அல்லாஹ் நாடினால்...
وَلَا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا إِلَّا أَنْ
يَشَاءَ اللَّهُ
(நபியே!) நீங்கள் எந்த விஷயத்தைப் பற்றியும் "நிச்சயமாக நான் அதனை நாளைக்குச் செய்து விடுவேன்" என்று கண்டிப்பாகக் கூறாதீர்கள். ஆயினும், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால் நாளைக்குச் செய்வேன்) என்று கூறுங்கள். திருக்குர்ஆன்:- 18:23, 24
இஸ்லாம் நாம் பேசும் வார்த்தைகளில் சில ஒழுங்குமுறைகளைக் கற்றுத் தருகிறது. நாம்
எதிர்காலத்தில் ஒன்று செய்வதாக தீர்மானிக்கும்போது, வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் நாட்டத்துடன்
சேர்த்தே தீர்மானிக்கவேண்டும். அவன்தான் மறைவானவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
குகைவாசிகளைப்பற்றி
அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் குகைவாசிகளின் சம்பவம் குறித்து மக்கள் கேட்டபோது,
அண்ணலார் (இன்ஷா அல்லாஹ் சொல்லாமல்)
( غَدًا أُجِيبُكُمْ
) “நாளைக்கு உங்களுக்குப் பதிலளிக்கிறேன்" என்று
மட்டும் கூறினார்கள். அதனால் பதினைந்து நாட்கள் அவர்களுக்கு (வஹீ எனும்) இறைச்செய்தி
வரத் தாமதமாயிற்று. அதன்பிறகு தலைப்பில் காணும் வசனங்கள் இறங்கியது. நூல்:- தஃப்சீர்
இப்னு கஸீர்
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் வந்து கேள்விகள் கேட்கும்போது, உடனடியாக அல்லாஹ் இறைச்செய்தியை அனுப்பி பதிலளித்துவிடுவான்.
ஆனால், அண்ணலாரின் வாழ்க்கையில் இரண்டு தருணங்களில் கேள்விக்குரிய பதில் (இறைச்செய்தி)
வர தாமதமாயிற்று. ஒன்று மேற்கண்ட நிகழ்வின்போது, மற்றொன்று அண்ணலாரின் வீட்டுக்குள் அண்ணலாருக்கே
தெரியாமல் நாய் இருந்ததால் இறைச்செய்தியை கொண்டு வருபவரான வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள்
அண்ணலாரின் வீட்டுக்குள் நுழையமுடியாமல் தடுக்கப்பட்டார்கள். காரணம் நாய் இருக்கும்
வீட்டுக்குள் வானவர்கள் நுழைவதில்லை. இது அல்லாஹ்வின் நியதி.
அறப்போர் வீரர்கள்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஒருமுறை) இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள், "நான் இன்றிரவு என்னுடைய தொண்ணூறு துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்று எடுப்பார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அவர்களுடைய தோழர் ஒருவர், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எனச் சொல்லுங்கள்"
என்றார். சுலைமான் (அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்'
என்று கூறாமல், தன் துணைவியர் அனைவரிடமும் சென்று வந்தார்கள். அவர்களில்
ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு தோளுடைய (அரை) மனிதனையே
(குறைப்பிரசவமாக) பெற்றெடுத்தார்.
وَايْمُ الَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ قَالَ إِنْ شَاءَ اللَّهُ . لَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ فُرْسَانًا أَجْمَعُونَ ) ) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! சுலைமான் (அலை) அவர்கள் 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறியிருந்தால், (அவர்கள் ஒவ்வொருவரும் வீரர்களைப் பெற்றெடுத்து) அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் குதிரை வீரர்களாக அறப்போர் புரிந்திருப்பார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6720, முஸ்லிம்-3404
நாம் எதிர்காலத்தில் எதை செய்வதாகவோ அல்லது சொல்வதாக இருந்தாலும் "நாளைக்கு சொல்கிறேன்; அல்லது செய்கிறேன்" என்று பொதுவாகச் சொல்லக் கூடாது. அல்லாஹ் நாடினால் (இன்ஷா அல்லாஹ் என்ற பதத்தையும்) என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா வழி காட்டுகின்றான்.
கொலையாளி யார்?
(இறைத்தூதர் மூசாவே!), "எங்களுக்காக உம்முடைய இறைவனிடம் வேண்டுவீராக! அது எத்தகையது என்பதை அவன் எங்களுக்கு விளக்குவான் ஏனெனில், பசுக்கள் எங்களைக் குழப்புகின்றன. அல்லாஹ் நாடினால் நிச்சயம் நாங்கள் நேர்வழி கிடைக்கப் பெறுவோம்" என்றனர். திருக்குர்ஆன்:- 2:70
இஸ்ரவேலர்கள் ஒரு கொலையாளியைக் கண்டுபிடிக்க இறைவனிடம் உதவிகோரினர். அப்போது இறைவன் ஒருமாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியை எடுத்து வந்து கொலைசெய்யப்பட்டு கிடப்பவனை ஒரு தட்டுதட்டினால் அவனே எழுந்து தன்னைக் கொன்றவனை அடையாளம் காட்டுவான்" என்று விவரித்தான்.
அவர்கள் அந்தப் பசு குறித்து தம் இறைத்தூதரிடம் அந்த மாட்டுக்கு என்ன வயது இருக்கவேண்டும்? அது ஆணா? பெண்ணா? அதன் நிறமென்ன? அது உழவுக்கு பயன்படுத்தப்பட்டதா? இல்லையா? என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு நச்சரித்தனர். இவ்வாறு அவர்கள் தமக்குத் தாமே நெருக்கடியை வரவழைத்துக்கொண்டதால் இறைவனும் அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினான். அவர்கள் மட்டும் ஏதோ ஒரு பசுவை அறுத்திருந்தால், பிரச்சனை தீர்ந்திருக்கும். ஆனால் அவர்களே கடுமையாக்கிக் கொண்டார்கள்; அல்லாஹ்வும் கடுமையாக்கினான்.
அல்லாஹ், "அது ஒரு பசு; அது கிழடுமல்ல; கன்றுமல்ல; அவ்விரண்டுக்கும் இடைப்பட்டது என்று கூறினான். அதாவது அது மிகப்பெரும் கிழட்டு பசுவுமல்ல; பொலிகாளையுடன் சேராத இளங்கன்றுமல்ல. அது மஞ்சள் நிறமுடையது. பார்ப்போரைப் பரவசப்படுத்தும்” என்று கூறினான்.
இந்த பசுவைத் தேடி பல சிரமங்கள் அனுபவித்த பிறகு, "இவ்வாறான பசுக்கள் அதிகமாக உள்ளதால் அவை எங்களை குழப்புகின்றன. எனவே அல்லாஹ் நாடினால் நிச்சயம் நாங்கள் நேர்வழி கிடைக்கப்பெறுவோம். அதாவது அந்த குறிப்பிட்ட பசுவை கிடைக்கப்பெறுவோம்" என்று கூறினர்.
"அல்லாஹ் நாடினால் அந்தப் பசு எங்களுக்கு கிடைக்கப் பெறும்" என்று அவர்கள் கூறிய பிறகுதான் குறிப்பிட்ட அந்தப் பசு அவர்களுக்கு கிடைக்கப்பெற்று, அதை அறுத்து அவர்கள் பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டார்கள்.
இந்நிகழ்வைப்பற்றியே மேற்காணும் திருவசனமும், மேலும் பகரா அத்தியாயத்தின் சில திருவசனங்களும் கூறுகிறது.
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْلَا أَنَّ بَنِي إِسْرَائِيلَ قَالُوا: ﴿وَإِنَّا إِن شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ﴾ لَمَا أُعْطُوا، وَلَكِنِ اسْتَثْنَوْا ) இஸ்ரவேலர்கள், "அல்லாஹ் நாடினால் நிச்சயம் நாங்கள் நேர்வழி கிடைக்கப்பெறுவோம்" என்று மட்டும் சொல்லாதிருந்தால் அந்தப் பசுவை அவர்கள் அடைந்தே இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்கள் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று கூறி(யதால் தான் அதை அடைந்த)னர். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு மர்தவைஹி, இப்னுகஸீர்
கற்றுக்கொள்ள செல்லும்போது...
(இறைத்தூதர்) மூசா, "அல்லாஹ் நாடினால், என்னை நீர் பொறுமையாளனாகக் காண்பீர்; எந்த விஷயத்திலும் நான் உமக்கு மாறு செய்யமாட்டேன்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 18:69
அல்லாஹ்வின் உத்தரவுக்கிணங்க இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் நல்லடியார் கிளுர் (அலை) அவர்களை சந்தித்து சில ஞானங்களை கற்றுக்கொள்ள சென்றார்கள். அவ்வாறே அன்னாரைச் சந்தித்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்கள்.
அப்போது கிளுர் (அலை) அவர்கள், "மூசா! என்னுடன் பொறுமையாக இருப்பதற்கு உங்களால் ஒருபோதும் முடியாது; அல்லாஹ்வின் ஞானங்களில் அவன் எனக்கு கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீர் அறிய மாட்டீர்; அதைப்போன்றே அல்லாஹ்வின் ஞானங்களில் அவன் உமக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உம்மிடம் உள்ளது; அதை நான் அறிய மாட்டேன்" என்று கூறினார்.
அப்போதுதான் மூஸா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னை நீ பொறுமையாளராகக் காண்பீர்
- அதாவது உம்முடைய நடவடிக்கைகளை நான் காணும்போது பொறுமை காப்பேன். எதிர்த்துக் கேள்வி
கேட்க மாட்டேன்; எந்த விஷயத்திலும்
நான் உமக்கு மாறு செய்யமாட்டேன்" என்று கூறினார்கள். இதையே மேற்காணும் திருவசனம்
கூறுகிறது. நூல்:- தஃப்சீர் இப்னுகஸீர்
அங்கிருந்து வெளியேறுவார்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் ஒவ்வொரு நாளும் அந்தத் தடுப்புச் சுவரைக் குடைகிறார்கள். இறுதியில், மறுமுனையில் சூரிய ஒளியை அவர்கள் காணும் போது அவர்களின் பொறுப்பாளர், "நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்; நாளை குடைந்து கொள்வீர்கள்" என்று கூறுவார்.
அதற்கேற்ப அவர்கள் மறுநாள் திரும்பி வருவார்கள். அச்சுவர் முன்பிருந்ததைப் போன்ற உறுதியாக நிற்கும். அவர்களுக்குரிய காலக் கெடு முடிந்து, மனிதர்கள்மீது அவர்களை அனுப்ப அல்லாஹ் நாடும் போது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் தடுப்புச் சுவரைக் குடைவார்கள். இறுதியில், மறுமுனையில் சூரிய ஒளியை அவர்கள் காணும் போது அவர்களின் பொறுப்பாளர், ( ارْجِعُوا فَسَتَحْفِرُونَهُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ. وَيَسْتَثْنِي ) "நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். அல்லாஹ் நாடினால் நாளை அதைக் குடைந்து கொள்வீர்கள்" என்று இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எனும் வாக்கியத்தை இணைத்துக் கூறுவார்.
அவர்கள் மறுநாள் திரும்பி வருவார்கள். அவர்கள் முந்திய நாள் விட்டுச்சென்ற நிலையிலேயே அச்சுவர் இருக்கும். எனவே, அதைக் குடைந்து அங்கிருந்து வெளியேறி மனிதர்களிடம் வருவார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்கஹ்ஃப் வசனம்-97
மணக்கொடையாக
அதற்கு அவர் (நபி மூசாவிடம்) கூறினார்: "நீர் எனக்கு எட்டு வருடங்கள் வேலை செய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு புதல்வியரில் ஒருவரை நான் உமக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீர் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அது உமது விருப்பம். நான் உமக்கு (அதிகமான) சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீர் என்னை நல்லவர்களில் ஒருவனாகவே காண்பீர்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 28:27
இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் எகிப்து தேசத்திலிருந்து மத்யன் நகரை நோக்கி வந்து
கொண்டிருந்தபோது, இடையில் இரு பெண்களின்
ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட உதவினார்கள். எனவே, இப்பெண்கள் தமது தந்தையிடம் சென்று மூசா (அலை) அவர்களைப்பற்றி
எடுத்துரைத்து, இவரையே நமக்கு பணியாளராக
நியமிக்கலாம் என்று ஆலோசனை கூறினர்.
எனவே, அப்பெண்களின் தந்தையிடம் மூசா (அலை) அவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். பிறகு அவர் மூசா (அலை) அவர்களை நோக்கி, என் இரு புதல்வியரில் ஒருவரை உங்களுக்கு மணமுடித்து வைக்க விரும்புகிறேன். அதற்கு (மஹ்ர் எனும்) மணக்கொடையாக நீங்கள் என்னிடம் எட்டு ஆண்டுகள் வரை எங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருக்க வேண்டும். மேற்கொண்டு இரு ஆண்டுகளைச் சேர்த்து பத்து ஆண்டுகள் வரை ஆடுகளை மேய்ப்பது எனக்கு செய்யும் பேருபகாரமாகும். அது உங்கள் விருப்பம். இது விஷயத்தில் உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால், நீங்கள் என்னை நல்லவர்களில் ஒருவனாகவே காண்பீர்கள்" என்று கூறினார்.
இந்நிகழ்வைப்பற்றியே மேற்காணும் திருவசனமும், மேலும் அல்கஸஸ் அத்தியாயத்தின் சில திருவசனங்களும் கூறுகிறது.
நடந்து திரியும் பருவத்தில்...
(இஸ்மாயீல்-அலை அவர்கள் தமது தந்தை இப்ராஹீம்-அலை அவர்களுடன்) நடந்து திரியக்கூடிய வயதை அடைந்தபொழுது, அவர் (தம் மகனை நோக்கி), "என் அருமை மைந்தனே! நிச்சயமாக நான் உன்னை (என்னுடைய கை கொண்டு) அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். (இதைப்பற்றி) நீ என்ன கருதுகிறாய்? என்பதை யோசித்துச் சொல்வீராக!"என்று கேட்டார். அதற்கு அவர் (இஸ்மாயீல்), "என் அருமைத் தந்தையே! உங்களுக்கு இடப்பட்ட கட்டளைப்படியே நீங்கள் செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் (அதை சகித்துக்கொள்ளும்) பொறுமையாளர்களில் ஒருவனாகவே நீங்கள் என்னைக் காண்பீர்கள்" என்று கூறினார். திருக்குர்ஆன்:- 37:102
இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் நடந்து திரியக்கூடிய வயதை அடைந்த தன்னுடைய மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களை நோக்கி, மகனே! நான் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த காலத்தில், என் இறைவா! நீ எனக்கொரு குழந்தையை தந்தால் அதை உனக்காக அறுத்து பலியிடுகிறேன்" என்று நேர்ச்சை செய்திருந்தேன். அதை இப்போது நிறைவேற்றுமாறு என் கனவின் மூலம் ஏவப்பட்டுள்ளேன். உன்னுடைய அபிப்பிராயம் என்ன? என்று வினவினார்கள். அப்போது சிறுவர் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தந்தையே! உங்களுக்கு கனவின் மூலம் காட்டப்பட்ட இறைவனின் கட்டளையை தாமத்திக்காமல் உடனே நிறைவேற்றுங்கள். அல்லாஹ் நாடினால், நான் இதில் மிகப் பொறுமையாயிருந்து கொள்வதை நீங்கள் காணுவீர்கள்" என்று உறுதியாகக் கூறி தந்தையின் நேர்ச்சையை நிறைவேற்றுவதில் உதவினார்கள்.
இந்நிகழ்வைப்பற்றியே மேற்காணும் திருவசனமும், மேலும் அஸ்ஸாஃப்பாத் அத்தியாயத்தின் சில திருவசனங்களும் கூறுகிறது.
சொர்க்கம் செல்ல...
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், ( أَلَا هَلْ مُشَمِّر إِلَى الْجَنَّةِ؟ فَإِنَّ الْجَنَّةَ لَا خَطر لَهَا هِيَ -وَرَبِّ الْكَعْبَةِ-نُورٌ كُلُّهَا يَتَلَأْلَأُ وَرَيْحَانَةٌ تَهْتَزُّ، وَقَصْرٌ مَشيد، وَنَهْرٌ مُطَّرد، وَثَمَرَةٌ نَضِيجَةٌ، وَزَوْجَةٌ حَسْنَاءُ جَمِيلَةٌ، وَحُلَلٌ كَثِيرَةٌ، وَمُقَامٌ فِي أَبَدٍ، فِي دَارِ سَلَامَةٍ، وَفَاكِهَةٍ خَضِرَةٍ وحَبْرَة وَنِعْمَةٍ، وَمَحَلَّةٍ عَالِيَةٍ بَهيَّة ) "(உங்களில்) சொர்க்கத்தை அடைவதற்காகத் தீவிரமாக உழைப்போர் யாரும் உண்டா? ஏனெனில், அது ஈடில்லாத ஒன்றாகும். கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! சொர்க்கம் என்பது மின்னும் ஒளி வெள்ளமும், அசைந்தாடும் நறுமணச் செடிகளும், உயரமான மாளிகையும், ஓடிக்கொண்டிருக்கும் ஆறும், நன்கு கனிந்த ஏராளமான கனி வகைகளும், அழகும் எழிலும் நிறைந்த துணைவியும், எண்ணிலடங்கா அணிகலன்களும் உள்ள ஓர் இடமாகும்" என்று கூறினார்கள்.
அப்போது நபித்தோழர்கள், "நாயகமே! ஆம்! நாங்கள் அந்த சொர்க்கத்தை அடைவதற்குத் தீவிர முனைப்புள்ளவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினர்.
அதற்கு அண்ணலார், ( قُولُوا:
إِنْ شَاءَ اللَّهُ ) "நீங்கள் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) எனச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.
மக்கள் இன்ஷா அல்லாஹ் என்றனர். நூல்:- இப்னுமாஜா, முஸ்னது அல்பஸ்ஸார், தஃப்சீர் இப்னு அபீ
ஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்
யாஸீன் வசனம்-57
பேசும்போது
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் அண்ணல் நபி அவர்களிடம், ( مَا شَاءَ اللَّهُ وَشِئْتَ ) "அல்லாஹ்வும் நீங்களும் நாடினால் (இது நடக்கும்)" என்று கூறினார். அப்போது அண்ணலார், ( أَجَعَلْتَنِي لِلَّهِ عَدْلًا ؟ بَلْ مَا شَاءَ اللَّهُ وَحْدُهُ ) "என்னை அல்லாஹ்வுடன் சமமாக்குகிறீரா? இல்லை; அல்லாஹ் நாடினால்" என்று மட்டும் கூறுவீராக!" என அவரிடம் தெரிவித்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-1742
ஒருவர் சத்தியம் செய்யும்போதோ வாக்களிக்கும்போதோ, "இறைவனும் நீங்களும் நாடினால் உறுதியாக இது நடக்கும் (மாஷா அல்லாஹு வ ஷிஃத்த)" என்று கூறுவது அறியாமைக்காலப் பழக்கம். அதற்கேற்ப ஒருவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கூறினார். இதன்மூலம் அல்லாஹ்வின் நாட்டத்தோடு ஒரு மனிதரின் நாட்டத்தையும் சமமாகக் கருதுகின்ற நிலை ஏற்படுகிறது.
எனவேதான், அண்ணலார், "அல்லாஹ்வுடன் என்னைச் சமமாக்குகிறீரா?" என்று கண்டித்தார்கள். பிறகு, "அல்லாஹ் நாடினால் (நடக்கும்)" என்று மட்டும் கூறுவீராக! என அறிவுறுத்தினார்கள்.
மாட்டு வியாபாரி
ஒரு மாட்டு வியாபாரி சந்தைக்கு மாடு வாங்கச் சென்றான். அவனுடைய மைத்துனர் வழியில் அவனைச் சந்தித்து மச்சான் எங்கே செல்கின்றீர்? என்று கேட்டார். மாடு வாங்க சந்தைக்கு செல்கிறேன் என்று அவன் பதிலளித்தான். இல்லை மச்சான் அப்படிச் சொல்லாதீர்கள். "இன்ஷா அல்லாஹ் மாடு வாங்க செல்கிறேன்" என்று சொல்லுங்கள் என மைத்துனர் திருத்தி கொடுத்தார். "பையில் பணம் இருக்கிறது. சந்தையில் மாடு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் இன்ஷா அல்லாஹ் சொல்லச் சொல்கிறாய்" என்று எகத்தாளமாக பதில் சொல்லிவிட்டு சந்தைக்கு போனான்.
ஆனால் சந்தைக்குச் சென்று அவன் மாலையில் சோர்ந்த முகத்துடன் திரும்பி வருவதைக் கண்ட மைத்துனர், "என்ன மச்சான் மாடு வாங்கவில்லையா? என்று கேட்டார். அதற்கு ஏன் கேட்கிறாய்! நான் மாடு வாங்க தான் சென்றேனா இன்ஷா அல்லாஹ்! மாட்டை விலை பேசி முடித்தேனா இன்ஷா அல்லாஹ்! பணம் எடுக்க பையைப் பார்த்தேனா இன்ஷா அல்லாஹ்! பணத்தை எவ்வளவு திருடிவிட்டான் இன்ஷா அல்லாஹ்! என்று அவன் தன் சோகக் கதையைச் சொல்லி முடித்தான். முதலில் ஒரு முறை "இன்ஷா அல்லாஹ்" சொல்ல மறுத்ததற்கான தண்டனையை அவன் அனுபவித்த பிறகு, அவன் பல தடவை "இன்ஷா அல்லாஹ்" என்று சொல்லும் நிலைக்கு ஆளானான்.
நம்முடைய பேச்சில் அவ்வப்போது "இன்ஷா அல்லாஹ்" (அல்லாஹ் நாடினால்) என்று சொல்வதனால் நாம் இறைவனையே சார்ந்திருக்கிறோம். எனவே, அவனை மறந்து பேசக்கூடாது என்ற மனநிலை உருவாகும். இதைத்தான் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறான். இதனால் நம்முடைய காரியம் நிறைவேறக்கூடும்.
இறை உதவியின்மீது எண்ணம் கொள்ளாமல், எல்லா சூழ்நிலையும் எனக்கு சாதகமாக உள்ளது; நிச்சயமாக என்னால் முடியும் என்று இறுமாப்பு கொண்டவர்கள்
இறுதியில் தோல்வியைத்தான் சந்திப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
எனவே, நாம் என்றென்றும் இறையுணர்வுடன் வாழ்ந்து இறையன்பைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:
9840535951
No comments:
Post a Comment