Search This Blog

Thursday, 16 September 2021

ஆஷூரா தினம்

 

ஆஷூரா தினம்


إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ


நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பனிரெண்டுதான். இவ்வாறு வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (முஹர்ரம், ரஜப், துல்கஃதா, துல்ஹஜ் ஆகிய) மாதங்கள் சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். திருக்குர்ஆன்:- 9:36


இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரம் மாதத்திலிருந்து தொடங்குகிறது. போர் புரிவது தடுக்கப்பட்டுள்ள புனிதமிகு நான்கு மாதங்களில் முஹர்ரமும் ஒன்றாகும். எனவே, முஹர்ரம் மாதத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. வானம் பூமி படைக்கப்பட்ட நாளிலிருந்து ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை அனைத்து இறைத் தூதர்களின் மூலம் முஹர்ரம் மாதத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.


மேலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த முஹர்ரம் மாதத்திற்கு "இறைவனின் மாதம்" என்று பெயர் சூட்டியுள்ளார்கள். அதுமட்டுமின்றி ரமளான் நோன்புக்கு பிறகு சிறந்த நோன்பாக விளங்கும் ஆஷூரா நோன்பு இந்த மாதத்தில் தான் உள்ளது.


(அய்யாமுல் ஜாஹிலிய்யா எனும்) அறியாமை காலத்தில் போர் செய்வதே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்த அரபு மக்கள்கூட, இந்த புனித மாதத்தில் போரிடுவதையும், அடுத்தவர்களுக்கு இடையூறு அளிப்பதையும் மிகவும் கண்டிப்புடன் தவிர்த்து வந்துள்ளனர்.


ஆரம்பக் காலத்தில்


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்று வந்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். நபியவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் (அங்கும்) ஆஷுரா நோன்பு நோற்றார்கள். அந்நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களையும்) பணித்தார்கள். மேலும், ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரைச்சீலை போர்த்தப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, நபியவர்கள் கூறினார்கள்.  ( مَنْ شَاءَ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ شَاءَ أَنْ يَتْرُكَهُ فَلْيَتْرُكْهُ )  யார் ஆஷூரா நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர், அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்.  நூல்:- புகாரீ-1592,1893, முஸ்லிம்-2068


ருபய்யிஉ பின்த் அமுஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் (மதீனா புறநகரங்களில் உள்ள) அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ( مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلْيُتِمَّ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلْيَصُمْ ) "(இன்று) யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்து விட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப்பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!" என்று அறிவிக்கச் செய்தார்கள்.


( فَكُنَّا نَصُومُهُ بَعْدُ، وَنُصَوِّمُ صِبْيَانَنَا، وَنَجْعَلُ لَهُمُ اللُّعْبَةَ مِنَ الْعِهْنِ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ أَعْطَيْنَاهُ ذَاكَ، حَتَّى يَكُونَ عِنْدَ الإِفْطَارِ ) நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்கச் செய்வோம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் (தயார்) செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களை கொடுப்போம். நூல்:-  புகாரி 1960 முஸ்லிம்-2091, பைஹகீ


இதுவெல்லாம் ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முந்தைய நிலையாகும். ரமளான் நோன்பு கடமையான பின் ஆஷூரா நோன்பு  விருப்ப நோன்பாக மாற்றப்பட்டுவிட்டது.


மாண்புகள்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَفْضَلُ الصِّيَامِ، بَعْدَ رَمَضَانَ، شَهْرُ اللهِ الْمُحَرَّمُ ) ரமளான் நோன்புக்கு அடுத்து மிகவும் சிறப்பான நோன்பு யாதெனில் இறைமாதமான முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  முஸ்லிம்-2157, அபூதாவூத், திர்மிதீ, நசாயீ, இப்னுமாஜா, பைஹகீ


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா எனும் இந்த (முஹர்ரம் மாதத்தின் பத்தாம்) நாளையும், ரமளான் எனும் இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்:-  புகாரீ-2006, பைஹகீ


அண்ணல் நபி (ஸல்)  அவர்களிடம் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், ( يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ  ) "அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-2152


கடந்த ஆண்டின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது சிறு பாவங்களையே குறிக்கும். பெரும்பாவங்களுக்காக பாவமன்னிப்பு கோருவது  அவசியமாகும். இதுவே அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), இமாம் அபூ இஸ்ஹாக் (ரஹ்), இமாம் சுஹ்ரீ (ரஹ்) போன்ற நமது முன்னோர்கள் பயணத்திலும் ஆஷுரா நோன்பை (விடாமல்) நோற்றுள்ளார்கள்.


அபூஜபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் இமாம் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களுடன் பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்றிருந்தார்கள். அவர்களிடம், ( تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ فِي السَّفَرِ وَأَنْتَ تُفْطِرُ فِي رَمَضَانَ؟ ) “நீங்கள் பயணத்தில் ரமளான் நோன்பை விட்டுவிடுகிறீர்கள். ஆனால், ஆஷூரா நோன்பை நோற்றுவிடுகிறீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ( إِنَّ رَمَضَانَ لَهُ عِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ، وَإِنَّ عَاشُورَاءَ تَفُوتُ ) “ரமளான் நோன்பை விட்டால் அதை வேறுநாட்களில் நோற்றுக்கொள்ளலாம். ஆனால், (ஆஷுரா நோன்பை தவறவிட்டுவிட்டால், அதை வேறு நாட்களில் நோற்கமுடியாதே!) ஆஷூரா நோன்பு தவறிவிடுமே!என்று கூறினார்கள். நூல்:- ஷுஅபுல் ஈமான், ஸியரு அஃலாமின் நுபலா


நாங்களே நெருக்கமானவர்கள்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ( مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ ) "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் நபி மூசா (அலை) அவர்களையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர்.


அப்போது நபியவர்கள், ( فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ ) "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர், நபியவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். நூல்:- புகாரீ-3397, முஸ்லிம்-2083, இப்னு அபீஷைபா, பைஹகீ


ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூசா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப் பிளந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூசா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும்படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.


கொடியோன் ஃபிர்அவ்ன் கொல்லப்பட்டதின் உண்மையான நோக்கம் என்னவென்றால், மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குதல், அல்லாஹ்வின் தூதருக்கு முழுமையாக கட்டுப்படுதல், அல்லாஹ்வின் அரசை நிலை நாட்ட பாடுபடுதல், அநீதம் எங்கே நடந்தாலும் அதனை தட்டிக் கேட்டல் போன்றவை தான். அல்லாஹ் ஆஷுரா தினத்தில் இதைத்தான் எதிர்பார்க்கிறான். ஆனால், யூதர்கள் அல்லாஹ்வின் இந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமல் வெறுமனே நோன்பு மட்டும் நோற்று வந்தனர்.


அல்லாஹ்வின் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றி வந்தார்கள். எனவேதான், நபியவர்கள், "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள்.


மாற்றம் செய்யுங்கள்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "நாயகமே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு  நபியவர்கள், இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் நபியவர்கள் இறந்து விட்டார்கள். நூல்:- முஸ்லிம்-2088


மற்றொரு அறிவிப்பில் ( لَئِنْ بَقِيتُ إِلَى قَابِلٍ لَأَصُومَنَّ التَّاسِعَ ) "அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்" என்று இடம்பெற்றுள்ளது.


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த பிறகும் ஆஷூரா அன்று ஒரு நாள் நோன்பு நோற்று வந்தார்கள். யூதர்களின் இஸ்லாமிய எதிர்ப்பும், விரோத மனப்பான்மையும் அதிகரித்துக் கொண்டே சென்றபோது, அனைத்து காரியங்களிலும் யூதர்களுக்கு முரணாக நடந்து கொள்ளுங்கள் என்பதாக தனது தோழர்களுக்கு கட்டளையிட்டு, அவர்களுக்கு எதிர்ப்பை காட்டினார்கள். இந்நிலையில் ஆஷூரா நோன்பை நோக்குமாறு கோரிய நபியவர்களிடம், யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் அந்நாளில் நாம் நோன்பு நோற்பது அவர்களுக்கு ஒப்பாவதைப் போன்று ஆகாதா? என்று நபித்தோழர்கள் கேட்டபோதுதான் இவ்வாறு கூறினார்கள்.


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صُومُوا يَوْمَ عَاشُورَاءَ، وَخَالِفُوا فِيهِ الْيَهُودَ، صُومُوا قَبْلَهُ يَوْمًا، أَوْ بَعْدَهُ يَوْمًا ) ஆஷுரா நோன்பை கடைபிடியுங்கள். அதில் யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். ஆஷுரா நோன்புக்கு முந்தைய நாள் (ஒன்பதாவது நாள்) அல்லது, ஆஷுரா நோன்புக்கு பிந்தைய நாள் (பதினோராவது நாள்) சேர்த்து நோன்பு வையுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், ஸாதுல் மஆத் 2/72


இறைவனால் நேர்வழிப்படுத்த அனுப்பப்பட்ட அதிகமான இறைத்தூதர்களைப் பெற்றுக் கொண்டவர்கள் யூத சமுதாயத்தினர்தான். எனினும், இவர்கள் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல இறைத்தூதர்களை நிராகரித்தது மட்டுமன்றி, அவர்களில் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தனர். இதனால் இவர்கள் இறைவனின் கடும் சினத்திற்கும், சாபத்திற்கும் ஆளானார்கள்.


எனவேதான், முஸ்லிமகள் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் இறைசாபம் பெற்ற யூதர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். அதோடு நபியவர்கள் தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தினார்கள்.


சந்தோசத்தையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்துவதில்கூட பிற சமூகத்திற்கு ஒப்பாகிவிடக்கூடாது என்பதில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.


இறைத்தூதர்கள் வெற்றிப்பெற்ற தினம்

   

அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். நிச்சயமாக (சோதனைகளில்) பொறுமையை மேற்கொள்வோர்களுக்கும், (மகிழ்ச்சியில்) நன்றி செலுத்துவோர்களுக்கும் அதில் பல படிப்பினைகள் உள்ளன.     திருக்குர்ஆன்:- 14:5


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَوْمُ عاشُوراءَ يَوْمٌ كانَتْ تَصُومُهُ الأنْبِياءُ فَصُومُوهُ أنْتُمْ )  ஆஷுரா நாளில், இறைத்தூதர்கள் நோன்பு நோற்பார்கள், எனவே, அந்நாளில் நீங்களும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அபீஷைபா, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்ஃபஜ்ர் வசனம்-1


முன் சென்ற இறைத்தூதர்களின் சட்டங்களில் இருந்து எதுவெல்லாம் மாற்றப்படவில்லையோ அதை நாமும் அவ்வாறேதான் கடைபிடிக்க வேண்டும். எனவேதான், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தினரிடம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்குமாறுக் கூறினார்கள்.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது. ( يَوْمُ عاشُوراءَ اليَوْمُ الَّذِي تابَ اللَّهُ فِيهِ عَلى آدَمَ واليَوْمُ الَّذِي اسْتَوَتْ فِيهِ سَفِينَةُ نُوحٍ عَلى الجُودِيِّ واليَوْمُ الَّذِي فَرَقَ اللَّهُ فِيهِ البَحْرَ لِبَنِي إسْرائِيلَ واليَوْمُ الَّذِي وُلِدَ فِيهِ عِيسى ) ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களின் (நீண்ட காலமாக செய்துவந்த) பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது ஆஷூரா தினத்தில்தான்! இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் பயணித்த கப்பல் ஜூதி மலையில் கரை ஒதுங்கியது ஆஷூரா தினத்தில்தான்! (பிர்அவ்னின் கொடுமையிலிருந்து) பனூஇஸ்ரவேலர்கள் தப்பிப்பதற்காக அல்லாஹ் செங்கடலை பிளந்தது ஆஷூரா தினத்தில்தான்! இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள் பிறந்தது ஆஷூரா தினத்தில்தான்! நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் ஹூத் வசனம்-44


கதாத்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( اليَوْمُ الَّذِي تِيبَ فِيهِ عَلى آدَمَ يَوْمُ عاشُوراءَ ) ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்கள் (நீண்ட காலமாக செய்துவந்த)  பாவமன்னிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆஷூரா தினத்தில்தான்! நூல்:- அஸ்ஸுஹ்த் இமாம் அஹ்மத், அப்துர் ரஸ்ஸாக், தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் பகரா வசனம்-37


இதைப் போன்றே சூனியத்தை உம்மிடம் நாமும் உறுதியாகக் கொண்டுவருவோம். எனவே, எனக்கும் உமக்கும் இடையே மையமானதோர் இடத்தில் (நாம் சந்திப்பதற்கு) நாள் குறிப்பீராக. அதை நாங்களோ நீரோ மீறக் கூடாது (என்றும் ஃபிர்அவ்ன் கூறினான்). (அதற்கு நபி மூசா அவர்கள்) பண்டிகை நாளே உங்களுக்குக் குறிப்பிடப்பட்ட நாளாகும். மக்கள் முற்பகலில் ஒன்றுதிரட்டப்பட வேண்டும் என்று கூறினார்.   திருக்குர்ஆன்:- 20:58,59


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وَكَانَ يَوْمُ الزِّينَةِ يَوْمَ عَاشُورَاءَ ) இந்த வசனத்தில் வரும் பண்டிகை நாள் என்பது ஆஷுரா நாளைக் குறிக்கும். (அதாவது கொடியோன் ஃபிர்அவ்னால் அழைத்துவரப்பட்ட சூனியக்காரர்களை போட்டியில் இறைத்தூதர் மூசா - அலை அவர்கள் வென்ற தினம், இந்த ஆஷூரா தினமே!) நூல்:- தஃப்சீர்  இப்னு கஸீர் தாஹா வசனம் -59, தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் பஙவீ, தஃப்சீர் பைளாவீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர், தஃப்சீர் ரூஹுல்மஆனி


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فِي أوَّلِ يَوْمٍ مِن رَجَبٍ رَكِبَ نُوحٌ السَّفِينَةَ فَصامَ هو وجَمِيعُ مَن مَعَهُ وجَرَتْ بِهِمُ السَّفِينَةُ سِتَّةَ أشْهُرٍ فانَتَهى ذَلِكَ إلى المُحَرَّمِ فَأرْسَتِ السَّفِينَةُ عَلى الجُودِيِّ يَوْمَ عاشُوراءَ فَصامَ نُوحٌ وأمَرَ جَمِيعَ مَن مَعَهُ مِنَ الوَحْشِ والدَّوابِّ فَصامُوا شُكْرًا لِلَّهِ ) இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் (தம்மை இறைத்தூதர் என்று ஏற்றுக்கொண்டவர்களுடன்) ரஜப் மாதத்தின் ஆரம்பத்தில் கப்பல் பயணத்தைத் துவங்கினார்கள். அப்போது நூஹ் (அலை) அவர்களும் அவர்களுடன் பயணித்தவர்களும் நோன்பு நோற்றார்கள். அந்த கப்பலுக்குள் ஆறு மாதக் காலம் பயணித்தார்கள். பிறகு, அந்த கப்பல் ஆஷூரா தினத்தில்தான் ஜூதி மலையில் கரை ஒதுங்கியது.  (கரை ஒதுங்கியதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதத்தில்) நூஹ் (அலை) அவர்களும் நோன்பு நோற்று, தம்முடன் இருப்பவர்களையும் நோன்பு நோற்குமாறு  ஏவினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல் அஜீஸ் பின் அப்துல் கபூர் (ரஹ்) அவர்கள் நூல்:- தாரீக் தபரீ 1/131, தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் பஙவீ, அல்பிதாயா வந்நிஹாயா, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் ஹூத் வசனம்-44

                                                                                        

முகாத்தில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( واسْتَجابَ دُعاءَهم وكَشَفَ عَنْهم ما نَزَلَ بِهِمْ مِنَ العَذابِ وكانَ ذَلِكَ يَوْمَ عاشُوراءَ )  யூனுஸ் (அலை)  அவர்களின் சமுதாயத்தார் (மனத்தூய்மையுடன்) கோரிய பாவமன்னிப்பு ஏற்றுகொள்ளப்பட்டு அவர்கள்மீது இறங்கவேண்டிய இறைவேதனை விலக்கிக்கொள்ளப்பட்ட தினம் இந்த ஆஷூரா தினமே!


அலீ (ரலி) அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் கஷ்ஷாஃப், தஃப்சீர் ராஸீ, தஃப்சீர் இப்னு ஜவ்ஸி, தஃப்சீர் ரூஹுல்மஆனி யூனுஸ் வசனம்-98


தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( أَخَّرَ الدُّعَاءَ إِلَى السَّحَرِ مِنْ لَيْلَةِ الْجُمُعَةِ فَوَافَقَ لَيْلَةَ عَاشُورَاءَ ) இறைத்தூதர் யாகூப் (அலை) அவர்கள் தன் பிள்ளைகள் செய்த தவறுக்கு பாவமன்னிப்புக் கோருவேன் என்று கூறி, (ஒருமுறை) ஜும்ஆ தின இரவும் ஆஷூரா தின இரவும் ஒன்றாக வந்தது. எனவே, அந்த இரவின் (சஹர் எனும்) அதிகாலை நேரத்தில் தான் பாவமன்னிப்புக் கோரினார்கள். நூல்:- தஃப்சீர் பஙவீ யூசுப் வசனம்-98, தஃப்சீர் குர்துபீ, தஃப்சீர் சஅலபீ


முஹர்ரம் பத்தாம் நாள் என்பது அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தும் நாள் என்பதை இந்த வரலாற்று நிகழ்வுகள் உணர்த்துகிறது.


தாராளமாக செலவு செய்தல்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ يَوْمَ عَاشُورَاءَ وَسَّعَ اللهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِهِ ) யார் ஆஷூரா நாளில் தனது குடும்பத்தாருக்கு (அன்றைய நாளின் சஹர் இஃப்தார் போன்றவற்றுக்காக) தாராளமாக செலவு செய்கிறாரோ அவருக்குஅவ்வருடம் முழுவதும் இறைவன் (தனது அருளை) விசாலப்படுத்துகின்றான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்பைஹகீதப்ரானீஜாமிவுஸ் ஸகீர்முக்தசர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு-308


ஜாபிர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். ( جَرَبنَاهُ، فَوَجَدنَاهُ صَحِيحًا ) நாம் இதனை சோதனை செய்தபோது சரியானதெனக் கண்டோம்.  நூல்:- பைளுல் கதீர்


சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். ( قَدْ جَرَّبْنَاهُ مُنْذُ خَمْسِينَ سَنَةً أَوْ سِتِّينَ فَمَا رَأَيْنَا إلَّا خَيْرًا ) இதனை சுமார் ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளாக சோதனை செய்து இதில் நல்லதைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. நூல்:- பைளுல் கதீர்பதாவா இப்னு தைமிய்யா 4/513


யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். ( جرَّبنا ذلك فوجدناه حقًّا ) நாம் இதனை சோதனை செய்து பார்த்து உண்மையெனக் கண்டோம். நூல்:- அல்இஸ்தித்கார் இப்னு அப்துல் பர் 10/140


மாமேதை ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். "இந்த நபிமொழியின்படி ஆஷூரா நாள் அன்று என்னுடைய குடும்பத்தாருக்கு தாராளமாக செலவு செய்து வருகிறேன். அல்லாஹ் என் வாழ்வை (பரக்கத் எனும்) அருள்வளம் நிறைந்ததாக  வைத்திருக்கிறான். இதை நான் நாற்பது ஆண்டுகளாக என்னுடைய  வாழ்வில் அனுபவித்து வருகிறேன்" என்றார்கள்.


மன்ஸூர் அல்அஜீலீ அல்அஸ்ஹரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ( وَيُسْتَحَبُّ فِيهِ التَّوْسِعَةُ عَلَى الْعِيَالِ وَالْأَقَارِبِ، وَالتَّصَدُّقُ عَلَى الْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ فَإِنْ لَمْ يَجِدْ شَيْئًا فَلْيُوَسِّعْ خُلُقَهُ وَيَكُفَّ عَنْ ظُلْمِهِ ) ஆஷுரா தினத்தில் தமது குடும்பத்தினருக்கும்உறவினர்களுக்கும் தாராளமாக  செலவு செய்வதுஏழை எளியோருக்கு தர்மம் செய்வது (முஸ்தஹப்பு எனும்) விரும்பத்தக்கது. இவ்வாறு செய்வதற்கு (பொருளாதாரம்) ஒன்றும் இல்லாவிட்டால்நற்குணத்தை விசாலப்படுத்தி, (பிறருக்கு) அநீதமிழைப்பதைவிட்டும் தன்னை தற்காத்து கொள்ளட்டும். நூல்:- ஷரஹுல் மின்ஹாஜ் 2/347


அரங்கேற்றப்படும் அனாச்சாரங்கள்


உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்.  திருக்குர்ஆன்:- 9:36


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الْخُدُودَ، وَشَقَّ الْجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ ) (துக்கத்தால்) கன்னங்களில் அறைந்துக் கொள்பவரும், சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவரும் அறியாமைக்கால வழக்கப்படி புலம்புகின்றவரும் நம்மைச் சார்ந்தவர்கள் அல்லர். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்  நூல்:-  புகாரீ-1297, முஸ்லிம்-165


கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَحِلُّ لاِمْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ تُحِدَّ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ ) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணுக்கும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்க அனுமதியில்லை; தன் கணவனுக்காக (நான்கு மாதம் பத்து நாட்கள்) தவிர! அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5342, முஸ்லிம்-2982


அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புப்பேரர் ஹுசைன் (ரலி) அவர்கள் ஈராக்கிலுள்ள கர்பலாஎனும் இடத்தில் ஹிஜ்ரீ 61 ஆம் ஆண்டு (கி.பி. 681) முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா தினத்தன்று நடந்த உள்நாட்டுச் சண்டையில் கொல்லப்பட்டார்கள். இது இஸ்லாமிய சமுதாயத்திற்கு மிகவும் வேதனைக்குரிய விஷயம் தான்.


ஆனால், இதைக் காரணம் காட்டி, அந்நாளை துக்க தினமாக அனுஷ்டிப்பது, தாம்பத்தியத்திற்குத் தடைவிதிப்பது, கருப்பு ஆடை தரிப்பது, தம்முடைய உடல்களில் இரத்தக்களறி ஏற்படுத்திக்கொள்வது, நெருப்பு மிதிப்பது, ஒரு குழி வெட்டி அதில் நெருப்பு மூட்டி நிவாரணம் பெற வேண்டிக்கொண்டு அந்த தீக்குண்டத்தில் உப்பு மிளகு போடுவது, “யா ஹுசைன்!என்று கூறிக்கொண்டு தீ மிதிப்பது, அந்த தீக்குண்டத்தைச் சுற்றிவருவது, தீச்சட்டி தூக்குவது, மாவிளக்கு ஏந்துவதுசகோதர சமயத்தவர்கள் தம் கடவுளுக்கு ரதம் அமைத்து ஊர்வலம் செல்வது போன்று, ரதம் அமைத்து அதனுள் பஞ்சா (கைவிரல்கள்) செய்து அதனை ஊர்வலமாக எடுத்துச் சென்று நதிக்கரையில் கரைப்பது (பஞ்சா தூக்குவது) ஆகிய இவை அனைத்தும் ஷிஆக்கள் எனும் வழிகெட்டவர்களின் செயல்முறையே தவிர, இஸ்லாத்திற்கும் இந்த செயல்பாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  இவை அனைத்தும் பாவக் காரியங்கள் என்பது தான் இஸ்லாமிய நிலைப்பாடு.


ஹுசைன் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட தினம் துக்கத் தினமாக அனுஷ்டிக்கும் பழக்கம், ஹிஜ்ரீ 352 ஆம் ஆண்டில் தான் ஆரம்பமானது. அந்த வருடம் முஹர்ரம் பத்தாம் நாளில் பக்தாத் நகரில் எல்லா கடைகளும் அடைக்கப் படவேண்டும், ருசியான சாப்பாடு சமைக்கக்கூடாது, பெண்கள் தலைவிரி கோலமாக முகத்திலும் மார்பிலும் அடித்துக் கொண்டு வீதிகளில் இரங்கல் பாடிக்கொண்டு திரிய வேண்டுமென முயிஸ்ஸுத் தௌலா உத்தரவிட்டார். நூல்:- பித்ஆதே முஹர்ரம் அவ்ர் தஃஸியா நாரி


1) நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள்

2) நபியவர்களின் திருமகளார் பாத்திமா (ரலி)

3) நபியவர்களின் மருமகனார் அலீ (ரலி)

4) நபியவர்களின் பேரப்பிள்ளை ஹசன் (ரலி)

5) நபியவர்களின் பேரப்பிள்ளை ஹுசைன் (ரலி)

ஆகிய ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் கையாகும். உருது மொழியில் பாஞ்ச்என்றால் ஐந்து என்று பொருள். இதை அடிப்படையாகக் கொண்டே பஞ்சாஎன்ற பெயர் வந்தது.


குறிப்பாக இப்பஞ்சா ஊர்வலத்தில் மாரடித்தல்என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதாவது அன்றைய தினத்தில் யா அலீ! யா ஹுசைன்!என்று கூறிக்கொண்டு மார்பில் அடித்துக்கொண்டு, ஒப்பாரி வைப்பது பக்தி எனும் பெயரில் தன் உடம்பில் காயங்களை ஏற்படுத்திக்கொள்வது போன்றவற்றை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.


ஹுசைன் (ரலி) அவர்களுக்கு பல சிறப்புகள் உண்டு என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் பெயரால் நடத்தப்படும் அனாச்சாரங்களை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.


முஹர்ரமும் பத்தாம் நாள் அன்று இவர்களின் இந்த செயல்களுக்காகத்தான் இந்திய அரசு விடுமுறை அளிக்கிறதேத் தவிரஅந்த விடுமுறை நமக்கானது அல்ல.


இத்தகைய வழிகெட்ட கொள்கைக்காரர்களின் சதியிலிருந்து அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக! மேலும், நாம் முஹர்ரம் மாதத்தின் நோன்புகளை நோற்று இறைமன்னிப்பைப் பெறுவோமாக! ஆமீன்!


   மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951


 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...