Search This Blog

Monday, 20 December 2021

உன்னால் தான்…

 

உன்னால் தான்

 

وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ

 

மேலும் உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது.      (திருக்குர்ஆன் : 4:79)

 

மனிதனுக்கு ஏற்படும் நோய்நொடிகள், பொருளாதார நஷ்டம், அவனுக்கு வரவேண்டிய வரவுகள் தடைபடுவது, அவனுக்கு கிடைக்கவேண்டிய வெற்றி தாமதமாகுவது, அவனுடைய குடும்பத்தார்கள் அவனுடைய சொல்லுக்கு கட்டுப்பாடாமல் போவது, அவனுக்கு நேரும் மனக்கவலைகள், இன்னபிற துன்பத் துயரங்கள் அனைத்திற்கும், அவனுடைய தவறான செயல்பாடே காரணம் என்கிறது திருக்குர்ஆன். ஆம்! அது, சத்தியம் என்பதில் சந்தேகமில்லை.

 

இதை உணர்ந்து அவன் தன்னுடைய செயல்பாட்டை சீர்திருத்திக்கொண்டால் வெற்றி காணலாம்.


நிலநடுக்கங்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لا تَقُومُ السّاعَةُ حتّى يُقْبَضَ العِلْمُ، وتَكْثُرَ الزَّلازِلُ، ويَتَقارَبَ الزَّمانُ، وتَظْهَرَ الفِتَنُ، ويَكْثُرَ الهَرْجُ - وهو القَتْلُ القَتْلُ - حتّى يَكْثُرَ فِيكُمُ المالُ فَيَفِيضَ ) கல்வி கைப்பற்றப்படாத வரை, நிலநடுக்கங்கள் அதிகமாகாத வரை, காலம் சுருங்கிடாத வரை, குழப்பங்கள் வெளிப்படாத வரை, (ஹர்ஜ் எனும்) கொலை மிகுதமாகாத வரை, உங்களுடைய செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1036

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இப்னு ஹவாலா (ரலி) அவர்களின் தலையில் கை வைத்துக் கொண்டு, "ஹவாலாவின் மகனே! புனித (மதீனா) பிரதேசத்திலிருந்து கிலாபத் அகற்றப்பட்டு, நிலநடுக்கங்களும், குழப்பங்களும், பயங்கரமான பெரிய விஷயங்களும் நிகழத் தொடங்கிவிட்டால், மறுமைநாள் எனது இரு கைகளுக்கும் உனது தலைக்கும் இடைப்பட்ட தூரத்திற்கு வந்துவிட்டது என்பதை (அறிந்து கொள்)" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்

 

நிலநடுக்கங்கள் இந்த சமுதாயத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான ஒரு நிகழ்வாகவோ, அல்லது குழப்பங்களுக்கும் பாவங்களுக்கும் தண்டனையாகவோ அமையலாம்.

 

மனிதனிடம் பாவங்கள் அதிகரிக்கும்போது அல்லாஹ் இந்த உலகத்தை அழிப்பதற்கு ஆயத்தமாகி விடுகிறான். அதன் துவக்கமாக நிலநடுக்கங்கள் ஏற்படலாம். எனவே, இந்த நிலநடுக்கங்கள் மூலம் மனிதன் படிப்பினை பெற்று, தம்மை திருத்திக்கொள்ள முயல வேண்டும்.

 

மனிதனுக்கு ஏற்படும் கவலைகள், நஷ்டங்கள், அழிவுகள் என அனைத்தும் அவன் ஆற்றிய வினைக்கு எதிர்வினையாகக்கூட இருக்கலாம் என்று இஸ்லாம் இயம்புகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا يُصِيبُ رَجُلًا خَدْشُ عُودٍ، وَلَا عَثْرَةُ قَدَمٍ، وَلَا اخْتِلَاجُ عِرْقٍ إلَّا بِذَنْبٍ وَمَا يَعْفُو اللَّهُ عَنْهُ أكْثَرُ ) ஒரு மனிதருக்குச் சிறு குச்சியால் ஏற்படும் கீறலும், கால் இடறலும், (சிமத்தால்) வியர்வை கொட்டுவதும்கூட அவரது பாவத்தால் விளைவதாகும். அல்லாஹ் மன்னிக்கும் பாவங்களோ அதிகம். அறிவிப்பாளர்:- கத்தாதா (ரஹ்) அவர்கள் நூல்:-  தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-79

 

பெரும்பாக்கியத்தை இழந்துவிட்டார்

 

அவர்களின் கைகள் சம்பாதித்த (தீமைகளின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிடுகிறது. திருக்குர்ஆன்:- 42:48

 

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஓர் அரபு பெண்ணைப் பற்றி (அவளை மணந்து கொள்ளுமாறு) கூறப்பட்டது. அண்ணலார் அப்பெண்ணை அழைத்து வருவதற்கு ஆளனுப்புமாறு அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவ்வாறே அவர்கள் ஆளனுப்பினார்கள்.

 

அந்தப் பெண் வந்து, (மதீனாவிலுள்ள) பனூ சாஇதா குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினாள். அண்ணலார் புறப்பட்டு அப்பெண்ணிடம் வந்து, அவள் இருந்த இடத்தில் நுழைய, அங்கே அப்பெண் தலையைக் கவிழ்ந்தபடி இருந்தாள். அண்ணலார் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துக்கொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், ( أَعُوذُ بِاللَّهِ مِنْكَ ) "உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று சொன்னாள்.

 

அண்ணலார், ( قَدْ أَعَذْتُكِ مِنِّي ) "என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்" என்று கூறினார்கள். மக்கள் அந்தப் பெண்ணிடம், "இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா? என்று கேட்க, அவள், "தெரியாது" என்று பதிலளித்தாள். மக்கள், "இவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்" என்று கூறினர். அப்பெண், ( أَنَا كُنْتُ أَشْقَى مِنْ ذَلِكَ ) "அவர்களை மணந்துக்கொள்ளும் நற்பெற்றை நான் இழந்து துர்பாக்கியசாலி ஆகிவிட்டேனே!" என்று (வருத்தத்துடன்) கூறினாள். நூல்:-  முஸ்லிம்-4091

 

அந்தப் பெண், தம்மை பெண் கேட்பவர் யார்? என விசாரித்திருக்கலாம். அப்பெண் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தால் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணமுடிக்கும் பாக்கியம் கிடைப்பெற்று உலக முஸ்லிம்களின் தாய் என்ற உயரிய அந்தஸ்த்தைப் பெற்றிருக்கலாம். அப்பெண் அவசரப்பட்டுக் கூறிய வார்த்தையால் பெரும்பாக்கியத்தை இழந்துவிட்டார்.

 

வெற்றி தாமதமாகுவது

 

அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் (செய்து கொண்டிருந்த) பாவத்தின் காரணமாகவே நாம் பிடித்துக் கொண்டோம். திருக்குர்ஆன்:- 29:40

 

ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ஷாம் தேசத்திற்கு அறப்போர் புரிய ஒரு படையை அனுப்பியிருந்தார்கள். சில நாட்களுக்கு பிறகு அந்த படைப்பிரிவிலிருந்து ஒரு தூதுவர் ஜனாதிபதி அவர்கள் சமூகம் வந்து, நமது இஸ்லாமியப் படை வெற்றி பெற்ற நற்செய்தியை மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

அப்போது ஜனாதிபதி அவர்கள்( مَتَى بَدَأَ الْقِتَالُ ؟"எந்த நேரத்தில் அறப்போர் ஆரம்பமானது?" என்று வினவினார்கள். அதற்கவர், "ளுஹா நேரத்திற்கு சற்று முன்னர்" (காலை நேரத்தில்) என்று கூறினார்.

 

ஜனாதிபதி அவர்கள்(  وَمَتَى كَانَ النَّصْرُ ؟ ) "(நமது படையினருக்கு) எப்போது வெற்றி கிடைத்தது?" என்று வினவினார்கள். அதற்கவர், “மஃக்ரிப் உடைய நேரத்திற்கு சற்று முன்னதாக” (மாலை நேரத்தில்) என்று பதில் கூறினார்.

 

ஜனாதிபதி அவர்கள் இந்த பதிலை கேட்டவுடன் அழ ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களது தாடி முழுவதும் அந்த அழுகையால் நனைந்துவிட்டது. சுற்றியிருந்தோர் ஜனாதிபதி அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர். எனினும், ஜனாதிபதி அவர்கள் அழுகையை நிறுத்தவில்லை. அப்போது சுற்றியிருந்தோர், ஜனாதிபதி அவர்களே! அவர் இப்போது நற்செய்தி தானே சொல்லியிருக்கிறார். அதற்கு சந்தோஷப்படுவதுதானே முறையாகும். ஆனால் நீங்களோ இவ்வளவு அதிகமாக அழுகிறீர்களே காரணமென்ன?" என்று வினவினர்.

 

ஜனாதிபதி அவர்கள்( وَاَللَّهِ إِنَّ الْبَاطِلَ لَا يَصْمُدُ أَمَامَ الْحَقِّ طَوَالَ هَذَا الْوَقْتِ إِلَّا بِذَنْبٍ أَذْنَبْتُمُوهُ أَنْتُمْ أَوْ أَذْنَبْتُهُ أَنَا ) "அல்லாஹ்வின் மீதாணையாக! அசத்தியத்திற்கெதிராக அறப்போராட்டத்தில் சத்தியத்திற்கான வெற்றிக்கு இவ்வளவு நேரம் வரை தாமதமாகாது. அப்படியானால் (இந்த வெற்றி தாமதமாக) மக்களாகிய நீங்கள் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும். அல்லது நான் ஏதாவது பாவம் செய்திருக்க வேண்டும்" என்று (பாவத்தின் வீரியத்தையெண்ணி) தனது அழுகைக்கான காரணத்தை விவரித்தார்கள். நூல்:- ஸிராஜுல் முலூக்-174 இமாம் அபூபக்ர் அத்தர்தூஷீ (ரஹ்)

 

செய்தது செய்யப்படும்                            

 

அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் (இம்மையிலும்) சுவைக்கும்படி அவன் செய்ய வேண்டியதாக இருக்கிறது. திருக்குர்ஆன்:- 30:41

 

இறைநேசர் ஸாபித்துல் புனானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஒருநாள் கடைவீதியில் ஒரு வாலிபன் ஒரு முதியவரை அடித்து கொண்டிருந்தான். அதைப்  பார்த்த நான் அவ்வாலிபனை தடுக்க முற்பட்டேன். அப்போது அந்த முதியவர், "அவனை ஒன்றும் செய்து விடாதீர். அவன் என் மகன்தான். என் பாவத்தால் தான் நான் இவ்வாறு சோதிக்கப்படுகிறேன். அதாவது, நான் வாலிபனாக இருந்தபோது இதே இடத்தில் இவ்வாறு தான் என் தந்தையை அடித்து நோவினை செய்தேன். அந்த பாவத்தின் கூலியைத்தான் இப்போது அனுபவிக்கிறேன்" என்றார்.

 

உன் பாவம்

 

இமாம் ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, இமாமவர்களே! நான் தஹஜ்ஜுத் எனும் அதிகாலை நேரத்தில் கண் விழிக்கிறேன். ஆனால், எழுந்து உளூ செய்து இரண்டு ரகஅத்துகள் தொழ முடியவில்லையே, இந்நிலை ஏன்? என்று வினவினார். அன்னார், ( قَدْ قَيَّدَتْكَ ذُنُوبُكَ )  "உன் பாவம் உன்னை கைது செய்து வைத்துள்ளது" என்று பதிலளித்தார்கள்.

 

தவறாக எண்ணம்

 

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு அறவே தீங்கிழைப்பது இல்லை. எனினும், மனிதர்கள் (தீய செயல்களைச் செய்து) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். திருக்குர்ஆன்:- 10:44

 

திருக்குர்ஆனின் தலைசிறந்த விரிவுரையாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( عُقُوبَةً يَا ابْنَ آدَمَ بِذَنْبِكَ ) மனிதா! உன் பாவத்திற்குத் தண்டனையாகவே உனக்குத் துன்பம் ஏற்படுகின்றது. நூல்:-  தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-79

 

பேரறிஞர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( حُرمتُ قيامَ اللَّيل خمسةَ أشهر بذنب أذنبتُه. قيل: وما ذاك الذَّنب؟ قال: رأيتُ رجلاً يبكي فقلت في نفسي: هذا مُرَاءٍ ) என் வாழ்நாளில் தொடர்ந்து தஹஜ்ஜுத் தொழுது வந்தேன். இடையில் ஐந்து மாதங்கள் தொடர்ந்து தஹஜ்ஜுத் தொழ முடியாமல் போனது. நான் செய்த ஒரு பாவத்தால் அந்த பாக்கியம் எனக்கு தடைப்பட்டது. அதாவது ஒரு நாள் பள்ளிவாசலில் ஒருவர் அமர்ந்து அழுதழுது பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த நான், "இவர் (வீட்டில் அமர்ந்து இவ்வாறு பிரார்த்திக்காமல், பள்ளிவாசலில் மக்கள் பார்க்கும் விதமாக இவ்வாறு பிரார்த்திக்கிறாரே, எனவே இவர்) முகஸ்துதிக்காரராக இருப்பாரோ?" என்று தான் எண்ணினேன். இவ்வாறு ஒரு முஸ்லிமைப்பற்றி தவறாக எண்ணிய பாவத்தின் காரணமாகவே ஐந்து மாதங்கள் தஹஜ்ஜுத் தொழும் பாக்கியம் கிடைக்காமல்  தடுக்கப்பட்டேன். நூல்:- இஹ்யா

 

பெரிய துன்பம்

 

யாரேனும் ஒருவன் தீமையை செய்தால் அதன் விளைவு அவன்மீதே விடியும்!   திருக்குர்ஆன் 4:111

 

ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருவர், குர்ஆனை மனனம் செய்து பிறகு அதை மறந்துவிட்டார் எனில் அது, (அவர் செய்த) பாவத்தின் விளைவு தான் என்று நாங்கள் அறிந்து கொள்வோம். மேலும்,  குர்ஆனை மனனம் செய்த பிறகு மறந்து விடுவதைக் காட்டிலும் பெரிய துன்பம் வேறென்ன இருக்க முடியும்? என்று கூறினார்கள்.  நூல்:-  தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னுகஸீர் அஷ்ஷூரா வசனம்-31

 

ஒருமுறை இறைநேசர் ஜுனைதுல் பாக்தாதி (ரஹ்) அவர்கள் குர்ஆன் முழுவதையும் மனனமிட்டிருந்த (ஹாஃபிளாக இருந்த) தன்னுடைய  ஒரு சீடருடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த சீடர் எதிரே வந்த அழகிய தோற்றமுடைய ஒரு கிறிஸ்துவ பெண்ணை கவனித்தார். அப்போது அந்த சீடர் குருவே! நாளை மறுமையில் இப்படிப்பட்ட அழகிய முகமும் நரகத்தில் வீசப்படும் தானே!" என்று கேட்டார். அதற்கு அன்னார் தன் சீடரிடம், "நீர் இச்சையுடன் அந்த பெண்ணைப் பார்த்துவிட்டீர் எனவே, நீர் பாவமன்னிப்பு தேடுவீராக!" என்றார்கள்.

 

தவறை ஒப்புக்கொள்ளாத அந்த சீடர் “நான் பாவம் செய்யவில்லையே, கேள்வி தானே கேட்டேன்" என்று வாதம் புரிந்தார். அவர் இறுதிவரை பாவமன்னிப்பு கோரவில்லை. (குர்ஆன் முழுவதையும் மனனமிட்டவராக இருந்தவர்) அந்த பாவத்தின் விளைவு இருபது ஆண்டுக்கு பிறகு, குர்ஆன் முழுவதையும் மறந்தவராகிவிட்டார்.

 

தவறை செய்துவிட்டு அதை நியாயப்படுத்துவது தான் மிகப்பெரிய தவறாகும். இது ஷைத்தானின் குணமாகும்.

 

பெற்றோர் செய்த பாவம்

 

குழந்தை பருவத்திலேயே பார்வை இழந்த அபுல் பிலாத் என்பவர், அறிஞர் அலா பின் பத்ரு (ரஹ்) அவர்களிடம் வந்து, அறிஞரே! மனிதன் அவனுடைய பாவத்தினால் சோதிக்கப்படுவான் என்கிறது திருக்குர்ஆன்(4:79). ( وَقَد ذَهَبَ بَصَرِی وَاَنَا غُلَامٌ ) "ஆனால், குழந்தை பருவத்திலேயே நான் பார்வையற்றவனாக ஆகிவிட்டேன். நான் அப்படி என்ன பாவம் செய்தேன்? என்று தன்னுடைய உள்ளக் குமுறலை வெளியிட்டார். அறிஞர் அவர்கள், (  وَبِذُنُوبِ وَالِدَیكَ ) "உன் பெற்றோர் செய்த பாவத்தாலும்கூட நீ சோதிக்கப்படலாம்" என்றார்கள்.

 

உஹதுப் போரில் படைத்தலைவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சொல்லை சில போர் வீரர்கள் மீறியதால் அண்ணலார் உட்பட அனைத்து முஸ்லிம்களும் சோதிக்கப்பட்டார்கள். தோல்வி மிக அருகில் வந்தது.

 

நம்முடைய வாழ்வில் ஏற்படும் துன்ப துயரங்கள், தோல்விகளுக்கெல்லாம்  நாமே காரணம் என்றுணர்ந்து அதை சீர்செய்துகொள்ள முறையாக முயற்சிக்க வேண்டும். மேலும், நமக்கு ஏற்படும் துன்ப துயரங்கள், தோல்விகளெல்லாம்  நீங்க, அல்லாஹுத்தஆலாவிடம் முறையாக பிராத்திக்க வேண்டும். நமக்கு அவ்வபோது ஏற்படும் துன்ப துயரங்களை எல்லாம் அல்லாஹுத்தஆலா நீக்கி, நம்மை ஆறுதல்படுத்துவானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

  1. மாஷா அல்லாஹ்! அருமையான ஆக்கம்!
    படிப்பினை பெற்று வாழ்வை சீராக்குவோம்

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...