மூன்று... மூன்று... மூன்று...
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ
مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ
مَرَّاتٍ
இறைநம்பிக்கையாளர்களே!
உங்களுடைய அடிமைகளும், உங்களில் பருவம் எய்தாத (சிறு)வர்களும் (நாளொன்றுக்கு)
மூன்று தடவைகளில் உங்களிடம் (வருவதனால்) அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். திருக்குர்ஆன்:-
24:58
இஸ்லாமிய மார்க்கம்
மூன்று முறை என்பதற்கு ஒரு முக்கியத்துவம் தருகிறது. நம்முடைய பழக்கங்களிலும் மூன்று
தடவை, மூன்றுவரை என்பதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதாவது முதலாவது, இரண்டாவது,
மூன்றாவது என தேர்வின் மதிப்பெண்களில் மூன்று வரைக்கும் ஓர் மதிப்புண்டு. ஆனால், நான்காவதுக்கு அந்த மதிப்பு இருப்பதில்லை. மேலும், போட்டிகளில் முதல் பரிசு தங்கம், இரண்டாம் பரிசு வெள்ளி, மூன்றாம் பரிசு வெண்கலம் என மூன்று வரைக்கும் பரிசுகள் உண்டு. நான்காவதாக வந்தவருக்கு
எந்த பரிசும் கொடுக்கப்படுவதில்லை. அவரை உலகம் கண்டுகொள்வதுமில்லை.
தலைப்பில் காணும்
திருவசனம் கூறும் மூன்று நேரங்கள்: அவர்களின் வலக்கரங்கள்
உடமையாக்கிக் கொண்ட அவர்கள் தம் பணியாளர்களும் பருவ வயதை அடையாத சிறுவர்களும் மூன்று
நேரங்களில் அனுமதி பெற்றே வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
1) அதிகாலை தொழுகைக்கு முன். ஏனெனில், இது மக்கள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்
நேரமாகும்.
2) நண்பகலில் குறுந்துயில் (கைலூலா) மேற்கொள்ளும் போதும். அந்நேரத்தில் கூடுதல் ஆடைகளைக்
களைந்துவிட்டு மனைவியுடன் மனிதன் தனிமையில் இருப்பான்.
3) இஷா தொழுகைக்கு பின்னர். இது உறங்கும் நேரமாகும்.
இந்நிலைகளில் பணியாளர்களோ, சிறுவர்களோ, குடும்பப் பெண்கள்
இருக்கும் இடத்திற்குள் அனுமதியின்றி நுழையக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
அல்லாஹ், தமது தூதர் மூசா (அலை) அவர்களை நோக்கி, “நீங்கள் கிள்ரு (அலை) அவர்களிடம் சென்று சில விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்" என்றான். பிறகு மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களை சந்தித்து, "நான் உங்களுடன் இருக்க விரும்புகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு கிள்ரு (அலை) அவர்கள், "என்னுடன் இருப்பதற்கு உங்களால் முடியாது" என்றார்கள். மூசா (அலை) "இல்லை (முடியும்)" என்று கூறினார்கள். அப்போது களிர் (அலை) அவர்கள், "நீங்கள் என்னுடன் இருப்பதாக இருந்தால் எந்த விஷயத்தைப் பற்றியும் நானாக விவரம் சொல்லாதவரையில் நீர் என்னிடம் அதைப் பற்றி கேட்கக்கூடாது" என்று கூறினார்கள்.
பிறகு அவ்விருவரும் கடலோரமாக சென்று கொண்டிருந்தபோது அங்கு ஒரு படகைக் கண்டு அதில் ஏறினர். அந்த படகில் பயணித்துக்கொண்டிருக்கும்போதே திடீரென கிள்ரு (அலை) அவர்கள் அந்த படகில் கோடாரியால் ஒரு துவாரமிட்டார்கள். இதைக்கண்ட மூசா (அலை) அவர்கள் அதிர்ச்சியுற்று என்ன காரியம் செய்து விட்டீர்கள்? என்று ஆவேசமாக கேட்டார்கள்.
கிள்ரு (அலை) அவர்கள் "நான் என்ன செய்தாலும், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்கக்கூடாது என்ற நிபந்தனையை மறந்துவிட்டீர்கள் போலும்!" என்று எச்சரித்தார்கள்.
மூசா (அலை) அவர்கள், "மன்னிக்கவும்; இனிமேல் எந்த கேள்வியும் கேட்டமாட்டேன்" என்றார்கள்.
அவ்விருவரும் அந்த படகில் இருந்து இறங்கி, ஒரு நகரத்திற்குள் நுழைந்தனர். அப்போது கிள்ரு (அலை) அவர்கள் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைப்பிடித்து கழுத்தைத் திருகி கொன்றுவிட்டார்கள்கள்.
இதைக்கண்ட மூசா (அலை) அவர்கள் அதிர்ச்சியுற்று, “என்ன காரியம் செய்து விட்டீர்கள்?” என்று ஆவேசமாக கேட்டார்கள்.
கிள்ரு (அலை) அவர்கள் "நான் என்ன செய்தாலும், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்கக்கூடாது என்ற நிபந்தனையை மறந்துவிட்டீர்கள் போலும்!" என்று இரண்டாவது தடவையாக எச்சரித்தார்கள்.
மூசா (அலை) அவர்கள், "மன்னிக்கவும்; இனிமேல் எந்த கேள்வியும் கேட்டமாட்டேன்" என்றார்கள்.
பிறகு அவ்விருவரும் அங்கிருந்து பயணித்து மற்றொரு ஊருக்கு வந்து சேர்ந்தனர். அப்போது அவ்விருவருக்கும் கடுமையாக பசியெடுத்துவிட்டது. அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். யாரும் உணவு தரவில்லை. பிறகு அங்கிருந்து புறப்பட்டு அந்த ஊர் எல்லை வந்தபோது அங்கு ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அப்போது கிள்ரு (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களை துணைக்கு வைத்துக்கொண்டு மண்ணைக் குழைத்து அந்த வீட்டை செப்பணிட்டு முடித்தார்கள்.
அப்போது மூசா (அலை) அவர்களுக்கு அடக்க முடியாத ஆத்திரம் வந்துவிட்டது. “இது வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஊர் மக்களிடம் நாம் பசிக்கு உணவு கேட்டோம். அதைப்பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் மீது உங்களுக்கென்ன அவ்வளவு அக்கறை ஏற்பட்டுவிட்டது?" என்று சற்று ஆவேசமாக கேட்டார்கள்.
கிள்ரு (அலை) அவர்கள் "நான் என்ன செய்தாலும், ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்கக்கூடாது என்ற நிபந்தனையை மறந்து விட்டீர்கள் போலும்!" என்று மூன்றாவது தடவையாக எச்சரித்துவிட்டு, இதுவரை நான் செய்து வந்த அந்த மூன்று செயல்பாட்டுக்கும் இதுதான் விளக்கம் என்று சரியான விளக்கத்தைக் கூறிவிட்டு, இனிமேல் நாம் இருவரும் ஒன்றாக பயணிக்க இயலாது என்று கூறி, தன்னைவிட்டும் பிரிந்து சென்று விடுமாறு கூறி, மூசா (அலை) அவர்களை வழியனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு அவ்விருவரும் ஒன்றாக பயணிக்கவில்லை. இந்த வரலாற்று நிகழ்வைப்பற்றி திருக்குர்ஆனின் அல்கஹ்ஃப் அத்தியாயத்தின் 65 முதல் 82 வரையுள்ள வசனங்கள் எடுத்துரைக்கிறது.
எந்த ஒன்றைப்பற்றியும்
மூன்று தடவை எச்சரித்த பிறகுதான், கண்டிக்கவோ தண்டிக்கவோ வேண்டும். எடுத்த
எடுப்பிலேயே தடால்புடால் என்று நடவடிக்கை எடுப்பது சரியல்ல என்றுரைக்கிறது இந்த
நிகழ்வு.
இறுகக் கட்டியணைத்தார்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ஹிரா குகையில் தனித்திருந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.
(அப்போது ஒருநாள்) வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக்
கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக! என்றார். அப்போது ( مَا أَنَا بِقَارِئٍ ) "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!"
என்றேன். உடனே அவர் இரண்டாம் தடவையாக என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக்
கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு "ஓதுவீராக" என்றார். அப்போதும்
"நான் ஓதத் தெரிந்தவனில்லையே!" என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது
தடவையாக கட்டித் தழுவினார்.
பின்னர் என்னை விட்டுவிட்டு, "படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதுவீராக!
அவனே மனிதனை 'அலக்' (அட்டைப் போன்று ஒட்டிப்பிடித்து
தொங்கும் கருவில்) இருந்து படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி"
எனும் இறை வசனங்களை (96:1-5) அவர் ஓதினார்.
பிறகு (அச்சத்தால்)
இதயம் படபடக்க அந்த வசனங்களுடன் நான் (எனது மனைவி) கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து, "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்" என்றேன். அவ்வாறே அவர்களும் போர்த்திவிட அச்சம்
அகன்றது. அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள்
நூல்:- புகாரீ-3
அல்லாஹ், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் கொடுத்தனுப்பிய (பரக்கத் எனும்) அருள்வளம் நிறைந்த ஞானம் முதல் தடவை கட்டியணைத்தபோது மூன்றில் ஒரு பங்கு கிடைத்தது. இரண்டாவது தடவை இறுகக் கட்டியணைத்தபோது இறைவனின் அருள்வளம் நிறைந்த ஞானம் மூன்றில் இரண்டு பங்கு கிடைத்தது. மூன்றாவது தடவை கட்டியணைத்தபோது இறைவனின் அருள்வளம் நிறைந்த ஞானம் முழுமையாக கிடைத்துவிட்டது.
அதாவது பசியும் தாகமும்
உள்ளவனுக்கு போதிய உணவு, பானம் கிடைத்தால்
தான் பசி முழுமையாகத் தீரும்.
பொது அறிவிப்பு
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வம் கிடைக்கப்பெற்றால், போர்ச் செல்வம் கிடைக்கப்பெற்ற செய்தியைக் கூறி மக்களை அழைக்கும்படி பிலால் (ரலி) அவர்களுக்கு உத்தரவிடுவார்கள். மக்களும் (நபியவர்களிடம் இருக்கும்) தங்களின் போர்ச் செல்வத்தை பெற்றுக்கொள்ள வருவார்கள். (நபியவர்கள் அவர்கள் முன்னிலையிலேயே அப்போர்ச் செல்வங்களை மக்களுக்கு) பகிர்ந்தளிப்பார்கள்.
அதற்கு (ஒரு போரில் இவ்வாறே போர்ச் செல்வங்களை மக்களுக்கு
பங்கிடப்பட்டதற்கு)ப் பின்னால் ஒருவர் ஒட்டக முடிக்கற்றை ஒன்றைக் கொண்டுவந்து,
"நாயகமே! இது நீங்கள் எங்களுக்குப்
பங்கிட்டுக் கொடுத்த போர்ச் செல்வத்திலிருந்து (பங்கிடும் முன்) எடுத்தது" என்று
கூறினார். அதற்கு நபியவர்கள், ( أَسَمِعْتَ
بِلاَلاً يُنَادِي ثَلاَثًا
) "பிலால் (ரலி) அவர்கள் மூன்று தடவை (போர் களத்தில்
எடுக்கப்பட்ட பொருள்களை கொண்டு வாருங்கள்! என்று) உரக்க குரல் கொடுத்தாரே அதை செவியேற்றாயா?"
என்று கேட்டார்கள். அவர்,
"ஆம், செவியுற்றேன்" என்று பதிலளித்தார். அதற்கு
நபியவர்கள் அப்படியானால் அந்த முடிக்கற்றை நீ என்னிடம் கொண்டு வருவதை தடுப்பது எது
என்று கேட்டுவிட்டு, ( كُنْ أَنْتَ تَجِيءُ بِهِ يَوْمَ
الْقِيَامَةِ فَلَنْ أَقْبَلَهُ عَنْكَ ) "நீ இந்த முடிக்கற்றை மறுமை நாளில் கொண்டு வருவாய். அப்போதும் அதை உன்னிடமிருந்து
நான் ஏற்க மாட்டேன்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2337
அபூகத்தாதா (ரலி)
அவர்கள் கூறியதாவது. ஹுனைன் போரில் நான் ஓர் இணைவைப்பாளனைக் கொன்றுவிட்டேன். போர் முடிந்த
பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு, ( مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ
عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ ) "போரில் எதிரி ஒருவனைக்
கொன்றதற்கான ஆதாரம் யாரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த எதிரியின் (ஆடை ஆயுதம் போன்ற)
உடமைகள் உரியவை" என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, ( مَنْ
يَشْهَدُ لِي ) "(நான் எதிரி ஒருவனை வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம்
கூறுபவர் யார்?" என்று கேட்டுவிட்டு உட்கார்ந்துகொண்டேன்.
நபியவர்கள் (மீண்டும்)
"போரில் எதிரி ஒருவனைக் கொன்றதற்கான ஆதாரம் யாரிடம் இருக்கிறதோ அவருக்கே அந்த
எதிரியின் (ஆடை ஆயுதம் போன்ற) உடமைகள் உரியவை" என்ற இ(ந்த வாசகத்)தை இரண்டாம்
தடவை கூறினார்கள். உடனே நான் (மறுபடியும்) எழுந்து, "(நான் எதிரி ஒருவனை
வீழ்த்தியதற்கு) எனக்குச் சாட்சியம் கூறுபவர் யார்?" என்று கேட்டுவிட்டு, உட்கார்ந்துகொண்டேன்.
பிறகு மூன்றாவது தடவையும்
நபியவர்கள் முன்புக்கூறியதைப் போன்றே கூறினார்கள். உடனே நான் எழுந்தேன். அப்போது நபியவர்கள்
(என்னைப் பார்த்து), ( مَا لَكَ يَا أَبَا قَتَادَةَ ) "அபூகத்தாதா உங்களுக்கு
என்ன வேண்டும்?" என்று கேட்டார்கள். நடந்ததை நான் நபியவர்களிடம்
எடுத்துரைத்தேன். அப்போது மக்களில் ஒருவர் "நாயகமே! இவர் சொல்வது உண்மைதான்"
என்றார். பிறகு கொல்லப்பட்டவனிடம் இருந்து எடுக்கப்பட்டவை (உடைமைகள்) எனக்கு வழங்கப்பட்டன. நூல்:- அபூதாவூத்-2342
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் எடுக்கப்பட்ட பொருள்களை கொண்டு வருவதற்கும், பிறகு ஒன்று திரட்டப்பட்ட அப்பொருள்களை மக்களுக்கு பங்கிடுவதற்கும் முன்னர் அதுபற்றி மூன்று தடவை அறிவிப்பு செய்ய உத்தரவிடுவார்கள். இது நபியவர்களின் மரபு.
அண்ணல் நபி (ஸல்)
அவர்களின் ஒட்டகத்தைத் திடீரெனத் தாக்கி அதன் மேய்ப்பாளனைக் கொன்றுவிட்டு, அவனும் அவனுடன் வந்திருந்த ஃகத்ஃபான் குலத்தாரின் குதிரை வீரர்களும், (நபியவர்களின் பால் தரும் ஒட்டகங்களை) ஓட்டிச் சென்றுவிட்டனர். அப்போது நான் மதீனா
பகுதியை நோக்கி உரக்க சப்தமிட்டு "உதவி உதவி அதிகாலை ஆபத்து!" (யா ஸபாஹாஹ்)
என்று (மதீனாவின் இரு மலைகளுக்கிடையில் இருந்த அனைவருக்கும் கேட்கும்படி) மூன்று தடவை
உரக்க சப்தமிட்டேன். நூல்:- அபூதாவூத்-2372
மக்களுக்கான ஒரு பொது
அறிவிப்பு மூன்று தடவை செய்யலாம்.
அறிவாற்றல்
அறிவாற்றலில் மூன்று வகையினர் தான். நான்காம் வகையினர் என்று யாரும் கிடையாது.
கற்பூரம்
கரிக்கட்டை
பச்சை வாழைமட்டை
தீயால் பற்ற வைத்தவுடன்
பற்றிக்கொள்ளும் கற்பூரத்தைப் போன்றவர்கள். ஒன்றை சொல்லும் போதே நாம் என்ன சொல்லவருகிறோம்
என்பதை புரிந்து கொள்வார்கள். இவர்களைத்தான் தமிழில் "கற்பூர புத்தியுடைவர்கள்"
என்பர்.
கரிக்கட்டையில் தீயைப் பற்றவைத்து பிறகு ஊதிக்கொண்டே இருக்கவேண்டும். அதன்பிறகு தான் கரிக்கட்டை பற்றி எரியும்.
சொல்லிக்கொடுத்த பிறகும் நினைவூட்டிக்கொண்டே இருந்தால் மட்டுமே விளங்கிக்கொள்வார்கள். இவர்களைத்தான் "கரிக்கட்டை புத்தியுடையவர்" என்பர்.
பச்சை வாழைமட்டையில் தீயை வைத்து எவ்வளவு ஊதினாலும், அது எரியவே எரியாது. என்ன செய்தாலும் எரியாது.
அதிக சிரமம் எடுத்து
எவ்வளவு சொல்லிக்கொடுத்து,
நினைவூட்டிக்கொண்டே இருந்தாலும்
விளங்கிக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் விஷயத்தில் நாம் எடுத்து கொண்ட முயற்சிகள் அனைத்தும்
வீணாகுமே தவிர, பலனளிக்காது. இவர்களைத்தான்
"வாழைமட்டை புத்தியுடையவர்" என்பர்.
பேசாமல் இருக்கலாகாது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثَةِ أَيَّامٍ ) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று. அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6065, முஸ்லிம்-5001, அபூதாவூத்-4264
ஒருவருக்கு மற்றவர்
மீது கோபதாபம் இருக்கலாம். மனிதனின் கெட்ட குணங்கள் இதுவும் ஒன்று. ஆனால், அது மூன்று நாள்களுக்கு
மேல் நீடிக்கக்கூடாது. அவ்வாறு நீடித்தால் 'இயல்பு' என்ற நிலையைத் தாண்டி 'வக்கிரம்' என்ற நிலையை தொட்டுவிடும். இது தவிர்க்கப்பட வேண்டும்
எனவேதான், ஒரு முஸ்லிம் தம்
சகோதர முஸ்லிமிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருக்கலாகாது என்கிறது இந்த நபிமொழி.
அனுமதி கோருதல்
இறைநம்பிக்கையாளர்களே!
உங்கள் இல்லங்கள் அல்லாத (வேறு) இல்லங்களில், அங்கு உள்ளவர்களிடம்
அனுமதி பெறாமலும் அவர்களுக்கு முகமன் (ஸலாம்) கூறாமலும் நுழையாதீர்கள். இதுவே உங்களுக்கு
நல்லதாகும். திருக்குர்ஆன்:- 24:27
நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا اسْتَأْذَنَ أَحَدُكُمْ
ثَلاَثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ، فَلْيَرْجِعْ ) (பிறர் வீட்டிற்குள் நுழைய) உங்களில் ஒருவர் மூன்று
தடவை அனுமதி கேட்டும், அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால்
அவர் திரும்பி விடட்டும். நூல்:- புகாரீ-6245, முஸ்லிம்-4351, அபூதாவூத்-4509
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், எங்களின் வீட்டில் எங்களைச் சந்திக்க வந்தபோது (வீட்டுவாசலில் நின்று, அனுமதி கோருவதற்காக) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறினார்கள். அதற்கு (என் தந்தை) சஅத் (ரலி) அவர்கள் (நபியவர்களுக்கு கேட்காத வகையில்) மெதுவான குரலில் பதில் சலாம் கூறினார்கள். அப்போது நான் (என் தந்தையிடம்), "நபியவர்களுக்கு நீங்கள் அனுமதி தர மாட்டீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ( ذَرْهُ يُكْثِرْ عَلَيْنَا مِنَ السَّلاَمِ ) "நபியவர்களை (அந்நிலையிலேயே) விட்டுவிடு. அப்போது தான் நபியவர்கள் நம்மீது சலாமை அதிகமாகச் சொல்லுவார்கள்" என்று கூறினார்கள்.
(மீண்டும் இரண்டாவது
தடவை) நபியவர்கள் ஸலாம் கூறி (அனுமதி கோரி)னார்கள். அதற்கு என் தந்தை மெதுவான குரலில்
பதில் ஸலாம் கூறினார்கள். (மீண்டும் மூன்றாவது தடவை) நபியவர்கள் ஸலாம் கூறினார்கள்.
(அனுமதி கிடைக்காததால்) நபியவர்கள் திரும்பினார்கள். அப்போது எனது தந்தை நபியவர்களைப் பின் தொடர்ந்து சென்று, ( يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ أَسْمَعُ تَسْلِيمَكَ وَأَرُدُّ عَلَيْكَ
رَدًّا خَفِيًّا لِتُكْثِرَ عَلَيْنَا مِنَ السَّلاَمِ ) "நாயகமே! நான் உங்களுடைய சலாமைக் கேட்டுக் கொண்டுதான்
இருந்தேன். நீங்கள் எங்களுக்கு அதிகமாக சலாம் சொல்லவேண்டும் என்பதற்காக உங்களுக்கு
மெதுவான குரலில் பதில் சலாம் கூறிக் கொண்டிருந்தேன்" என்று கூறிய பின்னர்,
நபியவர்களை வீட்டிற்கு அழைத்து
வந்தார்கள். நூல்:- அபூதாவூத்-4511
ஒரு வீட்டிற்குச்
சென்றால் அனுமதி கேட்பதற்கு அடையாளமாக, காலிங் பெல்- அழைப்புமணியை
ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தடவை அழுத்தலாம். அதற்குள் யாரேனும் பதில் கொடுத்துவிட்டால்
அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். இல்லையேல் கலவரப்படுத்துகிற மாதிரி மீண்டும் மீண்டும்
அதை அழுத்திக்கொண்டே இருக்கக்கூடாது.
மேலும், ஒருவரை கைப்பேசி மூலம் அழைக்க நாடினால், அதிகபட்சமாக மூன்று தடவை அழைக்கலாம். அதற்குள் அவர்
அதை எடுத்து பதிலளித்தால் பேசலாம். இல்லையேல், மீண்டும் மீண்டும்
அழைக்கக்கூடாது. அது அவருக்குத் தொந்தரவாக அமையக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் (பசியின் காரணத்தால்) கால்நடை (வளர்க்கும்) இடத்திற்குச் செல்லும்போது, அங்கு அதன் உரிமையாளர் இருந்தால் அவர் அனுமதி கோரட்டும். அவர் அனுமதித்தால் அதில் பால் கறந்து அருந்தட்டும். அங்கு யாரும் இல்லாவிட்டால் மூன்று தடவை குரல் கொடுக்கட்டும். எவரேனும் பதில் அளித்தால் அவரிடம் அனுமதி கேட்கட்டும். யாரும் பதில் அளிக்காவிட்டால் அவர் பால் கறந்து அருந்திக் கொள்ளட்டும். ஆனால் அதை (கறந்து) எடுத்துச் செல்ல வேண்டாம். அறிவிப்பாளர்:- சமுரா பின் ஜுன்துப் (ரலி)அவர்கள் நூல்:- அபூதாவூத்-2251
ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளில், அவற்றின் உரிமையாளரின் அனுமதியின்றி பால் கறப்பது கூடாது. பசி போன்ற அவசரத் தேவைக்காகப் பால் கறக்க நேர்ந்தால் கலந்துகொள்ளலாம். எனினும், அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும். அடுத்தவரின் கால்நடையில் பால் கறக்க விரும்பும் போது அதன் உரிமையாளர் அருகில் இருந்தால் அங்கேயே அவரிடம் அனுமதி கோரவேண்டும். அருகில் ஒருவரும் இல்லாத போது குரல் எழுப்பி உரியவரை மூன்று தடவை அழைத்து பார்க்கவேண்டும். அப்போதும் யாரும் பதில் அளிக்காவிட்டால் அவசிய தேவைக்கேற்ப பால் கறந்து அருந்தலாம். அங்கிருந்து பாலை கொண்டு செல்லலாகாது. இதுவே பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். நூல்:- துஹ்ஃபத்துல் அஹ்வதீ
பசியுடன் இருப்பவர் கனிகள் விளையும் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் நுழைந்தால் இவ்வாறே பின்பற்ற வேண்டும்.
வேண்டுகோள்
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது. எங்கள் பகுதியை நோக்கி இஸ்லாமிய படையினர் வருகின்றார்கள் என்று எனக்கு தகவல் கிடைத்தது. எனவே, நான் எனது குடும்பத்தார்களை அழைத்துக்கொண்டு கிருஸ்தவ நாடான சிரியா நோக்கிச் செல்ல தீர்மானித்தேன். அப்போது புறப்படும் அவசரத்தில் எனது தங்கை சுஃபானாவை விட்டுவிட்டுச் சென்று விட்டேன்.
பின்னர் அப்படையினர் வந்து எங்கள் பகுதியை வெற்றிகொண்டனர். அங்குள்ளோரைச் சிறைபிடித்தனர். சிறைப்பிடித்தோரை மதீனாவுக்குக் கொண்டுசென்றனர். சிறைப்பிடிக்கப்பட்டோருள் என் தங்கை சுஃபானாவும் ஒருவர். சிறைபிடிக்கப்பட்டவர்களைத் தங்க வைப்பதற்கென மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே ஒரு கொட்டகை இருந்தது.
முஸ்லிம்களின் நல்லொழுக்க நடவடிக்கைகளை பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு என் தங்கை சுஃபானா முஸ்லிம் ஆகிவிட்டார்.
நபியவர்கள் தொழுகச் செல்லும்போது அந்த கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அவ்வாறு மறுநாள் நபியவர்கள் தொழுகைக்காக சென்றபோது, என் தங்கை எழுந்து நின்று, "நாயகமே! என் தந்தை ஹாத்திம் தாயீ ஒரு கொடை வள்ளல்; அவர் இறந்துவிட்டார். எனக்குப் பாதுகாப்பாக இருந்தவர் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டார்; எனவே அல்லாஹ்வின் மூலம் உங்களுக்கு கிடைத்தவற்றிலிருந்து எனக்கு உதவி செய்யுங்கள்" என்று கேட்டார்.
என் தங்கை பேசிய வார்த்தைகளை நபியவர்கள் கேட்டுக்கொண்டு எதுவும் பேசாமல் சென்று விட்டார்கள். இரண்டாவது நாள் நபியவர்கள் அதே நேரத்தில் தொழுகைக்கு வந்தார்கள். அவ்விடத்தைக் கடந்து பள்ளிவாசலுக்கு சென்ற போது மீண்டும் என் தங்கை அதே வார்த்தையால் அதே கோரிக்கையை முன் வைத்தார்.
அப்பெண் பேசிய வார்த்தைகளை
நபியவர்கள் கேட்டுக்கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார்கள். மூன்றாம் நாள் நபியவர்கள்
கடந்து சென்றபோது அப்பெண் எதுவும் பேசவில்லை. நபியவர்களின் பின்னால் வந்த அலீ (ரலி)
அவர்கள் அப்பெண்ணைப் பார்த்து, "எழுந்து கேள்; எழுந்து கேள்"
என்று சைகை செய்தார்.
என்ன இது, பின்னால் வருபவர் கேட்கச் சொல்கிறாரே. சரி, ஆனது ஆகட்டும் கேட்டு விடுவோம் என முடிவுசெய்து கொண்டு பேசத் தொடங்கினார். மீண்டும் அதே வார்த்தைகளால், அதே கோரிக்கையை முன் வைத்தார்.
அதைக் கேட்ட நபியவர்கள், "ஆம்! நீ கேட்ட உபகாரத்தை நான் செய்துவிட்டேன். எனினும், நீ புறப்பட்டுச் செல்ல அவசரப்படாதே. உன்னை உன் ஊரில் கொண்டுபோய்ச் சேர்க்கும் நம்பிக்கைக்குரியவரை யாரையேனும் நீ கண்டால் என்னிடம் சொல். நான் அவரோடு உன்னை அனுப்பி வைக்கிறேன்" என்றார்கள். எனவே, அத்தகைய யாரேனும் வருகிறாரா என்று தேடிக் கொண்டிருந்தார்.
பின்னால் வருபவர் மூன்றாவது நாள் தன்னை நபியவர்களிடம் கேட்கச் சொன்னாரே, அவர் யார்? என்று விசாரித்தார். அவர்தான் அலீ (ரலி) அவர்கள் என்று அறிந்தவுடன், அவரிடம் தங்கை சுஃபானா சென்று, "நீங்கள் என்னை நபியவர்களிடம் கேட்கச் சொன்னீர். அவ்வாறே அந்த மூன்றாம் நாளும் கேட்டேன். நபியவர்களும் எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள். நீங்கள் ஏன் என்னைக் கேட்க சொன்னீர்? எப்படி உங்களுக்குத் தெரியும்?" என்று வினவினார்.
அதற்கு அலீ (ரலி)
அவர்கள், "ஆம்! நபியவர்களிடம்
யாரேனும் மூன்று தடவை கேட்டுவிட்டால் அதை அவருக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.
நீ இரண்டு நாட்கள் கேட்டாய். மூன்றாம் நாள் கேட்காமல் அமைதியாக இருந்துவிட்டாய். எனவேதான்
நான் உன்னை மூன்றாம் நாளும் கேள்! என்று சொன்னேன்" என பதிலளித்தார்கள். நூல்:- சீரத் இப்னு இஸ்ஹாக்
நம்மிடம், பிறர் தமது வேண்டுகோளை திரும்பத்திரும்ப மூன்று தடவை அழுத்தி கூறினால், அதை முடிந்தவரை நம்மால் கவனிக்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகள் நிறைவேற்ற முயற்சிக்க
வேண்டும்.
பிரார்த்திக்கும்போது
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஏதேனும் ஒன்றை பிரார்த்தித்தால்) மூன்று முறை பிரார்த்திப்பதும் (பாவமன்னிப்பு கோரினால்) மூன்று முறை பாவமன்னிப்புக் கோருவதும் அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கு விருப்பமானவையாக இருந்தன. நூல்:- முஸ்னது அஹ்மத்-3581
அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்காவில் வாழ்ந்த
காலத்தில் இறையில்லம் கஅபா அருகில்) தொழுகையில் சிரவணக்கத்தில் (சஜ்தாவில்) இருந்தார்கள்.
அவர்களைச் சுற்றி குறைஷியர் சிலர் இருந்தனர். அப்போது உக்பா பின் அபீமுஐத் என்பவன்
ஓர் ஒட்டகத்தின் கருவைச் சுற்றியுள்ள சவ்வுகளுடன் வந்து நபியவர்களுடைய முதுகில் அதைப்
போட்டான். நபியவர்களால் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தவில்லை. பின்னர் (அவர்களுடைய
புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தகவல் சொல்லப்பட்டது.
உடனே சிறுமியாயிருந்த
ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்து நபியவர்களின் முதுகில் இருந்தவற்றை அப்புறப்படுத்தினார்கள்.
பிறகு அ(ந்த கய)வர்களை நோக்கிச் சென்று அவர்களை ஏசினார். நபியவர்கள் தொழுது முடித்ததும்
உரத்த குரலில் எதிரிகளுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். ( وَكَانَ إِذَا دَعَا دَعَا ثَلاَثًا ) பொதுவாக நபியவர்கள் (ஏதேனும்)
பிரார்த்தித்தால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மூன்று முறை கூறுவார்கள். (அப்போது தான்)
( اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ ) "இறைவா! குறைஷியரை
நீயே கவனித்துக் கொள். இறைவா! குறைஷியரை நீயே கவனித்துக்கொள். இறைவா! குறைஷியரை நீயே
கவனித்துக் கொள்" என்று மூன்று தடவை பிரார்த்தித்தார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக!
நபியவர்கள் (இந்த பிரார்த்தனையில்) குறிப்பிட்ட அனைவரும் பத்ருப் போர்க் களத்தில் மாண்டு
கிடந்ததை நான் கண்டேன். பின்னர் அவர்கள் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டு, பத்ரிலிருந்த ஒரு பாழுங் கிணற்றில் தள்ளப்பட்டனர். நூல்:- புகாரீ-240, முஸ்லிம்-3670
அங்கத்தூய்மை
உஸ்மான் (ரலி) அவர்களின்
அடிமையான ஹும்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் (ரலி) அவர்கள் உளூ செய்வதற்காகத்
தண்ணீர் கொண்டு வர சொல்லி உளூ செய்தார்கள். "(முதலில்) தம்முடைய இரு முன் கைகளை
மூன்று தடவை கழுவினார்கள். பிறகு வாய் கொப்பளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச்
சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று தடவை கழுவினார்கள். பிறகு தமது வலக்கரத்தையும்,
இடக்கரத்தையும் முழங்கை மூட்டு
வரை மூன்று தடவை கழுவினார்கள். பிறகு தலையை (ஈரக்கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள். பிறகு
தமது வலக்காலையும், இடக்காலையும் கணுக்கால்
வரை மூன்று தடவை கழுவினார்கள். பிறகு நான் செய்த இந்த உளூவைப் போன்றே நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்களும் உளூ செய்ததை நான் பார்த்தேன்" என்று கூறினார்கள். நூல்:-முஸ்லிம் -383, அபூதாவூத்-96
அப்துல்லாஹ் பின்
அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அங்கத்தூய்மையின் உறுப்புகளை மும்மூன்று தடவை கழுவிய
பின்னர், அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( هَكَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى
هَذَا أَوْ نَقَصَ فَقَدْ أَسَاءَ وَظَلَمَ ) “அங்கத்தூய்மை இவ்வாறுதான் (செய்ய வேண்டும்) இதைவிட அதிகமாக்கினாலோ குறைத்தாலோ அவர் தவறும் அநீதியும்
இழைத்தவராவார்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-116
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் (ஒவ்வொரு உறுப்பையும்) ஒரு தடவை கழுவி அங்கத்தூய்மை செய்தார்கள். ( هَذَا وُضُوءُ مَنْ لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلاَةً إِلاَّ بِهِ ) "இதுதான் ஒருவர் (குறைந்தபட்சம்) செய்யும் அங்கத்தூய்மையின் அளவாகும். இந்த அளவுக்குச் செய்யாமல் அவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்" என்று கூறினார்கள்.
பிறகு நபியவர்கள்,
(ஒவ்வொரு உறுப்பையும்) இரண்டிரண்டு
தடவை கழுவி அங்கத்தூய்மை செய்தார்கள். பிறகு, ( هَذَا وُضُوءُ الْقَدْرِ مِنَ الْوُضُوءِ ) "இது மரியாதைக்குரிய அங்கத்தூய்மை ஆகும்" என்று
கூறினார்கள். அதன் பின்னர் (ஒவ்வொரு உறுப்பையும்) மும்மூன்று தடவை கழுவி அங்கத்தூய்மை
செய்துவிட்டு, ( هَذَا أَسْبَغُ الْوُضُوءِ
وَهُوَ وُضُوئِي وَوُضُوءُ خَلِيلِ اللَّهِ إِبْرَاهِيمَ ) "இதுதான் நிறைவானதாகும்; இதுவே என்னுடைய அங்கத்தூய்மையும்,
அல்லாஹ்வின் தனித்துவ நண்பர்
இப்ராஹீம் (அலை) அவர்களின் அங்கத்தூய்மையாகும்"
( وَمَنْ تَوَضَّأَ هَكَذَا ثُمَّ قَالَ عِنْدَ فَرَاغِهِ أَشْهَدُ أَنْ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فُتِحَ
لَهُ ثَمَانِيَةُ أَبْوَابِ الْجَنَّةِ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ
) “யார் இவ்வாறு அங்கத்தூய்மை செய்துவிட்டு, பின்னர் இறுதியில், 'அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு' (பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின்
அடியாரும் தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி மொழிகிறேன்) என்று கூறுகிறாரோ அவருக்குச்
சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படும். அவற்றில் அவர் விரும்புகின்ற எந்த வாசல்
வழியாகவும் நுழைந்து கொள்வார்” என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், இப்னுமாஜா-413
அங்கத்தூய்மையில்
உறுப்புகளை மூன்று தடவை கழுவுதல் (சுன்னத் எனும்) நபிவழியாகும். இதைவிட அதிகமாக கழுவுதல்
வீண்விரயமாகும். எனவே, அதைத் தவிர்ந்துகொள்ள வேண்டும். அது (மக்ரூஹ் எனும்) அருவருக்கத்தக்க
செயல் என்பதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
மணவிலக்கு
(மீட்டிக்கொள்ள உரிமை
பெற்ற) இந்தத் தலாக்(கை) இரண்டு தடவைதான் (கூறலாம்). திருக்குர்ஆன்:- 2:229
இல்லற வாழ்க்கையில் பயணிக்கும் தம்பதியர் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, உறவில் விரிசல் உண்டாகி, இருவரும் இனிமேல் இணைந்து வாழ முடியாது என்ற நெருக்கடி தோன்றும்போது பிரிந்து விடுவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஒட்டாது என்றாகிவிட்ட பிறகு பெயரளவில் கணவன்-மனைவியாக வாழ்வதைவிட இருவரும் பிரிந்து தமக்கு ஏற்ற துணையைத் தேடிக் கொள்வதே இருவருக்கும் நல்லது. இந்த அடிப்படையிலேயே இஸ்லாம் "தலாக்" எனும் மணவிலக்கிற்குச் சட்ட அனுமதியளித்தது.
மொத்தம் மூன்று தவணைகளில் தலாக் சொல்வதற்கு கணவனுக்கு உரிமை உண்டு. முதலாவதாக, "உனக்கு நான் மணவிலக்கு அளிக்கிறேன்" என்று மனைவியிடம் கணவன் அறிவிப்பான். இந்த முதலாவது தலாக் சொல்லப்பட்ட பின்னர் மனைவி இத்தா எனும் காத்திருப்பு மேற்கொள்வாள். பொதுவாக மூன்று மாதவிடாய்ப் பருவங்களில் இத்தா காலமாகும். இந்த சமயத்தில் கணவனின் பராமரிப்பிலேயே மனைவி இருப்பாள். இந்தக் காலக்கெடு முடிவதற்கு முன் விரும்பினால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழலாம். அவ்வாறு சேர்ந்து வாழும்போது மறுபடியும் பிணக்கு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை நேர்ந்தால் இரண்டாவது தவணையாக அவன் மணவிலக்கு அளிக்கலாம். இந்த மணவிலக்கிற்குப் பிறகும் மனைவி இத்தா மேற்கொள்வாள். இந்த இத்தா முடிவதற்கு முன்னால் விரும்பினால் இருவரும் சேர்ந்து வாழலாம்.
முதலாவது அல்லது இரண்டாவது தலாக் சொல்லப்பட்டு, மனைவி 'இத்தா'வையும் முடித்து விட்டால்கூட விரும்பினால் சேர்ந்து வாழலாம். அதற்காகத் திருமண ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக்கொண்டால் போதும்.
முதலிரு மணவிலக்கிற்கு
'தலாக் ரஜஈ' (திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையுள்ள மணவிலக்கு)
என்பர். இரண்டாவது தவணையில் மண விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் இருவரும் சேர்ந்து வாழும்போது பிணக்கு
ஏற்பட்டால், மூன்றாவது தவணையாக
மண விலக்கு அளிக்கலாம் . இது இறுதியானது. இதற்குப் பின்னர் அந்த மனைவியும் கணவனும்
சேர்ந்து வாழ வேண்டுமானால், இத்தா முடிந்தபின்
அவள் மற்றொரு ஆணை மணந்து அவனுடன் தாம்பத்திய உறவு கொண்டு, பின்னர் அந்தப் புதுக் கணவன் தன் விருப்பப்படி அவளை
விவாகரத்துச் செய்து அதற்கான 'இத்தா'வும் முடிந்தபிறகு பழைய கணவனைப் புதிதாகத் திருமணம்
செய்து கொண்டு வாழலாம்.
சுருங்கக்கூறின்,
ஒருவர் தமது மனைவியை இரண்டு தடவை தலாக் சொல்லிய பிறகும்கூட சேர்ந்து வாழலாம். ஆனால்,
அவர் மூன்றாவது தடவை தலாக்
சொல்லிவிட்டால், மனைவியுடன் சேர்ந்து வாழ்வது சிரமம் என்பதே மார்க்கச் சட்டமாகும்.
தலாக் விஷயத்தில் மூன்றாவது தடவை என்பது இறுதியானதாகும்.
நாம், இஸ்லாமிய சட்டங்களை முறையாக விளங்கி, அதன்படி செயலாற்றி
வாழ, இறைவன் அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:9840535951
No comments:
Post a Comment