Search This Blog

Friday, 4 September 2026

வானவர்களின் பிரார்த்தனை

 

வானவர்களின் பிரார்த்தனை

 

وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ

வானவர்கள் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறும் கோருகிறார்கள். திருக்குர்ஆன்:- 42:5

 

ஓர் முஸ்லிம், நல்லோர்களின் பிரார்த்தனையைப் பெற்று வளம் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஆவல்கொள்கிறான். அதனால் தான், நல்லோர்களைக் காணும்போதெல்லாம் “எனக்காக துஆ செய்யுங்கள்” என்று கோருகிறான்.

 

ஆனால், அவன் சில நற்செயல்களைச் செய்யும்போது, இறைவனின் நெருக்கம் பெற்ற, பரிசுத்தமான வானவர்களின் பிரார்த்தனை கிடைக்கப்பெறுகிறான். வானவர்களின் பிரார்த்தனையைப் பெற்றவன் ஈடேற்றம் பெற்றுவிடுவான் என்பதில் சந்தேகமில்லை.

 

(அர்ஷ் எனும்) இறையாசனத்தைச் சுமந்து கொண்டிருப்பவர்களும் அதைச் சுற்றிலும் நிற்பவர்களும் தன் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, துதித்துக்கொண்டிருக்கின்றனர். அவன்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். மேலும், இறைநம்பிக்கை கொண்டோருக்காகப் பாவமன்னிப்புக் கோருகின்றனர். "எங்கள் இறைவா! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன்னுடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாப்பாயாக!" (என்று பிரார்த்தனை செய்கின்றனர்.) திருக்குர்ஆன்:- 40:7

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது குறித்து நிறைய, அழகிய தகவல்களை கூறியுள்ளார்கள்.

 

சகோதரருக்காகப் பிரார்த்தணை

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ ) ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!" என்று கூறுகிறார். அறிவிப்பாளர்:- அபூதர்தா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5280

 

நாம், கண்ணெதிரே இல்லாத ஒருவருக்காகவோ பலருக்காகவோ பிரார்த்திக்கும்போது அதில் உள்ளார்ந்த ஒரு ஈடுபாடும், பொது நலமும் இருக்கும். அதை அல்லாஹ் விரும்புகிறான். அதனால் தான் மற்றவர்களுக்காக நாம் கோரும் பிரார்த்தனையில் பலன், பிரார்த்திக்கும் நமக்கும் கிடைக்கும். நமக்கும் அதேபோன்று நலன் ஏற்பட வேண்டும் என்று வானவர்கள் விரும்புகிறார்கள்.

 

உடல்நலம் விசாரித்தல்

 

அபூஃபாக்கித்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு, "(வாருங்கள்) நாம் (என் மகனார்) ஹசனிடம் சென்று அவரை உடல்நலம் விசாரிப்போம்" என்று கூறினார்கள். நாங்கள் (ஹசன் - ரலி அவர்களிடம்) சென்றபோது, அங்கு ஹசன் (ரலி) அவர்களிடம் அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் இருப்பதை கண்டோம்.

 

அப்போது அலீ (ரலி) அவர்கள், ( أَعَائِدًا جِئْتَ يَا أَبَا مُوسَى أَمْ زَائِرًا ) "அபூமூசா! நீங்கள் உடல் நலம் விசாரிக்க வந்தீர்களா? அல்லது (சாதாரணமாகச்) சந்திப்பதற்கு வந்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூ மூசா (ரலி) அவர்கள், "இல்லை; உடல்நலம் விசாரிக்க தான் வந்தேன்" என்றார்கள்.

 

அப்போது அலீ (ரலி) அவர்கள், ( مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلاَّ صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ ) ‏ "முஸ்லிம் ஒருவர் மற்றொரு முஸ்லிமை உடல்நலம் விசாரிப்பதற்காக ஒரு காலை நேரத்தில் சென்றால் அவருக்காக மாலை நேரம் வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்திக்கின்றனர். அவர் மாலை நேரத்தில் உடல்நலம் விசாரிக்க சென்றால், அவருக்காக காலை நேரம் வரை எழுபதாயிரம் வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். மேலும், அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு தோட்டமும் வெகுமதியாக கிடைக்கிறது" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-891

 

நோயாளியை சந்தித்து உடல்நலம் விசாரிப்பது நற்செயலும் நபிவழியும் ஆகும். நோயாளியை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதால் நோயாளி ஆறுதலும் உற்சாகமும் அடைவார். இதுவே அவரது உடல்நலம் முன்னேறக் காரணமாக அமையலாம். அத்துடன் இருவருடையே அன்பும் இணக்கமும் அதிகரிக்க வழிவகுக்கும். அதே நேரத்தில் நோயாளிக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் அளவுக்கோ அவருடைய குடும்பத்தாருக்குச் சங்கடம் உண்டாகும் அளவுக்கோ அவர் அருகில் நீண்ட நேரம் அமரலாகாது. நோயாளியைச் சந்தித்து உடல்நலம் விசாரிப்பதின் சிறப்பு தொடர்பாக பல நபிமொழிகள் வந்துள்ளன.

 

மார்க்கக் கல்வியாளர்கள்  

 

கஸீர் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) பள்ளிவாசலில் அபூதர்தா (ரலி) அவர்களுடன் நான் அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு ஒரு மனிதர் வந்து, "அபூதர்தா! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன நபிமொழியை அறிவிப்பதாக நான் கேள்விப்பட்டதால் (அதை அறிய நாடி) நான் மதீனாவிலிருந்து உங்களிடத்தில் வந்திருக்கிறேன். (அதைத் தவிர) வேறு எந்த (பொருளாதாரத்) தேவைக்காகவும் வரவில்லை" என்று கூறினார்.

 

அப்போது அபூதர்தா (ரலி) அவர்கள், ( مَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَإِنَّ الْمَلاَئِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ طَالِبَ الْعِلْمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ ) "யார் ஒரு பாதையில் கல்வியைத் தேடிச் செல்கிறாரோ அவருக்கு சொர்க்கத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். கல்வியைத் தேடும் ஒருவர் மீது கொண்டுள்ள அன்பால் வானவர்கள் தம் சிறகுகளை தாழ்த்துகின்றனர். தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட வானம் பூமியிலுள்ளோர் யாவரும் கல்வியைத் தேடுவதற்காகப் பாவமன்னிப்பு கோருகின்றனர் என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.  நூல்:- அபூதாவூத்-3157, இப்னுமாஜா-219, முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ ) அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் (தண்ணீரில் வாழும்) மீன்கள் உட்பட யாவரும் மக்களுக்கு நல்லதைக் கற்பிக்கும் ஆசிரியருக்காக அருள்வேண்டி (மன்னிப்பு வேண்டி) பிரார்த்திக்கின்றனர். அறிவிப்பாளர்:- அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2606

 

வள்ளல்  

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ مَلَكَانِ يَنْزِلاَنِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا ) ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலைப்பொழுதை அடையும்போது, இரு வானவர்கள் (வானிலிருந்து) இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!” என்று கூறுவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1442

 

நமது பொருளாதாரம் தேவையுடையோருக்கு பயன்பட வேண்டும் என்று கருதியே நாம் தானம் தர்மம் வழங்குகிறோம். இது ஒரு வகையில் பொதுநலம். எனவே, பொதுநலம் பேணுவோருக்கு வானவர்கள் பிரார்த்திப்பது இயல்பானது தான்.

 

சிலர் நூறுகளை அல்லது ஆயிரங்களை அல்லது இலட்சங்களை அல்லது கோடிகளை இறைவழியில் செலவு செய்கிறார்கள். அதாவது, அவரவர் தகுதிக்கேற்ப செலவு செய்கிறார்கள். அல்லாஹுத்தஆலா அவன் தகுதிக்கேற்ப பகரத்தை வழங்குவான்.

 

கொடுக்கின்றவர் நன்றாக இருந்தால் தானே, வாங்கி தின்ன முடியும்" என்று சொல்வார்கள்.

 

அதாவது, கொடுக்கின்றவர் வளமாக வாழ வேண்டும் என்று அவரிடம் வாங்கி அனுபவித்தவர்கள் பிரார்த்திப்பார்கள். எனவே, கொடுக்கின்றவருக்கு வானவர்கள் மற்றும் மனிதர்களின் பிரார்த்தனை இருக்கின்றபோது அல்லாஹ் அவரின் வாழ்க்கைத்தரத்தை தாழ்த்துவதில்லை. மாறாக, உயர்த்தவே செய்வான்.

 

சுருங்கக்கூறின், மனத்தூய்மையுடன் இறைவழியில் செலவு செய்கிறவர்களுக்கு வானவர்களின் பிரார்த்தனை கிடைப்பதால் அவர்கள் ஏழையாக மாட்டார்கள்.

 

ஸலவாத் சொன்னால்

 

நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும் நபி (முஹம்மது-ஸல் அவர்கள்) மீது ஸலவாத்து சொல்கிறார்கள். ஆகவே, இறைநம்பிக்கையாளர்களே! நீங்களும் (முஹம்மது-ஸல்)  அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் கூறிக்கொண்டிருங்கள்.  திருக்குர்ஆன்:- 33:56

 

அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், முகத்தில் மகிழ்ச்சி ததும்ப (எங்களிடம்) வந்தார்கள். (அது குறித்து நாங்கள் வினவினோம்.) அப்போது அவர்கள் கூறியதாவது: என்னிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, ( أَمَا يُرْضِيكَ يَا مُحَمَّدُ أَنْ لاَ يُصَلِّيَ عَلَيْكَ أَحَدٌ مِنْ أُمَّتِكَ إِلاَّ صَلَّيْتُ عَلَيْهِ عَشْرًا ) "முஹம்மது (ஸல்) அவர்களே! உங்கள்மீது உங்கள் சமுதாயத்தில் உள்ள ஒருவர் ஸலவாத்து ஓதும்போது, அவரின்மீது நான் பத்து முறை அருள்வேண்டி பிரார்த்தனை புரியாமலிருப்பதில்லை என்பதை நீங்கள் பொருந்திக்கொள்ளவில்லையா?" என்று கூறினார்.   நூல்:- நசாயீ-1278, தாரிமீ

 

சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் பலர் அல்லாஹ் ஸலவாத்து சொல்கிறான் என்பதற்கு "அருள் புரிகிறான்" என்றும்,  வானவர்கள் சலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பாவங்களை மன்னிக்கும்படி வேண்டுகின்றனர்" என்றும் பொருள் கொள்ள வேண்டும் என்று கூறினர்.   நூல்:- திர்மிதீ-447

 

ஸலவாத்து என்றால் ஈடேற்றம் என்று பொருளாகும். ஸலவாத்து சொல்பவர்களைப் பொறுத்து பொருள் மாறுபடும். இதன்படி அல்லாஹ் ஸலவாத்து சொல்கிறான் என்பதற்கு "அருள்புரிகிறான்" என்றும்,  வானவர்கள் ஸலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பாவமன்னிப்பு கோருகின்றனர்" என்றும், முஸ்லிம்கள் ஸலவாத்து சொல்கிறார்கள் என்பதற்கு "பிரார்த்திக்கிறார்கள்" என்றும்  பொருள் கொள்ள வேண்டும்.

 

தொழுவதற்காக

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் அங்கத்தூய்மை (உளூ) செய்து, அந்த அங்கத்தூய்மையைச் செம்மையாகச் செய்து, பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளிவாசலை நோக்கிச் செல்வாரானால், அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்காகவும் அவருக்கு ஒரு பதவி உயர்த்தப்படுகிறது; பாவம் ஒன்று அவரை விட்டு அழிக்கப்படுகிறது.

 

அவர் தொழுதால், வானவர்கள் அவருக்காக, அவர் தாம் தொழுத இடத்தில் இருக்கும்வரை (அருள் வேண்டி) பிரார்த்தித்துக்கொண்டேயிருக்கின்றனர். ( اللَّهُمَّ صَلِّ عَلَيْهِ، اللَّهُمَّ ارْحَمْهُ )  “இறைவா! இவருக்கு அருள் புரிவாயாக! இறைவா! இவர்மீது கருணை காட்டுவாயாக” என்று கூறுவார்கள்.

 

உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.

 

மற்றொரு அறிவிப்பில் பதிவாகியுள்ளது: வானவர்கள், ( اللَّهُمَّ ارْحَمْهُ اللَّهُمَّ تُبْ عَلَيْهِ ) "இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக! இறைவா! இவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் யாருக்கும் எவ்வித  நோவினை தராமல், அங்கத்தூய்மை முறியாமல் இருக்கும் வரை இந்நிலை தொடர்கிறது. நூல்:-  புகாரீ-647, அபூதாவூத்-472

 

லைலத்துல் கத்ர் இரவில் வணங்கினால்

 

அருமை நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள். ( إذا كانَ لَيْلَةُ القَدْرِ نَزَلَ جِبْرِيلُ في كَبْكَبَةٍ مِنَ المَلائِكَةِ يُصَلُّونَ عَلى كُلِّ عَبْدٍ قائِمٍ أوْ قاعِدٍ يَذْكُرُ اللَّهَ ) லைலத்துல் கத்ர் இரவு வந்துவிட்டால் வானவர் ஜிப்ரீல் (அலை) மற்றும் வானவர்களின் ஒரு பெரும் கூட்டத்தினர் இறங்குகின்றனர். (அன்றிரவு) நின்றவாறு அல்லது அமர்ந்தவாறு அல்லாஹ்வை நினைவுகூறுகின்ற அடியார் மீது (அன்றிரவு இறங்குகின்ற வானவர்கள் அனைவரும்) சலவாத் கூறுகிறார்கள். (வானவர்களின் சலவாத் என்பது பிரார்த்தனை ஆகும்.) அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர

 

இன்பத்திலும் துன்பத்திலும் இறைநினைவு

 

இறைத்தூதர் யூனுஸ் (அலை) அவர்கள் ஓர் பெரிய மீன் வயிற்றுக்குள் சிக்கிக்கொண்டபோது, "(அல்லாஹ்வே) உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை உன்னை துதிக்கிறேன் நிச்சயமாக நான் அநீதியாளர்களில் ஒருவன் ஆகிவிட்டேன் என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு அல்லாஹ் அந்த மீன் வயிற்றிலிருந்து அவரை மீட்டெடுத்தான். இதைப்பற்றி திருக்குர்ஆன் (21:87,88) கூறுகிறது.

 

யூனுஸ் (அலை) அவர்களின் பிரார்த்தனையை செவியுற்ற வானவர்கள், ( يَا رَبِّ، صَوْتٌ ضَعِيفٌ مَعْرُوفٌ مِنْ بِلَادٍ غَرِيبَةٍ؟ ) "இறைவா! ஒரு விசித்திரமான தேசத்திலிருந்து பலவீனமான, நன்கு அறியப்பட்ட குரல் கேட்கிறதே" என்றார்கள். அல்லாஹ், ( أَمَا تَعْرِفُونَ ذَاكَ ؟ ) "அவர் யாரென்று உங்களுக்குத் தெரியாதா?"  என்று கேட்டான். வானவர்கள், "இறைவா! எங்களுக்கு தெரியாது. அவர் யார்?" என்றனர். அல்லாஹ், ( عَبْدِي يُونُسُ ) "என்னுடைய அடியார் யூனுஸ் தான்" என்று கூறினான்.

 

வானவர்கள்,  ( عَبْدُكَ يُونُسُ الَّذِي لَمْ يَزَلْ يُرفَع لَهُ عَمَلٌ مُتَقَبَّلٌ ، وَدَعْوَةٌ مُجَابَةٌ؟ ) "எப்பொழுதும் (அவர் செய்கின்ற) நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, (அவருடைய) பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கப்படுமே, அந்த உமது அடியார் யூனுஸா?"  என்று கேட்டனர். அல்லாஹ், "ஆம்" என்று கூறினான். வானவர்கள்,  ( يَا رَبِّ، أَوَلا تَرْحَمُ مَا كَانَ يَصْنَعُ فِي الرَّخَاءِ فتنجيَه مِنَ الْبَلَاءِ؟  ) "இறைவா! அவர் செழிப்பில் இருந்தபோது செய்த வணக்க வழிபாடுகள் மீது இரக்கம் காட்டி, அவரை பேரழிவிலிருந்து காப்பாற்ற மாட்டாயா?"  வினவினர். அல்லாஹ், "ஆம்" என்று கூறி, யூனுஸ் (அலை) அவர்களை திறந்த வெளியில் வீசும்படி அந்த திமிங்கிலத்திற்கு கட்டளையிட்டான். அவ்வாறே, அது யூனுஸ் (அலை) அவர்களை துப்பியது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

வாழ்வில் எப்போதும் இறைநினைவுடன் இருப்பவர்களுக்கு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலை நீங்க, வானவர்கள் பிரார்த்திப்பார்கள். அதன்மூலம் அவர்களுக்கு இறைவனின் உதவி கிடைக்கக்கூடும்.

 

உணவு தர்மம்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ரொட்டியும் ஆலிவ் எண்ணையும் கொண்டு வந்து உண்ணக் கொடுத்தார். அண்ணலார் உணவருந்திவிட்டு, ( أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلاَئِكَةُ  )  "உங்களிடம் நோன்பாளி நோன்பு துறக்கட்டும். உங்கள் உணவை நல்லவர்கள் உண்ணட்டும். வானவர்கள் உங்களுக்காக அருள்வேண்டிப் பிரார்த்திக்கட்டும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3356, இப்னுமாஜா-1737, முஸ்னது அஹ்மத், தாரிமீ-1707

 

பசி தேவை என்று வரும்போது மனிதநேய அடிப்படையில் யாருக்கேனும் உணவும் உதவியும் வழங்கிட வேண்டும். விரும்பி அழைக்கும் விருந்துகளில் இறையச்சமுள்ள நல்லடியார்கள் கலந்து கொள்ளுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இறையச்சமுள்ளவர் உண்டால் இறைவழிபாடு செய்வதற்கு அந்த உணவு பயன்படும். அதன் மூலம் வானவர்களின் பிரார்த்தனை கிடைக்கக்கூடும்.

 

சஹர் சாப்பிடுகின்றவர்கள்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى المُتَسَحِّرِینَ ) நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது வானவர்களும் சஹர் சாப்பிடுகின்றவர்கள்மீது சலவாத்துக் கூறுகின்றனர். (அல்லாஹ் அவர்கள் மீது தன் அருள்வளத்தைப் பொழிகிறான். வானவர்கள் அவர்களுக்காக பிரார்த்திக்கிறார்கள்.) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, இப்னு ஹிப்பான், முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-328

 

சூரிய உதயத்திற்கு முன்பிருந்து - அதாவது ஃபஜ்ரின் ஆரம்பித்திலிருந்து - சூரியன் மறையும் வரை உணவு, பானம், பாலுறவு ஆகியவற்றை இறைவனுக்காகக் கைவிடுவதே நோன்பு எனப்படுகிறது. இவ்வாறு நோன்பைத் தொடங்குவதற்கு முன்பு, உணவு உண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கே 'சஹர்' எனப்படும்.

 

பரக்கத் எனும் அருள்வளம் என்பது ஒரு பொருள் பல்கி பெருகுவதும், அது குறைந்த அளவில் இருந்தாலும் அதைக்கொண்டே அனைத்து தேவைகளும் பூர்த்தியாகுவதுமாகும். எனவே இந்த அருள்வளம் என்பது மனித திறமை, முயற்சியை சார்ந்ததல்ல. அது அல்லாஹ் கொடுப்பதாகும்.

 

சஹர் உணவு குறைவாக இருந்தாலும் அதன் மூலம் நிறைவையும், ஆரோக்கியத்தையும், நல்லெண்ணங்களையும், நற்செயல் புரிவதற்கான பலத்தையும் அல்லாஹ் கொடுப்பது தான் அருள்வளம் ஆகும். இறைவனின் அருள்வளத்தைப் பெற நாம் சிரமப்பட வேண்டியதில்லை. சஹர் நேரத்தில் சாப்பிட்டாலோ அல்லது சிறிதளவு தண்ணீர் பருகினால்கூட போதும் நமக்கு அருள்வளம் கிடைத்துவிடும். மேலும் வானவர்களின் பிரார்த்தனையும் கிடைத்துவிடும். அந்நேரத்தில் நம் வீட்டு சிறு பிள்ளைகளையும் எழுப்பி சில கவளம் உணவு ஊட்டுவது மூலம் அவர்களுக்கும் அருள்வளம் கிடைத்து விடும்.

 

சிலர் சஹர் உணவை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அது தவறிவிட்டாலும் வருந்துவதில்லை. சிலரோ தன் தூக்கத்திற்கு ஆசைப்பட்டு அல்லது தனது பொடுபோக்குத்தனத்தால் தராவீஹ் தொழுகைக்கு பின் ஒரேடியாக சாப்பிட்டுவிட்டு நிய்யத் வைத்து தூங்கிவிடுகின்றனர். இத்தகையவர்கள் மகத்தான நன்மைகளைப் பெறாத துர்ப்பாக்கியவான்களாக ஆகிவிடுகின்றனர்.

 

நமது வாழ்நாளில் வானவர்கள் விரும்புகின்ற பல நல்லறங்களை புரிந்து, அவர்களின் பிரார்த்தனையைப் பெற அல்லாஹுத்தஆலா நமக்கு அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

Monday, 31 August 2026

விசாரிக்கப்படுவோம்

 

விசாரிக்கப்படுவோம்

 

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

தனது வினைப் பதிவேட்டை வலக்கரத்தில் வழங்கப்பெற்றவர், விரைவில் இலகுவான கேள்வி கேட்கப்படுவார். திருக்குர்ஆன்:- 84:7,8

 

ஓர் முஸ்லிம், அல்லாஹுத்தஆலாவை நம்புவதைப் போல், மறுமை நாளையும் அதில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளை நம்பவேண்டும். குறிப்பாக, விசாரணை மன்றத்தில் அவன் தமது வாழ்நாளில் செய்த நன்மை - தீமை என அனைத்தை பற்றியும் விசாரிக்கப்படுவான்.

 

ஓர் இறைநம்பிக்கையாளன் இலகுவான முறையில் விசாரிக்கப்படுவதைப் போன்று, ஓர் இறைமறுப்பாளன்  விசாரிக்கப்படமாட்டான். அவனுக்குரிய விசாரணை மிகவும் கடுமையாக இருக்கும்.

 

மறுமைநாளில் மனிதர்களது நிலையைப் பொறுத்து விசாரணையின் கால அளவு குறுகியதாகவோ, மிக நீண்டதாகவோ, இலகுவானதாகவோ, கடினமானதாகவோ அமையும். செயற்பதிவேடுகள் காட்டப்படுவது தவிர்ந்து வேறெந்த விசாரணையும் இல்லாமலே சுவர்க்கம் செல்வோருமிருப்பர். நீண்ட நெடுங்காலம் விசாரணைக்காக நின்று அல்லல் படுவோரும் அங்கிருப்பர்.

 

மறைத்துவிடுவான்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இறைநம்பிக்கையாளரை தன் பக்கம் நெருங்கச்செய்து, அவர்மீது தன் திரையைப் போட்டு அவரை மறைத்துவிடுவான். பிறகு அவரை நோக்கி, (  أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا ) ‘‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம், என் இறைவா!” என்று கூறுவார். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவர் (தாம் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளச் செய்வான்.

 

அந்த இறைநம்பிக்கையாளர், ( أَنَّهُ هَلَكَ ) “நாம் இத்தோடு ஒழிந்தோம்” என்று தம்மைப் பற்றிக் கருதிக்கொண்டிருக்கும்போது இறைவன், ( سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ‏ ) “இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்” என்று கூறுவான். அப்போது அவரது நற்செயல்களின் பதிவேடு அவரிடம் கொடுக்கப்படும். நூல்:- புகாரீ-2441

 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர் விசாரணைக்காக அழைக்கப்படுவார். அப்போது அவருடைய இறைவன் அவருடைய வினைப் பதிவுகளை அவருக்கும் தனக்கும் மட்டும் தெரிகின்ற வகையில் எடுத்துக்காட்டுவான்.

 

அவர் ஆம்! என் இறைவா! நான் செய்தேன்; நான் செய்தேன்; நான் செய்தேன்; என்று கூறி, ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்.

 

எனவே, அவருடைய பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னித்து, அவரைவிட்டு மறைப்பான். அதையடுத்து பூமியிலுள்ள எந்த உயிரும் அவருடைய பாவங்களில் ஒன்றைக்கூட காணமுடியாது. அவருடைய நன்மைகள் (மட்டுமே) வெளியே தெரியும். மக்கள் அனைவரும் அந்த நன்மைகளையே காண வேண்டும் என அல்லாஹ் விரும்புவான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் யாசீன் வசனம்-65

 

இலகுவான விசாரணை

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சில தொழுகைகளில், ( اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا ) "இறைவா! இலகுவான முறையில் என்னை விசாரிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள். அவர்கள் தொழுகை முடித்தவுடன், ( مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ )  "(நாயகமே!) இலகுவான விசாரணை என்றால் என்ன?" என்று வினவினேன்.

 

நபியவர்கள், ( أَنْ يَنْظُرَ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزُ لَهُ عَنْهُ، إِنَّهُ مَنْ نُوِقش الحسابَ يَا عائشةُ يَوْمَئِذٍ هَلَكَ ) "(மறுமைநாளில், அல்லாஹ்) ஒருவனின் வினைப் பதிவேடை பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். ஆயிஷா! அன்று யார் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறாரோ, அவர் அழிந்தார்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா, ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ إِلاَّ هَلَكَ ) ‘‘(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று சொன்னார்கள்.

 

“எவரது வினைப்பதிவேடு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ, அவர் எளிதான முறையில் விசாரணைக் குள்ளாக்கப்படுவார்” என்றல்லவா அல்லாஹ் (84:8ஆவது வசனத்தில்) கூறுகின்றான்? என்று நான் கேட்டேன்.

 

நபியவர்கள், ( ذَاكَ الْعَرْضُ يُعْرَضُونَ، وَمَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ  ) ‘‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ, அவர் அழிந்தார்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4939, முஸ்லிம்-5514, திர்மிதீ-2350

 

தலைப்பில் காணும் திருவசனத்தின் விளக்கம் என்னவென்றால், அவர்கள் புரிந்த நன்மை - தீமைகள் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டுத் துருவி ஆராயாமல் விடப்படும். எனவே, அவர்களின் விசாரணை சுலபமாக முடிந்துவிடும். எவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துருவித் துருவி கணக்கு வாங்கப்படுவாரோ அவர் நிலை திண்டாட்டம் தான்.

 

உன்னை மறந்துவிடுகிறேன்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமைநாளில்) இறைவன் அடியானைச் சந்தித்து, ( أَىْ فُلْ أَلَمْ أُكْرِمْكَ وَأُسَوِّدْكَ وَأُزَوِّجْكَ وَأُسَخِّرْ لَكَ الْخَيْلَ وَالإِبِلَ وَأَذَرْكَ تَرْأَسُ وَتَرْبَعُ ) "இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த் தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?" என்று கேட்பான்.

 

அதற்கு அந்த அடியான், "ஆம்" என்பான். இறைவன், ( أَفَظَنَنْتَ أَنَّكَ مُلاَقِيَّ ) "நீ என்னை சந்திப்பாய் என எண்ணினாயா?" என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். இறைவன், ( فَإِنِّي أَنْسَاكَ كَمَا نَسِيتَنِي ) "அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்து விடுகிறேன்" என்பான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்லிம்-5678, அத்தவ்ஹீத் இமாம் இப்னு குஸைமா, இப்னு அபீ ஷைபா

 

"இன்று நானும் உன்னை மறக்கிறேன்" என்பதற்கு, ( اَلْيَومَ اَتْرُكُكَ فِي الْعَذَابِ ) "இன்று உன்னை நான் வேதனையில் விட்டுவிடுகிறேன்" என்று பொருள். இவ்வாறு இதற்கு அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

அறிஞர்களில் சிலர், "அவ்வாறே இன்று அவர்களை நாம் மறந்துவிடுவோம்" எனும் (7:51ஆவது) வசனத் தொடருக்கு, "இன்று நாம் அவர்களை வேதனையில் (தத்தளிக்குமாறு) விட்டு விடுவோம்" என்பதே பொருளாகும் என விளக்கம் அளித்துள்ளனர். நூல்:- திர்மிதீ-2352

 

வாய்க்கு முத்திரையிடப்படும்

 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (மறுமைநாளில்) இறைமறுப்பாளரும், நயவஞ்சகரும் விசாரணைக்காக அழைக்கப்படுவர். அப்போது அவருடைய இறைவன் அவருடைய வினைகளை எடுத்துக்காட்டுவான். அவர், (أَيْ رَبِّ، وَعَزَّتِكَ لَقَدْ كَتَبَ عَلَيَّ هَذَا الْمَلَكُ مَا لَمْ أَعْمَلْ ) "என் இறைவா! உனது கண்ணியத்தின் மீதாணையாக! இந்த வானவர் நான் செய்யாதவற்றை எனக்கெதிராக பதிவு செய்துவிட்டார்" என்று கூறி அவற்றை மறுப்பார்.

 

அப்போது அவரிடம் அந்த வானவர், ( أَمَا عَمِلْتَ كَذَا، فِي يَوْمِ كَذَا، فِي مَكَانِ كَذَا؟ ) "நீ இன்ன நாளில் இன்ன இடத்தில் இன்ன செயலைச் செய்யவில்லையா?" என்று கேட்பார். அதற்கு அவர், ( لَا وَعِزَّتِكَ أيْ رَبِّ مَا عملتُه ) "இல்லை; என் இறைவா! உனது கண்ணியத்தின் மீதாணையாக! நான் அதைச் செய்யவில்லை" என்பார். இவ்வாறு அவர் நடந்துகொள்ளும்போது அவரது வாய்க்கு அல்லாஹ் முத்திரையிடுவான்.

 

இப்படி கூறிய அபூமூசா (ரலி) அவர்கள் அதைத்தொடர்ந்து, ( فَإِنِّي أَحْسَبُ أَوَّلَ مَا يَنْطِقُ مِنْهُ الْفَخِذُ ) "அந்த மனிதரின் உறுப்புகளில் முதன் முதலில் (அவருக்கெதிராகப்) பேசும் உறுப்பு நிச்சயமாக அவரது வலப்புற தொடையாகவே இருக்கும் என கருதுகிறேன் என்று கூறினார்கள்.

 

பின்னர், "அவர்களின் வாய்களுக்கு இன்று நாம் முத்திரையிடுவோம். அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் தேடிக்கொண்டிருந்த (தீய)வை பற்றி அவர்களின் கால்கள் சாட்சியமளிக்கும்" (36:65) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நூல்:- தஃப்சீர் அத்தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் யாசீன் வசனம்-65

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமைநாளில்) அடியான் (தன் இறைவனிடம்), ( يَا رَبِّ أَلَمْ تُجِرْنِي مِنَ الظُّلْمِ ) "என் இறைவா! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா?" என்று கேட்பான்.

 

அதற்கு இறைவன், "ஆம்" என்பான். அடியான், ( فَإِنِّي لاَ أُجِيزُ عَلَى نَفْسِي إِلاَّ شَاهِدًا مِنِّي ) "அவ்வாறாயின், எனக்கெதிராக (சாட்சியம் கூற) என்னிலிருந்து தவிர வேறெந்த சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன்" என்று கூறுவான்.

 

அதற்கு இறைவன், ( كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ شَهِيدًا وَبِالْكِرَامِ الْكَاتِبِينَ شُهُودًا ) "இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர்(களான வானவர்)களுமே போதும்" என்பான். பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனுடைய உறுப்புகளிடம், "பேசுங்கள்" என்று சொல்லப்படும். உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும்.

 

பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும். அப்போது அந்த அடியான், ( بُعْدًا لَكُنَّ وَسُحْقًا ‏ فَعَنْكُنَّ كُنْتُ أُنَاضِلُ ) "உங்களுக்கு நாசமுண்டாகட்டும்! தொலைந்துபோங்கள். உங்களுக்காகத் தானே நான் (இவ்வளவு நேரம் இறைவனிடம்) வழக்காடினேன்" என்று (தன் உறுப்புகளிடம்) சொல்வான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5679

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் ஆகியோர் சந்திக்கும் நிலையாகும்.

 

அவர்கள் இவ்வுலகில் இழைத்த குற்றங்களை மறுத்து, தாம் அவற்றைச் செய்யவே இல்லை என்று (மறுமைநாளில்) சத்தியம் செய்வார்கள். வானவர்கள்மீது வீண்பழி சுமத்துவார்கள். அப்போது அவர்களின் வாய்களுக்கு அல்லாஹ் முத்திரையிடுவான். அவர்களின் உறுப்புக்கள் செய்தவற்றை, அந்த உறுப்புகளையே சொல்ல வைப்பான்.

 

சாக்குப் போக்குகள் வெல்லாது

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلاَثَ عَرَضَاتٍ فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الْعَرْضَةُ الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ ) மறுமை நாளில் மக்கள் (விசாரணைக்காக அல்லாஹ்விற்கு முன்னால்) மூன்று கட்டங்களில் முன்னிறுத்தப்படுவார்கள். முதல் இரண்டு கட்டங்கள் வாக்குவாதமும் சாக்குப் போக்குகளாகவுமே இருக்கும். மூன்றாவது கட்டத்தில் வினைப்பதிவேடுகள் அவர்களின் கைகளை நோக்கிப் பறந்து வரும். தம் வலக் கையால் பதிவேட்டை பிடிப்பவரும் இருப்பர்; தம் இடக் கையால் பிடிப்பவரும் இருப்பர். அறிவிப்பாளர்:- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2349, இப்னுமாஜா-4267, முஸ்னது அஹ்மத்

 

மறுமைநாளில் மூன்று கட்டங்களாக மனிதர்களிடம் விசாரணை நடைபெறும். முதல்முறை மனிதர்கள் மறுக்கும் உத்தியைக் கையாள்வார்கள். இறைத்தூதர்கள் யாரும் எங்களுக்கு வரவில்லை; எனவே, எங்களுக்கு ஒன்றும் தெரியாது என அல்லாஹ்வின்மீதே குற்றம் சாட்டப்பார்ப்பார்கள்.

 

அடுத்த கட்டத்தில், வேறு வழியின்றி தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்வார்கள்; ஆனால், அவற்றையெல்லாம் அறியாமையிலோ தவறுதலாகவோ செய்துவிட்டதாக சாதிக்கப்பார்ப்பார்கள்.

 

உடனே மூன்றாவது கட்டமாக, அவர்களின் வினைப்பதிவேடுகள் பறந்து வந்து அவர்களின் கைகளை எட்டும். தாங்கள் அறியாமலேயே சிலர் வலக் கையிலும் சிலர் இடக் கையிலும் வினை பதிவுகளைப் பிடித்துக்கொள்வார்கள். வலக் கையில் பிடிப்போர் நற்பெயர் பெற்றவர்கள்; இடக் கையில் பிடிப்போர் துர்பேறு பெற்றவர்கள் ஆவர். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

தனித்தனியாக

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ ) அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். அறிவிப்பாளர்:- அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்:- முஸ்லிம்-1846

 

அல்லாஹுத்தஆலா நமக்கு மறுமை நாளில் விசாரணையை இலேசாக்கி, வலக் கையில் பதிவேட்டை வழங்கி கண்ணியப்படுத்துவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951


வானவர்களின் பிரார்த்தனை

  வானவர்களின் பிரார்த்தனை   وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ வானவர்கள் (பயந்து)...