Search This Blog

Friday, 1 November 2024

பலனற்றுப் போகுமே!

 

பலனற்றுப் போகுமே!

 

وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا

நாம் அவர்கள் (இம்மையில்) செய்த (நற்)செயல்களின் பக்கம் கவனம் செலுத்தி, அவற்றை (நற்பலன் எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம். திருக்குர்ஆன் : 25:23

 

ஒரு முஸ்லிம், மறுமைநாளில் பலன்பெறும் நோக்கில் பல நல்லறங்கள் புரிந்தாலும், அவனுடைய கவனக்குறைவால் ஏற்படும் சில செயல்பாடுகளால் அவன் செய்த நல்லறங்கள் பலனற்றதாக ஆகிவிடுகிறது என்று திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் எச்சரிக்கிறது.

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ ) மறுமைநாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5038

 

முகஸ்துதி

 

அவர்கள் மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தம் செல்வங்களைத் தானம் செய்வார்கள்; அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பமாட்டார்கள். (இவர்கள் ஷைத்தானின் நண்பர்கள்.) ஒருவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டால், நண்பர்களில் அவனே கெட்டவன் ஆவான். திருக்குர்ஆன்:- 4 38

 

எவன் இம்மைக்காக (மட்டும்) பயிரிட விரும்புகின்றானோ நாம் அவனுக்கும் அதிலிருந்து ஓரளவு கொடுக்கின்றோம். அவனுக்கு மறுமையில் எவ்வித பாக்கியமுமில்லை. திருக்குர்ஆன்:- 42:20

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமைநாளில் மக்களில் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவரை கொண்டு வரப்பட்டு விசாரணை செய்யப்படும்போது, அவர், "இறைவா! உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், ( كَذَبْتَ وَلَكِنَّكَ قَاتَلْتَ لأَنْ يُقَالَ جَرِيءٌ ‏فَقَدْ قِيلَ ) "நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த்தியாகம் செய்யவில்லை) மாவீரன் என்று (மக்களிடையே) பேசுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)" என்று கூறுவான். பிறகு இறைக்கட்டளைப்படி அவர் நரகத்தில் எறியப்படுவார்.

 

பிறகு ஒரு மார்க்க அறிஞரை கொண்டுவரப்பட்டு விசாரணை செய்யப்படும்போது அவர் (இறைவா!) நானும் கல்வியை கற்று, பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், ( كَذَبْتَ وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ عَالِمٌ ‏فَقَدْ قِيلَ ) "நீ பொய் சொல்கிறாய். எனக்காக கல்வியை கற்கவும் இல்லை; கற்பிக்கவும் இல்லை. அறிஞர் என்று (மக்களிடையே) சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே, நீ கல்வி கற்றாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது.)" என்று கூறுவான். பிறகு இறைக்கட்டளைப்படி அவர் நரகத்தில் எறியப்படுவார்.

 

பிறகு பெரும் செல்வந்தர் ஒருவரை கொண்டுவரப்பட்டு விசாரணைச் செய்யப்படும் போதும் அவர், "(இறைவா!) நீ விரும்பிய எல்லா வழிகளிலும் நான் உனக்காக எனது பொருளை செலவிட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், ( كَذَبْتَ وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ هُوَ جَوَادٌ ‏.‏ فَقَدْ قِيلَ ) "நீ பொய் சொல்கிறாய். இவர் ஒரு கொடையாளி என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது.)" என்று கூறுவான். பிறகு இறைக்கட்டளைப்படி அவர் நரகத்தில் எறியப்படுவார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-3865, திர்மிதீ-2382

 

அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான், "நாயகமே! என் தந்தை (ஹாத்திம் பின் அப்துல்லாஹ் அத்தாயீ) உறவுகளைப் பேணிவந்தார். இன்னின்ன நன்மைகளைப் புரிந்துள்ளார். (அவருக்கு மறுமையில் நற்பலன் கிட்டுமா?)" என்று கேட்டேன். அதற்கு பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( إِنَّ أَبَاكَ رامَ أَمْرًا فَبَلَغَهُ ) “உம்முடைய தந்தை ஒன்றை அதாவது புகழை விரும்பினார். அது அவருக்கு கிடைத்துவிட்டது" என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்

 

நற்செயல் புரியும் பேற்றினைப் பெற்றிருப்பவர்கள் இந்த நபிமொழியில் கூறப்பட்டிருக்கும் கருத்தை நன்கு சிந்திக்க வேண்டும். வீரம், ஞானம், தர்மம் போன்ற நற்செயல்களில் தீய எண்ணங்கள் கலந்துவிடுவதால் ஏற்படும் விளைவுகளை இது தெளிவுபடுத்துகிறது.

 

எந்த ஒரு நற்செயலாயிருந்தாலும் அது இறைவணக்கமாகட்டும், கொடுக்கல் வாங்கலாகட்டும், சமூக சேவையாகட்டும் எதுவாயிருந்தாலும் சரி, பெயர் புகழ்பெற வேண்டும் என்ற எண்ணமோ, ஒரு குழுவினரிடமிருந்து அல்லது தனி மனிதரிடமிருந்து பாராட்டைப் பெற வேண்டுமென நோக்கமோ தூண்டுதலோ இருக்குமாயின் இறைவனிடம் அச்செயலுக்கு சிறிதும் மதிப்பிருக்காது.

 

தனது புகழ் மேலோங்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு மனிதனின் செயல்களில் வெளிப்படுமாயின் அந்த மனிதனின் உடலில் ஒரு நோய்க்கிருமி புகுந்துவிட்டதாகவே எண்ண வேண்டும். கரையான்கள் தங்களோடு தொடர்புகொள்ளும் பொருள்களை மெதுவாக அழித்துவிடுவதைப் போல் முகஸ்துதி எனும் நோய்க்கிருமி அம்மனிதன் செய்த எல்லா நற்செயல்களையும் பலனற்றவையாக ஆக்கிவிடுகின்றது.


தற்காலத்தில், செய்த உதவிகளை கைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோரையும், பதாகைகள் ஒட்டி விளம்பரப்படுத்துவோரையும் என்னவென்று சொல்வது?

 

எச்சரிக்கை! மற்றவர்களுக்காக நல்லறங்கள் செய்யக்கூடாது. அது பலனற்றவையாக ஆகிவிடுகின்றது.  

 

சொல்லிக்காட்டுதல்   

 

(தர்மம் செய்ததைச்) சொல்லிக்காட்டியும் (மனதைப்) புண்படுத்தியும் உங்களுடைய தர்மங்களை பாழாக்கிவிடாதீர்கள். அவன் (புரியும் தர்மத்தின்) நிலை மண் படிந்த வழுக்கை பாறை நிலையை ஒத்திருக்கிறது. அதில் பெருமழை பெய்து அதை(க் கழுவி) வெறும் பாறையாக்கிவிட்டது. இவர்கள் செய்த தர்மத்திலிருந்து (மறுமைநாளில்) எதையும் இவர்களால் பெற முடியாது. திருக்குர்ஆன்:- 2:264

 

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلاَ يَنْظُرُ إِلَيْهِمْ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ) “அல்லாஹ் மறுமைநாளில் மூன்று பேரிடம் பேசவும்மாட்டான்; அவர்களை(க் கனிவுடன்) பார்க்கவும்மாட்டான்; அவர்களின் பாவங்களை துடைக்கவும்மாட்டான். அவர்களுக்கு வதைக்கும் வேதனை தான் உண்டு” என்று கூறினார்கள். இதையே நபியவர்கள் மூன்று முறை கூறினார்கள்.

 

நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்துவிட்டனர். அவர்கள் யார் நாயகமே!" என்று வினவினேன். நபியவர்கள், ( وَالْمَنَّانُ ) "(அவர்களின் ஒருவர்) செய்த உபகாரத்தைச் சொல்லிக்காட்டுபவர் என்று பதிலளித்தார்கள். நூல்:- முஸ்லிம்-171, திர்மிதீ-1132

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنَّانٌ ) செய்த உதவியைச் சொல்லிக்காட்டுபவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நூல்:- நசாயீ-5577, முஸ்னது அஹ்மத், தாரிமீ,

 

தர்மத்தைச் சொல்லிக் காட்டுபவன் தன்னை பெரிய மனிதனாக கருதிக்கொள்கிறான் என்றே பொருள். அவன் தற்பெருமையை வெளிக்காட்டுவதுடன் வாங்கியவர்களின் உள்ளத்தையும் புண்படுத்துகிறான். கஞ்சன் தான் ஒரு சிறு உதவியைச் செய்துவிட்டு அதை பெரிய அளவில் பிதற்றிக்கொள்வான். அல்லது நான்கு பேருக்கு தெரிய வேண்டும் என்று விரும்பக் கூடியவன் தான் அவ்வாறு பிதற்றுவான் ஆக, செய்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுகின்றவன் ஒரு கஞ்சனாக இருப்பான். அல்லது விளம்பர விரும்பியாக இருப்பான். இந்த இரு குணங்களுமே இறைவனுக்கு பிடிக்காத துற்குணங்களாகும்.


நாம் ஒருவருக்கு உபகாரம் செய்துவிட்டு, "நான் உனக்கு இன்னின்ன உபகாரங்கள் செய்திருக்கிறேன். எனவே, என்னிடம் நன்றியுடன் நடந்து கொள்! நினைவில் வை!" என்று சொல்வதோ அல்லது "என் விஷயத்தில் நீ இவ்வாறு இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளலாமா? நான் உனக்கு இவ்வளவு உபகாரங்கள் புரிந்துள்ளேன் என்பதை மறந்து விட்டாயா? நன்றி கெட்டவனே!" என்று அவர்களை ஏசி பேசி துன்புறுத்துவதோ மிகப்பெரும் பாவச்செயலாகும். இதனால் நாம் அவர்களுக்கு செய்த உபகாரங்களுக்கு மறுமைநாளில் போதிய பிரதிபலனை பெற முடியாமல் போகலாம்.

 

கடனாளி

 

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்று, ( أَنَّ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ وَالْإِيمَانَ بِاللَّهِ أَفْضَلُ الْأَعْمَالِ ) "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைக்கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, ( يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ ‏ ‏تُكَفَّرُ ‏ ‏عَنِّي خَطَايَايَ ) "நாயகமே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)" என்று பதிலளித்தார்கள்.

 

பிறகு (சிறிது நேரம் கழித்து) நபியவர்கள், ( كَيْفَ قُلْتَ ) "எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், மீண்டும் அவ்வாறே கேட்டார்.

 

மீண்டும் நபியவர்கள், ( نَعَمْ إِنْ قُتِلْت فِي سَبِيل اللَّه وَأَنْتَ صَابِر مُحْتَسِب مُقْبِل غَيْر مُدْبِر , ثُمَّ أَعَادَهُ فَقَالَ : إِلَّا الدَّيْن فَإِنَّ جِبْرِيل قَالَ لِي ذَلِكَ ) "ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்" என்றார்கள். நூல்:-  முஸ்லிம்-3830, திர்மிதீ -1634 நசாயீ-3104, முஸ்னது அஹ்மத்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ مَاتَ وَعَلَيْهِ دِينَارٌ أَوْ دِرْهَمٌ قُضِيَ مِنْ حَسَنَاتِهِ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ ) யார் தம்மீது ஒரு தங்கக்காசு அல்லது வெள்ளிக்காசு கடன் உள்ள நிலையில் (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டாரோ (மறுமைநாளில்) அவருடைய நன்மைகளிலிருந்து அது நிறைவேற்றப்படும். (ஏனென்றால், எடுத்துக் கொடுப்பதற்கு) அங்கே (மறுமையில்) தங்கக்காசோ வெள்ளிக்காசோ கிடையாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-2405, முஸ்னது அஹ்மத்-5855

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( نَفْسُ الْمُؤْمِنِ مُعَلَّقَةٌ بِدَيْنِهِ حَتَّى يُقْضَى عَنْهُ ) (கடனாளியாக இறந்துவிட்ட) இறைநம்பிக்கையாளரின் உயிர், அவரது கடன் அடைக்கப்படாத வரை அவரது கடனுடன் தொங்கிய நிலையில் விடப்படுகிறது. அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-998, இப்னுமாஜா-2404, முஸ்னது அஹ்மத்-9302, தாரிமீ-2478, இப்னு ஹிப்பான்

 

கடனை அடைக்காமல் இறந்துவிட்ட இறைநம்பிக்கையாளர் தொடர்பான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படும். தீர்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நிலையை அவர் சந்திப்பார். அவர் சார்பாக கடன் அடைக்கப்படுகிறதா என எதிர்பார்க்கப்படும். அவர் சொத்துக்களை விட்டுச்சென்றிருந்தால் அதிலிருந்தோ, அவர் சொத்துக்களை விட்டுச் செல்லாத நிலையில் அவருடைய வாரிசுகளின் சொத்துக்களிலிருந்தோ அக்கடன் அடைக்கப்பட வேண்டும்.

 

கடனாளியின் வணக்க வழிபாட்டுக்கு அல்லாஹ்விடம் அங்கீகாரமில்லை. அவருடைய கடன் நிறைவேற்றப்படும்வரை அவர் நிலை இழுபறிதான். தனக்கு எப்போது மரணம் வரும் என்பதை யாரும் அறிவதில்லை. எனவே, குண்டூசி முதல் பெரியப் பொருள்கள்வரை (EMI எனும்) தவணைமுறையில் வாங்குவதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் சிந்திக்க வேண்டுமே! 

 

கடனாளியாகி இறந்தவர், அவரின் கடன் அடைக்கப்படாதவரை அவர் புரிந்த நல்லறங்கள் மறுமைநாளில் அவருக்கு பலனற்றுப் போகலாம்.

 

கையாடல்

 

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது. கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகிவிட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப்பற்றி ( فُلاَنٌ شَهِيدٌ ) "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறினர். அப்போது அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( كَلاَّ إِنِّي رَأَيْتُهُ فِي النَّارِ فِي بُرْدَةٍ غَلَّهَا ) "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன். (எனவே, அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-182

 

பொதுச்சொத்தில் கையாடல் செய்த நிலையில் ஒருவர் இறந்துப்போனால், அவரின் நல்லறங்கள் அவருக்கு மறுமைநாளில் பலனற்றுப் போகலாம் என்கிறது மேற்காணும் நபிமொழி.

 

இந்த நபிமொழியை நாட்டின் சொத்தை கையாடல் புரியும் முஸ்லிம் அரசியல்வாதிகள் (பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர், நகர மேயர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்), அரசு அதிகாரிகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் பெயரில் வசூலிக்கப்படும் பொருளாதாரத்தை கையாடல் புரியும் பொறுப்புதாரிகள், பள்ளிவாசல், மதரசா, அநாதை இல்லங்களின் பொருளாதாரத்தை கையாடல் புரியும் பொறுப்புதாரிகள் கவனிக்க வேண்டுமே!


இறைப்பாதையில் போரிடச் சென்ற ஒரு போராளி அவர். முஸ்லிம்களின் பொதுச்சொத்தில் இருந்து ஒரு போர்வையைத் திருடிவிட்டார். அதற்காக அவர் நரக வேதனையை அனுப்பவிக்கிறார். அதாவது, பொதுச்சொத்தில் இருந்து ஒரு பொருளை ஒருவர் திருடினால் அதற்காக அவர் நரக நெருப்பை அனுபவிக்க வேண்டி வரும் என்று இதிலிருந்து தெரிகிறது.


தெருக்களில் இருக்கும் அரசாங்கப் பாதைகள் அனைவருக்குமானது. ஒருவர் அதிலிருந்து சிறுது இடத்தை அபகரித்து படியும் திண்ணையும் கட்டினால், அவர் நரக நெருப்பையே எடுக்கிறார் என்றாகிறது.


பூங்காக்கள், பொது இடங்களில் இருக்கும் பொருள்களை ஒருவர் திருடுகிறார் என்றால் அவர் நரக நெருப்பையே எடுக்கிறார் என்றாகிறது.


வேலை செய்யும் இடத்திலிருந்து காகிதம், பேனா போன்றவற்றை அனுமதியின்றி வீட்டுக்கு எடுத்து வந்தால், பொது நூலகத்திலிருந்து புத்தகத்தைத் திருடினால் அவர் நரக நெருப்பையே எடுக்கிறார் என்றாகிறது.


தனி மனித உடமையைத் திருடுவது மட்டுமே ஹராம், பொது உடமையை திருடுவது ஹராமல்ல என்று எண்ண வேண்டாம்.  


எச்சரிக்கை! அனைவருக்குமான சொத்தைத் திருடுவது அனைவரிடமிருந்தும் திருடுவது போன்றாகும்.

 

புறம்பேசுதல்

 

குறை கூறி புறம் பேசித் திரிபவர்களுக்கு கேடு தான். திருக்குர்ஆன்:- 104:1

 

ஸயீது பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( يُؤْتَى بِالْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ فَيَدْفَعُ لَهُ كِتَابَهُ ، فَلَا يَرَى فِيهِ صَلَاتَهُ وَلَا صِيَامَهُ ، وَيَرَى أَعْمَالَهُ الصَّالِحَةَ ، فَيَقُولُ يَا رَبِّ ، هَذَا كِتَابُ غَيْرِي ، كَانَتْ لِي حَسَنَاتٌ لَيْسَ فِي هَذَا الْكِتَابِ ) மறுமைநாளில் ஒரு இறையடியானிடம் அவனுடைய செயலேடு வழங்கப்படும். அப்போது அதில் அவன் தன்னுடைய எந்தத் தொழுகையும், நோன்பும், நற்செயல்களும் இடம் பெறாததைக் கண்டு, "இறைவா! இது என்னுடைய ஏடில்லையே. நான் சில நற்செயல்கள் செய்திருந்தேன். அவை இந்த ஏட்டில் இல்லை" என்பான்.

 

அதற்கு, ( فَيُقَالُ لَهُ : إنَّ رَبَّكَ لَا يَضِلُّ وَلَا يَنْسَى ، ذَهَبَ عَمَلُكَ بِاغْتِيَابِك النَّاسِ ) "உன் இறைவன் தவறவிடவோ, மறக்கவோமாட்டான். மக்களைப் பற்றி நீ புறம் பேசியதால் அவை (உன் ஏட்டிலிருந்து நீங்கி அவர்களின் ஏட்டுக்குச்) சென்றுவிட்டன." என்று கூறப்படும். நூல்:- பஹ்ருத் துமூஉ (கண்ணீர்க்கடல்) இமாம் இப்னு ஜவ்ஸீ

 

நம்முடைய முஸ்லிம் சகோதரர் வெறுப்பதை நாம் கூறுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம் ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!

 

அல்லாஹ்விடத்தில் மிகக்கேவலமான, இழிவாகக் கருத்தப்படும் புறம்பேசுதல் விஷயத்தில் மக்கள் மிகப்பொடுபோக்காக உள்ளனர். இதில் மார்க்க அறிஞர்களும் தப்பவில்லை.

 

புறம்பேசுவதையே பொழுதுபோக்காக கொண்டவர்களின்  நல்லறங்கள் அவர்களுக்கு மறுமைநாளில் பலனற்றுப் போகலாம்.

 

பழிக்குப் பழி

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ أَوْ شَىْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ، قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ، وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ ) ஒருவர், தம் சகோதரனுக்கு, அவனது மானம் தொடர்பாகவோ வேறு பொருள் தொடர்பாகவோ இழைத்த அநீதிக்கு இன்றே பொற்காசோ வெள்ளிக்காசோ இல்லாத நாள் வருவதற்கு முன்பே (மன்னிப்புப் பெற்று) விமோசனம் காணட்டும்! (ஏனெனில், மறுமைநாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவர் இழைத்த அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு (அநீதியிழைக்கப்பட்டவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு)விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டுவிடும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2449

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), ( أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ )  "திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், ( الْمُفْلِسُ فِينَا مَنْ لاَ دِرْهَمَ لَهُ وَلاَ مَتَاعَ ) "யாரிடம் வெள்ளிக்காசோ, பொருள்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்" என்று பதிலளித்தார்கள்.

 

நபியவர்கள், ( إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلاَةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ ) "என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார். அவர் மறுமைநாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-5037

 

பிறர் பொருளை அபகரித்தல், அப்பாவியான மனிதர்களை ஏசி பேசி மனதை நோகடித்தல், பிறரை அடித்துத் துன்புறுத்துதல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல் ஆகிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோர், அவர்கள் புரிந்த நல்லறங்கள் மறுமைநாளில் அவர்களுக்கு பலனற்றுப் போகலாம். இவர்களைத்தான் மேற்காணும் நபிமொழி திவாலாகிப் போனவர்கள் என்கிறது.

 

மறுமைநாளில் நன்மை பயக்கும் நல்லறங்களை பாழாக்கும் தீய காரியங்கள் புரிவதைவிட்டும் நம்மை அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத் அவர்களே.
    உதவி செய்வதை செல்போனில் வீடியோ எடுப்பது. ப்ளெக்ஸ் ஒட்டுவது என உதவி செய்வதை விளம்பரம்படுத்தப்படும் தற்காலத்தில் நிகழும் தவறுகளை தடுப்பது போன்ற தங்களது ஆக்கம் வரவேற்கத்தக்கது. جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...