Search This Blog

Tuesday, 8 August 2023

சுதந்திர தினம்

 

சுதந்திர தினம்

 

إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنْفُسِهِمْ

 

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. திருக்குர்ஆன்:- 13:11

 

இந்திய நாடு, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனி சுதந்திர நாடானது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ம் நாள் இந்திய நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செலுத்தப்படும். இந்நாளில் எண்ணற்ற பல சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூர்ந்து, வீரவணக்கம் செலுத்தப்படும்.

 

ஆங்கிலேயர்கள் இம்மண்ணை அடிமைப்படுத்தி ஆட்சி செய்ய முனைந்தபோது அடிமைத்தனம் என்பது இறைவனுக்கு முன்னால் மட்டுமே என்று முழங்கி நாட்டிற்கே விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் இந்திய முஸ்லிம் அறிஞர்கள். இந்திய சுதந்திர வரலாறு, இஸ்லாமியர்களின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.

 

பிரபல வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான குஷ்வந்த் சிங்கூறுகிறார்: "முஸ்லிம்கள் அவர்களது தேசிய எண்ணிக்கையைக் காட்டிலும் இந்த நாட்டுக்காக அதிகமாகவே உயிர்த்தியாகங்களைச் செய்துள்ளனர். அதைக் காட்டிலும் தங்களது நிலங்களையும் வளங்களையும் நாட்டின் விடுதலைக்காக வாரி வாரி அளித்துள்ளனர்" நூல்:- இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி 29-12-1975

 

முதல் சுதந்திரப்போர்

 

ஆங்கிலேயர் வணிகம் செய்ய வந்த காலந்தொட்டே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக் கொண்டிருந்தவர்களில் முஸ்லிம்கள், முஸ்லிம் மன்னர்கள் கணிசமாக இருந்தனர். ஆங்கிலேயருக்கு நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து அவர்களை எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ் அத்தவ்லா (ரஹ்) அவர்கள்  ஆவார். நூல்:- பி.கே குப்தா, கிழக்கு இந்திய நிறுவனமும் சிராஜ் அத்தவ்லாவும், 1756–57, லைடன், 1962

 

1757-ல் ஆங்கிலேயரை அவர் சந்தித்த பிளாசிப் போர்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் இம்மண்ணில்  நடந்த முதல் இந்திய சுதந்திரப்போர்.  இதுவே, பெரிய யுத்தம். இப்போரில் கைதாகும் இந்திய வீரர்களை அடைப்பதற்காக ஆங்கிலேயர் கட்டிய சிறைக்கூடத்திலேயே ஆங்கிலேயர்களைக் கைது செய்து அடைத்த மாவீரர்தான் சிராஜ் அத்தவ்லா (ரஹ்) அவர்கள்

 

ஆங்கிலேயரின் நாடாளும் ஆசையை முளையில் கிள்ளும் சிராஜ் அத்தவ்லா (ரஹ்) அவர்களின் முயற்சியை முறியடிக்க பிரிட்டனிலிருந்து  கடல் மார்க்கமாக வந்த ஆங்கிலப்படை கல்கத்தா துறைமுகத்தில் மிகப்பெரிய எதிர் முற்றுகையைச் சந்தித்தது. சிராஜ் அத்தவ்லா (ரஹ்) அவர்கள் கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கிலேயரை எதிர்கொண்டபோது நான்கு மணி நேரம் பெய்த கடுமையான மழையினால் அவரது படையின் வெடிமருந்துகள் நனைந்தன. அவரது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

 

ஆங்கிலேயர் எதிர்ப்பில் சிந்திய முதல் இந்திய இரத்தம், வங்காளத்தில் சிராஜ் அத்தவ்லா (ரஹ்) அவர்கள்  சிந்திய இரத்தம்தான். அதன் மீதுதான் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தன் முதல் காலை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆம்! இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது.

 

தென்னகத்து வேங்கை

 

மைசூர் மன்னர் ஹைதர் அலீ அவர்களின் மகனார் மைசூர் புலி திப்பு சுல்தான் (ரஹ்) அவர்களின்  பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

 

1790 ம் ஆண்டு முதல் 1792 ம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு (ரஹ்) அவர்கள்  தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறியபோது, திப்பு சுல்தான் (ரஹ்) அவர்கள்  முடியாதுஎன்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான். அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் (ரஹ்) அவர்கள்  இரையானார்.

 

திப்பு (ரஹ்) அவர்களின்  உடலை பார்த்து ஆங்கிலேயர்கள் சொன்ன வார்த்தை இனி இந்தியா முழுவதும் நமக்கு தான் சொந்தம்என்றார்கள். அப்படியென்றால் எந்தளவிற்கு திப்பு (ரஹ்) அவர்களின்  வீர வாழ்க்கை இருந்திருக்கும்.

 

தெற்கில் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதல் சுதந்திரப் போராட்டம் ஹைதர் அலீ மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் (ரஹ்) அவர்கள்  ஆகியோரால் 1780 இல் தொடங்கப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் பீரங்கிகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை மிரள வைத்த மாவீரர் திப்பு சுல்தான் (ரஹ்) அவர்கள்.

 

மாவீரர் திப்பு சுல்தான் (ரஹ்) அவர்கள்  தலைமையில் இந்திய சுதந்திர போர் நடந்திருந்தால் இந்தியா அன்றே விடுதலை அடைந்து இருக்கும் என்று மகாத்மா காந்தி கூறினார்.

 

தெற்கே தென்னகத்து வேங்கை திப்பு சுல்தான் (ரஹ்) அவர்கள்  என்றால் வடக்கே வங்கத்து சிங்கம் சிராஜ் அத்தவ்லா (ரஹ்) அவர்கள்.

 

காந்திக்கு மகாத்மா பட்டம்

 

பேரறிஞர் ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் மால்டா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று வருடம் ஏழு மாதம் சிறை வாசத்திற்குப் பின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களையும், அவர்களுடன் இருந்த நால்வரையும் 1920 ஜூன் 20-ம் தேதி ஆங்கிலேயர்கள் விடுதலை செய்தனர். அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட அவர்கள் மால்டாவிலிருந்து மும்பை துறைமுகத்திற்கு அழைத்து  வரப்பட்டனர். அப்போது  ஷைகுல் ஹிந்த் மஹ்மூதுல் ஹஸன் (ரஹ்) அவர்களை வரவேற்பதற்காக பல்வேறு ஆலிம்கள், முக்கியத்தலைவர்கள், பொதுமக்கள் வந்திருந்தனர். அவ்வாறு வருகை புரிந்த தலைவர்களில் காந்தியும் ஒருவர். பிறகு மும்பையில் ஒரு அறையில் காங்கிரஸ் தலைவர்களும், மற்றும் உலமாக்களும் இந்தியாவின் நிலை பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.

 

இனிமேல் அகிம்சை வழியில் போராட வேண்டும் என்பது ஆலோசனையின் முக்கிய அம்சமாக இருந்தது. அகிம்சைப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற விவாதம் எழுந்தது. அப்போது ஷைகுல் ஹிந்த் அவர்கள் பகலில் தன்னை வரவேற்க வந்தவர்களில் இளம் ஃபாரிஸ்டர் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர் எங்கே?  என்று கேட்டு, அவரையே (அதாவது காந்தியையே) தலைவராக நியமிக்கச் சொன்னார்கள். 

 

அதன் பின்பு  காந்தியை தலைவராக அறிமுகப்படுத்தவும் மக்களிடையே சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்கவும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் பல ஊர்களிலும் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்தது. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் மெளலானா அப்துல் பாரீ ஃபரங்கீ மஹல்லீ (ரஹ்) அவர்கள் தான் முதலில் காந்தியை மாகாத்மா என பட்டம் சூட்டி அழைத்தார்கள் அன்று முதல் அப்பெயர் பிரபலமடைந்தது. நூல்:-  சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகங்கள் நாகூர், சா. அப்துர் ரஹீம்

 

தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள்

 

மார்க்க அறிஞர் முஃப்தீ இனாயத் அஹ்மது (ரஹ்) அவர்கள், உத்திரபிரதேசத்தில் 1822 ஆம் ஆண்டு பிறந்தார். இவர், தமக்கு தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளிவிட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின.

 

இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?’ என்று நீதிபதி இவரிடம் கேட்டார்.

 

ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்துகொண்டேன். புரட்சி செய்தேன்என்று முஃப்தி இனாயத் அஹ்மது (ரஹ்) அவர்கள் துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

 

நெஞ்சுரம்

 

வரலாற்றாசிரியர் தாம்சன் என்பவர் குறிப்பிடும் முக்கியச் செய்தி: டெல்லியில் ஒரு கேம்ப் ஒன்றில் நான் தங்கியிருந்தபோது  மனித உடல்கள் எரிக்கப்படும் வாடையை நுகர முடிந்தது. நான் ஒரு வித அச்சத்தோடு வெளியில் எட்டிப் பார்த்தபோது அங்கே நான் கண்ட என் காட்சி மனதை பதற வைத்தது. சுமார் 40 மார்க்க அறிஞர்கள் உடம்பில் துணி இல்லாமல் நிர்வாணமாக நெருப்புப்  பள்ளத்திற்கு அருகில் கைகளை கட்டி நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களைச் சுற்றி ஆங்கிலேயர்கள் நின்று கொண்டு ஒவ்வொருவராக நெருப்பில் தூக்கி வீசுகிறார்கள்.

 

அவ்வாறு வீசப்படும்போது அவர்களிடம் நீங்கள் எங்களுக்கு எதிரான போராட்டத்தை விட்டு விட்டால் உங்களை உயிரோடு விட்டுவிடுவோம்என்று மிரட்டுகிறார்கள் ஆனால் அந்த ஆலிம்கள் நாங்கள் கொல்லப்பட்டாலும் உங்களுக்கு எதிராகவே இருப்போம்என்று கூறுகிறார்கள்.  கடைசியில் அந்த நாற்பது ஆலிம்களும் நெருப்பில் தூக்கி வீசப்படும் காட்சி இன்றளவும் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

 

1920-ல் ஈரோட்டில் நடைபெற்ற மஜ்லிசுல் உலமாவின் மூன்றாவது மாநாட்டிற்கு வருகை தந்த மௌலானா முஹம்மது அலீ (ரஹ்) அவர்களுக்கு வரவேற்பு அளித்த ஈ.வே.ரா பெரியார் அவ்வரவேற்புரையின் போது, “காந்திஜிக்குள் இந்த தேசம் இருக்கிறது. ஆனால், அந்த காந்தியோ மௌலானா முஹம்மது அலீயின் ஜேப்பிற்குள் இருக்கிறார்என்றார். அந்த அளவிற்கு தனது தேசிய நடவடிக்கைகளால் மிகப்பெரும் தாக்கத்தை இந்த மண்ணில் ஏற்படுத்தியவர் மௌலானா முஹம்மது அலீ (ரஹ்) அவர்கள். 

 

மார்க்க அறிஞர்கள் முன்னின்று போராட்டங்களை நடத்துகிறார்கள் என்பதற்காகவே  நூற்றூக்கணக்கான ஆலிம்கள் தூக்கிலிடப்பட்டனர்.

 

காட்டிக்கொடுக்க மறுத்தவர்

 

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்பாகுல்லாஹ் கான் (ரஹ்) அவர்கள் மீது விசாரணை நடைபெற்றது. அப்போது, “நீ ஓர் முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்  என்றெல்லாம் கூறி ஆங்கிலேய அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்பகுல்லாஹ் கான் (ரஹ்) அவர்கள் பாறைபோல் அசையாமல் நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே ஆங்கிலேயர் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர். அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்திலே தொங்கப்போட்டார். ஹாஜிகளைப் போன்று லப்பைக் லப்பைக்என கூறிக் கொண்டிருந்தார்.

 

நிதியுதவி

 

மகாத்மா காந்தி, தன்னுடைய சுயசரிதையான சத்தியசோதனைஎன்ற நூலில்,  விடுதலை போராட்டத்திற்கான ஆரம்பகாலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஆதம் ஜவேரிஎன்ற முஸ்லிம்  சகோதரர்கள் குறித்து குறிப்பிடுகின்றார். அன்றைய தேதிக்கு சுமார் 150 கோடி சொத்துக்களை சுதந்திரப் போராட்டத்திற்காக வாரிவழங்கினார்கள் இச்சகோதரர்கள். நன்றி: குமுதம் ரிப்போர்டர் 12.07.07

 

போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள  40  லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார்.

 

பம்பாயின் மிகப்பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் மட்டுமே நிதி திரண்டுகொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப் பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி (ரஹ்) என்ற முஸ்லிம் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்காக ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

 

காசோலையை கையில் வாங்கிய காந்திஜியின் கண்கள் அதில் நிரப்பப்பட்டிருந்த தொகையை வாசித்தபோது  ஆச்சரியத்தால் விரிந்தது. காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரே என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது  பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசோலையை உமர் சுப்ஹானி (ரஹ்) அவர்களிடமே திருப்பிக் கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி (ரஹ்) அவர்கள் வழங்கினார். நூல்:- ஆனந்த சுதந்திரம்,  உதியன்

 

ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ்ய நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானி (ரஹ்) அவர்களின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானி (ரஹ்) அவர்களின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்ப்பந்தப்படுத்தி வாங்கி, மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுபஹானி (ரஹ்) அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் மூன்று கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

 

1931 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேசை மகா நாட்டுக்கு காந்தியடிகளுடன் சென்ற முக்கிய பிரமுகர் சென்னை தொழிலதிபர் ஜமால் முஹம்மது (ரஹ்) அவர்கள். கிலாபத் இயக்கத்திற்கு நிதிகேட்டு, காந்தியடிகள், முஹம்மமது அலீ ஜின்னா அவர்களுடன் சென்னை வந்தபோது, ஒரு காசோலையில் கையெழுத்து போட்டுக்கொடுத்து, வேண்டிய தொகையை எழுதிக்கொள்ளும்படி கூறிய, வள்ளல் பெருமகனார் ஜமால் முஹம்மது (ரஹ்) அவர்கள். நூல்:-  சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகங்கள் நாகூர் சா. அப்துர் ரஹீம் 

 

1943 ஜுலை 2 - ஆம் தேதி சிங்கப்பீரில் ஆஸாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government) என்ற இந்திய தேசிய தற்கால்க சுதந்திர அரசை நிறுவிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவ்வரசின் நிர்வாக செலவிற்காகவும், ஆசாத் ஹிந்த் பவ்ச் என்ற இந்திய தேசிய ராணுவத்தை நடத்துவதற்காகவும் வங்கி ஒன்றை நிறுவினார். அவ்வங்கிக்கான நிதியை சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்ற கீழை நாடுகளில் திரட்டினார். அவ்வாறு நிதி திரட்டும் கூட்டம் ஒன்றை பர்மாவின் தலைநகரான இரங்கூனில் கூட்டினார். கூடியிருந்த அந்நகர வியாபார பிரமுகர்களிடம் நேதாஜி பேசும்போது தேச விடுதலைக்காகப் போராடும் நம் இநிதிய தேசிய இராணுவத்திற்கு அள்ளி வழங்குங்கள்என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

வருகை தந்த வியாபாரப் பெருமக்கள் அனைவரும் ஒன்றுகூடிப் பேசி, “எங்கள் வருமாணத்தில் 10 சதவிகிதத்தை இந்திய தேசிய ராணுவத்திற்கு தொடர்ந்து வழங்குகிறோம்என்று அறிவித்தனர். இவ்வறிவிப்பைக் கேட்ட நேதாஜி சற்று கோபத்துடன் தாய் நாட்டின் விடுதலைக்காக இரத்தம் சிந்தும் எங்கள் வீரர்கள் ஐந்து சதவிகிதம் பத்து சதவிகிதம் என்று கணக்குப் பார்த்தா சிந்துகின்றனர்? நீங்கள் கணக்குப் பார்த்து நிதி வழங்க பார்க்கின்றீர்களே! என்று பேசினார்.

 

அப்போது, கூட்டத்திலிருந்து தலையில் தொப்பி தாடியுடன் முதியவர் ஒருவர் மேடையை நோக்கிவருகிறார். வந்தவர் நேதாஜியின் கையில் ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதை வாங்கிப் படித்த நேதாஜியின் கண்களில் நீர் திரண்டு இமை வரப்புகளுக்குள் முட்டி மோதி நிற்கிறது. நேதாஜி உணர்ச்சி வசப்படும் வகையில் அக்காகிதத்தில் அப்படி என்னதான் எழுதப்பட்டிருந்தது?

 

ரங்கூன் மாநகரில் எனக்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வியாபார நிறுவனங்களை இந்திய தேசிய ராணுவத்திற்காக நான் எழுதி வைக்கிறேன்என்ற கொடை வாசகங்கள் அக்காகிதத்தில் இடம் பெற்றருந்தன. அவ்வாசகங்களை எழுதிய கரங்களுக்குச் சொந்தக்காரரான முஹம்மது ஹபீப் (ரஹ்) என்ற அந்த முதியவரை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரத்தழுவியவராக இவர் தான் ஸேவக் கி ஹிந்த்” (இந்தியாவின் சேவகர்) என்ற பெருமிதத்துடன் அறிவித்தார்.

 

இவ்வாறு நேதாஜி படை நடத்துவதற்கான பொருளாதாரப் பிண்ணனியை உருவாக்கிக் கொடுத்தவர்களுள் பெரும்பாலோர் கீழை நாடுகளில் வாழ்ந்த முஹம்மது ஹபீப் (ரஹ்) அவர்கள் போன்ற முஸ்லிம் தனவந்தர்களாவர். நூல்:- நேதாஜியின் வீரப்போர் பாகம்-2 பக்கம்-181 ஜெயம் சுப்ரமணியம்

 

I.N.A. கேப்டன் ஷா கூறுகிறார். இந்தியாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் சொத்துக்களை அனைத்தையும் சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய இந்திய தேசிய ராணுவத்திற்குக் கொடுத்துவிட்டு, கையில் சல்லிக்காசுகள்கூட இல்லாததால் ராணுவத்தில் குடும்பம் சகிதமாகச் சேர்ந்து, இந்த தேசத்திற்காக ஃபக்கீர்களாய் வாழ்ந்ததை என் கண்களால் நானே கண்டேன். நூல்:- நேதாஜியின் வீரப்போர்  பாகம்-2 பக்கம் 181 ஜெயம் சுப்ரமணியம்

 

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உருவாக்கிய கடல் கடந்த இராணுவமான இந்திய தேசிய இராணுவத்தில் தளபதி பொறுப்பு முதற்கொண்டு பல்வேறு பதவிகளை முஸ்லிம்கள் அலங்கரித்திருந்தனர். நேதாஜி வியந்து போற்றும் அளவு அதிகப்படியான பொருளாதார உதவிகளையும் இஸ்லாமிய வணிகர்கள் அளித்தனர். நூல்;- ஜெய்ஹிந்த் பக்கம்-67, 86, 91 கே. அருணாசலம்

 

கொடுங்கோலனின் சிலை

 

ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின்போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா, சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது ஹுசைன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.

 

அழமாட்டார்கள்

 

முகலாயப் பேரரசின் கடைசி மன்னரான சிராஜுதீன் பகதூர்ஷா ஜாபர் (ரஹ்) அவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக ஏராளமான உதவி ஒத்தாசைகள் புரிந்து, மக்களை புரட்சி பாதையில் அழைத்துச் சென்றார். மன்னர் பகதூர்ஷாவின் முயற்சியால் தொடங்கிய புரட்சிக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும்  ஆதரவு கிடைத்தது.

 

இதன் காரணமாக ஆங்கில அதிகாரி ஹட்சன் தமது படையுடன் சென்று மன்னர் பகதூர்ஷாவை கைது செய்தான். மீர்ஜா அபூபக்ர், மீர்ஜா ராஜி சுல்தான், மீர்ஜா மொஹல் ஆகிய அவரின் மூன்று பிள்ளைகளின் ஆடைகளை களைந்து அவர்களை பல பேர் முன்பாக சுட்டுக் கொன்றான். சுட்டுக் கொல்லப்பட்டபட்டவர்களின் உடலை காக்கைகளுக்கும் கழுகுகளுக்கும் தூக்கி எறிந்தான்.

 

ஹட்சன், மறுநாள் சிறையில் இருந்த பகதூர்ஷாவை பார்க்க வந்தான். அவனுடைய கையில் மூடப்பட்ட பெரிய பாத்திரம் இருந்தது. கம்பெனியின் பரிசு என்று சொல்லி பாத்திரத்தை திறந்து மன்னரிடம் காட்டினான். அதில் பகதூர்ஷா அவர்களின் ஒரு மகனின் தலையும், ஒரு பேரனின் தலையும் இருந்தது.

 

பகதுர்ஷா திடநெஞ்சுடன் அவனைப் பார்த்து, “தைமூர் வம்சத் தோன்றல்கள் தமது முன்னோர்களுக்கு இவ்வாறு தான் தங்கள் புனிதத்துவத்தை நிரூபிப்பார்கள்என்று கூறினார்.

 

கம்பீரமான இந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்த ஹட்ஸன், பகதுர்ஷாவின் கண்களில் கண்ணீர் வராததைக் கண்டு, “உமது கண்களில் என்ன? நீர் வற்றி விட்டதா? என்று கேட்டான்.

 

பகதுர்ஷா, “அரசர்கள் அழுவதில்லை! அதிலும் முஸ்லிம்கள், உயிர்த்தியாகம் செய்தவர்களுக்காக அழமாட்டார்கள்என்று பெருமிதத்துடன் கூறினார்.

 

இழப்புகளுக்கு எந்த விதத்திலும் அஞ்சாது முஸ்லிம்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கல்லறை வாசகம்

 

கடைசி முகலாய இளவரசரான பகதூர்ஷா ஜாபர் (ரஹ்) அவர்கள், இந்தியாவின் சுதந்திரத்திற்காக மிகுந்த வீரியத்துடனும் தீவிரத்துடனும் போராடிய முதல் இந்தியர் ஆவார். அவர்களின் மீது ஆங்கிலேயர்கள் 1857 ல் தேசத்துரோக வழக்கில் கைது செய்து ரங்கூன் சிறையில் அடைத்தனர். ஆயுள் தண்டனை கைதியாக இறுதி வரை சிறையில் இருந்து அங்கேயே மரணித்தார்.

 

"இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உன் தியாகத்தால் உதித்தது "பகதூர்ஷாவின் கல்லறையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி எழுதிய வாசகம்.

 

அந்தமான் சிறைச்சாலை

 

ஆங்கிலேயர்களை தொடர்ந்து எதிர்த்து வந்த முஸ்லிம்களுக்கும், மார்க்க அறிஞர்களுக்கும் ஆங்கிலேயர்கள் வழங்கிய குறைந்தபட்ச தண்டனை தூக்குத் தண்டனை தான். இதிலிருந்து யாராவது தப்பிவிட்டால் அந்தமானின் கொடுஞ்சிறை கொட்டடியில் தள்ளப்படுவார்கள். அந்தமான் கொடுஞ்சிறையில் எத்தனை முஸ்லிம் போராளிகள் தள்ளப்பட்டார்கள் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

அம்பாலா சதி வழக்கில் கைது செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட மௌலானா முஹம்மது யஹ்யா அஜீமாபாதி (ரஹ்) அவர்கள் 20-2-1868 ஆம் ஆண்டு அந்தமானில் மரணமடைந்தபோது அன்னாரின் ஜனாஸா தொழுகையில் 4000 முதல் 5000 முஸ்லிம்கள் கலந்து கொண்டனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். நூல்:- இந்திய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் பக்கம்-47, எம். ஷைக் அப்துல் காதிர் காஷிபி

 

அந்தமான சிறைச்சாலை முஸ்லிம் கைதிகளுக்காகவே கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

 

ஆடுமாடுகளைப் போல்

 

கேரளாவில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மாப்ளா முஸ்லிம் கோத்திரத்தார்களை கிளர்ச்சியாளர்கள் என்று சொல்லி ஆங்கிலேய அரசு அவர்களை கைது செய்து சரக்கு இரயில் வண்டியில் ஆடுமாடுகளைப் போல் கூட்டம் கூட்டமாக ஏற்றினர். அவர்களை இரயிலின் காற்றுப்புகாத பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டதால் வரும் வழியில் மூச்சுத்திணறி இறந்தனர். உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 55 ஆகும்.

 

இந்த தகவலை 1921 செப்டம்பா 1 - இல் வெளியான தி இண்டிபென்டன்ட் பத்திக்கை கூறியது.

 

உண்மையை கூறினார்

 

1917 ஏப்ரல் 15-அன்று காந்தி சம்பரான் மாவட்டத்தின் அன்றைய தலைநகரமான மோதிஹரிக்கு வருகிறார். காந்தியை இர்வின் என்ற பிரிட்டிஷ் தோட்ட கம்பெனி மேனேஜர் இரவு உணவு கொடுப்பதாக அழைக்கிறார். இர்வின், காந்திக்கு இரவு விருந்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய திட்டமிடுகிறான். தனது சமையல்காரர் பதக் மியன் அழைத்து பாலில் விஷம் கலந்து கொடுக்க கட்டளையிடுகிறான். அவ்வாறு செய்துவிட்டால் ஏராளமான பரிசுகளும், அன்பளிப்புகளையும் தரப்படுவாய். இல்லையேல், நீ கடுமையாக தண்டிக்கப்படுவாய் என பயமுறுத்துகிறான். ஆனால், பதக் எனும் தேசபக்த இஸ்லாமிய சமையல்காரர் காந்திக்கு பாலை கொடுக்கும்போது அதில் விஷம் கலந்துள்ள உண்மையை கூறிவிடுகிறார். காந்தி காப்பாற்றபடுகிறார்.

 

(இதை நேரடியாக ராஜேந்திர பிரசாத் பார்க்கிறார்.) அதனால் ஆங்கிலேய அரசு அவரை பணி நீக்கம் செய்து, சிறையில் அடைத்து சித்தரவதை செய்தது. மேலும், இவரது வீட்டை இடித்து சுடுகாடாக்கினர். அவரது குடும்பத்தினரை மிகவும் நோவினை செய்தனர். மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தனர்.

 

பின்னர் நாடு விடுதலை அடைகிறது. ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதி ஆகிவிட்டார்.1950-ல் ராஜேந்திர பிரசாத் அதே மோதிஹரி ரயில்வே ஸ்டேஷன் செல்கிறார். நாடு விடுதலை பெற்று முதல் இந்திய ஜனாதிபதி வருகை. பெருங்கூட்டம். பலரும் முண்டியடித்து கொண்டு ஜனாதிபதியை பார்த்து முயலுகின்றனர்.

 

அங்கே ஓரமாக, தேசபிதா "பக்கிரியை" காப்பாற்றிய அந்த இஸ்லாமிய பக்கிரி- பதக் கூட்டத்தில் இருப்பதை கவனித்த ஜனாதிபதி, அவரை அழைக்கிறார். பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்து செல்கிறார். அங்கே பதக்கை கட்டி தழுவி, காந்தியை இவர் காப்பாற்றிய நிகழ்வை ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் விவரித்து பேசுகிறார். கலெக்டரை அங்கேயே அழைத்து காந்தியை காப்பற்றிய பதக் மியனுக்கு 24-ஏக்கர் நிலத்தை அரசு தானமாக வழங்க உத்தரவிட்டார்.

 

காந்திஜியை கொலை செய்த நாதுராம் கோட்சேயை நாடறியும். ஆனால் காந்திஜியை காப்பாற்றிய பதக் மியன் எனும் இந்த இஸ்லாமியரை இந்திய சுதந்திர வரலாற்றில் நாடு அறியாதவாறு மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

 

மூன்று தரப்பினர்

 

இந்தியாவிற்கு விடுதலை தர நினைத்த ஆங்கிலேயர்கள் மூன்று தரப்பினரை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.

 

1) காங்கிரஸ் தரப்பினர் 2) இஸ்லாமியர்கள் தரப்பினர் 3) நாட்டில் இருந்த 542 சமஸ்தானங்களின் தரப்பினர்.

 

1) காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்டவர் அபுல் கலாம் ஆசாத் அவர்கள். 2) முஸ்லிம்கள் சார்பாக கலந்து கொண்டவர் முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது அலீ ஜின்னா அவர்கள் 3) 542 சமஸ்தானங்களின் சார்பாக கலந்து கொண்டவர் பீகார் நவாப் அவர்கள்.

 

ஆக, இந்திய சுதந்திரம் குறித்து கலந்துரையாடல் செய்த மூவருமே முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வரலாற்று பிழை

 

முஸ்லிம்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் விடுதலை கிடைக்கும்வரை தனது மக்கள் தொகைக்கு மேலான அளவில் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார்கள். ஏனோ பலரது தியாகங்கள் வரலாற்றில் பொறிக்கப்படவில்லை. சில வரலாறுகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

“History of Freedom Struggle in India” என்ற நூலில் மாப்ளா புரட்சி பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. மாப்ளா கிளர்ச்சி ஒரு சுதந்திர போராட்ட கிளர்ச்சியே அல்ல. அது மதக்காழ்ப்புணர்ச்சி காரணமாக முஸ்லிம்கள் ஏற்படுத்திய கலவரம்என்று எழுதப்பட்டுள்ளது.

 

ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு எதிராக தென் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்ட மாப்ளாப் புரட்சிஎன்ற பிரபலமான முஸ்லிம்களின் சுதந்திரப் புரட்சியை அவதூறாக சித்தரித்து மாப்பிளாப் புரட்சி சுதந்திர புரட்சியல்ல. மத காழ்ப்புணர்ச்சியுடன் நடந்த முஸ்லிம்களின் கலவரம் என்று கொச்சைப்படுத்தி, தீரவரலாறு திரித்துக் கூறப்படுகிறது.

 

போர்த்துகீசியர்களுக்கு எதிராக அரபிக் கடலில் போராடி அவர்களை கிறங்கடித்த குஞ்சாலி மரைக்காயர்களின் வீர வரலாறு மறைக்கப்படுகிறது.

 

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருத துணைத் தலைவராக இருந்த டாக்டர், ஹரி பிரசாத் சாஸ்திரி எழுதிய ஒரு வரலாற்று நூலில், “திப்பு சுல்தான் 3000 பிராமணர்களை இஸ்லாத்தில் இணையப் வற்புறுத்தியபோது, அவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டார்கள்என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நூலைத்தான் அன்று ராஜஸ்தான், பிஹார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களில் பாடத்திட்டத்தில் வைத்திருந்தார்கள். வரலாற்றாசிரியராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் திப்பு சுல்தான் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தவராகவும் இருந்த பி.என்.பாண்டே இதை படித்த பிறகு அதிர்ந்துபோனார். இதற்கான ஆதாரம் என்னெவென்று டாக்டர், ஹரி பிரசாத் சாஸ்திரிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார். பல கடிதத்திற்கு பிறகு அவரிடம் இருந்து மைசூர் கெசட்டில் எடுத்தேன்என்று பதில் வந்தது. உடனே மைசூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பிஜேந்திர நாத் அவர்களுக்கு இந்தச் செய்தி உண்மைதானா, கெசட்டில் அப்படித்தான் இருக்கிறதாஎன்று கடிதம் எழுதி வினவினார். அவரும் ஆராய்ந்து அலசிவிட்டு இதுமாதிரி சம்பவம் எதுவும் கெசட்டில் இடம்பெறவில்லை என்று பதில் தருகிறார்.

 

இந்த ஆதாரங்களையெல்லாம் திரட்டிக்கொண்டு பல மாநிலங்களில் பாடத்திட்டத்தில் இருந்த அந்த பொய்யான வரலாற்று பிழையை நீக்க வைக்கிறார் பி.என்.பாண்டே. நூல்:- distortion of medivel in Indian history, Islam and Indian culture  பி.என். பாண்டே

 

இது, சில உதாரணங்கள்தான். இதுபோன்று எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திரம் குறித்து பிழையாக எழுதப்பட்டுள்ள நூல்களை அடையாளம் கண்டு அது குறித்து மக்களை விழிப்புணர்வு பெறச் செய்து, உண்மையான சுதந்திர வரலாறு நூல்களை படித்து, பரப்ப வேண்டும்.

 

சுதந்திரம் குறித்து உண்மைத்தன்மையுடன், நடுநிலையுடன் எழுதப்பட்டுள்ள விடுதலை போரில் தமிழக முஸ்லிம்கள், வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள், முதல் சுதந்திர போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர், இந்திய விடுதலை போராட்ட வீரர்கள், தியாகச் சுடர் திப்பு சுல்தான், திப்பு விடுதலை போரின் முன்னோடி, இந்திய விடுதலைப்போரில் இஸ்லாமியரின் பங்கு, சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகங்கள், கான்சாகிப் மருதநாயகம், தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு, தியாகத்தின் நிறம் பச்சை, இஸ்லாம் பரவிய வரலாறுஆகிய எத்தனையோ நூல்களை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

 

இவையெல்லாம் முஸ்லிம்களின் தியாகத்தை, மறைக்கப்பட்ட வரலாற்றினை வெளிக்கொணர்ந்துள்ளது. அவற்றை தேடிப்பிடித்து முஸ்லிம்களின் வீரமிகு வரலாற்றையும், இந்திய தேசத்திற்கு அவர்கள் செய்த தியாகத்தையும்  பலர் அறியும்படி பரப்புவதில் கவனம் எடுக்க வேண்டும்.

 

இந்திய சுதந்திரத்திற்காக உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்பதற்கான அழிக்க முடியாத ஆதாரங்கள் டில்லி விடுதலைத் தியாகிகள் நினைவகத்திலும், பஞ்சாப் ஜாலியன் வாலாபாக்கிலும், வேலூர் சிப்பாய்க்கோட்டையிலும் ஏராளமாகக் கொட்டிக்கிடைக்கின்றன. வளங்களைக் கொட்டி இறைத்ததைச் சுட்டிக்காட்டி, யாசகம் கோர விழையும் இனத்தினரல்லர் முஸ்லிம்கள். அது உண்மையான கொடையாளிகளின் குணமுமல்ல.

 

முஸ்லிம்களை "வெளிநாட்டினர்" என வசைபாடுபவர்களே உதாசீனத்துக்கு உரியவர்கள். தேசத்தின் உரிமையாளர்கள் மீது சேற்றை வாரி வீசுபவர்கள், பிழைப்புக்காக அப்படிச் செய்கிறார்கள் என்பதை உலகம் உணரும்.

 

எனவே, உண்மையான வரலாற்றை திரும்பத் திரும்ப கூறியும் எழுதியும் மக்கள் மனதில் பொது படிந்துள்ள தவறான கருத்துக்களை களைய வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

 

இன்றைய அவலநிலை

 

ஒவ்வொரு இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள். கல்லூரிகள். பல்கலைக்கழகங்கள். அரபி மதரசாக்கள். மக்தப் மதரசாக்கள். இவைகளில் உண்மையான சுதந்திர போராட்ட வரலாற்று நூல்களை பாடப்புத்தகமாக வைக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே வரலாற்றை காபாற்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லமுடியும்.

 

முஸ்லிம்களின் தியாகங்களின்றி இந்திய சுதந்திர வரலாற்றை கட்டியெழுப்ப முடியாது. நாட்டை ஆங்கிலேயர்களிடமிருருந்து பாதுகாத்த முஸ்லிம்களின் இன்றைய நிலை பரிதாபமானது. முஸ்லிம்களுக்கு இந்தியாவில் உரிமை கொண்டாட எதுவும் இல்லை என்ற மாயையை திணிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் தியாக வரலாறுகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது; மறுக்கப்படுகிறது. அவர்களின் தியாக நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்படுகிறது.

 

தியாகச் செம்மல்களான முஸ்லிம்களின் பெயர் தாங்கிய தெருக்கள், சாலைகளின் பெயர்கள் இரவோடு இரவாக மாற்றியமைக்கப்படுகிறது. வரலாறுகள் திருத்தம் செய்யப்பட்டு, பள்ளிப் பாடங்களில் சுதந்திர வரலாறு பயிற்றுவிக்கப்படும்போதுகூட முஸ்லிம்கள் பெயர்கள் எதுவும் வருவதில்லை.

 

இந்நாட்டின் விடுதலைக்காக இஸ்லாமியர்கள், தங்களின் உயிர்,பொருள், உடமைகள் அனைத்தையும் அர்ப்பணித்தார்கள். தங்களின் விகிதாச்சாரத்தை விட அதிகமாக  இந்நாட்டிற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். அன்று முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்திற்கு வராமல் இருந்திருந்தால். இன்றுவரை இந்தியா ஆங்கிலேயர்களிடமே அடிமைபட்டுக்கிடந்திருக்கும்.

 

இந்திய சுதந்திரத்திற்காக போராடிய முஸ்லிம்களின் வரலாறு புனிதமானது என்பதை மனிதநேயம் உள்ளவர்கள் விளங்கிக்கொள்வார்கள்.

 

இந்திய சுதந்திரத்திற்காக மனத்தூய்மையுடன் போராடிய முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்!

 

(இதிலுள்ள பல தகவல்கள் வலைத்தளத்தில் வாசித்தவையே.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

2 comments:

  1. மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஹழ்ரத் அதி அற்புதமான தொகுப்பு

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் பாரகல்லாஹ்,

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...