Search This Blog

Saturday, 9 November 2024

அநீதிக்கு எதிராக...

 

அநீதிக்கு எதிராக...

 

فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ وَلَا تُعَذِّبْهُمْ

 

(மூசா, ஹாரூன் ஆகிய) நீங்கள் இருவரும் (ஃபிர்அவ்னிடம்) சென்று சொல்லுங்கள். நிச்சயமாக நாங்கள் உன் இறைவனின் தூதர்கள் ஆவோம்; எனவே, எங்களுடன் பனீ இஸ்ராயீல்களை அனுப்பிவை; அவர்களைக் கொடுமைப்படுத்தாதே.  திருக்குர்ஆன்:- 20:47

 

நன்மையான செயல்கள் ஏராளம் இருக்கின்றன. அதில் ஒன்று மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது. தம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் துன்பத்திலும், சிரமத்திலும் தவிக்கும்போது கண்டும் காணாமல் இருந்துவிடக் கூடாது. குறிப்பாக, சமூகத்தில் எவரேனும் அநீதிக்கு ஆளாகும்போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவும், வரம்பு மீறுபவருக்கு எதிராகக் குரல் எழுப்பவும் துணிவுடன் முன்வர வேண்டும். ஆனால், இவ்விஷயத்தில் பல மக்கள் கவனக்குறைவாக இருக்கிறார்கள்.

 

நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இயன்றளவு உதவுவது அவசியம். அத்துடன் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகியோர் அட்டூழியம் செய்யும்போது அவர்களைக் கண்டித்து களம் காணவும் தயாராக வேண்டும்.

 

நாங்களே நெருக்கமானவர்கள்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். ( مَا هَذَا الْيَوْمُ الَّذِي تَصُومُونَهُ ) "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் நபி மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் விதமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர்.

 

அப்போது நபியவர்கள், ( فَنَحْنُ أَحَقُّ وَأَوْلَى بِمُوسَى مِنْكُمْ ) "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர், நபியவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்டார்கள். நூல்:- புகாரீ3397, முஸ்லிம்-2083, இப்னு அபீஷைபா, பைஹகீ

 

ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது, முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூசா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப் பிளந்து பாதுகாத்து, அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூசா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும்படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.

 

கொடியோன் ஃபிர்அவ்ன் கொல்லப்பட்டதின் உண்மையான நோக்கம் என்னவென்றால், மக்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்குதல், அல்லாஹ்வின் தூதருக்கு முழுமையாக கட்டுப்படுதல், அல்லாஹ்வின் அரசை நிலை நாட்ட பாடுபடுதல், அநீதம் எங்கே நடந்தாலும் அதனை தட்டிக் கேட்டல் போன்றவை தான். அல்லாஹ் ஆஷுரா தினத்தில் இதைத்தான் எதிர்பார்க்கிறான். ஆனால், யூதர்கள் அல்லாஹ்வின் இந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றாமல் வெறுமனே நோன்பு மட்டும் நோற்று வந்தனர்.

 

அல்லாஹ்வின் இந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றி வந்தார்கள். எனவேதான், நபியவர்கள், "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள்.

 

மீட்பு பணி

 

எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன். இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.

 

மேலும், அவன்  பனீ இஸ்ராயீல் சமுதாயத்தவர்களைக் கொத்தடிமைகளாக்கி, கொடுமைப்படுத்திக்கொண்டிருந்தான்.  இந்த அக்கிரமக்கார அரசனிடம் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதோடு, ஒடுக்கப்பட்ட பனீ இஸ்ராயீல் சமுதாயத்துக்காக உரிமைக்குரல் கொடுத்து, அம்மக்களை அடிமைத்தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு இறைத்தூதர் மூசா (அலை) அவர்களுக்கும், ஹாரூன் (அலை) அவர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். இதையே தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.

 

இதன் மூலம் அநீதம் மற்றும் அடக்குமுறையைச் சந்திக்கும் அப்பாவி மக்களுக்கு ஆதரவாக களம் காண்பதின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

 

கர்பலா களம்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் மரணித்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முஸ்லிம் சமுதாயத்தின் ஆட்சியாளராக ஒழுக்கக்கேட்டிற்கு பெயர் பெற்ற யஸீத் பின் முஆவியா என்பவர் பொறுப்பேற்றபோது முஸ்லிம் சமுதாயத்தில் ஒழுக்கம் வீழ்ச்சியடைந்து, ஊழல் அதிகரித்தது. அநியாயம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இந்த அநியாயங்களைக் கண்ட ஹுசைன் (ரலி) அவர்கள் கொதித்தெழுந்தார்கள்.

 

களமாட கர்பலாவுக்கு வருகை தந்து, அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும், தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்கள்.

 

சேவை மையம்

 

ஜுபைத் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வணிகப் பொருள்களுடன் மக்கா வந்தார். ஆஸ் பின் வாயில் என்பவர் அவரிடமிருந்து சரக்குகளை வாங்கிக்கொண்டு அதற்கான விலையைக் கொடுக்க மறுத்துவிட்டார். அவர், தனது நேச கோத்திரங்களாக அப்துல் தார், மக்ஜூம், ஸஹ்ம் ஆகியோரிடம் சென்று உதவி கேட்டபோது, எவரும் அவரது கோரிக்கையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. உடனே அவர் அபூகுபைஸ் மலையில் ஏறிக்கொண்டு தனக்கிழைக்கப்பட்ட அநீதத்தை உரத்த குரலில் கவிதையாக பாடினார்.

 

இதற்கு பின்னர் தான் அன்றைக்கு மக்காவில் இருந்த பல கோத்திரத்தாரும், ஒன்று சேர்ந்து, “மக்காவாசிகளாயினும் வெளியூர்வாசிகளாயினும் அவர்களில் எவருக்கேனும் அநீதி இழைக்கப்பட்டால் அவருக்கு முழுமையாக உதவி செய்து, நீதி கிடைக்க செய்வதில் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்” என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர். அந்த ஒப்பந்தத்திற்கு  "ஹில்ஃபுல் ஃபுளூல்" என்று பெயரிட்டனர். இந்த ஒப்பந்தத்தில் இறைத்தூதராக ஆவதற்கு முன்பு கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களும் கலந்து கொண்டார்கள்.

 

பிற்காலத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி இவ்வாறு கூறினார்கள். ( لَقَدْ شَهِدْتُ فِي دَارِ عَبْدِ اللهِ بْنِ جُدْعَانَ حِلْفًا مَا أَحِبُّ أَنَّ لِي بِهِ حُمْرَ النَّعَمِ، وَلَوْ أُدْعَى بِهِ فِي الْإِسْلاَمِ لَأَجَبْتُ ) அப்துல்லாஹ் பின் ஜத்ஆன் வீட்டில் நடந்த (ஹில்ஃபுல் ஃபுளூல் எனும்) ஒப்பந்தத்தில் நான் கலந்துகொண்டேன். எனக்கு செந்நிற ஒட்டகங்கள் கிடைத்ததைவிட அந்த ஒப்பந்தத்தில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இஸ்லாத்தின் வருகைக்குப் பின்பும் எனக்கு அதுபோன்ற ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அதை நான் ஒப்புக்கொள்வேன். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், தஃப்சீர் குர்துபீ அந்நஹ்ல் வசனம்-91, அர்ரஹீகுல் மக்தூம்

 

ஒரு தந்தை தன்னுடைய பிள்ளைகளில் ஒரு பிள்ளைக்கு மட்டும் தமது சொத்திலிருந்து அதிகமானதை வழங்கினால், இது அவர் தமது மற்ற பிள்ளைகளுக்கு செய்கின்ற அநீதம் ஆகும். இதை மனைவி மக்களோ, மற்றவர்களோ கண்டிக்க வேண்டும்.

 

அவர் சொத்தை அவர் விரும்பியவருக்கு கொடுக்கிறார். அதைப்பற்றி நான் என்ன சொல்ல முடியாது? என்று மௌனியாக இருப்பது சரியல்ல.

 

மேலும், ஒருவன் தமது மனைவியை அநியாயமாக அடித்து கொடுமைப்படுத்துகிறான். அப்போது அவனின் பெற்றோர் அதைக் கண்டும் காணாமல் இருப்பது அநீதம். அவனை தடுக்க முயற்சிக்க வேண்டும்.

 

இது போன்று நமது வீட்டில் ஏதேனும் அநீதம் நடந்தால் அதை உடனே கண்டிக்க வேண்டும். அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது நமது வீட்டிலிருந்து துவங்கவேண்டும்.

 

பாகுபாடின்றி  

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا ) “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்’’ என்று கூறினார்கள். மக்கள், ( هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا، فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا؟ ) “நாயகமே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவி செய்வோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வோம்?’’ என்று கேட்டனர்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ ) “அவனது கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)’’ என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:-புகாரீ-2444

 

அநீதமிழைக்கப்பட்ட மனிதனுக்கு உதவ வேண்டும் என எல்லோரும் கூறுவர். இது அடிப்படை பண்பாடு என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், "அநீதம் செய்தவனுக்கு உதவு" என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் போதிக்கிறார்கள். அதாவது, தீங்கிழைப்பவனை திருத்த முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டால் அவனிடமிருந்து 'தீங்கிழைத்தல்' என்பது ஒழிந்துபோகும் தானே! இதனால் பிறர் நிம்மதியுடன் வாழ வழி வகுக்குமே! உலக அமைதிக்கும், மனித நேசத்துடன் வாழ்வதற்கும் சரியான வழியாக 'அநீதம் செய்தவனுக்கு உதவு' என்று இந்த நபிமொழியின் போதனை அமைந்துள்ளது.

 

அப்துல் மலிக் பின் அபீ சுஃப்யான் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. இராஷ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் மக்காவுக்கு வந்தார். அவரிடமிருந்து ஒட்டகம் ஒன்றை அபூஜஹல் விலைக்கு வாங்கினான். அதற்கான தொகையை பின்பு தருவதாக் கூறி, அதை கொடுக்காமல் இழுத்தடித்தான். அவர், அது குறித்து முறையிடுவதற்காக குறைஷிகளின் சபைக்கு வந்து, ( يَا مَعْشَرَ قُرَيْشٍ، مَنْ رَجُلٌ يُعْدِينِي عَلَى أَبِي الْحَكَمِ بْنِ هِشَامٍ ; فَإِنِّي غَرِيبٌ وَابْنُ سَبِيلٍ، وَقَدْ غَلَبَنِي عَلَى حَقِّي؟  ) "குறைஷிக் கூட்டத்தினரே! அபூஜஹ்லுக்கு எதிராக எனக்கு உதவும் மனிதர் யார்? நான் வெளியூர்க்காரன்; வழிப்போக்கன்; அவர் எனது உரிமையை வழங்காமல் என்னை ஏய்த்து வருகிறார்" என்று கூறினார். ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அப்போது கஅபாவின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் முறையிடுமாறு சொல்லப்பட்டது. அவரும் நபியவர்களிடம் வந்து அபூஜஹ்ல் குறித்து முறையிட்டார்.

 

உடனே நபியவர்கள் அவருடன் சேர்ந்து அபூஜஹ்லின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினார்கள். அபூஜஹல், வீட்டிற்குள் இருந்துகொண்டே யார்? எனக் கேட்டான். நபியவர்கள், ( مُحَمَّدٌ، فَاخْرُجْ ) "(நான்) முஹம்மத் (வந்திருக்கிறேன்). வெளியே வா" என்றார்கள்.

 

வெளியே வந்த அவனுடைய முகத்தில் மலர்ச்சி இல்லை. பயத்தால் நிறம் வெளிறிப் போயிருந்தது. நபியவர்கள், (  أَعْطِ هَذَا الرَّجُلَ حَقَّهُ ) "இந்த மனிதருக்கு கொடுக்க வேண்டிய தொகையை கொடு" என்று கூறினார்கள். அபூஜஹ்ல், "இங்கேயே இருங்கள், உடனே கொடுத்துவிடுகிறேன்" என்று கூறி, வீட்டுக்குள் சென்று அம்மனிதருக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.

 

நபியவர்கள், அந்த வியாபாரியிடம் ( الْحِقْ بِشَأْنِكَ ) "நீ உன்னுடைய காரியங்களை(யெல்லாம் முடிந்து கொண்டு உம்முடைய ஊர்) போய் சேருவீராக!"என்று கூறிவிட்டு, வீடு திரும்பினார்கள்.

 

அந்த வியாபாரி குறைஷியரின் சபைக்குச் சென்று, "அல்லாஹ் அந்த (முஹம்மத் என்ற) மனிதருக்கு நற்கூலி வழங்குவானாக! (அவர் என் உரிமையைப் பெற்றுத்தந்தார்.) நான் எனக்குள்ளதை எடுத்துக்கொண்டேன்" என்று கூறிவிட்டுச் சென்றார். நூல்:- தலாயிலுந் நுபுவ்வா-501 இமாம் பைஹகீ, அல்பிதாயா வந்நிஹாயா

 

அன்றைக்கு அரபு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வணிகர்கள் மக்காவுக்கு வியாபாரம் செய்ய வருவார்கள். காலையில் வந்து வியாபாரம் செய்துவிட்டு, மாலையில் திரும்புகின்ற சூழ்நிலை அப்போது இல்லை. அவ்வாறு வருகிற வெளியூர் வியாபாரியிடம் தான் மக்காவின் முக்கிய பிரமுகரான அபூஜஹ்ல் அவ்வாறு நடந்துகொண்டான்.

 

இது குறித்து, மற்றவர்கள் அவனிடம் பேசத் தயங்கியபோது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று பாதிக்கப்பட்ட வியாபாரியின் உரிமையைப் பெற்று தந்தார்கள். பிறருக்கு அநீதம் செய்கிறவர்கள் சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்கள் தட்டிக் கேட்கப்பட வேண்டியவர்களே என்பதுதான் நபியவர்களின் நிலைப்பாடு.

 

அநீதம் செய்த அபூஜஹ்லும் முஸ்லிம் அல்லர். அநீதம் செய்யப்பட்ட வெளியூர் வியாபாரியும் முஸ்லிம் அல்லர். என்றாலும், யாரும் யாருக்கும் அநீதமோ, தீங்கோ இழைக்கக்கூடாது. அப்படி நடந்தால் அநீதம் இழைக்கப்பட்டவர்களின் சார்பில் நின்று உரிமையைப் பெற்றுத் தருவதில் மதம், இனம் பார்க்காமல் நபியவர்கள் முன்னணியில் நின்றார்கள்.

 

முஸ்லிம்கள், பிற சமயத்தினர் என்று எவ்வித பேதமும் பாராமல் பாதிக்கப்படும் மக்கள் யாராக இருப்பினும் அவர்களுக்காக நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

 

துன்பத்தைத் துடைத்த துல்கர்னைன்

 

பின்னர் (துல்கர்னைன்) ஒரு வழியில் தொடர்ந்து சென்றார். முடிவில் இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியை அவர் அடைந்தபோது, அதற்கப்பால் எந்தப் பேச்சையும் புரிந்து கொள்ளாத ஒரு சமுதாயத்தைக் கண்டார். “துல்கர்னைனே! யஃஜூஜ், மஃஜூஜ் என்போர் பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். எங்களுக்கும், அவர்களுக்கும் இடையே ஒரு தடுப்பை நீர் ஏற்படுத்திட உமக்கு நாங்கள் வரி தரட்டுமா?’’ என்று அவர்கள் (சைகை மூலம்) கேட்டனர். “என் இறைவன் எனக்கு அளித்திருப்பதே சிறந்தது. வலிமையால் எனக்கு உதவுங்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் இடையே தடுப்பை அமைக்கிறேன்’’ என்றார்.

 

(தனது பணியாளர்களிடம்) “என்னிடம் இரும்புப் பாளங்களைக் கொண்டுவாருங்கள்!’’ என்றார். இரு மலைகளின் இடைவெளி (மறைந்து) மட்டமானபோது “ஊதுங்கள்!’’ என்று கூறி அதைத் தீயாக ஆக்கினார். “என்னிடம் செம்பைக் கொண்டு வாருங்கள்! அதன் மீது (உருக்கி) ஊற்றுவேன்’’ என்றார். அதில் மேலேறுவதற்கும், அதில் துவாரம் போடவும் அவர்களுக்கு இயலாது. இது எனது இறைவனின் அருள். என் இறைவனின் வாக்கு நிறைவேறும்போது இதை அவன் தூளாக்கி விடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையானது என்றார். திருக்குர்ஆன்:- 18:92-98

 

துல்கர்னைன் எனும் நல்லடியாரின் வரலாறு வழியாகவும் அல்லாஹ் நமக்குப் பாடம் கற்பிக்கிறான். அவருக்கு அல்லாஹ் அளப்பரிய ஆற்றலை, பெரும் வலிமையைக் கொடுத்திருந்தான். அவர் பூமியில் பல்வேறு பகுதிகளுக்கு மிகவும் எளிதாகப் பயணம் சென்றார். அப்போது ஓரிடத்தில் “யஃஜூஜ் மஃஜூஜ்” எனும் கூட்டத்தால் பாதிக்கப்படும் சமூகத்தைச் சந்தித்தார். அல்லாஹ்வின் அருளால் அந்த மக்களைப் பாதுகாக்கும் வகையில் மகத்தான உதவி செய்து கொடுத்தார்.

நல்லடியார் துல்கர்னைன் (அலை) அவர்கள் இரு மலைகளுக்கு இடையே மிகப்பெரும் தடுப்பை ஏற்படுத்தி அநீதியிழைக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றினார். இவ்வாறு நாமும் முடிந்தளவு அநீதத்தால் துன்புறும் மக்களுக்கு உதவிகள் புரிந்து, அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும்.

 

சிறந்த அறப்போர்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "அறப்போரில் எது சிறந்தது?’’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ )  ‘‘அநியாயம் செய்யும் அரசன் முன் சத்தியத்தை எடுத்துரைப்பதுதான்’’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் நூல்:- நஸாயீ-4209, 4138, முஸ்னது அஹ்மத்

 

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றனர். ( اَلسَّاكِتُ عَنِ الْحَقِّ شَيْطَانٌ أَخْرَسُ ) சத்தியத்தை (எடுத்துரைக்க வேண்டிய இடத்தில் எடுத்துரைக்காமல்) மறைப்பவன் ஊமை ஷைத்தான் ஆவான். நூல்:- ஷரஹ் முஸ்லிம்

 

பேரறிஞர் இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றிருந்தபோது மினாவில் கல்லெறியும் இடத்தில் மன்னர் மஹதீ அங்கு வந்திருந்தார். அவர் கல்லெறிவதற்கு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக காவலர்கள் ஹாஜிகளை தடியால் அடித்து துரத்தி கூட்டத்தை ஓரங்கட்டினார்கள். மக்கள் அவ்வாறு ஒதுக்கித் தள்ளப்பட்ட பின் மன்னர் மஹ்தீ கல்லெறிந்து தம் கடமையை முடித்தார்.

 

அப்போது அவரின் அருகே சென்று அன்னார், “மன்னரே! நீர் இவ்வாறு செய்திருப்பது அநியாயம் இல்லையா? அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்திற்கு வந்தபோது எவரும் கூட்டத்தை கட்டுப்படுத்த, தடியடி நடத்தவில்லை. மக்களை ஒதுக்கித் தள்ளவுமில்லை. ஆனால் நீரோ மக்களை முன்னாலும் பின்னாலும் வலப்புறமும் இடப்புறமும் தள்ளிவிட்டு விரட்டியடிப்பதைக் காணுகிறேன். இது சரிதானா? என்று ஆவேசமாக முழங்கினார்கள்.

 

மன்னர், “அசாத்திய துணிச்சலுடன் ஆணித்தரமாக முழக்கமிடும் இந்த பெரியவர் யார்? என்று வினவ, இவர்தான் "பேரறிஞர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள்" என்று சொல்லப்பட்டது. உடனே மன்னர், அன்னாரை நோக்கி! “இப்போது என்னிடம் இவ்வாறு கூறும் நீர் என் தந்தை மன்னர் மன்சூரிடம் இதை சொல்வதற்கு துணிவு பெறுவீரா? என்று கேட்டார். அன்னார், அப்போது சற்றும் சுணங்காமல் “உன் தந்தைக்கு ஏற்பட்ட கதியை நீ அறிந்திருப்பீராயின் இவ்வாறு கூறுவதற்கு உமது நாவு எழுந்திருக்காது. உமது நிலையே வேறுவிதமாக அல்லவா அமைந்திருக்கும்?" என்று, மன்னர் மேற்கொண்டு ஏதும் பேசுவதற்கு சக்தி இல்லாமல் மௌனமாகிப் போனார்.

 

வாளேந்தி எதிரியுடன் போரிடும்போது ஒன்று வெற்றி அல்லது தோல்வி; மரணம் அல்லது மகிழ்ச்சி. ஆனால்,  சர்வாதிகாரியான ஆட்சியாளர்களை எதிர்த்து நியாயத்தைப் பேசினாலோ எழுதினாலோ கிடைப்பது என்னவோ சாவு மட்டும்தான். எனவே, தப்பிக்கமுடியாது என்று தெரிந்தே அநியாயக்காரனிடம் நியாயத்தைச் சொல்லத் துணிவு வேண்டும். அதுதான் பெரிய தியாகமாகும். அத்துடன் நியாயத்திற்கு அந்தச் சர்வாதிகாரி இணைங்கிவிட்டால், அவன் மட்டுமல்ல; அவன் நாடே திருந்தவும் சீரடையும் வாய்ப்பு ஏற்படும். போர்க்களத்தில் எதிரிகளை மட்டுமே வீழ்த்தமுடியும். இங்கு அப்படியல்ல. எனவே, சர்வாதிகாரியிடம் சத்தியத்தை உரக்கச் சொல்வதே உண்மையான அறப்போராகும்.

 

அநீதிக்கு எதிராக குரல் வலுவாகவும் தொடர்ந்தும் ஒழிக்க வேண்டும். ஆதிக்கக்காரர்களை திகிலயடையச் செய்யும் அளவிற்கு எதிர்ப்பு போராட்டமும், விளக்கக்கூட்டமும், பேரணிகளும் நடைபெற வேண்டும். சிறு பிரச்சார நூல்கள், அச்சு, மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் பிரச்சனைகளின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவாக விளக்கவேண்டும்.

 

எல்லோருக்கும்

 

எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!’’ என்று கூறிக் கொண்டிருக்கின்ற பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? திருக்குர்ஆன்:- 4:75

 

ஸ்பெயின் நாட்டின் ஜிப்ரால்டருக்கு அருகில் உள்ள ஸப்தா (சியூடா) நகர ஆட்சியாளர் “கவ்ண்ட் ஜூலியன்” என்பவரின் மகளை அந்நாட்டு அரசன் “ரவ்டரிக்” என்பவன் கற்பழித்துவிட்டு, அவளை தன்னுடனேயே வைத்துக்கொண்டான். அரசனுக்கு எதிராகச் குரலெழுப்ப முடியாத அளவுக்கு அடக்குமுறை தலைவிரித்தாடியது.

 

கொதித்துப் போன ஜூலியன் சில கிறிஸ்துவ தலைவர்களுடன் முஸ்லிம்களின் ஆட்சி பகுதியான கைருவானுக்குச் சென்று அந்நகர கவர்னர் மூசா பின் நுஸைர் அவர்களிடம், "இன்று ஸ்பெயினில் அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. குடிமக்கள் மீளாத்துயரத்தில் சிக்கி தவிக்கின்றனர். மனித உரிமையை மீட்டுத்தர வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஸ்பெயின் மக்களை அநியாயக்கார அரசின் கோரப்பிடியிலிருந்து விடுவியுங்கள். எங்களுடைய இந்த முறையிட்டை எடுத்து வைப்பதற்கு உலகில் உங்களைத் தவிர வேற எந்த சக்தியும் இருப்பதாக தெரியவில்லை. நீங்கள் ஸ்பெயின் மீது தாக்குதல் தொடுத்து,  அதை வெற்றிகொள்ள வேண்டும்" என்று முறையிட்டனர்.

 

(அன்றைய இஸ்லாமிய உலகின் கலீஃபாவாக வலீத் பின் அப்துல் மலிக் என்பவர் இருந்தார். சக்தி வாய்ந்த இஸ்லாமிய ஆட்சியின் தலைநகராக டமாஸ்கஸ் இருந்தது.)

 

கவர்னர் மூசா பின் நுஸைர் அவர்கள் நாட்டின் கலீஃபா வலீத் பின் அப்துல் மலிக் அவர்களுடன் ஆலோசனை செய்து, அதன் பிறகு போர்நுட்பம் அறிந்த தாரிக் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் தலைமையில் ஏழாயிரம் பேர் கொண்ட படையை ஸ்பெய்னுக்கு அனுப்பி வைத்தார். அவரின் மூலம் ஸ்பெயின் வெற்றி கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் வசமானது. அதன் பிறகு ஸ்பெயின் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். நூல்:- தாரீகெ இஸ்லாம் - மௌலானா அக்பர் ஷாஹ் நஜீப் ஆபாதீ

 

கி.பி. 711 இருந்து கி.பி. 1492 (ஹிஜ்ரீ 92-897) வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி (781 ஆண்டுகள்) நீதி நேர்மைக்கு பெயர்பெற்ற ஆட்சியாய் நிலைத்திருந்தது.

 

(திருக்குர்ஆன் விரிவுரையாளரான பேரறிஞர் குர்துபீ (ரஹ்) அவர்கள், நபிமொழித்துறை நிபுணரான பேரறிஞர் இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள், தலைசிறந்த வரலாற்றாசிரியரான இப்னு கல்தூன் (ரஹ்) அவர்கள், விண்ணியல்துறை நிபுணர் விஞ்ஞானி ஜர்காலீ (Arzachel) அவர்கள், மருத்துவத்துறை நிபுணர் அல்ஜஹ்ராவீ  (Alzaharawius) அவர்கள் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற மார்க்க அறிஞர்கள் ஸ்பெயினில் தோன்றியவர்கள் ஆவர்.)

 

இஸ்லாமிய அரசு, பலவீனமான மக்களைக் காப்பதற்காகப் போர் தொடுக்கலாம் என்பது குர்ஆனின் கூற்று. (யூதர்கள் எனும்) இஸ்ரேல் அரசால், ஃபலஸ்தீன் முஸ்லிம்களுக்கு உச்சக்கட்டமாக அநீதியிழைக்கப்பட்டும், இந்த வசனத்தை மெய்ப்பிக்க வேண்டிய இஸ்லாமிய அரசுகள் வாய் மூடி மௌனம் காக்கின்றன. பக்கத்து நாடுகளில் இருந்து அல்லல்பட்டு வரும் அகதிகளை அரவணைக்கக்கூட மறுத்துவிடுகின்றன.

 

வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான், ( يَا رَسُولَ اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ ) "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தன் குலமக்களை நேசிப்பது இன வெறியாகுமா?" என்று வினவினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( لاَ وَلَكِنْ مِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى الظُّلْمِ )‏ “இல்லை; எனினும் ஒரு மனிதர் தமது குலமக்கள் அநியாயம் செய்தாலும் அதற்கு உதவுவது இனவெறி ஆகும்" என்று பதிலளித்தார்கள். நூல்:- இப்னுமாஜா-3939,  முஸ்னது அஹ்மத்

 

அதாவது, தமது சமூகத்தைச் சார்ந்தவன் வரம்பு மீறி அநியாயம் செய்யும்போது, அவன் செய்வது தவறு என்று தெரிந்தும், அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனுக்கு உதவினால் அது இனவெறி ஆகும்.

 

நமது சமூகத்திற்காக பாடுபட வேண்டும். அதே சமயத்தில் நமது சமூகம் பிறருக்கு அநீதியிழைத்தாலோ அல்லது அதற்கு ஒத்துழைத்தாலோ அப்போது நமது சமூகத்துடன் நாம் ஒத்தப்போகக்கூடாது. யார் அநீதியிழைத்தாலும் அதைக் கண்டித்து, தடுத்து நிறுத்த தவறக்கூடாது.

 

முயற்சி செய்!

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களை (செய்யும்படி) கட்டளையிட்டார்கள். (அதில் ஒன்று) ( وَنَصْرِ المَظْلُومِ ) அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. அறிவிப்பாளர்:- பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1239

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ ) ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமைநாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். அறிவிப்பவர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2442, முஸ்லிம்-5036, அபூதாவூ-த்4248

 

துன்பத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற முனைய வேண்டும். பிறரால் நசுக்கப்படும்போது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவும் கூடாது. இப்பணிக்குச் சிறந்த பரிசுகளை அல்லாஹ் மறுமைநாளில் தருவான்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ ) உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-78

 

தம்மையோ தமது சமூகத்தையோ பாதிக்காத வரையில், எவரும் அநீதிகளைப்பற்றி கவலை கொள்வதில்லை. ஆனால், அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டாலோ மற்றவர்கள் தங்களுக்காக குரல் எழுப்பவில்லையே! என்று அவர்கள்  அங்கலாய்ப்பார்கள்.

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு எழும் சினம் போலவே பாதிக்கப்படாத அவர்களுக்கும் ஏற்படாத வரை அநீதிகள் ஒருபோதும் ஓயாது. அநீதிக்கு எதிராக பாதிக்கப்படாதவர்கள் எழுப்பும் குரல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி படைத்தது. பிறர் தாக்கப்படும்போது நாம் குரல் எழுப்பினால் தான், நாம் தாக்கப்படும்போது பிறர் நமக்காக குரல் எழுப்புவார்கள் என்பதை எந்த சமூகமும் மறந்துவிடக் கூடாது. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை கடமை என இஸ்லாம் இயங்குகிறது.

 

அவரவர் சக்திக்கேற்ப அநீதிகளை களைவதில் அக்கறை கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்போர் தமது பதவியை பயன்படுத்தி அநீதிகளை ஒழிக்க வேண்டும். பொதுமக்கள், அறிவு ஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மனித உரிமை இயக்கத்தினர் ஆகியோர் அநீதிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தீமைகளைக் காணும்போது எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டுமெனும் வழிமுறையை நமக்குப் போதித்திருக்கிறார்கள். தீமையைக் கரத்தால் தடுக்க இயலாத சமயங்களில் நாவால் தடுக்க முயற்சிக்க வேண்டும். பெரும்பாலும் இந்த வாய்ப்பு அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ إِلاَّ قَالَ الْمَلَكُ وَلَكَ بِمِثْلٍ ) ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும்போது, வானவர் "உனக்கும் அதைப் போன்று கிடைக்கட்டும்" என்று கூறாமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:-  அபுத்தர்தா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5279

 

அநீதியைத் தட்டிக்கேட்கும் வாய்ப்பு இல்லை; அதனால் சிரமப்படும் சகோதரர்களுக்கு உதவுவதற்கும் வழியில்லை என்ற நிலையில் கவலைப்படாதீர்கள். நம் கண்முன் இல்லாத அந்த மக்களுக்காக அல்லாஹ்விடம் அழுது மன்றாடுங்கள். அல்லாஹ்வின் உதவி அவர்களுக்குக் கிட்டும் என்கிறது இந்த நபிமொழி.

 

இனம், மதம், மொழி என பாகுபாடின்றி அநீதிக்கு எதிராகவும் போராடும் உண்மையான போராளிகளாக நாம் திகழ வேண்டும். அவ்வாறு நாம் போராடும் போராட்டங்கள் வெற்றி பெற, அல்லாஹுத்தஆலா உதவி புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...