Search This Blog

Saturday, 7 November 2020

இஸ்லாத்தின் உயிர்நாடி

 

இஸ்லாத்தின் உயிர்நாடி


قال الله سبحانه وتعالى  :  يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ

 

قال رسول الله صلى الله عليه وسلم :  اُغْدُ عَالِماً أَوْ مُتَعَلِّماً أَوْ مُسْتَمِعاً أَوْ مُحِبّاً وَلاَ تَكُنِ الْخَامِسَةَ فَتَهْلِكَ وَالْخِامِسَةُ أَنْ تُبْغِضَ الْعِلْمَ وَأَهْلَهُ


அல்லாஹுத்தஆலா இஸ்லாமிய மார்க்கத்தை அதன் அறிஞர்களைக் (ஆலிம்களை) கொண்டே நிலைப்படுத்தி வருகிறான். எனவேகால ஓட்டத்திற்கு இணையாக திறமை மிகுந்த மார்க்க அறிஞர்களை உருவாக்கும் மதரசாக்களை மேம்படுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்த சமுதாயத்திற்கு உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தின் உயிர்நாடியாக மதரசாக்கள் திகழ்கிறது என்பது மிகையாகாது.


يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ


அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு ஞானத்தை வழங்குகிறான். ஞானம் வழங்கப்பெற்றவர் ஏராளமான நன்மைகள் பெற்றவர் ஆவார். அறிவுடையோரைத் தவிர (மற்ற எவரும் இதைச்) சிந்திப்பதில்லை. திருக்குர்ஆன்:- 2:269


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                                           ( اُغْدُ عَالِماً أَوْ مُتَعَلِّماً أَوْ مُسْتَمِعاً أَوْ مُحِبّاً وَلاَ تَكُنِ الْخَامِسَةَ فَتَهْلِكَ وَالْخِامِسَةُ أَنْ تُبْغِضَ الْعِلْمَ وَأَهْلَهُ ) நீங்கள் மார்க்க அறிஞராகவோ அல்லது மார்க்க அறிவை கற்றுக்கொள்பவராகவோ அல்லது மார்க்க அறிவை கவனத்துடன் கேட்பவராகவோ அல்லது மார்க்க அறிவையும் அதன் உடையவர்களையும் நேசிப்பவராகவோ இருங்கள். (இந்த நான்கு வகையினர் இன்றி) ஐந்தாம் வகையினராக ஆகிவிடாதீர்கள். (அப்படி ஆகிவிட்டால்) அழிந்து விடுவீர்கள். ஐந்தாம் வகையினர், என்பது  மார்க்க அறிவையும் அதன் உடையவர்களையும் வெறுப்பதாகும். அறிவிப்பாளர்:- அபூபக்கரா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, பஸ்ஸார், மஜ்மஉஸ் ஸவாயித்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   

( مَن عَلَّمَ وَلَدَهُ اٰیَةً مِّنَ القُراٰنِ کَانَ ذَلِكَ خَیرًا لَّهُ مِن عِبَادَةِ اَلفَ سَنَةٍ صِیَامُ نَهَارُهَا وَقِیَامُ لَیَالَهَا وَخَیرًا مِّن اَلفِ دِینَارٍ تَصَدَّقَ بِهَا عَلَی الفُقَرَاءِ وَالمَسَاکِینِ ) 

ஆயிரம் வருட காலம் நோன்பு நோற்று, ஆயிரம் இரவுகள் வணங்கி, ஆயிரம் தங்க நாணயங்கள் தர்மம் செய்வதை விட தன்னுடைய பிள்ளைக்கு குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை ஒருவர் கற்றுக் கொடுப்பதே சிறந்ததாகும்.


குர்ஆன் மனனம்


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் இராக்கில், குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு சன்மானம் வழங்கும்படி உத்தரவிட்டார்கள். இதனால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. மறுவருடம் 700 பேர் குர்ஆனை மனனம் செய்து முடித்துவிட்டதாக ஜனாதிபதி அவர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது. உடனே ஜனாதிபதி அவர்கள் மார்க்கத்தை விளங்காமலேயே குர்ஆனில் வேகம் காட்டுவார்களோ என்று நான் பயப்படுகிறேன் என்று கூறி அறிவித்த சன்மானத்தை ரத்து செய்து விட்டார்கள். நூல்:- தஃப்சீர் ததப்புருல் குர்ஆன்


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் உத்தரவின் அடிப்படையில் டமாஸ்கஸ் நகரில் தங்கியிருந்த (குர்ஆனை திறம்பட ஓதும் காரீயாகவும் மற்றும் அதனை முழுவதும் மனனம் செய்திருந்த ஹாபிளாகவும் இருந்த,) அபூதர்தா (ரலி) அவர்கள் ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருப்பார்கள். அவர்களைச் சுற்றிலும் குர்ஆனை கற்றுக்கொள்பவர்கள் குழுமியிருப்பார்கள். பத்துப் பத்து ஆட்களை கொண்ட குழுவாக அவர்களைப் பிரித்து வைக்கப்படும்.  ஒவ்வொரு குழுவிலும்  குர்ஆனை திறம்பட ஓதக்கூடிய காரீ ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்.


அபூதர்தா (ரலி) அவர்கள் அந்த குழுக்களுக்கு மத்தியில் நடை பயின்றவாறே எப்படி கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பதை கண்காணித்து கொண்டே இருப்பார்கள். ஒரு மாணவர் முழு குர்ஆனையும் மனனம் செய்து முடித்துவிட்டால், தன்னுடைய சிறப்பு மாணவர்களில் ஒருவராக, தனது நேரடிக் கண்காணிப்பில் பயில்பவராக அவரை ஆக்குவார்கள். ஒருநாள் அபூதர்தா (ரலி) அவர்கள் அந்த மாணவர்களை எண்ணிப் பார்த்தபோது 16,600 மாணவர்கள் அவர்களுடைய கண்காணிப்பின் கீழ் பயின்று வந்தார்கள். நூல்:-  அல்ஃபாரூக்


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் ராணுவ வீரர்கள் அவசியமாக குர்ஆனை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அதன் பிறகு, குர்ஆனைக் கற்று முடித்தவர்களின் பட்டியல் அவ்வப்போது அதிகாரிகளிடம் இருந்து ஜனாதிபதி அவர்களுக்கு வரவழைக்கப்பட்டது. இதன் பயனாக குர்ஆனை கற்றுக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. அதில் குர்ஆன் முழுவதையும் மனனமிட்டோர் ஆயிரக்கணக்கானோர் ஆவர். குர்ஆனைப் பார்த்து ஓதத் தெரிந்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. நூல்:- கன்ஸுல் உம்மால், அல்ஃபாரூக்


சஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். என்னுடைய படையினரில் மட்டும் குர்ஆனை முழுவதுமாக மனனமிட்டிருந்த 300 ஹாஃபிள்கள் இருந்தார்கள். நூல்:- கன்ஸுல் உம்மால், அல்ஃபாரூக்


கல்வி நிறுவனம்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் அண்ணலாரிடம் (கல்வி கற்பதற்காக) சென்றுவிடுவார். மற்றொருவர் தொழில் செய்து வந்தார். தொழில் செய்யக்கூடியவர் தம் சகோதரர் பற்றி (அவர் தொழிலில் ஒத்துழைப்பதில்லை என) அண்ணலாரிடம் முறையிட்டார். அப்போது அண்ணலார், ( لَعَلَّكَ تُرْزَقُ بِهِ ) "அவரை முன்னிட்டு உனக்கு உணவளிக்கப்படலாம்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2267


பாரசீக இளவரசர் அர்சலான் என்பவர், நிஸாமுல் முல்க் தூசி (ரஹ்) அவர்களின் அறிவாற்றலை கண்டு அன்னாரை அமைச்சராக நியமித்தார். பிறகு அர்சலான் மகன் ஜலாலுதீன் மலிக் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தார். அமைச்சர் நிஸாமுல் முல்க் தூசி (ரஹ்) அவர்கள் அரசாங்க வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை கல்விக்காக செலவழித்தார். (இவரே கி.பி. 1065 ஆம் ஆண்டு பக்தாதில் நிஸாமிய்யா பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தவர் ஆவார். இறைநேச செல்வர் முஹைய்யதீன் அப்துல் காதிர் ஜைலானீ - ரஹ் அவர்கள் இந்த பல்கலை கழகத்தில் தான் கல்வி பயின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) கல்லூரிகளை நிர்மாணிப்பதற்கான 30 லட்சம் ரூபாயையும் நிஸாமிய்யா பல்கலைக்கழகத்திற்காக 10 லட்சம் ரூபாயும் செலவிட்டார்.


இதைக் கண்டு துணுக்குற்ற சுல்தான் ஜலாலுதீன், இவ்வளவு பெரிய தொகையை கொண்டு ஒரு பெரும் படையையே நிர்மாணித்து விடலாமே? என்று கேட்டார். அதற்கு அன்னார் "மன்னரே! உம்மை விற்றால் முப்பது தீனார்களுக்கு அதிகமாக யாரும் வாங்க மாட்டார்கள். எனினும் உம்மை இறைவன் இந்த பேரரசுக்கு மன்னராக ஆக்கியுள்ளான். அதற்காக நீ உன்னுடைய இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டாமா? உன்னுடைய படைவீரர்கள் எய்யும் அம்பு 30 கஜத்திற்கு அப்பால் கூட செல்லாது. ஆனால், நான் நிர்மாணிக்கும் (கல்வி) படையினரின் பிரார்த்தனை என்னும் கணைகளை விண்முகட்டால்கூட தடுத்து நிறுத்த முடியாது" என்று கூறினார்கள்.


பக்தாதில் இருந்த மதரசா நிஸாமிய்யா பல்கலை கழகத்திற்கு ஷைகு தகீகுத்தீன் பின் தகீகுல் ஈத் என்ற பேரறிஞர் தலைமை ஆசிரியராக இருந்தார்கள். அப்போது மதரசா மாணவர்கள் கட்டுப்பாடாக இல்லை; அறிவு தாகம் உடையவர்களாக இல்லை என்ற செய்தி பரவியதும், இதனால் மதரசாவை நிறுவிய அமைச்சர் நிஸாமுல் முல்க் (ரஹ்) அவர்களுக்கு பெரும் கவலை ஏற்பட்டது. கல்விப் பணிக்காக இலட்சக்கணக்கில் பணத்தை செலவிடுகிறோம். மதரசாவை நிறுவிய நோக்கம் நிறைவேறாவிட்டால் அதை இழுத்து மூட வேண்டியதுதான் என்ற வேதனையுடன் மாணவர்களின் நோக்கத்தை உளவறிய  அமைச்சர் நிஸாம் (ரஹ்) அவர்கள் மதரசாவுக்கு நேரடியாக வருகை தந்தார்.


ஒரு மாணவரிடம், "நீ எதற்காக மதரசாவுக்கு ஓத வந்தீர்" என கேட்டார். அந்த மாணவர், "என்னுடைய தந்தை ஒரு நீதிபதி அவருக்குப்பின் அந்தப் பொறுப்பைப் பெற வேண்டும் என்பதற்காக" என்று பதிலளித்தார். அமைச்சர்  மனவருத்தப்பட்டார். பிறகு அமைச்சர் மற்றொரு மாணவரிடம், "நீ எதற்காக மதரசாவுக்கு ஓத வந்தீர்" என்று மன்னர் கேட்டார். அந்த மாணவர் , "என் தந்தை ஒரு மார்க்க அறிஞர். எனவே நானும் ஒரு மார்க்க அறிஞராக ஆக வேண்டும் என்பதற்காக  என்னை அனுப்பி வைத்தார்" என்று பதிலளித்தார். அமைச்சர் முகம் வாடியது.


எவரிடமும் பரிசுத்தமான நோக்கம் இல்லையே இந்த மதரசா இயங்க வேண்டுமா? என்ற மன உளைச்சலுடன் அமைச்சர் நடந்த சென்றபோது ஓரத்தில் ஒரு மாணவர் கிதாபை மடியில் வைத்துக் கொண்டு ஆழ்ந்து போய் இருப்பதைக் கண்டார். அவர் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு வியந்து, அவரை இருமுறை அழைத்தார். மூன்றாம் முறை தான் அந்த மாணவர் சுதாரித்தார். "எங்கள் முகத்தை திரும்பி பார்க்கக் கூடாதா?" என அமைச்சர்  வினவ, "நான் கிதாபை ஆராய்ந்து கொண்டிருந்தேன்" என்று அந்த மாணவர் பதிலளித்தார்.


முதல் இரு மாணவர்களிடம் கேட்ட அதே கேள்வியை அம்மாணவரிடமும் அமைச்சர் கேட்டார். அம்மாணவர், "மார்க்க கல்வியை தேடுவதன் நோக்கம்  பேருபகாரியான அல்லாஹ்வின் கட்டளைகளை அறிந்து அவன் பக்கமே திரும்புவதாகவும் என என்னுடைய ஆசிரியர் எனக்கு போதித்தார்கள். அந்த நோக்கத்தை அடையவே இங்கு கல்வி தேடி வந்தேன்" என்று பதிலளித்தார். அப்போது தான் அமைச்சர் நிம்மதியானார். மதரசாவை இழுத்து மூடும் நோக்கத்தை மாற்றிக்கொண்டார்.


மண்ணறையில் மன்னிப்பு


ஒரு முறை நபி ஈசா (அலை) அவர்கள் பாலைவனத்தில் பக்கம் நடந்து செல்லும்பொழுது, ஓர் மண்ணறையில் ஒருவன் வேதனை செய்யப்படுவதை பார்த்து சென்றார்கள். பின்னர் சிலகாலம் சென்றபின் ஈசா (அலை) அவர்கள் அவ்வழியே வந்த பொழுது அந்த மண்ணறைவாசி  சொர்க்கத்தில் சுகமாக இருப்பதைக் கண்டு வியப்புற்று, "இறைவா! இந்த மனிதனின் நிலை என்ன? என்று வினவினார்கள்.


அதற்கு இறைவன் "இம்மனிதன் இறக்கும் பொழுது இவனுடைய மனைவி கருவுற்றிருந்தாள். பிறகு அவள் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து வளர்த்தாள். அக்குழந்தை சிறுவனாக வளர்ந்ததும் அவனை மதரஸாவுக்கு அனுப்பி வைத்தாள். ஆசிரியர் அச்சிறுவனுக்கு 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்று கூறி பாடம் தொடங்கினார். அச்சிறுவனும் அவ்வாறு கூறினான். அதன் காரணமாக அந்த ஆசிரியருக்கும், அச்சிறுவனுடைய பெற்றோர்களுக்கும் பாவமன்னிப்பு வழங்கினேன்" என்று விடையளித்தான்.   


மறுமையில் கண்ணியம்


அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒருவரது மரணத்திற்குப் பின் அவரது அந்தஸ்து உயர்த்தப்படும். அப்போது அவர், ( أَيْ رَبِّ أَيُّ شَيْءٍ هَذِهِ‏ ) "இறைவா! இந்த அந்தஸ்து உயர்வுக்கு காரணம் என்ன?" என்று  கேட்பார். ( وَلَدُكَ اسْتَغْفَرَ لَكَ‏ ) "உன்னுடைய பிள்ளை உனக்காக வேண்டி பாவமன்னிப்புத் தேடியது" என்று அவருக்கு சொல்லப்படும். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-36


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   

( مَنْ قَرَأَ الْقُرْآنَ وَتَعَلَّمَهُ وَعَمِلَ بِهِ أُلْبِسَ يَوْمَ الْقِيَامَةِ تَاجاً مِنْ نُورٍ ضَوْؤُهُ مِثْلُ ضَوْءِ الشَّمْسِ وَيُكْسَي وَالِدَيْهِ حُلَّتَانِ لاَ يَقُومُ بِهِمَا الدُّنْيَا فَيَقُولاَنِ بِمَا كُسِينَا هذَا؟ فَيُقَالُ بِأَخْذِ وَلَدِكُمَا الْقُرْآنَ

குர்ஆனை ஓதி அதைக் கற்று அதன்படி செயல்படுபவருக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று ஒளியால் ஆன கிரீடம் அணிவிக்கப்படும், அதன் ஒளி சூரியனைப் போன்று இருக்கும், முழு உலகமும் நிகராக முடியாத இரு ஆடைகள் அவருடைய பெற்றோருக்கு அணிவிக்கப்படும். “இந்த ஆடைகள் எங்களுக்கு எதன் காரணமாக அணிவிக்கப்படுகின்றன? என்று அவர்கள் கேட்பார்கள். “உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் குர்ஆனை கற்றுக் கொடுத்ததற்காக!'' என்று பதிலளிக்கப்படும். அறிவிப்பாளர்:- புரைதா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம்


ஆகவே, நாம், திறமை மிகுந்த மார்க்க அறிஞர்களை உருவாக்கி, அதன் மூலம் இஸ்லாமிய வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். அதற்கு அல்லாஹுத்தஆலா  அருள்பாலிப்பானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்:9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...