Search This Blog

Monday, 20 December 2021

மக்காத குப்பைகள்

 

மக்காத குப்பைகள்

 

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

 

(மனிதன்) எதை கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.) திருக்குர்ஆன்:- 50:18

 

மனிதன் பேசும் வார்த்தைகள் மக்காதவை. அது கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்முடைய வார்த்தைகள் நமக்கு எதிரானவையாக அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

 

பழைய நிலை திரும்பக்கூடும்


"அவர்கள் அசுர பலத்துடன் இருக்கிறார்கள். அனைத்து துறைகளிலும் அவர்கள் நிரம்பியிருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் தான் வருவார்கள். நாம் எப்படி முயற்சித்தாலும் அதனால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை" என்று எண்ணுவதும் பேசித்திரிவதும் முறையல்ல. அல்லாஹ்வின் மீது நம்பிக்கையற்றவர்களே இவ்வாறு பேசித்திரிவார்கள். 


"அவர்கள் தான் வருவார்கள். அதன் பிறகு இவ்வாறு இவ்வாறு செய்துவிடுவார்கள்" என்று நமக்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்தால், அல்லாஹ்வும் ஆம்! அப்படி ஆகட்டும்! என்று சொல்லிவிட்டால், நமது நிலை என்ன ஆவது? என்று சற்று யோசிக்க வேண்டும்.


இஸ்லாமிய எதிரிகளான நம்ரூத், ஃபிர்அவ்னைவிட இவர்கள் பலமிக்கவர்களோ, கொடியவர்களோ அல்லர். அவர்களையே அல்லாஹ் இல்லாமல் ஆக்கிவிட்டான். எனவே, அல்லாஹ் நாடினால் அற்பப்பொருளைக் கொண்டு இவர்களை வீழ்த்திவிடுவான். அல்லது இவர்களைக்கொண்டே இஸ்லாத்தை பலப்படுத்தக்கூடும். இவர்களைக் கண்டு அஞ்சக்கூடாது. இவ்வாறே இவர்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். 


இஸ்லாமிய வரலாற்றில் தாத்தாரியாக்களால் முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். சொல்லி மாளாது. அல்லாஹுத்தஆலா கால ஓட்டத்தில் தாத்தாரியாக்களைக் கொண்டே இஸ்லாத்தை பலப்படுத்தி, பரவச் செய்தான்.


மக்காவின் பனூ மக்ஸூம் குலத்தாரின் அடிமையாக ஸின்னீரா (ரலி) அவர்கள் ( زِنِّيرةُ الرُّومية )  இருந்தார்கள். இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதற்காகவே அபூஜஹ்ல் போன்ற கொடியோர்கள் அம்மையார் மீது வர்ணிக்க முடியாதவாறு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். அதனாலேயே அம்மையாரின் கண்பார்வை போனது. அப்போது தான் அபூஜஹ்ல் அம்மையாரை நோக்கி, ( إِنَّ اللَّاتِ وَالْعُزَّى قَدْ فَعَلَا بِكَ هَذَا ) "லாத் மற்றும் உஸ்ஸா ஆகிய கடவுள்கள் தான் உன்னுடைய கண்பார்வையைப் போக்கிவிட்டது. (எனவே, நீ இஸ்லாத்தை விட்டு விடு!)" என்று கூறினான். 


அப்போது அம்மையார், ( كَلَّا وَاللَّهِ؛ لَا تَمْلِكُ اللَّاتَ وَالْعُزَّى نَفْعًا وَلَا ضَرًّا، هَذَا أَمْرُ اللَّهِ، وَرَبِّيٌّ قَادِرٌ عَلَى أَنْ يَرُدَّ عَلَيَّ بَصْرِي ) "அப்படியல்ல! அல்லாஹ்வின் மீதாணையாக! (ஒரு மனிதனுக்கு) நல்லது மற்றும் தீயதை கொடுக்கும் ஆற்றல் (உம்மைப் போன்றோர் கடவுளாகளாக வழிபடும்) லாத் மற்றும் உஸ்ஸாவுக்கு இல்லை. (என் கண்பார்வை பறிபோன) இந்த செயல் அல்லாஹ்வின் உத்தரவால் ஏற்பட்டது. என்னுடைய கண்பார்வையை மீண்டும் தருவதற்கு என் இறைவன் ஆற்றல் பெற்றவன்" என்று கூறினார்கள். அவ்வாறே மறுநாள் காலை பொழுதில் அம்மையாரின் கண்பார்வையை அல்லாஹுத்தஆலா மீண்டும் தந்துவிட்டான். 


இதைக் கண்ட குறைஷி இறைமறுப்பாளர்கள், ( إِنَّ هَذَا مِنْ سِحْرِ مُحَمَّدٍ ) "(கண்பார்வை பறிபோன ஸின்னீராவுக்கு மீண்டும் கண்பார்வை வந்துவிட்ட) இந்த செயல் முஹம்மத் செய்துவிட்ட சூனியம் தான்" என்றனர். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸின்னீரா (ரலி) அவர்களை விலைக்கு வாங்கி உரிமைவிட்டார்கள். 


நிச்சயமாக, நாம் இழந்துவிட்ட வளங்களை அல்லாஹ்வால் மீட்டித் தர முடியும் என்றே நம்பிக்கை கொள்ள வேண்டும். கை மீறி சென்றுவிட்டது. அது மீண்டும் கிடைப்பது சாத்தியமில்லை என்று நிராசை கொள்வது இறைநம்பிக்கைக்கு எதிரானது.


உக்பா பின் ஆமீர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "நாயகமே! வெற்றிக்கு என்ன வழி?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( امْسِكْ عَلَيْكَ لِسَانَكَ ، وَلْيَسَعْكَ بَيْتُكَ ، وابْكِ عَلَى خَطِيئَتِكَ ) "நீ உமது நாவை கட்டுப்படுத்திக்கொள். உமது இல்லமே உமக்கு விசாலமானதாக இருக்கட்டும். நீ செய்துவிட்ட பாவத்திற்காக அழு" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2330


அதிகமாகப் பேசுபவர்தான் அதிகமான பிழைகளைச் செய்கின்றார். இவற்றின் காரணமாக பாவத்திற்கும், மக்களின் ஏளனத்துக்கும் கேலிக்கும் ஆளாகின்றார்.

 

கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள். வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை.

 

எனவே, இறைநம்பிக்கையுள்ள அடியார்கள் பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். தாம் மொழிகின்ற ஒவ்வொரு சொல்லையும் வானவர்கள் பத்திரப்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை எந்நேரமும் மனத்தில் இருத்திக் கொண்டே பேச வேண்டும்.

 

தவறான வார்த்தைகள் அது மக்காத குப்பைகளாகும். அது நம்மை நஷ்டத்தில் அல்லது நரகத்தில் தள்ளிவிடலாம்.

 

இப்போதெல்லாம் கடைகளிலும், பொது இடங்களிலும் "இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது" என்று பெரிய எழுத்தால் எழுதிய பதாகை ஒட்டப்படுகிறது. காரணம் இந்த தளத்திற்குள் உங்களை கண்காணிக்கப்படுகிறது. நீங்கள் ஏதாவது தவறு செய்தால் பிடிக்கப்படுவீர் என்று எச்சரிப்பதுதான் நோக்கம். இதுபோன்றே, அல்லாஹுத்தஆலா, "என் அடியார்களே! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள்" என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் எச்சரிக்கிறான். தலைப்பில் காணும் திருவசனமும் இதையே எடுத்துரைக்கிறது.

 

சல்லி வார்த்தை

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                                                      ( وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ ) ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-6478, முஸ்லிம்-5711, திர்மிதீ-2236

 

சில நேரங்களில் நாம் நம்மையும் அறியாமலேயே சில கெட்ட பேச்சுக்களைப் பேசிவிடுகிறோம். அதன் விளைவு மிகவும் பெரியதாக அமைந்து விடுகிறது என்பதை நாம் யோசிப்பதில்லை.

 

ஒருவரிடம் தமக்கு தேவை இருப்பதாலோ அல்லது ஓர் ஆட்சியாளரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ அவர்கள் செய்யும் தவறையும் சரி என்று சொல்வது, பிறர் மனம் நோகும் வகையில் பேசுவது, பங்காளிகள் அல்லது நண்பர்களிடையே பகைமூட்டும் வகையில் பேசுவது ஆகியன நமது பார்வைக்கு ஒரு குற்றமாகவே தெரிவதில்லை. ஆனால், இந்தப் பேச்சுக்களின் பின்விளைவு கடுமையானது என்பதால் இவை நரகத்தின் அதலபாதாளத்தில் தள்ளிவிடும். ஆகவே, எதை பேசினாலும் பேசுவதற்கு முன் அதன் பின்விளைவுகள் குறித்து யோசித்து பேச வேண்டும். இதுவே இறை நம்பிக்கையாளர்களின் பண்பாகும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا، أَوْ لِيَصْمُتْ ) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும். நூல்:- புகாரீ-6474

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ تَدْعُوا عَلَى أَنْفُسِكُمْ وَلاَ تَدْعُوا عَلَى أَوْلاَدِكُمْ وَلاَ تَدْعُوا عَلَى أَمْوَالِكُمْ لاَ تُوَافِقُوا مِنَ اللَّهِ سَاعَةً يُسْأَلُ فِيهَا عَطَاءٌ فَيَسْتَجِيبُ لَكُمْ ) நீங்கள் உங்கள் மீதோ உங்கள் குழந்தைகள் மீதோ உங்களின் பணியாளர் மீதோ உங்கள் செல்வங்கள் மீதோ சாபமிடாதீர்கள். நீங்கள் சபிக்கும் நேரம் வளமும் உயர்வும் கொண்ட அல்லாஹ்விடம் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் நேரமாக இருந்து, அதில் உங்களுடைய சாபம் இடம்பெற்றால் அது ஏற்றுக்கொள்ளப்படும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5736, அபூதாவூது-1309

 

முகங் குப்புற விழச்செய்யும்

 

எவன் பாவத்தைச் சம்பாதிக்கின்றானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதனைச் சம்பாதிக்கின்றான். திருக்குர்ஆன்:- 4:111

 

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்துக்கொண்டு, ( كُفَّ عَلَيْكَ هَذَا ) "இதை (அவசியமற்ற பேச்சுகளிலிருந்து) தடுத்து (பாதுகாத்து)க் கொள்" என்று கூறினார்கள். அப்போது நான், ( يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ )  "நாயகமே! நாங்கள் பேசுகின்ற பேச்சுகளால் நாங்கள் தண்டிக்கப்படுவோமா?" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், ( وَهَلْ يَكُبُّ النَّاسَ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ إِلاَّ حَصَائِدُ أَلْسِنَتِهِمْ )  "மக்களை அவர்களின் நாவுகள் அறுவடை செய்கின்றவற்றைத் தவிர வேறெதுவும் அவர்களின் முகங்கள் மீது (முகங் குப்புற) விழச் செய்கின்றனவா?" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2538

 

அதிகம் பேசுபவர் வீழ்த்தப்படுவார். வீழ்ந்தால் பாவம் பெருகிவிடும். குழப்பங்களும் அதிகரிக்கும். இது தொடர்பாக பல நபிமொழிகள் பேசுகின்றன. இந்த நபிமொழியில் நாவுகள் அறுவடை செய்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது: பொதுவாக அறுவடையில் பசுமையானது காய்ந்தது, நல்லது நலிந்தது வருவதுபோல நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளிலும் நல்லவை கெட்டவை வெளிப்படும். அவற்றை தவிர்க்கும்படி கூறி அது நரகில் சேர்க்கும் என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது. நாவின் கெடுதிகளில் (குஃப்ர்) இறை நிராகரிப்பு, திட்டுதல், புறம் பேசுதல், கோள் சொல்லுதல் இவை முக்கியமானவையாகும். இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

 

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களை எமனுக்கு ஆளுநராக அனுப்பி வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்கள். அதில் பிரதானமானது ( يَا مُعَاذُ أَمسِك عَلَيكَ لِسَانَكَ ) முஆதே! உம் நாவைப் பேணிக் கொள்வீராக!


சாதாரணமான ஒருவர் நாவைப் பேணுவதை விட, பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட ஒருவர் நாவை மிகவும் பேண வேண்டும் என்பதை இந்த சமுதாயத்திற்கு உணர்த்துவதற்காகத்தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்படி அறிவுரை வழங்கினார்கள்.

 

நோயாளி

 

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அண்ணலார் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், "கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களை தூய்மைப்படுத்திவிடும்" என்று கூறுவார்கள். (தமது அந்த வழக்கப்படியே) அண்ணலார் கிராமவாசியிடம், ( لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ ) "கவலை வேண்டாம் இறைவன் நாடினால் (இது) உங்களைத் தூய்மைப்படுத்தும்" என்று கூறினார்கள்.

 

இதைக் கேட்ட அந்தக் கிராமவாசி, ( قُلْتَ طَهُورٌ كَلاَّ بَلْ هِيَ حُمَّى تَفُورُ عَلَى شَيْخٍ كَبِيرٍ، تُزِيرُهُ الْقُبُورَ ) "நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாக்கிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்" என்று சொன்னார். உடனே அண்ணலார், ( فَنَعَمْ إِذًا )  "அப்படியென்றால் ஆம். (அப்படித்தான் நடக்கும்.)" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3616

 

அதன்படியே அந்த கிராமவாசி அடுத்த நாள் இறந்து போனார். நூல்:- இர்ஷாதுஸ் ஸாரீ

 

அகம்பாவம்

 

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது . ஒரு மனிதர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அண்ணலார், ( كُلْ بِيَمِينِكَ )  "வலக் கையால் உண்பீராக!" என்று கூறினார்கள். அவர், ( لاَ أَسْتَطِيعُ ) "என்னால் முடியாது' என்றார். அண்ணலார், ( لاَ اسْتَطَعْتَ ) "உம்மால் முடியாமலே போகட்டும்" என்று கூறினார்கள். அகம்பாவமே அவரை (அண்ணலாருக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்கு கையை உயர்த்த முடியாமல் போனது. நூல்:- முஸ்லிம்-4110

 

தவறான வார்த்தைகளைப் பேசி சிக்கிக்கொள்ளாமல் நம்மை அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...