضَحِّ فَلَا يَقرَبَنَّ مُصَلّانَاபோதிய வசதி இருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழும் இடத்திற்கு வர வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்இப்னுமாஜா-3123

 

ஹனஷ் பின் அல்முஅதமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) அவர்கள் இரு செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்துவந்தார்கள். அவற்றில் ஒன்றை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சார்பாகவும் மற்றொன்றைத் தம் சார்பாகவும் குர்பானி கொடுத்தார்கள். இதுகுறித்து அவர்களிடம் (விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ( أَمَرَنِي بِهِ يَعْنِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- فَلاَ أَدَعُهُ أَبَدًا ) "அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தான் இவ்வாறு எனக்கு உத்தரவிட்டார்கள். இதை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-2792, திர்மிதீ-1415

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் தொழும் மைதானத்தில் இருந்தேன். அண்ணலார் குத்பா பேருரை முடித்து மிம்பர் படியில் இருந்து கீழே இறங்கினார்கள். அப்போது அவர்களிடம் ஒரு செம்மறியாட்டுக் கடா ஒன்று கொண்டுவரப்பட்டது. அண்ணலார் அதை தங்களின் புனித கரத்தால் அறுத்தார்கள். அறுக்கும்போது ( بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي ) அல்லாஹ்வின் திருப்பெயரால் அறுக்கிறேன். அல்லாஹ் மிகப் பெரியவன் இது என் சார்பாகவும் என் சமுத்தாயத்தாரில் குர்பானி கொடுக்க இயலாதவர்கள் சார்பாகவும் (அறுக்கப்படுகிறது)என்றும் கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2812, திர்மிதீ-1441

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தாரில் மிக சிறந்தவர்கள் கண்ணியமானவர்கள் மார்க்கப்பிடிப்புடன் இறையச்சத்தோடு வாழ்பவர்கள் தாம். இவர்கள் கட்டாயக் கடமைகளையும், உபரியான வணக்கங்களையும் சிறப்பாக நிறைவேற்றுவார்களேத் தவிர, வெறும் முஸ்லிம் எனும் பெயர் தாங்கிகளாக இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்டவர்களில் குர்பானி கொடுக்க இயலாதவர்களுக்காகத்தான் அண்ணலார் அன்றே குர்பானி கொடுத்துள்ளார்கள்

 

மேலும், ஒரு நற்செயலை செய்து அதன் நன்மையை பிற்காலத்தில் தோன்றுபவர்களுக்கு சேர்க்கமுடியும் எனில், தற்போது வாழ்பவர்கள் ஒரு நற்செயலை செய்து அதன் நன்மையை முற்காலத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு சேர்க்கமுடியும் என்ற கருத்தும் இந்த நபிமொழியின் மூலம் தெளிவாகிறது.

 

இதனடிப்படையில் மறைந்துவிட்ட நமது பெற்றோர்கள், உடன் பிறப்புகள், உறவினர்கள் போன்ற நம்முடைய முன்னோர்களுக்கு, நாம் குர்பானி கொடுத்து அதன் நன்மையை அவர்களுக்கு சமர்ப்பிப்பது அழகான செயலாகும். மேலும், நம்முடைய இறைநம்பிக்கையின் உயர்வுக்காக பாடுபட்ட நமது முன்னோர்களில் மிகச்சிறந்தவராக விளங்கும் மாமனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்காக நாம் குர்பானி கொடுப்பது தானே நன்றிக் கடனாக அமையும்.

 

சட்டங்களை அறிந்து கொள்வோம்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَ لَهُ ذِبْحٌ يَذْبَحُهُ فَإِذَا أُهِلَّ هِلاَلُ ذِي الْحِجَّةِ فَلاَ يَأْخُذَنَّ مِنْ شَعْرِهِ وَلاَ مِنْ أَظْفَارِهِ شَيْئًا حَتَّى يُضَحِّيَ ) யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, துல்ஹஜ் பிறை காணப்பட்டுவிட்டால், அவர் குர்பானி கொடுக்காத வரை தமது தலைமுடியையோ நகங்களையோ சிறிதும் வெட்ட வேண்டாம். அறிவிப்பாளர்:- உம்மு சலமா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4000

 

இந்த நபிமொழியின் அடிப்படையில், குர்பானி கொடுக்க எண்ணுபவர் துல்ஹஜ் மாதப் பிறை பிறந்ததிலிருந்து  குர்பானி கொடுக்கும் வரை தலைமுடி மற்றும் நகங்கள் களைதல், தாடியை சீர் செய்தல் போன்ற எதையும் செய்யாமலிருப்பது (முஸ்தஹப் எனும்) விரும்பத்தக்க காரியமாகும். அது முற்றிலும் தடை செய்யப்பட்ட காரியல்ல. இதுவே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும்.


யார் மீது குர்பானி கொடுப்பது கடமையோ அல்லது யார் குர்பானி கொடுக்க எண்ணம் கொண்டுள்ளாரோ அவருக்கு மட்டுமே (முடி மற்றும் நகங்களை களையக்கூடாது என்ற) இந்த சட்டம் பொருந்தும். வீட்டிலுள்ள மற்றவர்கள் இச்சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.


குர்பானி கொடுக்க எண்ணுபவர் துல்ஹஜ் பிறை பிறப்பதற்கு முன்பே அக்குள் முடி, மர்ம உறுப்பின் முடிகளை களைந்து தலைமுடி, தாடி மற்றும் நகங்களை சீர்செய்து தம்மை சுத்தப்படுத்திக் கொள்வது மிகச் சிறந்த காரியமாகும்.

 

அபூராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கருப்பு வெள்ளை கலந்த காயடிக்கப்பட்ட கொம்புள்ள கொழுத்த பருமனான இரு செம்மறியாட்டுக் கடாக்களை குர்பானி கொடுத்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா-3241, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஹஜ் வசனம்-32

 

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( لاَ يَذْبَحَنَّ أَحَدُكُمْ حَتَّى يُصَلِّيَ ) "(பெருநாள் தொழுகை) தொழாத வரையில் உங்களில் யாரும் (குர்பானி பிராணியை) கண்டிப்பாக அறுக்கவேண்டாம்" என்று கூறினார்கள்.  அப்போது என் தாய் மாமா (அபூபுர்தா பின் நியார் - ரலி) அவர்கள் எழுந்து நின்று, "நாயகமே! (இதை  அறியாமல்)  தொழுகைக்கு முன்பே அறுத்து விட்டேன்" என்று கூறினார்கள்.

 

அப்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( فَأَعِدْ ذَبْحًا آخَرَ ) "மற்றொரு பிராணியை அறுத்து மீண்டும் (குர்பானி) கொடுப்பீராக" என்று கூறினார்கள். அதற்கு அவர், "நாயகமே என்னிடம் ஒரு வயதுடைய பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அது, இறைச்சி ஆடுகள் இரண்டை விடச் சிறந்தது. அதை (இப்போது) நான் அறுத்து குர்பானி கொடுக்கட்டுமா?" என்று கேட்டார். அதற்கு அண்ணலார் "ஆம், (அறுங்கள்)" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-3963, அபூதாவூத்-2802, திர்மிதீ-1428, நசாயீ-4318

 

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் என்னுடைய பெண் மக்களிடம் அவர்கள் தங்களுடைய குர்பானியை தங்களுடைய கைகளாலேயே அறுக்க வேண்டும் என்றும், அப்போது அப்பிராணியின் கழுத்தருகே அதன் தோள் மீது கால் வைத்துக்கொண்டு 'பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று கூறி அறுக்குமாறு பணித்தேன். நூல்:- ரஸீன்

 

குர்பானி குறித்து சில சட்டதிட்டங்களை நாம் அறிந்துகொள்ளவேண்டும். குர்பானி கொடுப்பவர் தன் கரத்தால் அறுப்பதே சிறந்தது. பெண்களும் அறுக்கலாம். அதுபோல் இரவு நேரத்தில் அறுப்பதும், பெட்டை பிராணிகளை அறுப்பதும், காயடிக்கப்பட்ட பிராணிகளை அறுப்பதும் கூடாது என்று எண்ணுவது தவறாகும். காயடிக்கப்பட்ட பிராணிகளை அறுப்பதுதான் மிகச்சிறந்தது என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களுக்காக குர்பானி கொடுக்கும்போது, ( يا فاطمةُ قُومِي إِلى أُضْحِيَتِكِ فاشْهَدِيها فَإِنَّ لكِ بِكُلِّ قَطْرَةٍ تَقْطُرُ مِنْ دَمِها أنْ يُغْفَرَ لَكِ ما سَلَفَ مِنْ ذنوبِكِ )  "ஃபாத்திமா! எழுந்து உமது குர்பானி பிராணிக்கு அருகில் ஆஜராகவீராக! அதன் இரத்தத்திலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டுக்கும் நீ முன் செய்த அனைத்து பாவங்களும்  மன்னிக்கப்படும்" என்று கூறினார்கள்.

 

அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள், ( يَا رَسُولَ اللهِ ألَنَا خَاصَّةً أهلِ البيتِ أو لَنَا وَلِلمُسلمينَ ) "நாயகமே! (நீங்கள் சொல்லும் இந்த நற்செய்தி) அஹ்லே பைத்துக்களான எங்களுக்கு மட்டும் உரியவையா? அல்லது அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியவையா?" என்று வினவினார். நபியவர்கள், ( بَل لَنَا وَلِلمُسلمينَ ) "(இந்த நற்செய்தி) நமக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியவை தான்" என்றார்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:-  ஹைஸமீ, மஜ்மஉஸ் ஸவாயித், ஹாகிம், அத்தர்ஙீபு வத்தர்ஹீபு


அறுக்கத் தெரியாதவர், அறுக்க இயலாதவர் பிறருக்கு அனுமதி கொடுத்து அதைச் சொல்ல வேண்டும். அறுக்கப்படும்போது அதன் முன்னால் நின்று பார்ப்பது சிறப்பானதாகும். என்மீது கடமையான குர்பானியை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுகிறேன் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு வரவேண்டும். குர்பானி கடமையானவர்கள் பிராணிகளை அறுக்காமல் அதன் விலையை தர்மமாக ஏழைகளுக்கு கொடுத்தால் குர்பானி கடமை நிறைவேறாது. அன்றைய தினத்தில் மற்ற நற்செயல்களைவிட பிராணியை பலியிடுவதுதான் இறைவனுக்குப் பிரியமானதாகும்.

 

ஸகாத் கடமையானவர் மீதுதான் குர்பானி கடமையாகும். ஆனால், நிஸாபை (கடமையாகும் அளவை) அடைந்து அதன் மீது ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும் என்ற அவசியமில்லை.

 

குடும்பம் முழுவதற்கும் சேர்த்து ஒரு குர்பானி போதுமாகாது. மாறாக, குடும்பத்தில் உள்ளவர்களில் எத்தனை பேரிடம் ஸகாத் அளவு சொத்து இருக்குமோ அவர்கள் ஒவ்வொருவர் மீதும் குர்பானி கடமையாகும். ஒருவர் எவ்வளவு செல்வம் உள்ளவராக இருப்பினும், அவர் மீது ஒரு குர்பானி தான் கடமையாகும். மனைவி மக்களுக்கு ஸகாத்துடைய அளவுள்ள சொத்து அவரவர் பொறுப்பில் இருக்குமேயானால் அவரவர் மீது தனித்தனியாக குர்பானி கடமையாகும். ஒரு பெண் கொடுக்க வேண்டிய குர்பானி பெற்றோர்கள் மீதோ கணவன் மீதோ கடமையாகாது.

 

கூட்டுக் குர்பானி


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் (ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக்கொண்டு புறப்பட்ட) ஹுதைபியா ஆண்டில் ஏழு பேருக்காக ஒரு ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம்.    நூல்:- முஸ்லிம்-2537, திர்மிதீ-1422


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் ஒரு பயணத்தில் அருமை நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது ஹஜ் பெருநாள் (ஈதுல் அள்ஹா) தினம் வந்தது. அப்போது ஒரு மாட்டில் ஏழு பேர் விதமும் ஓர் ஒட்டகத்தில் பத்துப்பேர் விதமும் கூட்டுச் சேர்ந்து கொண்டோம். நூல்:- திர்மிதீ-1421, முஸ்னது அஹ்மத்


குர்பானி கொடுப்பதற்கு ஒரு மாட்டில் அல்லது ஒரு ஒட்டகத்தில் ஏழு பேர் கூட்டுச் சேர்ந்துகொள்ளலாம். ஹஜ்ஜின் போது ஹாஜிகள் நிறைவேற்றும் குர்பானியான 'ஹதியு'வுக்கும் இது பொருந்தும். அவ்வாறே, இஹராம் கட்டிய ஒருவர் ஏழு பலிப் பிராணிகள் பரிகாரம் செலுத்த வேண்டியிருந்தால் அவர் ஒரு ஒட்டகத்தையோ ஒரு மாட்டையோ பலியிட்டால் போதும். இமாம் ஷவ்கானீ (ரஹ்) அவர்கள் போன்ற அறிஞர்களில் சிலர் ஒரு ஒட்டகத்தில் பத்துப்பேர் கூட்டுச் சேரலாம் என்கின்றனர். ஒரு ஒட்டகத்தைப் பத்து ஆடுகளுக்குச் சமமாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதிப்பிட்டார்கள் என்ற நபிமொழி இக்கருத்துக்கு வலுவூட்டுகிறது. நூல்:- அல்மின்ஹாஜ், துஹ்ஃபத்துல் அஹ்வதீ, நைலுல் அவ்த்தார்


ஹஜ் பெருநாள் நெருங்கிவிட்டாலே கூட்டுக் குர்பானி குறித்து விளம்பரங்கள் அதிகமாகக் காணப்படுகிறது. நமது பகுதியில் முதன் முதலில் கூட்டுக் குர்பானியை அரபி மதரஸாக்கள் தான் துவக்கிவைத்தன. அங்கு அறுக்கப்படும் பிராணிகளின் தோல்கள் விற்கப்பட்டு, அதன் தொகை மதரசாவில் பயிலும் மாணவர்கள் உணவுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. அதில் (இக்லாஸ் எனும்) மனத்தூய்மை இருந்தது. ஆனால், இன்று கூட்டுக்குர்பானி என்பது பணம் சம்பாதிப்பதற்குரிய தொழிலாக மாறிவிட்டன. அதில் ஓரளவு இலாபம் கிடைப்பதால் இயக்கங்களும், தனி நபர்களும் கூட்டுக்குர்பானிக்காக ஏற்பாடு செய்கிறார்கள். இவர்களுக்கு இலாபமே பிரதானமானது.


கூட்டுக்குர்பானி என்பது தொழில் அல்ல. அது இறைவழிபாடு என்று உணர வேண்டும்.


கூட்டுக்குர்பானி மையங்கள் பெருகியதில் மற்றோர் கவலைக்குரிய செய்தியும் கவனிக்கத்து. ஆடு வாங்கி அறுத்து அதன் இறைச்சியை பகிர்வது சிரமம் என நினைக்கும் சில இஸ்லாமிய சகோதரர்களும், ஒரு ஆடு வாங்கினால் ஆகக்கூடிய செலவை நான்கு அல்லது ஐந்து நபர்கள் பெயரில் கூட்டுக்குர்பானி பங்குகளுக்கு கொடுத்துவிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கும் சில நண்பர்களும் இந்த கூட்டுக்குர்பானிக்கே பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அது மட்டுமல்ல! தங்கள் பங்குக்கான பணத்தை கொடுத்துவிட்டால் தங்களின் குர்பானி கடமை நிறைவேறிவிட்டதாக எண்ணுகிறார்கள்.

 

இந்த சோம்பேறித்தனத்தை கூட்டுக்குர்பானி அமைப்பாளர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு வழங்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். ஆனால் பெரும்பாலும் அந்த விதி பின்பற்றப்படாமல் ஆளுக்கு ஐந்து கிலோ இறைச்சி கொடுத்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. மாடு எத்தனை கிலோ இருந்தாலும் பரவாயில்லை, ஒரு பங்கிற்கு கொடுத்த பணத்திற்கு பகரமாக 4 அல்லது 5 கிலோ கறிக் கொடுத்தால் போதும் என்ற கோட்பாடு(?) உண்டாகி விட்டது.

 

பலர் மாடு அறுக்கப்படும் இடத்திற்கு பங்கிற்கு பணம் கொடுத்தவர்களை அழைத்து செல்வதில்லை. அந்த இடம் ரொம்ப தூரத்தில் உள்ளது. நீங்கள் ஏன் அங்கு வந்து பெருநாளுமா அதுவுமா சிரமப்படுகிறீர்கள்? கறி உங்கள் வீட்டிற்கு வந்துவிடும்' என்று வசனம் பேசி அந்த இடத்திற்கு அழைத்து செல்வதில்லை. அறுக்கப்படுகின்ற மாடு தகுதியான மாடு தானா என்பதைக்கூட சிலர் நமக்கு காட்டுவதில்லை. குர்பானி பிராணியின் நிலைபாட்டை நம்மில் பெரும்பாலோர் அறிவதுமில்லை. அறிய முற்படுவதுமில்லை.


கூட்டுக் குர்பானியில் சேருகின்றவர்கள் நமக்காக அறுக்கப்படும் மாடு எது? யார் அறுக்கபோகிறார்? அறுப்பவருக்கு அதற்குரியச் சட்டங்கள் தெரியுமா? அறுக்கும்போது அதற்குரிய துஆக்கள் ஓதப்படுகிறதா? என்று எதைப் பற்றியும் பெரும்பாலோர் அறிந்துகொள்ள ஆசைப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.


ஆடு குர்பானி கொடுப்பதற்குரிய பொருளாதாரமும், சூழ்நிலையில் இருந்தும்கூட காசை மிச்சப்படுத்தும் நோக்கத்தில் கூட்டுக்குர்பானியில் சேர்கின்றவர்களையும், கூட்டுக்குர்பானியில் எங்கே குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது என்று தேடித்திரிவோரையும் என்னவென்று சொல்வது? குர்பானி விஷயத்தில் நூறு இருநூறை மிச்சப்படுத்தி என்ன செய்ய போகிறார்கள்? கணக்கின்றி வழங்கிய கருணையாளனான அல்லாஹ்வுக்கு கணக்குப் பார்த்து வழங்குவது முறையாகுமா?


அறுப்பின் துஆ


குர்பானி பிராணியை அறுப்பதற்கு முன்னர்,

اِنِّیْ وَجَّهتُ وَجْهِیَ لِلَّذِیْ فَطَرَ السَّمَاوَاتِ وَالْاَرْضَ حَنِیْفًا وَمَا اَنَا مِنَ الْمُشْرِکِیْنَ قُلْ اِنَّ صَلَاتِیْ وَنُسُکِیْ وَمَحْیَایَ وَمَمَاتِیْ لِلَّهِ رَبِّ الْعَالَمِیْنَ لَا شَرِیْكَ لَهُ وَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا اَوَّلُ الْمُسْلِمِیْنَ اللهم مِنكَ وَلَكَ

என்ற துஆவை ஓதி,   "بِسْمِ اللَّهِ وَاللَّهِ أَكْبَرُ" என்று கூறி அறுப்பதோடு, குர்பானி பிராணியை அறுத்துப் பலியிட்டதற்கு பின்னர் குர்பானி கொடுப்பவர்களின் மற்றும் பங்குதாரர்களின் பெயர்களை

اللهم تَقَبَّلْ مِن (فلان وفلان وفلان ) کَمَا تَقَبَّلتَ مِن حَبِیبِكَ محمد وَخَلِیلِكَ إبراهیم علیهم السلام

மேற்கண்ட துஆவோடு இணைத்து கூறிக்கொள்வது (மிக ஏற்றமானதாகும்.) நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்ஹஜ் வசனம்-36


நாம் மனத்தூய்மையோடு சிறந்ததையே குர்பானி கொடுத்து இறைவனின் அருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை செல்: 9840535951

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...