Search This Blog

Friday, 27 March 2026

திருமணத்திற்கு உதவுவோம்

 

திருமணத்திற்கு உதவுவோம்

 

وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ

உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும் உங்களுடைய ஆண் மற்றும் பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் நீங்கள் மணமுடித்து வையுங்கள். திருக்குர்ஆன்:- 24:32

 

திருமண வாழ்வை துவங்கும் ஏழை, எளியோருக்கு நம்மால் இயன்ற ஆபரணங்களாகவோ, பத்திரங்களாகவோ, பணமாகவோ, ஆடைகளாகவோ ஏதேனும் ஒரு சிறிய உதவியேனும் செய்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், நாம் உதவிய அந்த தம்பதிகளின் மூலமாக பிறக்கக்கூடிய மறுமைநாள் வரையிலான அனைத்து சந்ததிகளும் செய்யக்கூடிய தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற நற்காரியங்களில் பலன்கள் நமது மண்ணறையில் நாம் அறியாமலே வந்தடைந்துக்கொண்டே இருக்கும்.

 

மிகச் சிறந்த உதவி

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பாதுகாக்கும் பணியில் ரபீஆ அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லும் பகலும் ஈடுபட்டிருந்தார். நபியவர்கள் இஷா தொழுகையை முடித்துவிட்டு இல்லம் சென்றவுடன் இவர், நபியவர்களுக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் நிறைவேற்றித் தருவதற்காக அங்கேயே வாசற்படியில் அமர்ந்திருப்பார். ஒருமுறை நபியவர்கள் இவரிடம் "மணமுடித்துக் கொள்!" என்று கூறினார்கள். அதற்கு அவர், "நாயகமே! நான் மணமுடித்துக் கொண்டால் எனது இந்தப் பணிக்கு அது ஒத்து வராது" என்று கூறினார். ஆனால், நபியவர்கள் அவரிடம் திரும்பத் திரும்ப மணமுடித்துக்கொள்! என்று கூறி, அவருக்கு வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிய வைத்து, அவருக்கு மணமுடித்து வைத்தார்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது பணியாளருக்கு மணமுடித்து வைத்து சந்தோஷப்பட்டார்கள். நமது பணியாளர்கள் அல்லது பணியாளர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் நடந்தேற நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வரவேண்டும்.

 

இமாம் ஷஅரானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். திருமண உதவி என்பது ஒருவருக்கொருவர் செய்யக்கூடிய சகோதர கடமையாகும். மேலும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், தர்ம போராட்டத்திற்காகவும் செய்யும் உதவியை காட்டிலும் திருமண உதவி மிகவும் சாலச் சிறந்ததாகும் என முன்னோர்களான நாதாக்கள் கூறுகிறார்கள். ஏனெனில், திருமணம் என்பது மிகச் சிறந்த சுன்னத்தாகும். இவ்வுலகில் திருமணம் நடக்கவில்லையெனில் அல்லாஹ்வை வணங்கக்கூடிய இறைநேசர்கள் மற்றும் நேர்மையான அறப்போர் வீரர்கள் எவரும் இங்கு பிறக்க மாட்டார்கள்.  நூல்:- அல்அன்வார் ஃபீ ஸுஹ்பத்தில் அக்யார்

 

ஊக்கப்படுத்துதல்

 

பாத்திமா பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களும், அபூஜஹ்ம் பின் ஹுதைபா (ரலி) அவர்களும் என்னை பெண் கேட்கின்றனர்" என்று சொன்னேன்.

 

அதற்கு அண்ணலார்,  ( أَمَّا أَبُو جَهْمٍ فَلاَ يَضَعُ عَصَاهُ عَنْ عَاتَقِهِ وَأَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لاَ مَالَ لَهُ انْكِحِي أُسَامَةَ بْنَ زَيْدٍ )  "அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். (கோபக்காரர் மனைவியைக் கடுமையாக அடித்துவிடுபவர்) முஆவியா அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்துகொள்!" என்று கூறினார்கள். நானும் அவ்வாறு அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன். நூல் முஸ்லிம்-2953, நசாயீ-3193

 

திருமண பேச்சின்போது இன்னார் வீட்டிலுள்ள பெண் அல்லது மாப்பிள்ளை எப்படி? அல்லது அந்த வீட்டினர் எப்படிப்பட்டவர்கள்? என்று நம்மிடம் ஆலோசனை கேட்கப்படும்போது அவர்களிடமுள்ள நற்பண்புகளை எடுத்துரைத்து கேட்டவர்களை ஊக்கப்படுத்துவதும் திருமணத்திற்குரிய உதவிகளில் ஒன்றாகவே கருதப்படும்.

 

மாறாக, விசாரிக்க வந்தவர்களிடம் அவர்களைப்பற்றி தவறாக எடுத்துரைத்து, அவர்களை தாறுமாறாக விமர்சனம் செய்துவிட்டால் திருமணம் நடைபெறுமா? புத்தியுள்ள எவரும் பெரும்பாலோரின் விமர்ச்சனத்திற்கு ஆளானவருக்கு மணமுடித்து கொடுக்கமாட்டார்கள்.

 

பரிந்துரைத்தல்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை (குள்ளமாகவும், அருவருப்பான தோற்றமுடையவராகவும் இருந்த) ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்து வைப்பதற்காக அப்பெண்ணின் தந்தையிடம் பெண் கேட்டார்கள். அவர், "மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறினார்.

 

பிறகு அவர் தம் மனைவியிடம் நடந்ததை தெரிவித்தார். அவருடைய மனைவி, "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நான் சம்மதிக்கமாட்டேன். என்ன? அண்ணலாருக்கு ஜுலைபீபைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா? இன்னின்னவர்களெல்லாம் நம்மிடம் பெண் கேட்டனர். அவர்களுக்கெல்லாம் நம் மகளை (தர முடியாது என) மறுத்துவிட்டோம். (அப்படியிருக்க இவருக்கா? சம்மதிக்க மாட்டோம்)"என்று கூறினார்.

 

இதையெல்லாம் அப்பெண்ணின் மகள் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த மனிதர் தம் மனைவியின் கருத்தை அண்ணலாரிடம் தெரிவிப்பதற்காக புறப்பட்டார்.

 

அப்போது அவருடைய மகள்,  ( أَتُرِيدُونَ أَنْ تَرُدُّوا عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَمْره إِنْ كَانَ قَدْ رَضِيَهُ لَكُمْ فَأَنْكِحُوه ) "அண்ணலாரின் உத்தரவுக்கு நீங்கள் மாற்றம் செய்ய நினைக்கிறீர்களா? அண்ணலார், அவரையே உங்களுக்கு (மருமகனாக ஆக்க) விரும்பினால், அவருக்கே என்னை மணமுடித்து வையுங்கள்" என்று கூறினாள். அப்பெண் தன் பெற்றோரை(யும் அவர்களின் நிலைபாட்டையும்) விட்டு ஒதுங்கிக்கொண்டவளை போல் பேசினாள். அப்போது பெற்றோர், "நீ கூறுவது சரியே!" என்றனர்.

 

பின்னர் அப்பெண்ணின் தந்தை அண்ணலாரிடம் சென்று, "(நாயகமே!) நீங்கள் அவரையே விரும்பினால், எங்களுக்கும் அவர் திருப்தி தான்" என்றார். அண்ணலார், ( فَإِنِّي قَدْ رَضِيته )  "நான் அவரையே திருப்திபடுகிறேன்" என்று கூறினார்கள். பின்னர் அப்பெண்ணை அந்த மனிதருக்கே மணமுடித்து வைத்தார்கள்.

 

மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். பிற்காலத்தில் ஜுலைபீபுடைய மனைவியை நான் கண்டபோது, மதீனாவிலேயே அதிகமாகச் செலவழிக்கும் வீட்டினராக அவள் இருந்தாள். (அதாவது பெரும் சீமாட்டியாக இருந்தாள்). நூல்:- முஸ்னது அஹ்மது, முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக், தஃப்சீர் இப்னு கஸீர் அத்தியாயம் அல்அஹ்ஸாப், வசனம்-36

 

இந்த பையனுக்கு உங்கள் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் நன்றாக வாழ்வார்கள். இந்த பையன் ஏழையாக இருந்தாலும் அல்லது இவனுக்கு சொந்தம் பந்தம் என்று பெரியளவில் இல்லாவிட்டாலும் அல்லது கருப்பாக அழகற்றவனாக இருந்தாலும் அல்லது பெரிய படிப்புகள் படிக்காதவனாக இருந்தாலும், இவன் அல்லாஹ்விற்கு அஞ்சி ஐவேளை தொழக்கூடியவன், நற்குணமுள்ளவன், எந்த கெட்டப் பழக்கமும் இல்லாதவன், தமது மனைவி மக்களை காப்பாற்றும் அளவுக்கு ஓரளவு சம்பாதிக்கக்கூடியவன் என்றெல்லாம் கூறி ஒருவருக்கு திருமணம் நடந்தேற பரிந்துரைப்பதும் திருமணத்திற்குரிய உதவிகளில் ஒன்றாகவே கருதப்படும்.

 

பிறரின் பிரார்த்தனை

 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் எப்போது வியாபாரத்திற்கு சென்றாலும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவின் எல்லை வரை வந்து வழியனுப்புவார்கள். காரணம், இவரின் சம்பாத்தியத்தின் மூலம் பிற மக்கள் பயனடைந்து வந்தனர். இவ்வாறு ஒருமுறை அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வியாபாரத்திற்கு சிரியா நோக்கி பயணமானார். அப்போது நபியவர்கள் மதீனாவின் எல்லை வரை வந்து வழியனுப்பவில்லை. வீட்டில் இருந்தவாறு சோகத்துடன் வழியனுப்பிவைத்தார்கள்.

 

இதைக் கவனித்த ஹுதைபா பின் அல்யமான் (ரலி) அவர்கள், "நாயகமே! அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களின் விஷயத்தில் இப்போது நீங்கள் கொஞ்சம் மாற்றமாக நடந்துகொள்கிறீர்களே என்ன காரணம்?" என்று வினவினார். நபியவர்கள், "எனது அன்புத்தோழர் அப்துர்ரஹ்மான் இந்த பயணத்தில் சிரியாவிலேயே இறந்துவிடுவார். மீண்டும் மதீனா திரும்பமாட்டார். அவரது தவணை விரைவில் முடிந்துவிடும்" என்று கூறினார்கள். (நபியவர்களின் சொல் என்றும் பொய்ப்பதில்லை.)

 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் தமது சிரியா பயணத்தை முடித்துக்கொண்டு நல்ல விதமாக மதீனா வந்து சேர்ந்தார். அப்போது நபியவர்களுக்கும், ஹுதைபா (ரலி) அவர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது பிறகு நபியவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அழைத்து,  “உமது சிரியா பயணத்தில் என்ன நடந்தது? என்று விசாரித்தார்கள்.

 

அப்போது அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் நடந்த ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே வரும்போது எங்களின் பயண குழுவில் நான்கு வாலிபர்கள் (மஹர் எனும்) மணக்கொடை கொடுத்து திருமணம் முடிப்பதற்கு போதிய வசதியற்றவர்களாக இருந்தனர். நான் எப்போது சிரியா சென்றாலும் அங்கே ஒரு வீட்டில் விருந்தாளியாக தாங்குவேன். அந்த வீட்டில் திருமணம் முடிக்காத நான்கு குமரிகள் இருந்தனர். உடனே, நான் அந்த நான்கு வாலிபர்களிடமும் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுத்து, இந்தத் தொகையை மஹராக வைத்து இந்த நான்கு பெண்களையும் மணமுடித்துக் கொள்ளுங்கள் என்று கூறி, நான் அவர்களுக்கு மணமுடித்து வைத்தேன். அப்போது அவர்கள், இறைவா! எங்களுக்கு மணமுடித்து வைத்த இவருக்கு எங்கள் ஆயுளில் இருந்து சில ஆண்டுகளை இவருக்கு கொடுத்து இவரின் ஆயுளை நீட்டிப்பாயாக! என்று பிரார்த்தித்தனர்" என்று கூறினார்.

 

அப்போது நபியவர்கள், அப்துர்ரஹ்மானே! உமது ஆயுள் முடிந்துவிட்டது. இருந்தாலும், நீ யாருக்கு உதவி செய்தாயோ அவர்களின் பிரார்த்தனையின் மூலம் அவர்களின் ஆயுளில் இருந்து உனக்கு சில ஆண்டுகள் கொடுக்கப்பட்டு அதன் மூலம் உன் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.

 

திருமணத்திற்காக தவித்துக்கொண்டிருப்போருக்கு நாம் உதவி செய்யும்போது அவர்கள் நமக்காக பிரார்த்திக்கலாம். அந்தப் பிரார்த்தனையை அல்லாஹ் அலட்சியப்படுத்துவதில்லை.

 

கொடுக்கும் அந்தஸ்தில் இருப்பவர்கள்

 

ஜனாதிபதி உமர் பின் அப்தில் அஜீஸ் (ரஹ்) அவர்களை (ஹிஜ்ரீ 61-101) சந்திக்க ஈராக் மாகாணத்திலிருந்து ஒருபெண் (சிரியாவுக்கு) வந்து ஜனாதிபதி அவர்களின் வீட்டுக்குச் சென்றாள். சிறிது நேரத்தில் வீட்டிற்குள் வந்த ஜனாதிபதி அவர்கள் தமது மனைவியிடம், “யார் இந்தப்பெண்? ஏன் வந்துள்ளார்?” என்று விசாரித்தார்கள். அன்னாரின் மனைவி, “இதோ இருக்கிறார். அப்பெண்ணிடம் நீங்களே கேளுங்கள்” என்றார்.

 

ஜனாதிபதி அவர்கள், ( مَا حَاجَتُكِ ؟ ) “உமக்கு என்ன தேவை இருக்கிறது?” என்று கேட்டார்கள். உடனே அப்பெண், (  امْرَأَةٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ لِي خَمْسُ بَنَاتٍ كُسْلٌ كٌسْدٍ، فَجِئْتُكَ أَبْتَغِي حَسْنَ نَظَرِكَ لَهُنَّ )நான் ஈராக் மாகாணத்திலிருந்து வந்துள்ளேன். எனக்கு ஐந்து பெண்பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் யாரையும் யாரும் இதுவரை விரும்பி பெண்கேட்டு வந்ததில்லை. என்பிள்ளைகள்மீது உங்களின் கருணையை (உதவியை) எதிர்பார்த்து வந்துள்ளேன்” என்றார்.

 

ஜனாதிபதி அவர்கள்யாருமே பெண்கேட்டு வரவில்லையா?” என்று திரும்பத் திரும்பக் கூறியபடியே கண்ணீர் வடித்தார்கள். பின்னர் மைக்கூடு, காகிதம் ஆகியவற்றை கொண்டுவரச்சொல்லி, ஈராக் மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதினார்கள்.

 

அப்போது ( سُمِّيَ اكْبُرْهُنّ ) “பெரிய மகள் பெயர் என்னம்மா”? என்று அப்பெண்ணிடம் கேட்டு அப்பெண்ணின் பெயரைக்குறிப்பிட்டு “இவ்வளவு உதவித்தொகை வழங்கவேண்டும்” என்றெழுதினார்கள். இதைப்பார்த்த அப்பெண் (அல்ஹம்து லில்லாஹ்) “அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்” என்றாள். பின்னர், இரண்டாம் மகள், மூன்றாம் மகள் நான்காம் மகள் என ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரையும் அவர்களுக்கு ஒதுக்கவேண்டிய பணத்தையும் குறிப்பிட்டு எழுதினார்கள்.

 

கொஞ்சநாட்களுக்கு பிறகு ஈராக் வந்த அப்பெண் அக்கடிதத்தை கவர்னரிடம் கொடுத்தார். கடிதத்தைப் பார்த்து கவர்னர் அழுதார். அழுதுகொண்டே, ( رَحِمَ اللَّهُ صَاحِبُ هَذَا الْكِتَابِ ) “இக்கடிதத்தை கொடுத்தனுப்பியவருக்கு (ஜனாதிபதிக்கு) அல்லாஹ் அருள்புரிவானாக” என்றார். இதைக்கேட்ட அப்பெண், “ஜனாதிபதி அவர்கள் மரணித்துவிட்டார்களா?” என்று கேட்டார். “ஆம்” என்றார் ஆளுநர். அழுதுகொண்டே அப்பெண் திரும்பிச் செல்ல முற்பட்டார்.

 

உடனே ஆளுநர், ( لَا بَأْسَ عَلَيْكِ، مَا كُنْتُ لِأَرُدَّ كِتَابَهُ فِي شَيْءٍ ) “பரவாயில்லை. ஜனாதிபதி அவர்களின் கடிதத்தை எதற்காகவும் நான் திருப்பி அனுப்ப விரும்பவில்லை.” என்று சொல்லி, அப்பெண்ணின் மகள்களுக்குரிய பணத்தை கொடுத்தனுப்பி அவரின் தேவைகளை நிறைவேற்றி அனுப்பினார். நூல்:- சீரா உமர் பின் அப்தில்அஜீஸ் இமாம் இப்னு அப்தில் ஹகம்

 

டமாஷ்கஸில் இருந்த வக்ஃப்களின் எண்ணிக்கைக்கும் அதன் பயன்பாட்டிற்கும் அளவேயில்லை. அவை ஏராளமாக இருந்தன.

 

அவற்றில் ஒன்று, பெண்பிள்ளைகளை தகுந்த மாப்பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு சக்தியற்ற பெற்றோருக்கு உதவிட ஒரு வக்ஃப் இருந்தது. அவற்றில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு திருமணம் செய்து வைத்திட செலவிட்டனர்.

 

மேலும், அநாதைப் பிள்ளைகளுக்காகவும் வக்ஃப் ஒன்று இருந்தது. அவற்றில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அநாதைகளைப் பராமரிக்க, அவர்களுக்கு கல்வி கற்பிக்க, திருமணம் செய்து வைத்திட செலவிட்டனர்.”இந்த வக்ஃப்கள் அந்த ஊர்களின் பெருமைமிகுந்த வியப்பிற்குரியனவாக இருந்தன” என்கிறார் இப்னு ஜுபைர். நூல்:- ரிஹ்லா இப்னு பதூதா, ரிஹ்லா இப்னு ஜுபைர்

 

அரசு அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது கொடுக்கும் அந்தஸ்தில் இருப்பவர்கள் தம்மை தேடி வந்து திருமணத்திற்கு உதவுமாறு கேட்கும்போது அவர்களின் நிலையை முழுமையாக அறிந்து, முடிந்தளவு அவர்களுக்கு உதவ வேண்டும்.

 

வலிமா விருந்து

 

புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது. அலீ (ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகியோரின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (அலீ - ரலி அவர்களை நோக்கி!), ( أَنَّهُ لَا بُدَّ لِلْعُرْسِ مِنْ وَلِيمَةٍ ) "(வலீமா எனும்) திருமண விருந்து  நடைபெற வேண்டுமே" என்றார்கள். உடனே, (அலீ - ரலி அவர்களின் பொருளாதார நிலை அறிந்த ) சஅத் (ரலி) அவர்கள், "நான் ஒரு செம்மறி ஆடு தருகிறேன்" என்றார். (இதைப் பார்த்த) பல அன்சாரிகள் வாற்கோதுமை சேகரித்துக் கொண்டுவந்துக் கொடுத்தனர். (அதை வைத்து அலீ - ரலி அவர்களின் திருமண விருந்து சிறப்பாக நடைபெற்றது.) நூல்:- தப்ரானீ

 

இஸ்லாமியப் பார்வையில் திருமணத்தின்போது மணமகனுக்கு இரண்டு செலவுகள் உண்டு. 1) மணக்கொடை 2) வலிமா விருந்து.

 

அலீ (ரலி) அவர்கள் தன்னிடமிருந்த மதிக்கத்தக்க கேடயத்தையே (மஹ்ர் எனும்) மணக்கொடையாகக் கொடுத்தார்கள். வலீமாவிற்கு செலவு செய்ய ஒன்றுமில்லை என்ற நிலையில் இருந்தபோது தான் சஅத் (ரலி) அவர்கள் போன்றவர்கள் வலிமாவிற்காக பொருள்களை கொடுத்து உதவினர்.

 

கனவிலும் உதவி

 

பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸல்ஜுக் பேரரசின் புகழ்பெற்ற அரசர் ஜலாலுதீன் மலிக் ஷா (ரஹ்) (1055-1092) அவர்களைக் காண ஒரு மனிதர் வந்தார். அவர் வயதான தோற்றத்தில், அழகான உருவ அமைப்பில், கம்பீரமாக காணப்பட்ட முதியவராக இருந்தார். வந்தவர் மன்னருக்கு பரிசாக ஒரு மிஸ்வாக் குச்சியையும், ஒரு சீப்பையும் வழங்கினார்.

 

அவர், "நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறிவிட்டு, "எனக்கு பல பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்; நான் மிகவும் ஏழ்மையாக இருக்கின்றேன்; அவர்களுக்கு திருமணம் செய்வதற்குத் தேவையான பொருள்கள் என்னிடம் இல்லை. அதற்காக ஒவ்வொரு நாள் இரவும் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தேன்.

 

இந்நிலையில் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நான் மிகவும் வருத்தத்தோடு அல்லாஹ்விடம் என் மகள்களின் திருமணம் குறித்து சொல்லி உதவி கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த இரவில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் என் கனவில் காட்சியளித்தார்கள்; அப்பொழுது நபியவர்கள், "நீ தொடர்ந்து அல்லாஹ்விடம் உன் மகள்களின் திருமணத்திற்காக உதவிகளை கேட்டுக்கொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள்.

 

நான், "ஆம்" என்று பதிலளித்தேன்; அதற்கு நபியவர்கள், "அப்படியானால் நீங்கள் மன்னர் ஷாவிடம் சென்று, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் என் மகள்களின் திருமண செலவினங்களுக்கு உதவி செய்யுமாறு உங்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

 

உடனே நான் நபியவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! மன்னர் ஏதேனும் அடையாளங்களை கேட்டால் நான் என்ன சொல்வேன்?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "நீங்கள் அவரிடம், ஒவ்வொரு நாள் இரவும் உறங்குவதற்கு முன் அல்முல்க் (67 வது) அத்தியாயத்தை முழுமையாக ஓதி வருகிறீர்கள் என்று சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

 

இந்த செய்தியை மன்னர் கேட்டதும் அதிர்ச்சிக்குள்ளானார்; உடனே அவர், "நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையானது; இதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது; ஏனென்றால் முல்க் அத்தியாயத்தை ஒவ்வொரு இரவும் ஓதி வரும்படி எனது ஆசிரியர் எனக்கு சொன்னார்; அதை நான் இன்று வரை நடைமுறைப்படுத்தி வருகிறேன்" என்று சொன்னார்.

 

பின்னர் மன்னர் அவர்கள் அந்த ஏழை மனிதரின் மகள்கள் திருமண செலவினங்களுக்கு தேவையான முழுமையான பொருளாதார உதவிகளை செய்தார். மேலும், அவருக்கு தேவையான அளவு உதவிகளை மனமுவந்து தாராளமாக செய்து மரியாதையோடு வழியனுப்பி வைத்தார். நூல்:- அல்இஃதிபார்

 

தேவையற்ற செலவுகள் 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَخَذَ أَمْوَالَ النَّاسِ يُرِيدُ إِتْلاَفَهَا أَتْلَفَهُ اللَّهُ ) யார் மக்களின் பொருளைப்பெற்று அதை சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான். நூல்:- புகாரீ-பாடம்: லா சதகத்த இல்லா அன் ளஹ்ரி ஙினன்-1426

 

வசதியற்ற திருமண வீட்டார் திருமணத்திற்கென்று பிற மக்களிடம் வசூலித்ததை, தாம் சிரமப்பட்டு சம்பாதித்த பணமன்று, பிற மக்கள் வழங்கிய பிச்சைதானே என்றெண்ணி, அதை மார்க்கத்திற்கு முரணான பாவக்காரியங்களில், மூடநம்பிக்கையான காரியங்களில் அல்லது ஆடம்பரங்களில் செலவழித்தல் என்பது அல்லாஹ்விற்கு கோபத்தை உண்டாக்கும் செயலாகும்.

 

பணம், பொருள் யாருடையதாக இருந்தாலும், அதை விரயம் செய்வது பாவமாகும். அதிலும் பிற மக்களிடம் வசூலித்ததை தவறான முறையில் செலவு செய்வது, நம்பிக்கைத் துரோகமாகும்.

 

நம்மால் முடிந்தளவு திருமண தேவையுடையோருக்கு மனத்தூய்மையுடன் உதவுகள் புரிந்து, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

Tuesday, 10 March 2026

பண்டிகைகள்

 

பண்டிகைகள்

 

وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

உங்களுக்கு (அல்லாஹ்) நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் பெயரை உரத்த குரலில் கூறுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாகத் திகழலாம். திருக்குர்ஆன்:- 2:185

 

இந்தியாவில் சுமார் இருபத்தைந்து கோடிக்கும் அதிகமான மக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

 

அதில் காற்றை மாசுப்படுத்தவில்லை. கடலை மாசுப்படுத்தவில்லை, கலர்சாயம் பூசவில்லை, மதுவில் மயங்கவில்லை, கேளிக்கையில் மூழ்கவில்லை, கூச்சலும் இல்லை, கூப்பாடும் இல்லை, மாற்று மத வழிபாட்டுத்தலத்திற்கு முன் நின்று கூச்சலிட்டு இடையூறு செய்யவில்லை.

 

மாறாக, தானும் மகிழ்ந்து மற்றவர்களும் மகிழ இயன்றளவு தர்மம் செய்து, அனைத்து சமூக மக்களுடனும் அன்பை பறிமாறி, மாபெரும் இந்த ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையை அமைதியாய் கடந்துசெல்கிறார்கள்.

 

பெருநாள் தர்மம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَمَّا غَنِيُّكُمْ فَيُزَكِّيهِ اللَّهُ وَأَمَّا فَقِيرُكُمْ فَيَرُدُّ اللَّهُ عَلَيْهِ أَكْثَرَ مِمَّا أَعْطَاهُ ) உங்களில் செல்வந்தர்கள் இதை (ஸதக்கத்துல் ஃபித்ர்) கொடுத்தால் அல்லாஹ் அவர்களைத் தூய்மைப்படுத்துகிறான். உங்களில் ஏழைகள் கொடுத்தால் உயர்ந்தோன் அல்லாஹ் அவர்கள் கொடுத்ததைவிட அதிகமாகத் திருப்பி வழங்குகின்றான். அறிவிப்பாளர்:- ஸஅலபா பின் அஸ்ஸுஅய்ர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1379

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. முஸ்லிம்களில் சுதந்திரமானவர், அடிமை, ஆண், பெண் ஆகிய அனைவருக்காகவும் ஒரு ‘ஸாஉ’ அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ அளவு தீட்டாத (வாற்)கோதுமையை நோன்புப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். நூல்:- புகாரீ-1504, முஸ்லிம்-1791 

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உணவையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு தொலி நீக்கப்படாத கோதுமையையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ, அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திராட்சையையோ வழங்கிவந்தோம். நூல்:- புகாரீ-1506, முஸ்லிம்-1796 

 

புனித ரமளான் முழுவதும் உண்ணா நோன்பு இருந்து, அடுத்த மாதமான ஷவ்வால் முதல் நாள் கொண்டாடப்படும் நோன்பு பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் தர்மமே (ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படும்) நோன்பு பெருநாள் தர்மமாகும்.

 

நோன்பாளி செய்த சிறு தவறுகளுக்கு இந்த தர்மம் ஒரு பரிகாரமாக அமையும். அன்றைய செலவுகள்போக மேல்மிச்சமாகக் கையிருப்பு வைத்திருக்கும் ஒருவர் தமக்காகவும் தம் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக கணக்கிட்டு நோன்பு பெருநாள் தர்மம் கொடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத்தின் உச்சவரம்பையும் (நிஸாப்) பெற்றிருக்க வேண்டும் என்று அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். சிறியவர், பெரியவர், ஆண், பெண், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவருக்காக வேண்டியும் இந்தத் தர்மம் வழங்கப்பட வேண்டும். நூல்:- அல்மின்ஹாஜ்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அரபுகளின் உணவுப்பொருளாக இருந்த கோதுமை மற்றும் பேரிச்சம்பழத்தை அடிப்படையாகக்கொண்டு இங்கு அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பேரிச்சம்பழமும் தோல் நீக்கப்படாத வாற்கோதுமையாகவோ இருந்தால் அவற்றில் ஒரு "ஸாஉ" ஒருவருக்காக கொடுக்கப்பட வேண்டிய நோன்பு பெருநாள் தர்மத்தின் அளவாகும்.

 

ஒரு "ஸாஉ" என்பது ஹிஜாஸ் பகுதியின் அளவில் 2.135 கி.கிராம் ஆகும். நபியவர்கள் காலத்தில் மதீனாவின் வழக்கத்தில் இருந்த "ஸாஉ" என்பது நிறுத்தலளவையில் 2.135 கி.கிராமும் முகத்தலளவையில் 2.360 லிட்டரும் ஆகும். தோல் நீக்கப்பட்ட மணிகோதுமையாக இருப்பின் இதில் பாதியளவு என்ற மக்கள் நிர்ணயித்துக்கொண்டனர்.

 

இன்று அந்தந்தப் பகுதியில் மிகுதியாக உள்ள உணவு தானியங்களை இதே கணக்கில் கொடுக்கலாம். அறிஞர்களில் சிலர் அந்தத் தானியங்களின் விலைமதிப்பைப் பணமாகவும் கொடுக்கலாம் என்கிறார்கள்.

 

ஹனஃபீ சட்டம்: நாம் உண்ணுகின்ற அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களின் கிராயத்தை கொடுப்பதே சிறந்தது.

ஷாஃபீ சட்டம்: நாம் உண்ணுகின்ற அரிசி மற்றும் கோதுமை போன்ற தானியங்களை மட்டுமே கொடுக்க வேண்டும்; அதன் கிராயத்தை கொடுக்கக்கூடாது.

 

பெருநாள் தொழுகைக்கு முன்னர்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( فَرَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِينِ مَنْ أَدَّاهَا قَبْلَ الصَّلاَةِ فَهِيَ زَكَاةٌ مَقْبُولَةٌ وَمَنْ أَدَّاهَا بَعْدَ الصَّلاَةِ فَهِيَ صَدَقَةٌ مِنَ الصَّدَقَاتِ ) வீணான, கெட்ட பேச்சுகளிலிருந்து நோன்பாளியைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக ஆவதற்காகவும் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஸதக்கத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள்.

 

யார் அதை(ப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நிறைவேற்றினாரோ அது (அவரிடமிருந்து) ஏற்றுக்கொள்ளப்பட்ட (ஸதக்கத்தில் எனும்) நோன்புப் பெருநாள் தர்மம் ஆகும். யார் அதை தொழுகைக்குப் பின்னர் நிறைவேற்றினாரோ அது (அவரிடமிருந்து நிகழ்ந்த சாதாரண) தர்மங்களில் ஒரு தர்மம் ஆகும். நூல்:- அபூதாவூத்-1371, இப்னுமாஜா-1817, ஹாகிம்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أَمَرَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِزَكَاةِ الْفِطْرِ أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ ) மக்கள் பெருநாள் தொழுகைக்கு புறப்படுவதற்கு முன்பே நோன்பு பெருநாள் தர்மம் வழங்கப்பட வேண்டும் என அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பெருநாளைக்கு ஒருநாள் முன்பே அல்லது இரண்டு நாள் முன்பே நோன்பு பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள்.

 

பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித்தோழர்கள் (இந்தத் தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். நூல்:- நூல்:- புகாரீ- 1511, முஸ்லிம்-1801, அபூதாவூத்-1372

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أُغْنُوهُمْ عَنِ الطَّوَافِ فِي هَذَا الْيَوْمِ ) அந்த நாளில் ஏழைகள் (உணவில்லாமல்) அலைந்து திரிவதை தடுத்துவிடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தாரகுத்னீ, சுனனுல் குப்ரா இமாம் பைஹகீ, அல்காமில் இமாம் இப்னு அதீ, புலூகுல் மராம்-648

 

நமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மம் வழங்கப்பட வேண்டும். மக்கள் பெருநாள் தொழுகைக்குப் புறப்படுவதற்கு முன்பே இத்தர்மத்தை வழங்கிவிட வேண்டும். ஒன்றிரண்டு நாள்களுக்கு முன்பே கொடுத்துவிட்டாலும் கூடும்.

 

ஃபித்ரா பொருள் அல்லது அதன் கிரயத்தை நாமே சென்று நேரடியாக உரியவர்களிடம் வழங்குவது சிறந்தது. அமெரிக்க, ஐரோப்பா நாடுகளில் வாழக்கூடிய நம்மவர்கள் நேரடியாக உரியவர்களிடம் வழங்குவது சிரமமே! எனவே, அவர்கள் தாயகத்தில் உள்ள தமது உறவினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மூலம் உரியவர்களுக்கு கொடுக்கலாம்.

 

உரியவர்களிடம் நேரடியாக கொடுக்கமுடியாத நிலையில் இயக்கத்தினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, “அதை அவர்கள் முறையாக கொடுத்தார்களா? அல்லது கொள்ளையடித்துவிட்டார்களா? என்ற வீண் சந்தேகத்தைத் தவிர்க்கலாம். கடந்த காலங்களில், ஃபித்ராவை சேகரித்து கொள்ளையடித்தவர்களையும் தமிழ்நாட்டில் கண்டுள்ளோம். எனவே, தான் இது குறித்து கவனம் தேவை.

 

ஃபித்ரா கணக்கு

 

(ஈதுல்ஃபித்ர் எனும்) ஈகைப்பெருநாள் பண்டிகைக்கு முன்பு (ஸகாத் அல்ஃபித்ரா எனும்) கட்டாய தர்மம் ஏழைகளுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கச் சட்டமாகும். அதில் குறைந்தபட்ச தொகை ஒருவருக்கு தலா 140 ரூபாய் ( 90, 100, 120, 140, 150, 160, 200 என வேறுபடுகிறது). சராசரியாக, இந்தியாவில் உள்ள சுமார் 25 கோடி முஸ்லிம்களில், 20 கோடி இந்திய முஸ்லிம்களாவது தங்கள் ஊர்களில் உள்ள சக ஏழை எளிய முஸ்லிம்களுக்கு கொடுத்திருப்பார்கள்.

 

இந்தியாவில் ரூபாய் 2800 கோடிக்கு மேலே பெருநாளன்று தர்மம் செய்யப்படுகிறது.

 

உலகளவில் 180 கோடி உலக முஸ்லிம்கள் என கணக்கு எடுத்தால், இவர்களில் ஆகக் குறைந்த பட்சம் 120 கோடி மக்கள். இந்த ஃபித்ரா ஈகையை நிச்சயமாக தர்மம் செய்திருப்பர்.

 

அதாவது, 120 கோடி ×140 = 16,800 கோடி ரூபாய் தர்மம் ஒரே நாளில் நடந்துள்ளது எனலாமா என்றால், வெளிநாடுகளில் ஃபித்ரா தொகை வேறுபடும்.

 

உதாரணமாக, 30 கோடி முஸ்லிம்கள் கொண்ட பணக்கார வளைகுடா நாடுகளில் இந்த ஈதுல் ஃபித்ரா (பெருநாள் ஈகை) தொகை அந்த நாடுகளின் பொருளாதார வாழ்வியலுக்கு ஏற்ப சவுதியில் 25 ரியால் (570 ரூபாய்)  துபாயில் 25 திர்ஹம் (580 ரூபாய்) என்று நான்கு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். அந்த வகையில் வளைகுடாவில் மட்டுமே 600×30 கோடி = 18,000 கோடி தர்மம் ஒரே நாளில் தரப்பட்டுள்ளது.

 

எனவே, சராசரியாக இந்த ஈகைத்திருநாள் அன்று இவ்வுலகில் எப்படியும் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏழைகளுக்கு தர்மம் செய்யப்பட்டிருக்கும்.

 

“அட்சயத்திரிதை அன்று 9000 கோடிக்கு தங்கம் விற்பனை, தீபாவளி அன்று 6000 கோடிக்கு பட்டாசு விற்பனை, புத்தாண்டில் டாஸ்மாக் மது விற்பனை 500 கோடி” என்றெல்லாம் ஒவ்வொரு செய்தியிலும் பரபரப்பு பிரேக்கிங் நியூஸாக தண்டோரா போடும் நமது ஊடகங்கள், சுமார், 1400 வருடங்களாக சத்தமில்லாமல் நடக்கும் இந்த புரட்சிகரமான ஃபித்ரா தர்மக்கணக்கு குறித்தும் ஒரு செய்தியை விரிவாக வெளியிட்டால் சிறப்பாக இருக்குமே!

 

குர்பானி கணக்கு

 

குர்பானி செய்வதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி  இருக்கின்றோம். அல்லாஹ் கொடுத்திருந்த ஆடு, மாடு, ஒட்டகங்களின் மீது அவன் பெயரைக் கூறி குர்பானி செய்யுங்கள். திருக்குர்ஆன்:- 22:34

 

அல்லாஹ்வின் அன்பைப் பெறுவதற்காக அவனுடைய ஆணைக்கேற்ப "ஈதுல் அள்ஹா"வின் நாட்களில் பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே இஸ்லாமிய மார்க்கத்தின் வழக்கில் "குர்பானி" எனப்படும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَذْبَحَنَّ أَحَدُكُمْ حَتَّى يُصَلِّيَ ) போதிய வசதி இருந்தும் யார் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழும் இடத்திற்கு வர வேண்டாம். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா-3242

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா மாநகரில் தங்கியிருந்த பத்தாண்டு காலமும் குர்பானி கொடுத்து வந்தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ 1427

 

25 கோடி இந்திய முஸ்லிம்கள் பக்ரித் கொண்டாடுகிறார்கள். குறைந்தது  20% முஸ்லிம்கள், குறைந்தபட்சம் ரூ 7000 / - க்கு குர்பான் ஆடுகளை வாங்குகிறார்கள்.

 

5 கோடி x  7000 = 35ஆயிரம் கோடி ரூபாய். இவை சீன தயாரிப்புகள் அல்ல; எம்.என்.சி நிறுவனத்தின் தயாரிப்புகளும் அல்ல. இந்த பெருமளவு பொருளாதாரத்தால் இந்தியப் பொருளாதாரமே பயனடைகிறது. 

 

100 சதவீதம் இந்திய தேசிய கிராமப்புறங்களிருந்து மட்டுமே இந்த வியாபாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு விவசாயி, ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5 ஆடுகளை நிர்வகித்தால், 5 கோடி ÷ 5 = 1 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு எளிமையான வேலைவாய்ப்பு கிடைத்துவிடுகிறது.

 

எனவே பக்ரித் 35 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளூர் வணிக பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது என்பது மட்டுமின்றி சுமார் 1 கோடி சிறு விவசாயிகளுக்கு மிக இலகுவான வேலைவாய்ப்பைத் தருகிறது.

 

மேலும், ஒவ்வொரு ஆட்டின் இறைச்சியும், மூன்றில் இரண்டு மடங்கு ஏழைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படுவதால், அதாவது ஒருவர் குறைந்தது 10 பேருக்கு பகிர்ந்தளிப்பதால், 50 கோடிப் பேர் சாப்பிடுகிறார்கள்.   

 

மகிழ்ச்சியை வெளிப்படுத்த

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெருநாள் தினத்தில் என் அருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை) அடித்து பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். இதைக் கண்ட அவர்கள், ( أَبِمُزْمُورِ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم )  "இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக்கருவிகளா? என்று (கடிந்து) பேசி அவ்விருவரையும் அதட்டினார்கள்.

 

உடனே பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَهَذَا عِيدُنَا )  "அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! (மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்" என்று கூறினார்கள்.

 

(அன்றைய தினத்தன்று) நபியவர்களின் பள்ளிவாசலி(ன் வளாகத்தி)ல் அபிசீயனியர்கள் ஈட்டியறிந்து (வீர விளையாட்டு) விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது விளையாட்டை நான் பார்ப்பதற்காக நபியவர்கள் எனது அறை வாசலில் நின்றபடி தமது மேல் துண்டால் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். நானாக (விளையாட்டை ரசித்துச் சலிப்புற்று)த் திரும்பும்வரை எனக்காகவே அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். நூல்:- புகாரீ-950,952, முஸ்லிம்-1619, 1620

 

கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( مَا كَانَ شَىْءٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلاَّ وَقَدْ رَأَيْتُهُ إِلاَّ شَىْءٌ وَاحِدٌ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُقَلَّسُ لَهُ يَوْمَ الْفِطْرِ ) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த அனைத்தையும் (இன்றும் உங்களிடையே) நான் காண்கிறேன்; ஒரே ஒரு விஷயத்தைத் தவிர. (அது:) நோன்புப் பெருநாளன்று நபியவர்களுக்கு அருகில் கஞ்சிரா (தஃப்) அடிக்கப்பட்டு வந்தது. (அதை மட்டும் நீங்கள் நடைமுறைப்படுத்துவதில்லை) என்று கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-1293, முஸ்னது அஹ்மத், அல்முஅஜமுல் கபீர் இமாம் தப்ரானீ

 

பெருநாளன்று கஞ்சிரா அடிக்கலாம். மார்க்கத்திற்கு முரணில்லாத வாசகங்களைப் பாடலாம். இசைக்கருவிகளின் துணையின்றி வாயால் ராகமிட்டு நல்ல கருத்துள்ள பாடல்களைப் பாடுவதற்கும் கேட்பதற்கும் அனுமதி உண்டு. வீர விளையாட்டுக்கள் விளையாடுவதற்கும் அதைப் பார்ப்பதற்கும் அனுமதியுண்டு. பெருநாள் தினத்தன்று மகிழ்ச்சியின் வெளிப்பாடாக பள்ளிவாசலின் வளாகத்திலோ அல்லது மைதானம் போன்ற பொதுஇடங்களிலோ மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மார்க்கம் அனுமதித்த (ஹராமற்ற) பயனுள்ள விளையாட்டுகளை விளையாடலாம்.

 

திடல் தொழுகை

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( كَانَ إِذَا خَرَجَ إِلَى الْعِيدِ رَجَعَ فِي غَيْرِ الطَّرِيقِ الَّذِي أَخَذَ فِيهِ ) (பெருநாள் வந்துவிட்டால்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு (திடலுக்கு) புறப்பட்டுச் சென்றால், சென்ற பாதையல்லாத வேறு பாதையிலேயே திரும்பி வருவார்கள். நூல் புகாரீ-986, திர்மிதீ-496, இப்னுமாஜா-1291, முஸ்னது அஹ்மத்

 

இமாம ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( اَنْ سَبَبَ ذَلِكَ سَعَةٌ الْمَسْجِد، وَضِيق أَطْرَافِ الْمَدِينَةِ، فَلَوْ عَمَّرَ بَلَدٍ فَكَانَ مَسْجِد أَهْلِهَا يَسَعُهُ فِي الْأَعْيَادِ لَمْ أَرَ أَنْ يَخْرُجُوا مِنْهُ ) கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தமது பள்ளிவாசலில் இடவசதி இல்லாமல் இருந்ததும் மதீனாவிலிருந்த சுற்று புறங்கள் நெருக்கடியாக இருந்ததுமே அவர்கள் பெருநாள் தொழுகைக்கு திடலுக்குச் சென்ற காரணம் என நான் அறிகிறேன். எனவே, ஒருஊரில் பள்ளிவாசல் கட்டப்பட்டு அந்த ஊர் மக்களுக்கு பெருநாள் தொழுகை தொழுவதற்கு அந்த பள்ளிவாசல் போதுமானதாக இருந்தால், அவர்கள் அதைவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டியதில்லை என்று நான் கருதுகிறேன். நூல்:- அல்உம்மு

 

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( أَمَّا أَهْلُ مَكَّةَ، فَلَا يُصَلُّونَهَا إلَّا فِي الْمَسْجِدِ مِنْ الزَّمَنِ الْأَوَّلِ ) மக்காவின் மக்கள் ஆதிகாலத்திலிருந்து பள்ளிவாசலில் மட்டுமே பெருநாள் தொழுகை தொழுது வருகிறார்கள். 

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் இடம் பற்றாக்குறை காரணமாக திடலுக்குச் சென்று தொழுதுள்ளார்களே தவிர, “நீங்கள் ஒரு திடலுக்குச் சென்றுதான் தொழ வேண்டும்” என்று ஒருமுறைகூட நபியவர்கள் அறிவுறுத்தியதில்லை.

 

மக்காவில் உள்ள (மஸ்ஜிதுல் ஹராம் எனும்) கஅபா மற்றும்   மதீனாவில் உள்ள மஸ்ஜிதுந்நபவி ஆகிய பள்ளிவாசல்களில் தான் ஈத் பெருநாள் தொழுகை ஆண்டாண்டு காலமாக நடைபெறுகிறது. அங்கே ஒருபோதும் திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றதில்லை.

 

மதீனா நகர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களது கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு பெருநாள் தொழுகைக்கென்று ஒரு வெளியிடத்தை நபியவர்கள் தேர்வு செய்தார்கள். அந்த  அடிப்படையில்தான் முஸ்லிம்களும் தம்முடைய ஊரில் பெருநாள் தொழுகைக்கு என்று ஒரு இடத்தை வாங்கி, அல்லது ஒதுக்கி வைத்திருந்தார்கள். ஈத் மைதானம் என்ற அந்த இடத்தில் இரு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினார்கள். நமக்கு அருகில் நமக்கு சொந்தமாக ஒரு ஈத்காஹ் மைதானம் இருந்தால் அங்கு சென்று தொழலாம்.

 

ஈத்காஹ் மைதானம் இல்லாத ஊரில் அல்லது ஈத்காஹ் மைதானம் எல்லோருக்கும் போதுமானதாக இல்லை என்ற நிலையில் பள்ளிவாசலிலே தொழுதுக்கொள்ளலாம். ஈத்காஹ் மைதானம் இல்லாத ஊர்களில் மைதானங்களை வாடகைக்கு எடுத்தோ அல்லது இலவசமாக பெற்றோ அல்லது பொதுஇடங்களில் அனுமதி கேட்டோ பெருநாள் தொழ வேண்டும் என்பதற்கு மார்க்கத்தில் எந்த முன்னுதாரணும் இல்லை.

 

பெருநாள் தொழுகைகளின்போது இடம் போதாமையின் காரணமாக சாலைகளிலும், தெருக்களிலும், முட்டுச் சந்துகளிலும் மக்கள் தொழுகின்ற காட்சியைக் காணமுடிகிறது. சில இடங்களில் சாலையின் வளைவுக்கேற்ப தொழுகை அணியின் வரிசையும் வளைந்துகொண்டே போய்விடுவதையும் பார்க்கமுடிகிறது.

 

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தொழுகின்ற சிறப்புத் தொழுகைகள் அவை. தெரு மற்றும் பொதுவெளியில் நின்று தொழுவது எந்த வகையில் பொருந்தும்? மனஓர்மையுடன்தான் தொழ முடியுமா? இடம் போதவில்லையெனில் இரண்டாவது, மூன்றாவது ஜமாஅத்களாக அமைத்துத் தொழுது கொள்ளலாம்தானே.

 

அல்லது சமுதாயத்தார் ஒன்று சேர்ந்து புதியதாக நிலங்களை வாங்கி அவற்றைத் தொழுகை திடல்களுக்காக வக்ஃப் செய்யலாம். நம்முடைய முன்னோர்கள் வக்ஃப் செய்த ஈத்காஹ்கள் இன்றும் நம்முடைய தேவைகளை நிறைவு செய்து வருகின்றன. இன்ஷா அல்லாஹ், நாமும் அது போன்று வக்ஃப் செய்து வருங்காலத் தலைமுறையினருக்கும் வசதியை ஏற்படுத்தலாம்.

 

திடல் தொழுகையை ஒரு முக்கியமான கடமையாக பரப்புவதில் இயக்கத்தினர் வலிந்து பிரச்சாரம் செய்கின்றனர். ஊரெங்கும் போஸ்டர் ஒட்டுகிறார்கள். அத்தனையும் மார்க்கத்தின் பெயரால் சமூகத்தை ஏமாற்றும் தந்திரமாகும். எனவே, ஈத்காஹ் மைதானங்கள் இல்லாத ஊர்களில் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவதே சிறந்தது.

 

இஸ்லாம் கூறுகின்ற முறையில் பெருநாள் கொண்டாடி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 

 

திருமணத்திற்கு உதவுவோம்

  திருமணத்திற்கு உதவுவோம்   وَأَنْكِحُوا الْأَيَامَى مِنْكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ உங்களில் வாழ்க்கைத் துணைய...