Search This Blog

Wednesday, 18 December 2024

மணக்கொடை

 

மணக்கொடை

 

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَرِيئًا

பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை மனமுவந்து வழங்குங்கள். அதில் எதையேனும் அவர்கள் மனமுவந்து உங்களுக்கு விட்டுக் கொடுத்தால், அதை மனநிறையுடனும் மகிழ்வுடன் உண்ணுங்கள். திருக்குர்ஆன்:- 4:4

 

நவம்பர் 26 ஆம் தேதி வரதட்சணை தடை தினமாக அனுசரிக்கப்படுகிறது. வரதட்சணை தொடர்பான வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, 1961 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, வரதட்சணை கொடுப்பது, வாங்குவது, அதற்குத் துணைபுரிவது ஆகியவை குற்றமாகும். இதில் குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத காலச் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்கிறது அரசாணை.

 

"மஹ்ர்" எனும் சொல்லுக்கு 'பதில்' 'பகரம்' என்பது சொற்பொருளாகும். மணமகளுக்கு மணமகன் கட்டாயமாக அளிக்க வேண்டிய 'மணக்கொடை'க்கே இஸ்லாமிய வழக்கில் 'மஹ்ர்' என்பர்.

 

திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யும் வகையிலும், மணமகளை வைத்து வாழ்க்கை நடத்துகின்ற தகுதி மணமகனுக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையிலும் மஹ்ர் கொடுக்கும் முறை மார்க்கத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் தம்பதியரிடையே பிரிவினை ஏற்பட்டாலும்கூட இந்த மஹ்ர் தொகை மணமகளுக்கு ஒரு உதவியாக இருக்கும். மனைவி மீது கணவனுக்கு உண்மையிலேயே பற்று உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாகவும் இந்த மஹ்ர் அமைந்துள்ளது. ஆக, மணமகளின் தகுதியையும் பாதுகாப்பையும் இந்த மஹ்ர் உறுதி செய்கிறது.

 

மைமூன் அல்குர்தீ (ரஹ்) அவர்கள் தமது தந்தை மூலமாக அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّمَا رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً عَلَى مَا قَلَّ مِنْ الْمَهْرِ أَوْ كَثُرَ ، لَيْسَ فِي نَفْسِهِ أَنْ يُؤَدِّيَ إِلَيْهَا حَقَّهَا ؛ خَدَعَهَا ، فَمَاتَ وَلَمْ يُؤَدِّ إِلَيْهَا حَقَّهَا ؛ لَقِيَ اللَّهَ يَوْمَ الْقِيَامَةِ وَهُوَ زَانٍ ) எந்த ஒரு மனிதன் (தமது திருமணத்தின்போது) மணக்கொடை கொடுக்கும் எண்ணமின்றி ஒரு மணப்பெண்ணுக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ மஹ்ர் கொடுப்பதாக வாக்களித்தானேயானால், அவன் அவளுக்கு மோசடி செய்தவனாக ஆகிவிட்டான். அவன் அதைக் கொடுக்காமலேயே (வாழ்ந்து) மரணித்துவிட்டால், அவன் மறுமைநாளில் விபச்சாரம் செய்தவனாகவே அல்லாஹ்வை சந்திப்பான்.

 

மைமூன் அல்குர்தீ (ரஹ்) அவர்களின் தந்தை, "(மேற்காணும்) இந்த நபிமொழியை நபியவர்களிடம் ஒருமுறை அல்லது இருமுறை அல்லது மூன்று முறை அல்ல. பத்து முறை செவியுற்றுள்ளேன்" என்கிறார்.  நூல்:- மஜ்மஉஸ் ஸவாயித், ஸஹீஹ் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு

 

ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அன்று ஒருவர் தம் மகளை மணமுடித்துக் கொடுக்கும்போது அவளுக்கு சேர வேண்டிய மணக்கொடையை அவளிடம் கொடுக்காமல் தாமே எடுத்துக்கொள்வார். இதைத் தடுக்கும் விதமாகவே அல்லாஹ் தலைப்பில் காணும் திருவசனத்தை அருளினான். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர்


இறைத்தூதர்கள் வழங்கியது 


அவர் (மூசாவிடம்), "நீ எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் என்னுடைய இவ்விரு புதல்வியரில் ஒருவரை நான் உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். நீர் பத்து ஆண்டுகளாக பூர்த்தி செய்தால், அது உமது விருப்பம்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 28:27


மத்யன் நகரில் இறைத்தூதராக இருந்த ஷுஐப் (அலை) அவர்களிடம் இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் சுமார் பத்து ஆண்டுகள் ஆடு மேய்க்கும் பணியாளராக இருந்து, அந்தப் பணியையே (மஹ்ர் எனும்) மணக்கொடையாக வைத்து, ஷுஐப் (அலை) அவர்களின் மகள் ஸபூரா (அலை) அவர்களை மணமுடித்துக்கொண்டார்கள். இதையே மேற்காணும் திருவசனம் கூறுகிறது.

 

அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது.  நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபியவர்கள் (தம் துணைவியருக்குக்) கொடுத்த மணக்கொடை (மஹ்ர்) எவ்வளவு?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபியவர்கள் தம் துணைவியருக்கு வழங்கிய மணக்கொடை, பன்னிரண்டு ஊக்கியாவும் ஒரு நஷ்ஷுமாகும். (அதாவது) அது, ஐநூறு வெள்ளிக்காசுகள் ஆகும்" என்று சொன்னார்கள். நூல்:- முஸ்லிம்-2787

 

அபுல் அஜ்ஃபா அஸ்ஸுலமீ (ரஹ்) ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் (உரையாற்றுகையில்) பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்: அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் எவருக்கும் பனிரெண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை வழங்கவில்லை. அவர்களுடைய புதல்வியருள் எவருக்கும் பனிரெண்டு ஊக்கியாக்களைவிட கூடுதலாக மணக்கொடை பெற்றதும் இல்லை. நூல்:- அபூதாவூத் -1801, திர்மிதீ-1033, இப்னுமாஜா-1877, முஸ்னது அஹ்மத்-272, தாரிமீ, இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகீ

 

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் என்பவர்களின் மனைவியாக இருந்தேன். (ஹபஷா எனும்) எத்தியோப்பியாவில் என் கணவர் இறந்துவிட்டார். (காத்திருப்பு காலம் முடிந்த) பின்னர் நஜாஷீ மன்னர் அண்ணல் நபி (ஸல்) அர்களுக்கு என்னை மணமுடித்து வைத்தார். அப்போது (நபியவர்களின் சார்பாக) அவர் நான்காயிரம் (வெள்ளிக்காசுகள்) மஹ்ராக கொடுத்தார். என்னை ஷுரப்பில் பின் ஹசனா என்பவருடன் அனுப்பிவைத்தார். நூல்:- அபூதாவூத்-1802, நசாயீ-3298, முஸ்னது அஹ்மத்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹபீபா (ரலி) அவர்களை  மணந்தபோது அவருக்கு நபியவர்கள் சார்பாக மணக்கொடையாக நான்காயிரம் வெள்ளிக்காசுகள் வழங்கப்பட்டது. இத்தொகையை அபிசீனிய மன்னர் நஜாஷீ (ரஹ்) அவர்களே செலுத்தினார்கள். நபியவர்கள் தமது மற்ற மனைவியருக்கு 12 ஊக்கியாக்களைவிடக் (500 வெள்ளிக்காசுகள்) கூடுதலாக மணக்கொடை வழங்கவில்லை என்பது சரியான தகவல்.

 

அன்றைய ஒரு வெள்ளிக்காசு என்பது 3.06 கிராம் வெள்ளி ஆகும். இதன்படி 3.06 × 500 = 1530 கிராம் வெள்ளி ஆகிறது.

 

மதிப்பிற்குரியதை கொடுக்கவேண்டும்  

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்கள்மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் அடையாளத்தைக் கண்டு (வியந்து), “என்ன இது, அப்துர் ரஹ்மான்!” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அன்சாரி பெண்ணொருத்தியை மணமுடித்துகொண்டேன்” என்று பதிலளித்தார்கள்.

 

நபியவர்கள், ( فَمَا سُقْتَ فِيهَا ) “அவளுக்கு (மணக்கொடையாக) என்ன கொடுத்தீர்?” என்று கேட்டார்கள், அதற்கு அவர், ( وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ ) "ஒரு பேரீத்தம் கொட்டையளவு தங்கம்” என்று பதிலளித்தார்கள். நபியவர்கள், ( فَبَارَكَ اللَّهُ لَكَ ) "அல்லாஹ் உமக்கு வளத்தை வழங்குவானாக" என்று வாழ்த்து கூறினார்கள். நூல்:-  புகாரீ-3937, முஸ்லிம்-2788

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (21 வயதுள்ள) அலீ (ரலி) அவர்கள் (15 வயதுள்ள) ஃபாத்திமா (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், ( أَعْطِهَا شَيْئًا ) "ஃபாத்திமாவுக்கு (மஹ்ராக) எதையாவது கொடுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ( مَا عِنْدِي شَىْءٌ ) "என்னிடம் எதுவும் இல்லை" என்று கூறினார். நபியவர்கள், ( أَيْنَ دِرْعُكَ الْحُطَمِيَّةُ ) "உம்முடைய ஹுத்தமிய்யா குல உருக்குச்சட்டை எங்கே?" என்று கேட்டார்கள். (அதை அவருக்கு கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.) நூல்:- அபூதாவூத்-1815, நசாயீ-3322, முஸ்னது அஹ்மத்

 

ஆமிர் பின் ரபீஆ ரலி அவர்கள் கூறியதாவது. பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு ஜோடி காலணியை மணக்கொடையாகப் பெற்றுக்கொண்டு ஒருவரை மணந்துகொண்டார். அவரிடம் அருமை நாயகம் (ஸல்)  அவர்கள், ( أَرَضِيتِ مِنْ نَفْسِكِ وَمَالِكِ بِنَعْلَيْنِ ) "ஒரு ஜோடி காலணிக்குப் பதிலாக உன் செல்வத்துடன் உன்னைக் கொடுப்பதற்கு நீ சம்மதித்துவிட்டாயா?" என்று கேட்டார்கள். அப்பெண், "ஆம்" என்றார். எனவே, அவரது திருமணத்தை நபியவர்கள் செல்லும் என்று அறிவித்தார்கள். நூல்:- திர்மிதீ-1031

 

மணக்கொடை என்பது தங்கம், வெள்ளி, பணம், இன்ன பிற பொருள்கள் ஆகியவையாக இருக்கலாம். அவரவர் சக்திக்கும் வசதிக்கும் ஏற்ற வகையில் மணக்கொடை வழங்கலாம்.

 

தன்னிடத்தில் பொருளாதாரம் இருக்கும் பட்சத்தில் அவள் கேட்பதை மஹ்ராக கொடுப்பது ஆண் மீது கடமை. பொருளாதாரம் சிறிதளவு தான் இருக்கிறது அல்லது மதிப்பற்ற ஒரு பொருள் தான் இருக்கிறது எனும்போது அதை மணமகள் பொருந்திக் கொண்டால் தன்னால் இயன்றதை அவர் கொடுத்து மணமுடிக்கலாம். மஹ்ர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பியவாறு நிர்ணயிக்கலாம். அல்லது அவர்கள் அதை தள்ளுபடியும் செய்துவிடலாம்.

 

அளவீடு இல்லை

 

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் ஏறி (பின்வருமாறு) உரை நிகழ்த்தினார்கள். ( أَيُّهَا النَّاسُ، مَا إِكْثَارُكُمْ فِي صُدُق النِّسَاءِ وَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ وأصحابه وإنماالصدقات فِيمَا بَيْنَهُمْ أَرْبَعُمِائَةِ دِرْهَمٍ فَمَا دُونَ ذَلِكَ. وَلَوْ كَانَ الْإِكْثَارُ فِي ذَلِكَ تَقْوًى عِنْدَ اللَّهِ أَوْ كَرَامَةً لَمْ تَسْبِقُوهُمْ إِلَيْهَا. فَلا أعرفَنَّ مَا زَادَ رَجُلٌ فِي صَدَاقِ امْرَأَةٍ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ ) மக்களே! பெண்களுக்கு வழங்கப்படும் மணக்கொடையை ஏன் உயர்த்துகிறார்கள்? அண்ணல் நபி (ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் நானூறு வெள்ளிக்காசுகள் அல்லது அதைவிடக் குறைவான வெள்ளிக்காசுகளை மணக்கொடையாக அளித்து வந்தார்கள். இதைவிடவும் மணக்கொடையை உயர்த்துவது அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ (உலகின்) கண்ணியமான நடைமுறையாகவோ இருந்திருந்தால் இந்த விஷயத்தில் அவர்களை நீங்கள் முந்தியிருக்க முடியாது. நானூறு வெள்ளிக்காசுகளைவிட அதிகமாக எவரும் எந்தப் பெண்ணுக்கும் மணக்கொடை வழங்கவில்லை என்பதை நான் உறுதியாக அறிவேன்.

 

உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறிவிட்டு சொற்பொழிவு மேடையிலிருந்து கீழே இறங்கியபோது குரைஷிப் பெண் ஒருவர் அவர்களை இடைமறித்து, ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، نَهَيْتَ النَّاسَ أَنْ يَزِيدُوا النِّسَاءَ صَدَاقَهُمْ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ؟ ) "இறைநம்பிக்கையாளரகளின் தலைவரே! நானூறு வெள்ளிக்காசுகளைவிட அதிகமாக பெண்களுக்கு மணக்கொடை அளிக்கக்கூடாது என்று மக்களுக்கு நீங்கள் உத்தரவிட்டுள்ளீர்கள் அல்லவா?" என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "ஆம்" என்றார்கள்.

 

உடனே அந்தப் பெண், ( أَمَا سَمِعْتَ اللَّهَ يَقُولُ: وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا أَتَأْخُذُونَهُ بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا ) "அவளுக்கு நீங்கள் ஒரு பொருள் குவியலையே (மஹராகக்) கொடுத்திருந்தாலும் (4:20) என்று அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?" என வினவினார்.

 

அப்போது உமர் (ரலி) அவர்கள், ( اللَّهُمَّ غَفْرًا، كُلُّ النَّاسِ أَفْقَهُ مِنْ عُمَرَ ) "இறைவா! மன்னித்துவிடு! உமரைவிட மக்கள் அனைவருமே மார்க்கத்தை நன்றாக புரிந்துள்ளார்கள்" என்று கூறிவிட்டு, மீண்டும் சொற்பொழிவு மேடையில் ஏறி, ( إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ أَنْ تَزِيدُوا النِّسَاءَ فِي صَدَاقِهِنَّ عَلَى أَرْبَعِمِائَةِ دِرْهَمٍ، فَمَنْ شَاءَ أَنْ يُعْطِيَ مِنْ مَالِهِ مَا أَحَبَّ ) "மக்களே! பெண்களின் மணக்கொடையை நானூறு வெள்ளிக்காசுகளைவிட உயர்த்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். ஆனால், நாடியவர் தமது விருப்பப்படி தமது பொருளில் இருந்து (எவ்வளவு வேண்டுமானாலும்) கொடுக்கட்டும்" என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-20, முஸ்னது அபீயஅலா, பைஹகீ, கன்ஸுல் உம்மால்

 

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஹசன் (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்தார்கள். அப்போது நூறு அடிமைப்பெண்களை மஹ்ராக அனுப்பி வைத்தார்கள். அப்பெண்கள் ஒவ்வொருவரிடமும் ஆயிரம் வெள்ளிக்காசுகளை கொடுத்து அனுப்பினார்கள். (மொத்தம் ஒரு லட்சம் வெள்ளிக்காசுகள் மஹ்ராக கொடுத்தார்கள்.) நூல்:- தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-911

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. (எனது எஜமானர்) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தபோது நானூறு வெள்ளிக்காசுகளை மஹ்ராக கொடுத்து அனுப்பினார்கள். அப்பெண் இது எங்களுக்கு போதுமானதில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டார். எனவே, அன்னார் (தமது தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு தெரியாமல், மேலும் இருநூறு வெள்ளிக்காசுகளை அதிகமாக கொடுத்து அனுப்பினார்கள். நூல்:- இப்னு அபீஷைபா, கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-911

 

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும், இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்துச் செய்யப்படக் கூடும். அந்த நிலையை எல்லாம் எண்ணிப் பார்த்து மஹ்ர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையைப் பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

 

திருமணத்தின்போது பெண்ணுக்கு கொடுக்கப்படும் (மஹ்ர் எனும்) மணக்கொடை தொகையில் உச்ச வரம்பு விதித்து சட்டம் இயற்றிய உமர் (ரலி) அவர்கள்,  ஒரு பெண்ணின் சுட்டிக்காட்டலுக்கு இசைந்து தன் அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்கள் என்கிறது இஸ்லாமிய வரலாறு.

 

பெண்களுக்குண்டான (மஹ்ர் எனும்) மணக்கொடையை இஸ்லாம் சரியான முறையில் கொடுக்கச் சொல்கிறது. அதனை ஒரு ஜனாதிபதி நினைத்தாலும்கூட மாற்றி அமைக்கின்ற உரிமையோ, சக்தியோ கிடையாது

 

பெண்கள் மஹ்ர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவ்வளவு தான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. ஒரு பொற்குவியலையேகூட மஹ்ராக கேட்கலாம் என்பது குர்ஆனின் (4:20) நிலைபாடு.

 

வித்தியாசமான மணக்கொடை

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரீ ஏழாவது ஆண்டு நடைபெற்ற கைபர் போரில் கைதியாக பிடிபட்ட) ஸஃபிய்யா (ரலி) அவர்களை விடுதலை செய்(து அவரை மணந்)தார்கள். மேலும், அவரது விடுதலையையே அவரின் மணக்கொடையாக (மஹ்ர்) ஆக்கினார்கள். நூல் புகாரீ-371, முஸ்லிம்-2793, திர்மிதீ-1034

 

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, " நாயகமே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க (மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்து கொள்ளுமாறு கோரி) வந்துள்ளேன்" என்று சொன்னார். நபியவர்களுக்கு அதில் விருப்பமில்லை.

 

அப்போது அங்கிருந்த நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, "நாயகமே! தங்களுக்கு அவர் தேவையில்லையென்றால், அவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்" என்றார். நபியவர்கள், ( فَهَلْ عِنْدَكَ مِنْ شَىْءٍ ) "(மணக்கொடையாகச் செலுத்த) உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், " நாயகமே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடம் ஏதுமில்லை" என்றார். நபியவர்கள், ( اذْهَبْ إِلَى أَهْلِكَ فَانْظُرْ هَلْ تَجِدُ شَيْئًا ) "உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்" என்றார்கள். அவர் போய்ப் பார்த்து விட்டுத் திரும்பிவந்து, "நாயகமே! அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை" என்று சொன்னார். நபியவர்கள், ( انْظُرْ وَلَوْ خَاتِمًا مِنْ حَدِيدٍ ) “இரும்பாலான ஒரு மோதிரமாவது கிடைக்குமா? என்று பார்" எனச் சொல்லியனுப்பினார்கள். அவர் (மீண்டும்) சென்றுவிட்டுத் திரும்பிவந்து, "நாயகமே! அல்லாஹ்வின் மீதாணையாக! இரும்பு மோதிரம்கூடக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ இந்த எனது வேட்டி உள்ளது; அதில் பாதி அவளுக்கு" என்று சொன்னார்.

 

அறிவிப்பாளர் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவரிடம் ஒரு மேல் துண்டு கூட இல்லை. (அதனால்தான் தனது வேட்டியில் பாதியை அவளுக்குத் தருவதாகச் சொன்னார்.)

 

அதற்கு நபியவர்கள், ( مَا تَصْنَعُ بِإِزَارِكَ إِنْ لَبِسْتَهُ لَمْ يَكُنْ عَلَيْهَا مِنْهُ شَىْءٌ وَإِنْ لَبِسَتْهُ لَمْ يَكُنْ عَلَيْكَ مِنْهُ شَىْءٌ ) "உமது (ஒரு) வேட்டியை வைத்துக்கொண்டு நீர் என்ன செய்வீர்? இந்த வேட்டியை நீர் அணிந்துகொண்டால், அவள்மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்துகொண்டால், உம்மீது ஏதும் இருக்காது" என்றார்கள்.

 

பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்துவிட்டு எழுந்தார். அவர் திரும்பிச்செல்வதை நபியவர்கள் பார்த்தபோது, அவரை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள். அவர் அழைக்கப்பட்டார். அவர் வந்தபோது, ( مَاذَا مَعَكَ مِنَ الْقُرْآنِ ) "உம்முடன் குர்ஆனில் என்ன (அத்தியாயம் மனப்பாடமாக) உள்ளது?" என்று கேட்டார்கள். அவர், "இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் உள்ளது" என்று எண்ணி எண்ணிச் சொன்னார். நபியவர்கள், ( تَقْرَؤُهُنَّ عَنْ ظَهْرِ قَلْبِكَ ) "அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (ஓதுவேன்)" என்று சொன்னார். நபியவர்கள், ( انْطَلِقْ فَقَدْ زَوَّجْتُكَهَا فَعَلِّمْهَا مِنَ الْقُرْآنِ ) "இப்பெண்ணை உமக்குத் திருமணம் முடித்துக் கொடுத்துவிட்டேன். நீர் சென்று அவளுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பீராக!" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-5030, முஸ்லிம்-2785, 2786, திர்மிதீ-1032

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்கள் (விதவையாகிவிட்ட என் தாயார்) உம்முசுலைம் (ரலி) அவர்களிடம் வந்து பெண் கேட்டார். அதற்கு உம்முசுலைம் (ரலி) அவர்கள், ( أَمَّا إِنِّي فِيكَ لَرَاغِبَةٌ ، وَمَا مِثْلُكَ يَرُدُّ ، وَلَكِنَّكَ كَافِرٌ ، فَإِنْ تَسَلَّمْ فَذَلِكَ مَهْرِي ، لَا أَسْأَلُكَ غَيْرَهُ ) "உங்களைப் போன்றவர் பெண் கேட்டால் யாரும் மறுக்க மாட்டார்கள். இது குறித்து உங்கள் விஷயத்தில் எனக்கு விருப்பம் இருந்தாலும், நீங்கள் இறைமறுப்பாளராக இருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் முஸ்லிமாகிவிட்டால், அதுவே எனக்குரிய மணக்கொடையாகும். அதைத் தவிர (மணக்கொடையாக) வேறு எதையும் உங்களிடம் கேட்கமாட்டேன்" என்று கூறினார். அவ்வாறே அவர் முஸ்லிமாகி, உம்முசுலைம் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டார். நூல்:- அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ

 

ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள (Al-Imam Alshatibi Institute for Quranic Studies) "அல்இமாம் அஷ்ஷாதிபீ குர்ஆன் கல்விக்கூடம்" என்ற நிறுவனத்தின் தலைவர் நபில் அன்சாரி கூறுகிறார். ஃபிரான்ஸ் நாட்டிலுள்ள முஸ்லிம் பெண்கள் திருமணத்தின்போது (மஹ்ர் எனும்) மணக்கொடைக்கு பகரமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற தங்களை மக்கா நகருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறார்கள்.

 

பிற்படுத்தலாமா?

 

அவர்களில் யாரிடம் (திருமணத்தின் மூலம்) நீங்கள் இன்பம் சுவைத்தீர்களோ அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மணக்கொடையை கொடுத்துவிடுங்கள். திருக்குர்ஆன்:- 4:24

 

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருவரிடம், ( أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلاَنَةَ ) "இன்ன பெண்ணை உமக்கு மணமுடித்து வைத்தால் நீ பொருந்திக்கொள்வாயா?" என்று கேட்டார்கள். அதேபோல் அப்பெண்ணிடம், ( أَتَرْضِينَ أَنْ أُزَوِّجَكِ فُلاَنًا ) "இன்ன ஆணை உமக்கு மணமுடித்து வைத்தால் நீ பொருந்திக்கொள்வாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும் "ஆம்" என்றனர்.

 

அவ்விரும் அவ்விருவரும் மணமுடித்துக் கொண்டனர். பிறகு அவர் அவளோடு தாம்பத்திய உறவுகொண்டார். ஆனால், அவர் அவளுக்கு மஹ்ர் நிர்ணயம் செய்யவும் இல்லை; எதையும் கொடுக்கவும் இல்லை. அம்மனிதர் 'ஹுதைபியா'வில் கலந்துகொண்டவர் ஆவார். மேலும், ஹுதைபியாவில் கலந்து கொண்டவர்களுக்கு கைபரில் கிடைத்த (போர்ச் செல்வங்களின்) பங்கு கிடைத்தது.

 

அம்மனிதருக்கு மரண நேரம் நெருங்கியபோது, ( إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم زَوَّجَنِي فُلاَنَةَ وَلَمْ أَفْرِضْ لَهَا صَدَاقًا وَلَمْ أُعْطِهَا شَيْئًا وَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي أَعْطَيْتُهَا مِنْ صَدَاقِهَا سَهْمِي بِخَيْبَرَ ) “நபியவர்கள் எனக்கு இன்ன பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். அப்போது நான் அவளுக்கு மஹ்ரை நிர்ணயம் செய்யவில்லை. மேலும், எதையும் அவளுக்கு கொடுக்கவும் இல்லை. எனவே (மக்களே!) நான் உங்களை சாட்சியாக ஆக்குகிறேன். கைபர் போரில் கிடைத்த என்னுடைய பங்கை (என் மனைவியான) அவளுக்கு மஹ்ராக நான் இப்போது வழங்குகிறேன்" என்று கூறினார். அவரின் மனைவி அதைப் பெற்றுக்கொண்டு ஒரு இலட்சம் வெள்ளிக்காசுகளுக்கு விற்றுவிட்டார். நூல்:- அபூதாவூத்-1808, இப்னு ஹிப்பான், பைஹகீ

 

மணப்பெண்ணுக்கு முதலரவில் அல்லது அதற்கு முன்பு கட்டாயமாக மஹ்ர் கொடுத்துவிட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அதை பிற்படுத்தியும் கொடுக்கலாம். மனைவி மன்னித்து, மஹ்ர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாலும் கூடும்.

 

திருமணத்தின்போது மஹ்ர் குறிப்பிடாவிட்டாலும் திருமணம் செல்லும். ஆனால், பின்னர் அந்த மணப்பெண்ணின் தகுதிக்கேற்ற நிகர மஹ்ரை வழங்கியாக வேண்டும். திருமண ஒப்பந்தம் நடைபெறும்போதே மஹ்ரை செலுத்துவது தான் சிறந்தது.

 

நிர்ணயிக்காவிட்டால்

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு மனிதர் மஹ்ரை நிர்ணயம் செய்யாமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவளோடு தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன் மரணித்துவிட்டார். (அத்தகைய ஒரு மனிதரைப்பற்றி வழக்கு என்னிடம் கொண்டுவரப்பட்டது.)

 

பின்னர் "(அப்படியானால் இந்தப் பிரச்சினை எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்று கூறிவிட்டு), அவளுக்கு அவளுடைய (சகோதரிகள் போன்ற அவளது குடும்பப்) பெண்களின் மஹ்ர் போன்றது முழுமையாக உண்டு. அவளுக்கு (இத்தா எனும்) காத்திருப்பு காலமும் உண்டு. அவளுக்கு வாரிசுச் சொத்தும் உண்டு" என்று கூறினார்கள்.

 

அப்போது மஅகில் பின் சினான் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள், "(நீங்கள் தீர்ப்பளித்த) இதையே பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் பிர்வஉ பின்த் வாஷிக் (ரலி) அவர்களுக்குத் தீர்ப்பளித்ததை நான் செவியுற்றுள்ளேன்" என்று (சாட்சி) கூறினார். நூல்:- அபூதாவூத்-1807, திர்மிதீ-1064, நஸாயீ-3302, இப்னுமாஜா-1881, தாரிமீ-2147

 

ஒருவர் ஒரு பெண்ணை மணம்முடிக்கும்போது மஹ்ர் இவ்வளவு எனக் குறிப்பிடவில்லை. இதற்கிடையில் அவளுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். இந்நிலையில் அப்பெண்ணின் குடும்பப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்படும் மஹ்ர் போன்றது, கணவனின் சொத்திலிருந்து அவளுக்கு வழங்கப்பட வேண்டும்; வாரிசுரிமைச் சட்டப்படி கணவனின் சொத்திலிருந்து மனைவிக்கு உரிய பங்கும் அளிக்கப்பட வேண்டும்; அவர் இத்தாவும் மேற்கொள்ள வேண்டும். தாம்பத்திய உறவு நடக்காவிட்டாலும் மண ஒப்பந்தம் நடந்ததை அடுத்து, அவர்களுடைய கணவன் - மனைவி உறவு ஏற்பட்டுவிடும் என்பதே இதன் அடிப்படை ஆகும். (கணவன் இறந்த துக்கத்தை இத்தா மூலம் அவள் கடைப்பிடிப்பாள்.) இதுவே பெரும்பான்மை அறிஞர்களின் கூற்றாகும். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

மணவிலக்கு சொல்லும்போது

 

நீங்கள் (உங்கள்) மனைவியரை தீண்டாமலும் அவருக்குரிய மணக்கொடையை நிர்ணயிக்காமலும் இருக்கின்ற நிலையில் அவர்களை மணவிலக்குச் செய்வதால் உங்கள் மீது எந்த குற்றமும் இல்லை. (ஆனால்,) வசதியுள்ளவர் தமது தகுதிக்கேற்றவாறும் ஏழை தமது தகுதிக்கேற்றவாறும் வாழ்க்கைக்கு பயனுள்ள ஏதேனும் (உதவிப்) பொருளை நல்ல முறையில் அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். (இது) நல்லோர்மீதுள்ள கடமையாகும். திருக்குர்ஆன்:- 2:236

 

அவர்களுக்குரிய மணக்கொடையை நீங்கள் நிர்ணயித்திருந்து, அவர்களுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பே அவர்களுக்கு நீங்கள் மணவிலக்கு அளித்து விட்டால், நீங்கள் நிர்ணயித்ததில் பாதி(யைக் கொடுப்பது உங்கள் மீது கடமையாகு)ம். ஆனால், அவர்கள் (மனைவியர் அந்தப் பாதியையும்) விட்டுக்கொடுத்தாலே தவிர. அல்லது மண ஒப்பந்தம் எவரது கையில் இருக்கிறதோ அ(ந்த கண)வர் (மணக்கொடையை முழுவதையும் வழங்கி) தாராளமாக நடந்து கொண்டாலே தவிர. எனினும் நீங்கள் (ஆண்கள்) விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். உங்களுக்கிடையே தாராளமாக நடந்து கொள்வதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை பார்ப்பவன் ஆவான். திருக்குர்ஆன்:- 2:237

 

சஹ்ல் பின் சஅத் (ரலி), அபூஉசைத் (ரலி) ஆகியோர் கூறியதாவது. நபிகள் பெருமானார்  (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தமது கரத்தை நபியவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லைபோலும். ஆகவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை (மஹ்ராக) அளித்திடுமாறும் அபூஉசைத் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். நூல்:- புகாரீ-5256

 

ஹசன் (ரலி) அவர்கள் மஹ்ர் தொகை நிர்ணயிக்கப்படாமல் ஒரு பெண்ணை திருமணம் முடித்தார்கள். அதன் பிறகு அவளுடன் உறவு கொள்வதற்கு முன்பே ஏதோ சில காரணங்களுக்காக தலாக் சொல்லிவிட்டார்கள். அப்போது அவளுக்கு பத்தாயிரம் ஆயிரம் வெள்ளிக்காசுகளை மஹ்ராக கொடுத்தார்கள்.

 

1. ஓரிரு முறை தாம்பத்திய உறவுகொண்ட பின் தலாக் நிகழ்ந்துவிட்டால் நிர்ணயிக்கப்பட்ட மஹ்ர் தொகை கொடுத்தே ஆக வேண்டும். அது எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் சரியே!

 

2. தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பு தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக தலாக் நிகழ்ந்துவிட்டால், மஹ்ர் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்ட தொகையிலிருந்து பாதித்தொகையை அவளுக்கு மஹ்ராக கொடுத்தாக வேண்டும்.

 

ஆனால், அந்தப் பெண் மஹ்ர் தொகை எதுவும் வேண்டாம் என்று விட்டுக்கொடுத்துவிட்டால், அவளுக்கு எதுவும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அல்லது அந்தக் கணவன், நான் திருமணத்தின்போது நிர்ணயித்தப்படியே முழு தொகையையும் அவளுக்கு மஹ்ராக கொடுத்துவிடுகிறேன்" என்று கூறி கொடுத்தால், அது அனைத்தையும் அவள் பெற்றுக்கொள்ளலாம்.

 

3. ஒருவர், திருமண சபையிலேயே மணப்பெண்ணுக்குரிய மஹ்ரை கொடுத்துவிட்டார். ஆனால், தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பு தலாக் நிகழ்ந்துவிட்டது. எனவே, நான் கொடுத்த தொகையிலிருந்து பாதியை கொடுத்துவிடு! என்று கணவன் கேட்காமல் இருப்பது சிறந்தது. இதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது.

 

4. திருமண சபையில் மஹ்ர் தொகை நிர்ணயிக்கப்படவில்லை. தாம்பத்திய உறவுக்கு பின்னர் தலாக் நிகழ்ந்துவிட்டால், அந்தப் பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அதாவது, (அவளின் சகோதரிகளுக்கு) எவ்வளவு மஹ்ர் நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்தத் தொகையை மஹ்ராக கொடுத்தாக வேண்டும்.

 

(இன்றைக்கு வரதட்சிணையில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. அதாவது, இந்த பெண்ணுடைய அக்காவுக்கு எவ்வளவு வரதட்சணை கொடுத்தீர்களோ, அந்தத் தொகையை இவளுக்கும் தாருங்கள் என்று மாப்பிள்ளை வீட்டார் வெட்கமின்றி வரதட்சிணை கேட்கின்றனர். அல்லது "என்னுடைய மூத்த மருமகளுக்கு இவ்வளவு கொடுத்தார்கள். அதேபோன்று நீங்களும் இவளுக்கு கொடுங்களேன்" என்று மாப்பிள்ளை வீட்டார் வரதட்சிணை கேட்கின்றனர்.)

 

ஒரு மணப்பெண், "என் சகோதரிகளுக்கு கொடுக்கப்பட்ட மஹ்ர் தொகை போன்றதை எனக்கு தாருங்கள். அல்லது எங்கள் அம்மாவுக்கு எங்கள் அத்தா கொடுத்த மஹ்ர் தொகை போன்றதை எனக்கு தாருங்கள்" என்று கேட்கும் உரிமை மணப்பெண்ணுக்கு உண்டு என்கிறது இஸ்லாம்.

 

5. திருமண சபையில் மஹ்ர் நிர்ணயிக்கப்படவில்லை. தாம்பத்திய உறவும் நிகழவில்லை. அதற்கு முன்பே தலாக் நிகழ்ந்துவிட்டால், மஹ்ர் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், அந்தப் பெண்ணுக்கு பயனளிக்கக்கூடிய ஏதேனும் ஒரு பொருளை கொடுத்தாக வேண்டும். அதில் குறைந்தபட்சம் தொழுகைக்குரிய ஆடைகளில் மூன்று செட் ஆடையை அல்லது அந்த அளவுக்கேனும் ஒரு தொகை அவளுக்கு கொடுத்தாக வேண்டும்.

 

(பெண்ணிடம் குறை இருந்து, இது போன்ற தலாக் நிகழ்ந்தாலும் கூட, ஆண் தான் அவளுக்கு மஹ்ர் தொகை கொடுக்கவேண்டும். அந்த ஆண்மீது தான் தவறு இருக்குமோ, இவள் மீது எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லையே என்றெண்ணி, மற்றொருவர் அவளை மணந்துகொள்ள வேண்டும். அவள் வாழ்க்கைத் துணையின்றி இருந்துவிடக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வின் ஏற்பாடு இது.)

 

6. ஒரு ஆண்மகன் தமது திருமணத்தின்போது குறிப்பிட்ட மணக்கொடையை நிர்ணயித்த பிறகு அதை தம் மனைவிக்கு கொடுக்காமலேயே அவன் இறந்துவிட்டால், அவன் விட்டுச்சென்ற சொத்திலிருந்து முதலில் அவனின் மனைவிக்கு திருமணத்தின்போது நிர்ணயித்த மஹ்ர் தொகை கொடுக்கப்பட வேண்டும். அதன் பிறகு தான் அந்த சொத்தில் இருந்து அவனின் வாரிசுகள் பிரித்துக்கொள்ள வேண்டும்.

 

7. கணவன் இருக்க, ஒரு பெண் இறந்துவிட்டாள். திருமணத்தின் போது அவளுக்கு நிர்ணயிக்கப்பட்ட மஹ்ர்தொகை வராமல் இருந்தால் அதை அவளின் கணவனிடம் இருந்து வாங்கிக்கொண்டு வந்து, அவள் சொத்தில் இணைக்க வேண்டும். அதன் பிறகு தான் அவள் சொத்தை பாகப்பிரிவினை செய்ய வேண்டும். அவளுக்கு வரவேண்டிய மஹ்ர் தொகை என்பது, அவளுக்கு வரவேண்டிய கடன் தொகையைப் போன்றதாகும்.

 

சுருங்கக்கூறின்: மஹ்ர் தொகை அவரவர் சக்திக்கேற்றவாறு எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கொடுக்கலாம். முடிந்தவரை மஹ்ர் தொகை அதிகமாக கொடுப்பதே சிறப்பு.

 

வலீமா விருந்து

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது அளித்த மணவிருந்தைவிட  சிறப்பாகத் தம் துணைவியரில் வேறொருவரை மணந்தபோதும் மணவிருந்தளிக்கவில்லை. அதில் வயிறு நிரம்ப மக்களுக்கு ரொட்டியையும் இறைச்சியையும் உண்ணக்கொடுத்தார்கள். (உண்ண முடியாமல்) மக்கள் அதை விட்டுச்சென்றனர். நூல்:- முஸ்லிம்-2800

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை மணந்தபோது கோதுமை மாவு, பேரீச்சம்பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை(க் கலந்து தயாரித்த 'ஹைஸ்' எனும் பலகாரத்தை)யே மணவிருந்தாக (வலீமா) ஆக்கினார்கள்.  நூல்:- புகாரீ-2235, முஸ்லிம்-2796, திர்மிதீ- 1015

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( طَعَامُ أَوَّلِ يَوْمٍ حَقٌّ وَطَعَامُ يَوْمِ الثَّانِي سُنَّةٌ وَطَعَامُ يَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ وَمَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ) முதலாவது நாளில் அளிக்கும் மணவிருந்து (வலீமா) கடமை (போன்றது) ஆகும். இரண்டாவது நாளில் அளிக்கும் மணவிருந்து நபிவழி (சுன்னத்) ஆகும். மூன்றாவது நாளில் அளிக்கும் மணவிருந்து பகட்டு ஆகும். யார் பகட்டுக்காக விருந்தளிக்கிறாரோ அவரை அல்லாஹ் (மறுமைநாளில்) அம்பலப்படுத்திவிடுவான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1016

 

"வலீமா" எனும் சொல்லிற்கு "ஒன்று கூடுதல்" என்பது பொருளாகும். மணமக்கள் ஒன்று கூடுவதால் இதற்கு இப்பெயர் வந்திருக்கலாம். திருமணத்திற்காக மணமகன் சார்பாக வழங்கப்படும் மணவிருந்தே மார்க்கத்தில் வலீமா எனப்படுகிறது. வலீமா விருந்து கொடுப்பதும் அந்த விருந்து அழைப்பை ஏற்பதும் நபிவழி ஆகும். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

மணமுடித்த மணாளர் முதல்நாள் விருந்தளிப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழியாகும். அதைக் கைவிடுவது குற்றமாக இல்லாவிட்டாலும் ஒரு குறையாகவே கருதப்படும். இரண்டாம் நாள் விருந்தளிப்பது விரும்பத்தக்கதாகும் (தடை செய்யப்பட்டதன்று). ஏனெனில், இது முதல்நாளில் குறை ஏதேனும் ஏற்பட்டிருப்பின் அதை நிவர்த்தி செய்ய உதவும். மூன்றாவது நாள் அளிக்கும் விருந்து விளம்பரத்திற்காகச் செய்யப்படும் ஆடம்பரமாகும். அவரது விளம்பரத்தை மறுமைநாளில் அல்லாஹ் அம்பலப்படுத்துவான். எனவே இது தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

 

ஆகவேதான், முதல் நாள் விருந்துக்கு செல்வது அவசியமாகும். இரண்டாவது நாள் செல்வது நல்லது. ஆனால், செல்லாமலும் இருக்கலாம். மூன்றாவது நாள் விருந்துக்குச் செல்லக்கூடாது கட்டாயம் அதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.   நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ

 

திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹ்ர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது மணவிருந்து ஒன்றில் மிகச் சிறப்பான உணவுகளை பரிமாறியுள்ளார்கள். தம்முடைய மற்றொரு மணவிருந்தில் கொஞ்சம் சுமாரான உணவைப் பரிமாறியுள்ளார்கள். எனவே, அவரவர் வசதிக்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் வலீமா விருந்தை நடத்திக்கொள்ளலாம். ஆனால், அதில் வீண் விரயமும், பகட்டும்  இருக்கக்கூடாது. மணமகன் கட்டாயம் விருந்தளிக்க வேண்டுமென்பதோ, கடன் வாங்கியேனும் விருந்தளிக்க வேண்டுமென்பதோ இல்லை.

 

வரதட்சிணை

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ ) யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை செல்லாதது ஆகும். அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! நூல்:- புகாரீ-2155, முஸ்னது அஹ்மத்

 

அப்துல்லாஹ் பின் அர்கம் (ரலி) அவர்கள் உம்மு அஸ்லம் அதவிய்யா (ரலி) அவர்களிடம், "பயணம் செய்ய உகந்த ஒட்டகம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள். நான் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார். உம்மு அஸ்லம் (ரலி) அவர்கள், "(ஆம்! அரசு கஜானாவில் உள்ள) ஸதக்கா ஒட்டகங்களில் அது போன்றது இருக்கின்றன" என்றார். அப்துல்லாஹ் பின் அர்கம் (ரலி) அவர்கள், "(அப்படியா?) நன்கு கொழுத்த ஒருவர் கடுமையான வெயில் காலத்தில் தம் மறைவிடத்தில் வழியும் வேர்வையை வழித்து கழுவி உங்களுக்குப் பருகக் கொடுத்தால் நன்றாக இருக்குமோ?" என்று கேட்டார்.

 

உம்மு அஸ்லம் (ரலி) அவர்கள், "இதென்ன பேச்சு?" என்றார். அப்துல்லாஹ் பின் அர்கம் (ரலி) அவர்கள், "அப்புறமென்ன? மக்கள் தங்கள் செல்வத்தை கழுகி தூய்மைப்படுத்திய அசுத்தம் தானே ஸக்காத் பொருள்கள்! (நான் அதைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றா சொல்கிறீர்?)” என்றார். நூல்:- முவத்தா மாலிக்

 

ஒரு எஜமானன் தமது அடிமையிடம் "எனக்கு நீ இவ்வளவு பொருள் வந்துவிட்டால், நீ விடுதலை செய்யப்பட்டவன்" என்று எழுதி கொடுத்துவிட்டால் அந்த அடிமைக்கு “(முகாத்தப் எனும்) விடுதலை பத்திரம் எழுதித் தரப்பட்டவன்” என்று பெயர்.

 

சல்மான் பார்ஸி (ரலி) அவர்களின் அடிமை ஒருவர்,” எஜமானே! விடுதலை பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமையாக என்னைக் கருதுங்களேன்" என்று கேட்டுக்கொண்டார். அதற்கு சல்மான் (ரலி) அவர்கள், "கொடுப்பதற்கு உன்னிடம் ஏதேனும் பொருள் இருக்கின்றதா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த அடிமை, “(என்னிடம் தற்போது அப்படி ஏதும் இல்லை. ஆனால்) மக்களிடம் யாசித்து, அதைக் கொண்டு வந்து உங்களிடம் கொடுப்பேன்" என்றார். சல்மான் (ரலி) அவர்கள், "மக்கள் கழுவிக் கொடுத்ததை என்னை பருகச் சொல்லுகின்றாயா?" என்று கேட்டார்கள். நூல்:- தபக்காத் இப்னு சஅத்

 

பேரறிஞர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். மணமுடிக்க தீர்மானித்த ஒருவன், “பெண்ணுக்கு என்ன கொடுக்கிறீர்கள்?” என்று கேட்டால் அவன் மகா திருடன் ஆவான்.

 

மணமகள் வீட்டாரிடம் மணமகன் வீட்டார் பேரம் பேசி வாங்கும் வரதட்சிணை (Dowry) மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகும். அதுமட்டுமின்றி, மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு குற்றமும் ஆகும். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். பெண் வீட்டார் இவ்வளவு தர வேண்டும் என நிபந்தனையிடுவது அந்த ஒப்பந்தத்திற்கு ஒவ்வாத ஒன்றாகும். குர்ஆனில் இல்லாத ஒரு நிபந்தனை ஆகும். ஆகவே, இன்று மக்கள் வழக்கத்தில் உள்ள வரதட்சிணை என்பது மார்க்கத்திற்குச் சம்பந்தமில்லாத புதிய கலாச்சாரமாகும் என்பதை உணர்ந்து, மக்கள் அதை ஒழிக்க முன்வர வேண்டும்.

 

பெண் வீட்டாரிடம்  விருந்து கேட்டுப் பெறுவதும் மறைமுகமான வரதட்சிணையாகும். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் பெண் வீட்டார் விருந்து கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை.

 

எத்தனையோ ஏழைப் பெற்றோர் தமது மகளின்  திருமணத்தின்போது கேட்கப்படும் வரதட்சணையை சமாளிக்க பல பள்ளிவாசல்களிலும், பொது இடங்களிலும் பிச்சையெடுத்து அதைக் கொண்டுவந்து தமது மகளுக்குரிய வரதட்சணையாகக் கொடுக்கிறார்கள். அதைப் பெற்றுக்கொள்ளும் மாப்பிள்ளை வீட்டார், இந்த பொருள் எப்படி சம்பாதித்தவை? என்று யோசிக்கின்றார்களா? இது மக்களின் அழுக்காயிற்றே என்று அவர்கள் யோசிக்கவேண்டாமா?

 

இந்தியாவில் வரதட்சனை கொடுமையால் 2017 முதல் 2021 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மட்டும் 35,493 மரணங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் 11,874 வரதட்சணை மரணங்களும், பீகாரில் 5,354 மரணங்களும், மத்திய பிரதேசத்தில் 2,859 மரணங்களும், மேற்கு வங்காளத்தில் 2,389 மரணங்களும், ராஜஸ்தானில் 2,244 மரணங்களும், கர்நாடகாவில் 934 மரணங்களும், தமிழ்நாட்டில் 198 மரணங்களும், கேரளாவில் 52  மரணங்களும் நிகழ்ந்துள்ளன. மேலும், இந்தியாவில் சராசரியாக நாள் தோறும் 20 வரதட்சணை மரணங்கள் பதிவாகி வருகின்றன என அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அரசு கணக்கெடுப்பில் இவ்வளவு என்றால், கணக்கெடுப்பில் வராதது எவ்வளவு இருக்கும்?

 

அல்லாஹுத்தஆலா, நம் வீட்டுத் திருமணங்களில் மஹ்ர் வழங்கும் பழக்கத்தை நிலைப்படுத்தி, வரதட்சிணையை இல்லாமல் ஆக்குவானாக! ஆமீன்!

 

மௌலவி மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...