வாலிப வயசு
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ
مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ
السَّمِيعُ الْعَلِيمُ
இப்ராஹீமும் இஸ்மாயீலும் அந்த ஆலயத்தின் அடித்தளங்களை உயர்த்திக்
கட்டியபோது, "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக!
நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்" (என்று பிரார்த்தித்தனர்). திருக்குர்ஆன்:-
2:127
ஜனவரி 12 தேதி தேசிய இளைஞர்கள் தினம்
எழுச்சியும், உணர்ச்சியும், வீரமும், வேகமும் ததும்பி நிற்கும்
வீரியமிக்க பருவம் தான் இளமைப் பருவமாகும். இந்த பருவம் எதையும் செய்ய துடிக்கும் துணிச்சல்
மிக்க பருவமாகும். இந்த பருவத்தை இலட்சிய வேட்கையுடன் முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துபவர்கள்
வெற்றிபெறுவர். பாவத்திற்கும், பகைக்கும், தீமைக்கும், கொடுமைக்கும் துணை போகின்றவர்கள்
சீரழிந்துபோவர்.
இன்றைய இளைஞர்கள் நாளைய சமூகத்தின் தலைவர்கள் ஆவர்.
எதிர்காலத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் இளைஞர்களிடம்
மட்டுமே உள்ளது. அத்தகைய சக்தி வாய்ந்த இளைஞர்கள் மத்தியில் நல்லெண்ணத்தை விதைக்கவும், அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்க்கவும், அவர்களின் சக்தியை ஒன்றிணைத்து உலக மாற்றத்தை கொண்டு
வரவும் ஆண்டுதோறும் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக அளவில் இந்தியாவில் தான் 60 சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். அதற்கு
பிறகு சீனாவில் அதிகமான இளைஞர்கள் உள்ளனர். இளைஞர்கள் மத்தியிலான திறன் மேம்பாடு, அமைதி, ஒற்றுமை, இளைஞர்களின் உடல்நலன்
ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதத்தில் ஒவ்வொரு அரசுகளும் இளைஞர் நல திட்டங்களை அறிமுகப்படுத்த
வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கியமான நோக்கம். மேலும் சமூக வளர்ச்சிக்கு உதவும்
சமூக பொறுப்புள்ள நபர்களாக இளைஞர்களை வளர்க்க வேண்டும் எனது ஒட்டுமொத்த சமூக கடமை என்பதை
உணர்த்தவும், இளைஞர்களின் பொறுப்புகள்
மற்றும் கடமைகளை வலியுறுத்தவும் இந்த நாளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்தப்படுகிறது.
குறும்பு செய்தபோது
கவ்வாத் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் ( خوات بن جبير ) கூறியதாவது.
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுடன் நான் "ளஹ்ரான்" என்ற இடத்திற்குச் சென்றேன்.
பின்னர் எனது தங்குமிடத்தைவிட்டு வெளியே வந்தபோது சில பெண்கள் பேசிக் கொண்டிருப்பதை
கண்டேன். உடனே நான் உள்ளே சென்று எனது விலை உயர்ந்த ஆடையை அணிந்து கொண்டு அப்பெண்களுக்கு
அருகே சென்று அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.
அந்நேரம் அண்ணலார் தமது இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தபோது
என்னைக் கண்டார்கள். அப்போது அண்ணலார், ( أَبَا عَبْدِ اللَّهِ، مَا يُجْلِسُكَ مَعَهُنَّ؟ ) "அபூ அப்துல்லாஹ்! பெண்களுடன் ஏன் அமர்ந்து இருக்கின்றீர்?" என்று கேட்டார்கள்.
அண்ணலாரைக் கண்டதும் எனக்கு பயம் வந்துவிட்டது. எவ்வாறு உண்மையைச் சொல்வது என்று அஞ்சினேன்.
எனவே நான், ( يَا
رَسُولَ اللَّهِ جَمَلُ لِي شَرَدٌ، وَأَنَا أَبْتَغِي لَهُ قَيْدًا ) "நாயகமே! எனது ஒட்டகம் எங்கேயோ ஓடிவிட்டது. அதைக் கட்டுவதற்கான
கயிறு ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். (இப்பெண்களிடம் கயிறு இருக்குமா? என்று பார்க்கின்றேன்)"
என்று (ஏதோ) கூறி சமாளித்தேன்.
வெட்கத்தால் அண்ணலாரிடம் நான் பொய் சொன்னேன். நான் கூறிய பதிலை
கேட்ட பின்னர் எதுவும் சொல்லாமல், அந்த பெண்களிடம் கூட இதைப்பற்றி விசாரிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
நானும் அண்ணலாருக்கு பின்னாலேயே செல்லத் துவங்கினேன்.
பின்னர் தொழுகைக்கான நேரம் வந்தது. அண்ணலார் உளூச் செய்தார்கள்.
நானும் உளூச் செய்தேன். அப்போது அண்ணலார் என்னிடம், ( أَبَا
عَبْدِ اللَّهِ مَا فَعَلَ شَرَادٌ جَمَلِكَ؟ ) "அபூ அப்துல்லாஹ்!
ஓடிப்போன உமது ஒட்டகம் (கிடைத்ததா?) என்ன ஆனது?" என்று கேட்டார்கள். நான் ஒரு
பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
வந்த வேலை முடிந்த பின்னர் அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.
சற்று நேரத்திற்குப் பின் திரும்பிச் செல்லும் பாதையில் மீண்டும் அண்ணலார் என்னிடம், " அஸ்ஸலாமு அலைக்கும் அபூ அப்துல்லாஹ்! ஓடிப்போன உமது ஒட்டகம் (கிடைத்ததா?) என்ன
ஆனது?" என்று கேட்டார்கள். அப்போதும் நான் ஒன்றும் கூறவில்லை.
வேகமாக மதீனாவுக்குத் திரும்பினேன். அங்கு சென்றபின் பள்ளிவாசலுக்கும்
செல்லவில்லை; அண்ணலாருக்கு அருகிலும் செல்லவில்லை. நீண்ட நேரத்திற்குப்பின் பள்ளிவாசலுக்கு சென்று
தனிமையில் தொழ தொடங்கினேன். அப்போது அண்ணலார் பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக்அத் தொழுதபின்
அங்கேயே உட்கார்ந்துவிட்டார்கள். அண்ணலார் வெளியே செல்லட்டும் என்று நீண்ட நேரம் நானும்
அங்கேயே உட்கார்ந்துவிட்டேன்.
பின்னர் அங்கிருந்தவாறே அண்ணலார் என்னிடம், ( طُولَ أَبَا عَبْدِ اللَّهِ
مَا شِئْتَ أَنْ تَطُولَ، فَلَسْتُ ذَاهِبًا حَتَّى تَنْصَرِفَ ) "அபூ அப்துல்லாஹ்!
எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் தொழுங்கள். நீங்கள் தொழுது முடித்துத் திரும்பும்வரை
நான் இங்கேயே இருப்பேன்; வெளியேற மாட்டேன்" என்று கூறினார்கள்.
நான், இனிமேல் தப்பிக்க இயலாது. அண்ணலாரிடம் உண்மையைச் சொல்லி விட
வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் அண்ணலாருக்கு அருகே சென்றேன். உடனே அண்ணலார் என்னைப்
பார்த்து, ( السَّلَامُ
عَلَيْكَ أَبَا عَبْدِ اللَّهِ مَا فَعَلَ شَرَادُ ذَلِكَ الْجَمَلِ؟ ) " அஸ்ஸலாமு அலைக்கும் அபூ அப்துல்லாஹ்! ஓடிப்போன உமது ஒட்டகம் கிடைத்ததா?" என்று கேட்டார்கள். அப்போது
நான், ( وَالَّذِي
بَعَثَكَ بِالْحَقِّ مَا شَرَدَ ذَلِكَ الْجَمَلُ مُنْذُ أَسْلَمْتُ ) "(நாயகமே!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து
எந்த ஒட்டகமும் என்னைவிட்டு ஓடவில்லை" என்று கூறினேன். பிறகு அண்ணலார், ( رَحِمَكَ اللَّهُ ) "அல்லாஹ் உமக்கு அருள்புரிவானாக!" என்று மூன்று முறை என்னிடம்
கூறிவிட்டு, எனது கையைப் பிடித்தவாறு எழுந்தார்கள். அதன்பின் அது குறித்து என்னிடம் விசாரிக்கவே
இல்லை. நூல்:- முஅஜமுல் கபீர் இமாம் தப்ரானீ, அல்முன்தளிம் இமாம் இப்னு ஜவ்ஸீ, தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர், தஹ்தீபுல் கமால், அல்இசாபா இமாம் இப்னு ஹஜர்,
மஜ்மஉஸ் ஸவாயித்
எடுத்த எடுப்பிலேயே, "நீ பொய் சொல்லுகிறாய்" என்று கூறியிருந்தால்
என்னவாயிருக்கும்? உண்மை வெளிவந்திருக்காது. ஆனால், இங்கே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நயமாக நடந்துள்ளதை
நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. இந்நிகழ்வு ஒரு நகைச்சுவையைப் போன்று இருந்தாலும், தவறை அவர் வாயாலேயே
ஒப்புக்கொள்ள வைக்கும் அண்ணலாரின் பண்பு, நாம் பெறவேண்டிய பெரும்பாடம்.
துடுக்கான பேச்சு
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு
"ஹவாஸின்" குலத்தாரின் செல்வத்தை (போரின்றி வெற்றிப் பரிசாக) அளித்தபோது, நபியவர்கள் (புதிதாக இஸ்லாத்தை தழுவிய) சில குறைஷியருக்கு நூறு
ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். அப்போது அன்சாரிகளில் (இளைஞர்கள்) சிலர் "நபியவர்களை
அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, (நமக்குக் கொடுக்காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை
விட்டுவிடுகின்றார்களே!" என்று (கவலையுடன்) கூறினர்.
அவர்களின் இந்தப் பேச்சு நபியவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி நபியவர்கள்
அன்சாரிகளுக்கு ஆள் அனுப்பி அவர்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்கள் ஒன்று
கூடியதும் அவர்களிடம் நபியவர்கள் வந்து, ( مَا حَدِيثٌ بَلَغَنِي عَنْكُمْ ) "உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?) என்று கேட்டார்கள்.
அன்சாரிகளிலிருந்த விவரமானவர்கள் "நாயகமே! எங்களின் கருத்துடைய (தலை)வர்கள்
எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் (வாலிபர்கள்) சிலர் தாம் அவ்வாறு
நபியவர்களை பேசிக்கொண்டனர்" என்று கூறினார்கள்.
நபியவர்கள், ( فَإِنِّي أُعْطِي رِجَالاً حَدِيثِي عَهْدٍ بِكُفْرٍ أَتَأَلَّفُهُمْ
أَفَلاَ تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالأَمْوَالِ وَتَرْجِعُونَ إِلَى رِحَالِكُمْ
بِرَسُولِ اللَّهِ فَوَاللَّهِ لَمَا تَنْقَلِبُونَ بِهِ خَيْرٌ مِمَّا يَنْقَلِبُونَ
بِهِ ) "இறைமறுப்பை விட்டு இப்போதுதான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு
நான் கொடுக்கிறேன். (அதன் மூலமாக இஸ்லாத்தில் அசையாத நம்பிக்கையையும் ஒட்டுறவையும்
ஏற்படுத்தி) அவர்களது உள்ளங்களுடன் நான் இணக்கம் ஏற்படுத்துகிறேன். மக்கள் உலகச் செல்வங்களை
எடுத்துக்கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரை கொண்டு
செல்வதை விரும்பமாட்டீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள்
பெற்றுத் திரும்பும் செல்வங்களைவிட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும்.
( لَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا
وَسَلَكَ الأَنْصَارُ شِعْبًا لَسَلَكْتُ شِعْبَ الأَنْصَارِ ) மக்கள் ஒரு கணவாயில்
நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் நடந்து சென்றால் நான்
அன்சாரிகளின் கணவாயிலேயே செல்வேன். ( الأَنْصَارُ شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ وَلَوْلاَ الْهِجْرَةُ لَكُنْتُ
امْرَأً مِنَ الأَنْصَارِ ) அன்சாரி(களாகிய நீங்)கள்
மேனியுடன் ஒட்டிய உள்ளாடைகள் போன்றவர்கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது)
மட்டும் நடந்திராவிட்டால், நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன்"
என்று (அவர்களுக்கு எதார்த்த நிலையை புரியவைக்கும் விதமாக) உரையாற்றினார்கள். நூல்:-
முஸ்லிம்-1910, 1911, 1917
இளைஞர்களில் சிலர் மூத்தோர் முதியோரின் அனுபவங்களையும் அந்தஸ்தையும் விளங்கிக்கொள்ளாமல் ஏதேனும் துடுக்கத்தனமாக பேசிவிடுவதுண்டு.
பெரியவர்கள் அதை பெரிதுபடுத்தக்கூடாது. அந்த இளைஞர்கள் விளங்கும் விதமாக அறிவுறுத்தப்பட
வேண்டும். மாறாக, அந்த இளைஞர்களை ஏசி பேசி அவர்களை மூர்க்கத்தனமாக்கிவிடக் கூடாது.
தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படும் வயதில் மூத்தவர்கள் மற்றும் தலைவர்களின் சில
செயல்பாடுகளை விவரமறியாத வாலிபர்களில் சிலர் அவ்வபோது விமர்சனம் செய்து விடுவதுண்டு.
அதை பெரிது படுத்தக்கூடாது. அந்த செயலுக்குரிய எதார்த்தத்தை அவர்களுக்கு புரியவைக்க
வேண்டும்.
விபச்சாரம் செய்ய
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு வாலிபர் வந்து ( يَا رَسُولَ اللَّهِ ، ائْذَنْ لِي بِالزِّنَا ) "நாயகமே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று
கேட்டார். இதை செவியேற்ற நபித்தோழர்கள் கோபமுற்றனர். நபியவர்கள் அந்த வாலிபரை அருகில்
அழைத்து அவரிடமும் யாராவது "உன் தாயிடம் அல்லது உன் மகளிடம் அல்லது உன் சகோதரியிடம்
விபச்சாரம் செய்வதை நீ விரும்புவீரா?" என்று கேட்டார்கள்.
அதற்கவர் "நான் இதை விரும்ப மாட்டேன்" என்று கூறினார். இதைப்போல் தான் யாரும்
தம் தாயிடம் அல்லது மகளிடம் அல்லது சகோதரியிடம் விபச்சாரம் செய்யப்படுவதை விரும்பமாட்டார்கள்.
(அதாவது, நீர் எந்த பெண்ணுடன் விபச்சாரம் செய்தாலும் அப்பெண்
எவருக்காவது தாயாகவோ அல்லது மகளாகவோ அல்லது சகோதரியாகவோ இருக்கலாம்) என்று கூறிவிட்டு
நபியவர்கள் அந்த வாலிபரின் நல்வாழ்வுக்காக ( اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ ، وَحَصِّنْ فَرْجَهُ ) "இறைவா! இவரின் பாவத்தை மன்னிப்பாயாக! மேலும், (பாவ எண்ணங்களை
விட்டும்) இவரின் உள்ளத்தை சுத்தப்படுத்துவாயாக! மேலும், இவரின் மர்ம உறுப்பை பாதுகாப்பாயாக" என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு
அந்த வாலிபர் விபச்சாரத்தை முற்றிலுமாக வெறுத்தொதுக்கியவராக வாழ்ந்தார். அறிவிப்பாளர்:-
அபூ உமாமா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தப்ரானீ
நபித்தோழர் ஃபள்ல் (ரலி அவர்கள் அருமை நாயகம் - ஸல் அவர்களுக்கு) பின்புறம் ஒட்டகத்தில்
அமர்ந்து கொண்டிருந்தபோது, 'கஸ்அம்' எனும் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல்
(ரலி) அவர்கள் அப்பெண்ணை பார்க்க, அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபியவர்கள்,) ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1513
ஃபள்ல் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் அந்தஸ்தை விளங்கியிருந்தும்கூட
நபியவர்களுக்கு பின்னால் அமர்ந்து கொண்டே அந்நியப் பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தார்.
நபியவர்கள் இதமாக அவரைக் கண்டித்தார்கள். வாலிபர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று
நபியவர்கள் விளங்கி வைத்திருந்தார்கள்.
இளைஞர்களின் குறைகளை மட்டும் கண்டு குறைபேசுவோர் தமது இளமையில் எவ்வாறு இருந்தார்கள் என்று ஒருமுறை உற்றுநோக்க வேண்டும். சிலரின் இளமைப் பருவம் அப்படி இப்படி தான் இருக்கும். என்ன செய்வது? அதையே பெரிதுப்படுத்திக்கொண்டிருக்காமல் அவர்களை பண்படுத்துவது எவ்வாறு என்று யோசிக்க வேண்டும்.
இவன் பள்ளிவாசலில் வந்து இதைச் செய்கின்றானே, ஆலிம்கள் சபையில் அமர்ந்து கொண்டு
இதைச் செய்கிறானே, எங்கு வந்து எதைச் செய்கிறான் ஒழுக்ககங்கெட்டவன் என்றெல்லாம் அதை
பெரிதுபடுத்தி பேசுவது முறையல்ல என்று விளங்குகிறது.
முக்கிய பொறுப்பை வழங்குதல்
வாலிபப் பருவத்தில் இருந்த இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகே தமது
அம்பை செதுக்கி கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த இறைத்தூதர் இப்ராஹீம் (அலை)
அவர்கள் தமது மகனாரை நோக்கி! ( يَا إِسْمَاعِيلُ، إِنَّ اللَّهَ أَمَرَنِي بِأَمْرٍ وَتُعِينُنِي؟ )"இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான்.
(அதில்) எனக்கு நீ ஒத்துழைப்பாயா?" என்று கேட்டார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ( وَأُعِينُكَ ) "(தந்தையே!) உங்களுக்கு
நான் உதவுகிறேன்" என்று பதிலளித்தார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள், ( فَإِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَبْنِيَ هَاهُنَا بَيْتًا ) “இந்த இடத்தில் நான் ஒரு இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்ட
வேண்டுமென எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்" என்று கூறி, அங்கு சுற்றியிருந்த
இடங்களைவிட உயரமாக இருந்த ஒரு மேடை சுட்டிக்காட்டினார்கள். அப்போதுதான் அவ்விருவரும்
இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள்
கற்களைச் சுமந்து கொண்டு வந்து கொடுக்க, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள்.
அப்போது அவ்விருவரும், "எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்பாயாக! நீயே செவியுறுவோனும்
நன்கறிந்தோனும் ஆவாய்" என்று புரிவார்கள். நூல்:- இப்னு கஸீர் அல்பகரா வசனம்
127
அல்லாஹுத்தஆலா உலகத்தின் கிப்லாவாக விளங்கும் கஅபாவைக் கட்டும் புனிதப்பணிக்கு
ஒரு பெரியவரையும், ஒரு இளைஞரையும் பயன்படுத்தியுள்ளான்.
ஆம்! ஓர் நற்காரியத்தில் பெரியவர்கள் ஈடுபடும்போது அதில் இளைஞர்களையும் இணைத்துக்கொள்ள
வேண்டும். நற்காரியத்தில் ஈடுபடுத்தப்படாத இளைஞர்கள் பாவக்காரியத்தில் ஈடுபட்டு, பாழாய்போகக்கூடும்.
ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. யமாமா போர் நடைபெற்ற பின்
(ஜனாதிபதி) அபூபக்ர் (ரலி) அவர்கள், எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரச் சொன்)னார்கள்.
(நான் சென்றேன்.) அங்கே அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, ‘‘இந்த யமாமா போரில்
ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்)
பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனின்
பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (ஆகவே,) தாங்கள் குர்ஆனைத்
திரட்டி ஒன்றுசேர்க்க உத்தரவிட வேண்டுமென நான் கருதுகின்றேன்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வது?” என உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு உமர் அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான
பணி)தான்” என்று கூறினார்கள். இந்த விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக்கொண்டேயிருந்தார்கள்.
(முடிவில்) உமர் (ரலி) அவர்கள் கருதியதை(யே) நானும் (உசிதமானதாகக்) கண்டேன்.
அபூபக்ர் (ரலி) அவர்களும் இவ்வாறே வலியுறுத்தினார்கள்.
(பிறகு) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்), ( إِنَّكَ
رَجُلٌ شَابٌّ عَاقِلٌ لاَ نَتَّهِمُكَ، وَقَدْ كُنْتَ تَكْتُبُ الْوَحْىَ
لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَتَتَبَّعِ الْقُرْآنَ فَاجْمَعْهُ ) ‘‘(ஸைதே!) நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த
விதத்திலும்) சந்தேகப்படமாட்டோம். நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ‘வஹீ’
(வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்)
ஒன்றுதிரட்டுங்கள்” என்று கூறினார்கள்.
( فَوَاللَّهِ لَوْ كَلَّفُونِي نَقْلَ جَبَلٍ مِنَ الْجِبَالِ مَا
كَانَ أَثْقَلَ عَلَىَّ مِمَّا أَمَرَنِي مِنْ جَمْعِ الْقُرْآنِ ) அல்லாஹ்வின் மீதாணையாக!
மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும்கூட அது எனக்குப்
பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட
எனக்குப் பளுவாக இருந்தது. அதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட
முன்வந்தேன்.) நூல்:- புகாரீ-4986
இளைஞர்களிடம் இருக்கும் திறமைகளை முதலில் அவர்களுக்கு புரிய வைத்து பிறகு அதை
நாம் நற்காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இஸ்லாமிய வளர்ச்சியில்
இளைஞர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அங்கும் இங்குமாக சிதறிக்கிடந்த குர்ஆன்
பிரதிகளை நூல் வடிவில் தொகுத்துத் தந்தது ஸைத் பின் ஸாபித் அல்அன்சாரீ (ரலி) அவர்கள்
என்ற இளைஞர் தான்.
இளைஞர்கள் பாவக் காரியங்கள் பக்கம் செல்லாமல் தடுக்கவேண்டுமெனில் அவர்களை நல்ல
காரியங்கள் பக்கம் அழைத்து செல்லவேண்டும். அதாவது, அவர்களுக்கு பள்ளிவாசல், மதரசா,
பொதுசேவை மையங்கள் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகள் கொடுத்து ஊக்கப்படுத்த
வேண்டும். அவ்வபோது அவர்களுக்கு அது குறித்து நல்ல பல ஆலோசனைகள் சொல்லவேண்டும்.
நல்லவற்றின் பக்கம் செல்லாத இளைஞன்; நிச்சயமாக தீவற்றின் பக்கம் தான் செல்வான்.
பிறகு இளைஞர்கள் தீவற்றின் பக்கம் செல்கிறார்கள் என்று வெற்று கூப்பாடு வேலைக்கு
உதவாது. அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்து அவர்களை மடைமாற்றம்
செய்யவேண்டும். இது சமுதாயத்தில் உள்ள மூத்தவர்களின் பொறுப்பு.
எனவே, இளமையைப் பண்படுத்தி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment