ஆடைகளை அழகாக்குவோம்
يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ
لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا
ஆதமுடைய மக்களே! உங்களுடைய மானத்தை மறைக்கக் கூடியதும் உங்களை அலங்கரிக்கக் கூடியதுமான
ஆடைகளை நிச்சயமாக நாம் உங்களுக்கு அருள் புரிந்திருக்கின்றோம். திருக்குர்ஆன்:- 7:26
ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள். மனிதர்களையும் மிருகங்களையும் வேறுபடுத்தி
காட்டுவது ஆடைகள் தாம். மனிதனைத் தவிர வேற எந்த படைப்பினமும் ஆடைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
மனிதனுக்கு உணவிற்கு அடுத்து ஆடையே பிரதான தேவையாகும். உடலையும் மறைக்கவும் வெயில்
மற்றும் குளிரிலிருந்து காக்கவும் ஆடை அவசியம். ஆடை ஒருவரது இயல்பை வெளிப்படுத்தும்
அடையாளம் எனலாம். அதனால் தான், ஆடை அலங்காரத்திலும்
இஸ்லாம் கவனம் செலுத்துகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களிடம் நீங்கள் செல்லும்போது உங்களின் வாகனம் உங்களின் ஆடைகளை சரியாக்கி கொள்ளுங்கள். ஏனெனில், மக்களிடம் உங்களைப் பற்றி அருவெறுப்பு ஏற்படாமல் இருக்கும்.
அருவெறுப்புகளை செய்யவோ, செய்யப்படவோ அல்லாஹ்
விரும்புவதில்லை.
தன்னிடம் உள்ளவற்றை கொண்டே அழகுபடுத்திக் கொள்ள வேண்டும். தன் சக்திக்கு அப்பாற்பட்டு
கடன் வாங்கியோ அல்லது அடுத்தவருடைய பொருளை அபகரித்தோ அல்லது தடுக்கப்பட்ட வழிகளில்
சம்பாதித்தோ தன்னை அழகுபடுத்தக் கூடாது. தம்மையும் வாகனங்களையும் வீடுகளையும் அழகு
படுத்துவதற்கு வீண்விரயம் செய்யலாகாது. அல்லாஹ் வீண்விரயத்தை விரும்புவதில்லை. வெறுக்கிறான்
என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
வசதிக்கேற்ப
அபூ அஹ்வஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் பழைய மட்டமான ஆடை (அணிந்த நிலை)யில்
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபியவர்கள், ( أَلَكَ مَالٌ ) "உம்மிடம் செல்வம் உண்டா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்று பதிலளித்தேன்.
நபியவர்கள், ( مِنْ أَىِّ الْمَالِ ) "எந்த வகையான செல்வம் இருக்கிறது?" என்று கேட்டார்கள்.
நான் "ஒட்டகம், ஆடு, குதிரை, அடிமை ஆகியவை அல்லாஹ் எனக்குக் கொடுத்துள்ளான்" என்று கூறினேன்.
அப்போது நபியவர்கள், ( فَإِذَا أَتَاكَ اللَّهُ مَالاً فَلْيُرَ أَثَرُ نِعْمَةِ
اللَّهِ عَلَيْكَ وَكَرَامَتِهِ ) "அல்லாஹ் உமக்குச் செல்வத்தை வழங்கினால், அல்லாஹ் உமக்குப் புரிந்திருக்கிற அருட்கொடை, அவன் (உனக்கு வழங்கி இருக்கும்) கண்ணியம் ஆகியவற்றின்
வெளிப்பாடு உன் மீது தென்படட்டும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3541, நசாயீ-5128, முஸ்னது அஹ்மத்
மனிதர்கள் தங்கள் வசதிக்கேற்ப சிறந்த ஆடைகளை அணிய வேண்டும். இதில் கருமித்தனம்
கூடாது. அல்லாஹ் நமக்கு தந்துள்ள அருட்கொடைகளை வெளிப்படுத்தி காட்டுவதின் மூலம் அல்லாஹ்
மகிழ்ச்சி கொள்கிறான்.
ஜனாதிபதியாக இருந்த உமர் (ரலி) அவர்கள் ஒட்டு போட்ட ஆடை அணியவில்லையா? உயர்தரமான ஆடைகளை தான் அணிந்தார்களா? என்று கருமித்தனம் செய்வோர் கேள்வி கேட்கலாம். உமர்
(ரலி) அவர்களோ சந்தர்ப்பத்திற்கேற்ப ஆடை அணியவில்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
தொழுகையில்
ஆதமுடைய மக்களே! தொழும் போதெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
திருக்குர்ஆன்:- 7:31
பேரறிஞர் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நபித்தோழர் தமீமுத்தாரீ
(ரலி) அவர்கள் ஆயிரம் வெள்ளிக்காசுகள் கொடுத்து மேலங்கி ஒன்றை வாங்கி அதை அணிந்து தொழுது
வந்தார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்அஃராப் வசனம்-31
மார்க்கத்தில் தடுக்கப்படாத ஆடைகளில் விலை உயர்ந்த ஆடைகளை பேரறிஞர் இமாம் அபூஹனீஃபா
(ரஹ்) அவர்கள் அணிந்திருந்தார்கள். ஆனால், இப்படி அணிவதை தொழுகையில் மட்டும் வழக்கமாக்கி இருந்தார்கள்.
அல்லாஹ்வின் சன்னிதானத்தில் அழகிய கம்பீர ஆடையில் இருக்க வேண்டும் என்பதே அதன்
நோக்கமாகும். இவர்களின் ஆடை உயர்ந்த தோற்றத்தில் இருந்தாலும் உள்ளம் பணிவை மேற்கொண்டு
இருக்கும்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது உயர் ரக ஆடை அணிந்துகொள்வதும்,
தொழுகைக்கு வரும்போது மட்டும் பனியனுடனோ அல்லது
மட்ட ரகமான, சாதாரண ஆடை, கிழிந்த ஆடை இவைகளை
அணிந்து வருவதும் இன்று சாதாரணமாகிவிட்டது. காரணம், இறைவணக்கத்தில் ஈடுபட வரும் போது ஆடை விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை.
சராசரியான நேரங்களில் எந்த ஆடையோடு வெளியே செல்ல மாட்டோமோ, அந்த ஆடையை அணிந்து தொழுவது (மக்ரூஹ் எனும்) வெறுக்கத்தக்க செயல்
என்பது மார்க்கச் சட்டமாகும்.
ஆடம்பத்திற்காக
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ أَلْبَسَهُ
اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ثَوْبًا مِثْلَهُ ) பேருக்காகவும் புகழுக்காகவும் வேண்டி எவர் (ஆடம்பர)
ஆடைகளை அணிகிறாரோ அவருக்கு இறைவன் மறுமைநாளில் இழிவுக்குரிய ஆடைகளை அணிவிப்பான். அறிவிப்பாளர்:-
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3511
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( بَيْنَمَا رَجُلٌ يَمْشِي قَدْ
أَعْجَبَتْهُ جُمَّتُهُ وَبُرْدَاهُ إِذْ خُسِفَ بِهِ الأَرْضُ فَهُوَ
يَتَجَلْجَلُ فِي الأَرْضِ حَتَّى تَقُومَ السَّاعَةُ ) (முற்காலத்தில்) ஒரு
மனிதன் தற்பெருமை கொண்டவனாக தன் ஆடைகளை அணிந்து கர்வத்தோடு நடந்து சென்று கொண்டிருந்தான்.
திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன், மறுமைநாள் நிகழும் வரை அவ்வாறே பூமிக்குள் குலுங்கியபடியே
அழுந்திச் சென்று கொண்டே இருப்பான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-
முஸ்லிம்-4240
ஆள் பாதி, ஆடை பாதி என்பர்.
ஆடை ஆளுமையை மேம்படுத்தும். ஆடைகள் மானத்தை மறைத்து மனிதனை கண்ணியப்படுத்த வேண்டுமே
தவிர, படோடாபத்தையும் கர்வத்தையும்
பறைசாற்றுவதாக இருக்கக்கூடாது. ஆடை விஷயத்தில் மட்டும்தான் கர்வம் கொள்ளக்கூடாது என்பதில்லை.
மற்ற எந்த விஷயத்திலும் கர்வம் கூடாது. ஏனெனில், மனிதர்கள் கர்வம் மற்றும் தற்பெருமை கொள்வதை இறைவன் விரும்புவதில்லை.
ஏதேனும் சில நேரத்தில்
அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَنْ جَرَّ ثَوْبَهُ خُيَلاَءَ لَمْ يَنْظُرِ
اللَّهُ إِلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ ) “எவன் தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி
கீழே தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமைநாளில் ஏறிட்டும்
பார்க்கமாட்டான்” என்று கூறினார்கள்.
உடனே, (மெலிந்த உடல்வாகு
கொண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், ( إِنَّ أَحَدَ شِقَّىْ ثَوْبِي يَسْتَرْخِي إِلاَّ
أَنْ أَتَعَاهَدَ ذَلِكَ مِنْهُ ) “நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம்
கீழே தொங்கிவிடுகின்றது” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட நபியவர்கள், ( إِنَّكَ لَسْتَ تَصْنَعُ ذَلِكَ خُيَلاَءَ
) “நீங்கள் அதைத் தற்பெருமைக்காகச்
செய்வதில்லையே” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-3665
எவரேனும் எனது ஆடை கரண்டை காலுக்கு கீழே தொங்குவது பெருமையினால் அல்ல என்று கூறி
தம்மைத்தானே பரிசுத்தவானாகக் கூறிக் கொண்டாலும் அதை ஏற்க தகுந்ததுல்ல. ஏனெனில்,
பெருமையுடன் தொங்கவிடுபவருக்கு மட்டுமே தண்டனை என
மார்க்கத்தில் வரையறுக்கப்படவில்லை.
ஒரு நல்ல மனிதர் ஏதேனும் சில நேரத்தில் கவனமின்மையால் அல்லது ஏதேனும் நோயின் காரணமாக
அவரது ஆடை கரண்டைக் காலுக்கு கீழே இறங்கிவிட்டால் அதை அல்லாஹ் மன்னிக்கக்கூடும். ஆனால்,
அது தொடர்படியாக நிகழக்கூடாது.
ஆடை கரண்டைக் காலுக்கு கீழே தொங்குவதின் மூலம் வீதியில் கிடக்கின்ற அசுத்தங்கள்
அணிந்துள்ள ஆடையில் தொற்றிக் கொள்வதினால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மேலும், மனிதன் அத்தகைய அசுத்த
ஆடைகளுடன் இறை இல்லதிற்குள் செல்வதினால் இறை இல்லத்தையும் அசுத்தப்படுத்திவிடுகிறான்.
ஆகையால், கரண்டைக் காலுக்கு கீழே ஆடை
தொங்க விடக்கூடாது. மேலும், முட்டுக்காலுக்கு
மேல் கீழாடையை மடித்து கட்டிக் கொள்வதற்கும் மார்க்கம் தடை விதித்துள்ளது. ஏனெனில்,
மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளியே தெரிவதால்
இஸ்லாத்தின் சட்டத்தை ஒழுங்காக பேணாதவர் என்ற குற்றத்திற்கு ஆளாக வேண்டியது வரும்.
எனவே, இவ்வாறான தவறுகள் ஏற்படாதவாறு
நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும்.
நிறங்களின் குணங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْبَسُوا الْبَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ
وَأَطْيَبُ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ) நீங்கள் வெண்ணிற ஆடை அணியுங்கள். ஏனெனில், அது தூய்மையானதும் அழகானதும் ஆகும். உங்களில் இறந்துவிட்டவர்களுக்கு வெண்ணிறத்திலேயே
சவக்கோடி (கஃபன்) அணிவியுங்கள். அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள்
நூல்:- திர்மிதீ-2731
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பல வண்ணங்கள்
உள்ள ஒரு ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள்.
நபியவர்கள் தொழுகையை முடித்த பின்பு ( اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي
جَهْمٍ وَائْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي
آنِفًا عَنْ صَلاَتِي ) “என்னுடைய
இந்த ஆடையை கொண்டுபோய் அபூஜஹம் என்ற தோழரிடம் கொடுத்துவிட்டு அவருடைய (வண்ணங்கள் இல்லாத)
ஆடையை கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன் எனது தொழுகையைவிட்டு என்
கவனத்தை திருப்பிவிட்டது” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-373, முஸ்லிம்-963
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வண்ணங்களில் ஆடை அணிந்திருந்தாலும் அவர்களுக்கு
பிடித்தமானது வெண்ணிற ஆடை தான். இதையே அணியும் படி பிறருக்கும் வலியுறுத்தியுள்ளார்கள்.
நிறங்கள் மனதை விருப்பு - வெறுப்பு அடையச் செய்கிறது என்பதை பற்றி நபியவர்கள் கூறியவற்றை
பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலத்தில் மருத்துவ நிபுணர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
கவனம் சிதறாமல் இருக்க வெண்ணிற ஆடையை நபியவர்கள் அணிந்து தொழுதார்கள். வெண்மை நிறம்
ஒளியை பிரதிபலிப்பதில்லை. கவனம் சிதறாது. அமைதியின் நிறம் வெண்மை. தொழுகைக்கு மிகவும்
ஏற்றமான நிறமாக கருதப்படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட தினத்தன்று தம் மீது
கருப்பு நிற தலைப்பாகை அணிந்த நிலையில் மக்காவில் நுழைந்தார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர்
(ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2638, நஸாயீ-5347
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் காலை பொழுதில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கருப்பு நிற கம்பளியாடை
அணிந்து வெளியே புறப்பட்டார்கள். நூல்:- திர்மிதீ-2734
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. பர்தாவுடைய வசனம் (24:31) இறங்கிய பிறகு அன்சாரி
பெண்கள் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டனர். ( كَأَنَّ عَلَى رُءُوسهنَّ الْغِرْبَان ) "அவர்களின் தலையின் மீது (கருநிற முக்காடுகள்
இருந்ததால்) காகங்கள் இருப்பதைப் போன்று இருந்தது". நூல்:- அபூதாவூத்-4101, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர்
கருப்பு நிற ஆடையை சிலர் பீடையாகவும் துர்குறியின் அடையாளமாகவும் நினைக்கிறார்கள்.
இதற்கு இஸ்லாத்தில் எந்த சான்றும் இல்லை. இன்னும் சொல்வதென்றால் கருப்பு நிற ஆடைகளை
நபியவர்கள் அணிந்துள்ளார்கள்.
அபூரிம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் என் தந்தையுடன் பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபியவர்கள் இரண்டு பச்சை நிற சால்வைகளை (கீழாடையாகவும்,
மேலாடையாகவும்) அணிந்திருந்ததை நான் கண்டேன். நூல்:-
அபூதாவூத்-3543, திர்மிதீ-2737 நசாயீ-1554, முஸ்னது அஹ்மத்
சொர்க்கவாசிகளுக்கு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும் என திருக்குர்ஆன் (76:21)
கூறுகிறது. எனவே தான் அறிஞர் இப்னு பத்தால் (ரஹ்)
அவர்கள் "பச்சை நிற ஆடைகள் சொர்க்கத்தின் ஆடையாகும்" என்று கூறியுள்ளார்கள்.
நூல்:- ஃபத்ஹுல் பாரீ
இயற்கை நிறம் பச்சை. பச்சை நிறம் ஒருவருக்கு பிடித்தால், அவர் ஆற்றல் மிக்கவர் என்று தெரிந்து கொள்ளலாம்
என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பச்சை நிறம் துன்பத்தை போக்கி உற்சாகமூட்ட வல்லது. அலுவலக
அறை, படிக்கும் அறைகளுக்கு பச்சை
நிறம் உகந்தவை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனாலேயே நூலகங்கள் சட்ட நிபுணர்களின்
அலுவலக அறைகள் போன்றவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்கின்றன.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது சிவப்பு நிறமுடைய இரு ஆடைகளை அணிந்த ஒருவர் அருமை
நாயகம் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றார். அப்போது அவர் நபியவர்களுக்கு முகமன் (சலாம்)
கூறினார். ஆனால், நபியவர்கள் அவருக்கு
பதில் முகமன் (சலாம்) கூறவில்லை. நூல்:- அபூதாவூத்-3547, திர்மிதீ-2731
ஆண்கள் சிவப்பு நிற ஆடைகள் அணிவதை நபியவர்கள் விரும்பவில்லை. வெறுப்பை வெளிப்படுத்துவதற்காகவே
அந்தத் தோழரின் சலாத்திற்கு நபியவர்கள் பதில் கூறவில்லை என்று தெரிய வருகிறது.
சிவப்பு நிறம் ஒருவருக்கு பிடித்தால் அவர் தீவிர போக்கு உடையவர் என்று அறியலாம்.
சிவப்பு நிறம் நமது இதயத்துடிப்பையும் மூச்சு விடுதலையும் அதிகப்படுத்துகிறது. திசுக்களை
சூடாக்குகிறது. உடல் வெப்பநிலையை உயர்த்துகிறது. ஹார்மோன் செயல்பாட்டையும் பாலுணர்வையும்
ஊக்குவிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் செம்மஞ்சள் நிறச்சாயம்
இடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள்,
( أَأُمُّكَ
أَمَرَتْكَ بِهَذَا ) "உன் தாயாரா இவ்வாறு (செம்மஞ்சள் நிற சாயமிட்டு அணியுமாறு)
உமக்கு கட்டளையிட்டார்?" என்று கேட்டார்கள்.
நான், "அவ்விரண்டையும் கழுவி
செம்மஞ்சள் நிற சாயத்தை அகற்றிக் கொள்கிறேன்" என்றேன். நபியவர்கள், ( بَلْ أَحْرِقْهُمَا ) "இல்லை, அவ்விரண்டையும் எரித்து விடு" என்று கூறினார்கள்.
நூல்:- முஸ்லிம்-4219
சுருங்கக் கூறின்: சிவப்பு, மஞ்சள் நிறங்கள் சூடான
நிறங்களாகும். அவை நம்மை உஷ்ணப்படுத்துகின்றன. அவற்றை தவிர்ந்து கொள்வது மிகவும் நல்லதாகும்.
ஜுப்பா சுன்னத்தா?
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اتَّقُوا الْحَدِيثَ عَنِّي إِلاَّ مَا
عَلِمْتُمْ فَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ
النَّارِ ) என்னிடமிருந்து
நீங்கள் தெரிந்து கொண்டதைத் தவிர (தெரியாத வேறு எதையும்) நபிமொழி என்று அறிவிப்பதை
தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆகவே, என் மீது யார் வேண்டுமென்றே
(நபிமொழி அல்லாததை நபிமொழி என்று இட்டுக்கட்டி) பொய் கூறுவாரோ, அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2868
நம் நாட்டில், இரு பக்கவாட்டில்
கிழித்து தைத்து, இரு பக்கம் அல்லது
ஒரு பக்கம் பாக்கெட் வைத்து, முழங்காலுக்கு சற்று
மேல் அல்லது சற்று கீழ் வரை தைத்து, கைகளை தளர்த்தி தைத்து அணிவது தான் "ஜுப்பா" எனப்படும்.
நாம் "ஜுப்பா" என்று சொல்லிக்கொண்டு அணியும் ஆடை (நபிவழி எனும்) சுன்னத்
என்று சொல்வது தவறாகும். அவ்வாறு சொல்லிக் கொள்பவர்கள் மேற்காணும் நபிமொழியை நினைவில்
கொள்ளட்டும்.
நபிமொழிகளில் இடம்பெறும் "ஜுப்பா" என்ற சொல், நமது நடைமுறையில் அணியும் ஜுப்பாவை குறிக்காது. நபியவர்களின்
ஆடைகளைப் பற்றி வரும் நபிமொழிகளை கூர்ந்து படித்தால் புரிந்துவிடும்.
நிர்வாண கோலத்தைப்போல்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அப்போது அஸ்மா (ரலி) அவர்கள் மெல்லிய ஆடையை அணிந்திருந்ததால்
நபியவர்கள் அஸ்மாவை பார்க்காமல் முகம் திருப்பிக்கொண்டார்கள்.
பிறகு நபியவர்கள், ( يَا أَسْمَاءُ إِنَّ الْمَرْأَةَ إِذَا بَلَغَتِ الْمَحِيضَ
لَمْ تَصْلُحْ أَنْ يُرَى مِنْهَا إِلاَّ هَذَا وَهَذَا " . وَأَشَارَ
إِلَى وَجْهِهِ وَكَفَّيْهِ ) "அஸ்மா! ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால்,
அவளிடமிருந்து இன்ன இன்ன உறுப்புகளைத் தவிர (மற்றவை)
பார்க்கப்படுவது சரியல்ல" என்று கூறினார்கள். நபியவர்கள், இன்ன இன்ன உறுப்பு என்று சொல்லும்போது தமது முகத்தையும்,
தம் முன் கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். நூல்:-
அபூதாவூத்-3580
இன்றைய இஸ்லாமிய எதிரிகள் தங்களுடைய அநாகரீகக் கலாச்சார ஆடைகளை நம்மிடையே புகுத்திவிட்டனர்.
அவர்களால் திணிக்கப்பட்ட இந்த ஆடைகள் பெண்ணின் மறைக்க வேண்டிய பகுதிகளையும் மறைக்காத
வகையில் குட்டையாகவோ அல்லது உடல் பகுதியில் தெரிகிற வகையில் மிக மெல்லியதாகவோ உடம்போடு
உடம்பாக ஒட்டிக்கொண்டே இருக்கின்றன. அலங்கோல ஆடைகளை அலங்காரமாக எண்ணிக் கொள்கின்றனர்.
இன்று அநாகரீகம் வளர்பிறையானதால் ஆடைகள் தேய்பிறையானது.
நிர்வாணத்தை மறைத்து மானத்தை காப்பது தான் ஆடையின் பிரதான நோக்கம். கவர்ச்சியான
ஆடைகளில் சேலையும் ஒன்றாகும். சேலை அணிவதின் மூலம் கழுத்து, வயிறு, முதுகு, இடுப்பின் சில பகுதி போன்ற மறைக்க வேண்டிய சில பகுதிகள்
வெளியே தெரிகிறது. பெண்கள் தங்களுக்குள்ளோ தந்தை, சகோதரன் போன்ற மணமுடிக்க அனுமதியில்லாத ஆண்களுக்கு மத்தியிலோ
கூட உடல் முழுவதையும் மறைக்காத சேலை போன்ற ஆடைகளை அணியக்கூடாது. மேலாடை இன்றி பெண்களெல்லாம்
பேண்ட், டீ சர்ட் போன்ற ஆண்களுக்குரிய ஆடைகளை அணிவதும், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்தாலும் மார்பகங்கள்
மீது துப்பட்டாக்களை அணியாமல் வெறுமென உலா வருவது இன்றைய நாகரீகமாக ஆகிவிட்டது
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ
النِّسَاءِ بِالرِّجَالِ ) அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல் (ஆடை விஷயத்தில்) ஒப்பாகுபவர்களையும் பெண்களில் ஆண்களைப்
போல் (ஆடை விஷயத்தில்) ஒப்பாகுபவர்களையும் சபித்தார்கள். நூல்:- புகாரீ-5885,
அபூதாவூத்-3574
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( صِنْفَانِ
مِنْ أَهْلِ النَّارِ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ لاَ
يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ
مَسِيرَةِ كَذَا وَكَذَا ) இரு பிரிவினர் நரகவாசிகளில்
அடங்குவர். (அவர்களில் ஒரு பிரிவினர்) மெல்லிய உடையணிந்து, (அது அவர்களை மறைக்காதபடி) நிர்வாணமாக காட்சியளித்து, தம் தோள்களைச் சாய்த்து
(கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய
பெண்கள் ஆவர். இவர்கள் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள். (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின்
நறுமணமும் இவ்வளவு இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே கமழ்ந்துகொண்டிருக்கும். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4316
இந்த நபிமொழியை கண்டு கொள்ளாமல் நபியவர்களின் சாபத்திற்குரிய ஆடைகளை பெண்கள் அணிந்து
கொள்வதற்கு பெற்றோர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்? நவநாகரீக நங்கையர் ஆண்களைப் போன்று ஆடை அணிந்து, பெண்மையின் தனித்தன்மையை இழந்து ஞானத்தை நட்டாற்றில்
விட்டு விடுகின்றனர்.
இஸ்லாம் கூறும் ஆடைகளே பெண்களுக்கு அழகு தரும்போது, நாகரீகம் என்ற பெயரால் அலங்கோல
ஆடைகளை அலங்கார ஆடைகளாகக் கருதும்போதுதான் வாழ்க்கையும் அலங்கோலமாக ஆகிவிடுகிறது.
அநாகரீக செயல்
நாகரீகம் என்ற பெயரில் பிறரை வசீகரிக்க கவர்ச்சிகரமான ஆடைகள், அரை நிர்வாண ஆடைகள் அரங்கேறுகின்றன
என்பதுதான் பரிதாபத்திற்குரிய விஷயம். மேனி தெரியும் வண்ணம் மெல்லிய ஆடைகளை அணிவது
மிகவும் குற்றமாகும். அங்கங்களை எடுத்துக்காட்டுவது போல் இறுக்கமான ஆடை அணிவதை இஸ்லாம்
வெறுக்கிறது.
உடலைப் பற்றி பிடிக்கும் ஆடை அணிந்தால், இரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கப்பட்டு, உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படும்.
இறுக்கமான ஆடைகள் மூலம் உடல் அழகு வெளியே தெரிந்து காமக் கிளர்ச்சியை தூண்டுவதற்கு
காரணமாகிவிடுகிறது. பெண்களுக்கெதிரான வன்புணர்வுக்கு, பெண்கள் அணியும் ஆடையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
மேலும், இறுக்கமான ஆடை அணிவதின்
விளைவாக சொறி சிரங்கு, சரும நமச்சல்,
கால்களில் சரும வெடிப்புகள் மற்றும் பலவித நோய்களும்
உண்டாக்குகின்றன என்று அமெரிக்க நாட்டின் மருத்துவ நிபுணர் "லிண்டா ஆலன்"
என்பவர் கூறுகிறார். உடலைப் பற்றி பிடிக்காதபடி தளர்ந்திருக்கும் ஆடை அணிதலை ஆரோக்கியமாகும்.
சினிமா நடிகை நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள்,
அரசியல் பிரமுகர்கள் ஆகியோரின் உருவங்கள் மற்றும்
மிருகங்கள், பறவைகளின் உருவங்கள்
பொரித்த ஆடைகள், கொச்சை வார்த்தைகள்
எழுதப்பட்ட ஆடைகள் இஸ்லாமிய சமூகத்தினர்களால் பரவலாக அணியப்படுகின்றன. இதைத் தவறாகக்கூட
கருதுவதில்லை. இவை அனைத்தும் அந்நியர்களால் புகுத்தப்பட்ட சீர்கேடுகள் என்பது நினைவிருக்கட்டும்.
இவைகளை நாம் முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும்.
நாட்டுக்கு நாடு ஆடை கலாச்சாரம் வேறுபட்டாலும் எந்நாட்டவரும் போற்றும் மானத்தை
மறைக்கும் முழுமையான ஆடைகள் தான் மதிப்பையும் மரியாதையும் தரவல்லது என்பதை நினைவில்
கொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் கண்ணியமான ஆடைகளை அணிவதின் அல்லாஹுத்தஆலாவின் அன்பைப்
பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:
9840535951
No comments:
Post a Comment