Search This Blog

Thursday, 21 May 2026

பயனளிப்பவர்

 

பயனளிப்பவர் 

 

وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.  திருக்குர்ஆன்:- 2:237

 

"பிறருக்குப் பயனளிப்பவனாக வாழ வேண்டும்" என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றும் மிகச்சிறந்த தத்துவமாகும். சுயநலம் கடந்து பிறர் நலம் பேணுவது சமூகத்திற்கு மாபெரும் பலத்தைத் தரும்.

 

பிறருடைய தேவைகளை அறிந்து, தங்களால் இயன்ற பொருளாதார அல்லது உடல் உழைப்பு சார்ந்த உதவிகளைச் செய்வதும், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பதும், ஆறுதல் வார்த்தைகள் கூறுவதும் கூட ஒருவகையான உதவியே ஆகும்.

 

முதியவர்கள், ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கு ஆதரவாக இருத்தலும் உதவியே!

 

கற்ற கல்வியை அல்லது தொழில் சார்ந்த திறமைகளை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது. மற்றவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருப்பதும் பிறருக்கு செய்யும் உதவியே!

 

பிறருக்கு உதவும்போது கிடைக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் அளவிட முடியாதவை. இது நம்மைச்சுற்றி நேர்மறை ஆற்றலையும் (Positive Energy), நல்ல நண்பர்களையும் உருவாக்கும்.

 

"நீயும் உருவாகு; பிறரையும் உருவாக்கு" என்ற பொன்மொழி போல, பிறருக்குப் பயன்படும் வாழ்வே நிலையான புகழையும், இறைவனின் நெருக்கத்தையும் பெற்றுத் தரும்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ) யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5231, அபூதாவூத் திர்மிதீ-இப்னுமாஜா-221 

 

அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ ) பிறருக்கு மிகவும் பயனளிப்பவர்களே மக்களில் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, அத்தர்ஙீபு வத்தர்ஹீபு

 

இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் இறைவனிடம், “இறைவா! மக்களில் வைத்து உனக்கு மிக விருப்பமானவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், “தம்முடைய சகோதரருக்கு காலில் ஓர் முள் குத்தினால்கூட அதை தமக்கு ஏற்பட்டதாக நினைத்து வருத்தப்படுபவனாகும்” என்று கூறினான். நூல்:- தன்பீஹுல் முஃக்தர்ரீன்

 

எவரும் தமக்கு நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புவார். அவ்வாறே பிறருக்கும் நல்லதே விரும்ப வேண்டும். அப்படியானால், தமக்கு வெறுப்பதை மற்றவருக்கு வெறுக்க வேண்டும். அடுத்தவர் கெட்டுப்போவதை, சீரழிவதை விரும்பக்கூடாது. இதுவே நிறைவான இறைநம்பிக்கை ஆகும்.

 

அவருக்கு முதலில் உதவுங்கள்

 

உஹுத் போரின் உச்சத்தில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் முகத்தில் ஏற்பட்ட காயத்தையும் அவருடைய முன்பற்கள் உடைந்திருப்பதையும் தலையில் அணிந்திருந்த பாதுகாப்புக் கவசத்தின் இரண்டு வளையங்கள் முகத்தில் ஆழப்பதிந்து இருப்பதையும் கண்ட நபித்தோழர்கள் பதறினார்கள். நபித்தோழர்கள் அனைவரும் நபியவர்களுக்கு உதவ முன் வந்தனர்.

 

ஆனால் நபியவர்களோ, "உங்கள் சகோதரரை போய்ப் பாருங்கள்" என்றார்கள். அதாவது, நபியவர்கள் கூறியது தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்களைப் பற்றியே ஆகும்.

 

தல்ஹா (ரலி) அவர்கள் நபியவர்களை காப்பாற்றும் முயற்சியில் மிகப் பெரிய அளவில் காயமுற்று அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். எனவே, அவருக்கு முதலில் உதவுங்கள் என்று தமது தோழர்களிடம் நபியவர்கள் கூறினார்கள். நூல்:- அபூபக்ர் (ரலி) அவர்கள் - அலீ முஹம்மத் அஸ்ஸல்லாபி

 

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது.  நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "நாயகமே! என்னிடம் பயண வாகனம் இல்லாததால் எனது பயணம் தடைபட்டுள்ளது. எனவே, நான் பயணிக்க எனக்கு வாகனம் ஒன்றை தாருங்கள்" என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( لاَ أَجِدُ مَا أَحْمِلُكَ عَلَيْهِ وَلَكِنِ ائْتِ فُلاَنًا فَلَعَلَّهُ أَنْ يَحْمِلَكَ ) "உன்னை ஏற்றிச் செல்வதற்கான வாகனம் என்னிடம் இல்லை. ஆயினும், இன்ன மனிதரிடம் நீ செல்! அவர் உன் பயணத்திற்குரிய வாகனத்தைத் தரக்கூடும்" என்று கூறினார்கள். எனவே அவர் அம்மனிதரிடம் சென்றார். அம்மனிதரும் அவருக்கு வாகனம் வழங்கினார். பிறகு அவர் நபியவர்களிடம் வந்து நடந்தவற்றை தெரிவித்தார். அப்போது நபியவர்கள், ( مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ ) "நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பது போன்ற நற்கூலி கிடைக்கும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4464, அல்அதபுல் முஃபரத்-242

 

நம்மிடம் இயலாத ஒருவர் வந்து "எனக்கு இது தேவையாக உள்ளது. அதற்காக ஏதேனும் உதவி செய்யமுடியுமா?" என்று கேட்கும்போது, அப்போது நம்மிடம் இருந்தால் அவருக்கு கொடுத்து உதவவேண்டும். இயலாதபோது, "நீ இன்னாரிடம் சென்றால் அவர் உனக்கு உதவக்கூடும்" என்று அழகிய முறையில் அவருக்கு வழிக்காட்ட வேண்டும். இதுவே, நபிவழி ஆகும்.

 

நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒரு பயணத்தில்) நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தமது ஆடையால் தமக்குத்தாமே நிழலிட்டுக்கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது; ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை.

 

நோன்பு நோற்காமல் விட்டுவிட்டவர்கள்தான் வாகன (ஒட்டக)ங்களை எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள்; நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( ذَهَبَ الْمُفْطِرُونَ الْيَوْمَ بِالأَجْرِ ) ‘‘இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2890, முஸ்லிம்

 

நோன்பு நோற்காதவர்களுக்கு எல்லா நன்மைகளும் எப்படி சென்றன? காரணம், அவர்களது செயற்பாட்டின் பிரயோசனம் அவர்களுடன் மட்டும் சுருங்கிவிடவில்லை. அது அடுத்தவர்களையும் சென்றடைந்தது. ஆனால், நோன்பு நோற்றவர்களைப் பொறுத்தவரையில் அதன் பயனை அவர்கள் மட்டுமே பெற்றுக்கொண்டார்கள். அது பிறருக்கும் சென்றடையவில்லை. எனவே, ஒருவனது செயலின் பயன் அவனுக்கு மட்டும் உரியதல்லாமல் பிறருக்கும் சென்றடையக்கூடியதாக இருத்தல் மிகவும் அவசியமாகும். அதில் தான் அதிகமான நன்மைகள் இருக்கின்றன என்பதை விளங்க வேண்டும்.

 

ஒருவர் தனக்குரிய வணக்க வழிபாடுகளில் மட்டும் கவனம் செலுத்துவதைவிட, தனது நற்செயல்கள் பிறருக்குப் பயன்படும் வகையில் செயலாற்றுவது மார்க்கத்தில் மிக உயர்ந்த நன்மைகளைப் பெற்றுத் தரும்.

 

பயணத்தின்போது ஏற்படும் சிரமங்களை உணர்ந்து, நோன்பை விட்டுவிட்டு பின்னர் நோற்கலாம் எனும் இஸ்லாமியச் சலுகையை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல என்பதை இது காட்டுகிறது.

 

இவரது கடனுக்கு நான் பொறுப்பு

 

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுவரப்பட்டது. நபித்தோழர்கள் “நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று நபியவர்களிடம் கூறினார்கள். நபியவர்கள், ( فَهَلْ عَلَيْهِ دَيْنٌ  ) “இவர் கடனாளியா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லை” என்றனர். நபியவர்கள் ( هَلْ تَرَكَ شَيْئًا ) “ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று கேட்டபோது “இல்லை” என்றனர். அவருக்கு நபியவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

 

பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. அப்போது “(நாயகமே!) இவருக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று நபித்தோழர்கள் கூறினர். அதற்கு நபியவர்கள், “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது “ஆம்” எனக் கூறப்பட்டது. நபியவர்கள், “இவர் ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று கேட்டபோது “மூன்று பொற்காசுகளை விட்டுச்சென்றிருக்கிறார்” என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள்.

 

பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “(நாயகமே!) நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று நபித்தோழர்கள் கூறினர். நபியவர்கள், “இவர் ஏதேனும் விட்டுச்சென்றிருக்கிறாரா?” என்று கேட்டபோது,  இல்லை” என்றனர். நபியவர்கள், “இவர் கடனாளியா?” என்று கேட்டபோது, “மூன்று பொற்காசுகள் கடன் வைத்திருக்கிறார்” என்று நபித்தோழர்கள் கூறினார்கள். நபியவர்கள், ( صَلُّوا عَلَى صَاحِبِكُمْ  ) “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்று கூறிவிட்டார்கள்.

 

அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், ( صَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ، وَعَلَىَّ دَيْنُهُ‏ ) “இவரது கடனுக்கு நான் பொறுப்பு; நாயகமே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று கூறியதும் அவருக்கு நபியவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்:- புகாரீ-2289

 

ஒருவருக்கு தமது இறுதித் தொழுகையை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தொழுக வைப்பது பெரும் பாக்கியம். நம்முடைய சகோதரர் ஒருவருக்கு அந்த பெரும் பாக்கியம் தவறிப்போவது நல்லதல்ல. அவருக்கு அந்த பாக்கியம் கிடைப்பதற்கு அவர் வாங்கிய கடனுக்கு, தான் பொறுப்பேற்பதன் மூலம் அவருக்கு அந்த பாக்கியம் கிடைக்குமெனில் அதுவே பெரும் மகிழ்ச்சி என்று அபூகத்தாதா (ரலி) அவர்கள் எண்ணினார்கள்.

 

பிறர் படுகின்ற கஷ்டத்தில் பங்கேற்று, அவர்களுக்கு சற்று ஓய்வு தருவதிலும் ஒரு சுகமுண்டு.

 

சைகை செய்தனர் 

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَنْفَعَ أَخَاهُ فَلْيَفْعَلْ ) உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும் அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4424

 

யர்மூக் யுத்தக்களத்தில் நபித்தோழர்கள் பலரும் எதிரிகளின் தாக்குதலுக்குள்ளாகி காயமுற்று வீழ்ந்துகிடந்தனர். அப்போது பிறர், காயமுற்றவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக விரைந்தனர்.

 

தூரத்தில் ஒரு முனகல் சப்தம் அருகே சென்று பார்க்கிறார். அங்கே, ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கடும் தாகத்தோடு காணப்படுகின்றார்.

 

தண்ணீர் பையை கொண்டு சென்று முனகல் சப்தத்துடன் கிடந்த ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்களின் வாயின் அருகே திறந்தபோது அவருக்கு சற்று தொலைவில் இன்னொருவரின் முனகல் சப்தம் கேட்கிறது. அப்போது ஹாரிஸ் (ரலி) அவர்கள் சப்தம் கேட்ட திசையை நோக்கி அவரின் தாகத்தை போக்குமாறு சைகை செய்தார்.

 

தண்ணீர் பையோடு அவருக்கு அருகே சென்ற பார்த்தபோது, அங்கே இக்ரிமா பின் அபூஜஹ்ல் (ரலி) அவர்கள் கடுமையான தாகத்தோடு காணப்பட்டார். அவருக்கு சற்று தொலைவில் இருந்து இன்னொருவரின் முனகல் சப்தம் கேட்கிறது. அப்போது இக்ரிமா (ரலி) அவர்கள் அவரின் தாகத்தைப் போக்குமாறு சைகை செய்தார்.

 

தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அங்கே, அயாஷ் பின் ரபீஆ (ரலி) அவர்கள் தாகத்தோடு காணப்பட்டார். அவரின் வாயின் அருகே தண்ணீரை கொண்டு சென்றபோது அயாஷ் (ரலி) அவர்கள் மரணமடைந்துவிட்டார்.

 

இக்ரிமா (ரலி) அவர்களை நோக்கி, தண்ணீர் பையோடு ஓடிச் சென்று பார்த்தால் அவரும் மரணமடைந்துவிட்டார். ஹாரிஸ் (ரலி) அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம் என்று அங்கே ஓடிச் சென்று பார்த்தால் அவரும் மரணமடைந்துவிட்டார்.     நூல்:- அல்மஃகாஸீ - இமாம் அல்வாகிதீ

 

யர்மூக் போரில் பலத்த காயத்தோடும், தகிக்கும், தாகத்தோடும் மரணத்தின் விளிம்பில் இருந்து கொண்டிருந்த அந்த நபித்தோழர்கள் ஒவ்வொருவரின் உணர்வும் தங்களின் உயிரைவிட பிற சகோதரனின் நலனில் அக்கறை செலுத்தினார்கள். அவர்களுக்கு பிற சகோதரத்துவ உறவே மிகவும் உவப்பானதாக, உயர்வானதாக, தெரிந்தது.

 

நபித்தோழர்கள் தன் உயிரைவிட பிற சகோதரன் நலனில் அக்கறை செலுத்துவது மிகவும் சிறப்பானது உயர்வானது.  சகோதரத்துவம் நிறைந்த பண்பாகும் என்ற இஸ்லாமியப் போதனைபடி வாழ்ந்தவர்கள்.

 

வறுமையில் வாடினாலும்

 

அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஹஜ் செய்ய நாடியபோது என்னுடைய தாய் மாமா முஸ்லிம் பின் சஅத் (ரஹ்) அவர்கள் பத்தாயிரம் வெள்ளிக்காசுகளை என்னிடம் கொடுத்து, ( إذَا قُدِّمَتْ الْمَدِينَة فَانْظُرْ أَفْقَرَ أَهْلِ بَيْتٍ بِالْمَدِينَةِ فَأَعْطِهِمْ إيَّاهَا ) “நீ மதீனாவுக்கு செல்லும்போது மதீனாவிலேயே மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பத்தை  கண்டுபிடித்து அவர்களிடத்திலே இந்த வெள்ளிக்காசுகளை கொடுத்துவிடு” என்று கூறினார்.

 

நான் மதீனாவுக்கு வந்தேன். மதீனாவிலே மிகவும் வறுமையை வாழக்கூடிய குடும்பத்தை குறித்து விசாரித்தேன். அப்போது ஒரு குடும்பத்தை எனக்கு காட்டப்பட்டது. நான் அந்த வீட்டின் கதவை தட்டினேன். அப்போது ஒரு பெண்மணி, “நீங்கள் யார்?” என்று கேட்டார். “நான் பக்தாதைச் சேர்ந்தவன். என்னிடம் பத்தாயிரம் வெள்ளிக்காசுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை மதீனாவிலே மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது. மக்கள் (உங்களையே) எனக்கு வழிகாட்டினார்கள். எனவே, அவற்றை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள்” என்று நான் கூறினேன்.

 

அதற்கு அந்தப் பெண், ( يَا عَبْدَ اللَّهِ إِنَّ صَاحِبِكَ اِشْتَرِطَ أَفْقَرَ أَهْلِ بَيْتٍ وَهَؤُلَاءِ الَّذِينَ بِإِزَائِنَا أَفْقَرَ مِنَّا )  அப்துல்லாஹ்! உங்களின் உறவினர், மதீனாவிலேயே மிகவும் வறுமையானவர்களாக இருக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டு இருக்கிறார். இதோ நமது அண்டை வீட்டினர் நம்மைவிட வறுமையில் இருப்பவர்கள். (எனவே, நீங்கள் அவர்களிடம் செல்லுங்கள்)” என்றார். ஆகவே, நான் அவர்களை விட்டு விட்டு மற்ற வீட்டிற்குச் சென்றேன்.

 

நான் அருகிலுள்ள வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினேன். அப்போது ஒரு பெண் கதவைத் திறந்தாள்.  நான் முதல் பெண்ணிடம் கூறியது போன்றே கூறினேன். அதற்கு அந்த பெண், ( يَا عَبْدَ اللَّهِ نَحْنُ وَجِيْرَانَنَا فِي الْفَقْرِ سَوَاءٌ فَاقْسِمْهَا بَيْنَنَا وَبَيْنَهُمْ ) “அப்துல்லாஹ்! நாங்களும் எங்களின் அண்டை வீட்டாரும் வறுமையில் சமநிலையில் தான் உள்ளோம். எனவே நீர், அவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் (அந்த வெள்ளிக்காசுகளை) பிரித்துக் கொடுப்பீராக!” என்று கூறினார். நூல்:- ஸிஃபத்துஸ் ஸஃப்வா ( صفة الصفوة )

 

பண்டையக்கால வணிகர்கள்

 

பண்டையக்கால வணிகர்களிடம் ஒரு நல்ல வழக்கம் இருந்தது. கடையை திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்துவிடுவார்கள். முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கி சென்ற பின், நாற்காலியை எடுத்து உள்ளே வைத்துவிடுவார்கள். அடுத்த வாடிக்கையாளர் வந்தால் கடைக்காரர் கடையை விட்டு வெளியே வந்து, கடைத்தெருவில் எந்த கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ அந்தக் கடையை சுட்டிக்காட்டி, “உங்களுக்கு தேவையான பொருள் அந்த கடையில் கிடைக்கும்” என்று கூறி அனுப்பிவிடுவார்கள்.

 

சக வணிகர் இன்னும் அவரது வியாபாரத்தை துவக்கவில்லை. நான் துவங்கி விட்டேன் என்ற காரணம் தான் இது.

 

இதனால் தான் அவர்களது வியாபாரங்கள் வளம் கொழித்து விளங்கின. பண்டைக்கால  வணிகர்களிடம் இவ்வாறான ஒரு நல்ல வழக்கம் இருந்தது.

 

தக்க சமயத்தில் உதவுவது 

 

முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்தப் அல்மக்ஸூமிய்யூ (ரஹ்) அவர்கள் அபூபக்ர் பின் அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடம் தான் கொடுக்க நேரம் நெருங்கிவிட்ட கடன் விஷயத்தில் உதவி கேட்க வந்தார். அவர் வந்து அமர்ந்ததும் அவரிடம் அபூபக்ர் (ரஹ்) அவர்கள் ( قَدْ أَعَانَكَ اللَّهُ عَلَى غُرْمِكَ بِعِشْرِينَ أَلْفًا ) “(அவரிடம் ஒரு தொகையை கொடுத்து) உம் கடனுக்காக அல்லாஹ் இருபதாயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டு உமக்கு உதவி செய்துவிட்டான் என்று கூறினார்கள்.

 

அங்கிருந்த ஒருவர் அன்னாரிடம் ( وَاللَّهِ مَا تَرَكْتَ الرَّجُلَ يَسْأَلُكَ ) “அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் உங்களிடம் கேட்கக்கூட நீங்கள் விடவில்லையே?" என்று வினவினார். அதற்கு அவர்கள் ( إِذَا سَأَلَنِي فَقَدْ أَخَذْتُ مِنْهُ أَكْثَرَ مِمَّا أَعْطَيْتُهُ ) “அந்த மனிதர் என்னிடம் கேட்டிருந்தால் நான் அவருக்கு கொடுத்த தொகையைவிட இன்னும் அதிகம் கொடுத்திருப்பேன்" என்று கூறினார்கள். நூல்:- களாயில் ஹவாயிஜ் ( قَضَاءِ الْحَوَائِجِ ) இமாம் இப்னு அபித்துன்யா

 

எனக்கு வேண்டும் என்பது தேவை. எல்லோருக்கும் வேண்டும் என்பது சேவை.

 

கடைகளில் தொங்கும் கூடைகள்

 

உஸ்மானியா பேரரசின் எல்லா கடைகளிலும் கூடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். ஒரு செல்வந்தர் அந்த கடைக்கு வந்து தனக்கு தேவையான நான்கு ரொட்டிகளுக்கு பணம் செலுத்தாமல் எட்டு ரொட்டிக்களுக்கான பணத்தை கொடுக்கிறார்.

 

கடைக்காரர் பணம் அதிகமாக தந்துவிட்டீர்கள் என்று கூறுகிறார். அதற்கு செல்வந்தர் "மீதுமுள்ள பணத்திற்கான ரொட்டியை தொங்கும் கூடையில் போட்டுவிடுங்கள்" என்று கூறினார்.

 

கடைக்காரரும் அந்த பணத்தை தான் எடுத்துக்கொள்ளாமல் அந்த ரூபாய்க்கான ரொட்டிகளை அந்த தொங்கும் கூடையில் போட்டுவிடுகிறார்.

 

அடுத்தது ஒரு ஏழ்மையான மூதாட்டி வருகிறாள். கடைக்காரன் தங்களுக்கு ரொட்டி வேண்டுமா என்று வினவுகிறார்.

 

ஆமாம் என்று மூதாட்டி கூற, நான்கு ரொட்டிகளைக் கொண்டு பையை நிரப்பி கடைக்காரர் மூதாட்டியிடம் கொடுத்தபோது மூதாட்டி கூறுகிறாள், ‘எனக்கு இரண்டு போதும் மீதத்தை வேறு யாருக்காவதுக் கொடுத்துவிடுங்கள் என்று கூறி தனக்கு எவ்வளவு தேவையோ அதனை மட்டும் எடுத்துக்கொண்டு விடைபெறுகிறாள்."

 

தனது அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க வயிறு நிரம்ப சாப்பிடுபவர் உண்மையான இரைநம்பிக்கையாளரே அல்லன் என்ற நபிமொழியை ஒரு சாம்ராஜ்யமே கடைப்பிடித்துள்ளதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு.

 

இந்த அற்புதமான பழக்கத்தின் விளைவாக தேவையுடையவர்கள் நல்ல நிலைக்கு மாறினாலும், தான் தேவையோடு இருந்த காலங்களில் தனக்குக் கிடைத்த இந்த உதவிக்கு செய்யும் நன்றிக்கடனாக அவர்கள் ஒரு ரொட்டி வாங்கினால் இரு ரொட்டிக்கான பணத்தைக் கொடுத்து, மற்றொரு ரொட்டியை தொங்கும் கூடையில் போட்டுவிடுகிறார்கள்.

 

பிள்ளைகளின் பெருந்தன்மை

 

சிரியாவிலுள்ள ஒரு பாடசாலையில் நடந்த சம்பவமே இது: ஒரு ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை உற்சாகமூட்டுவதற்காக ஒரு சிறிய பரீட்சையை நடத்தினார். அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு காலணி(செருப்பு) ஜோடி வழங்கப்படும் என்றும் கூறினார். அனைத்து மாணவிகளும் மிகுந்த சந்தோஷத்துடன் பரீட்சையை எழுதினர்.

 

இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்க்கும்போது அவர்கள் அனைவரது விடைகளும் சரியானவையாகக் காணப்பட்டன. ஆசிரியை யாருக்கு பரிசினை வழங்குவது என்று சிந்தித்துவிட்டு ஒரு பெட்டியில் அனைவரது பெயர்களையும் எழுதிப்போடுமாறு கூறினார்.

 

அனைவரும் எழுதிப்போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு காகிதத்தை எடுத்தார். அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு அப்பரிசு வழங்கப்பட்டது.

 

அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும்  ஏழ்மையான  மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த இம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி. பின்னர் அவ்வாசிரியை சந்தோஷத்துடன் வீட்டுக்கு வர, ஆசிரியை நடந்த சம்பவத்தை கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் சந்தோஷப்பட்டார்.

 

எனினும் அந்த ஆசிரியை வழமைக்கு மாறாக தொடர்ந்தும் கண்ணீர் வடிக்கவே, கணவர் மீண்டும் காரணம் கேட்க, "நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியிலுள்ள காகிதங்களை பிரித்துப்பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை  மாணவியாகிய "வபாஃ" இன் பெயரையே எழுதியிருந்தனர்." என்று பதிலளித்தார்.

 

"தன்னைவிட பிறரை முற்படுத்தும் பிள்ளைகளாக தமது பிள்ளைகளை வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்"

 

மகிழ்ச்சியைக் கொடுப்பது

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( مِنْ أَفْضَلِ الْأَعْمَالِ إدْخَالُ السُّرُورِ عَلَى الْمُؤْمِنِ ، تَقْضِي عَنْهُ دَيْنًا ، تَقْضِي لَهُ حَاجَةٌ ، تَنَفَّسُ لَه كُرْبَةٌ ) ஒரு இறைநம்பிக்கையாளருக்கு மகிழ்ச்சியை அளிப்பது, அவரது கடனை அடைப்பது, அவரது தேவையை நிறைவேற்றுவது, அவரது துயரத்தைப் போக்குவது போன்றவையே சிறந்த நற்செயல்களாகும். அறிவிப்பாளர்:- முஹம்மத் பின் முன்கதீர் (ரஹ்) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, அஸ்ஸில்ஸிலத்துஸ் ஸஹீஹா இமாம் அல்பானீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( مَا مِنْ مُؤْمِنٍ أَدْخَلَ عَلَى مُؤْمِنٍ سُرُورًا إلَّا خَلَقَ اللَّهُ مِنْ ذَلِكَ السُّرُورِ مَلَكًا يَعْبُدُ اللَّهَ وَيُمَجِّدَهُ وَيُوَحِّدُهُ فَإِذَا صَارَ الْمُؤْمِنِ فِي لَحْدِهِ جَاء السُّرُورُ الَّذِي أَدْخَلَهُ عَلَيْهِ فَيَقُولُ لَهُ : أَمَّا تَعْرِفُنِي ؟ فَيَقُولُ : مَنْ أَنْتَ ؟ فَيَقُولُ : أَنَا السُّرُورُ الَّذِي أَدَخَلَتْنِي عَلَى فُلَانٍ أَنَا الْيَوْمَ أُونِسُ وَحْشَتَك وَأُلَقِّنُكَ حُجَّتَك وَأُثَبِّتُك بِالْقَوْلِ الثَّابِتِ وَأَشْهَدُ بِك مَشْهَد الْقِيَامَةِ وَأَشْفَعُ لَك مِنْ رَبِّكَ وَأُرِيكَ مَنْزِلَكَ مِنْ الْجَنَّة )

இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறைநம்பிக்கையாளருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்போது, அந்த மகிழ்ச்சியிலிருந்து அல்லாஹ் ஒரு வானவரைப் படைக்கிறான். அந்த வானவர் அல்லாஹ்வை வணங்கி, அவனைப் புகழ்ந்து, அவனது ஏகத்துவத்தை உறுதிப்படுத்துகிறார். பின்னர், (பிறரை மகிழ்வித்த) அந்த  இறைநம்பிக்கையாளர் (மரணித்து) தனது மண்ணறையில் இருக்கும்போது, வானவர் தோற்றத்தில் இருக்கும் அந்த மகிழ்ச்சி அவரிடம் வந்து, "உனக்கு என்னைத் தெரியாதா?" என்று கேட்கிறது. அதற்கு அவர், "நீ யார்?" என்று கேட்பார்.

 

அப்போது அந்த வானவர், "நீ இன்னாருக்கு ஏற்படுத்திய மகிழ்ச்சி தான் நான். இன்று நான் உனது தனிமையைப் போக்கி, உனது சான்றிற்கு உன்னை வழிநடத்தி, உறுதியான வார்த்தையால் உன்னைப் பலப்படுத்தி, மறுமை நாளில் உனக்காகச் சாட்சி பகர்ந்து, உனது இறைவனிடம் உனக்காகப் பரிந்து பேசி, சொர்க்கத்தில் உனது இடத்தைக் காட்டுவேன்" என்று கூறுவார். அறிவிப்பாளர்:- ஜஅஃபர் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் நூல்:- அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, களாயில் ஹவாயிஜ் ( قَضَاءِ الْحَوَائِجِ ) இமாம் இப்னு அபித்துன்யா

 

ஒருவன் செய்யும் காரியம் தமக்கு மட்டுமே பயன் தந்தால் அவன் ஒரு உயிரினம். அக்காரியம் அவனைச் சேர்ந்தவர்களுக்கு பயன் தந்தால் அவன் மனிதன். அக்காரியம் ஒரு சமுதாயத்திற்கே பயன் தந்தால் அவன் மாமனிதன்.

எனவே, அல்லாஹுத்தஆலா நம்மையும், நமது சந்ததிகளையும் மனத்தூய்மையுடன் பிறருக்குப் பயனளிப்பவராக வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

Wednesday, 20 May 2026

பிள்ளைகளுக்காகப் பிரார்த்திப்போம்!

 

பிள்ளைகளுக்காகப் பிரார்த்திப்போம்!

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

(நபி இப்ராஹீம்-அலை) என் இறைவனே! என்னையும் என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக்கொள்வாயாக!   திருக்குர்ஆன்:- 14:40

 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்தது என்று இஸ்லாம் கூறுகிறது. பெற்றோரின் பிரார்த்தனை ஒருபோதும் நிராகரிக்கப்படுவதில்லை பிள்ளைகளின் நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் இறைநம்பிக்கையைப் பேணப் பெற்றோர்கள் தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

 

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு நன்மைக்காகவும், ஆபத்துகளில் இருந்தும் பாதுகாக்கும்படி உளப்பூர்வமாக அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும்.

 

ரமளான் மாதம், ஐந்து வேளை பர்ளு தொழுகைக்குப் பிறகு, (தஹஜ்ஜுத் எனும்) இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், மற்றும் வெள்ளிக்கிழமை போன்ற சிறப்பான நேரங்களில் பிரார்த்தனை செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

 

பிள்ளைகளின் நல்வழிக்காகப் பெற்றோர்கள் செய்யும் பிரார்த்தனை, இவ்வுலகிலும் மறுமை வாழ்விலும் அவர்களுக்குப் பெரும் நன்மைகளையும் பாதுகாப்பையும் பெற்றுத்தரும்.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلاَثُ دَعَوَاتٍ يُسْتَجَابُ لَهُنَّ لاَ شَكَّ فِيهِنَّ وَدَعْوَةُ الْوَالِدِ لِوَلَدِهِ ) மூன்று பிரார்த்தனைகள் (இறைவனிடம்) ஏற்புக்குரியவை ஆகும். அதில் எந்த ஐயமுமில்லை. அவைகளில் ஒன்று பிள்ளைக்காகத் தந்தை செய்யும் (சாதகமான) பிரார்த்தனை ஆகும்.   அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள்  நூல்:- இப்னுமாஜா-3852

 

இறைத்தூதர்களின் பிரார்த்தனை

 

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! (ஹஜ்ஜுடைய காலத்தில்) எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித்தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான்  மிக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன் (என்று இப்ராஹீமும், இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்). திருக்குர்ஆன்:- 2:128

 

இன்று ஒரு சில பிள்ளைகள் மார்க்கப் பற்றின்மையால் மிக மோசமான நடத்தையுடையோராக மாறி, தொழுகையைப் பேணாதவர்களாகவும், பெற்றோரை மதிக்காதவர்களாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும் இருப்பதால் அவர்களைப் பெற்றவர்களே அப்பிள்ளைகளை ஏன் பெற்றெடுத்தோம்? இவன் பிறக்காமல் இருந்தாலே நான் மானம், மரியாதையுடன் வாழ்ந்திருப்பேன் என்று பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, நாம் பிள்ளைகளின் நேர்வழிக்காக அதிகம் நாம் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

 

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிடால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும்.

 

இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதையே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

வாழ்வு வளம் பெற

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஒருமுறை தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களைக் காண மக்கா நகர் வந்தார்கள். அப்போது மகனார் வீட்டில் இல்லை. வீட்டிலிருந்த மருமகள் தனது கணவர் வெளியே சென்றிருப்பதாகக் கூறினார். இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மருமகளிடம் ( كَيْفَ أَنْتُمْ ) "நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?” என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், ( نَحْنُ بِخَيْرٍ وَسَعَةٍ‏ )  நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் புகழ்ந்தார்.

 

இப்ராஹீம் (அலை) அவர்கள், ( مَا طَعَامُكُمْ ) ‘‘உங்கள் உணவு என்ன?” என்று கேட்க அவர், “இறைச்சி” என்று பதிலளித்தார். அவர்கள், ( فَمَا شَرَابُكُمْ ) ‘‘உங்கள் பானம் எது?” என்று கேட்க, “தண்ணீர்” என்று பதிலளித்தார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ( اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي اللَّحْمِ وَالْمَاءِ‏ ) ‘‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும், தண்ணீரிலும் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நூல்:- புகாரீ-3364  தஃப்சீர் அத்தபரீ 

 

மக்கா பாலைவனப் பூமி தான். என்றாலும் எந்த காலத்திலும் அங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதில்லை.

 

அங்கு புனித கஅபாவை தரிசிப்பதற்காக உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் தினமும் இலட்சக்கணக்கில் மக்கள் வந்து கூடுகின்றனர். ஹஜ் காலத்தில்  சுமார் 40 இலட்சம் பேர் வரை யாத்ரீகர்கள் கூடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் போதுமான உணவுப் பொருட்களும், அத்தியாவசியப் பொருள்களும் அங்கு தாரளமாக கிடைக்கின்றன.

 

அங்கு ஆண்டுதோறும் ஹஜ்ஜுக்கு வருகின்ற ஒவ்வொரு ஹாஜியும் குறைந்தது ஒரு ஆடும் மேலும் வசதியுள்ளவர்கள் சில நூறு ஆடுகள் வரையிலும் இலட்சக்கணக்கானோர்  பலியிடுதல் எனும் குர்பானியைக் கொடுக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான மாடு, ஒட்டகைகளும் அப்போது அங்கு குர்பானி கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் எண்ணிலடங்கா ஆடு, மாடு, ஒட்டகைகள் பலியிடப்பட்டாலும் அங்கு இந்த கால்நடைகள் விஷயத்தில் பஞ்சம் ஏற்பட்டதில்லை. அவை தாராளமாகவே கிடைக்கின்றன.

 

பெற்றோரின் பிரார்த்தனை பிள்ளைகளின் வாழ்வை செழிப்பாக்கும்.

 

சோதனைகள் நீங்க

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 194 ஷவ்வால் பிறை 13 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு புகாரா என்ற ஊரில் பிறந்தார்கள். புகாரீ (ரஹ்) அவர்கள் தமது சிறுவயதில் பார்வையை இழந்து விட்டார்கள். எனவே அன்னாரின் தாயார் அப்போதிருந்த பெரும் பெரும் மருத்துவர்களிடம் சென்று மருத்துவம் செய்தும், பார்வை திரும்பவில்லை.

 

அன்னாரின் தாயார் அதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவராகவும், இறைநெருக்கம் பெற்றவர்களில் ஒருவராகவும் இருந்ததினால், இறைவனிடம் அதிகம் அழுது மன்றாடி தன் பிள்ளைக்கு பார்வை கிடைப்பதற்காக பிரார்த்தித்துக்கொண்டே இருந்தார்கள்.

 

அம்மையார் ஒருநாள் இரவு வேளையில் தூங்கும்போது அவர்களின் கனவில் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) தோன்றி, ( يَا هَذِهِ قَدْ رَدَّ اللَّهُ عَلَى ابْنِكِ بَصَرَهُ لِكَثْرَةِ دُعَائِكِ )  “நீ அதிகம் அழுது இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்ததினால் உன் பிள்ளைக்கு பார்வை திரும்பிவிட்டது" என்று சுபச்செய்தி கூறினார்கள்.

 

பிறகு அது போன்றே அதிகாலையில் இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தன் படுக்கையில் இருந்து எழுந்திருக்கையில் அவர்களுக்கு பார்வை மீண்டும் வந்துவிட்டது. நூல்:- அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ

 

பெற்றோர், பிள்ளைகளுக்கு நோய்நொடி ஏற்படும்போது, அவர்களுக்கு மருத்துவம் செய்வது போன்றே அவர்களின் நல்வாழ்விற்கு பிரார்த்திக்கவும் வேண்டும்.

 

உயரிய அந்தஸ்த்தைப் பெற

 

இறைநேசர் அபூயஜீத் பிஸ்தாமி (ரஹ்) அவர்களிடம், “இம்மாபெரும் அந்தஸ்த்து தங்களுக்கு எவ்வாறு கிடைத்தது?” என்று வினவப்பட்டது. அப்போது அன்னார், நான் ஏழு வயது சிறுவனாக இருந்தபோது மஸ்ஜிதில் எனது ஆசிரியரிடம்  குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தேன். அந்நேரத்தில்  (வபில் வாலிதைனி இஹ்ஸானா) ‘பெற்றோருக்கு உபகாரம் செய்தல்’ குறித்து ஓர்  வசனத்தை ஓதியபோது ஆசிரியரிடம் அந்த வசனத்தின் விளக்கத்தை கேட்டேன். அதற்கு அவர்கள், “எனக்கு நீ பணிவிடை செய்வது போல உனது பெற்றோருக்கும் செய்ய வேண்டும் என்பதே அதன் கருத்து” என்று கூறினார்கள்.

 

குர்ஆன்  ஓதிவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் எனது தாயாரின் பாதங்களை முத்தமிட்டு, “எனது அருமை தாயே! தாய்க்கு பணிவிடை செய்வது குறித்து அல்லாஹுத்தஆலாவின் திருவசனங்களை கேட்டுவிட்டு வந்து இருக்கிறேன். நான் உங்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்வேன். எனக்காக தாங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறினேன்.

 

அப்போது எனது தாயார் இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு எனது கரங்களைப் பற்றியவாறு கிப்லாவை முன்னோக்கி எனக்காக பிரார்த்தனை செய்தார்கள். ஆகவே, “எனக்கு கிடைத்த நற்பாக்கியங்களெல்லாம் எனது தாயாரின் பிரார்த்தனையால் கிடைத்ததே!” என்று கூறினார்கள்.

 

பெற்றோரின் பிரார்த்தனையால் ஒரு மனிதன் அறிஞனாக, சிறந்த ஆட்சியாளனாக, மக்களால் மதிக்கக்கூடிய பண்பாளனாக, இறைநேசராக உயரலாம்.

 

குறும்பு செய்யும்போது

 

அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் இளமையில் பெரும் பாவியாகவே இருந்தார்கள். ஆனால், இவரது பெற்றோர்கள் இவருக்காக செய்த தர்மங்களும், பிரார்த்தனைகளும் இவரை மார்க்கத்தின் பெரும் சட்ட மேதையாக மாற்றியது என்பது வரலாறு.

 

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரம் எனும் இறையில்லத்தின் இமாம் மற்றும் புனிதமான மக்கா, மதீனா மஸ்ஜித்களின் நிர்வாக தலைவருமான அறிஞர் அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்கள் தமது சிறுபிராயம் குறித்து இவ்வாறு கூறுகிறார்: ஒருமுறை எங்கள் வீட்டிற்கு விருந்தாளி வந்திருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய தாயார்  உணவு சமைத்துக் கொண்டு இருந்தார். அவ்வேளையில் உணவு சமைத்து வைத்திருந்த சட்டியில் நான் விளையாட்டுத்தனமாக கொஞ்சம் மண்ணை அள்ளிப் போட்டு விட்டேன். இது குறித்து என் தாயாருக்கு தெரிந்தபோது கடுமையாக கோபப்பட்டவராக, "அப்துர் ரஹ்மானே! இங்கிருந்து சென்று விடு! அல்லாஹ் உன்னை கஅபாவின் இமாமாக ஆக்குவானாக" என்று மட்டும் கூறினார்.

 

மேலும், அன்னாரின் தாயார், "அல்லாஹ் உன்னை ஹரமைனின் இமாமாக ஆக்குவானாக!" என அடிக்கடி பிரார்த்திப்பார்களாம். அறிஞர் அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்கள் தன் தாயாரின் பிரார்த்தனை தான் தமது உயர் நிலைமைக்கு காரணம் என்று அடிக்கடி கூறுவார்.

 

அப்துர் ரஹ்மான் அல்சுதைசி அவர்களின் தாயார் மிகுந்த இறையச்சம் கொண்டவர். இவ்வாறு அவரின் தாயார் சந்தோஷத்திலும், சங்கடத்திலும்கூட தமது மகனார் கஅபாவின் இமாமாக வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டே இருந்துள்ளார்.

 

அவர் தனது பிள்ளை சிறு வயதில் செய்யும் சிறு குறும்புகளுக்குக் கூட, கோபத்தில் திட்டாமல், "அல்லாஹ் உன்னை ஹரமைனின் (கஅபாவின்) இமாமாக ஆக்குவானாக!" என ஆசிர்வதித்து பிரார்த்தனை செய்துள்ளார்.

 

தாயாரின் அந்த உளப்பூர்வமான பிரார்த்தனையே, இன்று அவர் மக்கா மற்றும் மதீனா மஸ்ஜித்களின் தலைவராகவும், மஸ்ஜிதுல் ஹரமின் தலைமை இமாமாகவும் உயர்ந்து திகழ முக்கியக் காரணமாக அமைந்தது. இது பெற்றோரின் பிரார்த்தனை எத்தகைய மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

 

அப்துர் ரஹ்மான் சுதைசி அவர்கள் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் 10-2-1960 ல் பிறந்தார்.

தன்னுடைய 12 ஆம் வயதில் முழு குர்ஆனை மனனமிட்டார். ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்‌.

1979 ல் இளங்கலை பட்டம் பெற்றார்.

1983 ல் ரியாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஷரியத்திற்கான பட்டய படிப்பை பெற்றார்.

1987ல் முதுகலை பட்டமும் (M.A.), 1995 ல் இஸ்லாமிய ஷரியத் சம்பந்தமான டாக்ட்ரேட் (Ph.D. முனைவர்) பட்டம் பெற்றார்.

ரியாத் பல்கலைக்கழகத்திலும், உம்முல் குராம் பல்கலைக்கழகத்திலும் உதவி பேராசிரியராக பணியாற்றினார்.

மக்கா ஹரம் ஷரீஃபின் இமாமாக பொறுப்பேற்ற பொழுது (1984) அவர் வயது 24 மட்டுமே.

2012 ல் புனிதமான மக்கா மதீனா மஸ்ஜித்களின் நிர்வாக தலைவராக நியமிக்கப்பட்டு அமைச்சர் அந்தஸ்தும் அவருக்கு வழங்கப்பட்டது.

 

பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர் அடிக்கடி தான தர்மங்களும், பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.

 

பழைய காலத்துப் பெண்கள் சில நேரங்களில் தமது பிள்ளைகளை "அரசாளுவாயாக!" என்று திட்டுவார்கள். அதாவது அவர்கள் திட்டும் போதுகூட அது பிரார்த்தனையாக இருந்தது.

 

பிறரிடம் கேட்டுக்கொள்வது

 

ஒருமுறை ஹசன் அல்பஸ்ரி (ரஹ்) அவர்களின் தாயார் கைரா (ரஹ்) அவர்கள் குழந்தையாக இருந்த இவரை கொண்டுபோய் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்து, "இந்தக் குழந்தையின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள்" என்று வேண்டிக்கொண்டார்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எவ்வாறு பிரார்த்தித்தார்களோ அதைப்போன்று உமர் (ரலி) அவர்கள் ( اللهم فَقِّهُ فِي الدِّينِ وَحَبِّبهُ اِلَي النَّاسِ ) இறைவா! இந்த குழந்தைக்கு மார்க்க ஞானங்களை நிரப்பமாக தருவாயாக! இந்த குழந்தையை மக்களால் விரும்பப்படுபவராக ஆக்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

 

முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. எனது குழந்தை இயாஸ் பிறந்தபோது நபித்தோழர்களில் சிலரை அழைத்து விருந்து கொடுத்தேன். பிறகு அவர்கள் எனது குழந்தைக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது நான், ( إِنَّكُمْ قَدْ دَعَوْتُمْ فَبَارَكَ اللَّهُ لَكُمْ فِيمَا دَعَوْتُمْ ) "என் குழந்தைக்குப் பிரார்த்தனை புரிந்த உங்களுக்கு அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! என்றேன். மேலும் நானும் பிரார்த்தனை செய்கிறேன் நீங்கள் அதற்கு ஆமீன் சொல்லுங்கள்" என்று கூறிவிட்டு, குழந்தையின் மார்க்கப்பற்றுக்காகவும் கல்வி ஞானத்திற்காகவும் இன்ன பிறவற்றுக்காகவும் அதிகமாகப் பிரார்த்தனை செய்தேன். நிச்சயமாக நான் அன்றைய நாளில்தான் அது விஷயத்தில் பிரார்த்தனை உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-1255

 

மார்க்க அறிஞர்கள், இறையச்சமுள்ள பெரியவர்கள் ஆகியோரை சந்திக்கும் போதெல்லாம் நமது பிள்ளைகளின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை செய்யுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அவர்களின் பிரார்த்தனையால் நமது பிள்ளைகளின் வாழ்வு சிறந்தோங்கி விடலாம்.

 

செய்தால் செய்யப்படும்

 

"முன் கை நீண்டால் முழங்கை நீளும்" என்பது கிராமத்துச் சொல்வழக்கு

 

முதலில் நாம் ஒன்றை செய்து ஆரம்பித்து வைத்தால் அதைப்பார்த்து பிறரும் செய்து அதை முழுமைப்படுத்துவார்கள்.

 

எங்கள் இறைவனே! எனக்கும், என் தாய் தந்தைக்கும், மற்ற நம்பிக்கையாளர்களுக்கும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பளிப்பாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) திருக்குர்ஆன்:- 14:41

 

பெற்றோர்களே! நீங்கள் முதலில் உங்கள் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக பிரார்த்தியுங்கள். பிறகு அவர்கள் உங்கள் நல்வாழ்வுக்காக பிரார்த்திப்பார்கள் என்பதைத் தான் இந்த (14:40,41) இரண்டு வசனங்களும் எடுத்துரைக்கிறது.

 

சாபம் வேண்டாம்

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த 'ஜுரைஜ்’ என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு மனிதர் (தமது ஆசிரமத்தில்) தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். அவருக்குப் பதிலளிக்க மறுத்துவிட்ட ஜுரைஜ், ‘‘நான் தாய்க்குப் பதிலளிப்பதா, அல்லது தொழுவதா?” என்று (மனத்திற்குள்) கூறிக்கொண்டார். பிறகு (மீண்டும்) அவருடைய தாயார் அவரிடம் வந்து, (தான் அழைத்தும் தன் மகன் பதிலளிக்கவில்லையே என்ற கோபத்தில்), ( اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ الْمُومِسَاتِ ) ‘‘இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்கச் செய்யாத வரை அவனுக்கு (ஜுரைஜுக்கு) மரணத்தைத் தராதே” என்று கூறினார்.

 

(ஒருநாள்) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தார். அப்போது ஒரு பெண், ‘‘நான் ஜுரைஜை நிச்சயம் சோதனைக்குள்ளாக்குவேன்” என்று சொல்லிக்கொண்டு, ஜுரைஜின் முன்பு வந்து அவருடன் (தகாத உறவு கொள்ள) அழைத்தாள். அவர் மறுத்துவிட்டார்.

 

அதன்பிறகு அவள், ஓர் இடையனுடன் இணைந்தாள். அதன் காரணமாக ஒரு (ஆண்) குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு, ‘‘இவன் ஜுரைஜுக்குப் பிறந்தவன்” என்று கூறினாள். (இதைக் கேட்ட) மக்கள் (வெகுண்டெழுந்து) ஜுரைஜிடம் வந்து, அவரது ஆசிரமத்தை உடைத்து தகர்த்துவிட்டனர்; அவரை (அவரது அறையிலிருந்து) இறக்கி அவரை ஏசினர்.

 

ஜுரைஜ் அங்கத்தூய்மை செய்து தொழுதார். பிறகு அக்குழந்தையிடம் வந்து, ( مَنْ أَبُوكَ يَا غُلاَمُ ) ‘‘குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அந்தக் குழந்தை (வாய் திறந்து), ‘‘(இன்ன) இடையன்” என்று கூறியது. இதைச் செவியுற்ற மக்கள், ( نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ ) ‘‘உங்கள் ஆசிரமத்தைத் தங்கத்தால் நாங்கள் கட்டித்தருகிறோம்” என்று (ஜுரைஜிடம்) கூறினர். அதற்கு ஜுரைஜ், ( لاَ إِلاَّ مِنْ طِينٍ ) ‘‘இல்லை; களிமண்ணால் கட்டித்தந்தாலே போதும்” என்று கூறினார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2482

 

யாஸீத் பின் ஹவ்ஷாப் அல்ஃபிஹ்ரிய்யு ரஹ் அவர்கள் தமது தந்தையிடம் இருந்து அறிவிக்கிறார். பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ كانَ جُرَيْجٌ الرّاهِبُ فَقِيهًا عالِمًا، لَعَلِمَ أنَّ إجابَتَهُ أُمَّهُ أفْضَلُ مِن عِبادَةِ رَبِّهِ )  "துறவியாக வாழ்ந்த ஜுரைஜ் ஒரு அறிவாற்றல் நிறைந்த சட்ட வல்லுநராக இருந்திருந்தால், தனது தாயாருக்கு பதிலளிப்பது தனது இறைவனை வணங்குவதைவிட சிறந்தது என்பதை அவர் அறிந்திருப்பார்" என்றுகூறினார்கள். நூல்:- அல்பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் பனீ இஸ்ராயீல் வசனம்-23

 

(புகழ்பெற்ற தஃப்சீர் கஷ்ஷாஃப் நூலின் ஆசிரியரும், பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளராகவும் விளங்கிய) இமாம் அபுல் காசிம் ஸமஹ்ஷரீ (ரஹ்) அவர்களின் ( أَبُو الْقَاسِمِ مَحْمُودِ بْنِ مُحَمَّدٍ الزَّمَخْشَرِيّ الْخُوَارِزْمِيّ ஹிஜ்ரீ 467-538 ) ஒரு கால் ஊனமாகிவிட்டதால், கட்டை காலுடன் நடந்து சென்றபோது  அன்னாரிடம், கால் ஊனமானதற்கான காரணத்தை வினவப்பட்டது.

 

இமாம் அவர்கள், என்னுடைய தாயாரின் சாபம் தான் காரணம். அதாவது, நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு சிட்டுக்குருவியை வளர்த்து வந்தேன். அந்தக் குருவியின் காலில் ஒரு நூலை கட்டி அதனுடன் நான் விளையாடுவது வழக்கமாகும். ஒரு நேரத்தில் அந்தக் குருவி ஒரு பொந்தில் நுழைந்துகொண்டது. குருவியின் காலில் கட்டி இருந்த நூலைப் பிடித்து பலமுறை மெதுவாக இழுத்துப் பார்த்தேன். அது வெளியே வரவில்லை இறுதியாக, பலமுடன் அந்த நூலை வேகமாக வெளியே இழுத்தேன். அப்போது அந்த நூலோடு குருவியின் ஒரு கால் மட்டும் ஒடிந்து கொண்டு வந்துவிட்டது இதைப் பார்த்து வேதனைப்பட்ட என் தாயார், ( قَطَعَ اللَّهُ رِجْلُكَ كَمَا قَطَعْتَ رِجْلَهُ ) "(ஸமஹ்ஷரீ) நீ குருவியின் காலை ஒடித்தது போல், அல்லாஹ் உம்முடைய காலையும் ஒடிப்பானாக! (இவ்வாறு விளையாடாதே! என்று நான் பலமுறை கூறினேனே கேட்டாயா?)" என்று கூறினார்.

 

பிறகு நான் அறிவைத் தேடும் வயதை அடைந்தபோது, அறிவைத் தேடி புகாராவுக்குப் பயணம் செய்தேன். நான் (அந்தப் பயணத்தில்) என் வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டேன். அப்போது என் கால் உடைந்துவிட்டது. (சிகிச்சை செய்த பிறகும்) அது எனக்கு ஏதோ செய்தது. பிறகு அதை வெட்டியெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (அன்று என் தாயார் கூறிய வார்த்தையின் பாதிப்பை இன்று என் வாழ்வில் அனுபவிக்கிறேன்)" என்று கூறினார்கள். நூல்:- வஃபயாதுல் அஃயான் ( وفيات الأعيان ) இப்னு கல்க்கான் ( ابن خلكان ), அல்வாளிஹு ஃபீ உலூமில் குர்ஆன் ( اَلْوَاضِحُ فِي عُلُومِ الْقُرْانِ )  முஸ்தஃபா தீபில் புஙா ( مُصْطَفَى دِيبِ الْبُغَا )

 

வார்த்தைகளின் பாதிப்பை உணராத தாய்மார்கள் சாதாரண காரியத்திற்கெல்லாம் தனது அன்பு குழந்தைகளை "நாசமாக போ! அழிந்து போ!" என்று திட்டித் தீர்த்துவிடுகிறார்கள். பிற்காலத்தில் அந்த வார்த்தைகளின் பாதிப்பை நம் அன்பு குழந்தைகள் அனுபவிப்பார்களே என்று இவர்கள் உணர வேண்டாமா?

 

நமது பிள்ளைகளின் நல்வாழ்விற்காக அதிகம் பிரார்த்தனை செய்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோமாக! அல்லாஹுத்தஆலா, நமது பிள்ளைகளுக்காக நாம் செய்கின்ற பிரார்த்தனையை ஏற்று, அவர்களின் இரு உலக  வாழ்க்கையையும் செழிப்பாக்கி வைப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

பயனளிப்பவர்

  பயனளிப்பவர்    وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம்...