காக்கும் கேடயம்
أَيَّامًا مَعْدُودَاتٍ
குறிப்பிட்ட நாட்களில்தான் (நோன்பு நோற்பது கடமையாகும்.) திருக்குர்ஆன்:- 2:184
நோன்பு என்பது பகல் முழுவதும் உண்ணல், பருகல், உடலுறவு கொள்ளல் ஆகியவற்றை மாண்புமிக்க அல்லாஹுதஆலாவுக்காக தூய்மையான எண்ணத்தோடு தவிர்த்துக் கொள்வதாகும். நோன்பு நோற்பதால் உளத்தூய்மையும் பரிசுத்தமும் ஏற்படுகின்றன. நோன்பானது அற்ப குணங்களிலிருந்தும் தாழ்ந்த பண்புகளில் இருந்தும் உள்ளத்தை தூய்மைப்படுத்துகிறது.
இந்தச் சமுதாயத்தார் மீது மட்டுமின்றி முந்தைய சமுதாயங்களுக்கும் அது கடமையாக இருந்தது என்று திருக்குர்ஆன் (2:183) தெரிவிக்கின்றது. ஆகவே இந்த முன்மாதிரியை கருத்தில் கொண்டு முந்தைய மக்களை விடவும் நிறைவான முறையில் இந்தச் சமுதாயத்தார் இக்கடமையை நிறைவேற்ற வேண்டுமென அல்லாஹ் விரும்புகிறான்.
மேலும் நோன்பால் உள்ளம் மட்டுமின்றி உடலும் தூய்மை அடைகிறது. ஷைத்தானின் பாதைகள் மூடப்படுகின்றன.
இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் மாதந்தோறும் மூன்று
நாட்கள் மக்கள் நோன்பு நோற்பார்கள். பின்னர் ரமளான் மாதம் முழுக்க நோன்பு நோற்க வேண்டும்
எனும் கட்டளை பிறந்தது. அதை அடுத்து பழைய சட்டம் காலாவதி ஆனது.
புனித ரமளான்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَتَاکُم
شَهرُ رَمَضَانَ شَهرُ بَرَکَةٍ فِیهِ فَيُنزِلُ الرَّحمَةَ وَيَحُطُّ فِيهِ الخَطَايَا
وَيَستَجِيبُ فِيهِ الدُّعَاءَ يَنظُرُ اللّٰهُ تَعَالَی اِلَی تَنَافُسِکُم فِيهِ
فَأَرُو اللّٰهَ مِن اَنفُسِکُم خَيرًا ) (பரக்கத்) அருள்வளம் உள்ள மாதமாக ரமளான் உங்களிடம்
வந்து விட்டது. அதில் இறைவனின் கிருபை இறங்குகிறது; சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகிறது; பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது; அந்த மாதத்தில் வணக்கங்கள்
புரிய ஆர்வமுடன் போட்டி போடக்கூடியவர்களை இறைவன்
உற்று நோக்குகிறான். எனவே, நீங்கள் (நல்லறங்கள் புரிந்து) உங்கள் ஆன்மாக்களுக்கு நன்மைகளை சேகரியுங்கள். அறிவிப்பாளர்:- கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தப்ரானீ
அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
(ஹதீஸ் குத்சீ ஒன்றில்) கூறினார்கள். நபி மூஸாவே! ரமளான் மாதம் வந்துவிட்டால் நோன்பாளிகள்
பிரார்த்தனை செய்யும்போது ஆமீன் சொல்ல வேண்டும் என்று அர்ஷை சுமக்கும் வானவர்களுக்கு
நான் கட்டளையிட்டுள்ளேன். நோன்பாளிகள் கேட்பதை வழங்க வேண்டும் என எனக்கு நானே கடமையாக்கி
கொண்டுள்ளேன். நூல்:-ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ
ரமளான் மாதம் குர்ஆன் அருளப் பெற்ற மாதமாகும். அந்தக் குர்ஆன் மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. திருக்குர்ஆன்:- 2:185
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أُنْزِلَتْ صُحُفُ إِبْرَاهِيمَ فِي أَوَّلِ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ،
وَأُنْزِلَتِ التَّوْرَاةُ لَسْتٍ مَضَيْنَ مِنْ رَمَضَانَ، وَالْإِنْجِيلُ لِثَلَاثَ
عَشْرَةَ لَيْلَةً خَلَتْ مِنْ رَمَضَانَ ) இப்ராஹீம் (அலை) அவர்களின்
ஸுஹுஃபுகள் (ஏடுகள்) ரமளான் மாதம் முதல் இரவில் அருளப்பெற்றது. (நபி மூசா - அலை அவர்களது)
தவ்ராத் வேதம் ரமளான் மாதம் ஆறாம் நாளில் அருளப்பெற்றது. (நபி ஈசா - அலை அவர்களது)
இன்ஜீல் வேதம் ரமளான் மாதம் பதின்மூன்றாம் இரவில் அருளப்பெற்றது. அறிவிப்பாளர்:- வாஸிலா பின் அல்அஸ்கஉ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னத் அஹ்மத், அல்பிதாயா வந்நிஹாயா
மாமேதை இப்னு ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி யூசுப் (அலை) அவர்களுடன் ரமளானை ஒப்பிடலாம். நபி யாகூப் (அலை) அவர்களுக்கு பனிரெண்டு
ஆண்மக்கள் இருந்தது போன்றே ஒரு வருடத்துக்கு பனிரெண்டு மாதங்கள் உள்ளன. பனிரெண்டு ஆண்மக்களில்
யூசுப் (அலை) மட்டும் தான் தந்தைக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். அதுபோன்று பனிரெண்டு
மாதங்களில் ரமளான் மாதம் மட்டும் தான் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியத்திற்குரிய மாதமாகும்.
யாகூப் (அலை) அவர்களின் ஏனைய பதினோரு ஆண் மக்கள் செய்த குற்றங்களை யூசுப் (அலை) அவர்களின்
பிரார்த்தனையால் அல்லாஹ் மன்னித்தது போல்; தனது அடியார்கள் கடந்த
பதினோரு மாதங்களாக செய்த பாவங்கள் அனைத்தையும்
ரமளானின் (பரக்கத்தால்) அருள்வளத்தால் அம்மாதத்தில்
அல்லாஹ் மன்னிக்கிறான். நூல்:- புஸ்தானுல் வாயிளீன்
அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ( تَسْبِيحَةٌ فِي رَمَضَانَ أَفْضَلُ مِنْ أَلْفِ تَسْبِيحَةٍ فِي غَيْرِهِ ) ரமளானில் (சொல்லும்) ஒரு தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ்) ஏனைய மாதங்களில் (சொல்லும்) ஆயிரம் தஸ்பீஹை விட மிகவும் சிறந்ததாகும். அறிவிப்பாளர்:- அபூ பிஷ்ர் (ரஹ்) அவர்கள் நூல்:- திர்மிதீ-3384
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நோன்பு
பொறுமையில் பாதியாகும். நூல்:- திர்மிதீ
இதில் இரண்டு கருத்து கொள்ளலாம். 1) நோன்பு நோற்பது
வழிபாடு சார்ந்த பொறுமையாகும். அது பொறுமையில் பாதியாகும். பாவம் செய்யாமை மற்றும்
சோதனைகளைத் தாங்கிக் கொள்வது அதன் மீதிப் பாதியாகும். 2) வாய் மற்றும் இன உறுப்பை அடக்குவது
பாதிப் பொறுமையாகும். ஏனைய உறுப்புகளைக் கட்டுப்படுத்துவது அதன் மீதிப்பகுதியாகும். நூல்:- துஹ்ஃபத்துல்
அஹ்வதீ
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَتَستَغفِرُ لَهُمُ المَلَاءِکَةُ حَتّٰی يَفطُرُوا ) வானவர்கள் நோன்பாளிகளுக்கு, அவர்கள் நோன்பு திறக்கும் வரையில் பாவமன்னிப்பு கோருகிறார்கள். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், அல்பஸ்ஸார்
வானவர்கள் அல்லாஹ்வின் மரியாதைக்கும், நெருக்கத்திற்கு உரியவர்கள். அவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.
அப்படிப்பட்ட வானவர்கள் நோன்பாளிகளுக்காக பாவமன்னிப்பு கோரிட அல்லாஹ் அனுமதி கொடுத்து
இருப்பதன் நோக்கம், நோன்பாளிகளின் அந்தஸ்தைப்
பிரகடனப்படுத்துவதும் அவர்களின் புகழை உயர்த்துவதும் அவர்கள் நோற்று நோன்பின் சிறப்பை
விளக்குவதுமேயாகும்.
சொர்க்கச் சோலை
முஆத் பின் அல்ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( مَنْ صَامَ رَمَضَانَ وَصَلَّى الصَّلَوَاتِ وَحَجَّ الْبَيْتَ إِلاَّ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَغْفِرَ لَهُ إِنْ هَاجَرَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مَكَثَ بِأَرْضِهِ الَّتِي وُلِدَ بِهَا ) "ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று, (ஐவேளைத்) தொழுகைகளை நிறைவேற்றி, இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்த மனிதருக்குப் பாவமன்னிப்பு அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகாமல் இருப்பதில்லை. அவர் அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றாலும், அல்லது பிறந்த மண்ணில் அவர் தங்கியிருந்தாலும் சரியே" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2453
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் ( إِنَّ فِي الْجَنَّةِ لَغُرَفًا يُرَى ظُهُورُهَا مِنْ بُطُونِهَا وَبُطُونُهَا مِنْ ظُهُورِهَا ) "சொர்க்கத்தில் சில (கண்ணாடி) மேலறைகள் உள்ளன. அவற்றின் உட்பகுதியிலிருந்து வெளியேயும் வெளிப்பகுதியில் இருந்து உள்ளேயும் பார்க்க முடியும்" என்றார்கள். அப்போது ஒரு கிராமவாசி அண்ணலாரை நோக்கி எழுந்து, நாயகமே! 'அவை யாருக்கு உரியவை" என்று வினவினார். அதற்கு அண்ணலார், ( هِيَ لِمَنْ أَطَابَ الْكَلاَمَ وَأَطْعَمَ الطَّعَامَ وَأَدَامَ الصِّيَامَ وَصَلَّى لِلَّهِ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ ) "இன்சொல் பேசி, அன்னதானம் வழங்கி, வழக்கமாக நோன்பு நோற்று, மக்களெல்லாம் உறங்கும் போது இரவில் (எழுந்து) அல்லாஹ்வை தொழுகின்றவருக்கு உரியவையாகும்" என்றார்கள். நூல்:- திர்மிதீ-2450
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللّٰهِ بَعَّدَهُ اللّٰهُ مِنْ جَهَنَّمَ كَبُعْدِ غُرَابٍ طَائِرٍ وَهُوَ فَرْخٌ حَتّٰى مَاتَ هَرِمًا ) “யார், ஒரு நாள் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியவராக நோன்பு நோற்பாரோ அல்லாஹ் நரகிலிருந்து அவரை தூரமாக்குவான். ஒரு பறவைக் குஞ்சு பறக்கத் துவங்கி வயோதிகமாகி மரணமடையும் வரை பறந்தால் எவ்வளவு தூரம் பறக்குமோ அவ்வளவு தூரத்தை ஏற்படுத்துவான்”. நூல்:- முஸ்னது அஹ்மத், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ரமளானில் நோன்பு நோற்ற மனிதரைச் சொர்க்கத்தில் அனுமதிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது. அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரியே" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2790
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( نَوْمُ الصَّائِمِ عِبَادَةٌ وَصَمْتُهُ تَسْبِيحٌ وَعَمَلُهُ مُضَاعَفٌ
وَدُعَاؤُهُ مُسْتَجَابٌ وَذَنْبُهُ مَغْفُورٌ ) “நோன்பாளியின் தூக்கம்
வணக்கமாகும். அவரின் மௌனம் தஸ்பீஹ் ஆகும். அவரின் செயல்கள் இரட்டிப்பு மடங்கு கூலிக்கு சொந்தமானவை, அவரின் துஆ அங்கீகரிக்கப்படும் அவரின் குற்றங்கள்
மன்னிக்கப்படும்". நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ
தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பலீ எனும் இடத்தில் இரண்டு பேர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தை தழுவினர். அவர்களின் ஒருவர் மற்றவரைவிட கடினமாக உழைத்துப் பாடுபடுபவராக இருந்தார். அந்தக் கடின உழைப்பாளி அறப்போர் புரிந்து வீரமரணம் அடைந்தார். இன்னொருவர் அவருக்குப் பின் ஓராண்டு வாழ்ந்தார். பின்னர் மரணமடைந்தார்.
ஒருநாள் நான் கனவு ஒன்று கண்டேன். (அதில்) அவ்விருவரும் சொர்க்கத்து வாசலுக்கு அருகில் இருப்பதாகக் கண்டேன். அப்போது சொர்க்கத்திலிருந்து ஒருவர் வந்தார். அவ்விருவரில் இறுதியாக இறந்தவருக்கு (சொர்க்கம் செல்ல) அனுமதியளித்தார். பின்னர் அவர் (வானவர்) மீண்டும் வெளியே வந்து, அறப்போரில் வீரமரணம் அடைந்தவருக்கு (சொர்க்கம் செல்ல) அனுமதியளித்தார்.
நான் காலையில் எழுந்ததும் கண்ட கனவை மக்களிடம் கூறலானேன். அதைக் கேட்ட மக்கள் வியப்புற்றனர். இத்தகவல் நபியவர்களுக்கு சென்றது. அப்போது நபியவர்கள், ( مِنْ أَىِّ ذَلِكَ تَعْجَبُونَ ) "எதனால் வியப்புருகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்குத் தோழர்கள், "நாயகமே! இ(ந்த முதலாம)வர் அவ்விருவரில் கடின உழைப்பாளியாக இருந்தார். பிறகு அறப்போரிட்டு வீரமரணமடைந்தார். (எனினும்) கடைசியாக இறந்த (இரண்டாம)வர் அவருக்கு முன்பாக சொர்க்கம் சென்று விட்டாரே! (எனவேதான் வியப்புறுகிறோம்) என்றனர்.
அப்போது நபியவர்கள், ( أَلَيْسَ قَدْ مَكَثَ هَذَا بَعْدَهُ سَنَةً ) "இவர் அவருக்குப் பின் ஓர் ஆண்டு வாழ்ந்தார் அல்லவா?" என்று வினவினார்கள். அதற்குத் தோழர்கள்,
"ஆம்! (உண்மைதான்)" என்றனர்.
நபியவர்கள், ( وَأَدْرَكَ رَمَضَانَ فَصَامَهُ
وَصَلَّى كَذَا وَكَذَا مِنْ سَجْدَةٍ فِي السَّنَةِ ) "இந்த ஓராண்டில் இரண்டாமவர்
ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கிறார். மேலும் அந்த ஆண்டில் எத்தனையோ தொழுகைகளை
(சஜ்தா) சிர வணக்கம் புரிந்து நிறைவேற்றி இருக்கிறாரே!" என்று கூறினார்கள். அதற்குத்
தோழர்கள், "ஆமாம்" என்று
கூறி ஆமோதித்தனர். அப்போது நபியவர்கள், ( فَمَا
بَيْنَهُمَا أَبْعَدُ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ ) "எனவே, அவ்விருவரிடையே வானத்திற்கும்
பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைவிட அதிகமாக (தர வரிசையில்) இடைவெளி ஏற்பட்டுவிட்டது" என்று
கூறினார்கள். நூல்:- இப்னுமாஜா-3915, முஸ்னது அஹ்மத், இப்னுஹிப்பான்
பசி உணர்வை அறிய
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَصُمْ يَوْمًا وَأَفْطِرْ يَوْمًا، فَذَلِكَ صِيَامُ دَاوُدَ ـ عَلَيْهِ السَّلاَمُ ) நபி தாவூது (அலை) அவர்கள் (நாடாளும் மன்னராக இருந்தும்கூட தமது வாழ்நாளில்) ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்கும் பழக்கமுள்ளவராக வாழ்ந்துள்ளார்கள். நூல்:- புகாரீ-1976, முஸ்லிம்-2137
மிஸ்ரு நாட்டின் வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த
நபி யூசுஃப் (அலை) அவர்கள் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் அதிகமதிகம் நோன்பு நோற்று வந்தார்கள்.
காரணம் "நான் வயிறு நிரம்ப சாப்பிட்டுக் கொண்டிருந்தால் ஏழைகளை மறந்து விடுவேனல்லவா!
பசித்து பழக்கப்பட்டால் தானே ஏழைகளின் பசிக் கொடுமைகள் எனக்குத் தெரியும்! அதனால் தான்
அதிகம் நோன்பு நோற்கிறேன்" என்று கூறுவார்கள். நூல்:- இஹ்யா
நம்மை போன்று தானே பிறருக்கும் பசிக்கும். மற்ற தேவைகள் இருக்கும் என ஒவ்வொரு மனிதனையும் நோன்பு உணர வைக்கிறது.
குற்றப் பரிகாரம்
ஹஜ்ஜின் போது இஹ்ராம் ஆடை அணிந்த நிலையில் செய்ய
வேண்டிய கிரியைகள் செய்வதற்கு முன்னரே ஏதேனும் தங்கடத்தால் தலைமுடி இறக்கிவிட்டால்
அதற்கு குற்றப்பரிகாரமாக மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என திருக்குர்ஆன் (2:196) இயம்புகிறது.
சத்தியத்தை முறிப்பது பாவமாகும். அதற்கான பரிகாரம்
பத்து ஏழைகளுக்கு உணவளித்தல்; அல்லது பத்து ஏழைகளுக்கு
ஆடை அளித்தல்; அல்லது ஓர் அடிமையை விடுதலை
செய்தல். இதற்குச் சக்தி இல்லாதவர் (பொருளாதார பலமற்றவர்களுக்கான இறுதிப் பரிகாரமாக)
மூன்று நாள் நோன்பு நோற்க வேண்டும் என திருக்குர்ஆன் (5:89) சத்தியத்திற்கான குற்றப் பரிகாரத்தை சொல்லித் தருகிறது.
ஒரு மனிதன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ள முயலும்போது
அவனது மனைவி பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள். அதனால் அவனுக்கு மிகுந்த ஆத்திரம் உண்டாகிறது.
அவன் கோபத்தில் "இனி என்றும் உன்னுடன் சேர மாட்டேன்; நீ என் தாய் போலாகும்" என்று கூறிவிட்டான்.
அவன் மனைவிக்கு (தலாக்) மணவிலக்கு கூறும் நோக்கத்தில் இதைக் கூறவில்லை. உடலுறவு கொள்ளமாட்டேன் என்னும் கருத்திலேயே இதைக் கூறினான். பின்னர் தன் செயலை நினைத்து வருந்துகிறான்.
இதைத்தான் இஸ்லாமிய மார்க்க சட்டத்தில் "ளிஹார்" என்று கூறப்படும்.
(தாய், உடன்பிறந்த சகோதரி போன்ற யாரைத் திருமணம் செய்வது கூடாதோ அத்தகையவருடன் தன் மனைவியை ஒப்பிடுதல்
"ளிஹார்" எனப்படும். உடலுறவு கொள்வது கூடாது என்னும் எண்ணத்தில் கூறினால்
தான் "ளிஹார்" ஆகும். தாய் போல் அன்பாக இருக்கிறாய் என் சகோதரி போன்ற
ஜாடை இருக்கிறது என்றால் இது "ளிஹார்" ஆகாது.)
மனைவியுடன் "ளிஹார்" உடைய இந்த வாசகங்கள்
கூறப்பட்டால் அதற்கு (ஙஃப்பாரா) குற்றப் பரிகாரம் உள்ளது. அதை நிறைவேற்றிய பின்புதான்
மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டும்.
இதன் (ஙஃப்பாரா) குற்றப் பரிகாரம் இரண்டு மாதங்கள்
தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும். இது முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு ஒரு நாள்
(இரு வேளை) உணவு அளிக்க வேண்டும். அல்லது ஒரு ஏழைக்கு தொடர்ந்து அறுபது நாட்களுக்கு
உணவு அளிக்க வேண்டும். உணவு அளிப்பதற்கு பகரமாக உணவு தானியங்களும் வழங்கலாம். அளிக்கவேண்டிய
உணவு தானியத்தின் அளவு (ஸதக்கத்துல் ஃபித்ரு) பெருநாள் தர்மத்தை உடைய அளவாகும். ஒருவருக்கு
அறுபது நாட்களில் உணவு தானியத்தை ஒரே நாளில் தருவது கூடாது. நூல்:-குதூரி
பாபுல் ளிஹார்
"ளிஹார்" உடைய இந்த சட்டத்தை திருக்குர்ஆன்
(58:2,3,4)
அழகிய முறையில் எடுத்துரைக்கிறது.
ஹஜ்ஜின் கிரியைகளை முழுமைப்படுத்துவதற்கு
முன்னரே தலைமுடி இறக்கிவிட்டாலோ, சத்தியத்தை முறித்து விட்டாலோ, மனைவியை "ளிஹார்" செய்துவிட்டாலோ இது
போன்ற குற்றங்களுக்கெல்லாம் நோன்பு நோற்பதன் மூலம் (ஙஃப்பாரா) நிவர்த்தியாகும் என்கிறது
இஸ்லாமியச் சட்டம்.
அதிசயம் நிகழ்த்துவதற்கு...
நபி மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வை சந்தித்து பேசுவதற்காக ஆசைப்பட்டார்கள். அதற்கு அல்லாஹ் முப்பது நாட்கள் நோன்பு நோற்று வரவேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிட்டான். அவ்வாறே முப்பது நாட்கள் நோன்பு நோற்று முடித்த நபி மூசா (அலை) அவர்கள், மிஸ்வாக் குச்சியின் மூலம் வாயை சுத்தம் செய்துவிட்டு வந்த போது பல் துலக்காமல் நோன்பு வைத்த வாய் வாடையுடன் வரவேண்டும் என்பதற்காக மீண்டும் பத்து நோன்புகள் நோற்குமாறு அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்டான். இவ்வாறு தான் திருக்குர்ஆன் (7:142) எடுத்துரைக்கிறது.
அன்னை மர்யம் (அலை) அவர்கள் குழந்தை ஈசாவை பெற்று
எடுத்துக்கொண்டு மக்களுக்கு முன்வந்த போது, கணவன் இல்லாமல் குழந்தை
பெற்றுக் கொண்டது குறித்துக் கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினர். எனவேதான் அவர் அன்றைய
தினம் நோன்பு நோற்க வேண்டும்; யாரிடமும் பேசக்கூடாது
என கட்டளையிடப்பட்டார். அதன் மூலம் அவர் தமது பிரச்சனைக்கு தீர்வு காணலாம்; அவரது தூய்மைக்கான சான்று நிறுவப்படலாம் என்று அவருக்கு
சொல்லப்பட்டிருந்தது.
மர்யம் (அலை) அவர்களும் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அவனது முடிவை ஏற்று அன்றைய பொழுது நோன்பு நோற்றார்கள். அந்த மக்கள் குழந்தை பிறப்பை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்ட போதுதான் மரியம் (அலை) அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் குழந்தையிடமே கேட்குமாறு சைகை செய்தார்கள். அவர்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே குழந்தை ஈசா (அலை) அவர்கள் அதிசயமாக பேசினார்கள் என்று திருக்குர்ஆன் (19:26-33) எடுத்துரைக்கிறது.
அன்னை மர்யம் (அலை) நோன்பு நோற்று பேசாதிருந்ததால், இயற்கைக்கு மாறாக பேசமுடியாத பால்குடி பருவத்தில்
குழந்தையாக இருந்த ஈசா (அலை) அவர்கள், பேச வேண்டிய அனைத்தையும்
பேசி தனது அன்னையின் கற்பொழுக்கத்தையும், அல்லாஹ்வின் வல்லமையையும்
விவரித்தார்கள்.
நபி மூசா (அலை) மற்றும் அன்னை மர்யம் (அலை) ஆகிய
இருவரிடமும் அல்லாஹ் அங்கே ஓர் அதிசயத்தை நிகழ்த்துவதற்கு தனக்கு மிகவும் விருப்பமான
வணக்கமாக திகழும் நோன்பு நோற்கவே கட்டளையிட்டுள்ளான்.
பிறந்த நாளுக்குரிய வழிபாடு
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு ( فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ
) "அன்று தான் நான் பிறந்தேன். அதில் தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது"
என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-2153
அதாவது அண்ணல் நபி (ஸல்) அவர்கள், தாம் பிறந்த நாளும் திங்கட்கிழமை தான்; மேலும் தான் இறைத்தூதராக அறிவிக்கப்பட்டு முதன்முதலில்
திருக்குர்ஆன் அருளப்பட்டதன் மூலம் அல்லாஹ் நேரடி தொடர்பு ஏற்பட்ட மகிழ்ச்சிக்குரிய
திருநாளும் திங்கட்கிழமை தான். ஆகவே தான் அண்ணலார், அன்றைய தினம் தாம்
நோன்பு நோற்று அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்கள். ஆகவே
(இருபெருநாட்களைத் தவிர்த்து) நமது மகிழ்ச்சிக்குரிய நாட்களிலும், நமது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த நாட்களிலும்
நோன்பு நோற்று அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதே மிக உயர்ந்த வழிபாடாகும்.
கட்டுப்பாடுகள்
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (
اَلصِّيَامُ جُنَّةٌ ) நோன்பு (பாவங்களிலிருந்து
காக்கும்) கேடயமாகும். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-2117
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( فَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ يَوْمَئِذٍ وَلاَ
يَسْخَبْ فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ ) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில்
அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேச வேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு
செய்ய வேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கிழுத்தால் "நான் நோன்பு
நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறி விடட்டும். அறிவிப்பாளர்:- அபூஹூரைரா (ரலி)
அவர்கள் நூல்:- முஸ்லிம்-2118
இச்சைகளும் மனதின் ஆர்வங்களும் மிகைத்து வைத்துவிடுவதால்
மனிதன் அல்லாஹ்வை அலட்சியப்படுத்துகின்றான். அவன் விதித்துள்ள வரம்புகளை பற்றி எல்லாம்
கவலைப்படுவதில்லை. மனிதனை இவற்றிலிருந்து சீர்படுத்துவதற்காகவே அல்லாஹ் நோன்பு எனும்
இறை வணக்கத்தை கடமையாக்கியுள்ளான்.
மனித மனதில் வலிமையோடு காணப்படுபவை; இச்சைகள், ஆர்வங்கள் ஆகும்.
இவை இயல்பாகவே உணர்ச்சிமயமானவை; கொந்தளிப்பு குணமுடையவை; ஆகையால் இவற்றை கட்டுப்படுத்த நோன்பின் மூலம் கடும்
பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது. இச்சைகளையும் ஆர்வங்களையும் வலு சேர்க்கின்ற விஷயங்கள்
மீது நோன்பு ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதனால் மனிதனுடைய உணவும் உறக்கமும்
குறைந்து விடுகின்றன. மற்ற இன்பங்கள், விருப்பங்கள் மீது
சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் ஏற்படுகின்ற தாக்கம் என்னவென்றால்
மனோ இச்சைகளுடைய நாலுகால் பாய்ச்சல்கள் வெகுவாக குறைந்து விடுகிறது. ஆன்மாவுக்கு தன்னுடைய
விருப்பக் களத்தில் பாய்ந்து செல்ல வாய்ப்பு கிடைக்கிறது.
நோன்புடைய இந்த தனித்தன்மையை கவனத்தில் கொண்டுதான்
தன்னோடு அதற்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு உண்டு என்று அல்லாஹ் கூறியுள்ளான்.
நோன்புக்கு தன்னுடைய கரங்களாலேயே வெகுமதி அளிப்பதாக
அல்லாஹ் வாக்குறுதி கொடுத்துள்ளான். இஸ்லாம் விதியாக்கியுள்ள எல்லா இறை வணக்கங்களும்
அல்லாஹ்வுக்கென்றே உள்ளவைதாம்! ஆனாலும் மனிதன்
நோன்பு வைத்து உலகத்தையும் உலக இன்பங்களையும் துறந்து விடுகிறான். இறைவனை நெருங்கவும்
வானவர்களுடன் சேர்ந்து நிற்கவும் இணைந்து கொள்ளவும் பெரும் முயற்சி செய்கின்றான். அம்முயற்சியில்
கஷ்டங்களையும் சகித்துக் கொள்கின்றான். இவற்றையெல்லாம் நோன்பைத் தவிர வேறு எந்த இறை
வணக்கங்களிலும் பார்க்க முடியாது.
இச்சைகள் ஆர்வங்கள் போன்ற வாசல்களின் வழியே பாய்ந்து
வரும் ஷைத்தானின் ஏவுகணைகள் மற்றும் ஈட்டிகளை எல்லாம் தடுக்கக்கூடிய ஆயுதமாக முஸ்லிமிடம்
இருப்பது நோன்பேயாகும். இந்த அடிப்படையில் தான் மேற்கண்ட நபிமொழி நோன்பை கேடயமாக வர்ணிக்கிறது.
நோன்பை ஒரு கேடயமாக பயன்படுத்துவது எப்படி? என்ற பயிற்சியும் நோன்பாளிக்குக் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
"யாரேனும் திட்டினால் வம்புச் சண்டைக்கு வந்தால் நான் நோன்பாளி என்று அவனிடம்
சொல்லிவிட வேண்டும்" என்று நபிமொழி அறிவுறுத்துகிறது.
ஆன்மா, உள்ளம், உடல் ஆகியவற்றுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து காக்கும் கேடயமாக நோன்பு திகழ்கிறது. இதன் பயன்கள் கணக்கற்றவை. உடலின் உறுப்புகள் முறையாக இயங்கி ஆரோக்கியத்தைக் காப்பதிலும், உடலில் தேங்கியுள்ள கழிவுகளை கரைப்பதிலும், இடையூறு தருபவற்றை உண்பதை விட்டு ஆன்மாவை தடுப்பதிலும் இதற்கு பெரும்பங்குண்டு.
மாவீரன் நெப்போலியன் கூறினான். ‘எனது இராணுவத்தில் முஸ்லிம்கள் நிறைந்திருந்தால் என்னால் வெற்றிக் கனிகளை எளிதாகத் தட்டிப்பறிக்க முடியும். ஏனென்றால் நீண்ட நேரமாக உணவருந்தாமல், நீரருந்தாமல் இருக்கும் (நோன்பு என்ற) கட்டுப்பாடு அவர்களிடம் இருக்கிறது’
நோன்புடைய காலங்களில் உணவு விஷயத்தில் நடுநிலையை கடைபிடித்தால் இடையூறுகள் தருபவற்றை விட்டும்
தடுத்துக்கொள்ளலாம். உபரியான தொழுகைகள் தொழ, திருக்குர்ஆன் மற்றும்
திக்ரு தஸ்பீஹ்களில்
ஓத; என பற்பல இறைவணக்கங்களில் ஈடுபட இலகுவாகிவிடும். எனவே, ரமளான் மாதத்தில் முறையாக இறைவணக்கம் புரிந்து இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர் அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment