Search This Blog

Sunday, 6 December 2020

அவமரியாதை

 

அவமரியாதை


إِنَّا كَفَيْنَاكَ الْمُسْتَهْزِئِينَ


(நபியே) உம்மை பரிகாசம் செய்வோர் குறித்து (தண்டனையளிக்க) நிச்சயமாக நாம் உமக்கு போதுமானவர்களாக இருக்கின்றோம்.                                     திருக்குர்ஆன்:- 15:95


அன்று முதல் இன்று வரை நீண்டகாலமாக இஸ்லாமிய எதிரிகள் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்புணர்வை விதைக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் முனைப்புடன் செய்து வருகின்றனர். முஸ்லிம்களை தீவிரவாதச் செயல்பாட்டுடன் தொடர்புபடுத்தி, சினிமாக்களைத் தயாரித்து வந்தனர். இஸ்லாத்தின் போதனைகளைக் குறித்து தவறான கருத்துக்களை நாவல்களாக வெளியிட்டு வந்தனர். இதன் தொடரில் இறைத்தூதர்களில் தலைமையாகவும், இறுதியாகவும் மதிக்கப்படக்கூடிய நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறித்து வசைப்பாடி கேலிச்சித்திரங்களை வேண்டுமென்றே வரைந்து, முஸ்லிம்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி, தவறான சித்தரிப்புகளை மேற்கொண்டு, குழப்பங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ ) உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தனது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தம் உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும். அறிவிப்பாளர்:- தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்)  அவர்கள் நூல்:- முஸ்லிம்-78


கார்ட்டூன் வந்த வரலாறு


இத்தாலி மொழியில் cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ஆம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்ற கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப்பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப்பட்டன. கேலிச்சித்திரங்கள் போன்று இருந்த - நிராகரிக்கப்பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிக்கை ஒன்று, பஞ்சு cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசுரித்தது. காலப்போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு cartoon என்ற பெயர் நிலைத்துவிட்டது.


அதிகமான கேலிச்சித்திரங்கள் சில மனிதர்களை அவர்களின் கொள்கைகளைக் கேலி செய்யும் விதமாக வரையப்படுகின்றன. குறிப்பாக கேலி செய்யப்படுபவர்கள் படங்களை  நகைச்சுவையுணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வகையில் வரையப்படுகிறது. இந்தக் கேலிச்சித்திரங்கள் பிறர் மனதை புண்படுத்தாத வகையில் வரையப்பட வேண்டும். வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில செய்திகளைக் கூறும் வகையிலும், அதே வேளையில் சிந்திக்கத் தூண்டும் வகையில் வரையப்படுவது அவசியமாகும் எனக் குறிப்பிடப்படுகிறது.


விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ள பொதுவான சுதந்திரமாகும். ஆனால் புனிதர்களாக மதிக்கப்படுபவர்களைக் கொச்சைப்படுத்துதல், அவமதித்தல், நிந்திக்கும் கேலிச்சித்திரங்கள் மூலம் மனங்களை புண்படுத்துதல் என்பன அறிவார்ந்த விமர்சனங்கள் அல்ல. இந்த உண்மையை அறிந்து, சுதந்திரம் எது இழிவுபடுத்துதல் எது என்பதை வேறுபடுத்திப் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.


ஒரு நாட்டின் ஜனாதிபதியை அல்லது முக்கிய பிரமுகரை அவரது மனைவியை அவரது தாயை அவரது தந்தையை நிர்வாண கோலத்தில் சித்தரித்தால் அதை அந்நாட்டின் அதிகாரப்பீடம் அங்கீகரிக்குமா? ஒரு நாட்டிற்குரிய ஜனாதிபதியைக் கேலி செய்தால் அதை சகிக்காத இவர்கள், உலக மக்களில் பெரும் எண்ணிக்கையான (200 கோடி) மக்களின் உயிரைவிட மேலான மதிப்பிற்குரியவரை வசைப்பாடுவதையும், அநாகரிகமாக சித்தரிப்பதையும் கருத்து சுதந்திரம் என்று சகித்துக்கொள்ள வேண்டுமாம். இது எந்த வகை ஜனநாயகம்? இது எந்த வகை கருத்து சுதந்திரம்?


சித்திரம் இருந்தால் தான் கேலிச்சித்திரம் வரைய முடியும். சித்திரமே இல்லாத இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதை வைத்துக் கேலிச்சித்திரம் வரைய முடியும்? இது எந்த வகையில் நியாயமாகும்? இது எப்படி கருத்துச் சுதந்திரம் ஆகும்? சிந்திக்க வேண்டாமா?


இறைத்தூதர் முஹம்மத்  (ஸல்) அவர்களை யாராவது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கேலி செய்வது அவர்கள் குறித்து தவறான விமர்சனம் செய்வது போன்ற செயல்களை உலக முஸ்லிம்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


இனி மோதல், அரசுகளுக்கிடையில் இருக்காது. கலாச்சாரங்களுக்கிடையில் தான். குறிப்பாக இஸ்லாமியக் கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களுக்கிடையில் தான் இருக்கும். இது அமெரிக்காவின் பிரபல ஆய்வாளர் "சாமுவேல் ஹன்டிங்டன்" சில வருடங்களுக்கு முன்பு அவரது "Clash Of Civilisations" என்ற நூலில் குறிப்பிட்ட வாசகம்.


வரலாற்றை அறியாதவர்கள்


வசைப்பாடி கேலிச்சித்திரம் வரைந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இழிவுக்கு உள்ளாகி விடுவார்கள் என்றோ, இஸ்லாம் தமது கண்ணியத்தை இழந்து விடும் என்றோ தப்பு கணக்கு போட்டால், அவர்கள் இஸ்லாமிய வரலாற்றை அறியாதவர்கள் என்றே கருதப்படுவர்.


பூமியின் மேற்பரப்பிலிருந்து மறைந்து (இறந்து) போன ஒருவரின் பெயரில் கேலிச்சித்திரத்தை தானே, நீ வரைந்தாய். அந்த மாமனிதர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் எதிரிகள் அவர்கள் மீது செத்த ஒட்டகத்தின் குடலை வீசியிருக்கிறார்கள். சத்தியப் பிரச்சாரம் செய்த போது சிறுவர்களை ஏவி விட்டு கல்லால் அடித்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். சந்தைகளிலும் கடைவீதிகளிலும் நடந்து செல்லும் போது, ஏளனமும், பரிகாசமும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.


எதுவும் அந்த மாமனிதரை தடுமாறச் செய்யவில்லை. மாறாக, அவர்களை மேலும் அவை வலிமைப்படுத்தியது. விளைவு, மகத்தான மக்கள் ஆதரவை மக்காவில் அவர்கள் பெற்றார்கள்.


இனிமேல் அவரை கொலை செய்தால் தான் இஸ்லாத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியும் என கணக்கிட்ட எதிரிகள், அவர்களின் தலைக்கு நூறு ஒட்டகங்கள் விலை நிர்ணயித்தனர். கொலை செய்ய படைகள் திரண்டன. ஒரு கட்டத்தில், தாய் நாட்டை விட்டும் அகதியாக வெளியேறும் நிலை கூட உருவானது. ஓட ஓட விரட்டப்பட்டார்கள். அதுவும் அந்த மாமனிதரை நிலைகுலைய செய்யவில்லை.


சத்தியப் பிரச்சாரம் இன்னும் வீரியம் பெற்றது. இஸ்லாத்தின் வளர்ச்சி கற்பனைக்கெட்டா தூரம் சென்றது. அரபு தேசத்தில் மிகப்பெரிய சிந்தனை புரட்சி உருவானது. இன்றைய இந்திய தேசம் கொண்டிருக்கும் நிலப்பரப்பை விடவும் அதிகமான நிலப்பரப்பிற்கு அதிபதியானார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.


லட்சக்கணக்கான மக்கள் அவர்கள் பின்னே...! கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் நேற்றும் இன்றும், உலகம் உள்ளளவும், மனிதருல் மாணிக்கமாக மிளிர்கிறார்கள் எங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். 


இஸ்லாமியர்களின் உயிரைவிட மேலானவராகத் திகழும் அவர்களை இழிவுபடுத்தும் செயலை ஒரு அரசோ அல்லது ஒரு தனிப்பட்ட மனிதனோ எவன் செய்தாலும் அவனை வன்மையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் தவறமாட்டார்கள் உலக முஸ்லிம்கள்.

 

அதன் வெளிப்பாடுதான் உலக முழுவதும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கேலிச்சித்திரத்திற்கும், வசைப்பாடுதலுக்கும் எதிராக எழும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள்.


அபூஜஹ்ல்


இறைநம்பிகையாளர்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட (நமது தூதரான) நபிதான் மிக்க பிரதானமானவர்.       திருக்குர்ஆன்:- 33:6


அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. பத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்று கொண்டிருந்தபோது என் வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்த்தேன். என்னருகே (இருபக்கங்களிலும்) இளம் வயதுடைய இரு அன்சாரிச் சிறுவர்கள் (முஆத் பின் அம்ர் -ரலி, முஆத் பின் அஃப்ரா - ரலி) நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் என்னைத் தொட்டுணர்த்தி, ( يَا عَمِّ هَلْ تَعْرِفُ أَبَا جَهْلٍ ) "என் பெரிய தந்தையின் சகோதரரே! (என மரியாதை நிமித்தம் அழைத்து) நீங்கள் அபூஜஹ்லை அறிவீர்களா?" என்று கேட்டார். நான், "ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை?" என்று கேட்டேன்.


அதற்கு அச்சிறுவர், ( أُخْبِرْتُ أَنَّهُ يَسُبُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَئِنْ رَأَيْتُهُ لاَ يُفَارِقُ سَوَادِي سَوَادَهُ حَتَّى يَمُوتَ الأَعْجَلُ مِنَّا ) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனைப் பார்த்தால் எங்களில் ஒருவர் இறக்கும்வரை அவனது உடலைவிட்டு எனது உடல் பிரியாது. (ஒன்று நான், அல்லது அவன் மரணிக்கும்வரை அவனுடன் போரிட்டுக்கொண்டேயிருப்பேன்)" என்று கூறினார்.


இதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் என்னைத் தொட்டுணர்த்தி முதலாமவர் கூறியதைப் போன்றே கூறினார்.


சிறிது நேரம்தான் கழிந்திருக்கும் அதற்குள் அபூஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, "அதோ தெரிகிறானேஅவன்தான் நீங்கள் விசாரித்த உங்கள் ஆள்" என்றேன்.


உடனே அவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அவனை நோக்கிச் சென்று தம்மிடருந்த வாட்களால் அவனை வெட்டிக் கொன்றனர். பிறகு, அண்ணலாரிடம் சென்று அபூஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தனர். அப்போது அண்ணலார்,  ( أَيُّكُمَا قَتَلَهُ ) "உங்களில் யார் அவனைக் கொன்றார்?" என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் "நான்தான் கொன்றேன் என்று பதிலளித்தனர். அண்ணலார் அவ்விரு வாட்களையும் கூர்ந்து பார்த்துவிட்டு, ( كِلاَكُمَا قَتَلَهُ ) "நீங்கள் இருவருமே அவனைக் வெட்டிக்கொன்றிருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3141, முஸ்லிம்-3605 அல்பிதாயா வந்நிஹாயா


கிறிஸ்தவர்


ஒருமுறை குரஃபா (ரலி) அவர்களுக்கு முன்னால் ஒரு கிறிஸ்தவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களை திட்டினார். குரஃபா (ரலி) அவர்கள் திட்டியவர் முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்கள். அந்த கிறிஸ்தவர் வேகமாக சென்று அப்பகுதியின் ஆட்சியாளர் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம்  முறையிட்டார். அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், குரஃபா (ரலி) அவர்களை வரவழைத்து விசாரித்தார்கள். நடந்ததை எல்லாம் அவர்கள் சொன்னார்கள்.


அதைக் கேட்ட அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "(இஸ்லாமிய ஆட்சியின்கீழ் வரி செலுத்தி பாதுகாப்பு பெற்று வாழும்) திம்மிகளிடம் நாம் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்திருக்கிறோம்" என்றார்கள்.


அதற்கு குரஃபா (ரலி) அவர்கள், "நஊதுபில்லாஹ்! (அல்லாஹ் நம்மைக் பாதுகாப்பானாக!) அதற்காக இறைத்தூதர் நபிகள் (ஸல்) அவர்களை பகிரங்கமாகக் கேவலப்படுத்தித் திட்டுகின்ற உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லையே. அவர்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தம்  என்னவென்றால், 'தங்களுடைய திருச்சபைகளுக்குள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அவர்களுக்கு எதிராகப் பகைவர்கள் வந்தால் அவர்களுக்காக நாம் போய்ப் போராடுவோம். பாதுகாப்போம். அவர்களால் சுமக்க இயலாத சுமைகளை அவர்கள் மீது சுமத்த மாட்டோம்' இவ்வாறுதானே அவர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது" என்று கேட்டார்கள்.  அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் "ஆம்! நீங்கள் சொல்வது சரிதான்" என்று ஏற்றுக்கொண்டார்கள். நூல்:- உசுதுல் ஙாபா, அல்ஃபாரூக்


அடிமைப்பெண்


(நபியே! இறைநம்பிக்கையாளர்களிடம்) நீங்கள் கூறுங்கள்: உங்களுடைய தந்தைகளும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிகளும், உங்களுடைய குடும்பங்களும், நீங்கள் சம்பாதித்து வைத்திருக்கும் (உங்கள்) பொருட்களும் நஷ்டமாகிவிடுமோ என பயந்து (மிக எச்சரிக்கையுடன்) செய்து வரும் வர்த்தகமும் உங்களுக்கு மிக விருப்பமுள்ள (உங்கள்) வீடுகளும் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விடவும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதை விடவும் உங்களுக்கு விருப்பமானவைகளாக இருந்தால் (நீங்கள் இறை நம்பிக்கையாளர்களல்ல நீங்கள் அடைய வேண்டிய தண்டனையைப் பற்றிய) அல்லாஹ்வுடைய கட்டளை வரும் வரையில் நீங்கள் எதிர்ப்பார்த்திருங்கள். (உங்களைப் போன்ற) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில்செலுத்துவதில்லை.                     திருக்குர்ஆன்:- 9:244


அருமை நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் கண்பார்வையற்ற ஒருவர் இருந்தார். அவருக்கு ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அப்பெண் மூலம் அவருக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தனர். அவள் எப்போதும் அண்ணலாரை திட்டிக்கொண்டும் வசைபாடிக்கொண்டும் இருந்தாள்.


அவர் சொல்கிறார், அதாவது அவள் என்னுடைய குழந்தைக்கு தாயாவாகவும் எனக்கு அடிமையாகவும் இருந்தாள். மேலும், அவள் அன்பானவளாகவும் மென்மையானவளாகவும் இருந்தாள். ஒரு நாள் நான் (அவளிடம்) அண்ணலாரைப் பற்றி நினைவுகூர்ந்தேன். அவள் வழக்கம்போல் அண்ணலாரை திட்டத் தொடங்கினாள் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நான் அவளை கண்டித்தும் அவள் திருந்தவில்லை. நான் அவளைத் தடுத்தேன். அவள் அதைத் தவிர்த்துக் கொள்ளவில்லை. எனவே, நான் குத்து வாளை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தி அவளைக் கொன்று விட்டேன்.


அவர் மறுநாள் காலையில் அண்ணலாரின் சபைக்கு நடுநடுங்கியவராக வந்து நடந்தவற்றை விவரித்தார். அப்போது அண்ணலார் ( أَلَا اشهَدُوا اَنَّ دَمَهَا هَدَرٌ ) “(மக்களைப் பார்த்து) அவர் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டார். அவளுடைய இரத்தம் (உயிர் கொல்லப்பட) தகுதியானது தான் (அதற்குப் பதிலாக அவரை கொல்ல வேண்டியதில்லை) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- உஸ்மான் பின் ஷஹ்ஹாம் (ரஹ்) அவர்கள்  நூல்:- அபூதாவூத்-3795, நஸாயீ-4002


ஒருமுறை அருமை நாயகம் (ஸல்) அவர்கள்  தங்களின் ஒரு திருமுடியை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, "எவரேனும் எனது முடியிலிருந்து ஒரு முடிக்கேனும் அவமரியாதை செய்வாரேயானால், அவர் சொர்க்கம் செல்ல முடியாதவாறு தடுக்கப்படுவார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- ஜாமிஉஸ் ஸஙீர்


தண்டனையைக் கடினமாக்க வேண்டும் 


ஹள்ரமௌத் பகுதியில் இரண்டு பெண்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் தாக்கிப் பாட்டு பாடிய செய்தியும் முஹாஜிர் (ரலி) அவர்கள் அந்த பெண்களின் கரங்களைத் துண்டித்து அவர்களின் முன்பற்களைப் பிடுங்கியதாகவும் ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு செய்தி கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரை கேலி பேசிய அவ்விரு பெண்களுக்கும் எவ்வளவு இலேசான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 


உடனே ஜனாதிபதி அவர்கள் இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் முஹாஜிர் (ரலி) அவர்களுக்கு இவ்வாறு கடிதம் எழுதினார்கள்: (அதாவது,) நாயிகா என்ற பெண் நபியவர்களை திட்டியதால் வழங்கப்பட்ட தண்டனையை நினைவு கூர்ந்துவிட்டு, அல்லாஹ்வுடைய தூதரை திட்டி இழிவாக பேசி பாட்டுப் பாடிய பெண்ணுக்கு நீர் கொடுத்த தண்டனை குறித்து நான் அறிந்தேன். முன்னரே அந்த பெண்ணுக்கு நீர் தண்டனை மட்டும் கொடுக்காமல் இருந்திருந்தால், அவளுக்கு மரண தண்டனை கொடுக்குமாறு உமக்கு நான் ஆணையிட்டிருப்பேன்  காரணம், நபிமார்கள் விஷயத்தில் கொடுக்கப்படும் தண்டனை என்பது சாதாரண குற்றவியல் தண்டனைக்கு ஒப்பானது அல்ல. அதைவிட கடினமானது. நூல்:-  தாரீக்குத் தபரீ


இஸ்லாமியத் தலைவர்


கி.பி. 1890 – ஆம் ஆண்டு ஃபிரான்சின் தலைநகர் பாரிசில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைக் கேலி செய்யும் விதமாக ஒரு நகைச்சுவை நாடகம் நடந்துகொண்டிருந்தது.


உஸ்மானியப் பேரரசின் கலீஃபாவான (முஸ்லிம் உலகத்தின் ஆட்சித் தலைவர்) சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீது அவர்களுக்கு இது தெரிய வந்தது. உடனடியாக இந்த அருவருப்பான  நாடகத்தை நிறுத்தவேண்டும் என்று எச்சரித்து ஃபிரஞ்சுத் தூதருக்கு சுல்தான் அவர்கள் கடுமையாக ஒரு கடிதம் எழுதியனுப்பினார்.


”நான் பால்கன்ஸ், ஈராக், சிரியா, மௌண்ட் லெபனான், ஹிஜாஸ், கவ்கஸஸ், அனடோலியா ஆகியவற்றின் சுல்தான் ஆவேன். முஸ்லிம்களின் விவகாரங்களைத் தீர்த்து வைக்கும் ஆட்சியாளர் (கலீஃபா) ஆவேன். எனது தலைநகரம் இஸ்தான்புல். நான்தான் கலீஃபா அப்துல் ஹமீது கான். இறைத்தூதரைக் கேலி செய்யும் நாடகத்தை நிறுத்தவில்லையெனில், உம் தலைமையின் கீழ் உள்ள பகுதிகளை தேசங்களை அழித்துவிடுவேன்என்று அக்கடிதத்தில் சுல்தான் அப்துல் ஹமீது எச்சரித்திருந்தார்.


கடிதத்தைக் கண்ட ஃபிரஞ்சு அரசு உடனடியாக நாடகத்தை நிறுத்தியது. அத்தோடு கலீஃபாவை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இங்கிலாந்துக்கு அந்த நாடக நடிகர்களை நாடு கடத்தவும் செய்தது.


அன்று, உலக முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் இருந்ததால் ஐரோப்பிய நாடுகளும் இதர நாடுகளும் முஸ்லிம் தலைமையைக் கண்டு அஞ்சின. இறைத்தூதரை இழிவுபடுத்தும்போது அதைக் கண்டிக்க துப்புள்ள ஒரு அரசியல் தலைமை முஸ்லிம்களுக்கு இருந்தது. எனவே, அல்லாஹ்வின் தூதரின் மேலுள்ள அவமதிப்பை ஒரு கடிதம் கொண்டு நிறுத்திக்காட்டினார் அன்றைய கலீஃபா அப்துல் ஹமீது.


கொடியோன் அபூலஹப்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபியே) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள். (திருக்குர்ஆன்:-26:214) என்ற வசனம் அருளப் பெற்றபோது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சஃபா மலைக்குன்றின் மீதேறி நின்றுகொண்டு, "இன்ன இன்ன குலத்தாரே! வாருங்கள்" என்று அழைத்ததும் அங்கு அனைவரும் ஒன்று கூடினர்.


அண்ணலார், ( أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلاً تَخْرُجُ مِنْ سَفْحِ هَذَا الْجَبَلِ أَكُنْتُمْ مُصَدِّقِيَّ ) "இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப்படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால் அதை நீங்கள் நம்புகிறீர்களா சொல்லுங்கள்?" என வினவினார்கள். மக்கள், "ஆம்" (நம்புவோம்) என்று கூறினர். அப்போது அண்ணலார், ( فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ ) "நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்" (அதாவது முஸ்லிமாகி விடுங்கள்; நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறுவீர்கள்.) என்று கூறினார்கள். (இதைக்கேட்ட) கொடியோன் அபூலஹப், ( تَبًّا لَكَ مَا جَمَعْتَنَا إِلاَّ لِهَذَا ) "நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?" என்று (வசை வார்த்தை) கூறினான். அப்போதுதான் அல்லாஹுத்தஆலா (அபூலஹபை சபித்து) திருக்குர்ஆனின் 111 ஆம் அத்தியாயத்தை அருளினான். நூல்:- புகாரீ-4770, முஸ்லிம்-355


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றி விமர்ச்சிக்கும்போது அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அல்லாஹ், அண்ணலாரை விமர்ச்சிப்பவர்களை விடுவதில்லை. தக்க பதிலடி கொடுத்து விடுவான்.


கொடியோன் அபூலஹபை சபித்தது அல்லாஹ் மட்டுமல்ல. இந்த அத்தியாயம் அருளைப்பெற்ற பிறகு, அதை ஓதுவதின் மூலம் உலக முஸ்லிம்கள் அனைவரும் சுமார் 1400 வருடங்களாக அவனை சபித்துக் கொண்டிருக்கிறார்கள்.


அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஏசி பேசி, கேலி கிண்டல் செய்தவனெல்லாம் ஈடுசெய்யமுடியாத பெரும் இழப்பையும் இழிவையும் தான் சந்தித்தான் என்பதை வரலாறு பதிவுசெய்திருக்கிறது.


இஸ்லாத்தையும் அதன் தலைவர் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களையும் புரிந்து கொண்ட நல்ல உள்ளம் படைத்த அனைவரும் "கருத்து சுதந்திரம்" என்ற பெயரில் புரியப்படும் மேற்குலகின் கேலிச்சித்திரம், வசைப்பாடுதல் என்ற இழி செயலை வன்மையாக கண்டிக்கின்றனர்.


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து வசைப்பாடுதல், கேலிச்சித்திரங்களை வேண்டுமென்றே வரைந்து, அவர்களை அவமதித்து முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் சீண்டுபவர்கள் இனிமேல் இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபடாமல் இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும். இல்லையெனில், இந்த உலகை படைத்து பரிபாலிக்கும் ஏகன் அல்லாஹுத்தஆலாவின் கோபத்திற்கும் நல்லடியார்களின் சாபத்திற்கும் ஆளாகி, உலகிலேயே அல்லாஹ்வின் வேதனையை பெற்று சின்னாபின்னமாகி சிதறுண்டு போவார்கள்.

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...