நபிவழி மருத்துவம்
فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ إِنَّ فِي ذَلِكَ
لَآيَةً لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
அதில் (தேனில்) மனிதர்களுக்கு (நோய்) நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற கூட்டத்திற்கு
நிச்சயமாக அதில் அத்தாட்சி இருக்கின்றது. திருக்குர்ஆன்:- 16:69
மனிதன் இம்மண்ணில் வாழ்வதோ சில காலம் தான். அதற்குள்ளாக எத்தனை வகையான நோய்கள்
எத்தனை வகையான மருந்துகள் சொல்லி முடிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. மருத்துவம் அறிவியல்
துறையில் முதலிடம் வகிக்கிறது. இந்த மருத்துவத்தைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
தெரிவித்துள்ள கருத்துக்கள், நபியவர்கள் ஒரு மருத்துவ
நிபுணர் என்பதை புலப்படுத்துகின்றன. வணக்க வழிபாடுகளுக்கு எந்த நபியவர்கள் வழிகாட்டினார்களோ
அதே நபியவர்கள் தாம் தலைவலி, காய்ச்சல்,
பக்கவாதம், தொழுநோய், இரத்த அழுத்தம் போன்ற
பல்வேறு நோய்களுக்கான மருந்துகளையும் சொல்லிக் கொடுத்தார்கள்.
சூனியம், சோதிடம், கண்ணேறு போன்ற மன வசியங்கள் குறித்தும் நபியவர்கள்
பேசியுள்ளார்கள். இதிலிருந்து ஆன்மீகம், அறிவியல் என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு நபியவர்களின் வாழ்க்கையில்
அனைத்துக்கும் வழிகாட்டல் உண்டு என்பதை அறிய முடிகிறது.
இன்று பல வகையான மருத்துவ முறைகள் இருந்தாலும் மாநபி பெருமானார் (ஸல்) அவர்கள்
அறிமுகப்படுத்திய "திப்பந் நபவீ" என்ற மருத்துவ முறைக்கு ஈடாகாது. ஆனால்,
இந்த மருத்துவ முறையை செயல்படுத்தும் பாக்கியத்தை
இன்று இந்த உலகம் பரவலாக பெறவில்லை. நபியவர்கள் செய்த சில மருத்துவ குறிப்புகளை கீழே
காண்போம்.
தேனில் மருத்துவம்
ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து,
"என் சகோதரருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருக்கிறது"
என்று கூறினார். நபியவர்கள், ( اسْقِهِ عَسَلاً )
"அவருக்கு தேன் புகட்டுவீராக!" என்று கூறினார்கள். அவ்வாறே
தேன் புகட்டினார். ஆனால், அது அவருக்கு வயிற்றுப்போக்கை அதிகமாக்கியது. இவ்வாறு
நான்கு முறை அவர் நபியவர்களிடம் வந்து கூறினார். நான்காவது முறை நபியவர்கள்,
( صَدَقَ اللَّهُ، وَكَذَبَ بَطْنُ أَخِيكَ، اسْقِهِ عَسَلاً
) "அல்லாஹ் உண்மையை சொல்லியுள்ளான். உன்னுடைய சகோதரரின் வயிறு தான்
பொய் சொல்லுகிறது. அவருக்கு தேன் புகட்டுவீராக!"
என்று கூறினார்கள். அதன் பின்பு அவர் தன் சகோதரருக்கு தேனைக் கொடுத்தார். அவரின் வயிற்றுப்போக்கு
குணமடைந்தது. அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5684,
முஸ்லிம்-4454, திர்மிதீ-2008
ஒரு நோய் குணமடைவதற்கு அதற்குரிய மருந்து ஓரளவு
உடலினுள் போய் சேர வேண்டும். அந்த நபித்தோழர் மூன்று முறை சாப்பிட்டும் அவருடைய வயிற்றுப்போக்கு
குணமாவதற்குரிய அளவு தேன் அவரின் உடலினுள் போய் சேரவில்லை. நான்காவது முறை தேன் கொடுக்கப்பட்டதும்
அவருடைய நோய் சுகமாவதற்குரிய அளவு சேர்ந்துவிட்டதால் அவர் குணமடைந்தார் என்று அறிஞர்
இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அஜீரணக் கோளாறினாலேயே ஏற்படுகிறது. இதற்கு தேன் ஒரு
சிறந்த நிவாரணையாகும். இரைப்பையின் மெல்லிய தோலில் ஒட்டிக்கொள்ளும் தாதுக்கள் ஒன்று
சேர்ந்துவிட்டால் இவை இரைப்பையையும் அதில் உள்ள உணவையும் கெடுத்துவிடும். இப்போது அந்த
தாதுக்களை அகற்றி தூய்மைப்படுத்தும் தன்மைகொண்ட மருந்து தேவை. தேனில் இத்தன்மை உண்டு.
தேனில் உள்ள கால்சியம் ஒட்டுத்தாதுகளை அகற்றி இரைப்பையை தூய்மையாக்கும் சக்தி உள்ளதாகும்.
1445 ஆண்டுகளுக்கு முன்பு தேனைப் பற்றி கூறப்பட்ட
திருக்குர்ஆனின் கூற்றை இன்று மருத்துவ உலகம் ஆமோதிக்கிறது. முன்னாள் வல்லரசான ரஷ்யாவின்
"மிர்" விண்வெளி நிலையத்தில் அலெக்சாண்டர்வோல்கோப், செர்கிரினெல் யோவ் ஆகிய வீரர்கள் தங்கியிருந்தனர்.
இவர்களுக்கு தேவையான உணவுப் பொருள்களில் தேனும் முக்கிய உணவாக இடம் பெற்றிருந்தது.
இதன் இயக்குனர் பாலியோகோவ் கூறுகையில் விண்வெளி வீரர்களுக்கு பற்றாக்குறையின் காரணமாக
தரமான தேன் அனுப்பப்படவில்லை. அதனால், விண்வெளி வீரர்கள்
பெரிதும் பாதிக்கப்பட்டார்கள் என்ற இச்செய்தியை ரஷ்யாவின் ஆதாரப்பூர்வமான செய்தி ஏஜென்சியான
ரீடா கூறியுள்ளது.
100 கிராம் தேன் 600 கிராம் பாலின் சக்திக்கு சமமானது. மேலும், 750 கிராம் இறைச்சியின் சக்திக்கு நிகரானது. தேனும் இஞ்சிச்
சாறும் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறைப் போக்கும். இது போன்ற பல நோய்களுக்குத்
தேன் சிறந்த நிவாரணமாகும். சிறப்பு வாய்ந்த தேனை இன்னும் ஆராய்ந்தால் நாம் அறியாத பல
மருத்துவங்களைக் கண்டறியலாம். தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
கெட்டுப் போவதில்லை. தேன் பல்லாண்டு காலமாக மாற்றம் எதுவும் இன்றி எப்படி இருக்கிறது
என்பதைப் பற்றி விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியவில்லை. கொதிக்க வைக்கும் முறை பின்பற்றாமலேயே
தேனை தேனீக்கள் பாதுகாக்கின்றன. மனிதன் கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே தேனீக்கள் ஒரு இரசாயனக் கிருமி நாசினியை கண்டுபிடித்துள்ளன. இது இறைவனின் அற்புதங்களில்
ஒன்றாகும். இக்கருத்தை தான் தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.
வழிந்தோடும் இரத்தத்தை நிறுத்த
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்கு உஹுதுப் போரின்போது முகத்தில் காயம் ஏற்பட்டது.
அப்போது அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபியவர்களுடைய முகத்திலிருந்து வழிந்த இரத்தத்தைக்
கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் தனது கேடயத்தில் இருந்து தண்ணீர் (அக்காயத்தை
கழுவுவதற்காக) ஊற்றிக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் மென்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதைக்
கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஒரு பாய்த்துண்டை
எடுத்து வந்து அது சாம்பலாகும் வரை கரித்து, அதை காயத்தில் வைத்து
அழுத்தினார்கள். இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது. அறிவிப்பாளர்:- அபூஸாஹிம் சலமா (ரலி)
அவர்கள் நூல்:- புகாரீ-243, முஸ்லிம்-3664
அக்காலத்தில் காயத்திலிருந்து வலியும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த, காயத்தில் சாம்பலை வைப்பார்கள். பொதுவாக எந்தச் சாம்பலாயினும்
உடனடியாக அது இரத்தம் வெளியேற்றத்தை நிறுத்திவிடும். பாயை எரித்து அதன் சாம்பலை வைப்பது
அக்கால வழக்கமாக இருந்துள்ளது.
ஒருமுறை போர்க்களத்தில் ஒரு நபித்தோழர் காயமடைந்தார். அவருடைய காயத்திலிருந்து
வெளியான இரத்தத்தை நிறுத்துவதற்காக முயற்சித்தனர். ஆனால், இரத்தம் ஓடிக்கொண்டே இருந்தது. அப்போது அங்கு வந்த ஹஸ்ஸான் பின்
ஸாபித் (ரலி) அவர்கள் கற்பூரத்தைக் கொண்டுவரச் சொல்லி அதைக் காயத்தின் மீது வைத்தார்.
இரத்தம் நின்றுவிட்டது. இதையறிந்த அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை அழைத்து, "நீர் இந்த (வைத்திய) முறையை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்?"
என்று கேட்டார்கள். அதற்கு அவர், "ஒரு கவிதையிலிருந்து அதை நான் கற்றுக்கொண்டேன்"
என்று கூறி, பின்வருமாறு கவிதையை
பாடிக்காட்டினார்.
فَکَّرتُ لَیلَةً وَصلَهَا فِی هِجرِهَا فَجَرَت مُدَامِعُ مُقلَتِی کَالعَندَمِ
فَطَفِقتُ اَمسَحُ مُقلَتِی بِخَدِّهَا اِذ عَادَةُ الکَافُورِ اِمسَاكُ الدَّمِ
அவள் (என்னை) வெறுத்தபோது அவளிடம் (நான்) சேர்ந்திருந்ததைச்
சிந்தித்தேன் / அப்போது என்னுடைய விழியின்
கண்ணீர் அருவி போன்று ஓடியது / என் விழியை அவளுடைய கன்னத்தில் (வைத்துத்) தேய்க்க ஆரம்பித்தேன்
/ ஏனெனில், கற்பூரத்தின் வழக்கம்
இரத்தத்தைத் தடுத்து நிறுத்துவதாகும். இதனை செவியுற்ற அண்ணலார், ( إِنَّ مِنْ الشِّعْرِ حِكْمَةً ) "நிச்சயமாக கவிதையில்
ஞானம் உண்டு" என்று கூறினார்கள். நூல்:- அஜாயிபுல் கஸஸ்
கண் நோய் நீங்க
தங்களின் எந்த மனைவிக்கேனும் கண்ணோய் இருந்தால் அந்நோய் நீங்கும் வரை அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் அம்மனைவியரோடு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். அறிவிப்பாளர்:-
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நூல்:- ஜாமீஉ கபீர்
கண் நோய் என்பது உடலில் உஷ்ணம் அதிகரித்தால் வரும் ஒருவகை நோயாகும். எனவேதான்,
கண்ணில் எரிச்சல் உண்டாகிறது. அப்போது குளிர்ந்த
நீரை பயன்படுத்தினால் நோய் குணமாகும். இந்த நோயால் பிடிக்கப்பட்டால் எவ்விதமாக நடந்து
கொள்ள வேண்டும் என்பதையும் போதிக்கிறார்கள்.
உண்ணுவதின் பருகுவதின் முறைகள்
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மீனும் பாலும் அல்லது மீனும் தயிரும் சேர்த்து சாப்பிடமாட்டார்கள்.
இரு உஷ்ணமான அல்லது இரு குளிர்ச்சியான உணவுகளைச் சேர்த்து சாப்பிட மாட்டார்கள். பாலுடன்
முட்டையோ அல்லது பாலுடன் இறைச்சியோ, மிகச் சூடான உணவையோ, திரும்பவும் சூடாக்கப்பட்ட
உணவையோ, உப்பு மிகுந்திருக்கும் உணவையோ
சாப்பிடமாட்டார்கள். உஷ்ணம் பொருந்திய உணவை குளிர்ச்சியான உணவுடன் கலந்து சாப்பிடுவார்கள்.
நபியவர்கள் பேரீச்சம் பழத்துடன் வெள்ளரிக்காயை சேர்த்து உண்பார்கள். இரவு உணவு உண்டவுடன் உறங்க மாட்டார்கள். "வயிறு
நிரம்பிய நிலையில் உறங்குவது இதயத்தை கடினமாக்கிவிடும்" என்று அறிவுறுத்தினார்கள்.
இதனால் தான் இரவு உணவுக்குப் பின் சிறிது நேரம் நடக்க வேண்டும். அல்லது உபரியான வணக்கங்களில்
ஈடுபடுவது நல்லது என்று சொல்லப்படுகிறது.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பொறித்த இறைச்சியை சாப்பிட்ட பின்பு தண்ணீர்
அருந்த வேண்டாம். அதனால் இரைப்பை பலகீனமடைந்துவிடும். அவ்வாறே சாப்பிட்ட உணவு இரைப்பையில்
சென்று சேர்ந்து தங்குவதற்கு முன்பு (அதாவது சாப்பிட்டவுடன்) தண்ணீர் அருந்த வேண்டாம்.
அதனால் உடல்நலம் கெடும். நூல்:- தஸ்ஹீலுல் மனாஃபிஉ
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَعَشَّوْا وَلَوْ بِكَفٍّ مِنْ حَشَفٍ ، فَإِنَّ تَرْكَ العَشَاءِ
مَهْرَمَةٌ ) ஒரு பிடி பேரிச்சம்பழத்தையேனும் இரவு உணவாக உட்கொள்ளுங்கள்.
ஏனெனில், இரவு உணவைத் தவிர்ப்பதானது, முதுமையை ஏற்படுத்த வாய்ப்பு
உண்டு. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1779,இப்னுமாஜா
( وَيُكَرَهُ شُرْبُ
الْمَاءِ عَقِيبُ الرِّيَاضَةِ ، وَالتَّعَبِ ، وَعَقِيبُ الْجِمَاعِ ، وَعَقِيبُ
الطَّعَامِ ، وَعَقِيبُ أَكْلِ الْفَاكِهَةِ ،
وَعَقِبَ الْحَمَّامِ ، وَعِنْدَ الِانْتِبَاهِ مِنْ النَّوْمِ ، فَهَذَا
كُلُّهُ مُنَافٍ لِحِفْظِ الصِّحَّةِ )
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடற்பயிற்சிக்குப் பிறகும், கலைத்திருக்கும் போதும், உடலுறவுக்குப் பிறகும், உணவுக்குப் பிறகும், பழங்களைச் சாப்பிட்ட பிறகும், வெந்நீரில் குளித்த பிறகும்,
தூக்கத்திலிருந்து எழுந்தவுடனும், தண்ணீர் பருகுவதை வெறுத்தார்கள். மேலும், இவை அனைத்தும் ஆரோக்கியமற்றவை
ஆகும். நூல்:- ஸாதுல் மஆத் - இமாம் இப்னு கய்யிம்
பழங்களின் பயன்கள்
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி கூறியதாவது. ( رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
يَأْكُلُ الْعِنَبَ خَرْطًا ) இறைத்தூதர் பெருமானார் (ஸல்) அவர்கள் திராட்சைப்
பழங்களை முழுவதுமாக உண்ணுவதைக் கண்டேன். நூல்:- தப்ரானீ, ஜாமிஉஸ் ஸஙீர் இமாம் சுயூத்தீ
திராட்சை பழத்தில் உள்ள பல வகையான மருத்துவத் தன்மைகளை இன்றைய ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர். திராட்சைப் பழத்தின் மருத்துவ ரீதியான நன்மைகள்:
1) வைரஸ் கிருமிகளை செயல்படாமல் தடுக்கிறது. 2) பல் சொத்தையை தடுக்கிறது. 3) புற்றுநோயை தடுக்கிறது. 4) அடிக்கடி தலைவலி ஏற்படுபவர்கள் 21 நாளைக்கு பச்சை திராட்சைச் சாறு பருகினால் குணமாகும்.
5) பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் தீரும்.
கனடா நாட்டு ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜாக் குனோவெல்சுக் மற்றும் ஜான் ஸ்பீரிஸ் திராட்சைப்
பழரசம் வைரஸ் கிருமிகளை மிக சக்தியுடன் கொல்வதாக கண்டுபிடித்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கிய
நபி ஆதம் (அலை) அவர்கள் முதன் முதலில் சாப்பிட்ட பழம் இலந்தை பலமாகும். நூல்:- அபூநயீம்
இலந்தை பலத்தில் உள்ள மருத்துவ குணங்கள்: 1) பித்த கோளாறுக்கும் அஜீரணத்திற்கும் பலனளிக்கிறது. 2)
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துகிறது. இதுபோன்ற
இன்னும் பல மருத்துவ குணங்கள் உண்டு.
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீண்ட நேரம் தாம்பத்திய சுகம்
பெற விரும்புவோர் பேரீச்சம் பழத்துடன் வெண்ணையை சேர்த்து சாப்பிடட்டும்.
தாம்பத்திய சுகத்தை நீண்ட நேரம் பெற இப்போது வயாகரா போன்ற மாத்திரைகளை சிலர்கள்
பயன்படுத்துகின்றனர். இந்த மாத்திரைகளை பயன்படுத்துபவர்களுக்குத்தான் இதய அடைப்பு போன்ற
ஆபத்தான நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
முன் சென்ற ஓர் சமுதாயத்தினர், ( أَنَّ قَوْمًا شَكَوْا إِلَى نَبِيِّهِمْ قَبْحَ أَوْلَادَهُمْ ) "அவர்களின் இறைத்தூதரிடம், "எங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவலசனமானவர்களாகவே பிறக்கின்றனர்.
இதற்கு என்ன செய்வது?" என்று ஒரு முறையீடு
வைத்தனர்.
அந்த இறைத்தூதர் இதை இறைவனிடம் தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா,
( مَرَّهُمْ أَنْ يُطْعِمُوا
نِسَاءَهُمْ الْحُبْلَى السَّفَرْجَلَ فَإِنَّهُ يُحْسِنُ الْوَلَدَ وَيَفْعَلُ
ذَلِكَ فِي الشَّهْرِ الثَّالِثِ وَالرَّابِإِذْ فِيهِ يُصَوِّرُ اللَّهُ تَعَالَى
الْوَلَدَ وَقَدْ كَانُوا يُطْعِمُونَ الْحُبْلَى السَّفَرْجَلَ ) "கர்ப்பிணிப் பெண்களுக்கு மூன்றாம் நான்காம் மாதங்களில் பேரிக்காயைச்
சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு நீர் ஏவுவீராக! மேலும், பேரிக்காய் பிறக்கும் குழந்தைக்கு அழகை கொடுக்கும்"
என்று அறிவித்தான். எனவே, அந்த கர்ப்பிணிப்
பெண்கள் பேரிக்காயை சாப்பிட்டு வர அவர்கள் அழகான குழந்தைகளை பெற்று மகிழ்ந்தனர். நூல்:-
இஹ்யா, நுஜ்ஹத்துல் மஜாலிஸ்
உணவு ஜீரணிக்க
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கரும்பு சாப்பிடுங்கள். அது வயிறு
நிறைய உண்ட உணவை ஜீரணிக்க செய்துவிடும். பசித்தவனுக்கு வயிற்றை நிரப்பி பசியை போக்கும்.
உண்ட உணவு ஜீரணிப்பதற்கு கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களை
நாம் பயன்படுத்துகிறோம். குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருப்பதாக ஆதாரப்பூர்வமான
சர்ச்சைகள் இந்தியா முழுவதும் பரபரப்புக்குள்ளானது. கேரளா போன்ற மாநிலங்கள் கோக்,
பெப்சி மற்றும் அதைச் சார்ந்த குளிர்பானங்களை தடை
செய்தன.
இக்குளிர்பானங்கள் மனித உடலின் எலும்பு கூட்டையே சிதைத்து வலுவிலக்கச் செய்கிறது.
குளிர்பானங்கள் கெட்டுப்போகாமல் இருக்க கார்பன் டை ஆக்சைடைச் சேர்க்கிறார்கள். இது
ஒருவித அமிலத்தன்மையை குளிர்பானங்களில் உருவாக்குகிறது. இந்த அமிலம் நமது இரத்தத்தில்
கலந்து உடலில் உள்ள கால்சியத்தை அழித்துவிடுகிறது. அதோடு எலும்புகளை உருவாக்கக்கூடிய
அலகலின் தாதுவையும் அழிக்கிறது. இதனால் எலும்புகள் வலுவிழந்து விடுகின்றன. இது மனிதனுக்கு
பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்கிறது நெதர்லாந்து ஆய்வு நிறுவனம்.
மருதாணி
(அண்ணல் நபி - ஸல் அவர்களின் பணிப்பெண் உம்மு ராஃபிஉ எனும்) சலமா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ( مَا كَانَ
يَكُونُ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُرْحَةٌ ، وَلَا
نَكْبَةٌ إِلَّا أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَنْ أَضَعَ عَلَيْهَا الْحِنَّاءَ ) அருமை
நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், அதன் மீது மருதாணியை வைக்குமாறு எனக்கு உத்தரவிடாமல் இருந்ததில்லை.
நூல்:- திர்மிதீ-1979
நமது கை கால்களில் உள்ள நகங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால்
அவ்வபோது மருதாணியை அதன் மீது பூசி வரும் போது அது முழுமையாக குணமடையும் என்பதாக ஒரு
மருத்துவக் குறிப்பு கூறுகிறது.
தவிர்த்துவிடு
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா! எப்போதும் நீ மண் தின்னாதே! அதனால்
ஓயாத நோய், வயிற்றுப் பெருத்தல்,
மேனி மஞ்சள் நிறமாக மாறுதல் ஆகிய நோய்கள் உண்டாகும்"
என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ سَخَّنْتُ مَاءً فِي الشَّمْسِ ) ஒருமுறை நான் வெயிலில் தண்ணீரைச் சூடாக்கிக்கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வந்த கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( لَا تَفْعَلِي يَا حُمَيْرَاءُ فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ ) "ஹுமைரா! இவ்வாறு செய்யாதே. அது வெண்குஷ்ட நோயை உண்டாக்கும்" என்று கூறினார்கள். நூல்:- அத்தல்கீஸுல் ஹபீர் ( التَّلْخِيصُ الْحَبِيرُ ) இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ, அல்மஜ்மூஉ ஷரஹுல் முஹத்தபி ( الْمَجْمُوعُ شَرحُ الْمُهَذَّبِ ) இமாம் நவவீ
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ( نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ
نَتَوَضَّأَ بِالْمَاءِ الْمُشْمَّسِ ، أَوْ نَغْتَسِلَ بِهِ وَقَالَ : إِنَّهُ
يُورِثُ اَلْبَرَصَ ) அண்ணல்
நபி (ஸல்) அவர்கள், "சூரிய ஒளியால் சூடேற்றப்பட்ட
தண்ணீரைக் கொண்டு நாங்கள் ஒழு செய்வதையும், அல்லது குளிப்பதையும்
தடுத்தார்கள். மேலும் அவர்கள், அது வெண்குஷ்ட நோயை உண்டாக்கும்" என்று கூறினார்கள். நூல்:- தாரக்குத்னீ,
அத்தல்கீஸுல் ஹபீர் ( التَّلْخِيصُ الْحَبِيرُ ) இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இதுபோன்று பல நூறு மருத்துவ குறிப்புகளை கூறியுள்ளார்கள்.
அவை “அத்திப்புந் நபவீ” எனும் பெயரில் பல தனி நூல்களாகவே தொகுக்கப்பட்டுள்ளது.
நபியவர்கள் கூறிய மருத்துவ முறைகளைப் பேணி, பலனளிப்பவைகளை உண்டு, பாதிப்பை ஏற்படுத்துபவைகளை தவிர்த்து, நாம் பல்லாண்டுகள்
ஆரோக்கியமாக வாழ, அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக!
ஆமீன்!
(இந்த கட்டுரை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment