Search This Blog

Monday, 31 August 2026

விசாரிக்கப்படுவோம்

 

விசாரிக்கப்படுவோம்

 

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

தனது வினைப் பதிவேட்டை வலக்கரத்தில் வழங்கப்பெற்றவர், விரைவில் இலகுவான கேள்வி கேட்கப்படுவார். திருக்குர்ஆன்:- 84:7,8

 

ஓர் முஸ்லிம், அல்லாஹுத்தஆலாவை நம்புவதைப் போல், மறுமை நாளையும் அதில் நடைபெற இருக்கும் நிகழ்வுகளை நம்பவேண்டும். குறிப்பாக, விசாரணை மன்றத்தில் அவன் தமது வாழ்நாளில் செய்த நன்மை - தீமை என அனைத்தை பற்றியும் விசாரிக்கப்படுவான்.

 

ஓர் இறைநம்பிக்கையாளன் இலகுவான முறையில் விசாரிக்கப்படுவதைப் போன்று, ஓர் இறைமறுப்பாளன்  விசாரிக்கப்படமாட்டான். அவனுக்குரிய விசாரணை மிகவும் கடுமையாக இருக்கும்.

 

மறுமைநாளில் மனிதர்களது நிலையைப் பொறுத்து விசாரணையின் கால அளவு குறுகியதாகவோ, மிக நீண்டதாகவோ, இலகுவானதாகவோ, கடினமானதாகவோ அமையும். செயற்பதிவேடுகள் காட்டப்படுவது தவிர்ந்து வேறெந்த விசாரணையும் இல்லாமலே சுவர்க்கம் செல்வோருமிருப்பர். நீண்ட நெடுங்காலம் விசாரணைக்காக நின்று அல்லல் படுவோரும் அங்கிருப்பர்.

 

மறைத்துவிடுவான்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் இறைநம்பிக்கையாளரை தன் பக்கம் நெருங்கச்செய்து, அவர்மீது தன் திரையைப் போட்டு அவரை மறைத்துவிடுவான். பிறகு அவரை நோக்கி, (  أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا ) ‘‘நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்பான். அதற்கு அவர், “ஆம், என் இறைவா!” என்று கூறுவார். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக்கூறி) அவர் (தாம் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக்கொள்ளச் செய்வான்.

 

அந்த இறைநம்பிக்கையாளர், ( أَنَّهُ هَلَكَ ) “நாம் இத்தோடு ஒழிந்தோம்” என்று தம்மைப் பற்றிக் கருதிக்கொண்டிருக்கும்போது இறைவன், ( سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا، وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ‏ ) “இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்” என்று கூறுவான். அப்போது அவரது நற்செயல்களின் பதிவேடு அவரிடம் கொடுக்கப்படும். நூல்:- புகாரீ-2441

 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர் விசாரணைக்காக அழைக்கப்படுவார். அப்போது அவருடைய இறைவன் அவருடைய வினைப் பதிவுகளை அவருக்கும் தனக்கும் மட்டும் தெரிகின்ற வகையில் எடுத்துக்காட்டுவான்.

 

அவர் ஆம்! என் இறைவா! நான் செய்தேன்; நான் செய்தேன்; நான் செய்தேன்; என்று கூறி, ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்.

 

எனவே, அவருடைய பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னித்து, அவரைவிட்டு மறைப்பான். அதையடுத்து பூமியிலுள்ள எந்த உயிரும் அவருடைய பாவங்களில் ஒன்றைக்கூட காணமுடியாது. அவருடைய நன்மைகள் (மட்டுமே) வெளியே தெரியும். மக்கள் அனைவரும் அந்த நன்மைகளையே காண வேண்டும் என அல்லாஹ் விரும்புவான். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் யாசீன் வசனம்-65

 

இலகுவான விசாரணை

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சில தொழுகைகளில், ( اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا ) "இறைவா! இலகுவான முறையில் என்னை விசாரிப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள். அவர்கள் தொழுகை முடித்தவுடன், ( مَا الْحِسَابُ الْيَسِيرُ؟ )  "(நாயகமே!) இலகுவான விசாரணை என்றால் என்ன?" என்று வினவினேன்.

 

நபியவர்கள், ( أَنْ يَنْظُرَ فِي كِتَابِهِ فَيَتَجَاوَزُ لَهُ عَنْهُ، إِنَّهُ مَنْ نُوِقش الحسابَ يَا عائشةُ يَوْمَئِذٍ هَلَكَ ) "(மறுமைநாளில், அல்லாஹ்) ஒருவனின் வினைப் பதிவேடை பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவான். ஆயிஷா! அன்று யார் துருவித் துருவி விசாரிக்கப்படுகிறாரோ, அவர் அழிந்தார்" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னு குஸைமா, ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ إِلاَّ هَلَكَ ) ‘‘(மறுமை நாளில்) விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று சொன்னார்கள்.

 

“எவரது வினைப்பதிவேடு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ, அவர் எளிதான முறையில் விசாரணைக் குள்ளாக்கப்படுவார்” என்றல்லவா அல்லாஹ் (84:8ஆவது வசனத்தில்) கூறுகின்றான்? என்று நான் கேட்டேன்.

 

நபியவர்கள், ( ذَاكَ الْعَرْضُ يُعْرَضُونَ، وَمَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ  ) ‘‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது யார் துருவித் துருவி விசாரிக்கப்படுவாரோ, அவர் அழிந்தார்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-4939, முஸ்லிம்-5514, திர்மிதீ-2350

 

தலைப்பில் காணும் திருவசனத்தின் விளக்கம் என்னவென்றால், அவர்கள் புரிந்த நன்மை - தீமைகள் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டுத் துருவி ஆராயாமல் விடப்படும். எனவே, அவர்களின் விசாரணை சுலபமாக முடிந்துவிடும். எவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துருவித் துருவி கணக்கு வாங்கப்படுவாரோ அவர் நிலை திண்டாட்டம் தான்.

 

உன்னை மறந்துவிடுகிறேன்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமைநாளில்) இறைவன் அடியானைச் சந்தித்து, ( أَىْ فُلْ أَلَمْ أُكْرِمْكَ وَأُسَوِّدْكَ وَأُزَوِّجْكَ وَأُسَخِّرْ لَكَ الْخَيْلَ وَالإِبِلَ وَأَذَرْكَ تَرْأَسُ وَتَرْبَعُ ) "இன்ன மனிதனே! உன்னைக் கண்ணியப்படுத்தி, உன்னைத் தலைவனாக்கி, உனக்கு(த் தகுந்த) துணையையும் நான் வழங்கவில்லையா? குதிரைகளையும் ஒட்டகங்களையும் நான் உன் வசப்படுத்தவில்லையா? உன்னை (செல்வாக்குள்ள) தலைவனாக்கிப் போர் செல்வத்தில் நான்கில் ஒரு பகுதியை உனக்கு உரிமையாக்கவில்லையா?" என்று கேட்பான்.

 

அதற்கு அந்த அடியான், "ஆம்" என்பான். இறைவன், ( أَفَظَنَنْتَ أَنَّكَ مُلاَقِيَّ ) "நீ என்னை சந்திப்பாய் என எண்ணினாயா?" என்று கேட்பான். அதற்கு அந்த அடியான், "இல்லை" என்பான். இறைவன், ( فَإِنِّي أَنْسَاكَ كَمَا نَسِيتَنِي ) "அவ்வாறாயின், நீ என்னை மறந்ததைப் போன்றே நானும் உன்னை மறந்து விடுகிறேன்" என்பான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- முஸ்லிம்-5678, அத்தவ்ஹீத் இமாம் இப்னு குஸைமா, இப்னு அபீ ஷைபா

 

"இன்று நானும் உன்னை மறக்கிறேன்" என்பதற்கு, ( اَلْيَومَ اَتْرُكُكَ فِي الْعَذَابِ ) "இன்று உன்னை நான் வேதனையில் விட்டுவிடுகிறேன்" என்று பொருள். இவ்வாறு இதற்கு அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

அறிஞர்களில் சிலர், "அவ்வாறே இன்று அவர்களை நாம் மறந்துவிடுவோம்" எனும் (7:51ஆவது) வசனத் தொடருக்கு, "இன்று நாம் அவர்களை வேதனையில் (தத்தளிக்குமாறு) விட்டு விடுவோம்" என்பதே பொருளாகும் என விளக்கம் அளித்துள்ளனர். நூல்:- திர்மிதீ-2352

 

வாய்க்கு முத்திரையிடப்படும்

 

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (மறுமைநாளில்) இறைமறுப்பாளரும், நயவஞ்சகரும் விசாரணைக்காக அழைக்கப்படுவர். அப்போது அவருடைய இறைவன் அவருடைய வினைகளை எடுத்துக்காட்டுவான். அவர், (أَيْ رَبِّ، وَعَزَّتِكَ لَقَدْ كَتَبَ عَلَيَّ هَذَا الْمَلَكُ مَا لَمْ أَعْمَلْ ) "என் இறைவா! உனது கண்ணியத்தின் மீதாணையாக! இந்த வானவர் நான் செய்யாதவற்றை எனக்கெதிராக பதிவு செய்துவிட்டார்" என்று கூறி அவற்றை மறுப்பார்.

 

அப்போது அவரிடம் அந்த வானவர், ( أَمَا عَمِلْتَ كَذَا، فِي يَوْمِ كَذَا، فِي مَكَانِ كَذَا؟ ) "நீ இன்ன நாளில் இன்ன இடத்தில் இன்ன செயலைச் செய்யவில்லையா?" என்று கேட்பார். அதற்கு அவர், ( لَا وَعِزَّتِكَ أيْ رَبِّ مَا عملتُه ) "இல்லை; என் இறைவா! உனது கண்ணியத்தின் மீதாணையாக! நான் அதைச் செய்யவில்லை" என்பார். இவ்வாறு அவர் நடந்துகொள்ளும்போது அவரது வாய்க்கு அல்லாஹ் முத்திரையிடுவான்.

 

இப்படி கூறிய அபூமூசா (ரலி) அவர்கள் அதைத்தொடர்ந்து, ( فَإِنِّي أَحْسَبُ أَوَّلَ مَا يَنْطِقُ مِنْهُ الْفَخِذُ ) "அந்த மனிதரின் உறுப்புகளில் முதன் முதலில் (அவருக்கெதிராகப்) பேசும் உறுப்பு நிச்சயமாக அவரது வலப்புற தொடையாகவே இருக்கும் என கருதுகிறேன் என்று கூறினார்கள்.

 

பின்னர், "அவர்களின் வாய்களுக்கு இன்று நாம் முத்திரையிடுவோம். அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் தேடிக்கொண்டிருந்த (தீய)வை பற்றி அவர்களின் கால்கள் சாட்சியமளிக்கும்" (36:65) எனும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். நூல்:- தஃப்சீர் அத்தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் யாசீன் வசனம்-65

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமைநாளில்) அடியான் (தன் இறைவனிடம்), ( يَا رَبِّ أَلَمْ تُجِرْنِي مِنَ الظُّلْمِ ) "என் இறைவா! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா?" என்று கேட்பான்.

 

அதற்கு இறைவன், "ஆம்" என்பான். அடியான், ( فَإِنِّي لاَ أُجِيزُ عَلَى نَفْسِي إِلاَّ شَاهِدًا مِنِّي ) "அவ்வாறாயின், எனக்கெதிராக (சாட்சியம் கூற) என்னிலிருந்து தவிர வேறெந்த சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன்" என்று கூறுவான்.

 

அதற்கு இறைவன், ( كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ شَهِيدًا وَبِالْكِرَامِ الْكَاتِبِينَ شُهُودًا ) "இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர்(களான வானவர்)களுமே போதும்" என்பான். பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப்படும். அவனுடைய உறுப்புகளிடம், "பேசுங்கள்" என்று சொல்லப்படும். உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும்.

 

பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும். அப்போது அந்த அடியான், ( بُعْدًا لَكُنَّ وَسُحْقًا ‏ فَعَنْكُنَّ كُنْتُ أُنَاضِلُ ) "உங்களுக்கு நாசமுண்டாகட்டும்! தொலைந்துபோங்கள். உங்களுக்காகத் தானே நான் (இவ்வளவு நேரம் இறைவனிடம்) வழக்காடினேன்" என்று (தன் உறுப்புகளிடம்) சொல்வான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5679

 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் ஆகியோர் சந்திக்கும் நிலையாகும்.

 

அவர்கள் இவ்வுலகில் இழைத்த குற்றங்களை மறுத்து, தாம் அவற்றைச் செய்யவே இல்லை என்று (மறுமைநாளில்) சத்தியம் செய்வார்கள். வானவர்கள்மீது வீண்பழி சுமத்துவார்கள். அப்போது அவர்களின் வாய்களுக்கு அல்லாஹ் முத்திரையிடுவான். அவர்களின் உறுப்புக்கள் செய்தவற்றை, அந்த உறுப்புகளையே சொல்ல வைப்பான்.

 

சாக்குப் போக்குகள் வெல்லாது

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلاَثَ عَرَضَاتٍ فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الْعَرْضَةُ الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ ) மறுமை நாளில் மக்கள் (விசாரணைக்காக அல்லாஹ்விற்கு முன்னால்) மூன்று கட்டங்களில் முன்னிறுத்தப்படுவார்கள். முதல் இரண்டு கட்டங்கள் வாக்குவாதமும் சாக்குப் போக்குகளாகவுமே இருக்கும். மூன்றாவது கட்டத்தில் வினைப்பதிவேடுகள் அவர்களின் கைகளை நோக்கிப் பறந்து வரும். தம் வலக் கையால் பதிவேட்டை பிடிப்பவரும் இருப்பர்; தம் இடக் கையால் பிடிப்பவரும் இருப்பர். அறிவிப்பாளர்:- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2349, இப்னுமாஜா-4267, முஸ்னது அஹ்மத்

 

மறுமைநாளில் மூன்று கட்டங்களாக மனிதர்களிடம் விசாரணை நடைபெறும். முதல்முறை மனிதர்கள் மறுக்கும் உத்தியைக் கையாள்வார்கள். இறைத்தூதர்கள் யாரும் எங்களுக்கு வரவில்லை; எனவே, எங்களுக்கு ஒன்றும் தெரியாது என அல்லாஹ்வின்மீதே குற்றம் சாட்டப்பார்ப்பார்கள்.

 

அடுத்த கட்டத்தில், வேறு வழியின்றி தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்வார்கள்; ஆனால், அவற்றையெல்லாம் அறியாமையிலோ தவறுதலாகவோ செய்துவிட்டதாக சாதிக்கப்பார்ப்பார்கள்.

 

உடனே மூன்றாவது கட்டமாக, அவர்களின் வினைப்பதிவேடுகள் பறந்து வந்து அவர்களின் கைகளை எட்டும். தாங்கள் அறியாமலேயே சிலர் வலக் கையிலும் சிலர் இடக் கையிலும் வினை பதிவுகளைப் பிடித்துக்கொள்வார்கள். வலக் கையில் பிடிப்போர் நற்பெயர் பெற்றவர்கள்; இடக் கையில் பிடிப்போர் துர்பேறு பெற்றவர்கள் ஆவர். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

தனித்தனியாக

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ اللهُ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ ) அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்விற்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். அறிவிப்பாளர்:- அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்:- முஸ்லிம்-1846

 

அல்லாஹுத்தஆலா நமக்கு மறுமை நாளில் விசாரணையை இலேசாக்கி, வலக் கையில் பதிவேட்டை வழங்கி கண்ணியப்படுத்துவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951


Sunday, 30 August 2026

ஞானமுள்ளவர்

 

ஞானமுள்ளவர்

يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ

உங்களில் இறைநம்பிக்கை கொண்டோருக்கும், கல்வியறிவு வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். திருக்குர்ஆன்:- 58:11

 

வணக்க வழிபாடு புரிதல் படைப்பினங்களின் தன்மையாகும். அது, இறைவனின் தன்மை அல்ல. ஆனால் ஞானம் என்பது அல்லாஹ்வின் உயர்ந்த தன்மையாகும். எனவேதான், சில நேரங்களில் வணக்க வழிபாடுகளைவிட இறைஞானத்தை கற்றுக்கொள்வது உயர்வானது என்றும் இறைஞானமுள்ளவர்கள் உயர்ந்தவர்கள் என்றும் இஸ்லாம் இயம்புகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ ) ஒரு வணக்கசாலியைவிட மார்க்க அறிஞருக்கு இருக்கும் சிறப்பானது, (வானிலுள்ள) ஏனைய நட்சத்திரங்களைவிட பௌர்ணமி இரவில் சந்திரனுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். அறிவிப்பாளர்:- கஸீர் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3157, திர்மிதீ-2606, இப்னுமாஜா-219, முஸ்னது அஹ்மத், தாரிமீ-346

 

பிற உயிரினங்களின் பிரார்த்தணை 

 

அபூ உமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரு மனிதர்களைப் பற்றி பேசப்பட்டது. அவர்களில் ஒருவர் கல்வியாளர் ஆவார். மற்றொருவர் வணக்கசாலி ஆவார்.

 

அப்போது நபியவர்கள், ( فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ) "ஒரு வணக்கசாலியைவிட கல்வியாளருக்குள்ள சிறப்பு, உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட (இறைத்தூதராகிய) எனக்குள்ள சிறப்புப் போன்றதாகும்" என்று கூறிவிட்டு, ( إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ ) அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் (தண்ணீரில் வாழும்) மீன்கள் உட்பட அனைத்தும், மக்களுக்கு நல்லதை கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றன" என்று கூறினார்கள். நூல்:-  திர்மிதீ-2606

 

வழிபாட்டின் பயன் தன்னோடு முற்றுப்பெற்றுவிடும். கல்வி, அதை போதிப்பதால் ஏற்படும் பயன் பிறருக்கும் நன்மை தரும். எனவேதான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறப்பே ஓர் அறிஞரின் சிறப்புக்கு உவமானமாகும்.

 

மார்க்க அறிஞருடைய கல்வியின் மூலம் மனிதர்கள் பயன்பெறுவது உண்மை. ஆனால், மற்ற உயிரினங்கள் எவ்வாறு பயன்பெறுகிறதென்றால், மற்ற உயிரினங்களிடம் எவ்வாறு வேலை வாங்க வேண்டும். எவ்வளவு வேலை வாங்க வேண்டும். அவைகளுக்கு எவ்வளவு ஓய்வு தர வேண்டும். எந்தளவுக்கு இரை போட வேண்டும். எப்படி பராமரிக்க வேண்டும். அவைகளை புசிப்பதாக இருந்தால் எவ்வாறு அறுக்க வேண்டும் என்பது குறித்த நபிமொழிகளையும், சட்டங்களையும் மார்க்க அறிஞர்கள் மக்களுக்கு போதிக்கிறார்கள். அதனால், அந்தப் பயனை அந்த உயிரினங்கள் பெறுகின்றன. எனவே, அவைகள் மார்க்க அறிஞர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றன என்று விளக்கம் சொல்லப்படுகிறது.

 

ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( عَالِمٌ عَامِلٌ مُعَلَّمٌ يُدْعَي كَبِيرًا فِي مَلَكُوتِ السَّمَاوَاتِ ) மார்க்க அறிவைப் பெற்று, அதன்படிச் செயலாற்றி, அதைப் பிறருக்கு போதிக்கும் அறிஞரை, மாமனிதர் (பெருமைக்குரியவர்) என்று வானவர்கள் அழைக்கிறார்கள். நூல்:- தஃப்சீர் இப்னுல் கய்யிம் அல்முஜாதலா வசனம் -11

 

ஷைத்தானின் பகைவர்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَقِيهٌ أَشَدُّ عَلَى الشَّيْطَانِ مِنْ أَلْفِ عَابِدٍ ) ஒரு மார்க்க அறிஞர் ஆயிரம் வணக்கசாலிகளைவிட ஷைத்தானுக்கு மிகவும் கடுமையான (பகை)வர் ஆவார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2602, இப்னுமாஜா-218

 

ஓர் மார்க்க அறிஞர் குர்ஆன், ஹதீஸ் மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட மார்க்கச் சட்டங்களையும் மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் புரிந்து வைத்திருப்பவராவார். இவர் நல்லவற்றை மட்டுமே போதிப்பார். எனவே, இவர் ஷைத்தானின் துர்போதனைகளையும் கெட்ட நடத்தைகான தூண்டலையும் அறிந்து தடுத்துவிடுவார். எனவே, இவர் எப்போதும் ஷைத்தானின் எதிரியாவார். மார்க்கக் கல்வியை கற்றவர் ஒருவர், இறைவழிபாட்டை சரியாக செய்வதுடன் ஷைத்தானிடம் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்வதையும் நன்கு அறிந்தவராவார்.

 

மார்க்க அறிவை நிறைவாக பெறாத வணக்கசாலி அவரின் இறைவழிபாட்டில் குறை இருக்கக்கூடும். பல நேரங்களில் ஷைத்தானின் சூழ்ச்சி புரியாமல் அவன் பக்கம் விழுந்துவிடுவார்.

 

சமத்துவம் இல்லை

 

அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே! திருக்குர்ஆன்:- 39:9

 

தபூக் போர்க்களத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ மாலிக் பின் அந்நஜ்ஜாரின் கொடியை உம்மாரா பின் ஹஸ்ம் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். பின்னர் நபியவர்கள் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களைச் சந்தித்தார்கள். அதன் பிறகு அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடமிருந்து அந்தக் கொடியை வாங்கி ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். இப்போது கொடியை பறிகொடுத்த உம்மாரா (ரலி) அவர்கள் நபியவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ، لَعَلَّك وَجَدْتَ عَلَىَّ ) “அல்லாஹ்வின் தூதரே! (ஒருவேளை) என்மீது உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டதோ! (என்னிடமிருந்து கொடியை வாங்கி மற்றொருவரிடம் கொடுத்துவிட்டீர்கள்? நான் ஏதாவது தவறு செய்துவிட்டேனா?)" என்று கேட்டார்.

 

நபியவர்கள், ( لَا وَاَللَّهِ، وَلَكِنْ قَدِّمُوا الْقُرْانَ، وَكَانَ أَكْثَرَ أَخْذًا لِلْقُرْانِ مِنْكَ؛ وَالْقُرْانُ يُقَدَّمُ، وَإِنْ كَانَ عَبْدًا أَسْوَدَ مُجَدَّعًا ) "இல்லை, (நீர் எந்த தவறும் செய்யவில்லை.) அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனுக்கே முன்னுரிமை கொடுங்கள். எனவே, உம்மைவிட அவர் குர்ஆனை அதிகமாக மனனம் செய்துள்ளார்; மேலும், (குர்ஆனில் தேர்ச்சிப் பெற்ற) அவர் ஒரு கறுப்பான, (உடலுறுப்பு) சிதைக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே, குர்ஆனு(டைய அவரு)க்கே முன்னுரிமை உண்டு. (குர்ஆனுடையவர்கள் மற்றவர்களைவிட முற்படுத்தப்பட வேண்டும்)" என்று பதிலளித்தார்கள். நூல்:- அல்மஙாஸீ ( اَلْمَغَازِي لِلْوَاقِدِيّ ) இமாம் வாகிதீ

 

அந்தக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்தது. போர்க்கொடி பிடிப்பதாக இருந்தாலும், ஒரு படைக்கு தளபதியாக நியமிக்கப்படுவதாக இருந்தாலும், ஒரு குழுவிற்கு தொழ வைப்பதாக இருந்தாலும் குர்ஆனை அதிகமாக மனனம் செய்திருப்பவர் யாரோ அவருக்கே முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த அடிப்படையில் நிறைய அத்தியாயங்களை மனப்பாடம் செய்து அதை அழகிய முறையில் ஓதக்கூடிய ஒருவராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கையில் கொடி கொடுக்கப்பட்டது.

 

நிறம், இனம், மொழி என பேதமின்றி உலக மாந்தர்கள் அனைவரும் சமம் என்று பேசுகின்ற இஸ்லாம், கல்வியாளர்கள் விஷயத்தில் இவ்வாறான சமத்துவம் இல்லை என்றும் கல்வியாளர்கள் உயர்ந்தவர்கள். மற்றவர்கள் அவர்களுக்கு சமமாக முடியாது என்றும் இயம்புகிறது.

 

தொழுகையின் முதல் வரிசையில்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لِيَلِيَنِّي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ) உங்கள் அறிவில் சிறந்தோர் எனக்கு பின்னால் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பின்னர் அவர்களுக்கு அடுத்த (தகுதி உள்ள)வர்களும், பின்னர் அவர்களுக்கு அடுத்த (தகுதி உள்ள)வர்களும் நிற்கட்டும். அறிவிப்பாளர்:- அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நூல்:- நஸாயீ-798

 

கைஸ் பின் உபாத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (மதீனாவில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் முன் வரிசையில் இருந்தபோது, என்னை பின்னாலிருந்து ஒருவர் கடுமையாக இழுத்து, அந்த இடத்தைவிட்டு அகற்றினார். நான் நின்றிருந்த இடத்தில் அவர் வந்து நின்றுகொண்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையில் இருந்ததால் அவர் யாரென்று நான் அறியவில்லை. தொழுது முடித்து திரும்பியபோது அவரோ (கற்றறிந்த மூதறிஞர்) உபை பின் கஅப் (ரலி) அவர்கள் ஆவார்.

 

அவர்கள் (என்னை நோக்கி), ( يَا فَتَى لاَ يَسُؤْكَ اللَّهُ إِنَّ هَذَا عَهْدٌ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلَيْنَا أَنْ نَلِيَهُ ) "இளைஞரே! தீய எண்ணம் கொள்வதிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பாற்றுவானாக! (நான் உன்னிடம் அவ்வாறு நடந்து கொண்டது,) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், நாங்கள் அவர்கள் அருகில் (தொழுகையில்) அடுத்து இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொண்ட ஒப்பந்தமாகும் இது" என்று கூறினார்கள். நூல்:- நஸாயீ-799

 

சட்டமேதைகளில் ஒருவரான இமாம் ஷம்ஸுல் அயிம்மா சர்கஸி (ரஹ்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் இந்த நடவடிக்கையை சரி காணும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஏனெனில், தொழுகையில் இமாமுக்கு ஏதாவது தவறு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு பிரதிநிதியாக தொழுகை விரிப்புக்கு போய் நின்று தொழுகையை நடத்தி கொடுப்பதற்குத் தகுதி இல்லாதவர்கள் முன் வரிசையில் இடம் பிடித்துக்கொள்வதும், தகுதியுள்ளவர்கள் பிந்தி வந்தாலும் அவர்களுக்கு வழி விட்டுக்கொடுக்காமல் பிடிவாதம் செய்வதும் முறையல்ல.

 

சிறந்த வள்ளல்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( هَلْ تَدْرُونَ مَنْ أَجْوَدُ جُودًا ؟ ) “அதிகமான கொடைகுணம் கொண்ட வள்ளல் யார் என உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், "இறைவனும் இறைதூதரும் தான் நன்கு அறிவார்கள்" என்றனர்.

 

நபியவர்கள், ( اللَّهُ أَجْوَدُ جُودًا ، ثُمَّ أَنَا أَجْوَدُ بَنِي آدَمَ ، وَأَجْوَدُهُمْ مِنْ بَعْدِي رَجُلٌ عَلِمَ عِلْمًا فَنَشَرَهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ أَمِيرًا وَحْدَهُ أَوْ قَالَ : أَمَّةً وَاحِدَةً ) “கொடைகுணம் கொண்ட வள்ளல்களில் இறைவன் தான் மிகப்பெரிய வள்ளல் ஆவான். அடுத்து மனிதர்களில் நான் தான் அனைவரையும்விட மிக அதிகமாகக் கொடை குணம் கொண்ட வள்ளல் ஆவேன். கல்வி கற்று அதைப் பரப்புவோர் தான் (மற்றவர்களுக்கு கற்பிப்பவர் தான்) எனக்குப் பிறகு மனிதர்களில் அனைவரையும்விட மிகச் சிறந்த வள்ளல் ஆவார். அவர் மறுமைநாளில் ஒரு தலைவனின் தகுதிநிலையோடு வருவார். அல்லது அவர் (மறுமைநாளில் சுயமாக) ஒரு முழு சமுதாயத்தின் தகுதிநிலையுடன் வருவார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ

 

உலக வளங்களில் தலைசிறந்த அருள்வளம் மார்க்க அறிவு தான். அந்த மார்க்க அறிவை மனத்தூய்மையுடன் பிறருக்கு வழங்குபவர் தான் சிறந்த வள்ளலாக இருக்க முடியும் என்கிறது இந்த நபிமொழி.

 

நேரடியாக சொர்க்கம்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَبْعَثُ اللهُ الْعِبَادَ يَوْمَ الْقِيَامَةِ ، ثُمَّ يُمَيِّزُ الْعُلَمَاءَ ، فَيَقُولُ : يَا مَعْشَرَ الْعُلَمَاءِ ، إِنِّي لَمْ أَضَعْ فِيكُمْ عِلْمِي وَأَنَا أُرِيدُ أَنْ أُعَذِّبَكُمُ ، اذْهَبُوا فَقَدْ غَفَرْتُ لَكُمْ )  அல்லாஹுதஆலா மறுமைநாளில் அடியார்களை எழுப்புவான். பின்பு (அவர்களில்) மார்க்க அறிஞர்களை தனியாகப் பிரிப்பான். அப்போது அல்லாஹ், “மார்க்க அறிஞர்களே! உங்களை வேதனைப்படுத்துவதற்காக உங்களுக்கு எனது கல்வியை கொடுக்கவில்லை. செல்லுங்கள் உங்களை நான் மன்னித்துவிட்டேன்” என்று கூறுவான். அறிவிப்பாளர்:- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) நூல்:- அல்கபீர் இமாம் தப்ரானீ, அஸ்ஸில்ஸிலத்துல் ளஈஃபா-868

 

மார்க்கக் கல்வியைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, அதன்படி முறையாக வாழ்ந்து முடித்தவருக்கே இந்த நபிமொழியின் சுபச்செய்தி பொருந்தும்.

 

மறுமையில் பரிந்துரை

 

அவனை விட்டுவிட்டு எவைகளை இவர்கள் (இறைவனென) அழைக்கிறார்களோ அவைகள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்துரை செய்யும் சக்தி பெறாது. ஆனால் சத்தியத்தைக் கொண்டு யார் சாட்சியம் அளித்தார்களோ சரியான அறிவுஞானம் உடையவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர! (அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் பரிந்து பேசுவார்கள்.) திருக்குர்ஆன்:- 43:86

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَرَأَ الْقُرْآنَ وَاسْتَظْهَرَهُ فَأَحَلَّ حَلاَلَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ بِهِ الْجَنَّةَ وَشَفَّعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ كُلُّهُمْ وَجَبَتْ لَهُ النَّارُ )  குர்ஆனை ஓதி, அதை மனனமிட்டு அதில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் தடை செய்யப்பட்டிருப்பதைத் தடை செய்யப்பட்டதாகவும் ஏற்றுக்கொண்டால், அதற்காக அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிக்கிறான். மேலும், அவருடைய குடும்பத்தாரில் நரகம் உறுதியாகிவிட்ட பத்துப் பேருக்காக அவர் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்கின்றான். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2823, இப்னுமாஜா-212, முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( إذَا اجْتَمَعَ العَالِمُ وَ العَابِدُ عَلَى الصِّرَاطِ قِيلَ لِلعَابِدِ : ادْخُلِ الجنَّةَ، و تَنَعَّمْ بِعِبَادَتِكَ، و قِيلَ لِلعَالِمِ قِفْ هُنا فاشْفَعْ لِمَن أحْبَبْتَ، فإِنَّكَ لَا تَشْفَعُ لِأَحَدٍ إِلَّا شَفِّعْتَ، فَقَامَ مَقَامَ الأَنبِيَاءِ ) “ஒரு மார்க்க அறிஞரும், ஒரு வணக்கசாலியும் மறுமைநாளில் நரகத்திற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள (ஸிராத்தல் முஸ்தகீம் எனும்) பாலத்தில் ஒன்று சேர்ந்தால், அப்போது வணக்கசாலியிடம், “நீர் சொர்க்கத்தில் நுழைந்து, உமது வணக்கத்தின் பலனை அனுபவிப்பீராக!” என்று கூறப்படும். ஆனால் மார்க்க அறிஞரிடம், “நீர் இங்கே நிற்பீராக!; நீர் விரும்புகிறவர்களுக்கு பரிந்துரை (ஷஃபாஅத்) செய்வீராக! ஏனெனில், நீர் யாருக்காக பரிந்துரை செய்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று கூறப்படும். பின்னர் அவர் நபிமார்களின் நிலையை ஒத்த ஒரு உயர்ந்த அந்தஸ்தில் நிறுத்தப்படுவார். நூல்:- அல்ஃபிர்தவ்ஸ்-1293 இமாம் தைலமீ, அத்தன்வீர் ஷரஹ் ஜாமிஉஸ் ஸஙீர் இமாம் அஸ்ஸன்ஆனீ, ளஈஃப் அஜ்ஜாமிஉ-291 இமாம் அல்பானீ

 

மறுமை நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் நிலையை எண்ணி அச்சப்படும்போது, இறைவனின் உத்தரவின் பேரில் ஒரு மனிதன் மற்றவருக்கு பரிந்துரை செய்வது என்பது பெரிய பாக்கியம் ஆகும். அத்தகைய உயரிய அந்தஸ்தை இறையச்சமுள்ள ஓர் மார்க்க அறிஞர் பெறுவார் என்கிறது இந்த நபிமொழி.

 

உளப்பூர்வமாக நேசித்தல்

 

மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நாங்கள் (ஒருநாள்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைப்பற்றி ஏதோ பேசிக்கொண்டோம்.

 

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், ( إِنَّ ذَاكَ الرَّجُلَ لاَ أَزَالُ أُحِبُّهُ بَعْدَ شَىْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ سَمِعْتُهُ يَقُولُ‏ اقْرَءُوا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةِ نَفَرٍ مِنِ ابْنِ أُمِّ عَبْدٍ - فَبَدَأَ بِهِ - وَمِنْ أُبَىِّ بْنِ كَعْبٍ وَمِنْ سَالِمٍ مَوْلَى أَبِي حُذَيْفَةَ وَمِنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ) "அந்த மனிதர் எத்தகையவரென்றால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு அப்தின் புதல்வர் (இப்னு மஸ்ஊத்), உபை பின் கஅப், ஹுதைஃபாவின் முன்னாள் அடிமையான சாலிம், முஆத் பின் ஜபல் ஆகிய நால்வரிடமிருந்தும் குர்ஆனை ஓதக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று சொல்லி, இப்னு மஸ்ஊத் அவர்களை முதலாவதாகக் குறிப்பிட்டதை நான் செவியுற்றேன். அப்போதிருந்து அவரை என்றென்றும் நேசித்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள். நூல்:- முஸ்லிம்-4863, முஸ்னது அஹ்மத்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ نَظَرَ إِلَى وَجْهِ عَالِمٍ نَظْرَةً فَفَرِحَ بِهِ، خَلَقَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى مِنْ تِلْكَ النَّظْرَةِ وَالْفَرَحِ مَلَكًا يَسْتَغْفِرُ اللَّهَ لِصَاحِبِهِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ) யார் ஓர் மார்க்க அறிஞரின் முகத்தைப் பார்த்து சந்தோஷப்படுகிறாரோ, அல்லாஹ் சந்தோஷமடைந்த அந்த பார்வையில் இருந்து ஒரு வானவரை படைத்துவிடுவான். மறுமைநாள் வரை அந்த வானவர் அந்த மனிதருக்கு பாவமன்னிப்புத் தேடிக் கொண்டேயிருப்பார். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர், தாரிகுல் இஸ்லாம் இமாம் அத்தஹபீ, தாரீக் பக்தாத் இமாம் கத்தீப் அல்பக்தாதீ, நவாதிருல் உசூல், முஸ்னது அல்ஃபிர்தௌஸ், அல்காமிலு ஃபில் ளுஅஃபா இமாம் அதீ

 

ஒரு மனிதன் நேசம் கொள்வதற்கு மிகவும் தகுதியானவர் இறையச்சமுள்ள மார்க்க அறிஞர் தான். நிச்சயமாக, இந்த நேசம் நற்பலனை மட்டுமே தரும். தீயவற்றை விட்டும் பாதுகாக்கும். நல்லோர்களின் நேசம் இறைவன் தந்த வரம்.

 

மரியாதை

 

ஈரான் நாட்டின் குராஸான் பகுதியின் கவர்னர் இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) அவர்கள், ஒருநாள் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும்போது, அவ்வழியே ஒருவர் கடந்து சென்றார். அப்போது கவர்னர் அவர்கள், அந்த மனிதருக்காக எழுந்து நின்றார்கள்.

 

இதைப் பார்த்த கவர்னரின் சகோதரர் இஸ்ஹாக் அவர்கள், ( لِمَ تَقُومُ لِرَجُلٍ مِنْ الرَّعِيَّةِ ) “(சகோதரரே!) ஒரு ஆட்டு இடையருக்காக ஏன் எழுந்து நின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு கவர்னர் அவர்கள், "அவர் ஓர் மார்க்க அறிஞர்! நான் அவரிடமுள்ள கல்விக்கு கண்ணியமளித்தேன். என்றார்கள்.

 

அன்றிரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கவர்னர் இஸ்மாயீல் பின் முஹம்மது (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றி, ( ثَبَّتَ مِلْكِكَ وَمِلْكِ ابْنَكَ بِاجَلَالِكَ مُحَمَّدُ بْنُ نَصْرٍ ) “முஹம்மது பின் நஸ்ர் என்ற மார்க்க அறிஞருக்கு எழுந்து மரியாதை செய்ததன் மூலம் உம்முடைய ஆட்சியும் உமது சந்ததியின் ஆட்சியும் தொன்றுதொட்டு நிலைத்திருக்க (வழிவகை) செய்துவிட்டாய்” என்று சுபச்செய்தி கூறினார்கள். நூல்:- சச்சீ ஹிகாயாத்

 

ஆகவே, மார்க்க அறிஞர்களுக்கு செலுத்துகின்ற மரியாதை, இம்மை மறுமை இரண்டிலும் நமக்கு உயர்வைத் தரும்.

 

அல்லாஹுத்தஆலா நம்மை இறையச்சமுள்ள மார்க்க அறிஞர்களாக வாழச்  செய்வானாக! அல்லது அவர்களை உளமாற நேசிப்பவர்களாக வாழச்  செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

விசாரிக்கப்படுவோம்

  விசாரிக்கப்படுவோம்   فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا தனது வினைப் பதிவேட்டை வலக்கரத்...