Search This Blog

Tuesday, 10 March 2026

பண்டிகைகள்

 

பண்டிகைகள்

 

وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

உங்களுக்கு (அல்லாஹ்) நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் பெயரை உரத்த குரலில் கூறுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாகத் திகழலாம். திருக்குர்ஆன்:- 2:185

 

இந்தியாவில் சுமார் இருபத்தைந்து கோடிக்கும் அதிகமான மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

 

அதில் காற்றை மாசுப்படுத்தவில்லை. கடலை மாசுப்படுத்தவில்லை, கலர்சாயம் பூசவில்லை, மதுவில் மயங்கவில்லை, கேளிக்கையில் மூழ்கவில்லை, கூச்சலும் இல்லை, கூப்பாடும் இல்லை, மாற்று மத வழிபாட்டுத்தலத்திற்கு முன் நின்று கூச்சலிட்டு இடையூறு செய்யவில்லை.

 

மாறாக, தானும் மகிழ்ந்து மற்றவர்களும் மகிழ இயன்றளவு தர்மம் செய்து, அனைத்து சமூக மக்களுடனும் அன்பை பறிமாறி, மாபெரும் இந்த ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையை அமைதியாய் கடந்துசெல்கிறார்கள்.

 

பெருநாள் தர்மம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَمَّا غَنِيُّكُمْ فَيُزَكِّيهِ اللَّهُ وَأَمَّا فَقِيرُكُمْ فَيَرُدُّ اللَّهُ عَلَيْهِ أَكْثَرَ مِمَّا أَعْطَاهُ ) உங்களில் செல்வந்தர்கள் இதை (ஸதக்கத்துல் ஃபித்ர்) கொடுத்தால் அல்லாஹ் அவர்களைத் தூய்மைப்படுத்துகிறான். உங்களில் ஏழைகள் கொடுத்தால் உயர்ந்தோன் அல்லாஹ் அவர்கள் கொடுத்ததைவிட அதிகமாகத் திருப்பி வழங்குகின்றான். அறிவிப்பாளர்:- ஸஅலபா பின் அஸ்ஸுஅய்ர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1379

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. முஸ்லிம்களில் சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனைவருக்காகவும் ஒரு ‘ஸாஉ’ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்)கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். நூல்:- புகாரீ-1504, முஸ்லிம்-1791 

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உணவையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திராட்சையையோ வழங்கிவந்தோம். நூல்:- புகாரீ-1506, முஸ்லிம்-1796 

 

புனித ரமளான் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து, அடுத்த மாதமான ஷவ்வால் முதல் நாள் கொண்டாடப்படும் நோன்பு பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் தர்மமே (ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படும்) நோன்பு பெருநாள் தர்மமாகும்.

 

நோன்பாளி செய்த சிறு தவறுகளுக்கு இந்த தர்மம் ஒரு பரிகாரமாக அமையும். அன்றைய செலவுகள்போக மேல்மிச்சமாகக் கையிருப்பு வைத்திருக்கும் ஒருவர் தமக்காகவும் தம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக கணக்கிட்டு நோன்பு பெருநாள் தர்மம் கொடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத்தின் உச்சவரம்பையும் (நிஸாப்) பெற்றிருக்க வேண்டும் என்று அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். சிறியவர், பெரியவர், ஆண், பெண், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவருக்காக வேண்டியும் இந்தத் தர்மம் வழங்கப்பட வேண்டும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

அருமை நாயகம் (ஸல் )அவர்கள் காலத்தில் அரபுகளின் உணவுப் பொருளாக இருந்த கோதுமை மற்றும் பேரிச்சம்பழத்தை அடிப்படையாகக் கொண்டு இங்கு அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பேரிச்சம்பழமும் தோல் நீக்கப்படாத வாற்கோதுமையாகவோ இருந்தால் அவற்றில் ஒரு "ஸாஉ" ஒருவருக்காக கொடுக்கப்பட வேண்டிய நோன்பு பெருநாள் தர்மத்தின் அளவாகும்.

 

ஒரு "ஸாஉ" என்பது ஹிஜாஸ் பகுதியின் அளவில் 2.135 கி.கிராம் ஆகும். நபியவர்கள் காலத்தில் மதீனாவின் வழக்கத்தில் இருந்த "ஸாஉ" என்பது நிறுத்தலளவையில் 2.135 கி.கிராமும் முகத்தலளவையில் 2.360 லிட்டரும் ஆகும். தோல் நீக்கப்பட்ட மணிகோதுமையாக இருப்பின் இதில் பாதியளவு என்ற மக்கள் நிர்ணயித்துக்கொண்டனர்.

 

இன்று அந்தந்தப் பகுதியில் மிகுதியாக உள்ள உணவு தானியங்களை இதே கணக்கில் கொடுக்கலாம். அறிஞர்களில் சிலர் அந்தத் தானியங்களின் விலைமதிப்பைப் பணமாகவும் கொடுக்கலாம் என்கிறார்கள்.

 

ஹனஃபீ சட்டம்: நாம் உண்ணுகின்ற அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களின் கிராயத்தை கொடுப்பதே சிறந்தது.

ஷாஃபீ சட்டம்: நாம் உண்ணுகின்ற அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களை மட்டுமே கொடுக்க வேண்டும்; அதன் கிராயத்தை கொடுக்கக்கூடாது.

 

பெருநாள் தொழுகைக்கு முன்னர்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ ) வீணான, கெட்ட பேச்சுகளிலிருந்து நோன்பாளியைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக ஆவதற்காகவும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸதக்கத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்.

 

யார் அதை(ப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நிறைவேற்றினாரோ அது (அவரிடமிருந்து) ஏற்றுக்கொள்ளப்பட்ட (ஸதக்கத்தில் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும். யார் அதை தொழுகைக்குப் பின்னர் நிறைவேற்றினாரோ அது (அவரிடமிருந்து நிகழ்ந்த சாதாரண) தர்மங்களில் ஒரு தர்மம் ஆகும். நூல்:- அபூதாவூத்-1371, இப்னுமாஜா-1817, ஹாகிம்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ ) மக்கள் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பே அல்லது இரண்டு நாள் முன்பே நோன்பு பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள்.

 

பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். நூல்:- நூல்:- புகாரீ- 1511, முஸ்லிம்-1801, அபூதாவூத்-1372

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أُغْنُوهُمْ عَنِ الطَّوَافِ فِي هَذَا الْيَوْمِ ) அந்த நாளில் ஏழைகள் (உணவில்லாமல்) அலைந்து திரிவதை தடுத்துவிடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தாரகுத்னீ, சுனனுல் குப்ரா இமாம் பைஹகீ, அல்காமில் இமாம் இப்னு அதீ, புலூகுல் மராம்-648

 

நமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மம் வழங்கப்பட வேண்டும். மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே இத்தர்மத்தை வழங்கிவிட வேண்டும். ஒன்றிரண்டு நாள்களுக்கு முன்பே கொடுத்துவிட்டாலும் கூடும்.

 

ஃபித்ரா கணக்கு

 

(ஈதுல்ஃபித்ர் எனும்) ஈகைப்பெருநாள் பண்டிகைக்கு முன்பு (ஜகாத் அல்ஃபித்ரா எனும்) கட்டாய தர்மம் ஏழைகளுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கச் சட்டமாகும். அதில் குறைந்தபட்ச தொகை ஒருவருக்கு தலா 140 ரூபாய் ( 90, 100, 120, 140, 150, 160, 200 என வேறுபடுகிறது). சராசரியாக, இந்தியாவில் உள்ள சுமார் 25 கோடி முஸ்லிம்களில், 20 கோடி இந்திய முஸ்லிம்களாவது தங்கள் ஊர்களில் உள்ள சக ஏழை எளிய முஸ்லிம்களுக்கு கொடுத்திருப்பார்கள்.

 

இந்தியாவில் ரூபாய் 2800 கோடிக்கு மேலே பெருநாளன்று தர்மம் செய்யப்படுகிறது.

 

உலகளவில் 180 கோடி உலக முஸ்லிம்கள் என கணக்கு எடுத்தால், இவர்களில் ஆகக் குறைந்த பட்சம் 120 கோடி மக்கள். இந்த ஃபித்ரா ஈகையை நிச்சயமாக தர்மம் செய்திருப்பர்.

 

அதாவது, 120 கோடி ×140 = 16,800 கோடி ரூபாய் தர்மம் ஒரே நாளில் நடந்துள்ளது எனலாமா என்றால், வெளிநாடுகளில் ஃபித்ரா தொகை வேறுபடும்.

 

உதாரணமாக, 30 கோடி முஸ்லிம்கள் கொண்ட பணக்கார வளைகுடா நாடுகளில் இந்த ஈதுல் ஃபித்ரா (பெருநாள் ஈகை) தொகை அந்த நாடுகளின் பொருளாதார வாழ்வியலுக்கு ஏற்ப சவுதியில் 25 ரியால் (570 ரூபாய்)  துபாயில் 25 திர்ஹம் (580 ரூபாய்) என்று நான்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் வளைகுடாவில் மட்டுமே 600×30கோடி = 18,000 கோடி தர்மம் ஒரே நாளில் தரப்பட்டுள்ளது.

 

எனவே, சராசரியாக இந்த ஈகைத்திருநாள் அன்று இவ்வுலகில் எப்படியும் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏழைகளுக்கு தர்மம் செய்யப்பட்டிருக்கும்.

 

“அட்சயத்திரிதை அன்று 9000 கோடிக்கு தங்கம் விற்பனை, தீபாவளி அன்று 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை, புத்தாண்டில் டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி” என்றெல்லாம் ஒவ்வொரு செய்தியிலும் பரபரப்பு பிரேக்கிங் நியூஸாக தண்டோரா போடும் நமது ஊடகங்கள், சுமார், 1400 வருடங்களாக சத்தமில்லாமல் நடக்கும் இந்த புரட்சிகரமான ஃபித்ரா தர்மக்கணக்கு குறித்தும் ஒரு செய்தியை விரிவாக வெளியிட்டால் சிறப்பாக இருக்குமே!

 

குர்பானி கணக்கு

 

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி  இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 22:34

 

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக அவனுடைய ஆணைக்கேற்ப "ஈதுல் அள்ஹா"வின் நாட்களில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே இஸ்லாமிய மார்க்கத்தின் வழக்கில் "குர்பானி" எனப்படும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَذْبَحَنَّ أَحَدُكُمْ حَتَّى يُصَلِّيَ ) போதிய வசதி இருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழும் இடத்திற்கு வர வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா-3242

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா மாநகரில் தங்கியிருந்த பத்தாண்டு காலமும் குர்பானி கொடுத்து வந்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ 1427

 

25 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரித் கொண்டாடுகிறார்கள். குறைந்தது  20% முஸ்லிம்கள், குறைந்தபட்சம் ரூ 7000 / - க்கு குர்பான் ஆடுகளை வாங்குகிறார்கள்.

 

5 கோடி x  7000 = 35ஆயிரம் கோடி ரூபாய். இவை சீன தயாரிப்புகள் அல்ல; எம்.என்.சி நிறுவனத்தின் தயாரிப்புகளும் அல்ல. இந்த பெருமளவு பொருளாதாரத்தால் இந்தியப் பொருளாதாரமே பயனடைகிறது. 

 

100 சதவீதம் இந்திய தேசிய கிராமப்புறங்களிருந்து மட்டுமே இந்த வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு விவசாயி, ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5 ஆடுகளை நிர்வகித்தால், 5 கோடி ÷ 5 = 1 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு எளிமையான வேலைவாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

 

எனவே பக்ரித் 35 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்பது மட்டுமின்றி சுமார் 1 கோடி சிறு விவசாயிகளுக்கு மிக இலகுவான வேலைவாய்ப்பைத் தருகிறது.

 

மேலும், ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும், மூன்றில் இரண்டு மடங்கு ஏழைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுவதால், அதாவது ஒருவர் குறைந்தது 10 பேருக்கு பகிர்ந்தளிப்பதால், 50 கோடிப் பேர் சாப்பிடுகிறார்கள்.   

 

மகிழ்ச்சியை வெளிப்படுத்த

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெருநாள் தினத்தில் என் அருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை) அடித்து பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். இதைக் கண்ட அவர்கள், ( أَبِمُزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم )  "இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக்கருவிகளா? என்று (கடிந்து) பேசி அவ்விருவரையும் அதட்டினார்கள்.

 

உடனே பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَهَذَا عِيدُنَا )  "அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்" என்று கூறினார்கள்.

 

(அன்றைய தினத்தன்று) நபியவர்களின் பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீயனியர்கள் ஈட்டியறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக நபியவர்கள் எனது அறை வாசலில் நின்றபடி தமது மேல் துண்டால் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-950,952, முஸ்லிம்-1619, 1620

 

இசைக்கருவிகளின் துணையின்றி வாயால் ராகமிட்டு நல்ல கருத்துள்ள பாடல்களைப் பாடுவதற்கும் கேட்பதற்கும் அனுமதி உண்டு. வீர விளையாட்டுக்கள் விளையாடுவதற்கும் அதைப் பார்ப்பதற்கும் அனுமதியுண்டு. பெருநாள் தினத்தன்று மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பள்ளிவாசலின் வளாகத்திலோ அல்லது மைதானம் போன்ற பொதுஇடங்களிலோ மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மார்க்கம் அனுமதித்த (ஹராமற்ற) பயனுள்ள விளையாட்டுகளை விளையாடலாம்.

 

இஸ்லாம் கூறுகின்ற முறையில் பெருநாள் கொண்டாடி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

Thursday, 22 January 2026

மரண வேதனை

 

மரண வேதனை

 

وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ

மரணத்தின் சிரமம் மெய்யாகவே வந்துவிடும் சமயத்தில் (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிடக் கருதியது இதுதான்'' (என்று கூறப்படும்.) திருக்குர்ஆன்:- 50:19

 

ஒவ்வொரு மனிதனும் நிச்சயமாக இறப்பை சந்திக்க வேண்டும். அப்போது ஏற்படும் வேதனை என்பது சற்று சிரமமாகவே இருக்கும். வாழ்நாளில் அவரவர் செய்த செயல்பாடுகளுக்கு ஏற்ப வேதனையில் சற்று கூடுதல் குறைவு என வித்தியாசம் ஏற்படலாம்.

 

மரண வேதனை என்பதை அரபியில் "சகரத்" என்று சொல்லப்படுகிறது. இதற்கு மயக்கம், போதை என்று பொருள். உயிர் கைப்பற்றப்படும்போது ஏற்படும் வலியால் உண்டாகும் மயக்க நிலையை இது குறிக்கும்.

 

இஸ்லாமிய பார்வையில், “சக்ராத் வேதனை” (Death Throes) என்பது மரணத்தின்போது உயிர் பிரிவதில் ஏற்படும் கடுமையான துன்பம் ஆகும். இது இறைநம்பிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் நிகழக்கூடியது; இறைத்தூதர்கள்கூட இதன் வேதனையை அனுபவித்தனர். ஆனால், அவர்கள் இறைவனிடம் உதவி தேடினர். மேலும், இந்த வேதனை பாவங்களுக்குப் பரிகாரமாகவும், இறைவனுடனான தொடர்பை உணர்த்தவும், மறுமையின் நிதர்சனத்தைக் காட்டும் சோதனையாகவும் கருதப்படுகிறது. இது நம்பிக்கையின் உறுதியையும் பொறுமையையும் சோதிப்பதாக அமைகிறது.

 

நற்கூலி உண்டு

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது என்னுடைய உறவினர் ஒருவர் உயிர் பிரியும் நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அதை கண்ட நபியவர்கள், ( لاَ تَبْتَئِسِي عَلَى حَمِيمِكِ فَإِنَّ ذَلِكَ مِنْ حَسَنَاتِهِ ) "(ஆயிஷா!) நீ உன் உறவினருக்காகக் கவலைப்படாதே. இதுவும் அவர் அடையும் நன்மைகளுள் உள்ளதாகும்" என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-1441, மஜ்மஉஸ் ஸவாயித்

 

ஒரு மனிதர் மரண நேரத்தில் அடையும் சிரமத்திற்கு அவருக்கு நன்மை பதிவு செய்யப்படுகிறது அல்லது அவருக்கு நன்மை கிடைப்பதற்காக இந்த சிரமத்தை அளிக்கப்படுகிறது.

 

அழகிய அடையாளம்

 

அப்துல்லாஹ் பின் புரைதா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (என் தந்தை) புரைதா (ரலி) அவர்கள் குராசான் நாட்டில் இருந்தபோது உடல்நலம் குன்றியிருந்த தம் சகோதரர் ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள்.

 

அப்போது அவர் இறப்பெய்திக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரது நெற்றி வியர்த்துக் கொண்டிருப்பதை கண்டார்கள். உடனே 'அல்லாஹு அக்பர்' (இறைவன் மிகப் பெரியவன்) இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே இறப்பார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், ஸஹீஹுல் குத்பித்திஸ்ஆ வஸவாயிதுஹு-454

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ ) இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையில் இறப்பார். அறிவிப்பாளர்:- புரைதா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-904, நசாயீ-1806, இப்னுமாஜா-1432, முஸ்னது அஹ்மத், ஹாகிம்

 

இந்த நபிமொழிக்கு அறிஞர்கள் பல்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர். இறைநம்பிக்கையாளர் ஒருவர் இறக்கும்போது மரண வலியை அனுபவிப்பார். அதன் கடுமையால் அவரது நெற்றி வியர்க்கும். அதாவது நெற்றி வியர்க்கும் அளவுக்கு இறப்பின்போது அவர் துயரப்படுவார். அவரது நெற்றி வியர்வையால் அவருடைய பாவங்கள் கழுவப்படலாம். அல்லது அவருடைய தகுதி உயர்த்தப் படலாம்.

 

அல்லது ஓர் இறைநம்பிக்கையாளர் பாவங்கள் செய்திருந்தும் அவை மன்னிக்கப்படும் செய்தியை அறியும்போது அல்லாஹ்விடம் வெட்கப்படுகிறார். அதன் அடையாளமாக அவருக்கு நெற்றியில் வியர்வை துளிர்க்கும்.

 

சான்றாக முடியாது

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது அவர்களை நான் பார்த்தேன். அவர்களுக்கு அருகில் தண்ணீர் நிரம்பிய பாத்திரம் ஒன்று இருந்தது. அவர்கள் அந்தப் பாத்திரத்திற்குள் தமது கையை நுழைத்து (தண்ணீர் அள்ளி) அந்தத் தண்ணீரை தமது முகத்தில் தடவிக்கொண்டே, ( لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ) "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நிச்சயமாக மரணத்தின்போது பல வேதனைகள் உண்டு" என்று கூறினார்கள். பிறகு, ( اللَّهُمَّ أَعِنِّي عَلَى غَمَرَاتِ الْمَوْتِ ) "இறைவா! இறப்பின் துயரங்களில் இருந்து விடுபட எனக்கு உதவி செய்வாயாக!" என்று கூறிக்கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-6510, திர்மிதீ-900

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَا أَغْبِطُ أَحَدًا بِهَوْنِ مَوْتٍ بَعْدَ الَّذِي رَأَيْتُ مِنْ شِدَّةِ مَوْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட மரண வேதனையை நான் கண்ட பிறகு, (சிரமமின்றி) எளிதாக மரணமடைந்த எவரைக் கண்டும் நான் ஏக்கம் கொண்டதில்லை. நூல்:- திர்மிதீ-901, நசாயீ-1807

 

சிரமத்துடன் இறப்பது கெட்ட முடிவுக்கு அடையாளமோ, சிரமமின்றி இறப்பது நல்ல முடிவுக்கு அடையாளமோ இல்லை என்றானபின், சிரமமில்லாமல் இறக்கும் எவரைப் பார்த்தும், "இப்படியல்லவா இறப்பு வரவேண்டும்" என்று நான் ஏங்கியதில்லை என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

உடலில் இருந்து உயிர் பிரியும்போது அதன் வலி கடுமையாக இருக்கும். உடலில் ஏற்படும் காயத்தின் வலியை உணர வைப்பதே உயிர்தான். அந்த உயிரே பிரியும்போது வலி கடுமையாக இருப்பது இயற்கையே. எனவே, ஒருவர் இறக்கும்போது துயரத்தை அனுபவிப்பது அவரது கெட்ட முடிவுக்கோ, எளிய முறையில் இறப்பது அவரது நல்ல முடிவுக்கோ சான்றாக முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறப்பின் வலியை அனுபவித்தார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

திடீர் மரணம்

 

ஒருவனது (உயிர்) தொண்டைக் குழியை அடையும்போது, அந்நேரத்தில் (அவனை) நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். உங்களைவிட நாமே அவனுக்கு மிகவும் அருகில் இருக்கிறோம். எனினும் நீங்கள் (நம்மைப்) பார்க்க மாட்டீர்கள். திருக்குர்ஆன்:- 56:83-84

 

உயிர் தொண்டைக்குழியை அடைந்துவிட்டால், (அவனுக்கு சமீபத்தில் இருப்பவர்கள் அவனைச் சுகமாக்க) மந்திரிப்பவர் யார்? (எங்கிருக்கிறார்?) என்று கேட்கின்றனர். எனினும் இதுதான் (உலகத்தை விட்டு) பிரியும் நேரம் என்பதை (உறுதியாக) அறிந்துகொள்கிறான். (அவனுடைய) கெண்டைக்கால் கெண்டைக்காலோடு பின்னிக்கொள்ளும். திருக்குர்ஆன்:- 75:26-29

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا وَلاَ أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ ) “ஓர் இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்க்கும் நிலையில் (வலியோடு) தான் பிரிகிறது. கழுதை இறப்பதைப் போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன்" என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அவர்களிடம், ( وَمَا مَوْتُ الْحِمَارِ ) "கழுதை இறப்பதைப் போன்று என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், ( مَوْتُ الْفَجْأَةِ ) "திடீர் மரணம்" என்று விடையளித்தார்கள். நூல்:- திர்மிதீ-902

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَوْتُ الْفَجْأَةِ رَاحَةٌ لِلْمُؤْمِنِ وَأَخْذَةُ أَسَفٍ لِلْكَافِرِ ) திடீர் மரணம் இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகவும், இறைமறுப்பாளருக்குக் கேடாகவும் அமைகிறது. அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், பைஹகீ, தப்ரானீ, ரஸீன்

 

திடீர் மரணத்தால் பல நன்மைகள் தடைபடக்கூடும். பாவமன்னிப்புக் கோரல், (வசிய்யத் எனும்) இறுதி விருப்பம் தெரிவித்தல் போன்ற நற்செயல்கள் எதுவும் செய்ய முடியாத நெருக்கடி நிலை திடீர் மரணத்தால் ஏற்படலாம். கழுதைப் போன்று ஐயறிவு பிராணிக்கு இத்தகைய கடமைகள் ஏதும் இருக்காது. மனிதனுக்கு, அதிலும் இறைநம்பிக்கையாளருக்கு இறுதிக்கட்டத்தில் பல பொறுப்புகள் இருக்கும். எனவே, திடீர் மரணத்தை விட்டு இறைவனிடம் பாதுகாப்பு தேட வேண்டும்.

 

(சக்கராத் எனும்) மரண வேதனை என்பது ஓரிரு நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் அல்லது ஓரிரு நாள்கள்கூட நீடிக்கலாம். திடீர் மரணம் ஏற்பட்டாலும் அந்த குறுகிய நேரத்திலும் மரண வேதனை என்பது நிச்சயமாக இருக்கும்.

 

சாதாரண வலி

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا يَجِدُ الشَّهِيدُ مِنْ مَسِّ الْقَتْلِ إِلاَّ كَمَا يَجِدُ أَحَدُكُمْ مِنْ مَسِّ الْقَرْصَةِ ) அல்லாஹ்வின் பாதையில் வீர மரணமடைந்தவர் கொல்லப்படும்போது உங்களில் யாராவது உங்களை கிள்ளும்போது அடைகின்ற (அல்லது கொசுக்கடியின்) வலியை போன்ற தவிர (வேறு வகையில்) அவர் உணர மாட்டார். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள்   நூல்:- திர்மிதீ-1591, நஸாயீ-3110, இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்

 

உயர்த்தியாகி வீரமரணத்தின்போது உணரும் வலி சாதாரணமானதாகவே அவருக்குத் தோன்றும்.

 

(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்)  உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர்.                                                                   திருக்குர்ஆன்:- 3:169

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் (மேற்காணும்) இந்த திருவசனம் (3:169) தொடர்பாக அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

 

உயிர்த்தியாகிகளின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் வயிறுகளில் செலுத்தப்பட்டிருக்கும். அவற்றுக்கென இறையரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுக்குள் இருக்கும். அவை விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் தோன்றி, "உங்களுக்கு ஏதேனும் ஆசை உண்டா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள், "நாங்கள் தான் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்து கொண்டிருக்கிறோமே! இதற்கு மேல் நாங்கள் ஆசைப்படுவதற்கு வேறு என்ன உள்ளது?" என்று பதிலளிப்பார்கள்.

 

இவ்வாறு மூன்று முறை (மீண்டும் மீண்டும்) அவர்களிடம் அல்லாஹ் கேட்டுக்கொண்டே இருப்பான். ஏதாவது கேட்காமல் விடப்பட மாட்டோம் என்பதை புரிந்துகொள்ளும் அவர்கள், ( يَا رَبِّ نُرِيدُ أَنْ تَرُدَّ أَرْوَاحَنَا فِي أَجْسَادِنَا حَتَّى نُقْتَلَ فِي سَبِيلِكَ مَرَّةً أُخْرَى ) "எங்கள் இறைவா! எங்கள் உயிர்களை மறுபடியும் எங்கள் உடல்களில் நீ செலுத்த வேண்டும்; மற்றொரு முறை உனது வழியில் போராடி நாங்கள் கொல்லப்பட வேண்டும் என விரும்புகின்றோம்" என்று கூறுவார்கள். (எனினும் இதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.) இதைத் தவிர அவர்களுக்கு (வேறு) எந்த தேவையும் இல்லை என இறைவன் கண்டுகொள்ளும் போது அவர்கள் விடப்படுவார்கள்.   நூல்:- முஸ்லிம்-3834, திர்மிதீ-2927, இப்னுமாஜா-2801, தாரமீ

 

இறந்துவிட்ட எந்த மனிதனும் பூமியில் மீண்டும் உயிர்தெழ ஆசைப்பட மாட்டான். காரணம், மரண வேதனை என்பது மிகவும் சிரமமானது. அதை ஒருமுறை அனுபவித்ததே போதும் என்று எண்ணுவானே தவிர, அதை மீண்டும் அனுபவிக்க எண்ணமாட்டான்.

 

இறைவழியில் அறப்போர் புரிந்து அதனால் இறந்தவருக்கு மரண வேதனை கடினமானதாக இருப்பதில்லை. எனவேதான், அவர் மீண்டும் மீண்டும் அறப்போரில் ஈடுபட்டு மரணிக்கவேண்டும் என்று விரும்புவார்.

 

மீண்டும் உலக வாழ்க்கை வேண்டாம்

 

ஒருமுறை இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் ஒரு மண்ணறையின் அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.  அப்பெண்ணிடம் அன்னார், ( مَا لَكِ أَيَّتُهَا الْمَرْأَةُ؟ ) "பெண்ணே! உனக்கென்ன நேர்ந்தது?" என்று வினவினார்கள். அதற்கவள், ( مَاتَتِ ابْنَةٌ لِي لَمْ يَكُنْ لِي وَلَدٌ غَيْرُهَا، وَإِنِّي عَاهَدْتُ رَبِّي أَنْ لَا أَبْرَحُ مِنْ مَوْضِعِي هَذَا حَتَّى أَذُوقَ مَا ذَاقَتْ مِنَ الْمَوْتِ، أَوْ يُحْيِيَهَا اللَّهُ لِي فَأَنْظُرُ إِلَيْهَا ) "என்னுடைய மகள் இறந்துவிட்டாள்; அவளைத் தவிர எனக்கு வேறு எந்த குழந்தையும் இல்லை; எனவே, அவள் சுவைத்த மரணத்தை நான் சுவைக்காமல், அல்லது அல்லாஹ் அவளை மீண்டும் உயிர்பித்து அவளைப் பார்க்காமல், நான் இவ்விடத்தை விட்டு திரும்பிச் செல்லமாட்டேன் என்று நான் அல்லாஹ்விடம் உறுதிமொழி கொடுத்துள்ளேன்" என்று பதிலளித்தாள்.

 

அவளிடம் ஈசா (அலை) அவர்கள், ( أَرَأَيْتِ إِنْ نَظَرْتِ إِلَيْهَا أَرَاجِعَةٌ أَنْتِ؟ ) "நீ அவளைப் பார்த்துவிட்டால், திரும்பிச் சென்றுவிடுவாயா?" என்று வினவினார்கள். அவள், "ஆம்" என்றாள். அதன்பின் அன்னார் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பின்னர் அன்னார் அந்த மண்ணறை அருகில் அமர்ந்து, ( يَا فُلَانَةُ قُومِي بِإِذْنِ الرَّحْمَنِ فَاخْرُجِي ) "இன்னவளே! அருளாளன் அல்லாஹ்வின் அனுமதியால் எழுந்து வெளியே வா!" என்று அழைத்தார்கள். அப்போது அவள் தன் தலையில் படிந்திருந்த மண்ணைத் துடைத்தவளாக வெளியே வந்தாள்.

 

 பின்னர் அவள் தன் தாயைப் பார்த்தாள். ( يَا أُمَّتَاهُ، مَا حَمَلَكِ عَلَى أَنْ أَذُوقَ كَرْبَ الْمَوْتِ مَرَّتَيْنِ؟ يَا أُمَّتَاهُ، اصْبِرِي وَاحْتَسِبِي، فَلَا حَاجَةَ لِي فِي الدُّنْيَا ) "அன்னையே! நான் மரணத்தின் வேதனையை இரண்டு தடவை சுவைக்க வேண்டுமென உன்னைத் தூண்டியது எது? அன்னையே! பொறுமை கொள்வீர்; நன்மையை எதிர்பார்ப்பீர்; இவ்வுலகில் எனக்கு எந்தத் தேவையும் இல்லை." என்று கூறினாள். பிறகு, அல்லாஹ்வின் தூதரே! ( سَلْ رَبِّي أَنْ يَرُدَّنِي إِلَى الْآخِرَةِ، وَأَنْ يُهَوِّنَ عَلَيَّ كَرْبَ الْمَوْتِ ) "நான் மறுமையை நோக்கி திரும்பவும் (அதாவது, நான் மீண்டும் மரணிக்கவும்), மரணத்தின் வேதனையை இலேசாக ஆக்கவும் இறைவனிடம் எனக்காகப் பிரார்த்தனை செய்வீராக" என்று கேட்டுக் கொண்டாள். அதன்படி அன்னார் தன் இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவள் மீண்டும் மரணித்தாள். அவள்மீது அந்நிலம் சமமாக ஆகிவிட்டது. நூல்:- தாரீக் திமிஷ்கு இமாம் இப்னு அசாகிர், அல்பிதாயா வந்நிஹாயா

 

உலகத்தில் அனுபவித்த அனைத்து உல்லாசங்களைவிட மரண வேதனை என்பது மிகவும் கசப்பானது. எனவே, அதை மீண்டும் அனுபவிக்க யாரும் விரும்புவதில்லை.

 

வானவர்கள் வருகை

 

இறுதியில், உங்களில் ஒருவருக்கு இறப்பு வரும்போது, நம் தூதர்கள் அவ(ரது உயி)ரைக் கைப்பற்றுவார்கள். அவர்கள் (தமது பணியில்) கவனக்குறைவாக இருக்க மாட்டார்கள். திருக்குர்ஆன்:- 6:61

 

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளில் ஒருவரது இறுதிக் கடமையை (ஜனாஸா) நிறைவேற்றுவதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் புறப்பட்டோம். நாங்கள் அடக்கத்தலத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கு குழி தோண்(டி முடிக்கப்ப)டவில்லை. எனவே, நபியவர்கள் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.

 

அப்போது நபியவர்கள், ( الْعَبْدَ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنَ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنَ الْآخِرَةِ نَزَلَ إِلَيْهِ مَلَائِكَةٌ مِنَ السَّمَاءِ، بِيضُ الْوُجُوهِ كَأَنَّ وُجُوهَهُمُ الشَّمْسُ، مَعَهُمْ كَفَنٌ مِنْ أَكْفَانِ الْجَنَّةِ وحَنُوط مِنْ حَنُوط الْجَنَّةِ، حَتَّى يَجْلِسُوا مِنْهُ مَدَّ الْبَصَرِ. ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ، فَيَقُولُ: أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ، اخْرُجِي إِلَى مَغْفِرَةٍ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ". قَالَ: "فَتَخْرُجُ تَسِيلُ كَمَا تَسِيلُ الْقَطْرَةُ مِنْ فِي السِّقَاء فَيَأْخُذُهَا )  "இறைநம்பிக்கையாளர்  இவ்வுலகிலிருந்து விடை பெற்று மறுமையை நோக்கிச் செல்லும் நிலையில் இருந்தால், வானவர்கள் சிலர் வானத்திலிருந்து இறங்கி அவரிடம் வருவார்கள். அவர்களின் முகங்கள் வெண்மையாக இருக்கும். அவை சூரியனைப் போன்று ஒளிரும். அவர்களுடன் சொர்க்கத்தின் பிரேத ஆடைகளில் (கஃபன்) ஓர் ஆடையும், சொர்க்கத்தின் வாசனை திரவியங்களில் ஒன்றும் இருக்கும். இறுதியில் அவரது பார்வை எட்டும் தூரத்தில் அவர்கள் வந்து அமருவார்கள். பின்னர் உயிரை கைப்பற்றும் வானவர் வந்து அவரது தலைக்கு அருகில் அமருவார். அவர், "தூய்மையான உயிரே! அல்லாஹ்வின் மன்னிப்பையும், அன்பையும் நோக்கி நீ புறப்படுவாயாக" என்பார். அப்போது தண்ணீர் பையின் வாயிலிருந்து நீர் வழிவதைப் போன்று (அவரது உடலிலிருந்து) உயிர் (மிருதுவாக பெரிய அளவில் வேதனையின்றி) வெளியேறும். உடனே அதை அந்த வானவர் எடுத்துக் கொள்வார்.

 

மேலும், ( وَإِنَّ الْعَبْدَ الْكَافِرَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنَ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنَ الْآخِرَةِ، نَزَلَ إِلَيْهِ مِنَ السَّمَاءِ مَلَائِكَةٌ سُودُ الْوُجُوهِ، مَعَهُمُ المُسُوح، فَجَلَسُوا مِنْهُ مَدَّ الْبَصَرِ. ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ، فَيَقُولُ: أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ، اخْرُجِي إِلَى سَخَط مِنَ اللَّهِ وغَضَب". قَالَ: "فتَفرق فِي جَسَدِهِ، فَيَنْتَزِعُهَا كَمَا يُنْتَزَعُ السَّفُّود مِنَ الصُّوفِ الْمَبْلُولِ، فَيَأْخُذُهَا )  இறைமறுப்பாளன் ஒருவன் இவ்வுலகிலிருந்து விடைபெற்று மறுமையை நோக்கி செல்லும் நிலையில் இருந்தால் வானவர்கள் சிலர் வானிலிருந்து இறங்கி அவனிடம் வருவார்கள். அவர்களின் முகங்கள் கறுப்பாக இருக்கும். அவர்களுடன் முடியாலான (முரட்டு கஃபன்) ஆடை ஒன்று இருக்கும். அவர்கள் அவனது பார்வை எட்டும் தூரத்தில் வந்து அமர்ந்து கொள்வார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனது தலைக்கு அருகில் அமருவார். "தரங்கெட்ட ஆன்மாவே! அல்லாஹ்வின் வெறுப்பு மற்றும் கோபத்தை நோக்கி நீ புறப்படு" என்பார். அப்போது அவனது உடல் தளர்த்தப்படும். பின்னர் ஈரக் கம்பளியால் சிக்கிக்கொண்ட முள் கம்பியை இழுப்பதைப் போன்று அவனது உடலிலிருந்து (கடுமையான வேதனையுடன்) உயிரைப் பிடித்து இழுத்துப் பறிப்பார். நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு கஸீர் இப்ராஹீம் வசனம்-27, ஸஹீஹ் அல்ஜாமிஉ-1676

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمَيِّتَ تَحْضُرُهُ الْمَلَائِكَةُ، فَإِذَا كَانَ الرَّجُلُ الصَّالِحُ قَالُوا: اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ كَانَتْ فِي الْجَسَدِ الطَّيِّبِ، اخْرُجِي حَمِيدَةً، وَأَبْشِرِي بِرَوْحٍ وَرَيْحَانٍ، وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ، فَلَا يَزَالُ يُقَالُ لَهَا ذَلِكَ حَتَّى تَخْرُجَ ) மனிதன் இறக்கும்போது அவனிடம் வானவர்கள் வருவார்கள். அந்த மனிதர் நல்லவராக இருந்தால், "தூய உடலில் இருந்து தூய ஆத்மாவே! நீ வெளியேறு. பாராட்டுக்குரிய நிலையில் நீ வெளியேறு. நல்லருளும் நறுமணமும் சினமுமே கொள்ளாத இறைவனு(டைய நெருக்கமு)ம் உனக்கு உண்டு எனும் நற்செய்தியை நீ பெற்றுக்கொள்" என்று வானவர்கள் கூறுவார்கள். உயிர் பிரியும் வரை இவ்வாறே கூறப்பட்டுக் கொண்டிருக்கும். 

 

மேலும், ( وَإِذَا كَانَ الرَّجُلُ السُّوءُ، قَالُوا: اخْرُجِي أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ، كَانَتْ فِي الْجَسَدِ الْخَبِيثِ، اخْرُجِي ذَمِيمَةً وَأَبْشِرِي بِحَمِيمٍ وَغَسَّاقٍ، وَآخَرَ مِنْ شَكْلِهِ أَزْوَاجٍ، فَلَا يَزَالُ يُقَالُ لَهَا ذَلِكَ حَتَّى تَخْرُجَ ) அவர் தீய மனிதராக இருந்தால், "தரங்கெட்ட உடலில் இருந்து தரங்கெட்ட ஆத்மாவே! இகழுக்குரிய நிலையில் நீ வெளியேறு. கொதி நீரும், சீழும் அதுபோன்ற வடிவிலான வேறு பானங்களும் உனக்கு உண்டு எனும் செய்தியை பெற்றுக்கொள்" என்று வானவர்கள் கூறுவார்கள். உயிர் பிரியும் வரை இவ்வாறே சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்.  அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4252, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அல்அன்ஆம் வசனம்-61

 

மேற்காணும் (6:61) வசனத்திற்கு பேரறிஞர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய விளக்கமாவது. ( لِمَلَكِ الْمَوْتِ أَعْوَانٌ مِنَ الْمَلَائِكَةِ، يُخْرِجُونَ الرُّوحَ مِنَ الْجَسَدِ، فَيَقْبِضُهَا مَلَكُ الْمَوْتِ إِذَا انْتَهَتْ إِلَى الْحُلْقُومِ )  உயிரைக் கைப்பற்றும் வானவருக்குப் பல உதவியாளர்கள் உள்ளனர். அவர்கள் உடலின் மற்ற பகுதிகளிலிருந்து உயிரைக் கழற்றிக் கழுத்துப் பகுதிக்கு கொண்டு வருவார்கள். பின்னர் உயிரைக் கைப்பற்றும் வானவர் உயிரைக் கைப்பற்றுவார். நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்

 

சான்றோர்களின் கூற்று

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( اللهم هَوِّنْ عَلَى محمدٍ سَكَرَاتِ الْمَوتِ ) "இறைவா! முஹம்மதுக்கு மரண வேதனையை இலேசாக்குவாயாக" என்று கூறுவார்கள். நூல்:- இஹ்யா

 

ஹுஸைன் பின் ஜுன்துப் ரஹ் அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( اٰخَرَ شِدَّةٍ يَلْقَاهَا الْمُؤْمِنُ الْمَوْتُ ) "ஓர் இறைநம்பிக்கையாளர் சந்திக்கும் இறுதிக் கஷ்டம் மரணமாகும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1845

 

அறிஞர் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களிடம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள்,  ( حَدِّثْنَا عَنِ الْمَوْتِ ) "மரணத்தைப்பற்றிக் கூறுங்கள்'' எனக் கேட்டார்கள். அதற்கு அவர், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، هُوَ كَغُصْن كَثِيرِ الشَّوْكِ أُدْخِلَ فِي جَوْفِ رَجُلً، فَأَخَذَتْ كُلُّ شَوْكَةً بِعِرْقٍ، ثُمَّ جَذَبَهُ رَجُلٌ شَدِيدُ الْجَذْبِ ) "ஜனாதிபதி அவர்களே! முட்கள் நிறைந்த ஒரு மரக்கிளையை மனித உடலினுள் புகுத்தப்பட்டு, அதன் ஒவ்வொரு முள்ளும் உடலின் ஒவ்வொரு நரம்பையும் நன்கு பிடித்துக்கொள்கிறது‌. பிறகு, ஒரு மனிதன் அதை மிகுந்த பலத்துடன்  ஒரேயடியாக இழுப்பதைப் போன்று (உயிரும் உடலிலிருந்து இழுக்கப்படுவதாக) இருக்கும்'' என்று கூறினார்கள். நூல்:- அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம் இப்னு அபித்துன்யா

 

ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وَهُوَ أَشَدُّ مِنْ نَشْرِ بِالْمَنَاشِيرِ وَقَرْض بِالْمَقَارِيضِ، وَغَلْيٍ فِي الْقُدُورِ، وَلَوْ أَنَّ الْمَيِّتَ نُشِرَ (بُعِثَ مَنْ قَبْرِه)، فَأَخْبَرَ أَهْلَ الدُّنْيَا بِأَلَمِ الْمَوْتِ، مَا انْتَفَعُوا بِعَيْشٍ وَلَا تَلَذَّذُوا بِنَوْمٍ ) அது (மரண வேதனை என்பது உடல்) இரண்டாக அறுக்கப்படுவதை விடவும், கத்தரிக்கோலால் வெட்டப்படுவதை விடவும், கொப்பரைகளில் வேகவைக்கப்படுவதை விடவும் கடுமையானது. இறந்தவர்கள் (மீண்டும்) உயிர்த்தெழுப்பப்பட்டு (அவர்களின் மண்ணறைகளிலிருந்து கொண்டு வரப்பட்டு) இந்த உலக மக்களுக்கு மரணத்தின் வலியைப் பற்றி எடுத்துரைத்தால், அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கவோ, தூக்கத்தில் இன்பம் காணவோ மாட்டார்கள். நூல்:- அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம் இப்னு அபித்துன்யா

 

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், ( عَجَبًا لِمَنْ نَزَلَ بِهِ الْمَوْتُ وَعَقْلُهُ مَعَهُ كَيْفَ لَا يَصِفَهُ ) "மரணமடையப் போகும் ஒருவனைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். அவன் உணர்வோடு இருந்தும் அவனால் எப்படி மரண வேதனை குறித்து விவரிக்க முடியாமல் இருக்க முடிகிறது? (அது குறித்து பிறருக்கு எடுத்துரைத்தால் மக்கள் நல்லுபதேசம் பெறுவார்களே! நானாக இருந்தால் அது குறித்து எடுத்துரைப்பேன்.)” என்று சொல்லக்கூடியவராக இருந்தார்.

 

மரணம் அவருக்கு வந்தபோது, ​​அவரது மகன் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அவரிடம், ( فَصِفْ لَنَا الْمَوْتَ وَعَقْلُكَ مَعَكَ ) "(தந்தையே! தற்போது) நீங்கள் உணர்வுடன் தானே இருக்கிறீர்கள். எனவே, மரண வேதனை குறித்து எங்களுக்கு விவரியுங்கள்" என்று கேட்டார்.

 

அதற்கு அவர், ( يَا بُنَيَّ الْمَوْتُ أَجَلُّ مِنْ أَن يُوصَفَ وَلَكِنِّي سَأَصِفُ لَكَ مِنْهُ شَيْئًا أَجِدُنِي كَأَنَّ عَلَى عُنُقِي جِبَالٌ رَضْوَى وَأَجِدُنِي كَأَنَّ فِي جَوْفِي شَوْكُ السِّلَاءِ وَأَجِدُنِي كَأَنَّ  نَفْسِي تَخْرُجُ مِنْ ثَقْبٍ إبْرَةً ) "என்னருமை மகனே, மரணம் விவரிக்க முடியாத அளவுக்குப் பெரியது. ஆனால், நான் உனக்கு அதில் சிலவற்றை விவரிக்கிறேன். ரள்வா மலைகள் என் கழுத்தில் இருப்பது போல் (கடுமையான வேதனையை) உணர்கிறேன்; என் வயிற்றில் முட்புதரின் முட்கள் இருப்பது போல் உணர்கிறேன்; என் ஆன்மா (மிகுந்த சிரமத்துடன்) ஊசியின் துவரத்தின் வழியாக வெளியே வருவது போல் உணர்கிறேன். என்று (தமது மரண வேதனை குறித்து) விவரித்தார். நூல்:- ஹாகிம், அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம் இப்னு அபித்துன்யா

 

அலீ (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். எவனது வசம் எனது உயிர் இருக்கிறதோ, அவன் மீதாணையாக! உடலில் ஆயிரம் இடங்களில் வாளால் வெட்டப்படுவதைக் காட்டிலும் மரணத்தின் இறுதி நேர வேதனை மிகக் கடினமானதாக இருக்கும். சக்கராத்தின் நிலை மனிதனை அலங்கோலமாக்கிவிடும்.

 

ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்கள் ஒரு நோயாளியைச் சந்தித்தபோது, அவர் மரண வேதனையில் இருப்பதைக் கண்டார்கள். அவரது (மரண) வேதனையையும் அவரது நிலையின் தீவிரத்தையும் அவர் கவனித்தார். மரண வேதனை குறித்த அச்சத்தால் நிறம் மாறிய நிலையில் அவர் தனது குடும்பத்தினரிடம் திரும்பினார். அவரின் குடும்பத்தினர், "அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக! சாப்பிட வாருங்கள்" என்று அவரை அழைத்தனர்.

 

அதற்கு அவர், ( يَا أَهْلَاهُ، عَلَيْكُمْ بِطَعَامِكُمْ وَشَرَابِكُمْ، فَوَاللَّهِ لَقَدْ رَأَيْتُ مَصْرَعًا لَا أَزَالُ أَعْمَلُ لَهُ حَتَّى أَلْقَاهُ وَصَدَقَ عَبْدِاللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ حَيْثُ قَالَ: السَّعِيدُ مَنْ وُعِظَ بِغَيْرِهِ ) "என் குடும்பத்தினரே! நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள். (தற்போது எனக்கு வேண்டாம்.) ஏனென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு மரணத்தைக் (குறித்த உண்மை நிலையைக்) கண்டேன், நான் அந்த மரணத்தைச் சந்திக்கும் வரை அதற்கான நல்லறத்தில் நான் தொடர்ந்து ஈடுபடப் போகிறேன். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், 'மற்றவர்களின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்பவரே உண்மையான பாக்கியசாலி' என்று  உண்மையையே சொல்லியுள்ளார்" என்று கூறினார். நூல்:- அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம் இப்னு அபித்துன்யா

 

துறவிகளில் ஒருவரிடம், ( مَا أَبْلَغَ الْعِظَاتِ ) "மிகவும் தெளிவான அறிவுரை எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ( النَّظَرُ إلَى الْأَمْوَاتِ )  "(மரணத்தின்போது எவ்வாறு வேதனையை அனுபவித்திருப்பார்கள் என்ற சிந்தனையுடன்) இறந்தவர்களைப் பார்ப்பது" பதிலளித்தார். நூல்:- அல்முஹ்தளிரீன் ( المحتضرين ) இமாம் இப்னு அபித்துன்யா

 

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் தமது மரணவேளையில் அருகிலிருந்த அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களிடம், (சகராத் எனும்) மரண வேதனை என்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே!" என்று கூறியவாறு, "என் அருகில் இருந்து 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற திருக்கலிமாவை ஓதிக்கொண்டே இருங்கள்" என்று கூறினார்கள். இறுதியில், அன்னார் திருக்கலிமாவை சொன்னவாறே மரணமடைந்தார்கள்.

 

இப்லீஸின் சூழ்ச்சி

 

(இறைவா!) என்னை நீ முஸ்லிமாகவே இறக்கச்செய்வாயாக! மேலும் நல்லோருடன் என்னைச் சேர்த்திடுவாயாக! (என்று நபி யூசுஃப் - அலை அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)   திருக்குர்ஆன்:- 12:101

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பார்கள். ( وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ ) “இறைவா! இறக்கும்போது ஷைத்தான் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.”  அறிவிப்பாளர்:- அபூயஸர் (ரலி) அவர்கள்  நூல்:- அபூதாவூத்-1328

 

இறைநேசச் செல்வர் அபா ஸகரிய்யா (ரஹ்) அவர்களுக்கு இறுதிநேரம் நெருங்கியது. இதை அறிந்த அன்னாருடைய நண்பர் ஒருவர், அன்னாரின் அருகில் அமர்ந்து "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று கலிமா சொல்லிக் கொடுத்தார். கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்ட உடன் அன்னார் தனது முகத்தை வெறுப்போடு சுளித்து திருப்பிக்கொண்டார்கள்.

 

கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் நண்பர் கலிமாவை சொல்லிக் கொடுக்கிறார். இப்போதும் அப்படியே அன்னார் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் சென்று மீண்டும் கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டபோதும், அன்னார் முன் செய்தது போலவே முகத்தைச் சுளித்துகொண்டு, "நான் சொல்லமாட்டேன்" என்றார்கள்.

 

இதைக்கண்டு அச்சப்பட்ட அந்த நண்பர் மிகுந்த கவலையுடன் அன்னாரின் அருகில் காத்திருந்தபோது, அன்னாருக்கு கொஞ்சம் தெளிவு ஏற்பட்டு கண்களைத் திறந்து சுற்றுமுற்றும் பார்க்க தொடங்கினார்கள்.

 

தன் அருகே அமர்ந்திருந்த நண்பரை பார்த்து புன்முறுவல் செய்தவராக, "சற்று முன் நீங்கள் என் காதருகில் எதையாவது சொல்லிக் கொடுத்தீர்களா?" என்று கேட்டார்கள். ஆமாம்! கலிமாவை முதலிரண்டு தடவை சொல்லிக்கொடுத்தேன் அப்போதெல்லாம் நீங்கள் முகத்தை சுளித்து வெறுப்புடன் திரும்பிக்கொண்டீர்கள். ஆனால் மூன்றாவது தடவை சொல்லிக் கொடுத்தபோது "ஊஹும்... சொல்லமாட்டேன்" என்று சொல்லிவிட்டீர்கள். அதைக் கேட்டு எனக்கு மிகுந்த கவலையாகிவிட்டது. என்று அந்த நண்பர் கூறினார்.

 

"விஷயம் அப்படியல்ல. சற்று முன்னால் இப்லீஸ் என் முன் தோன்றினான். அவனிடம் தண்ணீர் துருத்தி காணப்பட்டது. அவன் வந்து, எனது வலப் பக்கம் அமர்ந்து கொண்டு, தன்னிடம் இருந்த தண்ணீர் துருத்தியை அசைத்துக் காண்பித்து, "இதோ குளிர்ச்சியான தண்ணீர் என்னிடம் இருக்கிறது உனக்கு வேண்டுமானால் தருகிறேன்" என்றான். நான், வேண்டாம் என்று தலையை திருப்பிக்கொண்டேன்.

 

அதைத்தொடர்ந்து அவன், "ஈசா அல்லாஹ்வின் குமாரர்" என்பதாக சொல். உன்னுடைய வேதனை நீங்கும்" என்றான் அப்போதும் வெறுப்புடன் எனது தலையைத் திருப்பிக் கொண்டேன்.

 

எனது கால் பகுதிக்கு எழுந்து வந்து நின்ற அவன், "அல்லாஹ் என்று ஒருவன் இல்லை" என சொல் உனக்கு சொர்க்கம் கிடைக்கும்" என்று ஏமாற்றப் பார்த்தான். அப்போது தான், நான் "அப்படி சொல்லமாட்டேன்" என்று கூறினேன்.

 

அதைக்கேட்ட அவன், தன்னிடம் இருந்த தண்ணீர் துருத்தியை கீழே போட்டு உடைத்துவிட்டு என்னை விட்டும் வெருண்டோடி விட்டான். இப்லீஸிடம் நான் கூறியதை தான் நீங்கள், நான் கலிமா சொல்ல மறுத்ததாக கருதிக்கொண்டீர்கள். எனவே, இதோ இப்போது நான் கலிமா சொல்லுகிறேன் என்று கலிமாவை சொன்னார்கள். அன்னாரின் உயிரும் பிரிந்தது. நூல்:- ஜுஹ்ரதுர் ரியாள்

 

அல்லாஹுத்தஆலா தாம் விரும்புவோர்களை மட்டும் இறுதி நேரத்தில் இப்லீஸின் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றுவான். எனவே நாம், மரண வேதனை மற்றும் இப்லீஸின் சூழ்ச்சி குறித்து அல்லாஹ்விடம் அவ்வப்போது பிரார்த்தித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

 

அல்லாஹுத்தஆலா நமக்கு மரண வேதனையை இலேசாக்கி, நம்மை  இறைநம்பிக்கையாளர்களாக இறக்கச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951


பண்டிகைகள்

  பண்டிகைகள்   وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ உங்களுக்கு (அல்லாஹ்) நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ...