Search This Blog

Friday, 20 November 2020

மெய்நிலை கண்டவர்

 

                               மெய்நிலை கண்டவர்


يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ


(அல்லாஹ்வாகிய) அவன் (நல்லடியார்களாகிய) அவர்களை நேசிப்பான். அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் இறைநம்பிக்கையாளர்களிடம் பணிவு மிக்கவர்களாகவும் இறைமறுப்பாளர்களிடம் கண்டிப்பானவர்களாகவும் இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். தூற்றுவோரின் தூற்றுக்கெல்லாம் அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அதை அவன், தான் நாடுவோருக்கு வழங்குகிறான். அல்லாஹ் தாராளமானவனும் நன்கறிந்தோனும் ஆவான்.           திருக்குர்ஆன்:- 5:54


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خِيَارُ عِبَادِ اللّٰهِ اَلَّذِينَ اِذَا رُءُو ذُكِرَ اللّٰهُ ) யாரை கண்டால் அல்லாஹ்வின் சிந்தனை உண்டாகுமோ அத்தகையோர் தான் அல்லாஹ்வின் சிறந்த அடியார்கள் ஆவார்கள். அறிவிப்பாளர்:- அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹமத், மிஷ்காத் பக்கம்-415


இறைநேசர் கௌசுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஸைலானி (ரஹ்) அவர்கள் ஈரான் நாட்டில் உள்ள ஜீலான் எனும் ஊரில் அபூசாலிஹ் சைய்யிது மூசா (ரஹ்), உம்முல்கைர் ஃபாத்திமா (ரஹ்) தம்பதியருக்கு (ஹிஜ்ரீ 2-9-470  - கி.பி. 19.3.1078) சஹர் எனும் அதிகாலையில் பிறந்தார்கள். அவர்களின் வம்சாவழித் தொடர் ஹசன் (ரலி) அவர்கள் வரை சென்றடைகிறது. தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோயுற்றிருந்து பிறகு ஈராக் நாட்டில் உள்ள பஃதாத் எனும் ஊரில் (ஹிஜ்ரீ11.4.561   -  கி.பி. 14-2-1166) தனது 91 ஆம் வயதில் மறைந்தார்கள்.


தமது 51 வது வயதில் தான் முதல் திருமணம் செய்தார்கள்.  மொத்தம் அவர்களுக்கு 4  மனைவியர், 22 பெண் பிள்ளைகள், 27 ஆண் பிள்ளைகள் ஆகும்.


தாய் வளர்ப்பு

                                                   

கௌசுல் அஃலம் அவர்கள் சிறு பிராயத்தில் மதரசா சென்றுவிட்டு வந்தவுடன், தாயார் "மகனே! இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் உணவுக் கேட்டு பிரார்த்தனை செய்! அதன் பிறகு அலமாரியை திறந்து பார்; உனக்கு உணவு கிடைக்கும். நிச்சயமாக அல்லாஹ் தருவான் என்பார். அவ்வாறே கௌசுல் அஃலம் அவர்களும் தொழுது பிரார்த்தனை எல்லாம் செய்துவிட்டு, அதன் பிறகு அலமாரியை திறந்து பார்ப்பார்கள் அங்கே தட்டில் உணவு இருக்கும். தனது பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதாக எண்ணி அதை மகிழ்ச்சியுடன் எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் மகனுக்கு தெரியாமல் தாயார் தட்டில் உணவை வைத்துவிடுவார். இந்த நடைமுறை ஒவ்வொரு நாளும் நடந்தது.


ஒரு நாள் தாயார் பக்கத்து ஊருக்கு சென்று விட்டார். விரைவில் வரமுடியவில்லை. தன் மகன் இன்று சாப்பிடாமல் இருப்பாரே என்ற மனக்கவலையுடன் வேகமாக வீடு திரும்பி வருகிறார். ஆனால் மகன் வழக்கம் போல் இரண்டு ரக்அத் தொழுது பிரார்த்தித்துவிட்டு அலமாரியைப் பார்த்தார். அதில் உணவு இருக்க, அதை எடுத்து சுவைத்து சாப்பிட்டார்.


தாயார் மகனை சந்தித்ததும் "நீ சாப்பிட்டாயா?" என்று வினவினார். மகன் ஆம்! சாப்பிட்டேன். இன்று உணவு மிக சுவையாக இருந்தது என்று பதிலளித்தார். இதனை செவியுற்ற தாயார் மகனின் பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டதை நினைத்தும், தனது தூய வளர்ப்பின் பலனை எண்ணியும் மனம் மகிழ்ந்தார்.


கௌசுல் அஃலம் அவர்கள் கூறுகிறார்கள். நான் 18 வது வயதில் கல்வி கற்க பக்தாத் நகர் நோக்கி செல்லும் போது ஹமதான் நகருக்கு அருகில் கொள்ளையர் கூட்டம் வழிமறித்து மக்களின் பொருள்களை பறித்தனர். அவர்களில் ஒருவன் என்னை கடந்து செல்லும் போது "நீ என்ன வைத்திருக்கிறாய்?" என்று கேட்டான். அதற்கு நான் "நாற்பது பொற்காசுகள் உள்ளன" என்று கூறினேன். அது எங்கே? என்று கேட்டான். அது என் சட்டைக்குள் வைத்துத் தைக்கப்பட்டுள்ளது என்று கூறினேன்.


அவன் நான் கேலி பேசுவதாக நினைத்து என்னைவிட்டும் திரும்பி சென்றான். மற்றொருவன் வந்து முந்தியவன் கேட்டது போல் கேட்டான். இவனுக்கும் அதே பதிலை கூறினேன். இறுதியாக அவர்களின் தலைவன் வந்து,  என்னை சோதனையிட்டு என்னிடமுள்ள நாற்பது பொற்காசுகளை எடுத்தான். "நீ இவ்வாறு உண்மை கூறுவதற்கு காரணம் என்ன? என்று அவன் வினவினான். அதற்கு "என்னிடம் என் தாயார் எப்பொழுதும் உண்மை தான் பேச வேண்டும் என வாக்குறுதி வாங்கியுள்ளார். இந்த பொற்காசுகளை விட அந்த வாக்கை காப்பதே எனக்கு முக்கியம்" பதிலளித்தேன். இதனை செவியுற்ற அவனது உள்ளத்தில் இறையச்சம் உண்டாகியது. அவனும் அவனது கூட்டத்தினரும் என் முன்னிலையில் மனம் வருந்தி, செய்த பாவத்திற்கு மன்னிப்புக் கோரி அவர்கள் எடுத்த பொருள்களை திரும்பி கொடுத்து விட்டனர்.             நூல்:- முர்ஷிதுத்துல்லாப்


பேரறிஞர்


காஜி அபூசயீத் மக்ரமீ (ரஹ்) அவர்கள் "பாபுல் அஸ்ஜ்" எனும் பகுதியில் அருமையான சிறிய மதரசா ஒன்று ஏற்படுத்தியிருந்தார். அந்த மதரசாவை கல்வியில் மிகவும் தேர்ச்சிப்பெற்றிருந்த கௌசுல் அஃலம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் மாணவர்களுக்கு ஆர்வத்துடன் கல்வி போதித்து வந்தார்கள். அறிவுரை வழங்குவதன் மூலம் மக்களோடும் தொடர்பு வைத்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கு மக்களிடையே நல்ல புகழும் செல்வாக்கும் ஏற்பட்டன.


அன்னாரின் அவைக்கு மக்கள் அதிகமாக வருகைத்தர தொடங்கியதால் அந்த மதரசாவே நிரம்பி வழிந்தது. நெருக்கடி ஏற்பட்டது. பிறகு அந்த மதரசா விரிவாக்கப்பட்டது. அம்மதரசா அன்னாரின் பெயரால் அழைக்கப்பட்டது.              நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


கௌசுல் அஃலம் அவர்கள் 13 துறையில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அன்னாரிடம் மாணவர்கள் காலையிலும் மாலையிலும் தஃபசீர் எனும் திருக்குர்ஆன் விளக்கவுரை, நபிமொழி விரிவுரை, ஃபிக்ஹ் எனும் சட்டத்துறை, (உசூலுல் ஃபிக்ஹ்) அதன் அடிப்படை, மற்றும் கருத்து வேறுபாடு, அரபி இலக்கணம் பற்றிய விரிவுரை போன்ற துறைகளில் பாடங்கள் பயின்று கொண்டிருந்தனர்.                      நூல்:- அத்தபகாதுல் குப்ரா   இமாம் ஷஃரானி


கௌசுல் அஃலம் அவர்களைப்பற்றி தவறாக விளங்கியிருந்த ஒரு அறிஞர்  கௌசுல் அஃலம் அவர்கள் ஒருமுறை திருக்குர்ஆன் விரிவுரை செய்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு, கௌசுல் அஃலம் என்ன தான் விரிவுரை செய்கிறார்கள் என்பதை நேரடியாக கேட்டறிந்து விடுவோம் என்றெண்ணி அந்த சபையில் தன்னுடைய மாணவர்களுடன் வந்து அமர்ந்தார்.


கௌசுல் அஃலம் அவர்கள் திருமறையிலுள்ள ஒரு வசனத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக விளக்கம் கூறிவரும் போது இது எனக்கு தெரிந்த விளக்கம் தானே என்று சொல்லிக் கொண்டே வந்தார். கௌசுல் அஃலம் அவர்கள் பதினொன்றாவது விளக்கத்தை கூறிய போது அது அவருக்கு புதிதாகத் தோன்றியது. கௌசுல் அஃலம் அவர்கள் அந்த ஒரே வசனத்திற்கு ஒன்றன்பின் ஒன்றாக நாற்பது விளக்கங்களைக் கூறவே, இவர் மலைத்து விட்டார். தம்முடைய அறியாமையையும், கௌசுல் அஃலம் அவர்களின் மார்க்க ஞானத்தை எண்ணிபார்த்து விட்டு, ஆஹா! கௌசுல் அஃலம் அவர்களைத் தாம் தவறான மதிப்பிட்டதையும் நினைத்து மனம் வருந்தி, கௌசுல் அஃலம் அவர்களை அணுகித் தம் பிழை பொறுத்தருளுமாறு வேண்டினார்.


இதே போன்று தான் கௌசுல் அஃலம் அவர்களைச் சோதிக்க வந்த பல மார்க்க அறிஞர்களின் நிலையும் ஆனது.


ஒருமுறை மக்கள் கௌசுல் அஃலம் அவர்களிடம் வந்து "ஒரு மனிதன் தான் மட்டும் ஒரு வணக்கத்தில் ஈடுபட வேண்டும். அந்த நேரத்தில் அந்த வணக்கத்தில் வேறு யாரும் ஈடுபடக் கூடாது. அவ்வாறு நடந்துவிட்டால் தன் மனைவியை விவாகரத்து செய்து விடுவதாக சத்தியம் செய்து விட்டான். அந்த மனிதன் எந்த வணக்கத்தை செய்தால் அவனது சத்தியம் முறியாது?" என்று வினவினார்கள்.


உடனே கௌசுல் அஃலம் அவர்கள் அந்த மனிதன் மக்காவுக்கு சென்று கஃபாவை தவாஃப் (வலம் வருதல்) செய்யும் இடத்தை தனக்கென மட்டும் ஒதுக்கிக் கேட்டு அவன் மட்டும் ஏழு முறை தவாஃப் செய்தால் அவனது சத்தியம் நிறைவேறி விடும்" என்று பதிலளித்தார்கள். கௌசுல் அஃலம் அவர்களது இந்தப் பதில் ஈராக் நாட்டு அறிஞர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்களோ இந்த கேள்விக்கு பதிலளிக்க இயலாது என்று கூறியிருந்தனர்.     நூல்:- அத்தபகாதுல் குப்ரா இமாம் ஷஃரானி


உயர்ந்த பண்பாளர்


கௌசுல் அஃலம் அவர்களது காலத்தில் வாழ்ந்த பல இறைநேசர்களுடன் நட்புறவு கொண்டிருந்த ஹராதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். கௌசுல் அஃலம் அவர்களைவிட அழகிய குணம் படைத்த, அதிகக் கண்ணியம் வாய்ந்த, நட்பையும் வாக்குறுதியையும் அதிகம் காப்பாற்றுகின்ற எவரையும் நான் கண்டதில்லை.


மேலும் அன்னார் மிக உயர்ந்த மாண்பும் சிறப்புமும் விரிவான கல்வி ஞானமும் பெற்றிருந்தும் கூட சிறுவர்களுடன் நின்று பேசுவார்கள். பெரியவர்களுக்கு கண்ணியம் அளிப்பார்கள். தாமே சலாம் கூறி பேசத் தொடங்குவார்கள். பலவீனப்பட்ட மக்களுடன் சேர்ந்து அமர்ந்திருப்பார்கள். ஏழைகளிடம் பணிவாக நடப்பார்கள். சமூகத் தலைவர்கள், பிரமுகர்கள் என்று எவருக்காகவும் எழுந்திருக்க மாட்டார்கள். மன்னர் மற்றும் அமைச்சருடைய வாசலுக்கு ஒருபோதும் அவர்கள் சென்றதில்லை.     நூல்:- கலாயிதுல் ஜவாஹிர்


ஜுப்பாயி (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் . கௌசுல் அஃலம் மூலமாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான  யூதர்களும், கிருஸ்தவர்களும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீணர்களும் ஆயுதமேந்திக் கொள்ளையடிப்பவர்களும் பாவமீட்சி பெற்றுள்ளனர்.      நூல்:-கலாயிதுல் ஜவாஹிர்


தர்ம சிந்தனை


கௌசுல் அஃலம் அவர்கள் கூறினார்கள். இந்த உலகமே எனது கரங்களில் வந்து விட வேண்டும். அனைத்தையுமே பசித்தோருக்கு உணவாக அளித்திட வேண்டும் என நான் ஆவல் கொள்கிறேன். மேலும் எனது கை ஓட்டைக் கை. அது எதையும் சேமித்து வைக்காது. என்னிடம் ஆயிரம் தங்க காசுகள் வந்தாலும் ஒரு இரவு கூட அவை என்னிடம் தங்கமாட்டாது.                                      நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


கௌசுல் அஃலம் அவர்கள் பெரும்பாலும் நோன்பாளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய நிலத்தில் பயிரிடப் பெற்ற கோதுமையை அரைத்துச் சுடப் பெற்ற ரொட்டிகளைக் கொண்டே அவர்கள் நோன்பு திறந்து வந்தார்கள். அவர்களுக்கென நான்கு ஐந்து ரொட்டிகள் கொண்டு வந்து வைக்கப்படும். அவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டிருப்பார்கள். அப்போது அவர்களின் பணியாள் வெளியே சென்று "கௌசுல் அஃலம் அவர்கள் நோன்பு திறக்கப் போகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து உண்ண விரும்வோர் வரலாம்" என்று கூவி அழைப்பார். அப்போது பலர் வந்து அவர்களுடன் அமர்ந்து சேர்ந்து உண்ணுவார்கள்.


மனநிலை


ஒருமுறை கௌசுல் அஃலம் அவர்கள் தன் சீடர்களில் ஒருவர் மூலமாக ஒரு பாத்திரம் நிறைய ரொட்டிகளை வைத்து இறைநேசராக விளங்கிய தனது நண்பர் ஒருவருக்கு கொடுத்து அனுப்பினார்கள். அந்த இறைநேசர் வந்த ரொட்டிகள் முழுவதையும் ஒரே முறையில் சாப்பிட்டு முடித்துவிட்டு, பேசிக் கொண்டிருக்கையில் தன்னை "உண்டு ருசி அறியாதவர்" (உணவுக்காக ஏங்குபவரல்ல) என்று குறிப்பிட்டார். அந்த சீடருக்கு ஆச்சரியம் மேலிட்டது.


சில மணி நேரத்திற்கு பிறகு கௌசுல் அஃலம் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது தன்னை "பெண் ருசி அறியாதவர்" (காமம் நிறைந்தவரல்ல) என்று குறிப்பிட்டார்கள். அப்போதும் அந்த சீடருக்கு ஆச்சரியம் மேலிட, கௌசுல் அஃலம் அவர்களே! உங்களின் நண்பர் மூன்று நபர்கள் உண்ணும்உணவை ஒரே முறையில் உண்டு முடித்துவிட்டு அவர் தன்னை "உண்டு ருசி அறியாதவர்" என்று குறிப்பிட்டார். "தாங்கள் 4 பெண்களை மணமுடித்து 49 குழந்தைகள் பெற்றுள்ளீர்கள்.” ஆனால் தங்களை பெண் ருசி அறியாதவர் என்று குறிப்பிடுகிறீர்கள். எனக்கோ ஒன்றும் புரியவில்லையே!" என்றார்.


அவருக்கு செயல் ரீதியாக பதிலளிக்க விரும்பிய கௌசுல் அஃலம் அவர்கள் இரு நபர்களை அழைத்து அவர்களிடம் கூரான இரு வாள்களை கொடுத்தார்கள். கேள்வி கேட்க அந்த சீடரின் தலை மீது தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தை வைத்தார்கள். வாள் கொடுக்கப்பட்ட அந்த இருவரிடமும் நீங்கள் இவரை இன்ன இடத்தில் நடைபெறுகின்ற விழாவுக்கு அழைத்து செல்லுங்கள். அவர் விழாவை கண்டுக்களிக்கும்போது, அவரது தலையிலுள்ள  பாத்திரத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கீழே விழுந்தாலும் அவரது தலையை கொய்துவிடுங்கள்" என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.


சில மணிநேரம் கழித்த பிறகு அந்த சீடர் வந்தார். அப்போது அவரிடம் கௌசுல் அஃலம் நீர் விழாவை நல்ல முறையில் கண்டுக்களித்தீரா? அச்சமயம் உமது மனநிலை எப்படி இருந்தது? என்று வினவினார்கள். அதற்கு அவர் நான் விழாவை கண்டுக்களிப்பதைவிட என் தலை மீது இருக்கும் பாத்திரத்திலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட கீழே விழுந்துவிடக்கூடாது என்பதிலேயே மிகுந்த கவனத்துடன் இருந்தேன். காரணம்  என் தலை மீதிருக்கும் தண்ணீர் பாத்திரத்திலிருந்து ஓரிரு சொட்டுக்கள் சிந்தினாலும் என் தலை கொய்தப்பட்டுவிடுமே! என்று அந்நேரத்தில் பதட்டத்துடன் இருந்த தன் மனநிலையை விவரித்தார்.


அப்போது தான் கௌசுல் அஃலம் அவர்கள் அவரின் கேள்விக்கு "இவ்வாறு தான் எங்களைப் போன்றவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணமுடித்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தாலும், எவ்வளவு உண்டு கழித்தாலும், எவ்வளவு காசு பணம் சம்பாதித்தாலும் எங்கள் உள்ளங்கள் இறைசிந்தனையை விட்டும், மறுமை சிந்தனையை விட்டும்  தடுமாறுவதில்லை. இவைகளால் தடுக்கவும் இயலாது" என்று பதிலளித்தார்கள்.


ஒருமுறை கௌசுல் அஃலம் அவர்கள் தம் வீட்டில் இருக்கும் போது ஒருவர் வந்து அன்னாரின் வியாபாரக் கப்பல் புயலில் சிக்கிக் கொண்டதாகக் கூறினார். அது கேட்ட அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள். அடுத்த நாள் மற்றொருவர் வந்து "புயலில் சிக்கிய தங்களின் கப்பல் தப்பித்துக் கொண்டது" என்று கூறினார். அது கேட்டும் அவர்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினார்கள்.


இவ்விரு நிகழ்ச்சிகளையும் கண்டு, பெரிதும் வியப்புற்ற ஒருவர் கௌசுல் அஃலம் அவர்களிடம் "தங்களின் கப்பல் புயலில் தப்பிய செய்தி அறிந்து அல்ஹம்துலில்லாஹ் என்று தாங்கள் கூறியதைப் புரிந்து கொண்டேன். ஆனால் நேற்று ஒருவர் வந்து தங்களின் கப்பல் புயலில் சிக்கிக்கொண்டன என்று கூறிய பொழுதும் தாங்கள் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறியது தான் எனக்கு புரியவில்லை!" என்று கூறியபோது "கப்பலை இழந்ததற்காகவோ, அவற்றை மீளப் பெற்றதற்காகவோ நான் இறைவனைப் புகழவில்லை. இழப்பு செய்தி அறிந்து என் மனம் சிறிதும் கவலைப்படாமல் இறைவன் நாட்டத்தை இனிமையுடன் ஏற்றுக் கொண்டது கண்டு இறைவனைப் புகழ்ந்தேன். இரு எதிர் மாறான நிலைகளிலும் இறைவனின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் மனநிலையை எனக்குத் தந்த இறைவனை நான் என்றென்றும் புகழ்ந்து கொண்டிருப்பேன்" என்று அவர்கள் கூறினார்கள்.


தகுதி வேண்டும்  


கௌசுல் அஃலம் அவர்கள் பேராசிரியராக பணியாற்றிய "மத்ரசா காதிரிய்யா" எனும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உணவும், தங்குமிடமும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார்கள்.


ஒருபெண் தன் மகனை இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயில சேர்த்துவிட்டுச் சென்றாள். சில காலம் கழித்து அவள் தன் மகனைக் காண வந்த போது, அவன் மெலிந்து துரும்பாகி, காய்ந்த ரொட்டியை உண்டு கொண்டிருந்தான். பிறகு அப்பெண் கௌசுல் அஃலம் அவர்களைக் காண வந்த போது, அவர்களோ பொறித்த கோழியை உண்டு கொண்டிருந்தார்கள்.


இதனைக் கண்ட அவள் ஆத்திரமடைந்தவளாக, கௌசுல் அஃலம் அவர்களிடம் சென்று ஆசிரியரே! உங்களை மக்கள் நற்குண சீலர், மாமேதை என்றெல்லாம் கூறுகின்றனர். என் மகன் இங்கு தங்களிடம் பயில வந்து, காய்ந்த ரொட்டிகளை உண்டு உருத் தெரியாது ஓடாகிவிட்டபோது தாங்கள் மட்டும் பொறித்த கோழியை உண்ணுவது எந்த வகையில் நியாயம்? என்று வினவினாள்.


இதனை செவியுற்ற கௌசுல் அஃலம் அவர்கள் ஒரு புன்புறுவலை உதிர்த்தவாறு தனக்கு அருகில் இருந்த கோழி எலும்புகளை ஒன்று சேர்த்து உயிர்ப்பிக்கக்கூடிய அல்லாஹ்வின் ஆணையினால் நீ உயிர் பெற்றெழுக!" என்று கூறினார்கள். அடுத்தகணம் அது உயிர் பெற்று எழுந்து நின்று கொக்கரித்தது. அது கண்டு அப்பெண் வியந்து போனாள். அப்போது கௌசுல் அஃலம் அவர்கள் அப்பெண்ணிடம் "உன்னுடைய மகன் இத்தகு தகுதியைப் பெற்றுவிடின், அவன் இதனை உண்பதற்கு எவ்வித தடையுமில்லை" என்று கூறினார்கள்.


பிற்காலத்தில் அப்பெண்ணின் மகனார் மார்க்க ஞானத்தில் தேர்ச்சிப் பெற்று, சிறப்புற்று விளங்கிய பின்னர், தம் மகனாரைக் காண அவள் வந்த சமயம், கௌசுல் அஃலம் அவர்களுடன் தம் மகனார் அமர்ந்து பொறித்த கோழி உண்டுகொண்டிருப்பதைப் பார்த்து மனம் பூரித்துப் போனாள். உண்டு குவித்திருந்த அந்த எலும்புகளை நோக்கி,  அல்லாஹ்வின் ஆணையினால் உயிர் பெற்றெழுமாறு தம் மகனார் கூற, அடுத்தகணம் அது உயிர் பெற்று எழுந்து கொக்கரித்தது. இதனைப் பார்த்த அப்பெண் மட்டில்லா மகிழ்ச்சியடைந்து, கௌசுல் அஃலம் அவர்களையும் தம் மகனாரையும் வாழ்த்தினாள். மேலும் கௌசுல் அஃலம் அவர்களின் ஊழியத்திலேயே தொடர்ந்து இருக்குமாறு தம் மகனாரிடம் சொல்லி விட்டுச் சென்றாள்.              நூல்:- பஹ்ஜத்துல் அஸ்ரார்


உண்மையான குரு என்பவர் தன்னைப் போன்ற பல குருக்களை உருவாக்குபவராவார். தனக்கு கோஷம் போடுபவர்களை உருவாக்குபவர் அல்லர்.


ஷைக் இஸ்ஸுத்தீன் பின் அப்துஸ் ஸலாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கௌசுல் அஃலம் அவர்களைத் தவிர வேறு எந்த ஞானிகளிடமும் அதிகமான அற்புதங்கள் நிகழ்ந்ததில்லை. இவ்வாறே ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.                                        நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


கண்டித்தார்கள்


ஒருமுறை கலீஃபா முஸ்தன்ஜித்பில்லாஹ் கௌசுல் அஃலம் அவர்களின் அருளுரை கேட்பதற்காக வந்தபோது பத்துப் பைகள் நிரம்ப பொற்காசுகள் கொண்டு வந்து அன்னாரிடம் கொடுத்து அதை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். அன்னார் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தபோது கலீஃபா மீண்டும் மீண்டும் அதை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினார். அப்போது அன்னார் அப்பைகளில் இரண்டை எடுத்து தனது கரங்களால் நசுக்கினார்கள். என்ன வியப்பு! அப்பைகளில் இருந்து இரத்தம் பீறிட்டு வெளியே பாய்ந்தது.


அப்போது அன்னார் கலீஃபாவை நோக்கி இந்தப் பொற்காசுகள் உண்மையில் பொற்காசுகள் அல்ல. இவை மக்களைக் கொடுமைப்படுத்தி, அவர்களைப் பிழிந்தெடுத்த இரத்தம் என்பதை நான் அறிவேன், நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறினார்கள். இதனைப் பார்த்த கலீஃபா மூர்ச்சையாகி கீழே சாய்ந்தார்.               நூல்:- பஹ்ஜத்துல் அஸ்ரார்


ஒருமுறை கலீஃபா முக்தலிலி அமரில்லாஹ் என்பவர் அபுல் வஃபா யஹ்யா பின் சயீத் என்பவரை நீதிபதியாக நியமித்தார். இவர் அநீதியாளர் என்பதை நாடே அறியும். கௌசுல் அஃலம் அவர்கள் இந்நியமனத்தைக் கண்டித்தார்கள். மிம்பர் மீது நின்று கொண்டு கூறினார்கள்.


"கொடுமையாளரினும் கொடுமையாளனை முஸ்லிம்களுக்கு நீதிபதியாக நியமித்துவிட்டாய்! கிருபையாளரினும் கிருபையாளனான அல்லாஹ்விடம் நாளை நீ என்ன பதில் சொல்ல போகிறாய்?" இதனை செவியுற்ற கலீஃபா நடுங்கினார். அழுதார். உடனே மேற்சொன்ன நீதிபதியைப் பதவியிலிருந்து நீக்கினார்.          நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


 பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது


இமாம் ஹாபிள் அபூ அப்துல்லாஹ் முஹம்மத் பின் யூசுப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். கௌசுல் அஃலம் அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருந்தது. அன்னார் எந்நேரமும் இறைவனை நினைவு கூறுபவராகவும், இளகிய மனமுடையவராகவும், அத்துடன் இறை வணக்கத்திலும் கல்வி ஆராய்ச்சியிலும் (இஜ்திஹாதிலும) அதிக ஈடுபாடு கொண்டவராக வாழ்ந்தார்கள். நூல்:- கலாயிதுல் ஜவாஹிர்


அபூ ஹப்ஸ் உமரி ஹத்தாதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் கௌசுல் அஃலம் அவர்களிடம் சென்று "நான் ஹஜ்ஜுக்கு செல்ல ஆயத்தமாகி விட்டேன். ஆனால் காலம் குறைவாக உள்ளது. மேலும் எனது ஒட்டகம் கிழட்டு பருவமடைந்து மெலிந்து விட்டது. இதை வைத்துக்கொண்டு நான் எப்படி வேகமாக செல்ல முடியும்? அதனால் இந்த ஒட்டகத்தில் பரக்கத் எனும் அருள் வளம் ஏற்பட பிரார்த்திக்குமாறு" கோரினேன்.


உடனே கௌசுல் அஃலம் அவர்கள் பிரார்த்தித்துவிட்டு அந்த ஒட்டகத்தை தனது திருக்கரத்தால் தடவி கொடுத்தார்கள். பிறகு எனது ஹஜ் பயணத்தின் போது அந்த ஒட்டகம் மற்ற ஒட்டகங்களைவிட வேகமாக செல்வதையும், அது வலிமை மிக்கதாக ஆகிவிட்டதையும் நான் அறிந்தேன்.


உதிர்ந்த முத்துகள்


கௌசுல் அஃலம் அவர்கள் பணத்திற்கு அரபி மொழியில் சொல்லப்படும் தீனார், திர்ஹம் என்ற இரு சொற்களைப் பயன்படுத்தி பணத்தை எந்தளவு மதிக்க வேண்டுமென்பதைத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.


தீனார் எனும் சொல்லிலுள்ள "நார்" என்ற சொல்லை தனியாக பிரித்துப் பார்த்தால் அதன் பொருள் "நெருப்பு" என்றாகிறது. நெருப்பு அளவோடு இருந்தால் தான் அது விளக்கு ஏற்றவும், சமையல் செய்யவும் இன்னும் பல தேவைகளுக்கு பயன்படுகிறது. அது அதிகமாகப் போய் விட்டால், அது வீட்டை மட்டுமின்றி, நம்மையும் எரித்துச் சாம்பலாக்கிவிடும்.  

                                                         

திர்ஹம் எனும் சொல்லிலுள்ள "ஹம்" என்ற சொல்லை தனியாக பிரித்துப் பார்த்தால் அதன் பொருள் "கவலை" என்றாகிறது. அந்தக் கவலை, அதாவது பணம் பற்றிய கவலை அளவோடு இருந்தால் தான், மனிதன் முன்னேறுவான். இல்லையேல் பைத்தியக்காரனாகி விடுவான் என்று தெளிவுப்படுத்தினார்கள்.


கௌசுல் அஃலம் அவர்கள் கூறினார்கள். அனைத்து நற்காரியங்களையும் நான் ஆராய்ந்து பார்த்து விட்டேன். அவற்றில் உணவளிப்பதைவிட சிறந்த நற்காரியம் வேறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.             நூல்:- ரிஜாலுல் ஃபிக்ர் வத்தஃவா ஃபில் இஸ்லாம்


கௌசுல் அஃலம் அவர்கள் கூறுகிறார்கள் கடமையான வணக்கங்களை விடுவது நாத்திகமாகும். விலக்கப்பட்ட செயல்களை செய்வது இறைக்கட்டளையை மீறுவதாகும். எந்நிலையிலும் யாரைவிட்டும் மார்க்கத்தின் கடமைகள் நீங்கிவிட மாட்டாது. 


மேலும் இறைவனின் வாசலில் நின்று கொண்டிருப்பவனுக்கு உலகம் பணிவிடை செய்கிறது. தனது வாசலில் வந்து தன்னிடம் தேவையாகி நிற்பவனை உலகம் இழிவுப்படுத்துகிறது.


மேலும் பணம் கையிலும், பையிலும் இருப்பது கூடும். ஏதேனும் நன்நோக்கத்திற்காக சேமித்து வைப்பதும் கூடும். ஆனால் பணம் உள்ளத்தில் இடம் பிடித்துவிடக் கூடாது.             நூல்:- ஃபத்ஹுர் ரப்பானி


கௌசுல் அஃலம் அவர்கள் ஹிஜ்ரீ 521-561 வரை அதாவது 40 ஆண்டு காலம் ஆற்றிய பேருரை தான் பின்னர் "ஃபத்ஹுல் கைப்", "ஃபத்ஹுர் ரப்பானி" எனும் பெயரில் நூல்களாக உருவானது. எழுதப்பட்ட தன்னுடைய பேருரைகளை கௌசுல் அஃலம் அவர்கள் வாங்கித் திருத்திச் செப்பணிட்டுக் கொடுப்பார்கள்.


மேலும் அவர்கள் எழுதிய "குன்யத்து தாலிபீன்" எனும் நூல் மார்க்க சட்டதிட்டங்கள் பற்றியதாகும்.


இறைநேசர்களுடன் நட்பு கொள்ளும் பாக்கியத்தை நமக்கு இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...