மரியாதை
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ
وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ
(புலம்பெயர்ந்த) முஹாஜிர்கள், (அவர்களுக்கு உதவி
புரிந்த) அன்சாரிகள் ஆகியோரில் எவர்கள் (இஸ்லாமில்) முதலாவதாக முந்திக் (கொண்டு நம்பிக்கை)
கொண்டார்களோ அவர்களையும் நற்செயல்களில் (உண்மையாகவே) இவர்களை பின்பற்றியவர்களையும்
பற்றி அல்லாஹ் திருப்தியடைகின்றான். திருக்குர்ஆன்:- 9:100
டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம்
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய உரிமை என்பது பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்பது தான். அது தான், மிகப்பெரிய மனித உரிமை. எனவே, இது விஷயத்தில் ஜாதி, மதம், பொருளாதாரம் நிலை, உடல் அமைப்பு ஆகியவற்றில் பாகுபாடு காட்டக்கூடாது.
பிற மனிதர்களை இழிவாகக் கருதாமல் அவர்களுக்கு கண்ணியம் அளிக்க வேண்டும் என்று இஸ்லாம் இயம்புகிறது. குறிப்பாக தகுதி உடையவர்களுக்கு கௌரவம் அளிக்க வேண்டும். பெற்றோர்கள், வயதில் முதிர்ந்தவர்கள், கல்வியாளர்கள், சான்றோர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும். இப்பண்பு தான் சிறந்த முஸ்லிம் என்பதற்கான அடையாளமாகும்.
இந்த நற்பண்புகள் முஸ்லிம்களின் முந்தைய தலைமுறைக்கு நற்பலன் அளித்தன. மேற்கூறிய
குணங்களை தங்களுக்குள் கொண்ட உயர்ந்த மனிதர்களை உருவாக்கின. முதியவரையும் சான்றோரையும்
மதிப்பதில் அவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.
இப்லீஸ் அல்லாஹுக்கு இணைவைக்கக்கூடாது என்றத் தெளிவான அறிவாற்றல் உடையவன். ஆனால் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிய வேண்டும் என்ற ஞானம் இல்லாததால் அவன் அல்லாஹுவின் சாபத்தைப் பெற்றான்.
அல்லாஹ் கண்ணியப்படுத்த சொல்பவர்களை கண்ணியப்படுத்தத் தவறினால் (அதாவது இறை கட்டளைக்கு அடிபணிய மறுத்ததால்) இறைசாபம் ஏற்படக்கூடும் என்ற தகவல் இப்லீஸ் மூலம் கிடைத்ததாகும்.
தகுதிக்கேற்ற
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( خَالِقُوا النَّاسَ بِاَخلَا قِهِم ) மக்களிடம் அவர்களின் பண்புகளுக்கு தகுந்தவாறு பழகுங்கள். நூல்:- ஹாகிம்
ஹசன் (ரலி) அவர்கள் தனது தந்தை அலீ (ரலி) அவர்கள் மூலமாக அறிவிக்கிறார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சான்றோர்களுக்கு கண்ணியத்தில் முதலிடம் அளித்தார்கள். மார்க்கப் பற்றில் உள்ள அந்தஸ்திற்கு ஏற்ப கண்ணியமளித்தார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் சங்கைக்குரியவராக இருப்பவரை சங்கை செய்தார்கள். அவரையே அக்கூட்டத்தின் தலைவராகவும் ஆக்கினார்கள். அவர்களது சபை நேர்மையான நடத்தையுள்ள சிறந்த இறைநம்பிக்கையாளர்களால் செழிப்படைந்து இருந்தது. அவர்களுக்கு மத்தியில் இறையச்சத்தை அடிப்படையாகக் கொண்டே ஏற்றத் தாழ்வு இருந்தது. நூல்:- ஹயாத்து ஸஹாபா
ஒருமுறை ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். காலை உணவை வைக்கும்படி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நல்ல ஆடைகள் உடுத்திய ஒரு செல்வந்தர் கடந்து சென்றார். அவரை உணவு உண்ண அழைக்கும்படி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அழைக்கப்பட்டதும் அவர் வாகனத்தில் இருந்து இறங்கினார். உணவு உண்டார். அதன் பின் சென்று விட்டார்.
யாசகர் ஒருவர் வந்தார். அவருக்கு ஒரு ரொட்டித்துண்டை கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். இந்த வித்தியாசத்தைப் பற்றி கேட்கப்பட்டபோது, ஆயிஷா (ரலி) அவர்கள், “ நான் செய்தது போல் செய்யாதவரை இந்த செல்வந்தர் நம்மை கொண்டு சந்தோஷம் அடைந்திருக்க மாட்டார். இந்த யாசகர் யாசகம் கேட்டார். அவர் திருப்திப்படும் ஒன்றை கொடுக்கும் படி கூறினேன் ( أَنْزِلُوا النَّاسَ مَنَازِلَهُمْ ) ‘மக்களிடம் அவரவர்களின் தரத்துக்கேற்ப நடந்து கொள்ளுங்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்” என கூறினார்கள். நூல்:- அபூதாவூது, கஷ்ஃபுல் ஃகஃபா
பாத்திரம் அறிந்து பிச்சை இடு! என்பது தமிழ் பழமொழி
தலைவர், தொண்டர், நல்லவர், கெட்டவர், சிறியவர், பெரியவர் அனைவரும்
சட்டத்திற்கு முன் சமமானவர்கள் தான். அல்லாஹ் விதித்த வரம்புகளின் விஷயத்தில் எவரிடத்திலும்
தயவு தாட்சண்யம் காட்டப்படமாட்டாது;
ஆனால், பொது நடைமுறைகளில் கல்வியையும் இறையச்சத்தையும் மற்றுமுள்ள தனிப் பண்புகளையும்
கவனத்தில் கொண்டு நடந்து கொள்ளுவது அவசியம். இது பற்றியே இந்த நபிமொழியில் சொல்லப்பட்டுள்ளது.
பெற்றோர்கள்
அவனை அவனுடைய தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனேயே அவனை அவள் ஈன்றாள். அவனைச்
சுமப்பதற்கும் பால்குடி மறக்கச் செய்வதற்கும் முப்பது மாதங்கள் ஆகும். திருக்குர்ஆன்:- 46:15
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் தம் தாயைப் புண்படுத்தி விட்டு மனைவிக்கு அடிபணிந்து நடப்பது, ஒருவர் தன் நண்பருடன் ஒட்டி உறவாடிவிட்டு, தந்தையை தள்ளிவைப்பதுப் போன்ற தீய காரியங்களை செய்வார்களேயானால் அவர்கள் மீது (இறைவனின்) சோதனை இறங்கும். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2136
"இறைவனின் அன்பு பெற்றோரின் அன்பில் உள்ளது. இறைவனின் வெறுப்பு பெற்றோரின்
வெறுப்பில் உள்ளது" என்கிறது ஒரு நபிமொழி. (நூல்:- தப்ரானீ)
மனிதன் பிறப்பதற்கு இறைவனுக்கு அடுத்து பெற்றோரே காரணம். ஒரு பெண் கர்ப்பம் தரித்தது
முதல் பெற்றெடுத்துப் பாலூட்டி வளர்த்து ஆளாக்கும்வரை அவள் செலுத்தும் அக்கறை, காட்டும் பாசம், செய்யும் பணிவிடைகள், படும் அவஸ்தைகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
அவள் தனது பிள்ளைகளுக்காக செய்யும் தியாகத்திற்கு ஈடு ஏதுமில்லை என்கிறது திருக்குர்ஆன்.
எனவே, தாயின் தியாகத்திற்கும், அந்தஸ்த்திற்கும் மனைவி ஈடாக முடியாது. தாயை ஒதுக்கிவிட்டு
மனைவியை முன்னிலைப்படுத்துவன், அவன் நன்றி கெட்டவன்
என்பதற்கான அடையாளமாகும்.
குழந்தையின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும்
ஜீவன் தான் தந்தை. தாம் ஒழுங்காக உண்ணாவிட்டாலும் உடுத்தாவிட்டாலும் அதை பொருட்படுத்தாமல்
தம்முடைய பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைத்து ஓடாய்த் தேய்ந்து மெழுகாய்
உருகுபவர் அவர். அவர்களின் நிறைவைத் பார்த்து ஏற்படும் கண் குளிர்ச்சி ஒன்றையே பெரும்
செல்வமாக கருதுபவர். எனவே, தந்தையின் தியாகத்திற்கும், அந்தஸ்த்திற்கும் நண்பன் ஈடாக முடியாது. தந்தையை
தள்ளி வைத்துவிட்டு நண்பனை முன்னிலைப்படுத்துவன், அவன் நன்றி கெட்டவன்
என்பதற்கான அடையாளமாகும்.
சில சமயங்களில் மனைவி மற்றும் நண்பனின் உறவு
முறிந்து போய்விடலாம். ஆனால், பெற்றோரின் உறவு அப்படியல்ல.
எந்த காலத்திலும் அந்த உறவுமுறையை முறிக்கவோ பிரிக்கவோ முடியவே முடியாது. தாய் தந்தையை விட மனைவி அல்லது நண்பன் உயர்ந்தவர்களல்லர்
என்று விளங்க வேண்டும்.
மூத்தவர்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன்
அமர்ந்திருந்தார்கள். அண்ணலாரின் அருகில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் அமர்ந்திருந்தனர். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் அங்கு வந்தார்கள்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்காக சற்று நகர்ந்து இடம் கொடுத்தார்கள். அப்பாஸ்
(ரலி) அவர்கள் அண்ணலாருக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் இடையில் அமர்ந்துகொண்டார்.
பின்பு அண்ணலார் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, ( اِنَّمَا يَعرِفُ الفَضلَ لِاَهلِ الفَضلِ اَهلُ الفَضلِ )
"நிச்சயமாக சிறந்தவர்கள் தான்
சிறந்தவர்களின் மதிப்பை விளங்கிக் கொள்வார்கள்" என்று கூறினார்கள். நூல்:- கன்ஸுல்
உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் 2 பக்கம்-582
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا
اَکرَمُ شَابٌّ شَیخًا لِسِنِّهِ اِلَّا قَیَّضَ اللّٰهُ لَهُ عِندَ سِنِّهِ مَن یُّکرِمُهُ ) ஒரு வாலிபர் ஒரு முதியவருக்கு அவரின் முதுமையைக் கவனித்து கண்ணியம் (பணிவிடை)
செய்தால் நிச்சயமாக இவரின் முதுமையில் இவருக்கு கண்ணியம் (பணிவிடை) செய்யும் ஒரு மனிதரை
அல்லாஹ் ஏற்படுத்துவான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான்,
மிஷ்காத்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த விஷயத்திலும் பெரியவர்களை வயதில் மூத்தவர்களை முற்படுத்துவார்கள்.
அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவார்கள். அவர்களைக் கண்ணியப்படுத்தவும் அவர்களின் அந்தஸ்துகளைப்
பேணவும் வலியுறுத்துவார்கள்.
ஹாரிஸ் பின் ஃபளைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) அவர்கள்
யஸீத் பின் அபூசுஃப்யான் (ரலி) அவர்களை ஒரு படைக்கு தலைவராக்கிய போது கூறியவை: (அந்த
படையில் அபூஉபைதா (ரலி), முஆது பின் ஜபல் (ரலி) ஆகியோர் படைவீரர்களாக இருந்தனர்.)
யஸீதே! "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒவ்வொரு சமுதாயத்திலும்
நம்பிக்கைக்குரியவர் ஒருவர் இருப்பார். என்னுடைய சமுதாயத்தில் அபூ உபைதா (ரலி) அவர்கள்
நம்பிக்கைக்குரியவர் ஆவார்" என்று கூறியுள்ளார்கள். எனவே, அவருடைய சிறப்பையும் அவர் மூத்தவர் என்பதையும் கவனித்து செயல்படுவாயாக! மேலும், முஆத் பின் ஜபல்
(ரலி) அவர்கள் அண்ணலாருடன் போரில் கலந்து கொண்டவர். மேலும் அண்ணலார், அவர் மறுமை நாளில் மார்க்க அறிஞர்களில் உயர் அந்தஸ்த்தில் இருப்பார் என்றும் கூறியுள்ளார்கள். எனவே, அவர் விஷயத்திலும்
கவனித்து செயல்படுவாயாக! நூல்:- கன்ஸுல் உம்மால், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2, பக்கம்-151
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. முதியவர் ஒருவர் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களை நாடி வந்தார். ஆனால் மக்கள் அவருக்கு வழி விடுவதில் சுணக்கம் காட்டினர். அப்போது தான் அண்ணலார், ( لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا ) "நம்முடைய சிறார்களிடம் அன்பு காட்டாதவரும், பெரியவர்களை கண்ணியப்படுத்தாதவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்லர்" கூறினார்கள். திர்மிதீ-1842, முஸ்னது அஹ்மத்
சிறியவர் மீது அன்பு காட்டுவதும் பெரியவரை மதிப்பதும் பொதுவான மனிதப் பண்புகளில்
ஒன்றாகும். சிறார்கள்தான் அடுத்த தலைமுறை; வளரும் தலைமுறை. சக மனிதர்களின் அன்பும் ஆதரவும் இருந்தால்தான், வளரும் தளிர் நற்பயிறாக அமையும். அன்பு காட்டப்படுபவன்
நாளை பிறரிடம் அன்பு காட்டும் நல்ல மனிதனாக மாற வழியேற்படும்.
அவ்வாறே, வயதிலோ கல்வியிலோ மூத்தவர்களாக இருப்போரை மதித்தால்தான் அவர்களின் மனம் குளிரும். மதிக்கப்படும் ஒருவர் நான்கு பேர் தம்மை மதிக்கிறார்களே என்பதற்காக வேண்டியாவது அந்தரங்கத்திலும் நல்லவராக வாழ முனைவார். அத்துடன் பெரியவர்களை மதிக்கும் போது நம்மிடம் பணிவும் கனிவும் உண்டாக வழியேற்படும்.
மார்க்க அறிஞர்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( إِنَّ مِنْ إِجْلاَلِ اللَّهِ إِكْرَامَ ذِي الشَّيْبَةِ الْمُسْلِمِ وَحَامِلِ الْقُرْآنِ غَيْرِ الْغَالِي فِيهِ وَالْجَافِي عَنْهُ وَإِكْرَامَ ذِي السُّلْطَانِ الْمُقْسِطِ )
நரைத்த (வயோதிக) முஸ்லிமுக்கும், குர்ஆனில் வரம்பு மீறாத அதனைவிட்டும் தூரமாகாத குர்ஆன் உடையவர்களுக்கும் (ஹாபிள்கள் ஆலிம்கள்), அதிகாரமுள்ளவர்களுக்கும் மரியாதை செய்வது அல்லாஹ்வுக்கு மரியாதை செய்வதாகும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
( لَا یُوَسَّعُ المَجلِسَ اِلَّا لِثَلَا ثَةٍ لِذِی سِنٍّ لِسِنِّهِ وَذِی عِلمٍ لِعِلمِهِ وَذِی سُلطَانٍ لِسُلطَانِهِ ) மூன்று மனிதர்களுக்காகவே சபை விரிவுபடுத்தப்பட வேண்டும். 1) வயது முதிர்ந்த பெரியவர் 2) மார்க்க ஞானம் உள்ள அறிஞர் 3) கண்ணியப்படுத்த வேண்டிய ஆட்சியாளர். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான், மிஷ்காத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( حَامِلُ القُراٰنِ حَامِلُ
رَأیَةِ الاِسلَامِ فَمَن اَکرَمَهُ اَکرَمَهُ اللّٰهُ وَمَن اَهَانَهُ فَعَلَیهِ لَعنَةُ
اللّٰهِ
) திருக்குர்ஆனைச் சுமப்பவர், இஸ்லாமிய கொடியை சுமப்பவர் ஆவார். அவரை எவர் கண்ணியப்படுத்துகிறாரோ அவரை அல்லாஹ்
கண்ணியப்படுத்துவான். அவரை எவர் இழிவுபடுத்துவாரோ அவர் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்.
அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி) அவர்கள் நூல்:-
அல்ஃபிர்தௌஸ்
ஷஅபிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை ஸைது பின் ஸாபித் (ரலி) அவர்கள் தனது வாகனத்தில் ஏறுவதற்காக வந்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த வாகனத்தில் கால் வைத்து ஏறும் வளையத்தை பிடித்துக் கொண்டு அவர்கள் வாகனத்தில் ஏற உதவி செய்தார்கள். அப்போது ஸைது (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரின் சிறிய தந்தையின் மகனாரே! விலகுங்கள்! எனக்காக தாங்கள் இவ்வாறு செய்ய வேண்டாம்" எனக் கூறினார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( لَا هَكَذَا نَفعَلَ بِالعُلَمَاءِ وَالكُبَرَاءِ ) "இல்லை இவ்விதமாகத்தான் அறிஞர்களையும், பெரியவர்களையும் நாங்கள் கண்ணியப்படுத்துவோம்" என்று கூறினார்கள். நூல்:- அல்இஸாபா, தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்- 596
இஸ்லாம், சமூகத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமென தனித்தனி அந்தஸ்தை வழங்கியுள்ளது. ஒருவரை அவரது அந்தஸ்துக்கேற்ப மதிக்க வேண்டுமெனில் அவர்களது அந்தஸ்தை அறிந்திருக்க வேண்டும். முதலில் மார்க்க அறிஞர்கள் குர்ஆனை இதயத்திலும் செயலிலும் சுமந்திருப்போர், மேதைகள் மற்றும் சான்றோர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்.
அல்லாஹ்வின் மார்க்க நெறியில் நம்பிக்கையாளர்களாக இருந்து, சத்தியத்தை உரக்கச் சொல்லி, இஸ்லாமிய அடையாளங்களை பாதுகாப்பதை பணியாகக் கொண்டிருக்கும் அறிஞர்களுக்கு இஸ்லாமிய சமூகத்தில் பெரும் அந்தஸ்தும் உயர்வும் உண்டு.
ஒரு சபையில் யாரேனும் ஒரு முதியவர் அல்லது மார்க்க அறிஞர் அல்லது ஆட்சியாளர் வந்தால்
அவர்களின் வயது, ஞானம், ஆட்சி ஆகியவற்றை கண்ணியம் செய்வற்காக சபையில் இடமளிக்க
வேண்டும்.
தலைவர்கள்
மக்கா வெற்றியின்போது அபூ ஸுஃப்யான் முஸ்லிம் ஆனார். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ يُحِبُّ هَذَا الْفَخْرَ فَلَوْ جَعَلْتَ لَهُ شَيْئًا ) "நாயகமே! அபூசுஃப்யான் அவர்கள் (குறைஷிகளின் தலைவர் எனும்) பெருமையை விரும்பும் மனிதராக இருக்கிறார். (அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில்) ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்யலாமே" என்று கூறினார்கள்.
அதற்கு நபியவர்கள், ( نَعَمْ مَنْ دَخَلَ دَارَ أَبِي سُفْيَانَ فَهُوَ آمِنٌ وَمَنْ أَغْلَقَ عَلَيْهِ بَابَهُ فَهُوَ آمِنٌ ) "ஆகட்டும்! (அவ்வாறே செய்கிறேன்) யார் அபூசுஃப்யான் அவர்களின் வீட்டில் நுழைந்து கொள்கிறாரோ அவர் பாதுகாப்புப் பெற்று விட்டார். யார் அவரவர் (வீட்டுக்குள் சென்று) வாயிற் கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்பு பெற்றுவிட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2626, இப்னு அபீஷைபா, பைஹகீ
இது அபூசுஃப்யானுக்கு கிடைத்த தனி மனித அங்கீகாரம் மட்டுமல்ல. அபூசுஃப்யான் ஏற்கனவே தன் மக்களிடத்தில் மதிப்பிற்குரியவராகவும் இருந்தார். அவர் உள்ளம் திருப்தியடையவே அண்ணலார் இவ்வாறு அவரை கௌரவப்படுத்தினார்கள். முஸ்லிமாக அவர் மாறியதை ஏற்று அவரது முந்தைய தகுதி அப்படியே நீடிப்பதற்கும் அளிக்கப்பட்ட வாய்ப்பாகும்.
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் ஆள் அனுப்பி என்னை வரவழைத்து சரி நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டார்கள். தங்கள் கரங்களால் முஸ்லிம் ஆவதற்காக என்றேன். அண்ணலார் என் மீது ஒரு போர்வை போர்த்தி விட்டு, பிறகு நபித்தோழர்களை நோக்கி, ( اِذَا اٰتَاکُم کَرِيمُ قَومٍ فَاَکرِمُوهُ ) “ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த மேன்மக்கள் உங்களிடம் வந்தால் அவர்களை கண்ணியப்படுத்துங்கள்” என்று கூறினார்கள் நூல்:- தப்ரானீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-1 பக்கம்-158
தன்னுடைய சமுதாயத்தினரால் சங்கை செய்யப்படும் சமூகத்தின் தலைவர் போன்றோர் நம்மிடம் வரும் போது அவரை சங்கை செய்ய வேண்டும். அவ்வாறு சங்கை செய்யப்படவில்லையென்றால், இன்னும் அவர்கள் இஸ்லாத்தை அறியாதவர்களாகவும் இருந்தால், அவர் மற்றும் அவரின் சமூகத்தினர் நம்மீது பகைமை கொள்ளலாம். இன்னும் அவர்களால் துன்பங்களும் நிகழலாம். இருந்தாலும், அவர்களுக்கு சங்கை செய்யும்படியான இக்கட்டான நிலையில் சங்கை செய்பவரின் தீனில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம்.
காலத்தால் முந்தியவர்கள்
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (நபித்தோழர்களான) காலித் பின் வலீது (ரலி) அவர்களுக்கும்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் இடையே ஏதோ (பிரச்சனை) இருந்தது. காலித்
(ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் - ரலி அவர்களை) ஏசினார்கள். அப்போது அருமை
நாயகம் (ஸல்) அவர்கள் (காலித் (ரலி) அவர்களிடம்) ( لاَ
تَسُبُّوا أَحَدًا مِنْ أَصْحَابِي فَإِنَّ أَحَدَكُمْ لَوْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ
ذَهَبًا مَا أَدْرَكَ مُدَّ أَحَدِهِمْ وَلاَ نَصِيفَهُ )
“என் தோழர்களில் யாரையும் ஏசாதீர்கள்.
உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை (தர்மமாகச்) செலவிட்டாலும் என் தோழர்கள் (இறைவழியில்)
செலவிட்ட இரு கையளவு, அல்லது அதில் பாதி அளவுக்குக்கூட எட்ட முடியாது”
என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4968
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் ஆரம்பகால நபித்தோழர். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மற்றும் காலித் (ரலி) அவர்கள் ஆகிய இருவரும் நபித்தோழர்கள் தான். எனினும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை மட்டும் "எனது தோழர்" என்று அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் கூறுவதன் நோக்கம் என்ன? இரண்டு பேருடைய தகுதியும் ஒன்றல்ல. ஒரே காலத்தில் வாழ்ந்த இரு நபித்தோழர்களில் ஒருவர் காலத்தால் முந்தியவர். பல தியாகங்களைச் செய்தவர் என்பதால் அவருக்கு தனிப்பட்ட அந்தஸ்தும், மரியாதையும் இருக்கிறது என்று அண்ணலார் உணர்த்துகிறார்கள்.
நபித்தோழர்களின் காலத்திலேயே ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கும் இடையே தகுதியிலும், அந்தஸ்திலும் பெரிய வேறுபாடு இருந்து உள்ளதை காணலாம்.
ஆட்சியாளர்
முஆது பின் ஜபல் (ரலி) அது அவர்கள் கூறியதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை
(கவர்னராக) யமன் நாட்டிற்கு அனுப்பிய போது, எனக்கு அறிவுரை கூறிக்
கொண்டே சற்று தூரம் என்னுடன் நடந்து வந்தார்கள். நான் வாகனத்தில் இருந்தேன். அண்ணலார்
(எனது) ஒட்டகத்திற்கு அருகில் நடந்து வந்தார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்
ஒரு மனிதர் ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அவருக்குரிய மரியாதையை முறையாக
வழங்க வேண்டும் என இஸ்லாம் இயம்புகிறது.
உபகாரிகள்
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை நஜ்து தேசத்தின் பெரும் கொடை வள்ளலாக திறந்த ஹாத்திம் அத்தாயீ என்பவரின் மகளார் சஃபானா என்பவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் முஸ்லிம்கள் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு வந்து அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சேர்த்தார்கள். அந்த கைதிகளின் தலைவியாக இருந்த சஃபானா என்பவர் அண்ணலாரின் கருணை உள்ளத்தை அறிந்து, "நாயகமே! சிறைப்பட்டவரை விடுவிப்பவராகவும், பசித்தவரின் வயிற்றை நிரப்புபவராகவும், ஆடை இல்லாதவருக்கு ஆடை அணிவிப்பவராகவும், விருந்தினரை உபசரிப்பவராகவும் தேவையை வேண்டிவருபவரை திருப்பி அனுப்பாதவராகவும் இருந்துவந்த ஒருவரான ஹாத்திம் அத்தாயீவின் மகள் தான் நான். எனவே, நீங்கள் எனக்கு கருணை காட்ட வேண்டும்" என்று வேண்டி நின்றார்.
சஃபானாவின் பேச்சை கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்த அண்ணலார், ( يَا جَارِيَةُ هَذِهِ صِفَةُ الْمُؤْمِنِينَ حَقًّا لَوْ كَانَ أَبُوكِ مُؤْمِنًا لَتَرَحَّمْنَا عَلَيْهِ خَلُّوا عَنْهَا فَإِنَّ أَبَاهَا كَانَ يُحِبُّ مَكَارِمَ الْأَخْلَاقِ وَاللَّهُ تَعَالَى يُحِبُّ مَكَارِمَ الْأَخْلَاقِ ) "பெண்ணே! இது உண்மையாகவே இறைநம்பிக்கையாளர்களின் பண்பாகும். உன் தந்தை இறைநம்பிக்கையாளராக இருந்திருந்தால் அவருக்கு கிருபை செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்திருப்போம்! என்று கூறினார்கள். தொடர்ந்து, இவளை விடுவித்து விடுங்கள்! நிச்சயமாக இவள் தந்தை சங்கையான குணங்களை விரும்புவர் ஆக இருந்தார் அல்லாஹ்வும் சங்கையான குணங்களை நேசிக்கிறான்" என்றார்கள்.
மேலும் அண்ணலார், அவளையும் அவளை சேர்ந்தவர்களையும் விடுதலை செய்துவிட்டு அவர்களுக்கு அணியும் ஆடைகளும், பயணிக்க வாகனங்களும், வழிச் செலவுக்கு தேவையான தொகையையும் கொடுத்து அவர்களை கண்ணியத்தோடு வழியனுப்பி வைத்தார்கள். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா
பிற மக்கள் மீது கருணையுள்ளம் கொண்ட ஒருவரின் மகளை கருணை உள்ளத்தோடு நடத்துவது தான் சிறந்தது என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்கு போதிக்கின்றார்கள்.
ஒரு முறை நபித்தோழி உம்மு ஸலீத் (ரலி) அவர்கள் அரசின் உதவியைப் பெறுவதற்கு வரிசையில் காத்துக்கிடந்தார்கள். இதை கண்ட ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் தனது பணியாளரை அழைத்து, "யுத்தக் களத்தில் நாவரண்டு போன பல நபித்தோழர்களுக்கு தண்ணீர் புகட்டி பேருதவி செய்த உம்மு ஸலீத் (ரலி) அவர்கள் அங்கே வெயிலில் காத்துக் கிடக்கிறார்கள். எனவே, அவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு, அடுத்த மாதத்திலிருந்து உங்கள் வீடு தேடி உங்களுக்கான அரசின் உதவிகள் வந்து சேரும்" என்று சொல்லி அனுப்பினார்கள். நூல்:- குலஃபாஉர் ரசூல் (ஸல்)
மக்களின் தரம் அறிந்து, மரியாதை செய்வதின் மூலம், நாம் அல்லாஹ்விடம் மரியாதையைப் பெறலாம். எனவே, அதற்காக முயற்சிப்போமாக! அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment