Search This Blog

Friday, 22 July 2022

கசப்பு மருந்து

கசப்பு மருந்து

 

قال الله تعالي : يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ‌

قال رسول الله صلي الله عليه وسلم : أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ

 

மணவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள கணவன் மனைவிக்கு இடையிலுள்ள உறவு என்பது மிகவும் மகிழ்ச்சிகரமானதாகும். அந்த உறவு உலகத்தையும் தாண்டி, சொர்க்கத்திலும் நீடிக்கக் கூடியது. அந்த உயர்ந்த உறவின் உண்மை தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் மணமுடித்த ஒருசில மாதங்களிலேயோ, ஒருசில வருடங்களிலேயோ தங்களின் திருமண உறவை முறித்துக் கொள்வது இன்று மலிந்து வருகிறது.

 

இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சிறுசிறு சண்டை சச்சரவுகள், மனப்பூசல்கள் எல்லாம் வாழ்க்கையின் யதார்த்தம் ஆகும் என்றும்பிரச்சினையின்போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதன் மூலம் எல்லையில்லா இன்பங்களைக் காணலாம் என்றும் திருமணத்திற்கு தயாராக உள்ளவர்களுக்கும், புதுத் தம்பதிகளுக்கும் போதிக்கப்பட வேண்டும்.

 

மேலும் தம்பதிகளுக்கு இடையிலுள்ள உறவு கசந்து நிம்மதியற்றுப் போனால் கணவன் மனைவி மட்டுமல்ல, இருவரது குடும்பத்தினரும் கூட மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவார்கள். கடைசியில் இந்த பிரச்சினையின் முடிவு, பல நேரங்களில் கொலை மற்றும் தற்கொலையில் போய் முடிந்துவிடும் என்று அவர்களுக்கு எச்சரிக்க வேண்டும்.

 

குறிப்பாக, அவர்களுக்கு இஸ்லாம் கூறும் தலாக் எனும் மணவிலக்குப் பற்றிய மார்க்க சட்டங்களைப் பற்றியும் போதிக்கப்பட வேண்டும். காரணம் அவர்கள் தலாக்கைப் பற்றி சாதாரணமாக எண்ணி  விடக்கூடாது. மேலும் சமுதாய அக்கறை கொண்ட ஜமாஅத் நிர்வாகிகள், இயக்கத் தலைவர்கள் ஆகியோர் தலாக் உடைய சட்டங்களை தாங்களும் முழுமையாக அறிந்து பிறருக்கும் அதன்படி வழி காட்ட வேண்டும்.

 

திருமண நிகழ்ச்சிகளில் தலாக்கைப் பற்றிப் பேசினால் அது அபசகுணம் என்று முகம் சுளிக்கின்றனர் இது தவறாகும். திருமணச் சபையில் தலாக்கைப் பற்றிப் பேசி, தலாக் என்பது எவ்வளவு பாரதூரமான செயல் என்று புதுமாப்பிள்ளைக்கும், அந்த சபையில் இருப்பவர்களுக்கும் புரிய வைக்கவேண்டும்.

 

يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ‌

நபியே (மக்களிடம் கூறுக!) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர்களானால் அவர்களுடைய இத்தாவிற்கேற்ற (காத்திருப்புக் காலத்திற்கேற்ற) நேரத்தில் மணவிலக்கு அளித்து இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள்.   திருக்குர்ஆன்:-65:1

 

அறியாமைக் காலப் பழக்கம்

 

உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அறியாமைக் காலத்தில் ஆண்கள் தங்கள் மனைவியரை நூற்றுக்கும் மேற்பட்ட முறை தலாக் சொல்லுவார்கள். அதாவது முதலில் தலாக் சொல்லிவிட்டு இத்தா முடிவதற்குள் முன்பே மீட்டிக்கொள்வார்கள். பிறகு மீண்டும் தலாக் சொல்லுவார்கள். மீண்டும் இத்தா முடியும்முன் மீட்டிக்கொள்வார்கள். இப்படியே செய்து கொண்டிருப்பார்கள்.

 

கணவன் என்கிற முறையில் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றாமல் திருமண பந்தத்தையும் முறிக்காமல் இரண்டுங்கெட்டான் நிலையில் மனைவியை தவிக்கவிட்டு வந்தார்கள். இந்த அவல நிலையைப் பற்றி சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொல்லிக் கவலைப்பட்டார்கள்.

 

அன்னையவர்கள் இதை அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது, அண்ணலார் இது தொடர்பாக அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்து அமைதியாக இருந்தார்கள். இதன் காரணமாக கீழ் காணும் திருவசனம் (2:229) அருளப்பட்டது.     நூல்:-திர்மிதீ-1113, பைஹகீ

 

(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரு தடவையாகும். பின்னர் முறைப்படி (மனைவியைத்) தடுத்து வைத்துக் கொள்ளலாம். அல்லது (மூன்றாவது முறையாக தலாக் கூறி) நல்ல முறையில் விட்டுவிடலாம்.       திருக்குர்ஆன்:- 2:229

 

அறியாமைக் காலத்தில் ஒரு கணவன் தன் மனைவியை "என் தாயின் முகம் போன்று உன் முகம் என்றும், என் தாயின் முதுகு போன்று உன் முதுகு" என்றும் மனைவியை தாயுடன் ஒப்பிட்டு பேசினால் இதனை "ளிஹார்" என்று கூறுவார்கள். இதுவும் அன்று தலாக்காகவே கருதப்பட்டிருந்தது.

 

கவ்லா பின்த் சஃலபா (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! என் கணவர் (அவ்ஸ் பின் அஸ்ஸாமித்) என் செல்வங்களை எல்லாம் சாப்பிட்டுவிட்டார். என் இளமையை அழித்து விட்டார். என் மூலம் நிறைய குழந்தைகளைப் பெற்றுவிட்டார். எல்லாம் முடிந்து எனக்கு வயது அதிகமாகி குழந்தை பெற முடியாத நிலை ஏற்பட்டபோது என்னை "ளிஹார்" செய்துவிட்டார். (இதுவே என் பரிதாப நிலையாகும்) என்று முறையிட்டார். இந்த சட்டத்தில் ஏதேனும் மறுபரிசீலனை செய்ய முடியுமா? என்று அப்பெண் அண்ணலாரிடம் கோரினார். அப்போது தான் அல்லாஹ் (58:1,2,3,4) ஆகிய திருவசனங்களை அருளினான்.        நூல்:-தஃப்சீர் இப்னு கசீர்

 

அல்லாஹ் திருமறை வசனங்கள் மூலம் அப்பெண்மணியுடைய முறையீட்டை அங்கீகரித்தான். ஆக இதுவரை தலாக்காக கருதப்பட்டு வந்த ளிஹாருடைய சட்டத்தை மாற்றி அமைத்து அதற்கு வேறொரு பரிகாரத்தை அல்லாஹ் சொல்லித் தந்தான். மாற்றப்பட்ட சட்டத்தை முன் வைத்து தம்பதியர் இணைந்து வாழ்வதையே அல்லாஹ் பிரியப்படுகிறானேத் தவிர பிரிந்து வாழ்வதையல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

 

இவ்வாறு அறியாமைக்கால மக்களின் வழக்கத்தில் தலாக் குறித்து இருந்து வந்த அனைத்து குளறுபடிகளை முழுமையாக அகற்றி ஒழுங்குபடுத்தியது இஸ்லாம்.

 

அல்லாஹ்வின் கோபம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَبْغَضُ الْحَلاَلِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلاَقُ ) அனுமதிக்கப்பட்ட விஷயங்களிலேயே தலாக் தான் அல்லாஹ்வுக்கு மிகவும் கோபமூட்டக்கூடியது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்      நூல்:- அபூதாவூத்-2178,  இப்னுமாஜா-2018

 

அல்லாஹ் அனுமதித்த எந்த காரியத்தையும் அடியான் செய்வதினால் அல்லாஹ் கோபப்படுவதில்லை. உண்ணுவது, உறங்குவது, பணம் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது இவைகளெல்லாம் அல்லாஹ் அனுமதித்த விஷயங்கள். இவைகளில் எதை செய்தாலும் அல்லாஹ் கோபப்படுவதில்லை

 

ஆனால், தலாக் என்பது அல்லாஹ் அனுமதித்த விஷயம் தான் என்றாலும் அதை செயல்படுத்துவதினால் இரு உறவுகளும், பல உள்ளங்களும் உடைந்து நொறுங்கி விடுகிறது அதனால் தலாக் விஷயத்தில் அல்லாஹ் கடுமையாகக் கோபப்படுகிறான்.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்லீஸ் தண்ணீர் மீது தன் இருப்பிடத்தை அமைத்து தனது ஷைத்தான் பட்டாளங்களை அனுப்பி மனிதர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துமாறு கூறுவான். அதில் ஒரு ஷைத்தான் வந்து நான் ஒரு அடியானுக்கும், அவனது மனைவிக்கும் இடையில் தலாக் ஏற்படும் அளவுக்கு (கோபத்தை மூட்டி) குழப்பத்தை ஏற்படுத்தினேன் என்று கூறுவான். அவனைப் பார்த்து இப்லீஸ் நீ தான் (சிறந்தவன்) என்று கூறி தனக்கு அருகில் அமர வைப்பான்.   நூல்:- முஸ்லிம்-5419

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلاَقًا فِي غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ ) எந்த பெண்ணாவது தகுந்த காரணமின்றி கணவனிடமிருந்து திருமண உறவை துண்டித்துக் கொள்ள விண்ணப்பிப்பாளானால் அவள் மறுமைநாளில் சொர்க்கத்தின் நறுமணத்தைக்கூட நுகரமாட்டாள்.   அறிவிப்பாளர்:- சஃப்வான் (ரலி) அவர்கள்      நூல்:- அபூதாவூத்-2226, திர்மிதீ-1107,  இப்னுமாஜா-2055, முஸ்னது அஹ்மத்

 

( وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا )  நிச்சயமாக சொர்க்கத்தின் நறுமணம் 40 ஆண்டுகள் கடந்து செல்லக்கூடிய தொல்லை தூரத்திற்கு அப்பாலே கமழ ஆரம்பித்து விடும் என்கிறது ஒரு நபிமொழி.         நூல்:- இப்னுமாஜா-2054

 

இன்று சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளுக்குக்கூட கணவனிடம் மணவிலக்கு கோரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

ஒரு பெண் தகுந்த காரணமின்றி தலாக்கை விண்ணப்பித்தால் அவள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்பது மட்டுமல்ல பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் கமழும் சொர்க்கத்தின் நறுமணத்தைக்கூட நுகர முடியாத பாவியாகி விட்டாள். இது அவளின் தீய செயலால் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலையாகும். இந்த எச்சரிக்கை பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொருந்தும்.

 

சமாதானம் ஏற்படுத்த வேண்டும்

 

(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், கவனிப்பவனுமாக இருக்கிறான்.         திருக்குர்ஆன்:- 4:35

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு தம்பதிகளுக்கு இடையில் பிணக்கு ஏற்பட்டு தீர்வு காண சிலர் ஓரிடத்தில் ஒன்று கூடினர். ஆனால் அவர்களுக்குள் ஒரு நல்லிணக்க தீர்வு ஏற்படவில்லை.

 

இதனை அறிந்த ஜனாதிபதி அவர்கள் அந்த பஞ்சாயத்துக்காக ஒன்று கூடியவர்களை அழைத்து அவர்களுக்கு ஆளுக்கொரு சாட்டையடிக் கொடுத்துவிட்டு "ஒரு தம்பதியரின் பிணக்கு நீங்கி அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் நீங்கள் ஒன்று கூடிப் பேசினால், அல்லாஹ் அவ்விருவருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான் என்று திருக்குர்ஆன் பேசுகிறது. அதனால் நீங்கள் நல்லெண்ணத்துடன் பஞ்சாயத்து பேசுங்கள்" என்று கூறி அவர்களை விரட்டினார்கள். மீண்டும் அவர்கள் ஒன்று கூடி பஞ்சாயத்துப் பேசிய போது அந்த தம்பதியருக்கு இடையில் இணக்கம் நிலவியதைக் கண்டார்கள்.

 

ஒரு பெண் துற்குணமுடையவளாக இருப்பின் அவளின் கணவன் முதலில் மிருதுவான முறையில் பரிவுடன் அவளுக்கு அறிவுரை கூற வேண்டும். முடிந்தவரை அவளின் தவறுகளை மன்னிக்க வேண்டும்.

 

"எவர் பிறருடைய தவறுகளை மன்னிக்கிறாரோ, அவரின் தவறுகளை அல்லாஹ் மன்னிக்கிறான்." என்பது ஒரு நபிமொழி

 

இதன் பிறகும் அவள் திருந்தவில்லையெனில் அவளிடமிருந்து தன் படுக்கையைப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதாவது அவளுடன் உடலுறவு, அது சம்பந்தமான பேச்சு விளையாட்டுக்களை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

 

இதன் பிறகும் அவள் திருந்தவில்லையெனில் உள்காயம், வெளிகாயம் ஏற்படாதவாறு அவளை இலேசான முறையில் அடிக்கலாம். அதற்காக எப்பொழுதும் அவளை அடித்துக் கொண்டே இருப்பது என்று பொருளல்ல. ஒருமுறை அடித்தாலும் அந்த அடி சுறுக்கென்று அவள் வாழ்நாளில் மறக்காதவாறு இருக்க வேண்டும் எண்றெண்ணி தனது முழு பலத்தையும் பிரயோகித்து மிருகங்களை அடிப்பதைப் போன்று முரட்டு அடி அடிக்கக் கூடாது அது பாவச் செயலாகும்.

 

அதன் பிறகும் அவள் திருந்தவில்லையெனில் தன் குடும்பத்திலிருந்தும் அவள் குடும்பத்திலிருந்தும் நல்லிணக்கத்தை விரும்பக்கூடிய சிலரை ஓரிடத்தில் ஒன்றுகூட்டி பேசி ஒரு நல்ல தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

 

பல்வேறு சமாதான முயற்சிகளுக்கு பிறகு இனிமேல் சேர்ந்து வாழ்வதற்கு அறவே வாய்ப்பில்லாத இறுதிக் கட்டத்திற்கு தம்பதியர் வந்துவிட்ட பிறகு, பெயரளவில் கணவன்- மனைவியாக வாழ்வதைவிட இருவரும் பிரிந்து தமக்கு ஏற்ற துணையைத் தேடிக் கொள்வதே இருவருக்கும் நல்லது. இந்த அடிப்படையிலேயே இஸ்லாம் தலாக் எனும் மணவிலக்கை அனுமதித்துள்ளது. தலாக் சொல்வதற்கு இஸ்லாம் கனத்த இதயத்துடன் தான் அனுமதி அளிக்கிறது. ஆயினும் எடுத்த எடுப்பிலேயே இந்த அனுமதியை பயன்படுத்தலாகாது.

 

நிகழ்ந்து விடும்

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ ) மூன்று செயல்களை வினையாக செய்வதும் வினைதான். விளையாட்டாக செய்வதும் வினைதான். அவை: 1) திருமணம், 2) மணவிலக்கு, 3) மணவிலக்கு அளிக்கப்பட்டு இத்தாவில் இருக்கும் பெண்ணைத் திரும்ப அழைத்தல். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2194,   திர்மிதீ-1104,   இப்னுமாஜா-2039

 

ஸைத் பின் வஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. மதீனாவில் ஒரு ஜோக்கர் இருந்தார். அவர் தனது மனைவியை ஆயிரம் முறை தலாக் கூறினார். இந்த விஷயம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரை அழைத்து விசாரித்தபோது "நான் தமாஷாக தான் கூறினேன் தலாக்கின் நோக்கமில்லை" என்று கூறினார். அவரை ஜனாதிபதி அவர்கள் சாட்டையால் அடித்து "உனக்கு மூன்று தலாக் நிகழ்ந்துவிட்டது" என்று கூறினார்கள்.           நூல்:- சுனனுல் குப்ரா-7/334

 

திருமண சபையில் இன்னாரின் மகள் இன்னாரை இவ்வளவு மணக்கொடை எனும் மஹர் பெற்றுக் கொண்டு இன்னார்கள் முன்னிலையில் திருமணம் முடித்து கொடுத்தேன். என்று சொல்லும் போது, மணமகனும், மணமகளும் "கபில்த்து" ஆம் ஏற்றுக்கொண்டேன் என்று  சொன்னவுடன் இதுவரை அந்நியர்களாக இருந்தவர்கள் கணவன்-மனைவியாக ஆகிவிடுகிறார்கள். இது போன்றுதான் கணவன் மனைவியிடம் தலாக் என்ற சொல்லை மூன்று முறை சொல்லி விட்டால், இதுவரை கணவன்-மனைவியாக வாழ்ந்தவர்கள் அந்நியர்களாக ஆகிவிடுகிறார்கள்.

 

அதனால் தான் "தலாக்" என்ற பதத்தை தமாஷாக்காகக்கூட பிரயோகிக்கக் கூடாது. விலையுயர்ந்த கண்ணாடி கிளாசாக இருந்தாலும் அது கை தவறி கீழே விழுந்து விட்டால் அது உடைந்து தான் போகும். அது போன்றுதான் "தலாக்" என்ற பதத்தை மூன்று முறை எந்த சூழ்நிலையில் பிரயோகித்தாலும் பிரிவு என்பது உறுதியாகி விடும் என்பதில் தம்பதியர் கவனமாக இருக்க வேண்டும்.

 

தகுந்த காரணம் வேண்டும் (தலாக்)

 

1) தலாக் (கணவன் சொல்வது). 2) குலா (மனைவி கணவனிடம் கேட்டு பெறுவது).  3) ஃபஸ்க் (இஸ்லாமிய நீதிபதி பிரித்து வைப்பது) ஆகிய வழிமுறைகளைப் பின்பற்றி தம்பதியர் பிரிந்து செல்லலாம் என்பது இஸ்லாமியச் சட்டமாகும்

 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. உவைமிர் பின் அல்அஜ்லானி (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து தன் மனைவி பிற ஆடவனுடன் விபச்சாரம் செய்வதைக் கண்டேன் என்று கூறினார்.

 

பிறகு தன் மனைவியையும் அண்ணலாரிடம் அழைத்து வந்து "லிஆன்" எனும் சாப அழைப்புப் பிரமாணம் (நான் அல்லாஹ்வை சாட்சியாக்கி சொல்கிறேன். அவள் விபச்சாரம் செய்துவிட்டாள். நான் சொல்லும் விஷயத்தில் உண்மையாளனாக இருக்கிறேன். இப்படியாக நான்கு முறை சத்தியம் செய்ய வேண்டும். ஐந்தாம் முறை நான் சொல்லும் விஷயத்தில் பொய்யனாக இருந்தால் என் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கணவன் மனைவி ஆகிய இருவரும் இவ்வாறு சொல்ல வேண்டும் என்பது திருக்குர்ஆன் (24:6,7,8,9) கூறும் சாப அழைப்புப் பிரமாணம்) செய்து தன் வார்த்தைக்கு வலுசேர்த்தார். பிறகு அண்ணலாரின் முன்பாக தன் மனைவிக்கு மூன்று தலாக் சொல்லிவிட்டார்.        நூல்:- புகாரீ-5308

 

ஒருவர் தன் மனைவி தொழுகை, நோன்பு போன்ற கட்டாயக் கடமைகளை முறையாக நிறைவேற்றுவதில்லை. அல்லது இணைவைத்தல், விபச்சாரம், வட்டி போன்ற பெரும் பாவங்களை செய்தாளேயானால், அவளை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் முதலில் அவளை எச்சரிக்க வேண்டும். அதன் பிறகும் திருந்தாமல் அந்த செயலை தொடர்ந்து செய்வாளேயானால், அவள் திருந்த மாட்டாள் என்று உறுதியாகுமேயானால் அப்போது சிலரை சாட்சியாக ஆக்கி அவளுக்கு தலாக் சொல்லலாம்.

 

மேலும் தன் மனைவி மலடியாக இருக்கிறாள் என்று உறுதியானாலும் அல்லது தன்னுடன் உடலுறவில் ஈடுபட முடியாத பெரும் வியாதி உள்ளவளாக இருந்தாலும் அவளை தலாக் சொல்லலாம். ஆனால் இந்நிலையில் உள்ளவளை தலாக் சொல்வதைவிட, வேறொரு பெண்ணையும் மணந்து கொண்டு இவளையும் மனைவியாக வைத்துக் கொள்வது நல்லது. இரு மனைவிகளையும் வைத்து சமாளிக்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லையெனில், மலடாகவோ அல்லது பெரும் நோயாளியாகவோ உள்ளவளை தலாக் சொல்லலாம்.

 

இது போன்ற சரியான காரணங்கள் இல்லாமல் சமைத்த உணவில் சுவை இல்லை, துவைத்த ஆடையில் சரியாக அழுக்கு போகவில்லை, என் பெற்றோருக்கு பணிவிடை செய்யவில்லை, அவர்களின் சொல்லுக்கு கட்டுப்படுவதில்லை, போதிய உலக அறிவின்றி முட்டாளாக இருக்கிறாள் என்று இது போன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் மனைவியை தலாக் சொல்வது மாபெரும் பாவம் என்று மார்க்கம் எச்சரிக்கிறது.

 

கிருத்துவர்களில் கத்தோலிக்கப் பிரிவினர் மட்டுமே மணவிலக்கை கடுமையாக எதிர்க்கின்றனர். மனைவி எத்தகையவளாக இருந்தாலும் மணவிலக்கு செய்யக்கூடாது என்கிறார்கள். புரட்டஸ்டென்ட், ஆர்தோடக்ஸ் ஆகிய பிரிவினர் மனைவி விபச்சாரம் செய்துவிட்டாலோ, மதம் மாறிவிட்டாலோ அவளை மணவிலக்கு செய்துவிடலாம் என்கிறார்கள். ஆனாலும் மறுமணம் செய்வதை அவர்கள் ஏற்கவேயில்லை.

 

இந்து வேதங்கள், “தம்பதியருக்கு மத்தியில் எப்படிப்பட்ட மனப்புழுக்கமாக இருந்தாலும் அவர்கள் ஒன்றாகத்தான் வாழ்ந்தாக வேண்டும். மணவிலக்கு எனும் பிரிவினை என்பது அறவே கூடாது” என்கிறது.

 

மூன்று வழிமுறைகள்

 

கணவன் மனைவிக்கு தலாக் கொடுப்பதிலும் மூன்று வழிமுறைகள் உள்ளன.  1) தலாக் அஹ்சன் (தலாக் கொடுப்பதில் மிகச் சிறந்த முறை).  2) தலாக் ஹசன் (தலாக் கொடுப்பதில் சிறந்த முறை).  3) தலாக் பித்ஆ  (தலாக் கொடுப்பதில் விரும்பத்தகாத முறை). ஆகியவையாகும். இனி நாம் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

 

மனைவி மாதவிடாயிலிருந்து சுத்தமான பிறகு அவளுடன் உறவு கொள்ளாத நிலையில் ஒரு தலாக் மட்டும் சொல்லி இத்தா முடியும்வரை அப்படியே விட்டு விடுவதுதான் "தலாக் அஹ்சன்" எனப்படும்.

 

இம்முறையில் தலாக் சொன்ன பிறகு கணவனோ அல்லது மனைவியோ மனம் திருந்தி மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் "உன்னை நான் என்னுடைய மனைவியாக மீட்டிக் கொண்டேன்" என்று சொல்லியோ அல்லது கணவன் மனைவியுடன் நடந்து கொள்வதன் முறையைக் கையாளுவதன் மூலமோ இருவரும் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம். அப்படியே இத்தா முடிந்துவிட்டால் திருமணத்தை புதுப்பித்து கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடரலாம்.

 

தலாக் சொல்வதன் முறையில் இதுவே சிக்கல் இல்லாத எளிய முறையாகும்.

 

தம்பதியர் பிரிந்து விடுவதற்கு ஒரு தலாக்கே போதுமானது. மூன்று தலாக் சொன்னால் தான் மணவிலக்கு முழுமைபெறும் என்று எண்ணுவது அறியாமையேயாகும்.

 

(மணவிலக்கு அளித்த) அவர்களின் கணவன்மார்களே அவர்களை (இத்தா முடிவதற்குள்) திருப்பி அழைத்துக்கொள்ள அதிக உரிமையுள்ளவர்கள் ஆவர்.       திருக்குர்ஆன்:- 2:228

 

மனைவி மாதவிடாயிலிருந்து சுத்தமான பிறகு அவளுடன் உறவு கொள்ளாத நிலையில், கணவன் ஒரு தலாக் மட்டும் சொல்லுவான். இரண்டாவது மாதம் மேற்கூறப்பட்ட நிலையில் இரண்டாவது தலாக் சொல்லுவான். மூன்றாவது மாதம் மேற்கூறப்பட்ட அதே நிலையில் மூன்றாவது தலாக் சொல்லுவான். இதுவே "தலாக் ஹசன்" எனப்படும்.

 

தலாக் சொல்லுவதன் முறையில் இதுவும் சிக்கல் இல்லாத, ஆனால் சற்று கால தாமதத்தை ஏற்படுத்தக்கூடிய வழிமுறையாகும்.

 

இம்முறையில் முதலிரண்டு மாதங்களில் சொல்லப்பட்ட தலாக்குகளுக்கு பிறகு, கணவனோ மனைவியோ விரும்பினால் எந்த சடங்கும் இல்லாமல் சேர்ந்து கொள்ளலாம். மூன்றாவது மாதம் சொல்லப்பட்ட தலாக்குக்கு பிறகு சேர்ந்து வாழ முடியாது.

 

இஸ்லாத்தில் மட்டும் தான் திரும்ப அழைத்துக்கொள்வதற்கேற்ற வகையிலான (ரஜயீ) தலாக் முறை உள்ளது. இத்தகைய வாய்ப்பு மற்ற எந்த மதத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

அ) ஒரே சமயத்தில் மூன்று தலாக் சொல்வது. ஆ) மனைவி மாதவிடாயிலிருந்து சுத்தமான பிறகு ஒரே சமயத்தில் மூன்று தலாக் சொல்வது. இ) மாதவிடாய் காலத்தில் தலாக் சொல்வது. ஈ) மனைவியுடன் உறவுகொண்ட காலத்தில் தலாக் சொல்வது. மேற்கண்ட நான்கு முறைகளிலும் தலாக் சொல்வது இதுவே "தலாக் பித்ஆ" எனப்படும். இந்த முறையை இஸ்லாம் விரும்புவதில்லை.

 

 இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்கு செய்து விட்டேன். ஆகவே இது குறித்து (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அப்போது அண்ணலார், ( لِيُرَاجِعْهَا ) "(உங்கள் மகன்) தம் மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் இப்னு சீரின் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "(மாதவிடாயின் போது சொல்லப்பட்ட இந்த தலாக்) ஒரு தலாக்காகக் கருதப்படுமா?" என்று வினவினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன? என்று கேட்டார்கள்.   நூல்:-புகாரீ-5252, திர்மிதீ-1095

 

செய்யக் கூடாது

 

மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் தனது மனைவியை ஒரே சமயத்தில் மூன்று தலாக்கையும் மொத்தமாக சொல்லி விட்டார் என்ற செய்தி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. (உடனே) அண்ணலார் கோபமாக எழுந்து ( أَيُلْعَبُ بِكِتَابِ اللَّهِ وَأَنَا بَيْنَ أَظْهُرِكُمْ ) “நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும் பொழுதே அவர் அல்லாஹ்வுடைய வேதத்தில் விளையாடுகிறாரா? என்று கடிந்து கொண்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து நாயகமே! அவரை நான் கொன்று விடட்டுமா? என்று கேட்டார்.      நூல்:- நசாயீ-3348

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. எவர் தன் மனைவியை ஒரே சமயத்தில் மூன்று தலாக் சொல்லிவிடுவாரோ, அவருக்கு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் முதுகு வலிக்குமளவுக்கு சாட்டையடி தண்டனை கொடுப்பார்கள். மேலும் அவருடைய மனைவியை அவரைவிட்டும் பிரித்து விடுவார்கள்.      நூல்:- சுனன் சயீத் பின் மன்சூர்,  அல்ஜவ்ஹருன் நகீ-7/333

 

ஒரே முறையில் மூன்று தலாக் கூறுவதை அண்ணலார் கண்டித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். மேலும் அது அண்ணலார் வெறுத்த பாவமாக இருப்பதால் தான் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் முத்தலாக் சொல்பவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளார்கள்.

 

பெண் சுதந்திரம் (குலா)

 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் (நல்ல அழகுள்ள) மனைவி (ஜமீலா) நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து நாயகமே! (என் கணவர்) சாபித் (ரலி) அவர்களின் குணத்தையோ, மார்க்கப்பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால் (அவர் தோற்றத்தில் அழகற்றவராக இருப்பதால்) அவருடன் வாழ என்னால் முடியவில்லை. மேலும் நான் இஸ்லாமியப் பெண்ணாக இருந்து கொண்டு இறைமறுப்புக்குரியச் செயலை செய்துவிடுவேனோ என்றும் அஞ்சுகிறேன் என்று கூறினார்.

 

(அதாவது நல்லவரான தன் கணவருடன் வெளிப்படையில் மனைவியாக வாழ்ந்துகொண்டு மனதளவில் அவரை வெறுத்து இரட்டை வேடம் போட்டுக்கொண்டே தொடர்ந்து வாழ்ந்து வந்தால் எங்கே தாம் இறைமறுப்பாளர்களின் செயல்களில் சிக்கி விடுவோமோ என்று அஞ்சுவதாக தெரிவித்தார்.)

 

அப்போது அண்ணலார், ( أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ ) “சாபித் உனக்கு (மணக்கொடையாக) கொடுத்த தோட்டத்தை நீ அவருக்கே தந்து விடுகிறாயா? என்று கேட்டார்கள். அப்பெண் ஆம்! (தந்து விடுகிறேன்) என்று கூறினார். அண்ணலார், اقْبَلِ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً ) ‏ )  “(சாபித் -ரலி அவர்களிடம்) நீங்கள் தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவளை ஒருமுறை தலாக் சொல்லி விடுங்கள்! என்று கூறினார்கள். (அவரும் அவ்விதமாகவே சொல்லிவிட்டு பிரிந்து விட்டார்.)      நூல்:- புகாரீ-5273,5275, நசாயீ -3410

 

ஆண்கள் தான் மணவிலக்கு செய்ய முடியும் பெண்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று அதுவரை சொல்லிக்கொண்டிருந்த நிலையில் தன்னை கவனித்துக்கொள்ளாத, திருப்திப்படுத்தாத, துன்புறத்துகின்ற கணவனிடமிருந்து பிரிந்துக்கொள்ளும் “குலா” எனும் மனைவி கேட்டு வாங்கிக்கொள்ளும் மணவிலக்கை இஸ்லாம் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியிருந்தது. இது விஷயத்தில் கணவன் மனைவி துன்புறுத்தக்கூடாது என்ற எச்சரிக்கையும் வழங்கியிருந்தது.

 

ஒரு பெண்மணி தைரியமாக நபியவர்களிடம் வந்து மணவிலக்கு கேட்கிறாள். அதற்கு வேறு கடுமையான காரணம் ஏதும் இல்லை. மனம் ஒத்து வாழ முடியவில்லை. அண்ணலாரும் அவள் பிரிந்து செல்ல அனுமதித்து, அவளுக்கு மணவிலக்கு பெற்றுக்கொடுத்தார்கள். மிக எளிமையாக இந்த காரியம் நிறைவேறியது.

 

ஒரு பெண் தன் கணவர் குடும்பச்செலவுக்கு போதிய பணம் தருவதில்லை அல்லது தனக்கு இல்லற சுகம் தருவதில்லை அல்லது குஷ்டம், எய்ட்ஸ் போன்ற பெருநோயால் பீடிக்கப்பட்டவர், அல்லது பெரும் குடிக்காரனாகவோ, கொடுமைக்காரனாகவோ இருந்தால், அப்பெண் சமுதாயத் தலைவர், அல்லது காஜியிடம் போய் மணவிலக்கு பற்றி விண்ணப்பிக்கலாம்.

 

பெண் தானாகவே மண ஒப்பந்தத்தை முறித்து விடாமல் தலைவர் முன்னிலையில் விண்ணப்பிப்பது அவசியமாகிறது. ஏனெனில் பெண் கணவனிடமிருந்து ஊரறிய மஹர் எனும் மணக்கொடை பெற்றிருப்பதாலும் அதை திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்படைக்க வேண்டும் என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் மணவிலக்கு பெற்ற பிறகு அதிக கஷ்டத்திற்கு ஆளாக நேர்வதால் அத்தகைய முடிவுக்கு பெண் அவசரப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு அறிவுரைக் கூற வழி ஏற்படுகிறது. இதனால் சமுதாயத் தலைவரிடம் தெரிவித்துவிட்டு அவர் முன்னிலையில் பிரிந்து செல்வதே அவளுக்கு நல்லதாகும்.

 

இஸ்லாம் "தலாக்" என்று கூறி தம்பதியர் பிரிந்து செல்லும் அதிகாரத்தை ஆண்களிடம் மட்டுமே வழங்கியதற்கு சரியான காரணம் இருக்கிறது. அதாவது ஆண்களில் பெரும்பாலோர் எந்த விஷயமாக இருந்தாலும் சட்டென்று உணர்ச்சிவசப்படாமல், முறையாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரும் மனப்பக்குவம் உள்ளவர்கள். கோபத்தின்போது தன்னை ஓரளவு கட்டுப்படுத்திக்கொள்கின்ற திறன் இயல்பாகவே பெரும்பாலான ஆண்களுக்கு உண்டு.

 

ஆனால் பெண்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்குமானால் பேச்சுக்கு பேச்சு தலாக்காகவே இருக்கும். சிறுசிறு பிரச்சனைகளுக்கெல்லாம் விரைவில் உணர்ச்சிவசப்படும் தன்மை பெரும்பாலான பெண்களிடம் இயற்கையாகவே அமைந்துள்ளது. அதனால் பெண்கள் தலாக்கை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.

 

காஜியிடம் விண்ணப்பித்தல் (ஃபஸ்க்)

 

ஒருவர் தன் குடும்பத்தை விட்டு காணாமல் போய்விட்டார். அவர் என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்ற தகவல் ஏதும் இல்லை. இந்த சூழ்நிலையில் அவருடைய மனைவியின் நிலை என்னவென்றால், காணாமல் போனவரைக் குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் வரை மனைவி எதிர்பார்க்க வேண்டும். அதன் பிறகும் அவரைப்பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லையானால்  காஜி (இஸ்லாமிய நீதிபதி) அவளுடைய மணஒப்பந்தத்தை முறித்து வைப்பார். பிறகு அப்பெண் 4 மாதம் 10 நாட்கள் இத்தா இருக்க வேண்டும். பிறகு அவள் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்று உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) ஆகியோரின் தீர்ப்பு இதுவேயாகும்.   நூல்:- ஃபத்ஹுல் பாரீ, புலூகுல் மராம்-1148

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் ஒரு பெண் வந்து என் கணவர் வெளியூர் பயணம் சென்றார். பல மாதங்கள் கடந்தும் இன்னும் திரும்பி வரவில்லை. அவரைப் பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்று முறையிட்டாள். அப்போது ஜனாதிபதி அவர்கள் "நீ 4 ஆண்டுகள் வரை அவன் வரவை எதிர்பார்த்து காத்திரு!" பிறகு பார்க்கலாம் என்று கூறி அவளை அனுப்பிவைத்தார்கள். 4 ஆண்டுகள் கடந்த பின்னர் அந்த பெண் ஜனாதிபதி அவர்களிடம் வந்து அதையே முறையிட்டாள். உடனே, ஜனாதிபதி அவர்கள் அவளுடைய மணஒப்பந்தத்தை முறித்து வைத்து, 4 மாதம் 10 நாட்கள் இத்தா கடைப்பிடித்த பின்னர் நீ மறுமணம் புரிந்துகொள்ளலாம்” என்று அப்பெண்ணுக்கு தீர்ப்பளித்தார்கள்.

 

சுவைத்தப் பிறகு  தான்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் தன் மனைவிக்கு மூன்று தலாக் கூறிவிட்டார். பிறகு அப்பெண் வேறொருவரை மணந்து கொண்டார். (அவருடன் உடலுறவு கொள்ளாமலேயே) அவரின் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்திவிட்டு அவரிடமிருந்து பிரிந்து மீண்டும் முதல் கணவருடன் வாழ விரும்புவதாகவும் கூறினாள். அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ( لاَ حَتَّى تَذُوقِي عُسَيْلَتَهُ، وَيَذُوقَ عُسَيْلَتَكِ ) "நீ உன்னுடைய இரண்டாவது கணவரிடம் உடலுறவுகொண்டு உங்களில் ஒருவருக்கொருவர் சுகம் அனுபவிக்கும் வரையிலும் (முதல் கணவரை நீ மணந்துக்கொள்ள முடியாது) என்று" அப்பெண்ணிடம் கூறினார்கள்.   நூல்:- புகாரீ-5317, நசாயீ-3440

 

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். மக்கள் தலாக்கின் சட்டத்தை முறையாக விளங்கிக்கொண்டால் தனது மனைவியை தலாக் சொன்ன எந்த மனிதனும் கைசேதப்பட மாட்டான்.         நூல்:- அஹ்காமுல் குர்ஆன்-1/387

 

ஒருவன் தன் மனைவிக்கு மூன்று தலாக் சொல்லி விட்டார். அப்பெண் மூன்று மாதங்கள் இத்தாவைக் கடைபிடித்த பிறகு, அவளை வேறொருவர் மணமுடித்து அவ்விருவரும் தாம்பத்திய சுகம் அனுபவித்த பிறகு, இந்த இரண்டாவது கணவர் எவருடைய நிர்பந்தமுமின்றி தலாக் சொல்லிய பின்னர், அதற்கான இத்தா மூன்று மாதங்கள் கடைபிடித்த பிறகு, முதல் கணவர் மீண்டும் அப்பெண்ணை மணமுடித்துக்கொள்ளலாம். இதுவே "ஹலாலா" எனப்படும்.

 

அப்துல்லாஹ் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ الْمُحِلَّ وَالْمُحَلَّلَ لَهُ )  (மூன்று முறை) மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணை தலாக் சொன்ன (முன்னாள்) கணவரே மீண்டும் மணந்து கொள்வதற்காக (தற்காலிகமாக) மறுமணம் புரிந்துகொள்ள முன்வருகின்றவரையும் (அதற்கு உடந்தையாகச் செயல்படும்) முன்னாள் கணவரையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நூல்:- திர்மிதீ-1038, நசாயீ-3363, இப்னுமாஜா-1924, முஸ்னது அஹ்மத்

 

இரண்டாவது கணவன் அவளுடன் தாம்பத்திய உறவுகொண்டு, தற்செயலாக அவளை மணவிலக்கு செய்திருந்தால்தான் இத்தாவுக்குப்பின் முதல் கணவன் அவளை மீண்டும் மணக்கமுடியும் என்பதே திருக்குர்ஆனின் (2:230) கூற்றாகும்.

 

மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணை மீண்டும் அதே ஆணோடு சேர்க்கவேண்டும் என்பதற்காக சட்டத்தை வளைக்கும் விதத்தில் பொருளாதாரத்தைக் கொடுத்து ரெடிமேடாக ஒருவரை அழைத்து வந்து அவரிடம் "நீ இவளை மணந்துகொள்! ஆனால் அவளை தொட்டுவிடாதே! என்று அல்லது ஓரிருமுறை மட்டும் உறவுகொண்டுவிட்டு பிறகு முறைப்படி மூன்று தலாக் கொடுத்து விடு!" என்று கூறும்போது அதற்கு சம்மதித்து மணந்துக்கொள்ள வருபவனையும், மேலும் மீண்டும் அவளை முதல் கணவனுக்கு மணமுடித்துக் கொடுக்கவேண்டும் என்பதற்காக இந்த தந்திரத்தை கையாளுபவர்கள் அனைவரையும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

ஒரு சர்க்கரை நோயாளி இறுதி முயற்சியாக தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காலை வெட்டியெடுப்பது போல். கடைசி ஆயுதமாகவே தலாக்கை பயன்படுத்த வேண்டுமென்று இஸ்லாம் போதிக்கிறது. எனவே தலாக் என்பது ஒரு கசப்பு மருந்து என்பதே யதார்த்தமாகும். அல்லாஹுதஆலா நம்முடைய இல்லற வாழ்க்கையில் நிம்மதியை நிலைபெற செய்வானாக! ஆமீன்.

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951

  

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...