வருகிற ஆத்திரத்திற்கு...
قال الله : وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ
بِهۚ وَلَٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ
قال رسول الله صلي الله عليه وسلم : وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا
بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهۚ وَلَٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ
மனிதனுக்கு ஆத்திரம் வருகிறபோது புத்தி வேலை செய்வதில்லை. அதாவது உணர்ச்சி வசப்படுதல் அதிகமாகும்போது, அறிவு மங்கிப்போகிறது. அறிவு என்பது பல பிரிவுகளைக் கொண்டது. உணர்ச்சி என்பது அதன் கூறு. இது மட்டும் வேலை செய்கிறபோது, மற்ற உணர்வுகள் பின் தங்கிவிடுகின்றன. இந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு சற்றும் நல்லதல்ல.
ஆத்திரம் வருகிறபோது பிள்ளைகள் என்றாலும் அடித்து
விடுகிறோம். கணவன்-மனைவி என்றால் கடுமையாக பேசி
விடுகிறோம். உறவினர்கள், நண்பர்கள்,
உடன் பணிபுரிபவர்கள்,
வாடிக்கையாளர்கள் என்றால்
தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுகிறோம். பிறகு வருந்துகிறோம். ஏகமாக வருந்துகிறோம்.
وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهۚ وَلَٕنْ
صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ
(அநீதி இழைத்த யாருக்கேனும்) நீங்கள் தண்டனை வழங்குவதானால், உங்களுக்கு அநீதமிழைக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே தண்டனை வழங்குங்கள். ஆயினும் நீங்கள் பொறுமை காத்தால் அதுவே பொறுமையாளர்களுக்கு சிறந்ததாகும். திருக்குர்ஆன்:-16:126
பழிக்குப்பழி
முஹம்மத் பின் கஅப் (ரஹ்) அவர்கள் (ரலி) அவர்கள் கூறியதாவது. உஹதுப் போரில் முஸ்லிம்களில்
64 அன்சாரிகளும் (மதீனாவாசிகள்),
6 முஹாஜிரீன்களும் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு குடிபெயர்ந்தவர்கள்),
வீர மரணமடைந்தனர். மக்கா இணைவைப்பாளர்கள்
இவர்களின் காது, மூக்கு ஆகியவற்றை
அறுத்து அங்கீனப்படுத்திவிட்டனர். அப்போது முஸ்லிம்களில் (சிலர் ஆத்திரப்பட்டு), ( وَاللَّهِ لَئِنْ ظَهَرْنَا عَلَيْهِمْ لَنُمَثِّلَنَّ بِهِمْ مُثْلَةً
لَمْ يُمَثِّلْهَا أَحَدٌ مِنَ الْعَرَبِ بِأَحَدٍ قَطُّ ) "அல்லாஹ்வின் மீதாணையாக!
அவர்களை நாம் வென்றால் அரபியரின் வரலாற்றில் இதுவரை யாருக்குமே நடந்திடாத அளவுக்கு
அவர்களை சித்திரவதை செய்வோம்" என்று சூழுரைத்தனர். அப்போது தான் தலைப்பில் காணும்
திருவசனம் அருளப்பெற்றது. நூல்:- தலாயிலுந் நுபுவ்வா இமாம் பைஹகீ, தப்ரானீ, தாரகுத்னீ, தஃப்சீர் இப்னு கஸீர்
ஆத்திரப்பட்டு கத்துபவர்கள் சூட்டைத் தணிக்க, முதலில் நாம் நமது குரலில் கனிவைக் குலைக்க வேண்டும். அவர்கள் ஆத்திரப்படுவது நியாயமானதுதான் என்பதை நாமும் ஏற்பதாக காண்பித்து கொள்ள வேண்டும். அவர்கள் இறங்கி வந்த பிறகு தான் அவர்கள் செய்த தவறை அவர்களுக்கு உணர்த்த முயல வேண்டும். இந்த பாணியில்தான் தலைப்பில் காணும் திருவசனம் நயமாக பேசுகிறது.
ஓர் உதாரணம் ஒரு ஓட்டல் உரிமையாளரிடம் வாடிக்கையாளர் வந்து "என்னய்யா ஓட்டல் நடத்துறீங்க? ஓட்டலா இது? நரகம்! சர்வீஸ் சரியில்லை! தண்ணீரே வரலை! பெல் அடிச்சா சப்ளையளர் வரலை! என்று கத்துகிறார் என வைத்துக் கொள்வோம். பதிலுக்கு தொழில் அக்கறை உள்ள எந்த முதலாளியும் கத்துவதில்லை. ஓட்டல் முதலாளியும் அப்படியே கத்தினால் அது எரிமலை விஷயமாகி விடும். வாடிக்கையாளர்களிடம் காட்டப்படும் இந்த அலட்சியம் மெல்ல அவரை கவிழ்த்துவிடும்.
“ப்ளீஸ்! உட்காருங்க சார். உட்கார்ந்து மெதுவாகப் பேசுவோமே! நீங்க இப்படி கத்தினா பிறர் என்னைப் பத்தி மட்டுமல்ல, உங்களைப் பத்தியும் தப்பா நினைக்க சான்ஸ் இருக்கு சார்” என்கிற பாணியில் பேசினால் போதும். ஓர் ஆச்சரியம் நிகழும். அந்த வாடிக்கையார் சரசரவென இறங்கி, இரண்டாவது நிலைக்கு வருவார். அப்புறம் அவரை மூன்றாவது நிலைக்கு இறக்குவது அவ்வளவு கடினமில்லை.
நல்லதல்ல
ஒரு மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களைத் திட்டினார்.
அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் பதில் ஏதும் சொல்லவில்லை. அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுக்
கொண்டும், புன்னகைத்துக் கொண்டும்
இருந்தார்கள். அந்த மனிதர் அதிகமாக திட்ட ஆரம்பித்தும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (ஆத்திரப்பட்டு)
சில வார்த்தைகள் சொல்லி திட்ட ஆரம்பித்து விட்டார்கள். உடனே அண்ணலார் அந்த இடத்தைவிட்டு
எழுந்து சென்று விட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் அண்ணலாரை பின் தொடர்ந்து சென்று காரணம் கேட்டார்கள். அதற்கு அண்ணலார், ( إنَّهُ كَانَ مَعَكَ مَلَكٌ يَرُدُّ عَنكَ، فَلَمَّا رَدَدتَ عَلَيهِ بَعضَ قَولِهِ؛ وَقَعَ الشَّيطَانُ، فَلَم أكُنْ لِأَقعُدَ مَعَ الشَّيطانِ ) "(நீ மெளனமாக இருந்தபோது) உம்முடன் ஒரு வானவர் இருந்து அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எப்போது நீ திட்ட ஆரம்பித்தாயோ அப்போது அங்கு ஷைத்தான் வந்துவிட்டான். நான் ஷைத்தானுடன் அமருவதில்லை" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, முஸ்னது பஸ்ஸார், தப்ரானீ, பைஹகீ, மஜ்மஉஸ் ஸவாயித், ஹைஸமீ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمُسْتَبَّانِ مَا قَالاَ فَعَلَى الْبَادِي مِنْهُمَا مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ ) ஒருவரையொருவர் திட்டிக் கொள்ளும் இருவரின் திட்டுதலுக்கான பாவம், முதலில் ஆரம்பித்தவரையே சாரும். அநீதிக்குள்ளான (மற்றொரு)வர் எல்லை மீறாமல் இருக்கும்வரை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1904
பாவத்தில் வீழ்ந்து வரம்பு மீறக்கூடாது என்ற எண்ணத்தில், தகுந்த காரணங்கள் இருப்பினும் பிறரை திட்டுவதிலிருந்து உண்மை முஸ்லிம் தனது நாவைப் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
தகராறின்போது எதிராளி பிரயோகித்த அந்த தீய வார்த்தைகளை நாமும் பதிலுக்கு பிரயோகிக்கும்போது நமது மரியாதைக்குரியவர்களும் நம்மை விட்டும் விலகி சென்று விடலாம்.
வாய் தகராறு ஏற்பட்டு, எவராவது நம்மைத் திட்டிவிட்டால் ஆத்திரம் வந்து நாமும் அவரை திட்ட ஆரம்பித்து விடுகிறோம். அப்போது திட்டியவரை திரும்பத் திட்டுவதைவிட மௌனமாக இருந்து விடுவதே சிறந்தது. எதிராளி கத்தும்போது மௌனமே சிறந்த ஆயுதம். நாமும் கத்தினால் நமது ஆற்றலை நாம் இழப்பதுடன் பிரச்சனையும் அடங்கவே அடங்காது.
பஸ்ஸில் அமர்ந்திருக்கிறோம். இருக்கையில் இரு பக்கமும் இருக்கும் கட்டைகளில் நாம் கை வைத்திருக்கும்போது பக்கத்திலிருப்பவருக்கு எரிச்சல் ஏற்பட்டு "நானுந்தாய்யா பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியிருக்கேன்! எடுய்யா! கைய்ய!" என்கிற பாணியில் பேசுகிறார் என்றால் நாமும் அந்த மட்டத்துக்கு இறங்கி போக வேண்டும் என்பதில்லை. பாவம்! புரியாமல் பேசுகிறார் அவருக்கு வீட்டில் என்ன கஷ்டமோ! கவலையோ! என்று வித்தியாசமாக எண்ணி பார்க்க வேண்டும்.
மாறாக நமக்கு அதன் மூலம் மாபெரும் அவமானம் நேர்ந்துவிட்டதாகவும், எல்லோரும் கை கொட்டி நம்மைப் பார்த்து சிரிப்பதாகவும் கற்பனை செய்து கொண்டு, நாமும் தராதர மற்றவர்களுக்கு இணையாக ஆத்திரப்பட்டு ஆட்டம் போட ஆரம்பிக்கக் கூடாது. காரணம் அதைவிட அவமானம் அதன் பின்னால் காத்திருக்கும்.
பொதுவாக. மௌனவாதிகளைக் கவனித்து பார்த்தோமானால் அவர்கள் காரியவாதிகளாகவே இருப்பார்கள். நாமும் காரியவாதிகளாக மாற வேண்டாமா?
பின்னால் வருந்தக்கூடாது
சுவைத் பின் கப்லா (ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது. ஹசன் (ரலி) அவர்களின்
மனைவி ஆயிஷா கஸ்அமிய்யா (ரஹ்) அவர்கள் (தனது மாமனார்) ஜனாதிபதி அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட
செய்தியை செவியுற்றதும் தனது கணவர் ஹசன் (ரலி) அவர்களிடம் "உங்களுக்கு ஆட்சி பொறுப்பு
கிடைத்துவிட்டதற்காக நான் வாழ்த்துக் கூறுகிறேன்" என்று சொன்னார்.
துக்க நேரத்தில் இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டதும் ஆத்திரமடைந்த ஹசன் (ரலி) அவர்கள், ( أظهَرتِ الشماتَةَ بِقَتلِ عليٍّ، أنتِ طَالِقٌ ثلاثًا ) “(எனது தந்தை ஜனாதிபதி) அலீ (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதற்கு நீ சந்தோசப்படுகிறாயா? இப்பொழுது உனக்கு மூன்று தலாக் கொடுத்து முழுமையாக மணவிலக்கு அளித்துவிட்டேன்" என்று கூறினார்கள். அந்த பெண்மணி அங்கேயே இத்தாவை (காத்திருப்புக் காலத்தை) முழுமைப்படுத்திவிட்டு தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
பிறகு ஹசன் (ரலி) அவர்கள் அந்த பெண்ணுக்கு 20,000 திர்ஹம் கொடுத்து அனுப்பினார்கள். அந்த பணத்தை
கொண்டு போய் கொடுத்தவரிடம் ( مَتَاعٌ قَلِيلٌ مِنْ حَبِيبٍ مُفَارِقٍ ) "என்னை விட்டுப் பிரிந்த என்னுடைய நேசரின்
இந்த பணம் மிகக் குறைவானது தான் (இந்த பெரும்
தொகையைவிட என்னை விட்டு பிரிந்த எனது கணவரே எனக்கு மிக உவப்பானவர்)" என்று தனது
கணவரின் பிரிவைக் கைசேதமாக அப்பெண்மணி கூறினார்.
இந்த செய்தியை செவியுற்ற ஹசன் (ரலி) அவர்கள் அப்பெண்மணியின் நிம்மதியற்ற மனநிலையை உணர்ந்தும், பாசத்திற்குரிய அப்பெண்ணை மீண்டும் மனைவியாக மீட்டிக் கொள்ள முடியாதவாறு முத்தலாக் சொல்லி விட்டதையும் எண்ணி அழுது விட்டார்கள். நூல்:- தாரகுத்னீ-4017, சுனனுல் குப்ரா, சியரு அஃலாமுந் நுபலா
"எனக்கு வருகிற ஆத்திரத்திற்கு என்ன செய்வேன்னு தெரியாது" என்பது தான் சற்றேக்குறையப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் வாக்கியமாகும்.
தெளிவாக சொல்ல வேண்டுமேயானால் அந்த செயல் நல்லதா, கெட்டதா என்று தெரிந்து கொள்ளாமலேயே ஆத்திரத்தோடு இறங்குகிறோம். ஒருவர் தீர்க்கமாகச் சிந்தித்து அந்த செயல்களின் பின்விளைவுகளை பல முறை யோசித்து, பிறகு எடுக்கும் முடிவிலேயே பல கோளாறுகள் வருகிறபோது சிந்திக்காதபோது எடுக்கப்படுகிற முடிவு எப்படி இருக்கும்!
இன்னும் சிலர் ஆத்திரத்தில் ஏதாவது செய்துவிட்டு அல்லது பேசிவிட்டு என்ன இருந்தாலும் நாம் அப்படி செய்திருக்கக் கூடாது. அவர்களை புண்படுத்திவிட்டோமே என்று பின்னால் வருந்திக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை பேசிவிட்டோமே என்ற குற்ற உணர்வு நடந்த சம்பவத்தை திரும்பத் திரும்ப மனக் கண்ணின் முன்பு கொண்டு வந்து மன நிம்மதியை அழித்துவிடும்.
நம்முடைய ஆத்திரம் நமக்கு கொஞ்சமாவது நன்மையை செய்திருக்கிறதா? ஆத்திரம் எனும் கையுறையை மாட்டிக் கொண்டு எதிராளியுடன் குஸ்தியில் இறங்கினால் எதிராளி எப்பேர்ப்பட்ட பலவீனமாக இருந்தாலும் சரி இறுதித் தோல்வி என்னமோ நிச்சயம் நமக்குத்தான்!
மன்னிப்புக் கோருதல்
சவ்தா (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரில் பிடிப்பட்ட எதிரிகளில் (அன்னை சவ்தா (ரலி) அவர்களின் முதல் கணவராக இருந்த சக்ரான் பின் அம்ரு (ரலி) அவர்களது சகோதரர்) அபூயஸீத் சுஹைல் பில் அம்ரு அவர்களும் ஒருவராக இருந்தார். பிடிப்பட்ட கைதிகளை கைது செய்து மதீனாவுக்கு அழைத்து வரப்பட்டபோது அபூயஸீத் சுஹைல் பின் அம்ரு தப்பி ஓடி விடுகிறார். பின்னர் அவரைத் தேடி அலைந்து கண்டுபிடித்து மீண்டும் கைது செய்து அவரது கை கால்களை கட்டி, அதனை கழுத்துடன் பிணைத்து இழுத்து வரப்பட்டார்.
இதனைப் பார்த்த சவ்தா
(ரலி) அவர்கள் உடனே ஆத்திரப்பட்டவர்களாக ( أَيْ أَبَا يَزِيدَ، أَعْطَيْتُمْ بِأَيْدِيكُمْ، أَلَا مُتُّمْ كِرَامًا؟ ) "அபூயஸீத்! உங்கள் கரங்களை நீங்களே கொடுத்து
மாட்டிக் கொண்டீர்களே! (இதற்கு,) நீங்கள் கண்ணியமாக மரணித்திருக்க வேண்டாமா?” (அதாவது,
கைதியாகப் பிடிக்கப்பட்டு கேவலப்படுவதைவிட, கண்ணியமாக செத்துப்போய் இருக்கலாமே! அது
மேலானதாக இருந்திருக்கும். அவமானம்! அவமானம்!) என்று (வாய் தவறி) பேச ஆரம்பித்து விட்டேன்.
இதனை செவியுற்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மிகவும் வருத்தப்பட்டார்களாக) ( يَا سَوْدَةُ، أَعَلَى اللَّهِ وَعَلَى رَسُولِهِ تُحَرِّضِينَ؟ ) “சவ்தா! (நீ என்ன வார்த்தை சொல்லி விட்டாய்.) அல்லாஹ்விற்கு எதிராகவும் அல்லாஹ்வின் தூதருக்கு எதிராகவும் (அவரை) உசுப்பேத்திவிடுகிறாயா? (அல்லாஹ்வையும் அவனது தூதரையும் எதிர்த்து போர்புரிகின்ற எதிரிகள் எவ்வாறு கண்ணியமான முறையில் மரணமடைய முடியும்?)” என்றார்கள்.
நான், ( يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا مَلَكْتُ نَفْسِي حِينَ رَأَيْتُ أَبَا يَزِيدَ مَجْمُوعَةً يَدَاهُ إِلَى عُنُقِهِ أَنْ قُلْتُ ) "நாயகமே! சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! அபூயஸீதை அவருடைய கைகள் கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் அவரை நான் பார்த்தபோது நான் மனம் தாளாமல் (ஆத்திரப்பட்டு) கூறிவிட்டேன்" என்று சொன்னேன். நூல்:- ஹாகிம், அல்பிதாயா வந்நிஹாயா, அத்தபரி, காமில்- இப்னு அதீர், சீரத் இப்னு ஹிஷாம்
இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் ஒருநாள் தெருவில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இரு வாலிபர்கள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அதில் ஒருவன் (இஸ்ரவேலரில் உள்ள) இவர் இனத்தைச் சேர்ந்தவன். மற்றொருவன் (கிப்திகளாகிய) இவருடைய எதிரிகளில் உள்ளவன். அவனுக்கு எதிராக உதவி செய்யுமாறு இவர் இனத்தைச் சேர்ந்தவன் இவரிடம் கோரினான்.
உடனே மூசா (அலை) அவர்கள் அவ்விருவருக்கும் மத்தியில் என்ன பிரச்சனை என்று விசாரித்தபோது தன் இனத்தைச் சேர்ந்த இஸ்வேலர்களில் உள்ளவன் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்தார்கள். கிப்தி இனத்தைச் சேர்ந்தவனிடம் இதனை எடுத்துரைத்த போது அவன் அதனை ஏற்க மறுத்து வாக்குவாதம் செய்தான்.
இதனால் ஆத்திரப்பட்டு மூசா (அலை) அவர்கள் அந்த கிப்தி இனத்தைச் சேர்ந்தவனை பலமாக ஒரு குத்து விட்டார்கள். அதன் வலி தாங்காமல் அவன் இறந்துவிட்டான். ஆஹா! நாம் பெரும் தவறிழைத்து விட்டோமே என்று எண்ணி உடனே அல்லாஹ்விடம் பாவன்னிப்பு கோரினார்கள். இந்நிகழ்ச்சியைப் பற்றி திருக்குர்ஆன் (28:15,16) பேசுகிறது.
நாம் சில நேரங்களில் ஆத்திரப்பட்டு தடித்த வார்த்தைகளை பேசிவிடுவதும், தவறுகளை செய்து விடுவதும் இயற்கை தான். ஆனால் நமது பேச்சிலும், செயலிலும் உள்ள தவறுகளை பிறர் சரியாக படம் பிடித்துக் காட்டும்போது அதனை உணர்ந்து சம்பந்தப்பட்டவர்களிடம் சரியான முறையில் மன்னிப்பு கோருவதே முறையாகும். மீண்டும் ஆத்திரத்தில் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று உறுதியாக எண்ண வேண்டும்.
மாறாக நாம் ஆத்திரத்தில் பேசியவைகளுக்கும், செய்தவைகளுக்கும் நியாயம் கற்பிக்க வார்த்தைகளை வளர்த்து கொண்டே போனால், அது நன்மையைக் காட்டிலும் நாசத்திற்கே அடிகோல் இடும். மென்மேலும் நாம் செய்த தவறுகள் வெளிப்படவும், நல்லுறவு பாழ்படவும் செய்யும்.
அமைதியாக இருக்க வேண்டும்
ஹிந்தா என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றுக் கொள்வதற்காக
அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அண்ணலார் அப்பெண்ணிடம் இனிமேல் இணைவைப்பு,
விபச்சாரம், திருட்டு
போன்றவைகளை செய்யக் கூடாது என்று உறுதிமொழி கேட்டுக் கொண்டே வந்தபோது அதன் தொடரில்
வறுமைக்கு அஞ்சி பிள்ளைகளைக் கொல்லக்கூடாது என்ற வார்த்தை வந்தது அப்போது அப்பெண்மணி
ஆத்திரப்பட்டவராக, ( ربَّيْناهم صغارًا وقتَلْتُموهم
كبارًا فأنتُم وهُم أعلَمُ ) “நாங்கள் எங்கள் பிள்ளைகளை
நன்றாக வளர்த்தோம். அவர்கள் பெரியவர்களானதும் (பத்ரு மற்றும் உஹது யுத்தக் களங்களில்)
நீங்கள் தான் அவர்களைக் கொன்று குவித்துவிட்டீர்களே! என்ன நடந்தது என்று உங்களுக்கும்
அவர்களுக்கும்தான் தெரியும்" (ஹிந்தாவின் மகனான ஹன்ளலா பின் அபூசுஃப்யான் பத்ரு
போரில் கொல்லப்பட்டிருந்தார்) என்று காரமாக பேசினார்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து சிரித்து மல்லாந்து விழுந்தார்கள். அதைக் கண்டு நபியவர்கள் புன்னைகைத்தார்கள். அப்போது அண்ணலார் உறுதிமொழியை மேலும் வாசிக்கவா? என்று மட்டுமே அமைதியாக கேட்டார்கள். நூல்:-அர்ரஹீகுல் மக்தூம், மதாரிக்குத் தன்ஸீல்
பிறர் ஆத்திரப்பட்டு இரத்தம் கொதித்து காரசாரமாக பேசும்போது நாம் சற்று பதட்டப்படாமல் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பதிலுக்கு நாமும் கத்தினால் அல்லது தடித்த வார்த்தைப் பேசினால் நிலைமை சீரழியுமே தவிரச் சீரடையாது.
மற்றவர்களின் உணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து அவற்றை வடிய விடவேண்டும். மாறாக எதிர்த்து பேசினால்? நம் கோபத்திற்கு மதிப்பில்லாமல் ஆக்குகிறார்களே! நம் கோபத்தில் நியாயமில்லை என்று எண்ணுகிறார்களே! என்ற வேதனையில் அவர்களது கோபம் அதிகமாகும்.
நல்ல சமயம் பார்த்து தவறுக்கும் தனக்கும் எவ்வளவு தூரம், எங்கே தவறு நடந்தது என்பன போன்றவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். உண்மையிலேயே அத்தவறுக்கு நாம் காரணமானால் அதற்காக வருத்தம் தெரிவிக்கலாம்.
நம் குடும்பத்தினர்களுக்குக்கூட நம்மீது சில நேரங்களில் ஆத்திரம் வரும். "சரி சொல்லு! என்மேல் என்ன கோபம்!" என்று கேட்டு ஒரு வடிகால் அமைத்து விடவேண்டும். இல்லாவிட்டால் சேர்த்து வைத்து கொண்டு ஒரு பெரிய சண்டையாக ஆக்கிவிடுவார்கள். அல்லது பலரை வைத்து கொண்டு மானத்தை வாங்கிவிடுவார்கள்.
மேலதிகாரியாக இருந்தால், "ஏதாச்சும் என்மேல் ஆத்திரம் இருந்தால் நல்லாத் திட்டிடுங்க, இப்படி தண்டிக்காதிங்க" என்று சொன்னால் இறங்கி வருவார்கள்.
சோப்பைக் காணோம், சீப்பைக் காணோம் என்று வீட்டை இரண்டாக்குபவர்கள், துவட்டிக் கொள்ளும் துண்டு வைத்த இடத்தில் இல்லை என்பதற்காக கடுமையாகக் கத்துபவர்கள், பஸ்ஸிற்காகக் காத்திருந்து காத்திருந்து வாழ்க்கையே வெறுத்துவிட்டது! இந்த பஸ்க்காரன் செத்துட்டானா! தொலைஞ்சுட்டானா!" என்று அமில வார்த்தைகளை அள்ளி வீசுபவர்கள் என மக்களில் பல்வேறு வகையினர் உண்டு.
இவ்வாறு அற்ப விஷயங்களுக்கெல்லாம் ஆத்திரப்படுபவர்கள் வலிய முன் வந்து தொல்லைகளை வரவழைத்துக் கொள்பவர்களே! என்று விளங்க வேண்டும். அர்த்தத்தோடு ஆத்திரப்பட்டால் பரவாயில்லை.
பிறரின் குணமறிந்து மிக நேர்த்தியோடு வாழக்கூடிய
மனப்பக்குவத்தை நமக்கு இறைவன் தந்து அருள்பாலிப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்-9840535951
அருமை அருமை Hazrath
ReplyDelete