Search This Blog

Thursday, 19 December 2024

சிறுபான்மையினர் உரிமைகள்

 

சிறுபான்மையினர் உரிமைகள்

 

لَا يَنْهَاكُمُ اللَّهُ عَنِ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ وَلَمْ يُخْرِجُوكُمْ مِنْ دِيَارِكُمْ أَنْ تَبَرُّوهُمْ وَتُقْسِطُوا إِلَيْهِمْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

(இறைநம்பிக்கையாளர்களே!) மார்க்க விஷயத்தில் உங்களுடன் எதிர்த்து போர் புரியாதவர்களுக்கும், உங்கள் இல்லத்திலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடந்துகொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதிவான்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 60:8

 

சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

சாதி, இனம், மதம், மற்றும் அத்தகைய நிலைகளின் அடிப்படையில் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் சிறுபான்மை குழுக்களின் உரிமைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் கல்வி அளிப்பதையே இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

கலாச்சார ரீதியாக, மொழி, இன ரீதியாக, தேச ரீதியாக சிறுபான்மையினராக இருப்பவர்களின் அடையாளங்கள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டுமென்கிறது ஐ.நாவின் பிரகடனம். சிறுபான்மையினரின் நிலையை மேம்படுத்துவது என்பது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமை என்றும் கூறுகிறது இந்த சாசனம்.

 

இந்தியாவில் 1992 ல் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையினருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் ஆகிய ஐந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள். 2014 ஜனவரி 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ஜைனர்களும் மத சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டார்கள்.

 

இந்தியாவில், ஒவ்வொரு 1,000 பேரில் 193 பேர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முஸ்லிம்கள் இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மைக் குழுவாக உள்ளனர். ஒவ்வொரு 1,000 பேரில் 142 பேர் உள்ளனர்.

 

இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த யூதர்கள், கிருஸ்தவர்கள், நெருப்பு வணங்கிகள் ஆகியோர் அன்றைய சிறுபான்மையினர் ஆவார். அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள், சிறுபான்மையினருக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களை மிகுந்த கண்ணியத்துடனே நடத்தினர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.    

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّهُ لاَ قُدِّسَتْ أُمَّةٌ لاَ يَأْخُذُ الضَّعِيفُ فِيهَا حَقَّهُ غَيْرَ مُتَعْتَعٍ ) பலவீனர்கள் தம் உரிமையைச் சிரமப்படாமல் எடுத்துக்கொள்ள முடியாத ஒரு சமூகம் தூய்மையடையாது. அறிவிப்பாளர் அபூசஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா-2417, பைஹகீ

 

ஒப்பந்தப் பத்திரம்

 

ஜெரூஸலத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியபோது சிறுபான்மையினரான கிருஸ்துவர்களுக்கு இஸ்லாமிய ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் செய்து கொடுத்த ஒப்பந்தம் இது.

 

( هَذَا مَا أَعْطَى عَبْدُ اللَّهِ عُمَرُ أَمِيرُ الْمُؤْمِنِينَ أَهْلَ إِيلِيَاءَ مِنْ الْأَمَانِ ، أَعْطَاهُمْ أَمَانًا لِأَنْفُسِهِمْ وَأَمْوَالِهِمْ ، وَلَكَنَائِسِهِمْ وَصُلْبَانِهِمْ وَسَقِيمِهَا وَبَرِيئِهَا وَسَائِرِ مِلَّتِهَا ، وَلَا يُكْرَهُونَ عَلَى دِينِهِمْ ، وَلَا يُضَارُّ أَحَدٌ مِنْهُمْ )

“இது அல்லாஹ்வின் அடிமையான இரைநம்பிக்கையாளர்களின் தலைவரான உமர் ஈலியாஉ வாசிகளுக்கு எழுதிக்கொடுக்கும் நம்பிக்கை பத்திரம். இங்குள்ள சிறுபான்மை மக்களின் உயிரும் பொருளும், அவர்களின் ஆலயங்களும், சிலுவைகளும், நோயாளிகளும், அப்பாவிகளும், அவர்களின் மதத்தவர்கள் அனைவரும் பாதுகாக்கப்படுவர். (அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதில் அவர்கள் பூரண சுதந்திரம் தரப்பட்டவர்கள்.) அவர்களை வற்புறுத்தி மதம் மாற்றம் செய்யப்பட மாட்டாது. அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் இருக்காது என எழுதி கொடுத்தார்கள். நூல்:- தாரீகுத் தபரீ

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள், ஷாம் தேசத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் ஆட்சியாளர் அபூஉபைதா (ரலி) அவர்களுக்கு எழுதிய அரசாணையில் இந்த வாசகங்கள் இருந்தன: ( وَامْنَعِ الْمُسْلِمِينَ مِنْ ظُلْمِهِمْ وَالِاضْرَارِهِمْ وَاَكْلِ اَمْوَالِهِمْ اِلَّا بِحَقِّهَا وَوَفِّ لَهُمْ بِشَرْطِهِمْ الَّذِي شَرَطَّتَ لَهُمْ فِي جَمِيعِ مَا اَعْطَيْتَهُمْ ) திம்மீகளுக்கு அநீதி இழைப்பதைவிட்டும் அவர்களுக்கு இடையூறு செய்வதைவிட்டும் முஸ்லிம்களை தடுப்பீராக. மேலும், அவர்களின் பொருள்களை அநியாயமாக உண்பதைவிட்டும் தடுப்பீராக. எந்த அளவு நிபந்தனைகளை (வாக்குறுதிகளை) நீர் அவர்களுக்கு வழங்கியுள்ளீரோ அவை அனைத்தையும் அவர்களுக்கு நிறைவேற்றுவீராக. நூல்:- அல்ஃபாரூக்

 

வேதனை செய்யக்கூடாது

 

பேராசார் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَلاَ مَنْ ظَلَمَ مُعَاهِدًا أَوِ انْتَقَصَهُ أَوْ كَلَّفَهُ فَوْقَ طَاقَتِهِ أَوْ أَخَذَ مِنْهُ شَيْئًا بِغَيْرِ طِيبِ نَفْسٍ فَأَنَا حَجِيجُهُ يَوْمَ الْقِيَامَةِ ) (திம்மீகள் எனும்) ஒப்பந்த அடிப்படையில் வாழும் பிற மதத்தினரிடம் யார் அநீதியாக நடந்துகொள்வாரோ, அல்லது அவர்களின் (உரிமைகளை) குறைத்து மதிப்பிடுவாரோ, அல்லது அவரின் சக்திக்கு மீறி வரி வசூல்செய்வாரோ, அல்லது அவர் மனமுவந்து வழங்காத (செல்வங்களில்) எதையும் எடுத்துக்கொள்வாரோ அவரிடம் மறுமைநாளில் பிற மதத்தினருக்காக நான் வழக்காடுவேன். நூல்:- அபூதாவூத்-2654, பைஹகீ

 

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஹிம்ஸ் பகுதியின் ஆட்சியாளராக இருந்த ஒருவரைக் கண்டார்கள். அவர் (ஜிஸ்யா எனும்) காப்பு வரி செலுத்தாதது தொடர்பாக கிப்தி இன மக்களில் சிலரை வெயிலில் நிறுத்தி வைத்து வேதனை செய்துகொண்டிருந்தார். அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், "என்ன இது? என்று (மக்களிடம்) கேட்டார்கள். (காப்பு வரி கொடுக்காததால் வேதனை செய்யப்படுகிறார்கள் என்று மக்கள் பதிலிளித்தனர்.)  அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعَذِّبُونَ النَّاسَ فِي الدُّنْيَا ‏ ) 'இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் (மறுமையில்) வேதனைசெய்வான் என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்" என்றார்கள் நூல்:-  அபூதாவூத்-2648

 

கயவர்கள், இந்தியாவின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களைப் பிடித்து கட்டிவைத்து "ஜெய் ஸ்ரீராம்" என்று சொல்லுமாறு வற்புறுத்துவதும், அவ்வாறு சொல்ல மறுத்தவர்களை கடுமையாக அடித்து துன்புறுத்துவதும், அதை காட்சிப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் சாதாரணமாகி வருகிறது.

 

கற்பழிப்புக்கு தண்டனை 

 

முகலாய மன்னர்களில் இறைநேசராக விளங்கியவர் ஒளரங்கஜேப் (ரஹ்) அவர்கள். அன்னாரின் பிரதம அமைச்சர் அசதுல்லாஹ் கான். இவர் ஒளரங்கஜேப் (ரஹ்) அவர்களின் வலக்கரமாக பல்லாண்டுகள் செயலாற்றியவர். இவருடைய பேரன் “மிர்ஜா தஃபக்கூர்” சகோதர சமயத்தைச் சார்ந்த பெண்ணை கற்பழித்துவிட்டான். எனவே, ஔரங்கஜேப் (ரஹ்) அவர்கள் அவனுக்கு மரணதண்டனை விதித்தார்கள். மேலும், "இறைவன் எனக்கு அளித்த அமானிதம்தான் குடிமக்கள். அந்த குடிமக்கள்மீது எவரும் அக்கிரமம் இழைப்பதைத் தடுப்பது என்னுடைய கடமை” என்று கூறினார்கள்.

 

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு பெண் அல்லது பெண் பலாத்கார பாதிப்பு 44 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகள் தெரிவிக்கின்றன. NCRB தரவுகளின்படி, 2010-2019 காலகட்டத்தில், இந்தியா முழுவதும் மொத்தம் 3,13,289 வழக்குகள் பதிவாகியுள்ளன.

 

2021 ஆம் ஆண்டு NCRB ஆண்டு அறிக்கையின்படி நாடு முழுவதும் 31,677 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினசரி, ஏறத்தாழ 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் (முஸ்லிம் மற்றும் தலித் எனும்) சிறுபான்மை பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்தியாவைப் பொறுத்தவரை கற்பழிப்பு மற்றும் கூட்டு வன்புணர்வுக்கு எதிராக பயப்படும்படியான பெரிய தண்டனைகள் எதுவும் அமலில் இல்லை. எனவேதான், கற்பழிப்பு நிகழ்வின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

 

கொல்வது பெரும் குற்றம்  

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يَرَحْ رَائِحَةَ الْجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا تُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا ) (இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொல்பவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான். அதன் வாடையோ நாற்பதாண்டு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3166, திர்மிதீ-1323, நசாயீ-4668, முஸ்னது அஹ்மத்

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் பக்ரு பின் வாயில் எனும் கோத்திரத்தைச் சார்ந்த ஹுனைன் என்பவர் ஹீரா என்ற நகரத்தைக் சேர்ந்த கிறிஸ்தவர் ஒருவரைக் கொன்றுவிடுகிறார். இந்தச் செய்தியை அறிந்த ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் கொலை செய்த அந்த முஸ்லிமை கொலையுண்ட கிறிஸ்துவரின் உறவினரிடம் ஒப்படைத்துவிடுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே ஒப்படைக்கப்பட்டது. பிறகு அந்த முஸ்லிமை கிறிஸ்துவரின் உறவினர்கள் பழிக்குப்பழி என்ற முறையில் கொன்றுவிட்டனர். நூல்:-  ஹிதாயா

 

இஸ்லாமிய அரசின் கீழ் முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு குடிமக்களாக சக உரிமைகளையும் பெற்று வாழும் முஸ்லிமல்லாத சிறுபான்மை மக்களை இது குறிக்கிறது. நபிமொழிகளில் பெரும்பாலும் இச்சொல் "திம்மீ" என்று கூறப்பட்டுள்ளது. முஸ்லிம்களோடு ஒப்பந்தம் செய்து வாழும் முஸ்லிமல்லாத சிறுபான்மை மக்களையும் பாதுகாப்பது இஸ்லாமிய அரசின் கடமை என்றும் அவர்களைக் கொல்வது பெரும் குற்றம் என்றும் இந்த நபிமொழி உணர்த்துகிறது.

 

பழிக்குப்பழி!

 

மொகலாய மன்னர் ஜஹாங்கிர் அவையில் இருந்தார். அவையில் முக்கியமான பிரச்சினை மீது விவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்பொழுது சலவை தொழிலாளியின் மனைவி “யசோதாபாய்” கதறி அழுதவளாக தன் கணவனின் பிணத்தை சுமந்து வந்து நீதிகேட்டு நின்றாள்.

 

மன்னர் ஜஹாங்கிர்: யாரம்மா நீ? உனக்கு என்ன நேர்ந்தது?

யசோதாபாய்: பேரரசே, நானும் என் கணவரும் சலவைதொழில் புரியும் கூலிகள். சற்று நேரத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் ஆற்றங்கரையில் வேலையில் இருந்தபோது திடீரென வந்த ஓர் அம்பொன்று என் கணவனின் கழுத்தில் பாய்ந்து அவர் உயிரை குடித்துவிட்டது. தாங்கள்தான் எனக்கு நீதி வழங்கிட வேண்டும்.

ஜஹாங்கிர்: உன் சோகம் புரிகிறதம்மா! அதற்கு நீ இங்கே வரவேண்டாமே, தாரோகா (காவல்துறை ஆணையர்)விடம் சென்று முறையிடு! அவர் தீர விசாரித்து உனக்கு நீதி வழங்குவார்.

யசோதாபாய்: மன்னிக்க வேண்டும் மன்னா! அந்த நடைமுறை எனக்கு தெரியும். ஆனால் என் கணவரின் உயிரை பறித்த அம்பு அரண்மனையில் இருந்து பாய்ந்து வந்துள்ளது. அதில் அரசமுத்திரை உள்ளது. நான் இங்கே வராமல் வேறெங்கு செல்வேன்?

ஜஹாங்கிர்: (கடும் கோபத்துடன்) யார் அங்கே, அரண்மனையில் இருந்து அம்பெய்தவரை இழுத்து வாருங்கள்.

அப்போது அங்கு மயான அமைதி நிலவ மேலரங்கிலிருந்து. "அது, நான் செலுத்திய அம்புதான்" என்று ஒரு குரல் கேட்கிறது.

ஜஹாங்கிர்: யாரது?

அந்த குரல்: நான் தான் பேரரசி நூர்ஜஹான். (ஜஹாங்கிர் மனைவி)

ஜஹாங்கிர்: ஓஹ் நீங்கள்தான் இதற்கு காரணமோ?

நூர்ஜஹான்: ஆம்.

ஜஹாங்கிர்: அப்படியானால் நீங்கள் குற்றவாளிகள் பகுதிக்கு வந்து கூண்டிலல்வா நிற்கவேண்டும்? கீழே வாருங்கள்.

அப்போது அவை முழுவதும் சலசலப்பும் பரபரப்பும் நிலவ, பேரரசி குற்றவாளி கூண்டில் நிற்கிறாள்.

ஜஹாங்கிர்: (ஆழ்ந்த யோசனைக்கு பிறகு) ஓ ஏழை குடிமகளே! உனக்கு நேர்ந்தது ஈடுசெய்ய முடியாத ஒன்று. இருந்தும், இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை உன்னிடமே வழங்குகிறேன். இதோ இந்த வில் அம்பை எடுத்துக்கொள், எப்படி இவள் உன்னை விதவையாக்கினாளோ, அதேபோன்று நீயும் இவளை விதவையாக்கிவிடுவாயாக. (அதாவது என் மீது நீ அம்பு எய்தி கொல்!) இதுவே எனது தீர்ப்பாகும். ஹிந்துஸ்தானை ஆண்ட மன்னன் ஒருவன் தன் குடும்பத்திற்காக நீதியை புதைத்தான் என்கிற வரலாறு வேண்டாம்.

யசோதா: (அம்பெடுத்து குறி பார்க்கிறாள், அவையே பதறுகிறது. திடீரென மனம் மாறி அழுதவளாக ஓடி சென்று மன்னனின் முன் நின்றுகொண்டு, மன்னா! தாங்கள் வாழ்க! தாங்களின் நீதிக்கு ஈடு எதுவுமே இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். போரரசி நூர்ஜஹானை நான் மன்னிக்கிறேன்.

 

மன்னனின் நீதியைகண்டு அவையே கலங்கி நிற்கிறது. பிறகு மன்னன் ஜஹாங்கிர் அவர்கள் அப்பெண்ணுக்கு 300 பிகாசு நிலத்தையும் 50 கழுதைகளையும் வழங்கி வழக்கை முடித்து நீதியை நிலைநாட்ட செய்கிறார்.  நூல்:-  Jahangir Naamah. by Lawrence anderson. page 676

 

மரியாதை குறைவான வார்த்தை

 

ஒருமுறை, உலக ஆடம்பரங்களை உதறித் தள்ளிவிட்டு மிகவும் பேணுதலுடன் வாழ்ந்த ஹிம்ஸ் நகர ஆளுநர் உமைர் பின் சஅத் (ரலி) அவர்கள் ஒரு திம்மீயை நோக்கி, ( اَخْزَاكَ اللَّهُ ) "அல்லாஹ் உன்னை இழிவுக்குள்ளாக்குவானாக!" என்று மரியாதை குறைவான வார்த்தையைக் கூறிவிட்டார்கள். பின்னர் இது குறித்து அன்னார் எந்த அளவுக்கு மன வருத்தத்திற்கும் வேதனைக்கும் ஆளானார்கள் என்றால், ஜனாதிபதி உமர் (ரலி)  அவர்களிடம் சென்று "இந்த பதவியால் தான் எனக்கு இந்தக் கேவலம் (என்னை நானே ஏசிப்பேசி கொள்கின்ற நிலை) ஏற்பட்டது" என்று கூறியவாறு தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்கள். நூல்:- இஸாலத்துல் ஃகபா, அல்ஃபாரூக்

 

இன்றைய இந்தியாவின் ஆட்சியாளர்களில் சிலர், சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு எதிராக, பின்விளைவை ஏற்படுத்தக்கூடிய எவ்வளவு மோசமான வார்த்தைகளையும் பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை சிலர் ஆதரிக்கிறார்கள் என்பதையும் பார்க்கிறோம்.

 

புனிதத்தலம்

 

ஃபலஸ்த்தீனத்தில் உள்ள ஜெருசலம் பகுதியில் ரோமர்களின் (கிறிஸ்தவர்களின்) காலத்தில் யூதர்களின் புனிதத் தலத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு அந்த இடமே அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முஸ்லிம்கள் அந்நகரை வெற்றிகொண்ட பிறகு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களும் மற்ற முஸ்லிம்களும் யூதர்களின் புனித பாறையின் மீது கொட்டப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்தி, அவ்விடத்தை சுத்தப்படுத்தினர். இதற்கு முன்பு குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த யூதர்களுக்கும் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அந்நகரில் குடியேற அனுமதித்தார்கள்.

 

இன்றைய இந்தியாவில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் புனிதமாக மதிக்கக்கூடிய பல வழிப்பாட்டுத்தலங்கள் (பள்ளிவாசல்கள்) கோயில்களாக மாற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக: 500 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதி, தற்போது இராமர் கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. கயவர்கள் பள்ளிவாசல்களில் கோயில்களைத் தேடுகிறார்கள். இன்றைய இந்தியாவில் பல பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், புத்தப்பீடங்களின் நிலை இதுவே!

 

ஆட்சியாளரின் பொறுப்பு

 

அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் எகிப்து தேசத்தின் ஆளுநராக இருந்த பொற்காலத்தில் யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபரால் இயேசுவின் உருவச்சிலையில் மூக்குப்பகுதி உடைக்கப்பட்டுவிட்டது. இதனால் அங்கு மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகின்றது. குற்றவாளியைக்கண்டு பிடிக்கமுடியவில்லை. போராட்டக்காரர்கள், “பதிலுக்கு நாங்களும் முஹம்மத் நபிக்கு சிலை வடித்து அதில் அவரது மூக்கை உடைத்து சேதப்படுத்துவோம்” என அறிவித்துவிட்டார்கள்.

 

பதறிப்போன ஆளுனர், ''அப்படி ஒன்றும் செய்துவிடவேண்டாம். வேண்டுமானால்  எனது  மூக்கை  வெட்டி எறிந்துவிடுங்கள். முஹம்மத்  நபியின் கற்பனை உருவத்துக்கூட சேதம் விளைவிக்க நான் மட்டுமல்ல, உலகில் எந்த முஸ்லிமும் மனம் ஒப்பமாட்டான்'' என்று கூறி, அதற்கு பகரமாக தனது மூக்கை அறுக்க நாளும், நேரமும் அறிவித்துவிட்டார். குறிப்பிட்ட தேதியில், மிகப்பெரும் மக்கள் திரளில் வைத்து, ஆளுனரின் மூக்கைப் பதம் பார்க்க இருந்த தருணத்தில், எங்கிருந்தோ வந்த சப்தம் கேட்டு அதிர்ந்து திரும்பினார்.''

 

தன்னால் ஒரு நிரபராதி, நீதிமிக்க ஆளுநரின் மூக்கு தாக்கப்படக்கூடாது. நான் தான் அந்தக் குற்றவாளி என்னை தண்டியுங்கள்.'' என்று சொல்லிக்கொண்டு தானாக முன்வந்து தனது மூக்கை நீட்டினான் குற்றவாளி.

 

முஸ்லிம் நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள் சிதைக்கப்படும்போது அதற்கு தாமே பொறுப்பேற்று, குற்றப் பரிகாரம் செலுத்த முன் வருகிறார் அந்நாட்டின் ஆளுநர். ஆம்! ஒரு நாட்டின் ஆட்சியாளர் தமது சிறுபான்மை மக்களின் உரிமைகள் பேணப்படுவதில் அக்கறை செலுத்த வேண்டும்.

 

உதவித்தொகை

 

இஸ்மாயீல் பின் அபீ காலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் உமர் (ரலி) அவர்கள் மதீனாவிலுள்ள சந்தையைக் கடந்து சென்றார்கள். அப்போது வயதான, ஒருவர் மக்களிடம் யாசகம் கேட்பதைப் பார்த்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அவரிடம் சென்று, ( مَالك يَا شَيْخُ؟ ) “பெரியவரே! உங்களுக்கு என்ன ஆனது? (ஏன் யாசகம் கேட்கிறீர்கள்?)” என்று வினவினார்கள்?

 

அதற்கு அவர், ( أَنَا يَهُودِيٌّ وَأَتَسَوَّلُ لِأَدْفَعَ الْجِزْيَةَ ) “நான் ஒரு யூதன். (உங்களுக்கு அரசுக்கு) ஜிஸ்யா வரி கட்டுவதற்குத் தான் (மக்களிடம்) யாசகம் கேட்கிறேன்” என்றார்.

 

உமர் (ரலி) அவர்கள் (அவர்மீது இரக்கப்பட்டவர்களாக), ( مَا انْصَفْنَاكَ انْ كُنَّا اخْذْنَا مِنْكَ الْجِزْيَةَ فِي شَبِيبَتِكَ ثُمَّ ضَيَّعْنَاكَ فِي كِبْرِكَ ) உங்கள் இளமைக் காலத்தில் நாங்கள் உங்களிடமிருந்து ஜிஸ்யா வரியைப் பெற்றுக்கொண்டு, உங்கள் முதுமையில் உங்களைப் புறக்கணித்தால் நாங்கள் உங்களுக்கு நியாயமாக இருக்க மாட்டோம்” என்று கூறினார்கள். பின்னர் அவர் செலுத்தவேண்டிய ஜிஸ்யா வரியை தள்ளுபடி செய்து, அவருக்கு உதவியாக, அரசுக் கருவூலத்தில் இருந்து பணம் கொடுத்து உதவினார்கள்.

 

பின்னர் உமர் (ரலி)  அவர்கள் ( لَوْ مَاتَ جَمَلٌ ضَيَاعًا عَلَى شَطِّ الْفُرَاتِ، لَخَشِيتُ أَنْ يَسْأَلَنِي اللَّهُ عَنْهُ ) “யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு ஒட்டகம் இறந்து போயிருந்தாலும், (அது ஏன் இறந்து போனது? என்று) அல்லாஹ் அது குறித்து   என்னிடம் கேட்பான் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.  நூல்:- அல்அம்வால் - இமாம் அபூ உபைத் அல்காசிம் பின் சலாம், ஜாமிஉல் அஹாதீஸ் - இமாம் சுயூத்தீ, அஹ்காம் அஹ்லுத்திம்மி - இப்னு கய்யிம், அன்சாபுல் அஷ்ராஃப் இமாம் பிலாதுரீ, கன்ஸுல் உம்மால்

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தான் உலகத்தில் முதன்முறையாக முதியோர் உதவி தொகையை தொடங்கிவைத்தார்கள். அதிலும் சிறுபான்மையினரிடம் இருந்து தொடங்கி வைத்தார்கள். சிறுபான்மையினரும் அரசின் உதவித்தொகைகளைப் பெற தகுதியுடையவர்கள் என்பது தெளிவாகிறது.

 

பதவி வகித்தனர்

 

பக்தாத் நகர தலைமை நீதிபதி இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் (இறப்பு ஹஜ்ரீ 282) நீதிமன்றத்தில் ஒரு வழக்கை விசாரித்து கொண்டிருந்தார்கள். அச்சமயம் அப்பாசிய மன்னர் 'முஃதழிது பில்லாஹ்' அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த அப்தூன் பின் ஸாயித் என்பவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

 

நீதிமன்றத்தின் உள்ளே அமைச்சர் வந்ததும் தலைமை நீதிபதி இஸ்மாயீல் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் எழுந்து நின்று அமைச்சரை வரவேற்றார்கள்.

 

அச்சமயம் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் இப்படி எழுந்து நின்று வரவேற்றதை விரும்பவில்லை என்பதை விளங்கிக்கொண்டார்கள். அமைச்சர் சென்ற பின்பு இவ்வாறு கூறினார்கள். நீங்கள் வெறுப்பது எனக்கு தெரிகிறது. எனினும் குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு அல்லவா? கூறுகிறான் எனக்கூறி தலைப்பில் காணும் திருவசனத்தை (60:8) ஓதி காட்டினார்கள்.

 

பிறகு, "இவர் அமைச்சராக இருப்பதால் முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பதோடு நமக்கும் மன்னருக்கும் இடையே பாலமாக உள்ளார்" என்று கூறினார்கள். நூல்:- அல்அகல்லியாதுத் தீனிய்யா வல்ஹல்லுல் இஸ்லாமி - இமாம் யூசுஃப் அல்கர்ளாவீ

 

பிரபல அறிஞர் "மேத்ஸ்" என்பவர் "இஸ்லாமிய தாராளம்" என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் இஸ்லாமிய நாட்டில் சிறுபான்மையினராக இருந்த கிறிஸ்தவர்களில் பலரும் நீதிபதிகளாகவும், அமைச்சர்களாகவும், அதிகாரம் உள்ளவராகவும் அங்கம் வகித்துள்ளனர். நூல்:- அல்அகல்லியாதுத் தீனிய்யா வல்ஹல்லுல் இஸ்லாமி

 

இறையச்சமுள்ள இஸ்லாமியர்களின் ஆட்சிகாலத்தில் சிறுபான்மை மக்களுக்கு கல்வியும், தகுதிக்கேற்ற பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

 

மனம் பொருத்தல்

 

ஷாம் தேச எல்லையில் 'அர்பசூஸ்' என்ற ஊர் இருந்தது. ஷாம் தேசம் வெற்றிகொள்ளப்பட்ட போது இந்த ஊரும் வெற்றி கொள்ளப்பட்டது. சமாதான உடன்படிக்கையும் ஏற்பட்டது. ஆனால் இங்கு வசித்த மக்கள் திரைமறைவில் ரோமானியக் கிறிஸ்தவர்களுடன் கூட்டுசேர்ந்து சதி வேலையில் ஈடுபட்டனர். இங்கு கிடைக்கும் செய்திகளை அவர்களிடம் தெரிவித்து கொண்டிருந்தனர்.

 

இதை அறிந்த ஆளுநர் உமைர் பின் சஅத் (ரலி) அவர்கள் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு இவர்கள் குறித்து தகவல் அனுப்பினார். உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு பதில் கடிதம் எழுதினார்கள்:

 

அந்த மக்களின் சொத்துக்கள், நிலங்கள், கால்நடைகள், இன்ன பிற வாழ்க்கைச் சாதனங்கள் அனைத்தையும் கணக்கிட்டு, ஒவ்வொரு பொருளுக்கும் இருமடங்கு விலைபோட்டுக் கொடுங்கள். பிறகு, வேறு எங்காவது நீங்கள் சென்றுவிடுங்கள் என்று அவர்களிடம் சொல்லிவிடுங்கள்.

 

இதை அவர்கள் பொருந்திக்கொள்ளவில்லை எனில், அவர்களுக்கு ஓராண்டு அவகாசம் கொடுங்கள். அதற்குப் பிறகு அவர்களை நாடு கடத்திவிடுங்கள்.

 

அவர்கள் தங்களுடைய சதிவேலைகளைவிட்டும் விலகிட முன்வராத போதுதான் இந்த கட்டளை செயல்படுத்தப்பட்டது. நூல்:- ஃபுதூஹுல் புல்தான், அல்ஃபாரூக்

 

இன்றைய காலகட்டத்தில் எந்த நாட்டினராவது இதுபோன்ற மன்னித்தல், மனம் பொருத்தல், விட்டுக்கொடுத்தல் போன்றவற்றுக்கு ஏதேனும் ஒரு எடுத்துக்காட்டை சொல்ல முடியுமா என்ன?

 

இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்த சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களைத்தான் இன்று தீவிரவாதிகளாகவும், நாட்டிற்கு எதிரானவர்களாகவும் சித்தரித்து திரைப்படம் எடுக்கின்றனர். நாட்டில் எங்கு குண்டு வெடித்தாலும், அதை யார்? எதற்காக? செய்தனர் என்று எவ்வித விசாரணையுமின்றி உடனே, "இது முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி வேலை" என்பதாக வதந்திகளை பரப்பிவிடுகின்றனர். இதில் ஊடகத்தின் பங்கே, பெரும் பங்காகும்.  

 

மதரீதியான குறுக்கீடுகள் இல்லை

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழக்கூடிய சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவர்களின் மதரீதியான கோட்பாடுகள் குறித்து தலையிடவில்லை. ஆனால், அவர்களிடம் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டது.

( وَلَا يَرْفَعُو فِي نَادِي اَهْلِ اَلِاسْلَامِ صَلِيبًا )

1. முஸ்லிம்களின் சபைகளில் சிலுவையை உயர்த்திப்பிடிக்க வேண்டாம்.

( يَضْرِبُو نَوَاقِيسَهُمْ فِي اَيِّ سَاعَةٍ شَاؤُوا مِنْ لَيْلٍ اوْ نَهَارٍ الَّا فِي اوِقَاتِ الصَّلَاةِ )

2. இரவிலோ பகலிலோ விரும்பும் நேரத்தில் அவர்கள் மேள தாளங்கள் அடித்துக் கொள்ளட்டும். ஆனால், தொழுகை நேரங்களில் அடிக்க வேண்டாம்.

( وَلَا يُخْرِجُو خِنْزِيرًا مِنْ مَنَازِلِهِمْ الَى اَفْنِيَةِ الْمُسْلِمِينَ )

3. பன்றிகளை அவர்கள் தங்கள் வீடுகளில் வைத்துகொள்ளட்டும். முஸ்லிம் பகுதிகளுக்கு கொண்டு வர வேண்டாம். நூ:- தாரீகுத் தபரீ, அல்ஃபாரூக்

 

இந்திய நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் அவர்கள் நினைத்தவாறு பள்ளிவாசல் கட்டிக்கொள்ள, தற்போது அரசு அனுமதி அவ்வளவு இலகுவாக கிடைப்பதில்லை. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், நூற்றாண்டுகளைக் கடந்த பல பள்ளிவாசல்கள், அவை கோயில்களாக இருந்தவையே என்று பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. எனவே, அந்தப் பள்ளிவாசல்களை இடித்துவிட்டு அங்கே கோயில்கள் கட்டப்பட வேண்டும் என்பதாக கயவர்கள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 

முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்டாலோ அல்லது வீட்டில் வைத்திருந்தாலோ கொல்லப்படுகிறார்கள். அல்லது கடுமையாக தாக்கப்படுகிறார்கள். இதில் ஆண், பெண், குழந்தைகள், பெரியவர் என்று எந்த இரக்கமும் காட்டப்படுவதில்லை‌.

 

முஸ்லிம்கள் தமது பள்ளிவாசலில் மைக் வைத்து பாங்கு சொல்வதை தடைவிதிக்கக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுகிறது.

 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பள்ளிவாசலுக்கு அருகில் வந்ததும் சப்தமாக முழக்கமிட்டு கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கப்படுகிறது.

 

இந்தியா பாகிஸ்தான் பிரிந்தபோது முஸ்லிம் லீக் கட்சியும் பிரிய நேரிட்டது. இந்தியாவில் காயிதேமில்லத் இஸ்மாயீல் சாஹிப் (ரஹ்) அவர்களின் தலைமையிலும், பாகிஸ்தானில் முஹம்மது அலி ஜின்னா அவர்களின் தலைமையிலும் செயல்படத் துவங்கிய நேரத்தில் கட்சிப்பணத்தை பிரிப்பது பற்றிய பேச்சு வந்தது. கண்ணியமிக்க காயிதே மில்லத் (ரஹ்) அவர்கள், “கட்சிப்பணத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். அதை நாங்கள் எப்படியோ சமாளித்துக்கொள்வோம். உங்கள் நாட்டில் (பாகிஸ்தானில்) வாழும் சிறுபான்மை இந்து மக்களை நீங்கள் நல்லவிதமாக நடத்துங்கள். அவர்களின் உரிமைகளை மதித்து நடந்துகொள்ளுங்கள். அவர்களின் மத உரிமைகளில் தலையிடாதீர்கள். அவ்வாறு செய்தால் அதுவே எங்களுக்குப் போதும். நீங்கள் பணம் தராவிட்டாலும் பரவாயில்லை” கூறினார்கள்.

 

உலக அளவிலும் குறிப்பாக, இந்திய தேசத்திலும் சிறுபான்மையினரின் உரிமைகள் பேணப்பட்டு, அவர்கள் அச்சமற்று நிம்மதியுடன் வாழ்வதற்கு அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...