Search This Blog

Wednesday, 11 November 2020

பார்வை ஒன்றே போதும்!

 

பார்வை  ஒன்றே போதும்!


قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ  وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ


(நபியே) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள்: அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ் நோக்கிய வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை  நன்கறிந்து கூறுகிறான். (நபியே) இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கி வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்.      திருக்குர்ஆன்:- 24:30,31


பார்வையில் நல்லப்பார்வை, கெட்டப்பார்வை என்று இருவகை உண்டு. மனிதன் தமது பார்வையின் மூலம் நன்மை தீமையைப் பெறமுடியும். எனவே, இறைநம்பிக்கையாளர்களுக்கு இது குறித்து  பேணுதல் வேண்டும்.


பார்வையுடன் மனமும் எப்போதும் ஒட்டிக்கொண்டே இருக்கும். பார்வையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராதவரின் மனமும் கட்டுக்கு அடங்காமல் இங்குமங்கும் அலைந்து கொண்டுதான் இருக்கும். இதனால்தான் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.


தனி மனித மற்றும் சமூக ஒழுக்கம் பேணவும் பாலியல் குற்றங்களை முளையிலேயே தடுக்கவும் வேண்டி சிறந்த தீர்வு ஒன்றை தலைப்பில் காணும் திருவசனம் எடுத்துரைக்கிறது.


பாதுகாத்துக் கொள்ள வேண்டும்


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                   

( مَا مِنْ مُسْلِمٍ يَنْظُرُ إِلَى مَحَاسِنِ امْرَأَةٍ ثُمَّ يَغُضّ بَصَرَهُ إِلَّا أَخْلَفَ اللَّهُ لَهُ عِبَادَةً يَجِدُ حَلَاوَتَهَا ) ஒரு பெண்ணின் அழகை முதல்முறையாகப் பார்த்து (அதில் மயங்கி விடாமல்) உடனே பார்வையைத் தாழ்த்திக்கொண்ட முஸ்லிமுக்கு வழிபாட்டில் இன்பம் தேடும் வாய்ப்பை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.     அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னு கஸீர்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( إِنَّ النَّظَرَ سَهْمٌ مِنْ سِهَامِ إِبْلِيسَ مَسْمُومٌ، مَنْ تَرَكَهُ مَخَافَتِي، أَبْدَلْتُهُ إِيمَانًا يَجِدُ حَلَاوَتَهُ فِي قَلْبِهِ ) அல்லாஹ் கூறுகின்றான்: (தகாத) பார்வை இப்லீசின் விஷம் தோய்க்கப்பட்ட  அம்புகளில் ஓர் அம்பாகும். யார் என்னை அஞ்சி, அதைக் கைவிடுவாரோ அவருக்கு, அதற்குப் பதிலாக இறைநம்பிக்கையை நான் தருவேன். அவர் தமது உள்ளத்தில் அதன் சுவையைக் காண்பார்.                அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள்    நூல்:- தப்ரானீ, தஃப்சீர் இப்னு கஸீர்


ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் (அந்நியப் பெண் மீது) தற்செயலாக பார்வை விழுவதைப்பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், எனது பார்வையை (உடனடியாக வேறுபக்கம்) திருப்பிக் கொள்ளுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-4363,திர்மிதீ-2700


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( كُلُّ عَيْنٍ بَاكِيَةٌ يَوْمَ الْقِيَامَةِ، إِلَّا عَيْنًا غَضّتْ عَنْ مَحَارِمِ اللَّهِ، وَعَيْنًا سَهِرَتْ فِي سَبِيلِ اللَّهِ، وَعَيْنًا يَخْرُجُ مِنْهَا مِثْلُ رَأْسِ الذُّبَابِ، مِنْ خَشْيَةِ اللَّهِ، عَزَّ وَجَلَّ மறுமை நாளில் எல்லாக் கண்களும் அழுது கொண்டிருக்கும்; இறைவனால் தடை செய்யப்பட்டவற்றைப் பார்க்காமல் விலகிக்கொண்ட கண், இறைவழியில் விழித்திருந்த கண், இறையச்சத்தால் ஈயின் தலை போன்று (சிறிதளவேனும்) கண்ணீர் வெளிவந்த கண் ஆகியவற்றைத் தவிர. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அபீதுன்யா, தஃப்சீர் இப்னு கஸீர்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

( اكْفُلُوا لِي بِستّ أَكْفُلْ لَكُمْ بِالْجَنَّةِ: إِذَا حدَّث أَحَدُكُمْ فَلَا يَكْذِبْ، وَإِذَا اؤْتُمِنَ فَلَا يَخُن، وَإِذَا وَعَد فَلَا يُخْلِفْ. وغُضُّوا أَبْصَارَكُمْ، وكُفُّوا أَيْدِيَكُمْ، وَاحْفَظُوا فُرُوجَكُمْ )  ஆறு விஷயங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்; நான் சொர்க்கத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்:  1) உண்மையே பேசுங்கள். 2) நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள். 3) வாக்கு மீறாதீர்கள். 4) பார்வையை கட்டுப்படுத்துங்கள். 5) (பிறருக்கு தொல்லை தராமல்) கரத்தைத் தடுத்திடுங்கள். 6) கற்பை பேணுங்கள்.     அறிவிப்பாளர்:- அபூ உமாமா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுஹிப்பான்,  ஹாகிம், தஃப்சீர் இப்னு கஸீர்


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் காலத்தில் யமனிலிருந்து மதீனாவிற்கு தனியாக வந்த ஓர் பெண்ணிடம் அவளது பயணத்தைப் பற்றி கேட்கப்பட்டது. அந்தப் பெண்மணி, "மக்களெல்லாம் ஒரு தாய் பிள்ளைகளைப் போல் இருக்கிறார்கள். அவர்களின் பார்வை பரிசுத்தமாக இருக்கிறது. எனவே, (எவரும் பயமின்றி) யமனிலிருந்து தனியாக வரலாம்" என்று கூறினாள்.


சஅது பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தலைமையேற்ற ஒரு அறப்போரில் முஸ்லிம்களின் மன உறுதியை பலவீனப்படுத்த எதிரிகள் போர்க்களத்தில் பெண்களை நடனமாட விட்டனர். அதை புரிந்து கொண்ட சஅது (ரலி) அவர்கள், பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறு படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள்.


மேதைகள் கூறுவதாக அல்லாமா இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.   ( مَنْ حَفِظَ بَصَرَهُ، أَوْرَثَهُ اللَّهُ نُورًا فِي بَصِيرَتِهِ". وَيُرْوَى: "فِي قَلْبِهِ )  யார் தமது புறப்பார்வையைப் பாதுகாத்துக் கொண்டாரோ அவரது அகப்பார்வையில் அல்லாஹ் ஒளியை ஏற்படுத்துவான்.


பேரறிஞர் அஷ்ரப் அலீ தானவீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "திருமணம்  செய்தபோது என் மனைவி அழகாகத் தான் இருந்தாள். இப்போது என் கண்களுக்கு அவள் அவலட்சணமான தெரிகிறாளே?" என்று வினவினார்.  அதற்கு அன்னார், "திருமணத்தின் செய்தபோது நீங்கள் அப்பெண்ணை மட்டும்தான் பார்த்திருப்பீர்கள். இப்போது தெருவில் போவோர் வருவோரையெல்லாம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால் மனைவி அவலட்சணமாகத் தான் தெரிவாள். எனவே, நீங்கள் பார்வையைத் தாழ்த்தினால் பிரச்சனை தீர்ந்துவிடும்" என்று பதிலளித்தார்கள்.


பாலியல் குற்றங்களின் முதல்படி பார்வைதான். அந்தப் பார்வையை ஆண்களும் பெண்களும் கட்டுப்படுத்திக் கொண்டாலே நிறைய தவறுகள் களையப்பட்டு விடும். எனவே, இறை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் அவர்கள் எதையெல்லாம் பார்க்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதோ அதை பார்க்காமல் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்டதை மட்டுமே பார்க்கவேண்டும். தடைசெய்யப்பட்டவையிலிருந்து பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டும். அப்படியே ஒருகால் தடைசெய்யப்பட்ட ஒன்றின்மீது தற்செயலாக அவர்களின் பார்வை பட்டுவிட்டால் உடனே அவர்கள் தம் பார்வையை வேறு பக்கம் திருப்பி விடவேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும்.


மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள். பார்வை உள்ளத்தை நோக்கி விடப்படும் விஷ அம்பாகும்.


தண்டனை


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்களது வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவர்மீது நீங்கள்சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6888, முஸ்லிம்-4362


அம்ரு பின் ஷுஐப் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் மூலமாகவும் அவர் தம் பாட்டனார் மூலமாகவும் அறிவிப்பதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு அடிமை பரபரப்போடு வந்தார். அப்போது அண்ணலார், "உனக்கு என்ன நேர்ந்தது?" என்று வினவினார்கள். அவர், "காரியம் மிகவும் கெட்டுவிட்டது! என்னுடைய எஜமானியின் அடிமைப் பெண்ணை நான் (கூர்ந்து) பார்த்தேன். அவருக்கு ரோஷம் ஏற்பட்டு என்னுடைய இன உறுப்பை துண்டித்து விட்டாள்!" என்றார். அண்ணலார்,  "நீர் செல்லும்; நீர் விடுதலை பெற்று விட்டீர்" என்றார்கள். அவர், "நாயகமே! எனக்கு உதவுவது எவர் மீது கடமை?" என்றார். அண்ணலார், "உமக்கு உதவுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்றார்கள். நூல்:- அபூதாவூது


ஒரு எஜமானி தனது அடிமையின் ஒருவரின் இன உறுப்பை துண்டித்தற்காக அவளை அண்ணலார் தண்டிக்கவில்லை. ஏனெனில் ஒரு பெண்ணைத் தனது தகாத பார்வையோடு பார்ப்பதற்கு வழங்கப்பட்ட தண்டனை சற்று அதிகம்தான். ஆனாலும், பரவாயில்லை இது மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. அதேநேரம் அவர் விடுதலை பெற்றது அதற்கான இழப்பீடாகும்.


திரைக்கு அப்பால்


நிச்சயமாக காதுகண்உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயல்களைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.       திருக்குர்ஆன்:- 17:36


உம்முசல்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) நானும் மைமூனா (ரலி) அவர்களும் அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்கருகில் இருந்தோம். அப்போது (கண்பார்வையற்ற) அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். இது, பர்தா முறை எங்களுக்குச் சட்டமாக்கப்பின் நடந்ததாகும்.


எனவே, அண்ணலார், ( اِحْتَجِبَا مِنْهُ )  "இவரைப் பார்க்காமல் நீங்கள் மறைந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அப்போது நான், ( يَا رَسُول اللَّه أَلَيْسَ هُوَ أَعْمَى لَا يُبْصِرنَا وَلَا يَعْرِفنَا ؟ ) "நாயகமே! அவர் கண் பார்வையற்றவர் அல்லவா? அவரால் எங்களை பார்க்கவோ இனம் காணவோ முடியாது தானே!" என்று கேட்டேன். அதற்கு அண்ணலார், ( أَوَعَمْيَاوَانِ أَنْتُمَا ؟ أَوْ أَلَسْتُمَا تُبْصِرَانِهِ ؟ ) "நீங்கள் இருவரும் கண் பார்வையற்றவர்களா? நீங்கள் இருவரும் அவரைப் பார்ப்பீர்கள் தானே!" என்று திருப்பிக் கேட்டார்கள். நூல்:- அபூதாவூது-, திர்மிதீ- முஸ்னது அஹ்மது, தஃப்சீர் இப்னு கஸீர்


கண்பார்வையற்ற இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் பாடம் கற்க வருவார். ஆசிரியராக திகழ்ந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தம் மாணவர்கள் முன் பர்தாவைப் பேணியே பாடம் நடத்துவார்கள். இதனை அறிந்த  அவர் ஒருமுறை அன்னையவர்களிடம், "கண்பார்வையற்ற எனக்கு முன்பு உங்களுக்கு பர்தா எதற்கு?" என அவர் கேட்டார். அன்னையவர்கள், "உங்களால் என்னை பார்க்க முடியாவிட்டாலும் நான் உங்களை பார்க்கிறேன் அல்லவா?" என்று பதிலளித்தார்கள் . நூல்:- தபக்காத் இப்னு சஅத்


பேணுதலுடன்


(நபியே) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிகளையும்கண்களையும்உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள்.             திருக்குர்ஆன்:- 67:23


அன்னை ஸஃப்பூரா (அலை) அவர்கள் கூறியதாவது. நான் நபி மூஸா (அலை) அவர்களிடம் சென்று நீங்கள் எங்களுக்கு நீர் புகட்டியதற்கான கூலியை உங்களுக்குத் தருவதற்காக உங்களை எங்கள் தந்தை இல்லத்திற்கு அழைத்து வரச் சொல்கிறார் என்று கூறினேன். அவர் புறப்பட்டார். நான் அவரை அழைத்துக் கொண்டு வரும்போது அவருக்கு வழி தெரியாதே என்ற கருத்தில் அவருக்கு முன்னால் நான் வந்து கொண்டிருந்தேன். அப்போது காற்று அடித்ததால் என் துணி சற்று விலகியது.


அச்சமயம் அவர் சொன்னார், ( كُونِي مِنْ وَرَائِي فَإِذَا اجْتَنَبْتُ الطَّرِيقَ فَاحْذِفِي لِي بِحَصَاةٍ أَعْلَمُ بِهَا كَيْفَ الطَّرِيقُ لِأَتَهَدَّی إِلَيْهِ ) "(பெண்ணே!) நீர் (என் பார்வையில் படும்படியாக நீர் என் முன்னே செல்ல வேண்டாம்) எனக்குப் பின்னால் வருவீராக. (எங்கேனும்) பாதை (பிரிந்து) எனக்குக் குழப்பமாகும்போது ஒருசிறு கல்லை கொண்டு எனக்கு முன் எறிவீராக. அதைக்கொண்டு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நான் புரிந்து கொள்வேன்" என்று கூறினார்.                    நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்கஸஸ் வசனம்-26


நபி மூசா (அலை) அவர்களுக்கு முன்னால் அப்பெண் சென்றால் அப்பெண்ணின் பின்னழகை பார்த்து தனது இச்சைகள் தூண்டப்பட்டு மனதில் தவறான சலனங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே மிகுந்த பேணுதலுடன் மூசா (அலை) அவர்கள் அவ்விதமாக செயல்பட்டார்கள் என்று மார்க்க அறிஞர்கள் விளக்கமளிக்கிறார்கள்.


சாடை  செய்தல்


(மனித) கண்களின் கள்ளத்தனத்தையும், நெஞ்சங்கள் மறைத்து  வைத்திருப்பவற்றையும் அவன் அறிவான்.           திருக்குர்ஆன்:- 40:19


சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்காவை வெற்றி கொண்ட நாளில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நான்கு ஆண்கள், இரண்டு பெண்களுக்குத் தவிர மற்ற எல்லா மக்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தார்கள். (அந்த ஆறு பேரையும்) அண்ணலார், "கஅபாவின் திரைகளைப் பிடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் நீங்கள் கண்டாலும் அவர்களை கொல்லுங்கள்" என்று கூறினார்கள்.


அதில் ஒருவர் அப்துல்லாஹ் பின் சஅத் பின் அபிஸ்ஸர்ஹ் என்பவராவார். இவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் ஒளிந்து கொண்டார். அண்ணலார் பைஅத் எனும் உறுதிமொழி பெறுவதற்காக மக்களை அழைத்தபோது (உஸ்மான்-ரலி அவர்கள்) அவரைக் கொண்டு வந்து அண்ணலாரின் முன்னிலையில் நிறுத்தினார்கள். "நாயகமே! அப்துல்லாஹ்விடம் (இஸ்லாத்தின்) உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.


அண்ணலார் தம் தலையை உயர்த்தி, அவரை மூன்று தடவை பார்த்தார்கள். ஒவ்வொரு தடவையும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பின்னர் மூன்றாவது தடவைக்குப் பிறகு அவரிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். பின்னர் தம் தோழர்களை முன்னோக்கி, இவரிடம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள நான் மறுப்பதைக் கண்டு உங்களில் யாரேனும் ஒரு நேர்மையான மனிதர் எழுந்து இவரைக் கொன்று இருக்க வேண்டாமா? என்று கேட்டார்கள்.


அதற்கு நபித்தோழர்கள், "நாயகமே! உங்களின் மனதில் உள்ளது எங்களுக்குத் தெரியவில்லையே! நீங்கள் எங்களை நோக்கி உங்கள் கண்களால் ஜாடை காட்டியிருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு அண்ணலார், "தம் கண்ணால் சாடை  காட்டிச் சூது செய்வது எந்த இறைத்தூதருக்கும் தகாது" என்றுரைத்தார்கள்.         நூல்:- நஸாயீ-3999


இந்த அப்துல்லாஹ் பின் சஅத் பின் அபிஸ்ஸர்ஹ் என்பவர் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு பால்குடி வழி சகோதரராக இருந்தார். அதனால் தான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று ஒளிந்தார். இவர் ஆரம்பத்தில் இஸ்லாத்தை ஏற்று அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு வஹி (இறைச் செய்தி) எழுதுபவராக இருந்து வந்தார். ஷைத்தான் அவரை வழிதவறச் செய்து இணைவைப்போருடன் இணைத்துவிட்டான். 


எனவே, இவர் இந்த நபிமொழியில் கூறப்பட்டவாறு அண்ணலாரின் அவையில், தான் அப்போது (மீண்டும்) முஸ்லிமாகி விடுவதாக அறிவித்தார். ஆனால் அண்ணலார் தம் தோழர்கள் யாராவது ஒருவர் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால் அவர் இஸ்லாமாவதை ஒப்புக்கொள்ள தயக்கம் காட்டினார்கள். பின்பு சிறிது நேரம் கழித்து அவர் இஸ்லாமாவதை ஒப்புக்கொண்டார்கள்.             நூல்:- ஃபத்ஹுல் பாரீ


ஸைது பின் அஸ்லம் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோயுற்று இருந்தபோது அண்ணலாரின் மனைவியர் அனைவரும் அவ்விடத்தில் ஒன்று கூடி இருந்தனர். அப்போது சஃபிய்யா (ரலி) அவர்கள், ( اَمَا وَاللّٰهِ يَانَبِيَّ اللّٰهِ لَوَدِدتُ اَنَّ الَّذِي بِكَ بِي ) "நாயகமே! தங்களுக்கு வந்த நோய் உங்களை விட்டு விட்டு எனக்கு வந்திருந்தால் நன்றாக இருக்குமே" என்று கூறினார்கள். அப்போது பிற மனைவியர்கள் (சஃபிய்யா - ரலி அவர்களுக்கு தெரியாமல், இவள் ரொம்பவும் நடிக்கிறாள் என்று கூறும் விதத்தில்) தங்களது கண்களை உயர்த்தி காட்டி சஃபிய்யா (ரலி) அவர்களை குறை கூறினர். இதனை அண்ணலார் பார்த்துவிட்டார்கள்.


உடனே அண்ணலார், ( مِن تَغَامُزِ كُنَّ بِصَاحِبَتِكُنَّ  مَضمِضنَ )  "நீங்கள் உங்கள் சக்காளத்தி (சஃபிய்யாவை) பற்றி கண்களை உயர்த்திக்காட்டி (சாடை செய்து  புறம் பேசி)யதனால், நீங்கள் வாயை கொப்பளியுங்கள்” என்று கூறினார்கள். நூல்:- அல்இசாபா, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-543


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக ஒரு மனிதன், ஒரு வீட்டாரிடம் செல்கிறான் அவர்களது வீட்டில் நுழைகிறான். அவர்களிடையே அழகான பெண்ணொருத்தி இருக்கின்றாள். அல்லது அவளுடன் அவளது குடும்பத்தினரும் உள்ள நிலையில், அந்த மனிதனின் அருகே கடந்து செல்கின்றனர். அவர்கள் (தமது அலுவல்களில் மூழ்கி) பாராமுகமாக இருக்கும் பொழுது, அந்தப் பெண்ணை அவன் நோட்டமிடுகின்றான். 


அதனை அவர்கள் கவனிக்கும் பொழுது, தனது பார்வையை அவளிடமிருந்து விலக்கித் தாழ்த்திக்கொள்கிறான். மறுபடியும் அவர்கள் கவனக்குறைவாக இருந்தால் அவளை நோட்டமிடுகிறான்; அதனை அவர்கள் கவனித்துவிட்டால் பார்வையைத் தாழ்த்திக் கொள்கிறான். அவனது உள்ளக்கிடக்கை அதாவது அவளது மறைவிடங்களைப் பார்ப்பதற்கு அவன் ஆசைப்படுகிறான் என்பது உயர்மிக்க அல்லாஹ்வுக்கு தெரியும்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படியும் ஒரு விளக்கம் அளித்துள்ளார்கள். பார்வை செலுத்தும் கண்ணைக் குறித்து அது கள்ளத்தனமாக பார்க்கிறதா இல்லையா என்பதை அல்லாஹ் அறிவான்.


ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். கண்களின் கள்ளத்தனம் என்பது கண் சாடையைக் குறிக்கும். ஒரு மனிதன் எதையும் காணாத நிலையில் தான் கண்டேன் என்று கள்ளத்தனமாக பேசுவதையும் குறிக்கும்.    நூல்:-  ப்சீர் இப்னு அபீஹாத்திம்,  ப்சீர் இப்னு கஸீர்,  அல்முஃமின் வசனம்-19


மனிதன் கண் சாடையினாலும் தவறிழைக்கிறான். பார்வைகள் பலவிதம் சில பார்வையின் பொருள் மனிதனுக்கு புரியும். சில பார்வையின் பொருள் மட்டுமல்ல அதன் நோக்கம் என்ன என்பதுகூட இறைவன் நன்கறிவான்.


நன்மைகள் வழங்கப்படும்


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,    ( مَا مِن وَلَدٍ بَارٍّ يَنظُرُ اِلَي وَالِدَيهِ نَظرَةَ رَحمَةٍ اِلَّا کَتَبَ اللَّهُ لَهُ بِکُلِّ نَظرَةٍ حَجَّةً مَبرُورَةً )  "எந்தவொரு நல்ல பிள்ளை தனது பெற்றோர்களை அன்பான பார்வை பார்க்கிறாரோ, அல்லாஹ் அப்பிள்ளைக்கு ஒவ்வொரு பார்வைக்குப் பதிலாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு ஹஜ்ஜின் நன்மையை எழுதிவிடுகிறான் என்று கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள்,  (நாயகமே!) "ஒவ்வொரு நாளும் நூறு தடவை அவ்வாறு பார்த்தாலும் அந்த நன்மை கிடைக்குமா?" என்று வினவினர். அண்ணலார், ( نَعَم اَللَّهُ اَکبَرُ وَاَطيَبُ ) "ஆம்! அல்லாஹ் மிகப் பெரியவன். மேலும் அதிகமான நன்மைகளை வழங்கக்கூடியவன்" என்று கூறினார்கள். நூல்:- ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ, மிஷ்காத்


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُنْزِلُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى هَذَا الْبَيْتِ كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ , وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ அல்லாஹ்வின் மூலம் புனித கஅபாவின் மீது தினந்தோறும் 120 இறையருள் எனும் ரஹ்மத்துகள் இறங்குகின்றன. அதில் 20 ரஹ்மத்துகள் கஅபாவை வெறுமனே நேரடியாகப் பார்த்துக் கொண்டிருப்போர் மீது இறங்குகின்றன. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, மஜ்மவு ஸவாயித்


மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். கஅபாவை நேரடியாக பார்ப்பது வணக்கமாகும். அப்படி பார்த்தால் நயவஞ்சக எண்ணம் ஏற்படுவதைவிட்டும் அவன் பாதுகாப்பு பெறுவான்.


நேர்வழிப் பெறலாம்


சுல்தான் மஹ்மூது அல்கஸ்னவீ (ரஹ்) அவர்கள் அபுல்ஹசன் கிர்கானீ (ரஹ்) அவர்களிடம், "அபூயஸீதுல் பிஸ்தாமீ (ரஹ்) அவர்களைப்பற்றி உங்கள் கருத்தென்ன?" என்று வினவினார்.


அதற்கு கிர்கானீ (ரஹ்) அவர்கள், "அபூயஸீதுல் பிஸ்தாமீ (ரஹ்) அவர்கள் பேராண்மை மிக்க சான்றோர் ஆவார். (தெளிந்த சிந்தனையுடன்) அவரைப் பார்த்தவர்கள் நேர்வழி பெற்றுவிடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். மஹ்மூது அல்கஸ்னவீ அவர்கள், "அது எப்படி முடியும்? அண்ணல் நபி (ஸல்) அவர்களை அபூஜஹ்ல் தினமும் பார்த்துக் கொண்டேதான் இருந்தான். அவன் நேர்வழி பெற்றானா?" என்று குறுக்கு கேள்வி கேட்டார்.


கிர்கானீ (ரஹ்) அவர்கள், "அபூஜஹ்ல், அண்ணல் நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக பார்க்கவில்லை. அபூதாலிப் வீட்டில் வளர்ந்த 'முஹம்மது பின் அப்துல்லாஹ்' என்றுதான் பார்த்தான். அவன் அண்ணலாரை இறைத்தூதராக பார்த்திருந்தால் அவன் தன் நிலையிலிருந்து தெளிவுப்பெற்று நேர்வழி அடைந்திருப்பான்." என்று பதிலளித்தார்கள்.


அதாவது, அபூஜஹ்லின் பார்வையில் கோளாறு இருந்தது. உண்மையை அறிய வேண்டும் என்ற ஆர்வமும் அறிவுத் தேட்டமும் இருந்ததில்லை என்பதை பெருந்தகை சுட்டிக் காட்டினார்கள்.


இறைநேசச் செல்வர் அபுல் ஹன் ஷாதலி (ரஹ்) அவர்கள் தம்முடைய பள்ளிவாசலில் தொழ வைப்பதற்கு ஒருவரை இமாமாக நியமித்திருந்தார்கள்.  ஒருநாள் அவர் தொழ வைப்பதற்காக பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்தபோது வழியில் எதிர்ப்பட்ட ஓர் அழகிய பெண்ணைக் கூர்ந்து பார்த்தார். இதனைத் தம் (இல்ஹாம் எனும் அல்லாஹ் உணர்த்தும் ) உள்ளுணர்வால் விளங்கிக் கொண்ட அன்னார், அவர் பள்ளிக்கு வந்ததும் அவரைத் தொழ வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு வேறொருவரை இமாமாக நின்று தொழ வைக்குமாறு பணித்தார்கள். இவ்வாறே அன்றைய பொழுது கழிந்தது.


அந்த இமாமுக்கு, தம்மீது அன்னார் வருத்தமுற்றிருப்பதற்கான காரணம் என்னவென்று விளங்கவில்லை. அவரும் அதுபற்றி அன்று இரவு முழுவதும் சிந்தித்து சிந்தித்து அலுத்துப்போனார். இறுதியாக, தாம் அன்று அதிகாலையில் பள்ளிவாசலுக்குச் செல்லும் பொழுது, வழியில் எதிர்ப்பட்ட அழகிய பெண்ணைக் கூர்ந்து கவனித்தது தான், தாம் செய்த தவறு என்பது அவரின் மனக்கண்முன் பளிச்சிட்டது. உடனே அவர் தம் பாவம் பொறுத்தருளுமாறு இறைவனிடம் அழுது கெஞ்சி இறைஞ்சினார்.


அவரின் செயல்கள் அனைத்தும் அல்லாஹ் அன்னாருக்கு அப்படியே விளக்கினான். அவர் அடுத்த நாள் அதிகாலையில் தொழுவதற்காக பள்ளிவாசல் வந்தபோது, அன்னார் அவரை அழைத்துத் தொழ வைக்குமாறு பணித்தார்கள். அப்போது அந்த இமாமுக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவேயில்லை.


டெல்லியில் வாழ்ந்த இறைநேசர் ஹள்ரத் சையது ஷஹீத் (ரஹ்) அவர்கள் ஒருமுறை டெல்லி நகரின் ஒரு தெருவில் குதிரையில் ஏறி சென்றார்கள். அந்தத் தெருவில் நடத்தை கெட்ட ஒரு பெண் இருந்து வந்தாள். அந்த தெரு வழியாக எந்த சாதாரண மனிதனும் கடந்து செல்ல முடியாது.  ஹள்ரத் அவர்களுடன் சென்ற பணியாளர்கள் கூறினார்கள்: அந்தப் பெண் தன் தீய செயலுக்காக நின்று கொண்டிருந்தாள். ஹள்ரத் அவர்களின் குதிரை அந்த பெண்ணின் வீட்டு வாசலை கடந்து செல்லும்போது ஹள்ரத் அவர்களின் ஒரு பார்வை அந்தப் பெண்ணின்மீது பட்டது.


குதிரை கடந்து சற்று தூரம் சென்றதும், அந்தப் பெண் ஓடிவந்து, "குதிரையை நிறுத்துங்கள்; குதிரையை நிறுத்துங்கள்" என்று கூறிக்கொண்டே வந்து குதிரையின் முன்னங்காலின் மீது தலையை வைத்துக் கதறி அழுதாள்.  "ஹள்ரத் அவர்களே! நான் மிகப்பெரும் பாவம் செய்தவள்" என்று கூறினாள். ஹள்ரத் அவர்கள் குதிரையை நிறுத்தி கீழே இறங்கி, அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தார்கள். அந்த பெண்ணுடன் சம்பந்தப்பட்ட அநேக நபர்கள் அங்கே இருந்தனர். ஹள்ரத் அவர்களைக் கண்ட அவர்கள் அனைவருமே பாவமன்னிப்பு தேடினார்கள். ஹள்ரத் அவர்கள், அங்கிருந்த ஆண்களில் ஒருவரிடம் சம்மதம் கேட்டு அந்த பெண்ணுக்கு அங்கேயே திருமணம் செய்து வைத்தார்கள். பிற்காலத்தில் அப்பெண் மார்க்க சேவை புரிந்த நிலையிலேயே மரணமடைந்தாள்.


இறைநேசரின் ஒரேயொரு பார்வையால் ஒரு விபச்சாரி ஒழுக்கமுள்ளவளாக ஆகிவிட்டாள் எனில், இறைநேசர்களுடன் நெருங்கிய நட்புறவைப் பேணி வாழ்ந்தால் நமது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்படும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.


இறைநேசர்களின் பார்வையால்கூட பிறரை ஒழுக்கமுள்ளவர்களாய் வாழச்செய்ய முடியும். ஆம்! பார்வை என்பது சாதாரணமானதல்ல. நன்மை தீமைக்கு அதுவே காரணமாகும். எனவே, நாம் பார்வையைப் பேணி இறையருளைப் பெறுவோமாக! ஆமீன்!  


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...