மன்னிப்பாயாக!
وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ
نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا
எவரேனும், யாதொரு பாவத்தைச்
செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொண்டு,
பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கவலைப்பட்டு)
அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும்
(அவன் மீது) நிகரற்ற அன்புடையவனாகவும் காண்பான். திருக்குர்ஆன்:- 4:110
மனிதன் தமது தவறுகளையும்
குறைகளையும் உணர்ந்து ஏக இறைவானான அல்லாஹுத்தஆலாவிடம்
மன்னிப்புக் கோர வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகிறது.
குர்ஆனின் பல வசனங்களில், அல்லாஹ் தன்னை மிகவும்
தாராளமாகவும், இரக்கமுள்ளவனாகவும், தனது படைப்புகளை மன்னிப்பவனாகவும் விவரிக்கிறான்.
குர்ஆனின் ஒவ்வொரு
அத்தியாயத்தின் தொடக்கத்திலும் (அத்தவ்பா என்ற அத்தியாயத்தை தவிர) "அளவற்ற அருளாளனும்
நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்" என்ற வசனம் இந்த உண்மைக்கு மேலும்
சான்றளிக்கிறது.
பாவங்களில் சிக்கிக்கொள்வது
மனித இயல்பு. உடனே பாவத்திற்காக வருந்தித் திருந்துவது சிறப்புத்தன்மையாகும். பாவத்திலேயே
மூழ்கி வாழ்ந்துகொண்டிருப்பது மடத்தன்மையாகும்.
மனிதனுக்கு மறதி, அறியாமை, ஆத்திரம் முதலியவற்றால்
பல தவறுகள் ஏற்படும். அவை தவறு என்று தெரிந்த பின்னும் திருந்திடாமலிருந்தால் பாவம்
தலையளவு மூழ்கியபின் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? என்றெண்ணி, எத்தனையோ பாவங்களைச் செய்துவிட்டோம், நமக்கு இனி கதியே
இல்லை என்று விரக்தியடைந்து, விட்டில்பூச்சி விளக்கைச் சுற்றிச்சுற்றி வந்து தன் உயிரையே
மாய்த்துக்கொள்வதைப்போல அப்பாவங்களிலேயே மூழ்கிப் பரிதவிப்போருக்குப் பாவமன்னிப்பு
கோரல் சிறந்த மருந்தாகும்.
ஒருவர் தாம் செய்துவிட்ட
பாவங்களைப்பற்றி அலட்சியமாக இருப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இது ஷைத்தானின்
சூழச்சி என்று விளங்கவேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( إنَّ لِلقُلُوبِ صَدَأً، كَصَدَأِ الحَدِيدِ، وَجِلَاؤُهَا الاِستِغفَارُ ) இரும்பு துருப்பிடிப்பதைப்போல்
உள்ளங்களும் துருப்பிடிக்கின்றன. அத்துருவை நீக்கவல்லது இஸ்திஃக்ஃபார் (எனும் பாவமன்னிப்பு
தேடுதல்) ஆகும். நூல்:- தப்ரானீ
அருள்வளங்கள்
அனைத்தையும் பெற
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَزِمَ الِاسْتِغْفَارَ جَعَلَ اللَّهُ لَهُ مِنْ كُلِّ ضِيقٍ
مَخْرَجًا وَمِنْ كُلِّ هَمٍّ فَرَجًا وَرَزَقَهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ) எவரேனும் வழக்கமாகப் பாவமன்னிப்புக் கோரி வந்தால் அவருக்கு, ஒவ்வொரு கவலையையும்
அகற்றி மகிழ்ச்சியையும், ஒவ்வொரு நெருக்கடியிலிருந்து விடுபடும் வழியையும் அல்லாஹ்
அமைத்துக்கொடுப்பான். மேலும், அவர் எதிர்பாராத திசையிலிருந்து (ரிஸ்க் எனும்) வாழ்வாதாரத்தையும்
அவருக்கு அல்லாஹ் வழங்குவான். அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்
நூல்:- அபூதாவூத்-1297, இப்னுமாஜா-3809, முஸ்னது அஹ்மத், தப்ரானீ, ஹாகிம்
ரபீஉ பின் சபீஹ்
(ரஹ்) அவர்கள் கூறியதாவது. மாமேதை இமாம் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் சபைக்கு ஒருவர்
வந்து, (இமாம் அவர்களே! நான்
மிகவும் சிரமப்படுகிறேன். என்று கூறி) தமது வறுமை நிலையை முறையிட்டார். இமாமவர்கள், ( اسْتَغْفِرِ اللَّهَ ) "நீங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு
கோருங்கள். (அதாவது, இஸ்திக்ஃபார் செய்து வாருங்கள்)" என்றார்கள். சிறிது நேரம்
கழித்து மற்றொருவர் வந்து, ( ادْعُ اللَّهَ أَنْ يَرْزُقَنِي وَلَدًا ) “(இமாம் அவர்களே! நான் நெடுநாள்களாக குழந்தை செல்வமின்றி தவிக்கிறேன்.
எனவே,) எனக்கு குழந்தை செல்வம்
கிடைக்கப்பெற, நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். இமாமவர்கள், "நீங்கள் இஸ்திக்ஃபார்
செய்து வாருங்கள்" என்றார்கள். சிறிது நேரம் கழித்து மற்றொருவர் வந்து, ( وَشَكَا إِلَيْهِ آخَرُ جَفَافَ بُسْتَانِهِ ) “(இமாம் அவர்களே! எங்கள் ஊரில் மழை பொய்த்துவிட்டது. வயல்களெல்லாம்
வறண்டுவிட்டது என்று தமது) விவசாயத்தின் வறட்சி நிலை குறித்து முறையிட்டார். இமாமவர்கள், "நீங்கள் இஸ்திக்ஃபார்
செய்து வாருங்கள்" என்றார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த
ஒருவர் வியப்போடு, "இமாமவர்களே! மூவரும் மூன்று விதமான பிரச்சனைகளோடு உங்களிடம்
வந்தார்கள். தாங்களோ ஒரே மறுமொழி அளித்துள்ளீர்கள்!" என்று வியப்புடன் வினவினார்.
இமாமவர்கள், ( مَا قُلْتُ مِنْ عِنْدِي شَيْئًا، إِنَّ
اللَّهَ تَعَالَى يَقُولُ فِي سُورَةِ "نُوحٍ": اسْتَغْفِرُوا رَبَّكُمْ
إِنَّهُ كانَ غَفَّاراً يُرْسِلِ السَّماءَ عَلَيْكُمْ مِدْراراً وَيُمْدِدْكُمْ
بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا ) “நானாக எந்த
ஒன்றையும் சொல்லவில்லை. அல்லாஹ் தான் நூஹ்
அத்தியாயத்தில் இவ்வாறு கூறுகிறான். உங்கள் இறைவனிடம்
மன்னிப்புக்கோருங்கள். சந்தேகமின்றி பெரிதும் மன்னிப்பவன் ஆவான். அவன் உங்கள் மீது
வானத்திலிருந்து மழையை பொழியச் செய்வான்; செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான்; உங்களுக்காக தோட்டங்களை
உருவாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்” (திருக்குர்ஆன்:-71:10,11,12) ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். நூல்:- தஃப்சீர் குர்துபீ, தப்சீர் ராஸீ, தஃப்சீர்
ஸஅலபீ
குழந்தை பாக்கியம்
பெற
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஒரு அன்சாரித் தோழர்
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ( مَا رَزَقْتُ وَلَدًا قَطُّ وَلَا وَلَدَ لِي وَلَدٌ ) “(நாயகமே!) எனக்கு குழந்தை
செல்வமே இல்லை (எனவே, அதற்காக ஏதேனும் ஒரு வழிபாட்டைக் கற்றுத்தாருங்கள்)” என்று கேட்டார்.
நபியவர்கள், ( فَأَيْنَ أَنْتَ عَنِ الِاسْتِغْفَارِ وَكَثْرَةِ الصَّدَقَةِ
يَرْزُقُ اللَّهُ بِهِمَا الْوَلَدَ ) "நீர் ஏன் பாவமன்னிப்பு தேடுதல் மற்றும் அதிகமாக
தர்மம் செய்வதை விட்டுவிட்டீர்? இவை இரண்டையும் செய்து வந்தால் அல்லாஹ் குழந்தையைத்
தருவான். (அதாவது, இவை இரண்டையும் அதிகமாக செய்து வருவீராக!)" என்று கூறினார்கள்.
அதேபோல் அவர் செய்து வந்தார். இந்த நபிமொழியின் அறிவிப்பாளரான ஜாபிர் (ரலி) அவர்கள்
கூறுகிறார். (அதன் பரக்கத்தால்) அந்த மனிதர் (பிற்காலத்தில்) ஏழு ஆண் குழந்தைகள் கிடைக்கப்பெற்றார்.
நூல்:- முஸ்னது இமாம் அபூஹனீஃபா, இப்னு இராக்கி அல்கினானிய்யீ, தன்ஸீஹுஷ் ஷரீஆ 2/143 ( ابْنُ عِرَاقٍ الْكِنَانِيُّ
, تَنْزِيهُ الشَّرِيعَةِ ٢/١٤٣ )
இறைவனிடம், குழந்தை பாக்கியத்தை
கோருவோர் உடலாலும் பொருளாலும் வணக்க வழிபாடுகள் புரியவேண்டும் என்கிறது இந்த நபிமொழி.
மழைப்
பொழிய
நீங்கள் உங்கள் இறைவனிடத்தில்
பாவமன்னிப்புக் கோரி (பாவங்களை விட்டு) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால்)
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் அனுபவிப்பதற்காக மிகச்சிறந்த வாழ்வாதாரங்களை வழங்குவான்.
திருக்குர்ஆன்:- 11:3
ஒருமுறை
இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் காலத்தில் பனீ இஸ்ரவேலர்களுக்கு மழையின்றி பஞ்சம்
ஏற்பட்டது. அப்போது மூசா (அலை) அவர்களும், அவர்களின் தோழர்களில் எழுபதாயிரம் பேருக்கும்
அதிகமானோரும் ஒன்றுகூடி மழையை இறக்கியருளும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
இவ்வாறு பிரார்த்தனையில் ஈடுபட்டும் பயன் ஒன்றும் இல்லை. அப்போது மூசா (அலை)
அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள்.
அப்போது அல்லாஹ்,
“மூசா! இங்கு கூடியிருக்கும் மக்களில் ஒருவர் சுமார் நாற்பதாண்டு
காலமாக எனக்கு மாறுசெய்து கொண்டிருக்கின்றார். அவரின் காரணமாகவே நான் மழையை இறக்கியருளவில்லை. எனவே, அவரை அங்கிருந்து வெளியேறச் சொல்லுங்கள்” என்று கூறினான்.
உடனே, மூசா (அலை) அவர்கள்
(அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி!) ( يَا أَيُّهَا الْعَبْدُ الْعَاصِي الَّذِي يُبَارِزُ
اللَّهَ مُنْذُ أَرْبَعِينَ سَنَةً ، اَخْرُجْ مِنْ بَيْنِ أَظْهُرِنَا ، فَبِكَ مَنَعْنَا
الْمَطَرَ ) "நாற்பதாண்டு
காலங்களாக அல்லாஹ்விற்கு மாறுசெய்து கொண்டிருக்கும் பாவியான அடியாரே! இப்போது நீர்
எங்களிடமிருந்து வெளியேறிவிடுவீராக! உன்னால் தான் நாங்கள் தற்போது மழை வராமல் தடுக்கப்பட்டுள்ளோம்"
என்று கூறினார்கள்.
அந்தப் பாவியான அடியார்
தமது வலப்புறமும் இடப்புறமும் திரும்பிப் பார்த்தார். அந்தக் கூட்டத்திலிருந்து யாரும்
வெளியேறவில்லை. பிறகு நம்மைத்தான் இவ்வாறு சொல்லப்படுகிறது என்று அறிந்துகொண்டார்.
எனவே, அவர் தமக்குள், "இந்த மக்களிடத்திலிருந்து
நான் இப்போது வெளியேறினால் நான் அம்பலப்பட்டு போவேன் (அசிங்கப்பட்டு போவேன்.) மாறாக,
இவர்களுடனே நான் அமர்ந்துகொண்டால் என்னால்
இவர்களுக்கு மழை தடுக்கப்பட்டுவிடும்" என்று பேசிக்கொண்டார்.
பிறகு, அவர் தான்
அணிந்திருந்த ஆடையின் ஒரு பகுதியைக்கொண்டு தன் தலையை மூடிக்கொண்டு கவலைப்பட்டவராக,
( إِلَهِي وَسَيِّدِي ، عَصَيتُكَ أَرْبَعِينَ
سَنَةً وَأَمْهَلْتَنِي ، وَقَدْ أَتَيْتُكَ طَائِعًا فَاقْبَلْنِي ) “என் இறைவா! என் தலைவா!
நாற்பது ஆண்டுகளாக நான் உமக்கு மாறுசெய்து வந்தேன், (அப்படியிருந்தும், நான் திருந்துவதற்கு) நீ எனக்கு அவகாசம்
தந்தாய். தற்போது நான் மனம்வருந்தி உன்னிடம் வந்துள்ளேன். என்னுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வாயாக!"
என்று கோரினார். பிறகு, பெரும் மழை பொழிந்தது.
மூசா (அலை) அவர்கள்
( إِلَهِي وَسَيِّدِي ! بِمَاذَا سَقَيْتُنَا
وَمَا خَرَجَ مِنْ بَيْنِ أَظْهُرِنَا أَحَدٌ ؟
) “என் இறைவா! எங்களில் இருந்து யாரும் வெளியேறாமல் இருக்க எவ்வாறு மழை
பொழிந்தது?” என்று கேட்டார்கள். அல்லாஹ், ( يَا مُوسَى سَقَيْتُكُمْ بِاَلَّذِي بِهِ
مَنَعْتُكُمْ ) “யாரால்
இதுவரை மழையை நிறுத்திவைத்திருந்தேனோ அவராலேயே இப்போது மழையைப் பொழியவைத்தேன்”
என்று
கூறினான்.
மூசா (அலை) அவர்கள்,
( إِلَهِي ! أَرِنِي هَذَا الْعَبْدُ
الطَّائِعُ ) "என் இறைவா!
எனக்கு அந்த பாவியை அடையாளம் காட்டுவாயாக!" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், ( يَا مُوسَى ! إِنِّي لَمْ أَفْضَحْهُ وَهُوَ
يَعْصِينِي أَأَفْضَحُهُ وَهُوَ يُطِيعَنِي؟ ) "மூசா! அவர் எனக்குக்
மாறுசெய்துகொடிண்ருந்தபோதே நான் அவரை அம்பலப்படுத்தவில்லை. அவர் எனக்குக் கீழ்ப்படிந்தபோது
நான் அவரை அம்பலப்படுத்துவேனா?” என்று கூறி மறுத்துவிட்டான். நூல்:- கிதாபுத்
தவ்வாபீன் இமாம் இப்னு குதாமா
ஒருமுறை ஜனாதிபதி
உமர் (ரலி) அவர்கள் மழைக்காக பிரார்த்தனை செய்ய சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீதேறி தொடர்ந்து
பாவமன்னிப்புத் தேடிக் கொண்டே இருந்தார்கள். பிறகு இறங்கிவிட்டார்கள். காரணம் கேட்டதற்கு, "இதுதான் மழைக்கான
பிரார்த்தனை" என்றார்கள்.
இமாம் அபூஹனீஃபா
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மழைத்தொழுகையின் அடிப்படையே இஸ்திக்ஃபார் தான்.
ஆசைகள் நிறைவேற
இமாம் அஹ்மத் பின்
ஹன்பல் (ரஹ்) அவர்கள் ஒரு ஊருக்குச் சென்றார்கள். அந்த மக்களுக்கு அவர்களை யாரென்று
தெரியாது. மேலும் அவர்கள் மிக களைப்பாக இருந்ததால் சற்றுநேரம் பள்ளிவாசலில் உறங்க முடிவு
செய்தார்கள். இதைப் பார்த்த பள்ளிவாசலின் காவலர், “இங்கெல்லாம் தங்க அனுமதிக்க முடியாது” என்று கூறிவிட்டார். இமாமவர்கள் (மிகுந்த
களைப்புடன் இருந்ததால்) இந்த நடைபாதையில் (கொஞ்ச நேரம்) உறங்கக்கொள்கிறேன் என்று கூறியவாறு
உறங்க ஆயத்தமானார்கள். (இமாமவர்களின் மதிப்பு மரியாதையை அறியாத) அந்த காவலர் இமாமவர்களின்
காலைப் பிடித்திழுத்துக் கொண்டு போய் பள்ளிவாசலுக்கு வெளியே விட்டுவிட்டார்.
இமாமவர்கள் ஒரு கண்ணியமான
முதியவராக இருந்தார்கள். அவர்களுடைய முகத்தில் இறையச்சம் மற்றும் நல்லொழுக்கத்தின்
அறிகுறிகள் இருக்கும். இமாமவர்களின் நிலையைக் கண்ட ஒரு ரொட்டி வியாபாரி, “தாங்கள் எனது வீட்டில் ஓய்வெடுக்கலாம் வாருங்கள்” என்று அழைத்தார்.
எனவே, இமாமவர்கள் அவருடன் சென்றார்கள்.
அங்கு சென்று ஓய்வெடுத்துக்கொண்டிருந்த
இமாமவர்கள், ரொட்டி வியாபாரி மாவைப் பிசைந்து, ரொட்டிச் சுடும் தமது வேலையைச் செய்து கொண்டிருந்தபோது, பாவமன்னிப்பு கேட்டுகொண்டே இருப்பதையும், கவனித்தார்கள். பாவமன்னிப்பு கேட்பதால் பெரும் நன்மைகள் கிடைக்கும்
என்பதை அறிந்திருந்த இமாமவர்கள், உங்களிடம் ஒரு கேள்விக் கேட்கலாமா? என்றுகூறி, அனுமதி கேட்ட பிறகு ( هَلْ وَجَدْتَ لِاسْتَغْفَارِكَ هَذَا ثَمَرَةً ) "பாவமன்னிப்பு கோரிக்கொண்டே இருக்கும் நீங்கள் இதன் பலனை அனுபவித்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அவர், ( نَعَمْ. أَنَا وَاَللَّهِ كُلَّمَا دَعَوْتُ اللَّهَ دَعْوَةً اسْتَجَابَهَا
لِي مَا عَدَا دَعْوَةً وَاحِدَةً ) "ஆமாம்! அல்லாஹ்வின் மீதாணையாக! (இதன் பலனை நிறையவே அனுபவித்துள்ளேன்.)
(இதுவரை) நான் பிரார்த்தித்த அனைத்து பிரார்த்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
(ஆனால்,) ஒரேயொரு பிரார்த்தனை மட்டும் (இதுவரை) ஏற்றுக்கொள்ளப்படவில்லை"
என்று கூறினார்.
இமாமவர்கள், ( وَمَا هِيَ هَذِهِ الدَّعْوَةُ الَّتِي لَمْ تَسْتَجِبْ؟ ) "அது என்ன ஏற்றுக்கொள்ளப்படாத
பிரார்த்தனை?" என்று வினவினார்கள். அவர், ( دَعَوْتُ اللَّهَ أَنْ يُرِيَنِي الْإِمَامُ أَحْمَدَ بْنَ حَنْبَلٍ )
"(மாமேதை) இமாம் அஹ்மத்
பின் ஹன்பல் (ரஹ்) அவர்களை காணவேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்து வருகிறேன்.
(இந்த பிரார்த்தனை மட்டும் தான் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாமல் இருக்கிறது)" என்று
கூறினார். இமாமவர்கள்,
( أَنَا الْإِمَامُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَاللَّهِ إِنِّي جَرَرْتُ
إِلَيْكَ جَرًّاً؟ ) "நான் தான் (நீங்கள் காண ஆசைக்கொண்ட)
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (சொல்கிறேன். இதற்காக தான்,) உங்களின் பக்கம் இழுத்துக் கொண்டு வரப்பட்டேனா?” என்றார்கள். (அதை கேட்டதும் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.)
நூல்:- மனாகிப் இமாம் அஹ்மத் - இமாம் இப்னு ஜவ்ஸீ, சியரு அஃலாமுந் நுபலா, தாரீக் பக்தாத், அல்பிதாயா வந்நிஹாயா
அதிகமாக பாவமன்னிப்புக் கோருபவருக்கு இத்தகு சிறப்பு கிடைக்கும். மறுமைநாளில் தேவைப்படும்போது அதற்கான பலன்களைப் பெரிய அளவில் இறைநம்பிக்கையாளர் கண்டு பெருமகிழ்ச்சி கொள்வார்.
நாம் தொடர்ந்து இஸ்திங்ஃபார் செய்துக்கொண்டே இருப்பதின் மூலம் நம்முடைய நீண்டகால ஆசை, நம்மைத் தேடி வந்து நிறைவேற்றப்படலாம்.
உள்ளம் மென்மையாக
ஹுதைஃபா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ( كَانَ
فِي لِسَانِي ذَرَبٌ عَلَى أَهْلِي وَكَانَ لاَ يَعْدُوهُمْ إِلَى غَيْرِهِمْ ) நான் என் குடும்பத்தாரிடம் (கனிவில்லாமல்) கடுமையாகப் பேசிவந்தேன். மற்றவர்களிடம்
கடுமையாகப் பேசுவதில்லை. இவ்விஷயத்தை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்.
அப்போது நபியவர்கள், ( أَيْنَ أَنْتَ مِنَ الاِسْتِغْفَارِ
تَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً ) "நீர் ஏன் பாவமன்னிப்புத் தேடுவதில்லை. நாள்தோறும்
எழுபது தடவை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக" என்று கூறினார்கள். நூல்:-
இப்னுமாஜா-3807 தாரிமீ, இப்னு ஹிப்பான், முஸ்னது அஹ்மத்
உமர் (ரலி) அவர்கள்
கூறினார்கள். ( جَالِسُوا
التَّوَّابِينَ ، فَإِنَّهُمْ أَرَقُّ شَيْءٍ أَفْئِدَةً ) பாவமன்னிப்பு கோருபவர்களுடன் அமருங்கள். ஏனெனில், அவர்களின் உள்ளங்கள்
மென்மையாக இருக்கும். நூல்:- அஸ்ஸுஹ்த்
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் பக்கம்-99
இமாம் ஷாஃபிஈ (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். ( الْعَاقِلُ إِذَا اخْطَأَ يَتَأَسَّفُ وَالْأَحْمَقُ إِذَا اخْطَأَ يَتَفَلْسَفُ ) புத்திசாலி தவறிழைத்தால் அதற்காக மனம் வருந்துவான். மடையன் தவறு செய்தால் தத்துவம் பேசிக்கொண்டிருப்பான்.
குற்றப் பரிகாரம்
மேலும், அவர்கள் பாவமன்னிப்பைக்
கோரிக்கொண்டிருக்கும்வரை அவர்களை அல்லாஹ் அடியோடு அழிக்கவே மாட்டான். திருக்குர்ஆன்:-
8:33
அண்ணல் நபி (ஸல்)
அவர்களிடம் ஒருவர் வந்து, “சகுனம் பார்த்தல், பொறாமை கொள்ளுதல், கெட்ட சந்தேகம் கொள்ளுதல் போன்ற பாவச் செயல்கள் செய்துவிட்ட மனிதரிடத்திலிருந்து அவற்றை அப்புறப்படுத்திப்
பரிகாரம் தருபவை யாவை?” என்று வினவினார். அண்ணலார், ( إِذَا حَسَدْتَ فَاسْتَغْفِرِ اللَّهَ،
وَإِذَا ظَنَنْتَ فَلَا تُحَقِّقْ، وَإِذَا تَطَيَّرْتَ فَأمض ) "நீ பொறாமைப்பட்டால் அஸ்தக்ஃபிருல்லாஹ் (அல்லாஹ்விடத்தில்
நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்) என்று சொல்! நீ ஐயம்கொண்டால் அதைப்பற்றி தீர விசாரித்துக்கொண்டிருக்காதே!
நீ ஒரு விஷயத்தைக் குறித்து அபசகுனமாகக் கருதினால் (அதைப் பொருட்படுத்தாமல்) போய்க்கொண்டே
இரு!” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்கள் நூல்:-
தப்ரானீ, தஃப்சீர் இப்னுகஸீர்
அல்ஹுஜுராத் வசனம்-12
மஹ்மூத் பின் அஹ்மத்
அல்ஃபார்யாபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இரண்டு விஷயங்களை அடியான் செய்தால் அதற்குப்
பதிலாக இரண்டு விஷயங்களை அல்லாஹ் அளிக்கின்றான். நன்றி செலுத்தினால் வாழ்வாதாரத்தில்
அருள்வளம் பொழிகிறான். அடிக்கடி இஸ்திக்ஃபார் செய்தால் அவன் குற்றங்குறைகளை மன்னித்து
இல்லாததைப் போன்று ஆக்கிவிடுகிறான்.
மனம் வருந்து!
தீய செயலைச் செய்த
பின்பு மனம் வருந்தி, தன் குற்றத்தை சீர்திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவருடைய பாவமன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
திருக்குர்ஆன்:- 5:39
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ( يَا رَسُولَ اللَّهِ ابْنُ جُدْعَانَ كَانَ
فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ وَيُطْعِمُ الْمِسْكِينَ فَهَلْ ذَاكَ
نَافِعُهُ ) அப்துல்லாஹ் பின் ஜத்ஆன் என்பவர் அறியாமைக்
காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும், ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை
அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?" என்று கேட்டேன்.
அதற்கு நபியவர்கள், ( لاَ
يَنْفَعُهُ إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ
الدِّينِ ) “அது அவருக்கு பயனளிக்காது. ஏனெனில், அவர் ஒருநாள்கூட 'இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக' என்று கேட்டதில்லை" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-365, முஸ்னது அஹ்மத்
அலீ (ரலி) அவர்கள், ( اَلْعَجَبُ
مِمَّنْ يَهْلِكُ وَمَعَهُ النَّجَاةِ
) "ஒரு மனிதனின் வெற்றிச்சாவி
அவனது கையில் இருந்தபோதும், அவன் அழிந்து போவதைக்கண்டால் ஆச்சரியமாக இருக்கிறது" என்றார்கள்.
அது என்ன? என்று வினவப்பட்டது.
( الِاسْتِغْفَارُ ) "பாவமன்னிப்புத் தேடுதல்" என்று பதிலளித்தார்கள்.
நூல்:- அத்ததாவீ பில் இஸ்திக்ஃபார் ( التَّدَاوِي بِالِاسْتِغْفَارِ )
அலீ (ரலி) அவர்கள்
கூறினார்கள். ( مَا
أَلْهَمَ االلَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى
عَبْدًا الِاسْتِغْفَارَ وَهُوَ يُرِيدُ أَنْ يُعَذِّبَهُ ) பரிசுத்தமும்
உயர்வும் மிகுந்த அல்லாஹ் ஒரு அடியானை தண்டிக்க நாடுவிட்டால் அவன் உள்ளத்தில் பாவமன்னிப்புத்
தேடவேண்டும் என்ற எண்ணத்தையே உண்டாக்கமாட்டான். நூல்:- அத்ததாவீ பில் இஸ்திக்ஃபார்
அஹ்னஃப் பின் கைஸ்
(ரஹ்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ( صَاحِبُ الْيَمِينِ يَكْتُبُ الْخَيْرَ، وَهُوَ أَمِيرٌ
عَلَى صَاحِبِ الشِّمَالِ، فَإِنْ أَصَابَ الْعَبْدُ خَطِيئَةً قَالَ لَهُ:
أَمْسِكْ، فَإِنِ اسْتَغْفَرَ اللَّهَ تَعَالَى نَهَاهُ أَنْ يَكْتُبَهَا، وَإِنْ
أَبَى كَتَبَهَا ) வலப்பக்கத்திலுள்ள
வானவர் நன்மைகளை எழுதுகிறார். அவர் இடப்பக்கத்திலுள்ள வானவர் மீது நம்பிக்கைக்குரிய
கண்காணிப்பாளராக இருக்கிறார். மனிதன் ஏதேனும் தவறைச் செய்துவிட்டால் இடப்பக்கத்திலுள்ள
வானவரிடம் எழுதுவதைச் சற்றுநிறுத்து! என்று வலப்பக்கத்திலுள்ள வானவர் கூறுகிறார். உயர்ந்தோன்
அல்லாஹ்விடம் அந்த மனிதன் மன்னிப்புத்தேடினால் அதனை எழுதவேண்டாம் என்று அவரைத் தடுத்துவிடுவார்.
அவன் மன்னிப்புத் தேட மறுத்தால் அதனை அவர் எழுதிப் பதிவுசெய்வார். நூல்:- தஃப்சீர்
இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர் காஃப் வசனம்-18
எல்லா
நிலைகளிலும்
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( طُوبَى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا ) தமது வினைப் பதிவேட்டில்
அதிகமாக பாவமன்னிப்புக் கோரல் இடம்பெற்றிருக்கக் காண்பவருக்கு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-3808
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَلَيْكُمْ بِلَا إلَهَ إِلَّا اللهُ والاسْتِغْفَار، فأكْثرُوا
مِنْهُمَا، فإنَّ إبْليسَ قَالَ: أهْلَكْتُ النَّاسَ بالذُّنُوبِ، وأهْلَكُونِي بِلَا
إلَهَ إِلَّا اللهُ والاسْتِغْفَار ) 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவதையும் பாவமன்னிப்பு கோருவதையும்
வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவற்றை அதிகமாக செய்யுங்கள். ஏனெனில் இப்லீஸ், “நான் மக்களைப் பாவங்கள் மூலம் அழிக்கிறேன்; ஆனால், அவர்களோ 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுவதன் மூலமும் பாவமன்னிப்பு கோருவதன் மூலமும் என்னை அழிக்கிறார்கள்” என்று கூறுகிறான். அறிவிப்பாளர்:- அபூபக்ர் (ரலி)
அவர்கள் நூல்:- முஸ்னது அபீயஅலா, தஃப்சீர் இப்னு கஸீர் ஆலுஇம்ரான்
வசனம்-134
ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறினார்கள். ( طُوبَى
لِمَنْ وُجِدَ فِي صَحِيفَتُهُ اسْتِغْفَارًاً كَثِيرًاً ) யாருடைய விதி ஏட்டில் இஸ்திக்ஃபார் அதிகமதிகம் எழுதப்பட்டுள்ளதோ
அவருக்கு வாழ்த்துக்கள். நூல்:- அத்ததாவீ பில் இஸ்திக்ஃபார்
ஹசன் அல்பஸரி (ரஹ்)
அவர்கள் கூறுகிறார்கள். ( أَكْثِرُوا مِنَ الِاسْتِغْفَارِ فِي بُيُوتِكُمْ، وَعَلَى مَوَائِدِكُمْ، وَفِي
طُرُقِكُمْ ،وَفِي أَسْوَاقِكُمْ، وَفِي مَجَالِسِكُمْ ؛فَإِنَّكُمْ لَا تَدْرُونَ
مَتَى تَنْزِلُ الْمَغْفِرَةُ ) நீங்கள், உங்கள் வீடுகளில்
இருக்கின்றபோதும், உணவு உண்ணுகின்றபோதும், வீதிகளில் செல்கின்றபோதும், கடைவீதிகளில் இருக்கின்றபோதும், சபைகளில் அமர்ந்திருக்கின்றபோதும் (என அனைத்து நிலைகளிலும்)
பாவமன்னிப்பு தேடுதலை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். நிச்சயமாக, நீங்கள் எங்கு இருக்கின்றபோது
உங்களுடைய பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (எனவே,
நீங்கள் அனைத்து நிலைகளிலும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு தேடுங்கள்.) நூல்:- இப்னு
அபீதுன்யா ஃபித்தவ்பா,
நவாதிருல் உஸூலி அந்நுஸ்கத்துல்
முஸ்னதாஹ் 4/291 ( نَوَادِرُ
الْأُصُولِ النُّسْخَةُ الْمُسْنَدَةُ )
மறுமைநாள் வரை
நீர் அவர்களிடையே
இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்யமாட்டான்;
மேலும், அவர்கள் பாவமன்னிப்பைக்
கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை. திருக்குர்ஆன்:-
8:33
அண்ணல் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருமுறை ஷைத்தான் அல்லாஹ்விடம், ( وَعَزَّتِكَ يَا رَبِّ، لَا أَبْرَحُ أغْوِي
عِبَادَكَ مَا دَامَتْ أَرْوَاحُهُمْ فِي أَجْسَادِهِمْ ) “இறைவா! உனது கண்ணியத்தின் மீதாணையாக! உன் அடியார்களை அவர்களின்
உடல்களில் உயிர் இருக்கும்வரை நான் வழிப் பிரழச் செய்துகொண்டே இருப்பேன்” என்று கூறினான்.
அப்போது அல்லாஹ், ( وَعِزَّتِي
وَجَلَالِي، لَا أَزَالُ أَغْفِرُ لَهُمْ مَا اسْتَغْفَرُونِي ) “எனது கண்ணியத்தின் மீதும், மாட்சிமை மீதும் ஆணையாக
அவர்கள் என்னிடம் பாவமன்னிப்பு கோரிக் கொண்டிருக்கும்வரை அவர்களுக்கு நான் மன்னிப்பு
வழங்கிக்கொண்டே இருப்பேன்” என்று கூறினான் அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர் அல்அன்ஃபால் வசனம்-33
நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْعَبْدُ آمِنٌ مِنْ عَذَابِ اللَّهِ مَا استغفر الله ) ஒரு அடியான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரிக்கொண்டிருக்கும் வரை
அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அச்சமற்றவனாக இருப்பான். அறிவிப்பாளர்:- ஃபளாலா பின் உபைத்
(ரலி) நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
இந்த (8:33) வசனத்திற்குரிய
விளக்கத்தை அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: உங்களுக்கு வேதனைகளை
விட்டும் தடுக்கும் இரு காரணிகள் உள்ளன. ஒன்று அண்ணல் நபி
(ஸல்) அவர்கள். தற்சமயம் அவர்கள்
மரணித்து விட்டார்கள். இரண்டாவது, (இஸ்திஃபார் எனும்)
பாவமன்னிப்பாகும். இது மறுமைநாள் வரை
நிலைத்திருக்கும்.
மறந்தது
நினைவிற்கு வர
இமாம் இப்னுதைமிய்யா
(ரஹ்) அவர்கள் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் “நீங்கள் மறந்துவிட்டால் அல்லாஹ்வை
நினையுங்கள்” (18:24) என்ற வசனத்திற்கு “ஏதாவது பிரச்சனையில் எனது சிந்தனை
தடைபட்டு அதற்கான விளக்கம் கிடைக்காவிட்டால் ஆயிரம் முறை இஸ்திஃபார் ஓதுவேன் அல்லாஹ்
எனது உள்ளத்தில் அதற்கான தீர்வை உதிக்கச்செய்வான்” என்று சொல்கிறார்கள்
நாம் எதையாவது மறந்துவிட்டால்
இஸ்திஃபார் ஓதி அல்லாஹ்வை நினைவு கூறும்போது நாம் மறந்தது நினைவிற்கு வந்துவிடும்
என்று மார்க்க அறிஞர்கள் சொல்கிறார்கள்
நாவால் மட்டும் போதாது
ஒருநாள் மஸ்ஜிதுந்
நபவியில் ஒரு கிராமவாசி வந்து, "இறைவா! நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
மேலும், உன்னிடமே மீளுகிறேன்"
என்று கூறி, அல்லாஹு அக்பர் என்று சப்தமிட்டு அழுதார். அப்போது அருகில் இருந்த அலீ (ரலி) அவர்கள்
அம்மனிதரை நோக்கி! "நாவால் மட்டும் பாவமன்னிப்பு கூறாதீர். அது பொய்யர்களின் பாவமன்னிப்பு
ஆகும். உன்னுடைய இந்த பாவமன்னிப்புக்கு மற்றொரு பாவமன்னிப்பு தேவைப்படுகின்றது"
என்று கூறினார்கள்.
அப்போது அம்மனிதர்
அது பற்றி தமக்கு விளக்குமாறு வேண்டினார். அப்போது அலீ (ரலி) அவர்கள், "பாவமன்னிப்பு என்பது
ஆறு செயல்களுக்குச் சொல்லப்படும். 1) பாவத்தைச் செய்துவிட்டதற்காகக் கவலைப்படுதல்.
2) மீண்டும் அந்தப் பாவத்தைச் செய்யாமல் இருத்தல். 3) இனி அந்த பாவத்தின் பக்கம் நெருங்கமாட்டேன்
என உறுதிக்கொள்ளுதல். 4) தமது வாழ்நாளில் செய்யாமல் விடுபட்டுப்போன (ஃபர்ளு, வாஜிப் போன்ற) கடமைகளை மீண்டும் (களா செய்து) நிறைவேற்றுதல்.
5) அநியாயமான முறையில் அபகரித்த பிறரின் பொருள்களை அவர்களிடம் திருப்பிக் கொடுத்து
விடுதல். 6) நம் கையினால் நாவினால் யாருக்கு சஞ்சலத்தை ஏற்படுத்தினமோ அவரிடம் மன்னிப்பு
கேட்டுக் கொள்ளுதல்” என்று கூறினார்கள். நூல்:- மஆரிஃபுல் குர்ஆன்
8/506
மறதியால், அறியாமையால் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு உண்டு. எத்தனை
தடவைகள் பாவங்கள் செய்தாலும் மன்னிப்புத்தான் உண்டே! என்ற மெத்தனத்தன்மைக்குப் போகக்கூடாது.
அவ்வாறு எண்ணிவிட்டால் மீண்டும் மீள முடியாது.
பாவமன்னிப்பின் முதல்
அடிப்படை, மனிதன் தன் தவறின் மீது வெட்கப்பட வேண்டும். அது குறித்து மனிதனுக்கு
குற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும். பிறகு, தான் எந்த குற்றத்தில் ஈடுபட்டாரோ உடனே அதை விட்டு
விலக வேண்டும். வருங்காலத்தில் அந்த பாவத்தை செய்யாமல் இருப்பதற்கான உறுதியான எண்ணம்
வேண்டும். பிறகு, சென்ற காலத்தில் செய்த தவறுகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும்.
ஒரு முஸ்லிம் பாவமன்னிப்புத்
தேடினால், அல்லாஹ் பொதுவாக அதை
ஏற்றுக்கொள்கிறான். இருப்பினும், அந்த பாவமன்னிப்பு உண்மையாகவும் இருக்க வேண்டும். ஒருவர் தனது
கடந்தகால தவறுகளுக்கு வெட்கப்படாவிட்டால் அல்லது அதை விட்டுவிட விரும்பவில்லை என்றால், பாவமன்னிப்பு பற்றிய
அவரது வாய்மொழி அறிவிப்பு மனந்திரும்புதலின் வெளிப்படையான கேலிக்கூத்தாகும் என்ற உண்மையை
விளங்கவேண்டும். வெறும் வாயால் மொழிதல் உண்மையான பாவமன்னிப்பாக கணக்கிடப்படாது.
எனவே, பாவமன்னிப்புக் கோருவோர்
இந்த ஆறு வழிமுறைகளையும் கடைபிடித்து, மனம் ஒன்றிய நிலையில் பாவமன்னிப்பு தேடுதல் வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மனிதனின் இன்னல்கள் நீங்கி அவன்மீது இறைவனின் பேரருள் பொழியும்.
அல்லாஹுத்தஆலா நம்மை, அனுதினமும் பாவமன்னிப்பு கோரும் நல்லடியார்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment