Search This Blog

Tuesday, 14 December 2021

பள்ளிவாசலைப் பராமரிப்போம்!

 

பள்ளிவாசலைப்  பராமரிப்போம்!

 

وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ

 

(நபி இப்ராஹீமே!) என்னுடைய (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து தொழுபவர்களுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வையுங்கள். திருக்குர்ஆன்:- 22:26

 

டிசம்பர் 6, பாபர் மசூதி ஷஹீதாக்கப்பட்ட (இடிக்கப்பட்ட) தினம். இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு இந்தத் தினத்தை ஆண்டுதோறும் நினைவுப்படுத்த வேண்டியது நமது பொறுப்பு.


முகலாய மன்னர் பாபரால் கி.பி. 1528 "பாபரி மஸ்ஜித்" கட்டப்பட்டது. இஸ்லாமிய எதிரிகளால் கி.பி.1949 பூட்டப்பட்டது.  முஸ்லிம்களின் முயற்சியால் கி.பி. 1984 திறக்கப்பட்டது. இஸ்லாமிய எதிரிகளால்  கி.பி.1992 இடிக்கப்பட்டது. இந்துத்துவ சக்திகளின் அழுத்தத்தால் கி.பி. 2019 இந்து மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த இடம் இந்துக்களே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. "பாபரி மஸ்ஜித்" வாழ்ந்தது 464 ஆண்டுகள். பூட்டி கிடந்தது 35 ஆண்டுகள். பாங்கு சத்தம் கேட்ட இடத்தில் தற்போது பஜனை சத்தம் கேட்க ஆரம்பித்துள்ளது.


மேலும், தற்போது பல பள்ளிவாசல்களை சூரையாடுவதற்கு கயவர்களால் முயற்சிக்கப்பட்டு வருகிறது. நமது பள்ளிவாசல்களையும் அதன் சொத்துக்களையும் முறையாக பதிவு செய்து பாதுகாக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் விழித்துக் கொள்ளவேண்டிய நேரமிது.


தமிழகத்தில் ஒரு சில கிராமங்களிலிருந்து முஸ்லிம்களில் பெரும்பாலோர் நகரத்தை நோக்கி குடி பெயரும்போது, அங்கே ஓரிரு முஸ்லிம்கள் தான் குடியிருக்கிறார்கள். எனவே, அந்த ஓரிரு முஸ்லிம் குடும்பங்களால் அங்கிருக்கும் பள்ளிவாசலை முறையாக பராமரிக்க முடியாமல் அது பாழடைந்து போய்விடுகிறது. 


அப்படிப்பட்ட பள்ளிவாசல்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. நாம் பள்ளிவாசல்களை முறையாக பராமரிக்காததின் விளைவு பள்ளிவாசலையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் பிற சமூக மக்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். 


முஸ்லிம்கள் வாழ்ந்த சில ஊர்களில் தற்போது அறவே முஸ்லிம் குடும்பங்கள் இல்லை. அனைவரும் மற்ற ஊர்களை நோக்கி சென்றுவிட்டனர். அதன் விளைவு அங்கிருந்த பள்ளிவாசல் அந்நியர்களால் கையகப்படுத்தப்பட்டுவிட்டது என்பது மிகவும் கவலைக்குரிய செய்தியாகும்.


தற்போது நம் நாடு சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் இது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.


பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களின் சமுதாய வாழ்வின் ஒரு அத்தியாவசியமான, பிரிக்கமுடியாத ஒரு அங்கமாகும். எங்கு பள்ளிவாசல் முறையாக அமைந்துள்ளதோ அங்கு முஸ்லிம் சமுதாயம் ஒழுங்காக அமைந்துள்ளது என்பது கண்கூடு.

 

பள்ளிவாசல் என்பது புறத்தோற்றத்தில் காணப்படும் ஒரு கட்டிடம். அதன் அகத்தோற்றம் என்பது (முஸ்லிம்களின் கூட்டமைப்பு எனும்) "ஜமாஅத்" ஆக இருக்கிறது. ஜமாஅத்தும் பள்ளிவாசலும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது என்று கூறலாம். ஜமாஅத் இல்லாவிட்டால் பள்ளிவாசல் இல்லை; பள்ளிவாசல் இல்லாவிட்டால் ஜமாஅத்தும் இல்லை.

 

ஒரு ஜமாத்தின் சிறப்பை, செழிப்பை, அழகை அங்குள்ள பள்ளிவாசலின் மூலம் நன்கு தெரிந்து கொள்ளலாம். எங்கேனும் பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் இருக்கிறதென்றால், அங்குள்ள ஜமாத்தும் பழுதுபட்ட நிலையில் தான் உள்ளது என்பதை யாரும் சொல்லத் தேவையில்லாமலேயே புரிந்து கொள்ள முடியும்.

 

முஸ்லிம்கள், பள்ளிவாசல்களின் மாண்புகளையும், அவைகளில் கையாளவேண்டிய ஒழுக்கங்கள், செயல்படவேண்டிய (அமல்கள்) நற்செயல்கள், செய்யக்கூடாத அருவருப்பான காரியங்கள் பற்றியெல்லாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். காரணம் இறைநம்பிக்கைக்கும் பள்ளிவாசலுக்கும் தொடர்புண்டு.

 

சொர்க்கமே கூலி

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَخْرَجَ أَذًى مِنَ الْمَسْجِدِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ) பள்ளிவாசலில் இருந்து தொல்லை தரும் (குப்பை கூளம் போன்ற) ஒரு பொருளை அப்புறப்படுத்தியவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான். அறிவிப்பாளர்:- அபூசஈத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-749

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ( کَنَسُ المَسَاجِدِ مَهَرُ حُورِالعِینِ ) பள்ளிவாசல்களைக் கூட்டிப்பெருக்குவது (சொர்க்கத்து கண்ணழகிகளான) ஹூருல்ஈன்களுக்கு அளிக்கப்படும் மணக்கொடை ஆகும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- தத்கிரா 2/557

 

உபைத் பின் மர்ஸூக் (ரலி) அவர்கள் கூறியதாவது. மதீனாவில் உம்மு மிஹ்ஜன் என்ற பெண்மணி மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலை சுத்தம் செய்பவராக இருந்தார். அவர் இறந்ததைப்பற்றி யாரும் அண்ணலாருக்கு தெரிவிக்கவில்லை. (அதன்பிறகு ஒரு நாள்) அவரது மண்ணறையை கடந்து செல்லும்போது அண்ணலார், "இது என்ன மண்ணறை?" என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், "உம்மு மிஹ்ஜன் (ரலி) அவர்களின் மண்ணறை" என்று கூறினர். அண்ணலார், ( اَلَّتِي کَانَت تَقُمُّ المسجِدَ ) "பள்ளிவாசலை பராமரித்து வந்த பெண்ணா?" என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், "ஆம்" என்று கூறினர்.

 

அப்போது அண்ணலார் (தான் இமாமாக நின்று) மக்களை வரிசையாக நிற்கச் சொல்லி அந்த பெண்மணிக்காக தொழ வைத்தார்கள். பிறகு (மண்ணறையில் இருக்கும் அந்தப் பெண்ணை நோக்கி! நீர்) ( اَيُّ العَمَلِ وَجَدتِ اَفضَلَ ) எதை மிகச்சிறந்த நற்காரியமாக பெற்றுக் கொண்டீர்" என்று வினவினார்கள். அப்போது நபித்தோழர்கள், "நாயகமே! அப்பெண்ணால் (தாங்கள் கூறுவதை) செவியேற்க முடியுமா? என்று வினவினர். அண்ணலார், ( مَا أَنتُم بِأَسمَعَ مِنهَا ) "நீங்கள் செவியேற்பதைவிட அவர் நன்கு செவியுற்று பதிலளிப்பவராக இருக்கிறார்" என்று கூறினார்கள். பின்னர் அப்பெண், ( قَمُّ المسجِد ) "பள்ளிவாசலை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அந்த பராமரிப்பு தான்" என்று பதிலளித்தார். பிறகு அண்ணலார் அப்பெண்ணின் பதிலை நபித்தோழர்களுக்கு தெரிவித்தார்கள். நூல்:- ஃபத்ஹுல்பாரீ

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலைப் பெருக்கி சுத்தம் செய்த பெண்ணுக்கு உயர்வு கிடைத்ததை அறிவித்து, அதுபோன்றே நமது பகுதியில் உள்ள பள்ளிவாசலை சுத்தமாக வைத்திருப்பது மூலம் நாமும் உயர்வான சொர்க்க வாழ்க்கைப் பெறலாம் என்பதை உணர்த்தியுள்ளார்கள்

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுப்பு மனிதர் இறந்து விட்டார். (அவர் இறந்த செய்தி அண்ணல் நபி - ஸல் அவர்களுக்குத் தெரியாமல் இருந்தது.) ஆகவே, அவரைப் பற்றி (ஒரு நாள்) அண்ணலார் விசாரித்தார்கள். அப்போது மக்கள், "அவர் இறந்துவிட்டார்" எனக் கூறினார்கள். அண்ணலார், ( أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِه ) "அது பற்றி (முன்பே) என்னிடம் நீங்கள் அறிவித்திருக்கக் கூடாதாஅவரது அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்" என்று கூறிவிட்டு,  அவரது அடக்கத்தலத்திற்குச் சென்று அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழுதார்கள். நூல்:-  புகாரீ-458

 

பள்ளிவாசலை சுத்தப்படுத்துபவர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பார்வையில் மிகுந்த கண்ணியத்துக்குரியவர் ஆவார். எனவே, நம்மில் ஒவ்வொருவரும் பள்ளிவாசலை சுத்தமாக வைத்திருக்கும் விஷயத்தில் சுய உணர்ச்சி உடையவர்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை நாமே சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டும். நமக்கென்னே வந்தது என்று போடுப்போக்காக இருப்பது சரியல்ல.

 

முதன் முதலில் விளக்கேற்றியவர்

 

ஒருமுறை தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் சிரியா நாட்டில் இருந்து ஒரு லாந்தர் விளக்கை கொண்டுவந்து, அதில் திரி வைத்து ஸைத்தூன் எண்ணெய் ஊற்றி பற்ற வைத்து மஸ்ஜிதுந் நபவியில் கொண்டு வைத்தார். அன்று இரவு பொழுதின் ஆரம்பத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். பள்ளிவாசல், வெளிச்சத்தால்  பிரகாசமாக இருந்தது. அப்போது நபியவர்கள், ( مَنْ فَعَلَ هَذَا ؟ ) "இந்த (நற்)செயலை செய்தது யார்?" என்று கேட்டார்கள்.

 

அப்போது மக்கள், "நாயகமே! தமீமுத்தாரீ தான்" என்றனர். நபியவர்கள், ( نَوَّرْتَ الْإِسْلَامَ نَوَّرَ اللَّهُ عَلَيْكَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ، أَمَا إِنَّهُ لَوْ كَانَتْ لِي ابْنَةٌ لَزَوَّجْتُكَهَا ) "(தமீமுத்தாரீ) நீர் இஸ்லாத்தை பிரகாசமாக்கினீர். எனவே, அல்லாஹ் உமக்கு இம்மையிலும் மறுமையிலும் பிரகாசத்தை வழங்குவானாக! அறிந்து கொள்க! தற்போது என்னிடம் (மணமுடிக்கப்படாத) பெண் பிள்ளை இருந்திருந்தால் அவளை உமக்கு மணமுடித்துக் கொடுத்திருப்பேன்" என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த நவ்ஃபல் பின் ஹாரிஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள், "நாயகமே! எனக்கு உம்மு முஙீரா என்று ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள். அவளை நான் இப்போது இவருக்கு மணமுடித்துக் கொடுக்கட்டுமா? என்று கேட்டு, நபியவர்களிடம் அனுமதிப்பெற்ற பிறகு அதே இடத்திலேயே தமீமுத்தாரீ (ரலி) அவர்களுக்கு மணமுடித்து கொடுத்தார். அறிவிப்பாளர்:- அபூ ஹிந்த் அத்தாரீ (ரலி) அவர்கள் நூல்:- அல்இஸாபா இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ


அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. பள்ளிவாசல்களில் முதன் முதலில் விளக்கேற்றியவர் தமீமுத்தாரி (ரலி) அவர்கள் ஆவார்கள். நூல்:- இப்னுமாஜா-752

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மஸ்ஜிதுந் நபவீயில் (அதிகாலை தொழுகையான ஃபஜ்ர் மற்றும் (இரவு தொழுகையான) இஷா ஆகிய இரு தொழுகைகள் தொழ வேண்டுமாயின் விறகுக் கட்டைகளைப் போட்டு நெருப்பு மூட்டி விடுவார்கள். அந்த நெருப்பு பற்றி எரிந்து முடிவதற்குள் தொழுகையை முடித்துக் கொள்வார்கள். அப்படித்தான் அன்றைய காலம் இருந்தது. ஹிஜ்ரீ 9 ஆம் ஆண்டு முஸ்லிமாகிய தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீயை ஒளிமயமாக்க விரும்பினார். ஸைத்தூன் எண்ணெய் ஊற்றி, திரியால் எரிகின்ற லாந்தர் விளக்குகளை மஸ்ஜிதுந் நபவீயில் பொருத்த ஏற்பாடு செய்தார்.

 

நறுமணம் கமழ வேண்டும்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், குடியிருப்புப் பகுதிகளுக்களிடையே பள்ளிவாசல்களை எழுப்பிக்கொள்ளுமாறும், அவற்றைக் தூய்மையாகவும் நறுமணத்துடனும் வைத்துக் கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். நூல் அபூதாவூத்-384, திர்மிதீ-542, இப்னுமாஜா-750

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் கிப்லா திசையில் காறல் எச்சிலைப் பார்த்து முகம் சிவக்கும் அளவுக்கு சினந்தார்கள். உடனே அன்சாரிப் பெண்மணி ஒருவர் எழுந்து சென்று, அதைச் சுரண்டி விட்டு, அந்த இடத்தில் நறுமணத்தைப் பூசிவிட்டார். உடனே அண்ணலார், ( مَا أَحْسَنَ هَذَا ) "இது எவ்வளவு நன்றாக இருக்கிறது" என்று கூறினார்கள். நூல்:- நஸாயீ-720, இப்னுமாஜா-754, இப்னு குஸைமா-1296

 

சுத்தப்படுத்துதல்

 

அபூ சயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லா திசைச் சுவரில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே சிறு கல் ஒன்றால் அதைச் சுரண்டி (தூய்மை படுத்தி)னார்கள். நூல்:- புகாரீ-414, அபூதாவூத்-406, இப்னுமாஜா-753

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عُرِضَتْ عَلَيَّ أُجُورُ أُمَّتِي حَتَّى الْقَذَاةُ يُخْرِجُهَا الرَّجُلُ مِنَ الْمَسْجِدِ ) (மிஃராஜ் இரவில்) என் சமுதாயத்தினரின் நன்மை எனக்குக் காட்டப்பட்டது. அவற்றுள் பள்ளிவாசலிலிருந்து குப்பையை அப்புறப்படுத்தியவரின் நன்மையும் இடம்பெற்றிருந்தது. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-390, திர்மிதீ-2840

 

இத்தகு மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டாக வேண்டும். பள்ளிவாசலில் இருந்து ஒரு சிறு துரும்பை அப்புறப்படுத்துவதும் மிகப்பெரிய நன்மை என அறியமுடிகிறது.

 

பள்ளிவாசலில் அசுத்தங்கள் காணப்பட்டால் அதை கண்டவர்மீது அதை சுத்தம் செய்வது 'சுன்னத்'தாகிவிடும். காணப்பட்ட அசுத்தம் துர்வாடை உடையதாக இருக்குமானால் அதை சுத்தம் செய்வது வாஜிபாகும். சுத்தம் செய்வதற்கென்று ஆட்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றதே என்று அசட்டை காட்டுவது குற்றமாகும். நூல்:- துஹ்ஃபா ஷரஹ்

 

செய்யத்தகாதவை

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( جَنِّبُوا مَسَاجِدَكُمْ صِبْيَانَكُمْ وَمَجَانِينَكُمْ وَإِقَامَةَ حُدُودِكُمْ وَسَلَّ سُيُوفِكُمْ وَاتَّخِذُوا عَلَى أَبْوَابِهَا الْمَطَاهِرَ وَجَمِّرُوهَا فِي الْجُمَعِ ) உங்கள் பள்ளிவாசல்களுக்கு குழந்தைகளையும் மனநிலை சரியில்லாதவர்களையும் அழைத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தண்டனைகளை நிறைவேற்றுதல், வாள்களை உருவுதல் ஆகியவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவற்றின் நுழைவாயில்களில் துப்புரவு செய்யும் இடங்களை அமையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அவற்றில் நறுமணப் புகையிடுங்கள். அறிவிப்பாளர்:- வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் நூல்:-  இப்னுமாஜா-742

 

அல்லாமா இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள் இந்த நபிமொழிக்கு கூறிய விளக்கமாவது: விவரம் அறியாத சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர்கள் விளையாடக்கூடும். அது பள்ளிவாசலுக்கு பொருத்தமில்லாத செயலாக அமைந்துவிடும். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர்களை மக்கள் பரிகாசம் செய்வார்கள். இது பள்ளிவாசலில் வீண் விளையாட்டிற்கு வழிவகுத்துவிடும். அது மட்டுமல்ல; அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் பள்ளிவாசலை அசுத்தப்படுத்தி விடவும் இடமுண்டு. இதுபோன்ற அச்ச உணர்வே அவர்களை அப்புறப்படுத்துவதற்குக் காரணமாகும்.

 

குற்றவியல் தண்டனையை பள்ளிவாசலில் நிறைவேற்றக் கூடாது; யாரையும் அங்கு பழி வாங்கக் கூடாது என்று சொல்லப்படுவதற்கு காரணம், சாட்டையடி வழங்கப்படும் போது அல்லது கை துண்டிக்கப்படும் போது குற்றவாளியிடம் இருந்து அசுத்தங்கள் ஏதேனும் வெளிப்பட்டு அது பள்ளிவாசலை அசுத்தமாக்கிவிடலாம் என்ற அச்சம்தான்.

 

அடுத்து, தூய்மை செய்து கொள்வதற்கான இடங்களை - அதாவது அங்கத்தூய்மை செய்வதற்கும் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்கும் வசதியான கழுவும் இடங்களை - அவற்றின் (தலை)வாயிலுக்கு அருகே ஏற்படுத்துங்கள் என்கிறது இந்த நபிமொழி.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகே சில கிணறுகள் இருந்தன. மக்கள் அவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அருந்துவார்கள்; அங்கத்தூய்மை செய்வார்கள்; மேலும் வேறு தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வார்கள்.

 

அதாவது, வெள்ளிக்கிழமை போன்ற மக்கள் கூடும் நாள்களில் பள்ளிவாசலுக்குள் நறுமணப் புகை போட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால், இது போன்ற நாட்களில் மக்கள் அதிகமானோர் அங்கு குழுமியிருப்பர்.

 

ஒவ்வொரு வெள்ளியன்றும் உமர் (ரலி) அவர்கள் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்கு நறுமணப் புகையிடுவார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நூல்:-  தஃப்சீர் இப்னு கஸீர் அந்நூர் வசனம்-36

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ هَذِهِ الْمَسَاجِدَ لاَ تَصْلُحُ لِشَىْءٍ مِنْ هَذَا الْبَوْلِ وَلاَ الْقَذَرِ إِنَّمَا هِيَ لِذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالصَّلاَةِ وَقِرَاءَةِ الْقُرْآنِ )  இந்த பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், சுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும், தொழுவதற்கும், குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-480

 

பள்ளிவாசலுக்கு மலம் சிறுநீர் கழிக்க, கைகள் கால்கள் அழும்ப மட்டும் வருவோர் கவனிக்க வேண்டிய நபிமொழி.

 

பள்ளிவாசலுக்குள் வாடை வரும் அளவுக்கு பள்ளிவாசலுக்கு அருகில் கழிப்பிடம் அமைப்பது கூடாது. பள்ளிவாசலுக்குள் வாடை வராது அளவு இடைவெளி விட்டு கழிப்பிடம் அமைத்துக் கொள்வதே சிறந்ததாகும். நூல்:- ரத்துல் முஹ்தார் 1/659

 

பேணுதல்

 

ஒருவர் பள்ளிவாசலில் இருக்கும்போது தம்முடைய தாடியைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தார். தாடியில் இருந்த துரும்பு ஒன்று பள்ளிவாசலுக்குள் கீழே விழுந்தது. அப்போது அங்கிருந்த இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் அங்கிருந்த மற்றவர்களையும் பார்த்தார்கள். அந்த துரும்பையும் பார்த்தார்கள். இவ்வாறு சிறிது நேரம் இருந்துவிட்டு, மக்களின் கவனம் வேறு பக்கம் திரும்பியபோது, அந்தத் துரும்பை மெதுவாக எடுத்துத் தங்களின் சட்டை பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்கள். பின்னர் பள்ளிவாசலுக்கு வெளியே சென்று அதை எறிந்துவிட்டார்கள்.

 

தாடியில் ஒட்டிக்கொண்டிருந்த பொருள் பள்ளிவாசலுக்குள் இருக்கவும் தகாது என்பது இமாமவர்களின் கருத்து. பள்ளிவாசலில் குப்பை கூளங்களைப் போட்டு அசுத்தம் செய்யக்கூடாது. எனவே, அவர் பள்ளிவாசலுக்குள் துரும்பைப் போட்டதைக் குறித்து அவரைக் கண்டித்தால் பலர் முன்னிலையில் அவரை அவமதித்ததாக ஆகிவிடும். அவரைக் கண்டிக்காமல் அத்துரும்பை பகிரங்கமாக எடுத்துச் சென்று வெளியில் போட்டால் மற்றவர்கள் அவரை கண்டிப்பார்கள். ஆகையால், பிறருடைய கண்ணியத்திற்குப் பங்கம் வராமல் மற்றவர்களுக்கும் தெரியாமல் இமாமவர்கள் அத்துரும்பை பள்ளிவாசலுக்கு வெளியே போட்டார்கள்.

 

பள்ளிவாசலுக்குள் நுழைந்த பிறகு தாடியைக் கோதுவது தலையை சொரிவது காது மூக்கு வாய் போன்றவற்றை நோண்டுவது ஆகியவை ஒழுங்கீனமானவையாகும். காரணம் அதன்மூலம் முடி மற்ற கழிவுகள் விழுந்து பள்ளிவாசலை அசுத்தமாக்கக்கூடும்.

 

துர்வாடையுடன்

 

(தவாஃப்) சுற்றுவோருக்காகவும், தங்கி வழிபாடு (இஃதிகாஃப்) செய்வோருக்காகவும், குனிந்தும் சிரம் பணிந்தும் வணங்குவோருக்காகவும் என்னுடைய (இந்த) ஆலயத்தை நீங்களிருவரும் தூய்மைப்படுத்துகள் என்று இப்ராஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம் உறுதிமொழி வாங்கினோம். திருக்குர்ஆன்:- 2:125

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

( مَنْ أَكَلَ الْبَصَلَ وَالثُّومَ وَالْكُرَّاثَ - فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا فَإِنَّ الْمَلاَئِكَةَ تَتَأَذَّى مِمَّا يَتَأَذَّى مِنْهُ بَنُو آدَمَவெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமைப் பூண்டு ஆகியவற்றை (வேக வைக்காமல் பச்சையாக) சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகின்றர்கள். அறிவிப்பாளர்:-  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-976

 

பள்ளிவாசலில் துர்நாற்றம் உண்டாக்குவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள்  தடுத்து வந்துள்ளார்கள். பள்ளிவாசல்கள் வானவர்கள் வந்து போகும் தலங்களாக இருப்பதாலும் துர்நாற்றத்தை மனிதர்களைவிட வானவர்கள் அதிகம் வெறுக்க கூடியவர்களாக இருப்பதாலும் அது கண்டிக்கத்தக்கது.

 

வெங்காயம் வெள்ளைப் பூண்டு போன்ற உணவுப் பொருளை பச்சையாகவோ வேக வைத்தோ சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டது தான். ஆனாலும், அவற்றை பச்சையாகச் சாப்பிட்டு விட்டு அந்த துர்வாடையுடன் பள்ளிவாசலுக்கு செல்வது வெறுக்கப்பட்ட செயலாகும். அந்த துர்வாடையால் பள்ளிவாசலுக்கு வரும் மனிதர்களுக்கு மட்டுமல்ல வானவர்களுக்கும் சங்கடமாகிவிடும். அவற்றை, அதன் வாடை போகுமளவிற்கு வேக வைத்துச் சாப்பிட்டிருந்தால் பள்ளிவாசலுக்கு செல்வதில் தவறில்லை.

 

வெங்காயம் வெள்ளைப் பூண்டு போன்ற உணவுப் பொருட்கள் விஷயத்தில் மார்க்கம் இவ்வாறு கூறியிருக்க, பீடி சுருட்டு சிக்ரெட் போன்றவற்றை புகைத்து விட்டு, பான்மசாலா போன்றவற்றை மென்றுவிட்டு அப்படியே அந்த துர்வாடையுடன் பள்ளிவாசலுக்கு வருபவர்களை என்னவென்று சொல்லுவது?

 

மீன், கருவாடு, இறைச்சி போன்ற வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பள்ளிவாசலுக்கு வரும் போது உடலை நல்ல முறையில் சுத்தம் செய்து, வேறு உடைகள் அணிந்து, நறுமணம் பூசிக்கொண்டு வருவதே சிறந்ததாகும். மாறாக, துர்வாடை வீசக்கூடிய, இரத்தம் போன்ற அசுத்தங்கள் படிந்த ஆடைகளுடன் பள்ளிவாசலுக்கு வருவது கண்டிக்கத்தக்கது.

 

சில சட்டங்கள்

 

பள்ளிவாசல்களை நிர்வகிப்போர் பள்ளிவாசல்களுக்கு வக்ஃப் செய்யப்பட்ட தோட்டங்கள், நிலங்கள், கடைகள், பண்டம் பாத்திரங்கள் என அதன் சொத்துக்கள் அனைத்தையும் முறையாக பாதுகாக்க வேண்டும். வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விடக்கூடாது. பள்ளிவாசலின் சொத்துக்களை சாப்பிடுவோர், நரக நெருப்பையே சாப்பிடுகிறார்கள் என்று இஸ்லாமியச் சட்டம் இயம்புகிறது.


பள்ளிவாசலை அசுத்தப்படுத்துவது ஹராமாகும். அசுத்தமாகும் என்றிருந்தால் பள்ளிவாசலில் படுத்து உறங்குவது கூட ஹராமாகும். சீல், சலம், இரத்தம் ஓடும் என்று நிலையில் உள்ளவர்களும் பள்ளிவாசலுக்குள் நுழைவது ஹராமாகும். அசுத்தமான துர்வாடையுடைய பொருட்களை பள்ளிவாசலுக்குள் கொண்டு வருவதும் ஹராமாகும். மூத்திரம் நிறைந்த பாட்டில், துணி போன்றவைகளையும், போதையுள்ள திரவப் பொருட்களையும் வைத்துக்கொண்டு பள்ளிவாசலைக் கடந்து போவதும்கூட ஹராமாகும். சுத்தமான செருப்பு, குடை, ஊன்றுகோல் அத்தியாவசிய பொருட்களாக இருந்தால் அதைக் கழுவி சுத்தம் செய்த பின்னர் பள்ளிவாசலுக்குள் கொண்டு செல்வது தவறில்லை.

 

செத்த பேன், மூட்டை, பூச்சி, கொசு போன்றவற்றை பள்ளிவாசலில் தட்டி விடுவது "மக்ரூஹ் தஹ்ரீம்" (ஹராமுக்கு நெருக்கமான செயல்) ஆகும்.  பள்ளிவாசலுக்குள் வைத்து அது போன்றவற்றை கொல்வது ஹராமாகும். அசுத்தம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுகாதாரக்கேடு என்ற நிலையில் அது கூடாது. உணவு வகைகளை பள்ளிவாசலில் போடுவதும் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை கொட்டுவதும் ஹராமாகும். நூல்:- இஆனத்தாலிபீன், துஹ்ஃபா-1/154

 

(ஜனாபத் எனும்) குளித்தல் கடமையான நிலையில் பள்ளிவாசலில் தங்குவதும்; கடந்து செல்வதும் கூடாது. மேலும் பள்ளிவாசலில் தங்கியிருக்கும்போது, குளித்தல் கடமையாகிவிட்டால் உடனே பள்ளிவாசலை விட்டு வெளியே வந்து குளித்து சுத்தமாகி விடவேண்டும். குளித்தல் கடமையாகிய பின்னர் உடனே வெளியேறாமல் பள்ளிவாசலிலேயே தங்கி இருப்பது கூடாது. பள்ளிவாசலில் தங்கியிருக்கும்போது குளித்தல் கடமையாகிவிட்டால் சில அறிஞர்கள் பேணுதலுக்காக உடனே தயம்மும் செய்து விட்டு வெளியேறவேண்டும் என கூறியுள்ளார்கள். நூல்:- துர்ருல் முக்தார்-1/171

 

இஃதிகாஃப் இருப்பவரைத் தவிர மற்றவர்கள் பள்ளிவாசலில் உண்ணுதல் உறங்குதல் (மக்ரூஹ் எனும்) வெறுக்கப்பட்டதாகும். பள்ளிவாசலுக்குள் காற்றை வெளியாக்கி துர்நாற்றத்தைப் பரவச் செய்வது (மக்ரூஹ் எனும்) வெறுக்கப்பட்டதாகும். நூல்:- ஜதீத் ஃபிக்ஹி மசாயில்

 

பள்ளிவாசலுக்குரிய ஒழுக்கங்களைப் பேணி, இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

1 comment:

  1. மாஷா அல்லாஹ்

    அருமையான பதிவு

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...