Search This Blog

Wednesday, 8 July 2026

ஒப்பாக வேண்டாம்

 

ஒப்பாக வேண்டாம்

وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى

அவர் தன் இஷ்டப்படி எதையும் பேசுவதில்லை. இது அவருக்கு வஹ்யி (எனும் இறைச்செய்தி) மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை.  திருக்குர்ஆன்:-53:3,4                                                                                                                                 

இஸ்லாம் ஓர் பரிபூரணத்துவமான மார்க்கம். எனவே, அது மனிதனுக்கு தேவையான வாழ்வியல் அனைத்தையும் கற்றுத் தந்துள்ளது. இஸ்லாம் கூறாத தீர்வுகள், தத்துவங்கள், ஒழுக்க விழும்பியங்கள் என எதுவும் இல்லை. எனவே, ஒரு முஸ்லிமுக்கு பிற வேதக்காரர்கள் மற்றும் சகோதர சமயத்தவர்களின் வாழ்வியலை ஒப்பு நோக்க வேண்டிய அவசியம் இல்லை.

 

"வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை போல்" முஸ்லிம்கள் நிலை ஆகிவிடக் கூடாது. சில சந்தர்ப்பங்களில் பிறரை ஒப்பீடு செய்வது பாவக்காரியம் என்று முஸ்லிம்கள் விளங்க வேண்டும்.

 

ஆஷூரா நோன்பு

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "நாயகமே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு  நபியவர்கள், இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் நபியவர்கள் இறந்துவிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-2088

 

மற்றொரு அறிவிப்பில் ( لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ ) "அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்" என்று இடம்பெற்றுள்ளது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் ஆஷூரா அன்று ஒருநாள் நோன்பு நோற்று வந்தார்கள். யூதர்களின் இஸ்லாமிய எதிர்ப்பும், விரோத மனப்பான்மையும் அதிகரித்துக்கொண்டே சென்றபோதுஅனைத்து காரியங்களிலும் யூதர்களுக்கு முரணாக நடந்துகொள்ளுங்கள் என்பதாக தனது தோழர்களுக்கு கட்டளையிட்டு, அவர்களுக்கு எதிர்ப்பை காட்டினார்கள். இந்நிலையில் ஆஷூரா நோன்பை நோக்குமாறு கோரிய நபியவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் அந்நாளில் நாம் நோன்பு நோற்பது அவர்களுக்கு ஒப்பாவதைப் போன்று ஆகாதா? என்று நபித்தோழர்கள் கேட்டபோதுதான் இவ்வாறு கூறினார்கள்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صُومُوا يَوْمَ عَاشُورَاءَ، وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا، أَوْ بَعْدَهُ يَوْمًا ) ஆஷுரா நோன்பை கடைபிடியுங்கள். அதில் யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். ஆஷுரா நோன்புக்கு முந்தைய நாள் (ஒன்பதாவது நாள்) அல்லது, ஆஷுரா நோன்புக்கு பிந்தைய நாள் (பதினோராவது நாள்) சேர்த்து நோன்பு வையுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், ஸாதுல் மஆத் 2/72

 

இறைவனால் நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்ட அதிகமான இறைத்தூதர்களைப் பெற்றுக்கொண்டவர்கள் யூத சமுதாயத்தினர்தான். எனினும், இவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல இறைத்தூதர்களை நிராகரித்தது மட்டுமன்றி, அவர்களில் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தனர். இதனால் இவர்கள் இறைவனின் கடும் சினத்திற்கும், சாபத்திற்கும் ஆளானார்கள்.

 

எனவேதான், முஸ்லிம்கள் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் இறைசாபம் பெற்ற யூதர்களுக்கு ஒப்பாகிவிடக் கூடாது என்பதில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். அதோடு நபியவர்கள் தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தினார்கள்.

 

பிரேதம் குழிக்குள் வைக்கப்படுவதற்கு முன்

 

நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். திருக்குர்ஆன்:- 59:7

 

உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதேனும் பிரேதத்தைப் பின் தொடர்ந்து சென்றால், பிரேதம் குழிக்குள் வைக்கப்படுகின்ற வரை அமர மாட்டார்கள். யூத அறிஞர் ஒருவர் நபியவர்களிடம் வந்து, ( هَكَذَا نَصْنَعُ يَا مُحَمَّدُ ) "முஹம்மதே! இவ்வாறுதான் நாங்களும் செய்கிறோம்" என்று கூறினார். (இதன்பின் குழிக்குள் பிரேதம் வைக்கப்படுவதற்கு முன்பே) நபியவர்கள் உட்காரலானார்கள். ( اِجْلِسُوْا خَالِفُوْهُمْ ) "நீங்களும் அமருங்கள்; (இந்த விஷயத்தில்) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்" என்றும் கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2762, திர்மிதீ-941, இப்னுமாஜா-1534,

 

மாதவிடாய் பெண்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, அருமை நாயகம் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர்.

 

அப்போது தான், '(நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றனர். அது ஓர் (இயற்கை) உபாதை. எனவே, மாதவிடாயின்போது (தாம்பத்திய உறவுகொள்ளாமல்) பெண்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்கள் தூய்மையடையாத வரை அவர்களிடம் நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்துவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள் என்று தொடங்கும் (2:222வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

 

இதை அடுத்து நபியவர்கள், "தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

 

இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, ( مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئًا إِلاَّ خَالَفَنَا فِيهِ ) "நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறுசெய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம்" என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷர் (ரலி) ஆகியோர் வந்து, ( يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ تَقُولُ كَذَا وَكَذَا فَلاَ نُجَامِعُهُنَّ ) "நாயகமே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன?" என்று கேட்டனர். இதைக் கேட்டதும் நபியவர்கள் முகம் (கோபத்தால்) நிறம் மாறிவிட்டது.  நூல்:-  முஸ்லிம்-507

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த இஸ்லாமியப் பழக்கங்கள் பிற சகோதர சமயத்தவர்களுக்கு எதிராக இருந்தாலும், அதனால் அவர்கள் நம்மை தவறாக எண்ணினாலும்கூட அதைப்பற்றி நாம் கண்டுகொள்ளக் கூடாது. நபிவழியில் நாம் நிலைத்திருக்க வேண்டும்.

 

மாதவிடாய் இரத்தம், அல்லது மாதவிடாய் தீட்டு என்பதெல்லாம் பெண்களின் கையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. ஆகவே, மாதவிடாய் உள்ள ஒரு பெண் ஒரு பொருளைத் தொடுவதால் அது அசுத்தம் ஆகிவிடும் என்ற மூடநம்பிக்கைக்கு மார்க்கத்தில் இடமில்லை. இது அன்றைய யூதர்கள் மற்றும் அவர்களின் கொள்கை கொண்ட (இன்றைய) பிராமணர்கள் மற்றும் இந்துகளில் சில பிரிவினர்களின் நம்பிக்கை.

 

தீட்டு தீண்டாமை ஆகியவை இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனையாகும். தீண்டாமையை எதிர்த்து அன்றைக்கே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குரலெழுப்பியதை இதன் மூலம் உணரலாம்.

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. எனக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க நான் அவர்களது தலையை கழுவிவிடுவேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையில் எனது மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு நபியவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையில் இறைச்சியுள்ள எலும்புத்துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்களது தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். நான் (ஏதேனும்) பானத்தைப் பருகிவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் (வாய் வைத்து) பருகிய இடத்தில் அவர்கள் வாய் வைத்துப் பருகுவார்கள். நூல் புகாரீ-297, முஸ்லிம்-501, 505, 506, அபூதாவூத், நசாயீ, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்

 

மாதவிடாய் உள்ள பெண் தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவைச் சுற்றுவது உள்ளிட்ட சில வழிபாடுகளைச் செய்வது மட்டுமே மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அந்த பெண் அன்றாட வாழ்க்கையில் எப்போதும் போல் இயங்கலாம். சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், ஆடைகளை தூய்மை செய்தல், கணவனையும் குழந்தையும் தொடுதல் போன்ற எந்த நடவடிக்கைகளுக்கும் தடை கிடையாது. அவளது உமிழ்நீரோ, வியர்வையோ அசுத்தம் கிடையாது. சுருங்கக் கூறின்: மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் அல்லர்.

 

மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கி வைப்பது யூதர்கள் மற்றும் பிராமணர்கள் மற்றும் இந்துகளில் சில பிரிவினர்களின் பழக்கமே தவிர, இஸ்லாமியர்களின் பழக்கமன்று.

 

குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்குமா?

 

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து பிறவி உறுப்பில் உடலுறவு கொண்டால் (பிறக்கும்) குழந்தை மாறு கண் கொண்டதாக பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தனர். எனவே, "உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்" எனும் (2:223 வது) இறைவசனம் அருளப்பெற்றது. நூல்:- புகாரீ-4528, முஸ்லிம்-2826, அபூதாவூத்-1848, இப்னுமாஜா-1915

 

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகள் தம் மனைவியரிடம் அவர்களது பின்பக்கத்திலிருந்து (பிறவி உறுப்பில்) உடலுறவு கொள்வார்கள். இந்நிலையில் தம் மனைவியிடம் அவளது பின்பக்கத்திலிருந்து ஒருவர் உடலுறவு கொண்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தனர். (இதனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை.)

 

பின்னர், முஹாஜிர்கள் மதீனாவிற்கு வந்தபோது அவர்களில் ஒருவர், அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். (நேராகப்படுக்க வைத்து, குப்புறப்படுக்க வைத்து, ஒருக்களித்துப்படுக்க வைத்து படுக்க வைத்து என பலவாறாக உறவு கொள்ளும் பழக்கமுடைய குறைஷியர்களில் ஒருவரான) அவர் (தங்களின் முறைப்படி) அவளுடன் உறவு கொள்வதற்காக சென்றார். ஆனால், அவள் அதை விரும்பவில்லை. அப்போது அவள், ( إِنَّمَا كُنَّا نُؤْتَى عَلَى حَرْفٍ فَاصْنَعْ ذَلِكَ وَإِلاَّ فَاجْتَنِبْنِي ) “ஒரு புறமாகப் படுக்கவைத்துதான் எங்களுடன் உறவு கொள்ளப்படும். அவ்வாறு நீங்கள் செய்யுங்கள். இல்லையெனில் என்னைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்" என்று கூறினாள்.

 

இச்செய்தி கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபியவர்கள் அந்தப் பெண்ணை அழைத்து, "உங்கள் மனைவியர் உங்களுக்கு விளைநிலம் (போன்றவர்கள்). எனவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்களது விளைநிலத்திற்குச் செல்லுங்கள்" என்ற வசனத்தொடரை ஓதி காட்டினார்கள். நூல்:- அபூதாவூத்-1850 தாரிமீ, முஸ்னத் அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்

 

அன்சாரிகள், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் சிலை வழிபாடு செய்பவர்களாக இருந்தார்கள். மேலும், வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்கள். அன்சாரிகள் தங்களைவிட கல்வியில் யூதர்களை மேன்மையானவர்களாக எண்ணியிருந்தார்கள். எனவே, அன்சாரிகள் யூதர்களின் பெரும்பாலான செயல்களைப் பின்பற்றி வந்தார்கள்.

 

ஒருவர் தம் மனைவியிடம் அவளது பின்பக்கத்திலிருந்து ஒருவர் உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்பது யூதர்களின் ஐதீகம்.

 

இந்த ஐதீகத்தின் அடிப்படையில் தான் அந்த அன்சாரி பெண் தமது பின்புறத்தில் இருந்து தமது கணவர் உறவுகொள்வதை விரும்பாமல், என்னை விட்டு விடுங்கள் என்று கூறினாள். எனவே தான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணை அழைத்து திருக்குர்ஆன் அடிப்படையில் இது தவறான நம்பிக்கையே. எனவே, கைவிடப்பட வேண்டும் என்று போதித்தார்கள்.

 

துறவறம் வேண்டாம்

 

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுடன் ஒரு படை பிரிவில் சென்றோம். அப்போது ஒரு மனிதர் சிறிது நீருள்ள ஒரு குகையை கடந்து சென்றார். அவர் அந்த குகையில் தங்கி அங்குள்ள நீரைப் பருகி சுற்றியுள்ள தாவரங்களை உண்டு உலகிலிருந்து விலகி வாழ நினைத்தார். 

 

அவர், ( لَوْ أَنِّي أَتَيْت نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَإِنْ أَذِنَ لِي فَعَلْتُ وَإِلَّا لَمْ أَفْعَلْ ) "நான் நபியவர்களிடம் சென்று இதைக் கூறிய பிறகு அவர்கள் அதை அனுமதித்தால் அவ்வாறு செய்வேன். இல்லையெனில் செய்ய மாட்டேன்" என்று கூறினார். அவர் நபியவர்களிடம் சென்று, ( يَا نَبِيَّ اللَّهِ إِنِّي مَرَرْتُ بِغَارٍ فِيهِ مَا يَقُوتُنِي مِنْ الْمَاءِ وَالْبَقْلِ فَحَدَّثَتْنِي نَفْسِي بِأَنْ أُقِيمَ فِيهِ وَأَتَخَلَّى عَنْ الدُّنْيَا ) "நாயகமே! நான் ஒரு குகையை கடந்து சென்றேன். அதில் எனக்கு வாழ்வதற்கான நீரும் தாவரங்களும் உள்ளன. நான் அங்கு தங்கி உலகத்தில் இருந்து விலகி, வாழ நினைக்கிறேன்" என்று கூறினார்.

 

அப்போது நபியவர்கள், ( إِنِّي لَنْ أُبْعَثَ بِالْيَهُودِيَّةِ وَلا بِالنَّصْرَانِيَّةِ وَلَكِنِّي بُعِثْتُ بِالْحَنِيفِيَّةِ السَّمْحَةِ ) "நான் யூதக்கொள்கையுடனும் கிறிஸ்தவ கொள்கையுடனும் அனுப்பப்படவில்லை. மாறாக, எளிமையான ஏகத்துவ மார்க்கத்துடன் அனுப்பப்பட்டுள்ளேன்" என்று கூறினார்கள். (அவருக்கு துறவு வாழ்க்கைக்கு அனுமதி கிடைக்கவில்லை). நூல்:- முஸ்னது அஹ்மத், தல்பீஸ் இப்லீஸ் பாடம்-10

 

அன்றைக்கு யூதர்கள், கிறிஸ்தவர்களில் சிலர் துறவறம் புகுவதைக் கண்ட அருமை நாயகம் (ஸல்) அவர்கள் திருமணத்தின் மகத்துவத்தையும் மாண்பையும் எடுத்துரைக்கும் விதமாக "இஸ்லாத்தில் துறவறம் இல்லை" என்று கூறினார்கள். துறவறம் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது.

 

பிற வேதங்கள்

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் வந்து, ( إِنَّا نَسْمَعُ أَحَادِيثَ مِنْ يَهُودَ تُعْجِبُنَا أَفْتَرَى أَنْ نَكْتُبَ بَعْضَهَا؟ ) "நாயகமே! யூதர்களிடம் சில செய்திகளை நாங்கள் கேட்கிறோம். நிச்சயமாக அந்த செய்திகள் எங்களுக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. எனவே, அவற்றில் சிலதை நாங்கள் எழுதிக் கொள்வதுப்பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று வினவினார்.

 

நபியவர்கள், ( أَمُتَهَوِّكُونَ أَنْتُمْ كَمَا تَهَوَّكَتِ الْيَهُودُ وَالنَّصَارَى؟ لَقَدْ جِئْتُكُمْ بِهَا بَيْضَاءَ نَقِيَّةً وَلَوْ كَانَ مُوسَى حَيًّا مَا وَسِعَهُ إِلَّا اتِّبَاعِ )  "யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் வேதத்தில் தடுமாறுவதைப் போல் நீங்களும் தடுமாறப்போகிறீர்களா? (என்று கூறிவிட்டு), நிச்சயமாக நான் இந்த வேதத்தை உங்களுக்கு சுத்தமான வெண்மையாக (இடைச்செருகல் இன்றி)  கொண்டு வந்துள்ளேன். (யூதர்களுக்கு இறைத்தூதராக இருந்த) மூசா (அலை) அவர்கள் இப்போது உயிரோடு இருந்தால்கூட என்னை பின்பற்றுவதைத் தவிர வேறு எதுவும் அவருக்கு வழி இல்லை" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, மிஷ்காத்

 

ஒரு முஸ்லிம், வேதக்காரர்களான யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதங்களில் இருந்து வாழ்க்கையின் வழிகாட்டுவதலுக்குரிய விஷயங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 

தவ்ராத், இஞ்ஜீல் ஆகியவை உண்மையாகவே இறைவேதங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவை இறைவேதங்கள் தான் என்று ஒவ்வொரு முஸ்லிமும் முழுமையாக நம்பவேண்டும். அதை நம்பாவிட்டால் முஸ்லிமாக இருக்க முடியாது.

 

ஆயினும், தற்போது நமக்கிடையே இருக்கும் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற பெயரில் இருப்பவை முழுமையான இறைவேதங்கள் தானா? என்பது சந்தேகமே. அவற்றில் எண்ணிலடங்கா இடைச்செருகல்கள் உள்ளன என்பது உலகறிந்த உண்மை.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலேயே இடைச்செருகல்கள் செய்யப்பட்டன என்றால், தற்காலத்தைக் குறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆகவே, அவற்றில் இருப்பவை அனைத்தும் உண்மைதான் என்று அப்படியே ஏற்றுக்கொள்ளவும் கூடாது; பொய் என்று ஒதுக்கித் தள்ளவும் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

 

ஒரு முஸ்லிமுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்க, அதை விடுத்து வேறொன்றை தேடுவது கூடாது. மிகச் சிறந்த ஒன்று இருக்கும்போது தரம் தாழ்ந்த ஒன்றை யாராவது தேடுவார்களா? ஆகவே தான், நபியவர்கள் அவற்றை படிப்பதனால் நீங்கள் குழம்பிப்போகக் கூடும். எனவேதான், அந்த வேதங்களை படிக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்கள்.

 

திருக்குர்ஆனை கற்றறிந்து அதன்படி செயல்பட்டாலே போதும் என்றிருக்க, அதைக் கொண்டு திருப்தியுராமல் பழைய வேதங்களில் இருந்து வழிகாட்டலை தேடிக் கொண்டிருப்பவர் முழுமையாக இறைநம்பிக்கை கொண்டவராக இருக்க மாட்டார் என்பதை இந்த நபிமொழியின் கருத்து.

 

இணைவைப்பாளர்களின் மரம்

 

அபூவாக்கித் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் 'ஹுனைன்' எனும் இடத்தில் நோக்கி (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது இணைவைப்பாளர்களுக்குச் சொந்தமான ஒரு மரத்தைக் கடந்து சென்றார்கள்‌ 'தாத்து அன்வாத்' எனப்படும் அந்த (இலந்தை) மரத்தில் இறைமறுப்பாளர்கள் தம் ஆயுதங்களைத் தொங்கவிடுவது வழக்கம்.

 

அப்போது நபித்தோழர்கள், "நாயகமே! இணைவைப்பாளர்களுக்கு 'தாத்து அன்வாத்' எனும் (ஆயுதங்களை மாட்டிவைக்கும்) மரம் இருப்பதைப் போன்று எங்களுக்கும் 'தாத்து அன்வாத்' மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்" என்று கூறினார்கள்.

 

இணைவைப்பாளர்கள் தம் ஆயுதங்களை ஓர் இலந்தை மரத்தில் தொங்க விட்டுவிட்டு, அதை சுற்றிலும் வழிபாடு செய்வதற்காக தங்குவது வழக்கம். அப்போது நபியவர்கள், ( سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى ‏:‏ ‏(‏اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ ‏)‏ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ ) "அல்லாஹ் தூயவன்; இது, இஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம், 'அவர்களுக்குக் கடவுளர் இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்துவீராக!' (7:139) என்று கேட்டுக்கொண்டதைப் போன்று இருக்கிறதே! இறைவன் மீதாணையாக! நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்கள் சென்ற பாதையில் நிச்சயம் பயணிப்பீர்கள்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ2106, முஸ்னது அஹ்மத்அல்பிதாயா வந்நிஹாயா

 

அதாவது கடைசி காலத்தில் முஸ்லிம்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் அடிக்கு அடி பின்பற்றி நடப்பார்கள். யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் மார்க்கத்தை மறந்து மனம் போன போக்கில் வாழ்வதைப் போன்று முஸ்லிம்களும் தனது மார்க்கக் கடமைகளை மறந்து வாழ்வார்கள்.

 

இன்றும்கூட அந்நிலை இருக்கவே செய்கிறது. முஸ்லிம்களில் பலர் எதற்கெடுத்தாலும் மேலைநாட்டு நாகரிகத்தைப் பின்பற்றுவதையே பெருமையாக நினைக்கிறார்கள். உணவு, உடை, பழக்கவழக்கம், விழாக்கள், வணிகம் என எதை எடுத்துக் கொண்டாலும் இவர்களுக்கு மேற்கே முன்மாதிரியாகப் போனது. மேலைநாட்டுக் கலாச்சாரம் என்பது யூதர்களாலும், கிறிஸ்தவர்களாலும் உருவாக்கப்பட்டது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வார்த்தை ஜாலம்

 

( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَقُولُواْ رَاعِنَا وَقُولُواْ انظُرْنَا ) இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “ராஇனா” என்று சொல்லாதீர்கள். (அதற்குப் பதிலாக எங்களைப் பாருங்கள்! என்ற பொருளைத் தரும்) “உன்ளுர்னா” என்று சொல்லுங்கள். திருக்குர்ஆன்:- 2:104

 

யூதர்கள் கேலி செய்யும் நோக்கத்தோடு இரு அர்த்தங்களை தரும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். அதில் ஒன்று “ராஇனா”. இந்த வசனத்தில் குறிப்பிட்டுள்ள “ராஇனா, உன்ளுர்னா” இவ்விரு வார்த்தைகளுக்கும் “பாருங்கள், கவனியுங்கள்” என்ற பொதுவான அர்த்தம் இருந்தாலும் “ராஇனா” என்ற வார்த்தை அப்ரானி மற்றும் சுர்யானி மொழிகளில் வேறு பொருள் இருக்கிறது. அதாவது, ஒருவர் இன்னொருவரை திட்டுவதாக இருந்தால் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்..

 

அந்த வார்த்தையைத் தான் யூதர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்த முஸ்லிம்களில் சிலரும் இந்த வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போது இந்த வசனத்தை இறக்கி, அவர்கள் சொல்கின்ற வார்த்தையை நீங்கள் சொல்ல வேண்டாம் என்று இறைவன் அறிவுறுத்தினான்.

 

மாற்றார்களோடு எந்த வகையிலும் ஒரு முஸ்லிம் ஒப்பாகி விடக்கூடாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்கள் பயன்படுத்துகிற வார்த்தைகளைக்கூட முஸ்லிம்கள் பயன்படுத்தக்கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

 

வாழ்க்கையில் மட்டுமல்ல பயன்படுத்தும் வார்த்தையில்கூட பிற சமூகத்திற்கு ஒப்பாகிவிடக்கூடாது என்பது தான் இந்த வசனம் தரும் செய்தி.

 

பிறந்த நாள், திருமண நாள்களை மிகவும் விமர்சையாக கொண்டாடுபவர்கள் மற்றும் புத்தாண்டு பிறந்துவிட்டால் அன்றைக்கு முழுக்க HAPPY NEW YEAR என்று செய்திகள் பறக்கும். அப்படி சொல்பவர்கள் இந்த வசனத்தை கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

நாம் பேசுகிற பேச்சு முதல் நம் செயல்பாடுகள் வரை எதிலும் பிற மதங்களுக்கு பிற சமூகங்களுக்கு ஒப்பாகிவிடக்கூடாது என்று அல்லாஹ் எச்சரித்த காரணத்தால் தான் நபித்தோழர்கள் அது விஷயத்தில் ரொம்ப ரொம்ப கவனமாக இருந்தார்கள்.

 

தோற்றவர்களின் தலையை வெட்டுவது

 

ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியின்போது ரோமானியர்களுக்கு எதிராக நடைபெற்ற ஷாம் நகரப் போரில் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), ஷுரஹ்பீல் பின் ஹசனா (ரலி) ஆகியோர் ஷாம் நகரின் மத குருவாகிய பன்னான் என்பவரின் தலையை வெட்டி ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

 

உக்பா பின் ஆமீர் (ரலி) அவர்கள் அந்த தலையுடன் அபூபக்ர் (ரலி) அவர்களை சந்தித்தபோது, அபூபக்ர் (ரலி) அவர்கள் கடுமையாக கோபமுற்றார்கள்.

 

அப்போது உக்பா (ரலி) அவர்கள், ( خَلِيفَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّهُمْ يَصْنَعُونَ ذَلِكَ بِنَا ) "இறைத்தூதரின் கலீஃபாவே! (நமது எதிரிகளான) அவர்களும் இப்படித்தான் நம்மை செய்கிறார்கள்" என்று கூறினார். அபூபக்ர் (ரலி) அவர்கள், ( فَاسْتَنَانِ بِفَارِسٍ وَالرُّومِ؟ لَا يُحْمَلُ إلَيَّ رَأْسٌ، فَإِنَّمَا يَكْفِي الْكِتَابُ وَالْخَبَرُ ) "(அதற்காக) பாரசீகர்கள் மற்றும் ரோமர்களின் வழிமுறை நாம் பின்பற்றுவதா? (இனிமேல் இதுப்போன்று) எந்தத் தலையையும் என்னிடம் கொண்டுவரவேண்டாம்; (இது குறித்து) ஒரு கடிதமோ, (நேரடியாக வந்து) செய்தியை அறிவிப்பதோ போதுமானது" என்றார்கள். நூல்:- சயீத் பின் மன்ஸூர், அல்குப்ரா இமாம் நசாயீ, பைஹகீ, தாரீகுல் குலஃபா இமாம் சுயூத்தி

 

இமாம் பைஹகீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். பிற மக்கள் போர்களில் வெல்லும்போது எதிரிகள்மீது அத்துமீறி அநாகரீகமாக நடப்பதை நியாயம் என்றே கருதியிருந்தனர்.

 

உதாரணமாக, போரில் தோற்றவர்களின் தலையை வெட்டி தம் அரசர்களின் முன்னால் கொண்டு சேர்க்கும் குரூரமான பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தம்முடைய வெற்றியைக் கர்வத்துடன் பிரகடனப்படுத்தும் செயலாக இதைக் கருதியிருந்தனர்.

 

எனவே, ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியின்போது ரோமானியர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் முஸ்லிம் தலைவர்களும் இவ்வாறு நடந்துகொள்ள முற்பட்டனர். இந்த அந்நியர்களின் நடைமுறையை  அபூபக்ர் (ரலி) அவர்கள் உடனடியாக கண்டித்தார்கள்.

 

இஸ்லாமிய ஆண்டின் பின்னணி 

 

இஸ்லாத்தின் ஆரம்பக் காலம் முதல் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின்  ஆட்சிக்காலம்  வரை, ஓர் குறிப்பிட்ட நாட்காட்டி பயன்படுத்தப்படவில்லை. உமர் (ரலி) அவர்கள் பதவியேற்ற மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டில், அபூமூசா அல்அஷ்அரி (ரலி) அவர்கள் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு, ( أَنَّهُ يَأْتِينَا مِنْكَ كِتٰبٌ لَيْسَ لَهَا تَارِيخٌ ) "(ஜனாதிபதி அவர்களே!) உங்களிடமிருந்து தேதியிடப்படாத (அதாவது, வருடம் குறிப்பிடப்படாமல் மாதம் மட்டும் குறிப்பிடப்பட்ட)  கடிதங்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன. (அது போதாது)" என்று கடிதம் எழுதினார். அதன் பிறகு உமர் (ரலி) அவர்கள் நபித்தோழர்களை ஒன்றுகூட்டி (இது குறித்து) அவர்களுடன் கலந்தாலோசித்தார்கள்.

 

அவர்களில் சிலர், "பாரசீகர்கள் தங்கள் மன்னர்களைக் கொண்டு கணக்கிடுவது போல நீங்களும் கணக்கிடுங்கள்; அவர்களின் ஒரு மன்னர் இறந்தவுடன், அவருக்குப் பின் பதவிக்கு வந்தவரின் பிறப்பை வைத்து வருடங்களை கணக்கிடுவார்கள்" என்று கூறினர்.  நபித்தோழர்களில் பலருக்கும் இது பிடிக்கவில்லை. மேலும், அவர்களில் வேறு சிலர், "ரோமானிய நாட்காட்டியின்படி கணக்கிடுங்கள்" என்று கூறினர். அவர்களில் பலருக்கு இதுவும் பிடிக்கவில்லை. மேலும், அவர்களில் இன்னும் சிலர்  "நபியின் பிறப்பிலிருந்து கணக்கிடுங்கள்" என்று கூறினர். மேலும் சிலர்,  "நபியவர்களின் நபித்துவப் பணியிலிருந்து (கணக்கிடுங்கள்)" என்று கூறினர். இன்னும் சிலர், "நபியவர்களின் ஹிஜ்ரத் பயணத்திலிருந்து (கணக்கிடுங்கள்)" என்று கூறினர்.

 

அப்போது உமர் (ரலி) அவர்கள், ( اَلْهِجْرَةُ فَرَّقَتْ بَيْنَ الْحَقِّ وَالْبَاطِلِ فَأَرَّخُوا بِهَا ) "ஹிஜ்ரத் பயணம் உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்திக் காட்டியது. எனவே, அதைக் கொண்டே கணக்கிடுங்கள்" என்று கூறினார்கள். இந்த கருத்தில் அனைவரும் உடன்பட்டனர். அதன் பிறகு, அவர்கள் ஹிஜ்ரத்திலிருந்தே கணக்கிட்டனர். நூல்:- தாரீக் அத்தபரீ, தாரீக் அர்ருஸுலு வல்முலூக்

 

ஆடை முறை

 

ஸியாத் பின் ஜரீர் அல்அசதிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான் தைலஸான் ஆடை அணிந்து, மீசையை பெரிதாக வைத்த நிலையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஸலாம் கூறினேன். உமர் (ரலி) அவர்கள் தமது தலையை உயர்த்தி என்னைப் பார்த்தார்கள். ஆனால், என்னுடைய ஸலாமுக்கு பதில் கூறவில்லை. உடனே நான், உமர் (ரலி) அவர்களின் மகன் ஆஸிம் (ரலி) அவர்களைச் சந்தித்து நடந்ததைக் கூறி, நீங்கள் தான் இதற்கு விளக்கம் கேட்க வேண்டும் என்று கூறினேன். ஆஸிம் (ரலி) அவர்கள், தமது தந்தை உமர் (ரலி) அவர்களை சந்தித்து அதற்கு விளக்கம் கேட்டார்.

 

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ( إِنِّي قَدْ رَأَيْتُ عَلَيْهِ طَيْلَسَانًا، وَرَأَيْتُ شَارِبَهُ عَافِيًا ) “அவரின் மீது தைலஸான் இருந்ததையும், (தைலசான் என்பது யூதர்கள் அணியும் ஒரு ஆடை) மேலும், அவர் மீசையை பெரிதாக வளர்த்திருந்ததையும் நான் கண்டேன். (அதனால் நான் அவருக்கு பதில் கூறவில்லை)” என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்ட பின்பு ஸியாத், ஆடையை மாற்றி மீசையை குறைத்துக் கொண்டு, உமர் (ரலி)  அவர்களை சந்தித்து ஸலாம் சொன்னார். உமர் (ரலி) அவர்கள், ( وَعَلَيْكَ السَّلَامُ، هَذَا أَحْسَنُ مِمَّا كُنْتَ فِيهِ يَا زِيَاد ) உன்மீது அமைதி நிலவட்டும்! ஸியாத்! இதற்கு முன்பு நீ இருந்ததைவிட இது மிகச் சிறந்ததாக இருக்கிறது” என்றார்கள். நூல்:- ஹில்யதுல் அவ்லியா

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَى عَنِ الْقَزَعِ ) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைமுடியில் ஒரு பகுதியை மழித்துவிட்டு, மற்றொரு பகுதியை மழிக்காமல் விட்டுவிடுவதை (குடுமி வைப்பதை)த் தடை செய்தார்கள்.

 

இதன் அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள். நான், உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம், ‘கஸஉ’ (குடுமி) என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஒருவர் சிறுவனின் தலைமுடியை மழிக்கும்போது (சிறிது மழித்துவிட்டு), இங்கும் அங்குமாக (சிற்சில இடங்களில் மட்டும்) முடியை (மழிக்காமல்) அப்படியே விட்டுவிடுவதாகும்” என்று கூறி, தமது நெற்றிமுடி மற்றும் தலையின் இரு பக்கங்களையும் எங்களிடம் சுட்டிக் காட்டினார்கள். நூல்:- புகாரீ-5920, முஸ்லிம்-4304

 

முஸ்லிம்கள் காவி நிற ஆடைகள் அணியக் கூடாது. பேண்ட் போன்ற எந்த ஆடை அமைப்பாக இருந்தாலும் கரண்டைக் காலுக்கு கீழ் இறங்கக் கூடாது.

 

மீசையை தடிமனாக அல்லது நீளமாக பெரிய அளவில் வைத்து, தாடியை முழுமையாக சிரைக்கும் அமைப்பில் முக அலங்காரம் கூடாது. மேலும், சிகை அலங்காரத்தில் சைடு ஷேவ் (Side shave) அல்லது அண்டர்கட் (Undercut) என்று அழைக்கப்படும் (Asymmetrical) என்ற ஒற்றைப்படை தோற்றம் கூடாது. அதாவது, தலையில் ஒரு பக்கம் மழித்து ஒரு பக்கம் மழிக்காத அமைப்பில் சிகை அலங்காரம் கூடாது.

 

தடுக்காமல் விட்டுவிட்டேன்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنِ الْغِيلَةِ حَتَّى ذَكَرْتُ أَنَّ الرُّومَ وَفَارِسَ يَصْنَعُونَ ذَلِكَ فَلاَ يَضُرُّ أَوْلاَدَهُمْ ) பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ள வேண்டாமென (மக்களைத்) தடுக்க நான் நாடினேன். (ஆனால்) ரோமர்களும் பாரசீகர்களும் அவ்வாறு செய்தும், (அதன் காரணத்தால்) அவர்களுடைய  குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலிருப்பதை நான் நினைவுகூர்ந்தேன். (ஆகவே, அதைத் தடுக்காமல் விட்டுவிட்டேன்.) அறிவிப்பாளர்:- ஜுதாமா பின்த் வஹ்ப் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2849, அபூதாவூத்-3384, திர்மிதீ-2002நஸாயீ-3274

 

குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டும் பருவத்தில் மனைவி இருக்கும்போது அவளுடன் கணவன் ஒரு உடலுறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு உண்டு. அவ்வாறு கருத்தரித்துவிட்டால், பால் குடிக்கும் குழந்தைக்கு அது ஊறு விளைவிக்கும் என்ற கருத்து அன்றைய அரபியரிடம் இருந்து வந்தது. காரணம், அப்போது பாலில் நீர்மச்சத்து அதிகமாகி குழந்தையைப் பாதிக்கக்கூடும். அன்று மக்களிடையே பிரபலமாக இருந்த இந்தக் கருத்தை வைத்து, பாலூட்டும் பருவத்திலுள்ள மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள வேண்டாமெனத் தடை விதிக்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எண்ணியிருந்தார்கள்.

 

ஆனால், அன்றைய பாரசீகர்களும் கிழக்கு ரோமர்களும் அவ்வாறு தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டு இருந்ததும் அவர்களின் குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை நபியவர்கள் அறிந்தார்கள். எனவே, தடைவிதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்கள். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ, ஃபத்ஹுல் முல்ஹிம்

 

மக்களுக்கு மத்தியில் நடைமுறையில் இருக்கும் சில பழக்கவழக்கங்கள், இஸ்லாமிய கொள்கைக்கு  முரண்படாமல் இருந்தால் அதை கடைபிடிப்பது தவறொன்றுமில்லை என்கிறது இந்த நபிமொழி.

 

எனவே, நாம் பிறரின் வழிமுறையை விட்டொழித்து, இஸ்லாம் கூறும் அழகிய வழிமுறையை பின்பற்றி, இறையருளை பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 

ஒப்பாக வேண்டாம்

  ஒப்பாக வேண்டாம் وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى அவர் தன் இஷ்டப்படி எதையும் பேசுவதில்லை. இது அவருக்கு வஹ்யி (என...