Search This Blog

Thursday, 5 November 2020

கீழ்படிந்தோம்!

 

கீழ்படிந்தோம்!


مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ


(அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகின்றவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்.           திருக்குர்ஆன்:- 4:80


அல்லாஹ்வுக்குக் கீழ்படிவது அடியார்கள் மீது கடமையாகும். அல்லாஹ்வுக்குக் கீழ்படிதல் என்றால் அல்லாஹ்வின் தூதரை நேசித்து அவரது சொல்லைச் செவியுற்று அதன்படி வாழ்வதேயாகும். அன்பு என்பது மறைவான ஒன்று. நாம் ஒருவர் மீது அன்பு கொண்டுள்ளோமா? இல்லையா? அந்த அன்பு அதிகமா? குறைவா? என்பதற்கு, அவரோடு நாம் நடந்துகொள்ளும் நடைமுறைகளே சான்றாகும். ஆக அன்பை அதன் அடையாளங்களை கொண்டே தெரிந்து கொள்ள முடியும்.


அல்லாஹ்வை நாம் நேசிக்கின்றோம் என்பதற்கு ஆதாரம், அல்லாஹ்வின் திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாம் பின்பற்றுவது தான். அல்லாஹ், தான் விரும்புகின்ற செயல் எது? வெறுக்கின்ற செயல் எது? என்பதை அந்தத் தூதர் மூலமாக வெளிப்படுத்தியிருக்கின்றான். எனவே, இறைத்தூதரை பின்பற்றி நடந்தால் அல்லாஹ்வின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அதற்கு பிரதிபலனாக நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனக்கு கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்துவிட்டார்.   ( مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ ) எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரி-2957, முஸ்லிம், நசாயீ, முஸ்னது அஹ்மத்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( مَنْ يُطِعِ اللهَ وَرَسُولَهُ فَقَدْ رَشَدَ وَمَنْ يَعْصِ اللهَ وَرَسُولَهُ فَإِنَّهُ لَا يَضُرُّ إِلَّا نَفْسَه யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடக்கின்றதோ அவர் நேர்வழி பெற்றுவிட்டார். யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்


சிறுநீர் கழிக்கும் முறை


உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நான் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள், ( يَا عُمَرُ لاَ تَبُلْ قَائِمًا ) "உமரே! நின்று கொண்டு சிறுநீர் கழிக்காதீர்!" என்று (என்னிடம்) கூறினார்கள். அதன் பின்னர் நான் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததே இல்லை.   நூல்:- திர்மிதீ-12, இப்னுமாஜா-304


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது ஒழுங்கீனமான செயலாகும்.   நூல்:- திர்மிதீ-12


இமாம் திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதற்கு வந்துள்ள விலக்கு, தடை செய்யப்பட்டது (ஹராம்) என்ற பொருளில் வந்ததன்று. மாறாக, "ஒழுக்க போதனை" (தார்மீகப் பண்பு) என்ற அடிப்படையிலானதாகும்.


நமது மூத்திரக்கோச முனைக்கும் பித்தட்டுக்கும் இடையில் சிறுநீரைத் தாங்கி வரும் சுமார் பதினாறு அங்குலம் நீளங் கொண்ட இரு குழாய்கள் உள்ளன. முழங்கால்களை மடித்து, குந்தி இருந்து சிறுநீர் பெய்யும்போது 'வீ' (V) அமைப்பில் மடிந்து விடுகின்றன. மடிப்பின் மேற்பகுதியில் சிறுநீர் தேங்கி நிற்க, கீழ்நோக்கித் தொங்கும் மறு பகுதியில் உள்ள நீர் மட்டுமே மூத்திர கோசத்தின் நுனிவாய் மூலம் வெளியேறுகிறது. சிறுநீர் கழித்து முடிந்து முடிந்து எழுந்ததும், அந்நீர்த்துளிகள் சொட்டுச் சொட்டாக கீழ்நோக்கி இறங்குவதை அனைவரும் அனுபவிக்கிறோம்.


மடிப்புக் குழாயில் தேங்கி நிற்கும் நீரை, களிமண் (டேலா) கட்டி மூலம் ஒரு சிறுதுளியேனும் தேக்கம் இல்லாமல் உறிஞ்சப்பட வேண்டுமென்பதற்காகவே சிறுநீர் கழித்தலின் இறுதியில் கனைத்தல் செய்ய வேண்டும். என்றும் இடது கரத்தால் மண்வெட்டியை உபயோகித்து ஏறத்தாழ நாற்பது சுவடுகள் வரை மெல்ல நடைப்பதன் மூலம் மடிப்பின் இடையில் தேங்கி நிற்கும் சிறிதளவு சிறுநீரும், அவ்விடத்தில் எஞ்சாதபடி மண்கட்டியால் உறிஞ்சப்பட்ட பின்னர் தண்ணீரால் கழுவித் துப்பரவு செய்வதனால் உடலும் உடையும் சுத்தமாக இருப்பதற்கு உதவி புரிகிறது என்றும் இஸ்லாம் இயம்புகிறது.


நின்ற நிலையில் சிறுநீர் கழித்தல் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. (Ostatitis) சுக்கிலப்பை ஒவ்வாமை ஏற்பட்டு வீக்கம் ஏற்படுகிறது. போகப்போக சிறுநீர் அடைப்பு, சொட்டுச் சொட்டாக நீர் வந்து கொண்டே இருப்பது, கிட்னியில் கல், குடலிறக்கம், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள் உருவாக ஆரம்பிக்கின்றன என்கிறது மருத்துவ உலகம்.


அலீ (ரலி) அவர்கள்


ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து ஒரு வேலை கொடுத்தார்கள். அவர் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்ததால்  அவரால் அசர் தொழ முடியவில்லை. சூரியன் மறைய தொடங்கியது. சிறிது நேரத்திற்குப் பிறகு அண்ணலார் அலீ (ரலி) அவர்களை அழைத்து  அலீயே! நீர் அசர் தொழுதீரா? என்று கேட்டார்கள்.அதற்கு அவர் அதற்கு  "இல்லை நாயகமே" என்றார். உடனே அண்ணலார்,  ( اِنَّهُ کَانَ طَاعَتِكَ وَطَاعَةِ الرَسُولِكَ فَردُد عَلَیهِ الشَّمسُ ) "இறைவா! நிச்சயமாக இவர் உனக்கும் உன்னுடைய தூதருக்கும் வழிபட்டார். எனவே இவருக்காக சூரியனை வெளியே கொண்டு வருவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மறைந்த சூரியன் மீண்டும் வெளியே வந்தது. அலீ (ரலி) அவர்கள் அசர் தொழுது முடித்தார்கள்.


ஒரு அறப்போரில் அலீ (ரலி) அவர்களை கொல்வதற்கென்றே ஒரு பெண் வந்து தக்க தருணத்தை எதிர்பார்த்திருந்தாள். அந்த தருணமும் வந்தது. உடனே அவள் அலீ (ரலி) அவர்களின் முதுகின் மீது ஒரு வெட்டு வெட்டிவிட்டாள். அலீ (ரலி) அவர்கள் தன்னை தாக்கியவனை திருப்பி தாக்கலாம் என்றெண்ணி வாளோடு திரும்பினார்கள். ஆனால் அங்கே நின்றிருந்ததோ ஒரு பெண்.  அலீ (ரலி) அவர்கள், தன்னை வெட்டியது ஒரு பெண்ணா? என்றெண்ணி, ஓங்கிய வாளை கீழே போட்டு விட்டார்கள். "போர்க்களத்தில் பெண்களை வெட்டக்கூடாது" என்ற நபிமொழிக்கு கட்டுப்பட்டதே அதற்கு காரணமாகும்.     நூல்:-  அஷ்ஷிஃபா


பெண்களின் நுழைவாசல்


அவர் தன் இஷ்டப்படி எதையும் பேசுவதில்லை. இது அவருக்கு வஹ்யி (எனும் இறைச்செய்தி) மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை.     திருக்குர்ஆன்:- 53:3,4


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலில் ஒரு வாசலைக் சுட்டிக்காட்டி  ( لَوْ تَرَكْنَا هَذَا الْبَابَ لِلنِّسَاءِ )இந்த வாசலைப் பெண்களுக்கென விட்டுவிட்டால் மிக நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். மற்றொரு அறிவிப்பில், "அதற்குப் பின் அந்த வாசல் வழியாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மரணிக்கும் வரை நுழையவில்லை" என்று கூடுதலாகக் காணப்படுகிறது.   நூல்:- அபூதாவூத்-391


அன்று, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்கு பல வாசல்கள் இருந்தன. அண்ணலார் அதில் ஒரு வாசலைத்தான் இவ்வாறு சுட்டிக் காட்டி சொன்னார்கள்.


பள்ளிவாசலில் நடைபெறும் பயான்கள், தராவீஹ் தொழுகை, பெருநாள் தொழுகை போன்றவற்றில் பெண்கள் கலந்து கொள்வதற்கு  இடம் ஒதுக்கினால், அவர்கள் பயன்பாட்டிற்காக தனி கழிப்பறையும், அவர்கள் வருவதற்கும் போவதற்குமாக தனி நுழைவாசலும் இருக்க வேண்டும்.


தங்க மோதிரம்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தமது கையில் தங்க மோதிரம் அணிந்திருப்பதைக் கண்டபோது, அதைக் கழற்றச் செய்து தூக்கியெறிந்தார்கள். பிறகு   ( يَعْمِدُ أَحَدُكُمْ إِلَى جَمْرَةٍ مِنْ نَارٍ فَيَجْعَلُهَا فِي يَدِهِ ) "உங்களில் ஒருவர் நரக நெருப்பின் கங்கை எடுத்து, அதைத் தமது கையில் வைத்துக் கொள்கிறார்" என்று கூறினார்கள். அண்ணலார் சென்ற பிறகு அந்த மனிதரிடம், "உமது மோதிரத்தை(க் கழற்றி) எடுத்து நீ (வேறு வகையில்) பயனடைந்து கொள்" என்று கூறப்பட்டது. அவர்,  ( لاَ وَاللَّهِ لاَ آخُذُهُ أَبَدًا وَقَدْ طَرَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) "இல்லை. அண்ணலார் வீசியெறிந்துவிட்டதை அல்லாஹ்வின் மீதாணையாக ஒருபோதும் நான் எடுக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டார்.        நூல்:- முஸ்லிம்-4243


தங்க ஆபரணங்கள் பெண்களுக்கே உரிய அலங்காரப் பொருளாகும். அது ஆண்களுக்கு அனுமதியில்லை. ஆனால் ஆண்கள் வெள்ளி மோதிரம் மட்டும் அணியலாம்; தடையில்லை.


இப்னு கய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். தங்க அணிகலன்கள் பெண்களுக்கென்றே படைக்கப்பட்டது. எனவே அதை ஆண்கள் அணிவதால் பெண்களுக்கு ஒப்பாக நிலை ஏற்படும்; அதனால் குழப்பம் விளையும் என்பதாலேயே ஆண்களுக்கு இது தடைசெய்யப்பட்டது என அறிஞர்களில் ஒரு குழுவினர் கருத்தாகும். இது பெருமை, செருக்கு, படாடோபம் போன்றவற்றை ஆண்களின் மனதில் உண்டாகும் என்பதாலேயே ஆண்களுக்கு இது தடைசெய்யப்பட்டது என மற்றொரு குழுவினர் கருத்தாகும்.         நூல்:- அத்திப்புந் நபவீ


பெருமையையும் பகட்டையை விரும்பும் சிலர் தங்கப் பேனா, தங்கக் கைகடிகாரம், தங்க சிகரெட் பெட்டி, தங்கப் பல் போன்றவற்றை பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். இவை அனைத்தும் தங்க மோதிரத்தை போன்றே (ஹராம்) தடை செய்யப்பட்டவையாகும்.


ஒரு ஆண்மகனுக்கு ஒரு மிஸ்கால் அளவைவிட அதிகமாக வெள்ளி மோதிரத்தை அணிவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஒரு மிஸ்கால் என்பது ஹனஃபி மத்ஹபின் பிரகாரம் 6 கிராம் வரையிலுமுள்ள வெள்ளியின்  அளவாகும். எனவே அந்த அளவுக்கு வெள்ளி மோதிரம் அணிந்து கொள்ளலாம். அதுவே ஒரு மிஸ்கால் உடைய அளவாகும்.   நூல்:- துர்ருல் முக்தார்

 

திரைக்குப் பின்னாலிருந்து...


(அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள். (அதன்மூலம்) நீங்கள் அருள் செய்யப்படலாம்.     திருக்குர்ஆன்:- 24:56


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஜுலைபீப் (ரலி) அவர்களுக்கு மணமுடித்து வைப்பதற்காக அப் பெண்ணின் தந்தையிடம் பெண் கேட்டார்கள். அவர், "மனைவியிடம் கேட்டுச் சொல்கிறேன்" என்று கூறினார்.


பிறகு அவர் தம் மனைவியிடம் நடந்ததை தெரிவித்தார். அவருடைய மனைவி, "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். என்ன? அண்ணலாருக்கு ஜுலைபீபைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா? இன்னின்னவர்களெல்லாம் நம்மிடம் பெண் கேட்டனர். அவர்களுக்கெல்லாம் நம் மகளை (தர முடியாது என) மறுத்துவிட்டோம். (அப்படியிருக்க இவருக்கா? சம்மதிக்க மாட்டோம்)"என்று கூறினார்.


இதையெல்லாம் அப்பெண்ணின் மகள் திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள். அந்த மனிதர் தம் மனைவியின் கருத்தை அண்ணலாரிடம் தெரிவிப்பதற்காக புறப்பட்டார்.


அப்போது அவருடைய மகள்,  ( أَتُرِيدُونَ أَنْ تَرُدُّوا عَلَى رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَمْره إِنْ كَانَ قَدْ رَضِيَهُ لَكُمْ فَأَنْكِحُوه ) "அண்ணலாரின் உத்தரவுக்கு நீங்கள் மாற்றம் செய்ய நினைக்கிறீர்களா? அண்ணலார், அவரையே உங்களுக்கு (மருமகனாக ஆக்க) விரும்பினால், அவருக்கே என்னை மணமுடித்து வையுங்கள்" என்று கூறினாள்.


அப்பெண் தன் பெற்றோரை(யும் அவர்களின் நிலைபாட்டையும்) விட்டு ஒதுங்கி கொண்டவளை போல் பேசினாள். அப்போது பெற்றோர், "நீ கூறுவது சரியே!" என்றனர்.


பின்னர் அப்பெண்ணின் தந்தை அண்ணலாரிடம் சென்று, "(நாயகமே!) நீங்கள் அவரையே விரும்பினால், எங்களுக்கும் அவர் திருப்தி தான்" என்றார். அண்ணலார், ( فَإِنِّي قَدْ رَضِيته )  "நான் அவரையே திருப்திபடுகிறேன்" என்று கூறினார்கள். பின்னர் அப்பெண்ணை அந்த மனிதருக்கே மணமுடித்து வைத்தார்கள்.


மேலும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். பிற்காலத்தில் ஜுலைபீபுடைய மனைவியை நான் கண்ட போது, மதீனாவிலேயே அதிகமாகச் செலவழிக்கும் வீட்டினராக அவள் இருந்தாள். (அதாவது பெரும் சீமாட்டியாக இருந்தாள்).  நூல்:- முஸ்னது அஹ்மது, முஸன்னஃப் அப்திர் ரஸ்ஸாக், தஃப்சீர் இப்னு கஸீர்  அல்அஹ்ஸாப், வசனம்-36


அமருங்கள்


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மிம்பரின் மீது அமர்ந்து (மக்களை நோக்கி) அமருங்கள் என்று கூறினார்கள். (அப்போது பள்ளிக்குள் நுழைந்து கொண்டிருந்த) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், அதனை (அமருங்கள் என்பதைக்) கேட்டதும் (உடனே அக்கூற்றை செயல்படுத்துவதற்காக) பள்ளியின் நுழைவாயிலிலேயே அமர்ந்துவிட்டார்கள்.


நுழைவாயிலில் அமர்ந்து இருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை பார்த்த அண்ணலார்,    ( تَعَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ )  "அப்துல்லாஹ் பின் மஸ்ஊதே! உள்ளே வாருங்கள்" என்று அழைத்தார்கள். நூல்:- அபூதாவூத்-920


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தன்னைச் சுற்றியுள்ள தோழர்களை நோக்கி அமருங்கள் என்று கூறினார்கள். தொலைவில் வந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு சொல்லப்பட்டதல்ல. இருந்தாலும் அமருங்கள் என்று அண்ணலார் சொன்னது தம் காதில் விழுந்தவுடன் அவரால் ஓர் எட்டுகூட முன் செல்ல முடியாமல் வாயிற்படியில் அமர்ந்து விடுகிறார். அண்ணலாரின் சொற்களை நபித்தோழர்கள் எந்தளவுக்கு முழுமையாக பின்பற்றுகிறார்கள் என்பதை இந்த நபிமொழி எடுத்துரைக்கிறது.


கொன்று விடுவாயா?


ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் யூதத் தலைவர்களுள் யாரையேனும் கொல்ல முடியுமென்றால் கொன்று விடுங்கள்" என்று கூறினார்கள். இஸ்லாமிய எதிரிகளுக்கு உணவு, உடைக்கான ஏற்பாடுகளை செய்து வந்த, யூத வியாபாரிகளுள் ஒருவனான விளங்கிய இப்னு ஷைபாவை, முஹய்யிஸா (ரலி) அவர்கள் கொலை செய்துவிட்டார்கள்.


இதை அறிந்த அவர்களின் மூத்த சகோதரர் அப்போது இறைமறுப்பாளரான இருந்த ஹுவய்யிஸா, தம் சகோதரர் முஹய்யிஸா (ரலி) அவர்களை அடித்துத் துன்புறுத்தினர். மேலும், "அல்லாஹ்வின் விரோதியே! நீ அவரைக் கொலை செய்து விட்டாயல்லவா? நீ உண்டு கொழுத்ததெல்லாம் அவருடைய செல்வத்திலிருந்து தான்" என்று கூறினார்.  மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (உனது தலைவர்) முஹம்மது (ஸல்) அவர்கள், என்னை கொலை செய்யும்படி ஆணையிட்டால் நீ என்னை கொலை செய்து விடுவாயா? என்று கேட்டார்.


முஹய்யிஸா (ரலி) அவர்கள்,   "அல்லாஹ்வின் மீதாணையாக! ஆம்" என்று கூறினார். இந்த வார்த்தைதான் ஹுவய்யிஸா தூய இஸ்லாத்தை ஏற்க ஆரம்ப காரணமாக ஆனது. அப்போது ஹுவய்யிஸா, "அல்லாஹ்வின் மீதாணையாக! நிச்சயமாக ஒரு மார்க்கம் உன்னை இந்த அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றால் அது உண்மையில் ஆச்சரியமானது தான்" என்று கூறினார். நூல்:- கன்ஸுல் உம்மால்


மற்றொரு அறிவிப்பில் முஹய்யிசா (ரலி) அவர்கள் ( وَاللَّهِ لَقَد اَمَرَنِي بِقَتلِهِ مَن لَّو اَمَرَنِي بِقَتلِكَ لَضَرَبتُ عُنُقَكَ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு ஷைபாவைக் கொலை செய்யும்படி யார் என்னை ஏவினார்களோ, அந்த மனிதர் உன்னைக் கொல்லும்படி ஏவினாலும் நான் உன்னுடைய கழுத்தைத் துண்டித்து விடுவேன்" என்று தன்னுடைய சகோதரர் ஹுவய்யிஸாவிடம் கூறினார்கள்.  நூல்:- ஹயாத்துஸ் ஸஹாபா  பாகம்-1 பக்கம்-497


மணப்பெண்


முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் ஸல் அவர்களிடம் வந்து  நான் மணமுடிப்பதற்கு ஒரு பெண்ணை பேசியிருப்பதைப்பற்றி கூறினேன். அப்போது அண்ணலார்,  ( اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا ) “ நீ சென்று அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொள். அது உங்களுக்கிடையில் அன்பை ஏற்படுத்தும் என்றார்கள்.


நான் அப்பெண்ணின் பெற்றோரிடத்தில் சென்று அண்ணலாரின் அறிவுரையை சொன்னேன். ஆனால் அவர்களோ அதை அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இந்த உரையாடலை உள்ளிருந்துக் கேட்டுக்கொண்டிருந்த அவர்களின் மகள், ( إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَكَ أَنْ تَنْظُرَ فَانْظُرْ ) "அண்ணலார் என்னை பார்க்கும்படி சொல்லி இருந்தால் என்னை நீங்கள் பார்க்கலாம்" என்றாள். நான் அவளைப் பார்த்தேன் பின்னர் அவளையே மணந்து கொண்டேன்.      நூல் :- முஸ்னது அஹ்மத், இப்னு மாஜா-1866


மணமுடிப்பவர் பெண்ணை பார்க்க விரும்பினால் பெண்ணைப் பெற்றவர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அதெல்லாம் முடியாது. பெண்ணின் புகைப்படத்தை மட்டும் தான் காட்டுவோம். பெண்ணை காட்ட முடியாது. எங்கள் ஊரில் அந்த பழக்கம் இல்லை என்று கூறி மறுக்கக்கூடாது.


அதற்கான பரிகாரம்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْبُزَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ، وَكَفَّارَتُهَا دَفْنُهَا ‏ ) பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்குள் புதைத்து அதற்கான பரிகாரமாகும்.                           நூல்:-புகாரீ-415


அபூ உபைதா (ரலி) அவர்கள், ஒரு நாள் இரவு பள்ளிவாசலில் (இருக்கும் போது) துப்பிவிட்டு அதை புதைப்பதற்கு மறந்துவிட்டார்கள். வீட்டுக்குச் சென்றபிறகு அது பற்றி ஞாபகம் வந்தது. உடனே ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து, அங்கு தான் துப்பிதை தேடி, அதைப் புதைத்துவிட்டு "இன்று இரவு எந்தப் பாவத்தையும் எழுதாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் சொந்தமானதாகும்" என்று கூறினார்கள்.       நூல்:- சுபுலுஸ் ஸலாம்


நீங்கள் தொழுகையைக் கடைபிடியுங்கள்; ஸகாத் (கட்டாய தர்மம்) வழங்குங்கள்; இறைத் தூதருக்குக் கீழ்ப்படியுங்கள். (அதன் மூலம்) நீங்கள் அருள் செய்யப்படலாம்.          திருக்குர்ஆன்:- 24:56

 

பேரறிஞர் இப்னுகஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். தொழுகை என்பது, அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமல் அவனுக்கு மட்டுமே செய்யப்படும் வழிபாடாகும். அதைத்தொடர்ந்து ஸக்காத் (கட்டாய தர்மம்) வழங்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஸகாத் என்பது, இறைவனின் படைப்பில் ஏழைகள் மற்றும் பலவீனர்களுக்குச் செய்யும் நன்மையாகும். இவ்வாறான நல்லறங்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு, அவர்கள் தடுத்தவற்றைக் கைவிட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவான்.


ஆறு மாதக் குட்டி


அபூகிபாஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் செம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்ட ஆடுகளை (விற்பனைக்காக) மதீனாவுக்கு ஓட்டி வந்தேன். ஆனால் அவை விலைபோகாமல் அப்படியே என்னிடம் எஞ்சிவிட்டன. பின்னர் நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் (விளக்கம்) கேட்டேன்.


அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், ( نِعْمَتِ الأُضْحِيَةُ الْجَذَعُ مِنَ الضَّأْنِ ) "(ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்ட செம்மறியாடு, குர்பானிக்கு மிகவும் சிறந்ததாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள். அதன் பின்னர் மக்கள் அந்த ஆடுகளை என்னிடமிருந்து (பறிக்காத குறையாகப்) போட்டி போட்டு வாங்கலாயினர்.                 நூல்:- திர்மிதீ-1419


இது போன்ற நிகழ்வுகள் ஒன்று இரண்டல்ல. பல நூறு உண்டு. ஆகவே, அந்த நபித்தோழர்களைப்போல் நாமும் அண்ணல் நபி (ஸல்)  அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, சுன்னத்துக்களைப் பேணி முறையாக வாழ அல்லாஹ் அருள்பாலிப்பானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...