Search This Blog

Thursday, 9 April 2026

தீமைக்குத் துணைபோகாதே!

 

தீமைக்குத் துணைபோகாதே!

 

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்துக்கும் எல்லை மீறலுக்கும் (அநியாயத்திற்கும்) துணைபோய்விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் தண்டனை வழங்குவதில் கடுமையானவன் ஆவான். திருக்குர்ஆன்:- 5:2

 

இஸ்லாமிய பார்வையில் தீமைக்கு துணைபோவது (பாவம் மற்றும் அநியாயத்திற்கு உதவுவது) வன்மையாகக் கண்டிக்கப்படும் குற்றமாகும். இது சமூக அமைதியைக் குலைத்து, இறைவனின் தண்டனைக்கு வழிவகுக்கும், பாவத்திலும் பகைமையிலும் உதவக்கூடாது. நன்மையைத் தடுப்பவர்கள் மற்றும் தீமையை அனுமதிப்பவர்கள், நன்மையை அழிப்பவர்களாவர். பாவக்காரியங்களுக்கு உதவுவது தீயவர்களின் பண்பாகும், இது கடும் தண்டனைக்குரியது.

 

தீமைகளை கண்டு கொள்ளாமல் இருப்பது அல்லது சகித்துக் கொள்வது மூலம் நன்மையை அழித்து, தீயவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அநியாயக்காரர்களுக்கு துணைபோவது அல்லது அநியாயத்தை  செய்ய அனுமதிப்பது இறைவனின் கோபத்தையும், தண்டனையையும் கொண்டு வரும்.

 

தீயவனின் அடையாளம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن أعانَ عَلى خُصُومَةٍ بِغَيْرِ حَقٍّ، كانَ في سَخَطِ اللَّهِ حَتّى يَنْزِعَ )  அநியாயமாக ஒரு சர்ச்சையை ஆதரிப்பவர், அதிலிருந்து விலகும் வரை அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டவர் ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن مَشى مَعَ ظالِمٍ لِيُعِينَهُ، وهو يَعْلَمُ أنَّهُ ظالِمٌ، فَقَدْ خَرَجَ مِنَ الإسْلامِ ) ஒருவன் அநியாயக்காரன் என்று தெரிந்தும், அவனுக்கு உதவுவதற்காக அவனுடன் நடப்பவர், இஸ்லாத்தை விட்டு விலகிவிட்டார். அறிவிப்பாளர்:- அவ்ஸ் பின் ஷுரஹ்பில் (ரலி) அவர்கள் நூல்:- தாரீக் அல்கபீர் இமாம் புகாரீ, தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَعَانَ عَلَى قَتْلِ مُؤْمِنٍ بِشَطْرِ كَلِمَةٍ لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ مَكْتُوبٌ بَيْنَ عَيْنَيْهِ آيِسٌ مِنْ رَحْمَةِ اللَّهِ ) ஒருவர் இறைநம்பிக்கையாளர் ஒருவரைக் கொலை செய்வதற்கு அரை வார்த்தை அளவுக்கு உதவி செய்தாலும் அவருடைய இரு கண்களுக்கு இடையில் (நெற்றியில்) அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசையடைந்தவர் என எழுதப்பட்டிருக்கும் நிலையில் (மறுமையில்) மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வைச் சந்திப்பார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2610 பைஹகீ, ஹில்யத்துல் அவ்லியா

 

ஒருவரை கொலை செய்வதற்கு அரை வார்த்தை அளவு உதவி செய்தாலே குற்றம் எனும்போது, கொலை செய்ய கட்டளையிட்டால் அல்லது கொலை செய்வதில் கூட்டானால் அவரது குற்றம் எந்த அளவு பெரியது என சிந்திக்க வேண்டும்.

 

குவைத்தைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற காரி மற்றும் அறிஞர் மிஷாரி ராஷித் அல்அஃபாஸி (Mishary Rashid Al-Afasy) என்பவர், (Trump will open the doors of hell for the Iranian regime) "அதிபர் டிரம்ப் ஈரான் ஆட்சியாளர்களுக்கு நரகத்தின் கதவுகளைத் திறப்பார்" என்று (03-04-2026) வெளியிட்ட ஒரு அறிக்கைதான் வலைத்தளங்களில் இப்போது பேசுபொருளாக உள்ளது.

 

எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல், பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி, அதன் மூலம் இலாபம் பார்ப்பவர்கள் அல்லது தமது வஞ்சகத்தை தீர்த்துக்கொள்பவர்கள் மிகவும் மோசமானவர்கள்.

 

தீமையைத் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிமின் சமூகக் கடமையாகும். இது நன்மையை ஏவுவதோடு இணைந்து, சமூக ஒழுங்கைப் பாதுகாக்கும் தூணாகக் கருதப்படுகிறது. தீமையைக் கண்டால் கைகளால் (நடவடிக்கை), நாவால் (பேச்சு) அல்லது உள்ளத்தால் (வெறுப்பு) தடுக்க வேண்டும் என்பது இஸ்லாம் கூறும் போதனையாகும்.

 

தீமையை தடுக்கும் ஆற்றல் இருந்தும் மௌனமாக இருப்பது இறைதண்டனைக்குரிய குற்றமாகும். சமூகத்தில் நீதியை நிலைநாட்டவும், இறைவனின் பொருத்தத்தைப் பெறவும் தீமையைத் தடுப்பது அவசியமான ஒன்றாகும்.

 

உதவுவதும் குற்றமே!

 

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் ஒரு சிறு குழுவை, நபியவர்கள் வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். “நாம் சந்திக்கும்வரை கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

 

கடலோரமாகச் சென்று திரும்பிய போது, என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இவ்வாறு நாங்கள் சென்றுகொண்டிருக்கும்போது (என் தோழர்கள்) காட்டுக் கழுதைகளைக் கண்டனர்.

 

(நான் குதிரையில் ஏறியதும்) எனது சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள், ( لاَ نُعِينُكَ عَلَيْهِ بِشَىْءٍ، إِنَّا مُحْرِمُونَ ) “நாங்கள் இஹ்ராம் கட்டியிருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்” என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன்.

 

பிறகு நான் அக்கழுதைகளை வேட்டையாடி கொண்டு வந்தேன். அனைவரும் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர். “நாம் இஹ்ராம் கட்டியிருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணலாமா?” என்று தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டுக்கொண்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக்கொண்டு நபியவர்களிடம் சென்று, நடந்தவற்றை விவரித்தார்.

 

அப்போது நபியவர்கள், ( مِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا، أَوْ أَشَارَ إِلَيْهَا  ) “உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா? அல்லது அதை நோக்கி சைகை செய்தாரா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “இல்லை” என்றனர். அதற்கு நபியவர்கள், ( فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا ) “அப்படியானால், அதன் எஞ்சிய இறைச்சியை உண்ணுங்கள்” என்று கூறினார்கள். நூல்:-  புகாரீ-1824, முஸ்லிம்-2244, 2247,

 

ஹஜ் அல்லது உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிய ஒருவர் தாமே வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அவரது உத்தரவின் பேரில் அல்லது அவரது ஒத்துழைப்புடன் மற்றவர் வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

இஹ்ராம் கட்டிய ஒருவர் வேட்டையாடுவது எப்படி குற்றமோ அது போன்று வேட்டையாடுவதற்கு உதவுவதும் குற்றம் என்பதை மேற்கண்ட செய்தியின் மூலம் விளங்கமுடிகிறது.

 

மார்க்க வரம்புகளை நாம் மீறாவிட்டாலும் அவ்வாறு மீறுபவர்களுக்கு உதவி செய்வதும் தவறு என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். எனவே, பாவக்காரியங்களைச் செய்யாமல் இருந்தால் மட்டும் போதாது. அவற்றுக்குக் கடுகளவும் உதவி செய்யாமலும் இருக்க வேண்டும்.

 

உடல் உழைப்பு கொடுப்பது, பொருளாதாரம் மற்றும் ஆலோசனை வழங்குவது, மட்டுமல்ல! தீமையான காரியம் நடைபெறும் இடத்திற்கே செல்லக் கூடாது. ஏனெனில், ஒரு வகையில் ஆராய்ந்து பார்த்தால் அதுவும் அந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு உதவுவதாகவே இருக்கிறது.

 

அமெரிக்கா தன்னுடைய இருப்பிடத்திலிருந்து ஏவுகணைகளை செலுத்த முடியாமல் அரபு நாடுகளில் தம்முடைய ராணுவத்தளங்களை அமைத்து அங்கிருந்து ஏவுகணைகளை ஈரான் மீது செலுத்துகிறது. அதாவது, அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கு அரபு நாடுகள் முழுமூச்சாக ஒத்துழைக்கிறது என்பது பொருளாகும்.

 

இவ்வாறு தான் அமெரிக்காவால் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் அநியாயமாக தாக்கப்பட்டு சீரழிக்கப்பட்டது. இன்றைய அரபு நாடுகள் அநியாயத்திற்கும், அத்துமீறலுக்கும் துணைபோகின்றது என்று சொன்னால் மிகையில்லை.

 

கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் குற்றமே!

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது மக்ஸுமி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள். அந்தப் பெண் தொடர்பாக கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் (பேசி தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க) சொல்வது யார்? என்று குறைஷியர் ஆலோசித்து, நபியவர்களின் செல்லப்பிள்ளை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தேர்வு செய்தனர்.

 

அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் பரிந்து பேசினார். அப்போது நபியவர்கள், ( أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ) "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்ற விடாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரை செய்கின்றாய்?" என்று கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரையாற்றினார்கள்.

 

( أَيُّهَا النَّاسُ إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ وَإِذَا سَرَقَ فِيهِمُ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا ) மக்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் அழிந்து போனதற்கு காரணமே (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை தண்டிக்காமல் விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால், அவர்கள் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். இறைவன் மீதாணையாக! இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி இருந்தாலும் நான் அவரது கையை துண்டித்தே இருப்பேன். நூல்:- புகாரீ-3475, முஸ்லிம்-3485

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن حالَتْ شَفاعَتُهُ دُونَ حَدٍّ مِن حُدُودِ اللَّهِ، فَقَدْ ضادَّ اللَّهَ في أمْرِهِ ) அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட தண்டனைகளில் ஒன்றை நிறைவேற்றுவதைத் தடுக்க எவரேனும் பரிந்துபேசினால், அவர் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்த்தவராவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

தவறை யார் செய்தாலும், தவறு என்று உரத்தக் குரலில் எடுத்துக் கூறி, அதற்காக கண்டிக்க வேண்டும் அல்லது தண்டிக்க வேண்டும். தம்மைச் சேர்ந்தவர்கள் தவறிழைத்தால் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருப்பது, மிகப்பெரிய அநீதியாகும். தவறுக்கு துணைபோனதாகவே கருதப்படும். தவறுக்கு துணைபோக எண்ணியவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளார்கள்.

 

தடுக்கவேண்டும்

 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا ) “உன் சகோதரன் அநீதியாளனாக இருக்கும் நிலையிலும் அநீதிக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்” என்று சொன்னார்கள்.

 

அப்போது ஒரு மனிதர், ( يَا رَسُولَ اللَّهِ أَنْصُرُهُ إِذَا كَانَ مَظْلُومًا، أَفَرَأَيْتَ إِذَا كَانَ ظَالِمًا كَيْفَ أَنْصُرُهُ ) “அல்லாஹ்வின் தூதரே! அநீதியிழைக்கப்பட்டவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அநீதியாளனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!” என்றார். நபி (ஸல்) அவர்கள், ( تَحْجُزُهُ أَوْ تَمْنَعُهُ مِنَ الظُّلْمِ، فَإِنَّ ذَلِكَ نَصْرُهُ ) “அவனை அநீதியிழைக்கவிடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அநீதியாளனுக்குச் செய்யும் உதவியாகும்” என்றார்கள். நூல்:- புகாரீ-6952, திர்மிதீ, முஸ்னது அஹ்மத்

 

கொடியோன் அபூஜஹ்ல் ஓர் அனாதைச் சிறுவனின் சொத்துக்குப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டிருந்தான். ஒருநாள் அந்தச் சிறுவன் உடுத்துவதற்குச் சரியான ஆடை எதுவுமின்றி நிர்வாண கோலத்தில் அபூஜஹ்லிடம் வந்தான். தன்னுடைய ஏழ்மையை எடுத்துரைத்தான். தன் சொத்தைத் திருப்பித் தருமாறும் உதவி செய்யுமாறும் கேட்டான். ஆனால் அபூஜஹ்ல் பணம் தரமுடியாது என்று மறுத்ததுடன் அந்தச் சிறுவனின் நெஞ்சில் கை வைத்து விரட்டினான்.

 

கஅபாவின் முற்றத்தில் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குறைஷிப் பிரமுகர்கள் அந்தச் சிறுவனிடம், "நீ முஹம்மதிடம் சென்று முறையிடு. அவர் அபூஜஹ்லிடம் சென்று உனக்காகப் பரிந்துரைப்பார். உன் பணத்தைப் பெற்றுத்தருவார்" என்று கூறினர். அவர்களின் நோக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த பிரச்சனையில் சிக்க வைக்க வேண்டும், அபூஜஹ்லிடம் திட்டுவாங்கச் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால், இது அந்தச் சிறுவனுக்கு தெரியாது.

 

அச்சிறுவன் அண்ணலாரிடம் வந்து அபூஜஹ்ல் பற்றி முறையிட்டான். தன்னுடைய பணத்தை மீட்டுத் தருமாறு கோரினான். எளியோருக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர்களை வெறுமனே திருப்பி அனுப்புவது அண்ணலாரின் பழக்கம் அல்ல. அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு அபூஜஹ்லிடம் சென்றார்கள். அண்ணலாரைக் கண்டதும் கண்ணியமாக வரவேற்றான். அனாதைச் சிறுவனுக்குரிய பணத்தை எடுத்துக் கொடுத்தான். அதைப் பார்த்துக்கொண்டிருந்த குரைஷிப் பிரமுகர்கள் அபூஜஹ்லின் செயலைக் கண்டு வியந்தனர். நீ மதம் மாறிவிட்டாயா? என்று அவனிடம் கேட்டனர்.

 

அதற்கு அவன்,  "முஹம்மதின் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் சிறியதோர் ஈட்டியைக் கண்டேன். பயந்து போய்விட்டேன். அவர் கேட்டுக்கொண்டபடி சிறுவனின் பணத்தைக் கொடுக்கவில்லை எனில் அது என்னைக் குத்திவிடுமோ என்று அஞ்சினேன். அதனால்தான் உடனே பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன்" என்று கூறினான். நூல்:- தஃப்சீர் பைளாவி,  ஹாஷியத்துல் ஜமல்

 

யாரோ எவரையோ தாக்குகிறார். அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? என்ற எண்ணம் மிகவும் தவறாகும். அடுத்த வீட்டில் பற்றி எரிகின்ற தீயை அணைக்காவிட்டால், அது நம் வீட்டையும் எரித்து சாம்பலாக்கிவிடக்கூடும் என்று யோசிக்க வேண்டும்.

 

அடுத்தவர் படுகின்ற கஷ்டத்தை நாம் கண்டும் காணாமல் சென்று விட்டால், நமக்கு ஏதேனும் கஷ்டம் ஏற்படும்போது பிறர் கண்டும் காணாமல் சென்றுவிடுவார்கள். நமக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள்.

 

நாமும் பாதிக்கப்படலாம்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைவனின் விதிகளைக் கடைப்பிடிப்பவர், அவற்றை மீறி நடப்பவர் ஆகியோரின் நிலையானது, (கப்பலில் பயணம் செய்த) ஒரு கூட்டத்தாரின் நிலையைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல்தளத்திலும் வேறுசிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது.

 

கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டுவர) அவர்கள் மேல்தளத்தில் இருப்பவர்களைக் கடந்துசெல்ல வேண்டி யிருந்தது. (அதனால் மேலே இருந்தவர் களுக்குச் சிரமம் ஏற்பட்டது).

 

அப்போது, கீழ்த்தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘‘நாம் (தண்ணீருக்காக) நமது பங்கில் (கீழ்த்தளத்தில்) ஒரு துளை போட்டுக்கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருக்கலாம்’ என்று பேசிக்கொண்டார்கள்.

 

எனவே, ( فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا ) அவர்கள் விரும்பியபடி செய்துகொள்ள அவர்களை மேல்தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால், (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்துபோவார்கள். (துளையிட விடாமல்) அவர்களின் கரங்களைப் பிடித்துக்கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக்கொள் வார்கள். (அவர்களுடன் மற்ற) அனை வரும் தப்பிப் பிழைத்துக்கொள்வார்கள். அறிவிப்பாளர்:- நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2493

 

பாவமோ, அநியாயமோ யாரோ எவருக்கோ செய்கிறார்கள் நாம் அதை செய்யவில்லை எனவே, அதைப் பற்றிய அக்கறை நமக்கு தேவையில்லை என்ற அலட்சியப்போக்கு ஆபத்தானது. சமூகத்தில் பாவமான காரியங்கள் பெருகிவிட்டால் அவற்றைச் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் அதன் பாதிப்பு நேரிடும். இதைச் சிறுபிள்ளைக்கும் புரியும் வகையில் நபியவர்கள் உதாரணம் மூலம் விளக்கி இருக்கிறார்கள்.

 

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை தாக்குகிறது. அதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட்டு வருகிறது. ஈரானுக்கு தானே பிரச்சினை என்று விட்டுவிடும்போது அதன் விளைவு உலகம் முழுவதும் பிரதிபலிக்கிறது.

 

சமாதானம் செய்து வைப்பது

 

(பிறரின் அநியாயத்தை) மன்னித்து சமாதானமாக செல்வோருக்கு அவரது கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநியாயம் செய்பவர்களை விரும்பமாட்டான். திருக்குர்ஆன்:-  42:40

 

ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் மீதொருவர் கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நபியவர்கள், ( اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ ) "நம்மை அழைத்துச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2693

 

யாரோ இருவர் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் நமக்கு ஏன் வந்தது வம்பு? என்ற அடிப்படையில் ஒதுங்கிச் செல்வது முறையல்ல. அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சண்டையால் பிறருக்கு பாதிப்பு வரக்கூடும் என்று தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, அவர்களை சமாதானத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

 

இரு நாட்டுக்கு மத்தியில் போர் மேகம் சூழ்ந்த போதிலும், அந்த நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாதானத்தை விரும்புவது தான், தமது குடிமக்கள்மீதுள்ள அக்கறை உள்ள சிறந்த தலைமைப் பண்பிற்குரிய அடையாளமாகும்.

 

ஒரு தீமையைக் கண்டவுடன் ”எடுத்தோம் கவிழ்த்தோம்” என்றில்லாமல், அதற்கு ஏற்ற விதத்திலே அதனை தடுக்கவேண்டும். அதுவும், அதனை எந்த அடிப்படையில் தடுத்து, மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற சிந்தனையுடனே செயல்பட வேண்டும்.

 

38 நாள்களுக்கு பிறகு பதட்டம் தணியும் விதகமாக அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளையும் இரண்டு வார போர் நிறுத்தமும் 10 நிபந்தனைகளுடன் பேச்சு வார்த்தைக்கு (8-04-2026 அன்று) அழைத்து வந்துள்ளது பாகிஸ்தான். இது அழகிய முயற்சி என்று உலகம் முழுவதும் பாகிஸ்தானை பாரட்டி வருகிறது.

 

விரைவிலேயே முழுவதுமாக போர் பதற்றம் நீங்கி, உலகம் அமைதி பெற, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Friday, 27 March 2026

திருமணத்திற்கு உதவுவோம்

 

திருமணத்திற்கு உதவுவோம்

 

وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ

உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும் உங்களுடைய ஆண் மற்றும் பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் நீங்கள் மணமுடித்து வையுங்கள். திருக்குர்ஆன்:- 24:32

 

திருமண வாழ்வை துவங்கும் ஏழை, எளியோருக்கு நம்மால் இயன்ற ஆபரணங்களாகவோ, பத்திரங்களாகவோ, பணமாகவோ, ஆடைகளாகவோ ஏதேனும் ஒரு சிறிய உதவியேனும் செய்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், நாம் உதவிய அந்த தம்பதிகளின் மூலமாக பிறக்கக்கூடிய மறுமைநாள் வரையிலான அனைத்து சந்ததிகளும் செய்யக்கூடிய தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற நற்காரியங்களில் பலன்கள் நமது மண்ணறையில் நாம் அறியாமலே வந்தடைந்துக்கொண்டே இருக்கும்.

 

மிகச் சிறந்த உதவி

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பாதுகாக்கும் பணியில் ரபீஆ அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லும் பகலும் ஈடுபட்டிருந்தார். நபியவர்கள் இஷா தொழுகையை முடித்துவிட்டு இல்லம் சென்றவுடன் இவர், நபியவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் நிறைவேற்றித் தருவதற்காக அங்கேயே வாசற்படியில் அமர்ந்திருப்பார். ஒருமுறை நபியவர்கள் இவரிடம் "மணமுடித்துக் கொள்!" என்று கூறினார்கள். அதற்கு அவர், "நாயகமே! நான் மணமுடித்துக் கொண்டால் எனது இந்தப் பணிக்கு அது ஒத்து வராது" என்று கூறினார். ஆனால், நபியவர்கள் அவரிடம் திரும்பத் திரும்ப மணமுடித்துக்கொள்! என்று கூறி, அவருக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிய வைத்து, அவருக்கு மணமுடித்து வைத்தார்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது பணியாளருக்கு மணமுடித்து வைத்து சந்தோஷப்பட்டார்கள். நமது பணியாளர்கள் அல்லது பணியாளர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தேற நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டும்.

 

இமாம் ஷஅரானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். திருமண உதவி என்பது ஒருவருக்கொருவர் செய்யக்கூடிய சகோதர கடமையாகும். மேலும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், தர்ம போராட்டத்திற்காகவும் செய்யும் உதவியை காட்டிலும் திருமண உதவி மிகவும் சாலச் சிறந்ததாகும் என முன்னோர்களான நாதாக்கள் கூறுகிறார்கள். ஏனெனில், திருமணம் என்பது மிகச் சிறந்த சுன்னத்தாகும். இவ்வுலகில் திருமணம் நடக்கவில்லையெனில் அல்லாஹ்வை வணங்கக்கூடிய இறைநேசர்கள் மற்றும் நேர்மையான அறப்போர் வீரர்கள் எவரும் இங்கு பிறக்க மாட்டார்கள்.  நூல்:- அல்அன்வார் ஃபீ ஸுஹ்பத்தில் அக்யார்

 

ஊக்கப்படுத்துதல்

 

பாத்திமா பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களும், அபூஜஹ்ம் பின் ஹுதைபா (ரலி) அவர்களும் என்னை பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன்.

 

அதற்கு அண்ணலார்,  ( أَمَّا أَبُو جَهْمٍ فَلاَ يَضَعُ عَصَاهُ عَنْ عَاتَقِهِ وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لاَ مَالَ لَهُ انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ )  "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர் மனைவியைக் கடுமையாக அடித்துவிடுபவர்) முஆவியா அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்!" என்று கூறினார்கள். நானும் அவ்வாறு அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். நூல் முஸ்லிம்-2953, நசாயீ-3193

 

திருமண பேச்சின்போது இன்னார் வீட்டிலுள்ள பெண் அல்லது மாப்பிள்ளை எப்படி? அல்லது அந்த வீட்டினர் எப்படிப்பட்டவர்கள்? என்று நம்மிடம் ஆலோசனை கேட்கப்படும்போது அவர்களிடமுள்ள நற்பண்புகளை எடுத்துரைத்து கேட்டவர்களை ஊக்கப்படுத்துவதும் திருமணத்திற்குரிய உதவிகளில் ஒன்றாகவே கருதப்படும்.

 

மாறாக, விசாரிக்க வந்தவர்களிடம் அவர்களைப்பற்றி தவறாக எடுத்துரைத்து, அவர்களை தாறுமாறாக விமர்சனம் செய்துவிட்டால் திருமணம் நடைபெறுமா? புத்தியுள்ள எவரும் பெரும்பாலோரின் விமர்ச்சனத்திற்கு ஆளானவருக்கு மணமுடித்து கொடுக்கமாட்டார்கள்.

 

பரிந்துரைத்தல்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை (குள்ளமாகவும், அருவருப்பான தோற்றமுடையவராகவும் இருந்த) ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்து வைப்பதற்காக அப்பெண்ணின் தந்தையிடம் பெண் கேட்டார்கள். அவர், "மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறினார்.

 

பிறகு அவர் தம் மனைவியிடம் நடந்ததை தெரிவித்தார். அவருடைய மனைவி, "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நான் சம்மதிக்கமாட்டேன். என்ன? அண்ணலாருக்கு ஜுலைபீபைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா? இன்னின்னவர்களெல்லாம் நம்மிடம் பெண் கேட்டனர். அவர்களுக்கெல்லாம் நம் மகளை (தர முடியாது என) மறுத்துவிட்டோம். (அப்படியிருக்க இவருக்கா? சம்மதிக்க மாட்டோம்)"என்று கூறினார்.

 

இதையெல்லாம் அப்பெண்ணின் மகள் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த மனிதர் தம் மனைவியின் கருத்தை அண்ணலாரிடம் தெரிவிப்பதற்காக புறப்பட்டார்.

 

அப்போது அவருடைய மகள்,  ( أَتُرِيدُونَ أَنْ تَرُدُّوا عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَمْره إِنْ كَانَ قَدْ رَضِيَهُ لَكُمْ فَأَنْكِحُوه ) "அண்ணலாரின் உத்தரவுக்கு நீங்கள் மாற்றம் செய்ய நினைக்கிறீர்களா? அண்ணலார், அவரையே உங்களுக்கு (மருமகனாக ஆக்க) விரும்பினால், அவருக்கே என்னை மணமுடித்து வையுங்கள்" என்று கூறினாள். அப்பெண் தன் பெற்றோரை(யும் அவர்களின் நிலைபாட்டையும்) விட்டு ஒதுங்கிக்கொண்டவளை போல் பேசினாள். அப்போது பெற்றோர், "நீ கூறுவது சரியே!" என்றனர்.

 

பின்னர் அப்பெண்ணின் தந்தை அண்ணலாரிடம் சென்று, "(நாயகமே!) நீங்கள் அவரையே விரும்பினால், எங்களுக்கும் அவர் திருப்தி தான்" என்றார். அண்ணலார், ( فَإِنِّي قَدْ رَضِيته )  "நான் அவரையே திருப்திபடுகிறேன்" என்று கூறினார்கள். பின்னர் அப்பெண்ணை அந்த மனிதருக்கே மணமுடித்து வைத்தார்கள்.

 

மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். பிற்காலத்தில் ஜுலைபீபுடைய மனைவியை நான் கண்டபோது, மதீனாவிலேயே அதிகமாகச் செலவழிக்கும் வீட்டினராக அவள் இருந்தாள். (அதாவது பெரும் சீமாட்டியாக இருந்தாள்). நூல்:- முஸ்னது அஹ்மது, முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக், தஃப்சீர் இப்னு கஸீர் அத்தியாயம் அல்அஹ்ஸாப், வசனம்-36

 

இந்த பையனுக்கு உங்கள் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் நன்றாக வாழ்வார்கள். இந்த பையன் ஏழையாக இருந்தாலும் அல்லது இவனுக்கு சொந்தம் பந்தம் என்று பெரியளவில் இல்லாவிட்டாலும் அல்லது கருப்பாக அழகற்றவனாக இருந்தாலும் அல்லது பெரிய படிப்புகள் படிக்காதவனாக இருந்தாலும், இவன் அல்லாஹ்விற்கு அஞ்சி ஐவேளை தொழக்கூடியவன், நற்குணமுள்ளவன், எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவன், தமது மனைவி மக்களை காப்பாற்றும் அளவுக்கு ஓரளவு சம்பாதிக்கக்கூடியவன் என்றெல்லாம் கூறி ஒருவருக்கு திருமணம் நடந்தேற பரிந்துரைப்பதும் திருமணத்திற்குரிய உதவிகளில் ஒன்றாகவே கருதப்படும்.

 

பிறரின் பிரார்த்தனை

 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் எப்போது வியாபாரத்திற்கு சென்றாலும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவின் எல்லை வரை வந்து வழியனுப்புவார்கள். காரணம், இவரின் சம்பாத்தியத்தின் மூலம் பிற மக்கள் பயனடைந்து வந்தனர். இவ்வாறு ஒருமுறை அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வியாபாரத்திற்கு சிரியா நோக்கி பயணமானார். அப்போது நபியவர்கள் மதீனாவின் எல்லை வரை வந்து வழியனுப்பவில்லை. வீட்டில் இருந்தவாறு சோகத்துடன் வழியனுப்பிவைத்தார்கள்.

 

இதைக் கவனித்த ஹுதைபா பின் அல்யமான் (ரலி) அவர்கள், "நாயகமே! அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களின் விஷயத்தில் இப்போது நீங்கள் கொஞ்சம் மாற்றமாக நடந்துகொள்கிறீர்களே என்ன காரணம்?" என்று வினவினார். நபியவர்கள், "எனது அன்புத்தோழர் அப்துர்ரஹ்மான் இந்த பயணத்தில் சிரியாவிலேயே இறந்துவிடுவார். மீண்டும் மதீனா திரும்பமாட்டார். அவரது தவணை விரைவில் முடிந்துவிடும்" என்று கூறினார்கள். (நபியவர்களின் சொல் என்றும் பொய்ப்பதில்லை.)

 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தமது சிரியா பயணத்தை முடித்துக்கொண்டு நல்ல விதமாக மதீனா வந்து சேர்ந்தார். அப்போது நபியவர்களுக்கும், ஹுதைபா (ரலி) அவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது பிறகு நபியவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அழைத்து,  “உமது சிரியா பயணத்தில் என்ன நடந்தது? என்று விசாரித்தார்கள்.

 

அப்போது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நடந்த ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே வரும்போது எங்களின் பயண குழுவில் நான்கு வாலிபர்கள் (மஹர் எனும்) மணக்கொடை கொடுத்து திருமணம் முடிப்பதற்கு போதிய வசதியற்றவர்களாக இருந்தனர். நான் எப்போது சிரியா சென்றாலும் அங்கே ஒரு வீட்டில் விருந்தாளியாக தாங்குவேன். அந்த வீட்டில் திருமணம் முடிக்காத நான்கு குமரிகள் இருந்தனர். உடனே, நான் அந்த நான்கு வாலிபர்களிடமும் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுத்து, இந்தத் தொகையை மஹராக வைத்து இந்த நான்கு பெண்களையும் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி, நான் அவர்களுக்கு மணமுடித்து வைத்தேன். அப்போது அவர்கள், இறைவா! எங்களுக்கு மணமுடித்து வைத்த இவருக்கு எங்கள் ஆயுளில் இருந்து சில ஆண்டுகளை இவருக்கு கொடுத்து இவரின் ஆயுளை நீட்டிப்பாயாக! என்று பிரார்த்தித்தனர்" என்று கூறினார்.

 

அப்போது நபியவர்கள், அப்துர்ரஹ்மானே! உமது ஆயுள் முடிந்துவிட்டது. இருந்தாலும், நீ யாருக்கு உதவி செய்தாயோ அவர்களின் பிரார்த்தனையின் மூலம் அவர்களின் ஆயுளில் இருந்து உனக்கு சில ஆண்டுகள் கொடுக்கப்பட்டு அதன் மூலம் உன் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

 

திருமணத்திற்காக தவித்துக்கொண்டிருப்போருக்கு நாம் உதவி செய்யும்போது அவர்கள் நமக்காக பிரார்த்திக்கலாம். அந்தப் பிரார்த்தனையை அல்லாஹ் அலட்சியப்படுத்துவதில்லை.

 

கொடுக்கும் அந்தஸ்தில் இருப்பவர்கள்

 

ஜனாதிபதி உமர் பின் அப்தில் அஜீஸ் (ரஹ்) அவர்களை (ஹிஜ்ரீ 61-101) சந்திக்க ஈராக் மாகாணத்திலிருந்து ஒருபெண் (சிரியாவுக்கு) வந்து ஜனாதிபதி அவர்களின் வீட்டுக்குச் சென்றாள். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த ஜனாதிபதி அவர்கள் தமது மனைவியிடம், “யார் இந்தப்பெண்? ஏன் வந்துள்ளார்?” என்று விசாரித்தார்கள். அன்னாரின் மனைவி, “இதோ இருக்கிறார். அப்பெண்ணிடம் நீங்களே கேளுங்கள்” என்றார்.

 

ஜனாதிபதி அவர்கள், ( مَا حَاجَتُكِ ؟ ) “உமக்கு என்ன தேவை இருக்கிறது?” என்று கேட்டார்கள். உடனே அப்பெண், (  امْرَأَةٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ لِي خَمْسُ بَنَاتٍ كُسْلٌ كٌسْدٍ، فَجِئْتُكَ أَبْتَغِي حَسْنَ نَظَرِكَ لَهُنَّ )நான் ஈராக் மாகாணத்திலிருந்து வந்துள்ளேன். எனக்கு ஐந்து பெண்பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் யாரையும் யாரும் இதுவரை விரும்பி பெண்கேட்டு வந்ததில்லை. என்பிள்ளைகள்மீது உங்களின் கருணையை (உதவியை) எதிர்பார்த்து வந்துள்ளேன்” என்றார்.

 

ஜனாதிபதி அவர்கள்யாருமே பெண்கேட்டு வரவில்லையா?” என்று திரும்பத் திரும்பக் கூறியபடியே கண்ணீர் வடித்தார்கள். பின்னர் மைக்கூடு, காகிதம் ஆகியவற்றை கொண்டுவரச்சொல்லி, ஈராக் மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

அப்போது ( سُمِّيَ اكْبُرْهُنّ ) “பெரிய மகள் பெயர் என்னம்மா”? என்று அப்பெண்ணிடம் கேட்டு அப்பெண்ணின் பெயரைக்குறிப்பிட்டு “இவ்வளவு உதவித்தொகை வழங்கவேண்டும்” என்றெழுதினார்கள். இதைப்பார்த்த அப்பெண் (அல்ஹம்து லில்லாஹ்) “அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்” என்றாள். பின்னர், இரண்டாம் மகள், மூன்றாம் மகள் நான்காம் மகள் என ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரையும் அவர்களுக்கு ஒதுக்கவேண்டிய பணத்தையும் குறிப்பிட்டு எழுதினார்கள்.

 

கொஞ்சநாட்களுக்கு பிறகு ஈராக் வந்த அப்பெண் அக்கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார். கடிதத்தைப் பார்த்து கவர்னர் அழுதார். அழுதுகொண்டே, ( رَحِمَ اللَّهُ صَاحِبُ هَذَا الْكِتَابِ ) “இக்கடிதத்தை கொடுத்தனுப்பியவருக்கு (ஜனாதிபதிக்கு) அல்லாஹ் அருள்புரிவானாக” என்றார். இதைக்கேட்ட அப்பெண், “ஜனாதிபதி அவர்கள் மரணித்துவிட்டார்களா?” என்று கேட்டார். “ஆம்” என்றார் ஆளுநர். அழுதுகொண்டே அப்பெண் திரும்பிச் செல்ல முற்பட்டார்.

 

உடனே ஆளுநர், ( لَا بَأْسَ عَلَيْكِ، مَا كُنْتُ لِأَرُدَّ كِتَابَهُ فِي شَيْءٍ ) “பரவாயில்லை. ஜனாதிபதி அவர்களின் கடிதத்தை எதற்காகவும் நான் திருப்பி அனுப்ப விரும்பவில்லை.” என்று சொல்லி, அப்பெண்ணின் மகள்களுக்குரிய பணத்தை கொடுத்தனுப்பி அவரின் தேவைகளை நிறைவேற்றி அனுப்பினார். நூல்:- சீரா உமர் பின் அப்தில்அஜீஸ் இமாம் இப்னு அப்தில் ஹகம்

 

டமாஷ்கஸில் இருந்த வக்ஃப்களின் எண்ணிக்கைக்கும் அதன் பயன்பாட்டிற்கும் அளவேயில்லை. அவை ஏராளமாக இருந்தன.

 

அவற்றில் ஒன்று, பெண்பிள்ளைகளை தகுந்த மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சக்தியற்ற பெற்றோருக்கு உதவிட ஒரு வக்ஃப் இருந்தது. அவற்றில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு திருமணம் செய்து வைத்திட செலவிட்டனர்.

 

மேலும், அநாதைப் பிள்ளைகளுக்காகவும் வக்ஃப் ஒன்று இருந்தது. அவற்றில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அநாதைகளைப் பராமரிக்க, அவர்களுக்கு கல்வி கற்பிக்க, திருமணம் செய்து வைத்திட செலவிட்டனர்.”இந்த வக்ஃப்கள் அந்த ஊர்களின் பெருமைமிகுந்த வியப்பிற்குரியனவாக இருந்தன” என்கிறார் இப்னு ஜுபைர். நூல்:- ரிஹ்லா இப்னு பதூதா, ரிஹ்லா இப்னு ஜுபைர்

 

அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது கொடுக்கும் அந்தஸ்தில் இருப்பவர்கள் தம்மை தேடி வந்து திருமணத்திற்கு உதவுமாறு கேட்கும்போது அவர்களின் நிலையை முழுமையாக அறிந்து, முடிந்தளவு அவர்களுக்கு உதவ வேண்டும்.

 

வலிமா விருந்து

 

புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகியோரின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (அலீ - ரலி அவர்களை நோக்கி!), ( أَنَّهُ لَا بُدَّ لِلْعُرْسِ مِنْ وَلِيمَةٍ ) "(வலீமா எனும்) திருமண விருந்து  நடைபெற வேண்டுமே" என்றார்கள். உடனே, (அலீ - ரலி அவர்களின் பொருளாதார நிலை அறிந்த ) சஅத் (ரலி) அவர்கள், "நான் ஒரு செம்மறி ஆடு தருகிறேன்" என்றார். (இதைப் பார்த்த) பல அன்சாரிகள் வாற்கோதுமை சேகரித்துக் கொண்டுவந்துக் கொடுத்தனர். (அதை வைத்து அலீ - ரலி அவர்களின் திருமண விருந்து சிறப்பாக நடைபெற்றது.) நூல்:- தப்ரானீ

 

இஸ்லாமியப் பார்வையில் திருமணத்தின்போது மணமகனுக்கு இரண்டு செலவுகள் உண்டு. 1) மணக்கொடை 2) வலிமா விருந்து.

 

அலீ (ரலி) அவர்கள் தன்னிடமிருந்த மதிக்கத்தக்க கேடயத்தையே (மஹ்ர் எனும்) மணக்கொடையாகக் கொடுத்தார்கள். வலீமாவிற்கு செலவு செய்ய ஒன்றுமில்லை என்ற நிலையில் இருந்தபோது தான் சஅத் (ரலி) அவர்கள் போன்றவர்கள் வலிமாவிற்காக பொருள்களை கொடுத்து உதவினர்.

 

கனவிலும் உதவி

 

பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸல்ஜுக் பேரரசின் புகழ்பெற்ற அரசர் ஜலாலுதீன் மலிக் ஷா (ரஹ்) (1055-1092) அவர்களைக் காண ஒரு மனிதர் வந்தார். அவர் வயதான தோற்றத்தில், அழகான உருவ அமைப்பில், கம்பீரமாக காணப்பட்ட முதியவராக இருந்தார். வந்தவர் மன்னருக்கு பரிசாக ஒரு மிஸ்வாக் குச்சியையும், ஒரு சீப்பையும் வழங்கினார்.

 

அவர், "நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறிவிட்டு, "எனக்கு பல பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்; நான் மிகவும் ஏழ்மையாக இருக்கின்றேன்; அவர்களுக்கு திருமணம் செய்வதற்குத் தேவையான பொருள்கள் என்னிடம் இல்லை. அதற்காக ஒவ்வொரு நாள் இரவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தேன்.

 

இந்நிலையில் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நான் மிகவும் வருத்தத்தோடு அல்லாஹ்விடம் என் மகள்களின் திருமணம் குறித்து சொல்லி உதவி கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த இரவில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என் கனவில் காட்சியளித்தார்கள்; அப்பொழுது நபியவர்கள், "நீ தொடர்ந்து அல்லாஹ்விடம் உன் மகள்களின் திருமணத்திற்காக உதவிகளை கேட்டுக்கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள்.

 

நான், "ஆம்" என்று பதிலளித்தேன்; அதற்கு நபியவர்கள், "அப்படியானால் நீங்கள் மன்னர் ஷாவிடம் சென்று, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என் மகள்களின் திருமண செலவினங்களுக்கு உதவி செய்யுமாறு உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

 

உடனே நான் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மன்னர் ஏதேனும் அடையாளங்களை கேட்டால் நான் என்ன சொல்வேன்?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "நீங்கள் அவரிடம், ஒவ்வொரு நாள் இரவும் உறங்குவதற்கு முன் அல்முல்க் (67 வது) அத்தியாயத்தை முழுமையாக ஓதி வருகிறீர்கள் என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

 

இந்த செய்தியை மன்னர் கேட்டதும் அதிர்ச்சிக்குள்ளானார்; உடனே அவர், "நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது; இதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; ஏனென்றால் முல்க் அத்தியாயத்தை ஒவ்வொரு இரவும் ஓதி வரும்படி எனது ஆசிரியர் எனக்கு சொன்னார்; அதை நான் இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகிறேன்" என்று சொன்னார்.

 

பின்னர் மன்னர் அவர்கள் அந்த ஏழை மனிதரின் மகள்கள் திருமண செலவினங்களுக்கு தேவையான முழுமையான பொருளாதார உதவிகளை செய்தார். மேலும், அவருக்கு தேவையான அளவு உதவிகளை மனமுவந்து தாராளமாக செய்து மரியாதையோடு வழியனுப்பி வைத்தார். நூல்:- அல்இஃதிபார்

 

தேவையற்ற செலவுகள் 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ ) யார் மக்களின் பொருளைப்பெற்று அதை சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான். நூல்:- புகாரீ-பாடம்: லா சதகத்த இல்லா அன் ளஹ்ரி ஙினன்-1426

 

வசதியற்ற திருமண வீட்டார் திருமணத்திற்கென்று பிற மக்களிடம் வசூலித்ததை, தாம் சிரமப்பட்டு சம்பாதித்த பணமன்று, பிற மக்கள் வழங்கிய பிச்சைதானே என்றெண்ணி, அதை மார்க்கத்திற்கு முரணான பாவக்காரியங்களில், மூடநம்பிக்கையான காரியங்களில் அல்லது ஆடம்பரங்களில் செலவழித்தல் என்பது அல்லாஹ்விற்கு கோபத்தை உண்டாக்கும் செயலாகும்.

 

பணம், பொருள் யாருடையதாக இருந்தாலும், அதை விரயம் செய்வது பாவமாகும். அதிலும் பிற மக்களிடம் வசூலித்ததை தவறான முறையில் செலவு செய்வது, நம்பிக்கைத் துரோகமாகும்.

 

நம்மால் முடிந்தளவு திருமண தேவையுடையோருக்கு மனத்தூய்மையுடன் உதவுகள் புரிந்து, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

தீமைக்குத் துணைபோகாதே!

  தீமைக்குத் துணைபோகாதே!   وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ...