Search This Blog

Thursday, 10 December 2020

கணிப்புதிறன்

 

 கணிப்புதிறன்


قَالَتْ إِحْدَاهُمَا يَا أَبَتِ اسْتَأْجِرْهُ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ


அவ்விரு பெண்களில் ஒருவர் (தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே இவரை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். (ஏனெனில்) நீங்கள் வேலைக்கு சேர்த்தவர்களிலேயே மிகச் சிறந்தவர் நம்பிக்கைக்குரிய இந்த பலசாலியே ஆவார்" என்று கூறினார்.                திருக்குர்ஆன்:- 28:26


சிந்தனைத்திறன் மிக்க ஒருவரால் நம்முடைய பேச்சுவார்த்தைகளை அல்லது செயல்பாடுகளை பார்த்தவுடனே நம்மைப்பற்றி ஓரளவு கணித்துவிட முடியும். கணிப்புதிறன் அது ஒரு தனி கலை. அது எல்லோருக்கும் சாத்தியமல்ல. கணிப்பு என்பது சில நேரங்களில் சொதப்பியும் விடலாம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய யுக முடிவின் போது ஏற்படும் அடையாளங்கள் அனைத்தும், வெறும் யூகத்தின் அடிப்படையில் கூறியவையல்ல. மாறாக, வஹீ எனும் இறைச் செய்தியின் மூலமாக அண்ணலார் கூறியவையாகும். எனவே அண்ணலார் கூறிய யுக முடிவின் அடையாளங்கள் அனைத்தும் நிச்சயமாக நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


சிறந்த வேலைக்காரர்


நபி ஷுஅப் (அலை) அவர்களின் இரு பெண் மக்களும் ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டுவதற்காக சென்றபோது அந்த இடத்தில் இந்தப் பெண்களுக்கு நபி மூசா (அலை) அவர்கள் மனமுவந்து உதவி செய்தார்கள்.


அந்நேரத்தில் அந்த இரு பெண்களில் ஒருவர், நபி மூசா (அலை) அவர்களின் உடல் பலத்தையும், உதவி செய்யும் மனப்பான்மையையும், நம்பிக்கைக்குரிய செயல்பாட்டையும் கவனித்துவிட்டு வந்து, தன் தந்தையிடம் இவரை வேலைக்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இவர் உடல்பலமிக்க நம்பிக்கைக்குரிய சிறந்த வேலைக்காரர் என்று சரியாக கணித்துக் கூறினார். அதன்படியே நபி மூசா (அலை) அவர்கள் நபி ஷுஅப் (அலை) அவர்களிடம் வேலைக்கு சேர்ந்து நல்லவிதமாக நடந்து கொண்டதால், அந்த வீட்டு மருமகனாக ஆனார்கள். இந்த வரலாற்று தகவலைத்தான் தலைப்பில் காணும் திருவசனம் கூறுகின்றது.


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். மக்களிலேயே மிகவும் தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்கள் மூவர் ஆவர். (அதில் ஒருவர்) நபி மூசா (அலை) அவர்களுடன் தொடர்புடைய பெண்ணாகும் என்றுக் கூறிவிட்டு தலைப்பில் காணும் திருவசனத்தை ஓதினார்கள். நூல்:- ஹாகிம், தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்


பார்த்தவுடன்


ஒரு மனிதர் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திருடினார். அவரை அண்ணலாரிடம் கொண்டு வரப்பட்டது. ( اقتُلُوهُ ) "அவரை (பார்த்தவுடன் அண்ணலார்)  கொன்றுவிடுங்கள்" என உத்தரவிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் நாயகமே! ( إِنَّمَا سَرقَ ) "அவர் திருடத்தான் செய்தார்" எனக் கூறினர்.  அண்ணலார் (அப்படியாசரி),  ( فَاقطَعُوهُ ) "அவரது மணிக்கட்டை வெட்டுங்கள்" எனக் கூறினார்கள். அவர் அடுத்த முறை திருடினார். அதற்காக அவரது மற்றொரு கை வெட்டப்பட்டது.


(ஜனாதிபதி) அபூபக்கர் ரலி அவர்களின் காலத்திலும் அவர் திருடினார். அதற்காக அவரது கால் வெட்டப்பட்டது. அவர் தொடர்ந்து மறுபடியும் திருடினார். அடுத்ததாக  மற்றொரு காலும் வெட்டப்பட்டது. அவர் ஐந்தாவது முறையும் திருடினார். அப்போது தான் அபூபக்கர் (ரலி) அவர்கள், ( كَانَ رسول الله صلعم أَعلَمُ بِهَذَا حَيثُ أَمَرَ بِقَتلِهِ إِذهَبُوا بِهِ فَاقتُلُوهُ ) "அண்ணலார் அன்றே இவரைப்பற்றி அறிந்துதான்  இவரைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள். எனவே, இவரை அழைத்துச் சென்று கொன்று விடுங்கள்" என்று கூறினார்கள்.                   அறிவிப்பவர்:- ஹாரிஸ் இப்னு ஹாதிப் (ரலி) அவர்கள்   நூல்:-முஃஜிஸாத்துர் ரசூல் பக்கம்-151


அதிர்ந்து விட்டனர் 


ஒரு முறை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தன் தோழர்களோடு அமர்ந்திருந்த போது, அங்கு ஒரு மனிதர் வந்து, "ஒரு முஸ்லிமை கொன்றவனுக்கு பாவ மன்னிப்பு கிடைக்குமா?" என்று வினவினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "இல்லை அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டார். இந்த பதிலை செவியுற்ற தோழர்கள் அதிர்ந்து போய் வினவினார்கள். இதுபோன்ற தீர்ப்பை ஒருபோதும் உங்களிடம் இருந்து நாங்கள் கேட்டதில்லை இன்று உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று வினவினர்.


அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நான் அவருடைய கண்களில் கொலை வெறியை கண்டேன். யாரையோ அவர் கொலை செய்ய துடித்துக்கொண்டிருக்கிறார். அவரை பின்தொடர்ந்து சென்று பாருங்கள்” என்று கூறி, சிலரை அம்மனிதன் சென்ற வழியில் அனுப்பி வைத்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அவர்களின் கணிப்பு சரியானதே என்று சென்று வந்தவர்கள் உறுதி செய்தனர்.


மனித வாழ்வில் பாவமன்னிப்பு என்பது மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பாவம் செய்தவர் அதை உணர்ந்து வருந்தி மறுபடியும் அதைச் செய்ய மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டு அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படும். அதன் மூலம் மனிதன் புத்துயிர் பெற்று மறுவாழ்வு பெறமுடியும். முதலில் பாவம் செய்துவிட்டு பிறகு அதற்குரிய பாவமன்னிப்பை தேடிக்கொள்ளலாம் என்று எண்ணுவது மிகப்பெரிய ஆபத்துக்குரிய செயலாகும். எனவே பாவமன்னிப்பு என்பது விளையாட்டு பொருளாகிவிடும். எனவே தான், இந்த விஷயத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மார்க்க தீர்ப்பு நேர்மாறாக இருந்தது.


கொலை செய்ய துடித்துக்கொண்டிருக்கும் வெறியனுக்கு பாவமன்னிப்பின் வாசலை திறந்து வைக்க கூடாது. செய்த பாவத்தை எண்ணி வருந்தி கொண்டிருப்பவனுக்கு பாவமன்னிப்பின் வாசலை அடைத்து வைக்கவும் கூடாது என்பதே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து. வந்த மனிதரின் கண்களில் துன்ப உணர்வு காட்சியளித்ததால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மார்க்கத் தீர்ப்பு நேர்மாறாக இருந்திருக்கிறது.


தப்பியோடிய அடிமை


முஸ்னீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஓர் இரவு பள்ளிவாசலில் நாங்கள் தங்கியிருக்கும்போது, ஒரு மனிதர் அங்கு வந்து, தூங்குபவர்களுக்குகிடையே ஒருவரைத் தேடி பார்த்தார். இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்கள் என்னை அழைத்து, அந்த மனிதரிடம் நீர் சென்று "ஒரு கண் மட்டும் தெரியக்கூடிய உனது நீக்ரோ அடிமை தப்பியோடிவிட்டானே அவனையா நீர் தேடுகின்றீர்...? என்று கேள்" எனக் கூறி அனுப்பினார்கள்.


நான் சென்று அவரிடம் அவ்வாறே கேட்டேன். அதற்கவர் "ஆம்" எனக் கூறிவிட்டு, இவ்வளவு துல்லியமாக அடையாளங்களை கூறும் உமக்கு அவன் இருப்பிடம் தெரியுமா? எனக் கேட்டார். உடனே நான் அவரை  இமாமவர்களிடம் அழைத்து வந்தேன். "எனது அடிமை இருக்குமிடம் உமக்குத் தெரியுமா?" என இமாமவர்களிடம் அவர் கேட்டார். அதற்கு இமாமவர்கள் "சிறைக்கூடம் சென்று தேடிப்பார்! அங்கு அந்த அடிமை இருப்பான்" என பதில் கூறினார்கள்.


அவர் சிறைக்கூடம் நோக்கி சென்ற பிறகு, நான் இமாமவர்களை அணுகி, "நீங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்துவிட்டீர்கள். இவ்வளவு துல்லியமாக எப்படி உங்களால் சொல்ல முடிந்தது" என்று வினவினேன்.


அதற்கு இமாமவர்கள் "அவர் அவசரமாக பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும், யாரோ ஒருவரைத் தேடி கண்டுபிடிக்க வந்திருக்கிறார் என்பது அவரது அங்க அவயங்களின் பரபரப்பிலிருந்து தெளிவானது. பள்ளிவாசலுக்குள் நுழைந்த அவர் நேராக, நீக்ரோ அடிமைகள் தூங்கும் இடத்திற்குச் சென்று சுற்றிப் பார்த்தார். அதன் மூலம் அவரின் நீக்ரோ அடிமை தப்பிவிட்டான் அவனைத் தேடித்தான் இங்கு வந்துள்ளார் என்று கணித்தேன். அங்கு படுத்திருந்த ஒவ்வொருவரையும் அவர்களின் ஒரு கண்ணையே உற்று நோக்கினார். அதன் மூலம் அவர் தேடக்கூடிய அடிமைக்கு ஒரு கண் ஊனமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். எனது அனுபவத்தில், இப்படி தெரியாமல் ஓடிவிடும் அடிமைகளுக்கு பசி ஏற்பட்டால் திருடுவார்கள். அல்லது வயிறு நிறைந்து விட்டால் ஒழுங்கீனமாக நடப்பார்கள். இவ்விரண்டில் எதையாவது செய்துவிட்டு எப்படியும் அவன் பிடிபட்டு சிறைச்சாலையில்தான் இருக்க வேண்டும் என கணித்தேன்" என்று  பதிலளித்தார்கள். நூல்:- பைஹகீ


அடுத்த ஜனாதிபதி


ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) அவர்கள் தனது தன்னுடைய இறுதி நேரத்தில் தம்முடைய நீண்ட கால அனுபவத்தின் மூலமாக ஜனாதிபதி என்னும் இப்பெரும் பொறுப்பைச் சுமப்பதற்கு உமர் (ரலி) அவர்கள் மட்டுமே தகுதியானவர் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். மரணத்திற்கு முன்பாகவே மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் நோக்கில் மூத்த நபித் தோழர்களை அழைத்து விசாரித்தார்கள். முதன் முதலில் அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்களை வரவழைத்து விசாரித்தார்கள்.


அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்களிடம் இருக்கும் தகுதியை பற்றி சொல்ல என்ன இருக்கிறது? சற்றே வேகமாக இருக்கிறார் என்பது தான் அவரிடம் இருக்கின்ற ஒரே குறை" என  கருத்து தெரிவித்தார்கள்.


அபூபக்ர் (ரலி) அவர்கள், "அதற்குக் காரணம் என்னவென்றால் நான் மிகவும் மென்மையானவனாக இருக்கிறேன். ஆகையால் அவர் கடுமை காட்டுகிறார். முழுப் பொறுப்பும் அவருடைய தோளிலேயே விழுந்துவிட்டால் அவரும் மென்மையானவராக மாறி விடுவார்" என அதற்கு  பதிலளித்தார்கள்.


பிறகு உஸ்மான் (ரலி) அவர்களிடமும் விசாரித்தார்கள். அவரும், உமர் (ரலி) அவர்களைப் பற்றி நல்லவிதமாகவே கூறினார்கள்.


இதனை அறிந்த தல்ஹா (ரலி) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களை சந்தித்து "தாங்கள் இருக்கும்போதே எங்களோடு உமர் (ரலி) அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் அல்லவா? இப்போது அவர் ஜனாதிபதியாக ஆகிவிட்டால் என்னவெல்லாம் செய்வாரோ? தாங்கள் இறைவனை சந்திக்கப் போகிறீர்கள். இதைப்பற்றி இறைவனிடம் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.


அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள், "உன்னுடைய அடியார்களை அவர்களில் மிகச் சிறந்த ஒருவர் வசம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கிறேன் என்று நான் என்னுடைய இறைவனிடம் சொல்லுவேன்" என்று கூறினார்கள்.              நூல்:- அல்ஃபாரூக்


ஆம்! அபூபக்ர் (ரலி) அவர்கள் எவ்விதமாக கணித்தார்களோ அவ்விதமாகவே உமர் (ரலி) அவர்கள் சிறப்பாக ஆட்சி செய்தார்கள். உமர் (ரலி) அவர்கள் பொறுப்புக்கு வந்த பிறகு, கனிவுக்குரிய நேரத்தில் கனிவும், கண்டிப்புக்குரிய நேரத்தில் கண்டிப்பும் அவர்களிடம் காணப்பட்டது.


உலக மோகம்


(காரூன் ஆகிய) அவன் (ஒருநாள் மிக ஆடம்பரமான) தன் அலங்காரத்துடன் தன் மக்கள் முன் சென்றான். (அதனைப் பார்த்தவர்களில்) எவர்கள் இவ்வுலக வாழ்க்கையை (பெரிதென) விரும்பியவர்களாக இருந்தார்களோ அவர்கள் "காரூனுக்கு கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட வேண்டாமா? ஏனென்றால், நிச்சயமாக அவன் பெரும் பாக்கியவான்" என்று கூறினார்கள். திருக்குர்ஆன்:- 28:79


உலக மோகம் கொண்டவர்கள் பொருளாதாரம் தான் மிகப் பெரிய பாக்கியமாகும் என்றும் செல்வந்தர்கள் பாக்கியவான்கள் என்றும்  கணிக்கின்றார்கள். இது தவறான கணிப்பாகும் எனக் கூறி, அல்லாஹ் சாடுகிறான்.


பட்டறிவு அல்லது படிப்பறிவு இல்லாதவர்களின் கணிப்பு பெரும்பாலும் தவறாகவே முடியும். ஆகவே, அல்லாஹ் நம்மை சிந்தனை திறன் மிக்கவர்களாக வாழச்செய்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...