Search This Blog

Wednesday, 11 November 2020

கண்களுக்கு புலப்படாதவர்கள்

 

கண்களுக்கு புலப்படாதவர்கள்


وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ


மேலும் அவன் நெருப்பின் கொழுந்தினால் ஜின்னைப் படைத்தான்.  திருக்குர்ஆன்:- 55:15


ஜின்னு என்பது மனிதரும் வானவரும் அல்லாத ஓர் இனம். இந்த இனம் தீப்பிழம்பால் படைக்கப்பட்டதாகும். மனிதனுக்கு முன்பே இந்த இனம் படைக்கப்பட்டுவிட்டது. இந்த பூமியில் மனிதர்களைப் போன்றே ஜின்னுகளும் வாழ்கின்றனர். ஜின்னுகளால் மனிதர்களைப் பார்க்க இயலும். ஆனால், மனிதர்களால் ஜின்னுகளை பார்க்க இயலாது. ஷைத்தான்களின் தந்தையான இப்லீஸ் இந்த இனத்தில் பிறந்தவன் ஆவான்.  


ஜின்னுகள் மனிதன் உட்பட பல்வேறு உயிரினங்களின் தோற்றத்திலும் கண்ணுக்குத் தெரியாத வாயுவாகவும் சுற்றித்திறிவர். மனித இனத்திற்கு முன்பே படைக்கப்பட்ட ஜின்னு இனம், இன்னும் பூமியில் வாழ்ந்து வருகிறது. 'ஜின்' என்றால் கண்ணுக்கு மறைந்தது என்று பொருள். ஜின்னுகளில் மனிதன் போன்ற ஆண், பெண் உண்டு. இனப்பெருக்கம் உண்டு. அவர்களுக்கும் ஊண், உறக்கம் உண்டு. அவர்களிலும் நல்லோர் தீயோர் உள்ளனர். அவர்களுக்கு மார்க்கக் கட்டளைகளும் சட்ட விதிகள் உள்ளன. ஜின்னுகளும் அவரவர் செய்யும் வினைகளுக்கு ஏற்ப நன்மையோ தீமையோ தண்டனையோ பெறுவர்.  நூல்:- உம்தத்துல்காரீ


ஒளியிலிருந்து வானவர்கள் படைக்கப்பட்டதால் அவர்கள் பாவங்கள் செய்யாமல் இறைவணக்கத்திலேயே மூழ்கியுள்ளனர். நெருப்பிலிருந்து கிளம்பிய புகையிலிருந்து ஷைத்தான்கள் படைக்கப்பட்டதால் அவர்கள் தீமை செய்வதிலேயே மூழ்கியுள்ளனர். நெருப்பில் ஒளியும் இருளும் கலந்திருந்ததால் நெருப்பைக் கொண்டு படைக்கப்பட்ட ஜின்னு இனத்தில் நல்லவர்களும், தீயவர்களும் உள்ளனர்.


ஜின்னு இனத்தவர்களில் அனைவரும் ஆரம்ப நிலையில் இறையச்சம் கொண்டவராகவே இருந்து வந்தனர். பிறகு இவர்களின் பெருக்கம் அதிகமான பின்னர் இறையச்சமற்றவர்களும் இவர்களில் தோன்ற ஆரம்பித்தனர். அல்லாஹ் இவர்களைத் திருத்தப் பல சீர்திருத்தவாதிகளை அனுப்பி வைத்தான். இவர்களில் பெரும்பாலோர் திருந்தாத நிலையிலேயே இருந்ததால், அல்லாஹ் இவர்களை ஒழித்துக்கட்ட வானத்திலிருந்து பெருமளவில் வானவர்களை அனுப்பினான். ஜின்னுகளில் பெரும்பாலோர் கொல்லப்பட்டுப் போயினர். பலர் மலைப் பொந்துகளில் ஓடி ஒளிந்தனர். பலர் பல தீவுகளுக்குப் போய்விட்டனர். பலர் எவ்வித சஞ்சாரமற்ற இடங்களுக்குப் போய் விட்டனர். பலர் கைது செய்யப்பட்டனர். நூல்:- மஆரிஜுந் நுபுவ்வத்


கைது செய்து வானத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஜின்னுகளில் இப்லீஸும் இருந்தான். இவனுக்கு "அஸாஸீல்" என்ற பெயரும் உண்டு. அவன் வானவர்களுடன் உறவாடி பல நல்ல குணங்களைப் பெற்றான். வானவர்களைப் போலவே அவனும் இறைவணக்கத்தின் அதிகம் ஈடுபட்டான். அவனின் நல்லொழுக்கமும், இறைதியானமும் சேர்ந்து அவனுடைய அந்தஸ்தை உயர்த்தி, முதல் வானத்திலிருந்து இரண்டாம் வானத்திற்கும், மூன்றாம் வானத்திற்கும், இப்படியே படிப்படியாக உயர்ந்து ஏழாம் வானத்திற்கே உயர்த்தி விட்டது. பிறகு முக்கியமான வானவர்கள் அவனுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்து அவன் சொர்க்கத்தில் வாழ வகை செய்தனர். பிறகு வானவர்களுக்குப் பாடம் போதிக்கும் ஆசிரியராக பதவி உயர்வுப் பெற்றான். பிறகு அவனுடைய ஆணவத்தால் மிகவும் சிறுமையடைந்தான்.


ஜின்னுகளின் ஆதி பிதாவான இப்லீஸ், கறுப்புப் புகை கலந்த நெருப்பால் ('மாரிஜ்') படைக்கப்பட்டான். எனவேதான், ஜின்னுகளால் பறக்க முடியும். நாய், பாம்பு போன்ற உயிரினங்களின் வடிவில்கூட காட்சியளிக்க முடியும். ஜின்னுகள் நம் கண்களில் படாத காரணத்தால் அவர்களைப் பற்றி பலரும் அறியாதிருக்கிறார்கள்.


மேலும் (தம் கூட்டத்தை நோக்கி ஜின்னுகள் கூறினர்:) நிச்சயமாக நம்மில் சிலர் நல்லவர்களாக உள்ளனர். நம்மில் வேறு சிலர் அதற்கு மாற்றமாக உள்ளனர். நாம் பலதரப்பட்ட வழிகளில் பிளவுபட்டு இருக்கின்றோம். திருக்குர்ஆன்:- 72:11


நம்மில் சிலர் இறை நம்பிக்கையாளர்களாகவும் வேறு சிலர் இறை நிராகரிப்பாளர்களாகவும் உள்ளனர் என்று ஜின்னுகள் தங்களைப் பற்றி கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி), முஜாஹித் (ரஹ்) ஆகிய இருவரும் கருத்துரைத்து இருக்கிறார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்


அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள். ( خُلِقَتِ الْمَلاَئِكَةُ مِنْ نُورٍ وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ ) வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். ஜின்னுகள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப்பட்டார். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5722


அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اَلْجِنُّ عَلَى ثَلَاثَةِ أَصْنَافٍ: صِنْفٌ لَهُمْ أَجْنِحَةٌ يَطِيرُونَ فِي الْهَوَاءِ، وَصِنْفٌ حَيَّاتٌ وَكِلَابٌ، وَصِنْفٌ يَحِلُّونَ وَيَظْعُنُونَ ) ஜின்னுகள் மூன்று வகைப்படுவர். 1) விண்ணில் பறக்கத்தக்க இறக்கை உடையவர்கள். 2) பாம்பு மற்றும் நாய் வகையினர். 3) பூமியில் சுற்றி வருவோர். அறிவிப்பாளர்:- அபூசஃலபா (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம், தப்ரானீ, இப்னு ஹிப்பான், தஃப்சீர் இப்னு கஸீர் அஸ்ஸபஉ வசனம்-12


அவர்களின் வசிப்பிடங்கள்


அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பொந்துகளில் சிறுநீர் கழிப்பதை தடுத்தார்கள். இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள கத்தாதா (ரஹ்) அவர்களிடம், "பொந்துக்குள் சிறுநீர் கழிப்பது ஏன் வெறுக்கத்தக்கது?" என்று (நண்பர்கள்) கேட்டனர். அதற்கு  கத்தாதா (ரஹ்) அவர்கள், ( إِنَّهَا مَسَاكِنُ الْجِنِّ ) "பொந்துகளில் ஜின்னுகளின் வசிப்பிடங்கள் என்று கூறப்படுகிறது" என விளக்கமளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-27, நஸாயீ-34, முஸ்னது அஹ்மத்


பொந்துகளில் ஜின்னுகள் மற்றும் பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன. எனவே, அவற்றினுள் நாம்  சிறுநீர் கழிக்கும்போது நம்மால் அவற்றுக்கும், அவற்றால் நமக்கும் தீங்கு ஏற்படலாம். அதனால் தான் பொந்துகளில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.


அவர்களின் உணவுகள்


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஜின்னுகளின் குழு ஒன்று அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே (மலஜலம் கழித்த பின்) கரிக்கட்டை, கெட்டிச் சாணம், எலும்பு ஆகியவற்றின் மூலம் தூய்மை செய்ய கூடாது என உங்கள் சமுதாயத்திற்கு தடை விதியுங்கள். ஏனென்றால், அவற்றை அல்லாஹ் எங்களுக்கு பயன்படக்கூடிய பொருளாக ஆக்கியுள்ளான்" என கூறினர். அவ்வாறே அண்ணலாரும் தடை செய்துவிட்டார்கள். நூல்:- அபூதாவூது-35


நீண்ட வயது


இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பத்தாவது ஜனாதிபதியும் நீதத்திற்கு பெயர் பெற்றவருமான உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (ஹிஜ்ரி 61-101,  கி.பி. 720-760) ஒருமுறை மக்காவுக்கு சென்றுகொண்டிருந்தபோது, பெரிய பாம்பு ஒன்று இறந்து கிடந்தது. அதனைப் பார்த்த உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் உடனே அதனை எடுத்து குழிதோண்டிப் புதைத்தார்கள்.


அப்போது அவருக்கு அருகில் இருந்து, "உமரே! எங்களில் உள்ள நல்லடியார் ஒருவரை நீர் அடக்கம் செய்துள்ளீர்கள். தாங்கள் அவருக்காக பிரார்த்தியுங்கள்" என்று ஒரு அசரீரி வந்தது.


உடனே உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அந்த அசரீரி வந்த திசையை நோக்கி, "நீ யார்?" என்று வினவினார்கள். அதற்கு, "நாங்கள் ஜின்னு இனத்தைச் சார்ந்தவர்கள். அருமை நாயகம் (ஸல்) அவர்கள் திருக்கரம் பற்றி (பைஅத் எனும்) உறுதிப் பிரமாணம் செய்தவர்களில் நாங்கள் தான் இந்த உலகத்திலேயே கடைசியானவர்கள். இப்போது நீங்கள் அடக்கம் செய்தீர்களே, அவர் என் தோழர். நாங்கள் இருவரும் அண்ணலாரிடம் உறுதிப் பிரமாணம் செய்த போதுஎன்னுடைய இந்த தோழரிடம் அண்ணலார், "நீ ஆள் இல்லாத பகுதியில் இறக்க நேரிடும். அப்போது உன்னை அன்றைய மக்களிலேயே மிகச் சிறந்தவர் ஒருவர் உன்னை அடக்கம் செய்வார்" என்று கூறினார்கள்" என அந்த ஜின்னு பதிலளித்தது.


இதை செவியுற்ற உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள், "நீ சொல்லும் செய்தி உண்மைதானா?" என்று மீண்டும் வினவினார்கள். அந்த ஜின்னு, "ஆம்! உண்மைதான்" என்றது. உடனே உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அழ ஆரம்பித்து விட்டார்கள். நூல்:- தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்


பாம்புகள் வடிவில்

  

அபூஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. கஅபாவுக்கு அருகே அப்துல்லாஹ் பின் சஃப்வான் (ரஹ்) அவர்களுடன் நானும் வேறு சிலரும் தங்கியிருந்தோம். அப்போது இராக் வாசல் வழியாக ஒரு பாம்பு எங்களை நோக்கி வந்தது. அது ஏழு முறை கஅபாவைச் சுற்றி தவாஃப் செய்தது. பின்பு ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டது.


அந்தப் பாம்பைப் பார்த்து அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள், 'ஜின்னே! நீ உனது உம்ராவை நிறைவேற்றி விட்டாய். உன்னால் எங்களின் குழந்தைகளை அஞ்சுகிறோம்" எனக் கூறினார். உடனே அந்தப் பாம்பு வந்த வழியே திரும்பிச் சென்று விட்டது. நூல்:- ஃபஸீஹுல் கிராம்


நம் பார்வையில் ஜின்னுகள் பெரும்பாலும் பாம்பு உருவத்தில் தென்படும். குறிப்பாக மனிதர்களைப் போன்றே முஸ்லிமான ஜின்னுகள் ஹஜ், உம்ரா போன்ற கிரியைகளை நிறைவேற்றும். புனிதமிகு மக்கா, மதீனா ஊர்களின் எல்லைக்குள் பாம்புகளை கண்டால் அதை உடனடியாக அடிக்க முயற்சிக்கக்கூடாது. அநேகமாக அது ஜின்னுகளாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இமாம் அப்துர் பர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஜின்னுகளில் பல தரப்பினர் இருப்பதாக நபிமொழி வல்லுனர்கள் கூறுகின்றனர். மனிதர்களுடன் சேர்ந்து வாழ்பவைகளை "ஆமிர்" என்றும், சிறு பிள்ளைகளிடம் சேட்டை செய்பவைகளை "அர்வாஹ்" ஆவிகள் என்றும், அவற்றில் கீழ்த்தரமான அசிங்கமானவைகளை "ஷைத்தான்" என்றும், அதிக ஆற்றல் கொண்டவைகளை "இஃப்ரீத்" என்றும் கூறப்படும். நூல்:- உகாமுல் மர்ஜான் பக்கம்-08


இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஜின்னுகள் மனித உருவிலும் மிருகங்கள் உருவிலும் தோன்ற ஆற்றல் பெற்றிருக்கின்றன. அதனால் அவை பாம்பு, தேள், ஒட்டகம், ஆடு, மாடு, கழுதை, குதிரை, குருவிகள் (பூனை, நாய்) உள்ளிட்ட உருவில் தோன்றுகின்றனர். நூல்:- மஜ்முஉல் ஃபதாவா 19/44


சேட்டை செய்வார்கள்


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்.  நேற்றிரவு முரட்டு ஜின்னு ஒன்று எனது தொழுகையைக் கெடுக்க சதி செய்தது. அல்லாஹ் அதன் மீது எனக்குச் சக்தியை வழங்கினான். அதன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். காலையில் நீங்கள் அனைவரும் வந்து அதை காணும்வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நான் நினைத்தேன்.


பிறகு என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள், 'இறைவா! என்னை மன்னித்து விடுவாயாக! மேலும், எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் ஆளுமையை எனக்கு நீ வழங்குவாயாக! (திருக்குர்ஆன்:- 38:35) என்று வேண்டியது என் நினைவுக்கு வந்தது. ஆகவே, (அந்த எண்ணத்தை கைவிட்டேன். பின்னர்) அல்லாஹ் அந்த ஜின்னை இழிந்த நிலையில் விரட்டியடித்துவிட்டான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3423, முஸ்லிம்-941


அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை மீது இருந்தவாறு,( يَا أَيُّهَا النَّاسُ، أَصْلِحُوا عَلَيْكُمْ مَثَاوِيكُمْ، وَأَخِيفُوا هَذِهِ الْجِنَّانَ قَبْلَ أَنْ تُخِيفَكُمْ، فَإِنَّهُ لَنْ يَبْدُوَ لَكُمْ مُسْلِمُوهَا، وَإِنَّا وَاللَّهِ مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ عَادَيْنَاهُنَّ‏ ) "மக்களே! உங்களுடைய இல்லங்களை நீங்கள் செம்மையாக வைத்துக் கொள்ளுங்கள். ஜின்னுகள் உங்களை பயமுறுத்தும் முன் அவைகளை நீங்கள் பயமுறுத்தி வையுங்கள். ஏனெனில் ஜின்னுகளில் இஸ்லாத்தை ஏற்றவைகள் (பயமுறுத்தும் தோற்றத்தில்) உங்களுக்கு முன்பாக தோன்றாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நாம் விரோதித்துக் கொண்டதிலிருந்து அவர்களுடன் உடன்படிக்கை செய்தது இல்லை" என்று கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-446


கடத்திச் செல்லும்


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் தமது மனைவியர்களிடம் (வியப்பூட்டும் நூதனமான) செய்தி ஒன்றை எடுத்து வைத்தார்கள். அப்போது அந்த மனைவியரில் ஒருவர், இந்தப் பேச்சு குராஃபாவின் (கதைப்) பேச்சு போன்று இருக்கிறதே என்று கூறினார். அதற்கு அண்ணலார், ( أَتَدْرُونَ مَا خُرَافَةُ‏؟ ) “குராஃபா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?”  என்று கேட்டு விட்டுக் கூறினார்கள்.


குராஃபா என்பவர் (யமன் தேசத்தில் வசித்து வந்த) உத்ரா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் ஆவார். அறியாமைக் காலத்தில் அவரை ஜின்கள் சிறைப்பிடித்துச் சென்றன. எனவே ஜின்னுகளுடன் அவர் நீண்ட காலம் தங்கியிருந்தார். பிறகு ஜின்னுகள் அவரை மனிதர்களிடம் திரும்பிக் கொண்டு வந்து விட்டனர்.


அப்போது அவர் ஜின்னுகளிடம் தாம் கண்ட வியப்பூட்டும் (அதிசய) செய்திகளை மக்களிடம் எடுத்துக் கூறினார். எனவே (அதன் பின்னர் வியப்பூட்டும் நூதனமான செய்திகளை செவியுற்றால்) "குராஃபாவின் பேச்சு" என்று மக்கள் கூறலானார்கள். நூல்:- முஸ்னது அஹ்மது, முஸ்னது அபூயஃலா, பஸ்ஸார், ஷமாயில் திர்மிதீ-252


நம்மை தாக்கிவிடக்கூடும்


ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமை அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது நான் அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் எனக்கு ஒரு அறையைக் காண்பித்து இந்த அறையில் புதிதாக திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் அகழ்ப் போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அண்ணலாரிடம் அனுமதி கேட்டார். அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


பிறகு அவர் தமது வீட்டுக்கு திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்று கொண்டிருந்தாள். உடனே அவர் அவள் மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையை கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, "எரிவதை நிறுத்துங்கள். (முதலில்) வீட்டுக்குள் நுழைந்து, நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்" என்று கூறினாள்.


அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப்பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது. உடனே அவர் அதன் அருகில் ஈட்டியை கொண்டு சென்று (அதன் மீது ஈட்டியை செலுத்தி) அதன் உடலுக்குள் ஈட்டியை செருகினார். பிறகு அறையிலிருந்து வெளியே வந்து வீட்டின் வளாகத்தில் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலில் இறந்தார்கள். அந்தப் பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்து விட்டனர்.)


இதைப்பற்றி அண்ணலாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அண்ணலார், ( اِسْتَغْفِرُوا لِصَاحِبِكُمْ ) "உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள்.


பிறகு  ( إِنَّ بِالْمَدِينَةِ جِنًّا قَدْ أَسْلَمُوا فَإِذَا رَأَيْتُمْ مِنْهُمْ شَيْئًا فَآذِنُوهُ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ بَدَا لَكُمْ بَعْدَ ذَلِكَ فَاقْتُلُوهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ) "மதீனாவில் ஜின்னுகள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால் அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதன் பிறகும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் தான்" என்றார்கள். நூல்:- முஸ்லிம்-4502


அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் வீட்டில் பாம்பைக் கண்டால் மூன்று முறை எச்சரிக்கை செய்யுங்கள். (உதாரணமாக நீ ஜின்னுவாக இருந்தால் இங்கிருந்து சென்று விடு! என்று மூன்று முறை கூற வேண்டும்) அதற்குப் பிறகும் அது உங்களிடம் வந்தால் அடித்துக் கொல்லுங்கள். ஏனெனில், நிச்சயமாக அது பாம்பாகத் தான் இருக்கும். நூல்:- ஹயாத்துல் ஹயவான்- 2/254


நமது வீடுகளில் திடீரென பாம்பைக் கண்டால், உடனே அதை அடிக்க முயற்சிக்கக்கூடாது. அநேகமாக அவை ஜின்னுகளாக இருக்கலாம். அதை நாம் தாக்கும்போது அது நம்மை தாக்கிவிடக்கூடும். எனவே, வீடுகளில் பாம்பைக் கண்டால், அது தானாக வெளியேறிச் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதன் பின்னரும் வீட்டிலேயே அது தங்கினால், அதை அடித்து கொன்றுவிட வேண்டும்.


ஏகத்துவவாதிகள்


(நபியே) இந்தக் குர்ஆனை கேட்பதற்காக ஜின்னுகளில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்ததை எடுத்து கூறுவீராக! (குர்ஆனை நபியவர்கள் ஓதிய) அவ்விடத்திற்கு அவர்கள் வந்த பொழுது, மௌனமாக இருங்கள் என்று ஒருவர் மற்றவரிடம் கூறினர். குர்ஆன் ஓதி முடிக்கப்பட்டபோது, அவர்கள் எச்சரிக்கை செய்யக்கூடியவர்களாய் தங்களது கூட்டத்தினரிடம் திரும்பிச் சென்றனர். திருக்குர்ஆன்:- 46:29


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது. ஒருநாள் அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( أَتَانِي دَاعِيَ الْجِنِّ فَأَتَيْتُهُمْ فَقَرَأْتُ عَلَيْهِمْ )  "ஜின்னுகளில் ஒருவர் என்னை அழைக்க வந்தார். அவருடன் சென்று ஜின்னுகளுக்கு குர்ஆனை ஓதிக் காட்டினேன்" என்று கூறினார்கள். பிறகு அண்ணலார் நடந்து சென்று ஜின்கள் விட்டுச்சென்ற அடையாளங்களையும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயங்களையும் எங்களுக்கு காட்டினார்கள்.


ஜின்னுகள் அண்ணலாரிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டனர். அதற்கு அண்ணலார், ( كُلُّ عَظْمٍ لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ يَقَعُ فِي أَيْدِيكُمْ أَوْفَرَ مَا كَانَ لَحْمًا وَكُلُّ بَعْرَةٍ أَوْ رَوْثَةٍ عَلَفٌ لِدَوَابِّكُمْ )  "அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்கு தீவணமாகும்" என்று கூறினார்கள். பின்னர் அண்ணலார், (தம் தோழர்களிடம்)  ( فَلاَ تَسْتَنْجُوا بِهِمَا فَإِنَّهُمَا زَادُ إِخْوَانِكُمْ مِنَ الْجِنِّ ) "எனவே, நீங்கள் (மலம் ஜலம் கழித்த பின்பு எலும்பு கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு செய்யாதீர்கள். அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்களான ஜின்னுகளின் உணவாகும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-767, திர்மிதீ-3171, முஸ்னத் அஹ்மத்


ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் வந்து 'அர்ரஹ்மான்' அத்தியாயத்தை தொடக்கத்தில் இருந்து கடைசி வரை அவர்களுக்கு முன்னிலையில் ஓதிக் காட்டினார்கள். அப்போது தோழர்கள் (எதுவும் கூறாமல்) அமைதியாக இருந்தனர்.  (ஓதி முடித்த பிறகு) அண்ணலார், ( لَقَدْ قَرَأْتُهَا عَلَى الْجِنِّ لَيْلَةَ الْجِنِّ فَكَانُوا أَحْسَنَ مَرْدُودًا مِنْكُمْ ) "நான் இந்த அத்தியாயத்தை ஜின்னுகள் குழுமி இருந்த இரவில் அவர்களிடம் ஓதினேன். அப்போது அந்த ஜின்னுகள் உங்களை விட அழகிய முறையில் பதிலளித்தார்கள்.


( كُنْتُ كُلَّمَا أَتَيْتُ عَلَى قَوْلِهِ: {فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ} قَالُوا لاَ بِشَيْءٍ مِنْ نِعَمِكَ رَبَّنَا نُكَذِّبُ فَلَكَ الْحَمْدُ ) ‘(மனித, ஜின்னுகளாகிய) நீங்கள் இருவரும் உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்? என்ற இறை வசனத்தை  நான் ஓதிய போதெல்லாம் அந்த ஜின்னுகள், ‘எங்கள் இறைவனே! உனது அருட்கொடைகளில் எதையும் நாங்கள் பொய்ப்படுத்துபவர்களாக இல்லை. உனக்கே அனைத்துப் புகழும்!’ என்று பதிலளித்தார்கள். நூல்:- திர்மிதீ-3203


அவர்கள் சொல்லும் செய்தி

  

முஹம்மத் பின் கஅப் அல்குரழீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒரு நாள் ஜனாதிபதி உமர் ரலி அவர்கள் அமர்ந்திருந்த போது ஒருவர் அவர்களை கடந்து சென்றார். அப்போது, ஜனாதிபதி அவர்களே! கடந்து செல்கிற இவரை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இவர் யார்? என்று கேட்டார்கள். மக்கள், "இவர்தான் 'ஸவாத் பின் காரிப்' ஆவார். இவரிடம் தாம் ஜின்னு வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோன்றப் போகிறார்கள் என்று சொல்லிச் சென்றது" என்றனர்.


உடனே உமர் (ரலி) அவர்கள் அவரை வரவழைத்து அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர், ஜனாதிபதி அவர்களே! ஒரு நாள் இரவு நான் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே (அரை உறக்கத்தில்) இருந்து கொண்டிருந்த போது என்னிடம் எனது ஜின் வந்து, என்னை தனது காலால் தட்டி,  ( قُمْ يَا سَوَادُ بْنَ قَارِبٍ وَاسْمَعْ مَقَالَتِي، وَاعْقِلْ إِنْ كُنْتَ تَعْقِلُ إِنَّهُ قَدْ بُعِثَ رَسُولٌ مِنْ لُؤَيِّ بْنِ غَالِبٍ، يَدْعُو إِلَى اللَّهِ وَإِلَى عِبَادَتِهِ ) “ஸவாத் பின் காரிபே! எழுந்திரு; நான் சொல்வதைக் கேள்: நீ அறிவாளியாக இருந்தால் அறிவோடு செயல்படு; 'லுஅய்யி பின் ஃகாலிப்' சந்ததியிலிருந்து இறைத்தூதர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார். அவர் அல்லாஹ்வை நோக்கி அவனுடைய வழிபாட்டை நோக்கியும் அழைப்பார்" என்று சொன்னது. பிறகு அது அர்த்தமுள்ள ஒரு கவிதையை பாடியது. நான், "என்னை உறங்க விடு" என்று கூறினேன். பிறகு நான் ஒரு சிற்றுறக்கம் கொண்டேன். இதே போன்று இரண்டாவது நாளும், மூன்றாவது நாளும் என்னிடத்தில் வந்து கூறியது.


பிறகு நான் எழுந்து எனது ஒட்டகத்தின் மீதேறி மக்காவை நோக்கி பயணம் செய்தேன். அண்ணலாரின் திருக்கரம் பிடித்து முஸ்லிம் ஆனேன். என்று கூறினார். உடனே உமர் (ரலி) அவர்கள் அவரை நோக்கிப் பாய்ந்து கட்டிப்பிடித்து, ( قَدْ كُنْتُ أَشْتَهِي أَنْ أَسْمَعَ هَذَا الْحَدِيثَ مِنْكَ فَهَلْ يَأْتِيكَ رَئِيُّكَ الْيَوْمَ؟ ) "நான் இந்த செய்தியை உன்னிடம் இருந்து செவியுற வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்தேன் என்று கூறிவிட்டு, இப்போது உன்னுடைய ஜின்னு உம்மிடம் வருகிறதா?" என்று கேட்டார்கள். அவர், ( أَمَّا مُنْذُ قَرَأْتُ الْقُرْآنَ فَلَا، وَنِعْمَ الْعِوَضُ كِتَابُ اللَّهِ مِنَ الْجِنِّ ) "குர்ஆன் ஓதியதிலிருந்து ஜின் வருவதில்லை. ஜின்னுக்குப் பகரமாக அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) சிறந்த பகரமாக அமைந்து விட்டது" என்று கூறினார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா


நேரில் காண இயலுமா?


அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது தன் தோழர்களிடம்( لَيْلَةُ الْجِنِّ مِنْكُمْ أَحَدٌ؟"உங்களில் யாரேனும் இன்றைய இரவில் ஜின்னுகளை நேரில் பார்க்க விரும்பினால் வரலாம்" என்றார்கள். தோழர்களில் என்னைத் தவிர வேறு யாரும் அதை நேரில் பார்க்க வரவில்லை.


நாங்கள் இருவரும் (அதாவது நபியவர்களும் நானும்) நடந்து சென்றோம். மக்காவின் மேற்பகுதிக்கு நாங்கள் இருவரும் வந்தபோது, நபியவர்கள் தமது காலால் கோடு கிழித்தார்கள். பிறகு அங்கு உட்காரும்படி என்னைப் பணித்தார்கள். பிறகு நபியவர்கள் சிறிது தூரம் நடந்து சென்றதும் நின்றார்கள். குர்ஆனை  ஓதத் தொடங்கினார்கள். கருமை நிறத்திலான நிறைய உருவங்கள் நபியவர்களையும் மூடி மறைத்தன. எனக்கும் நபியவர்களுக்கும் மத்தியில் அவ்வுருவங்கள் குறுக்கிட்டன. இறுதியில் நபியவர்களது குரலை என்னால் கேட்க முடியவில்லை. பிறகு உருவங்கள் மேகத்துண்டுகளைப் போல் சிதறல்களாகிக் கலைந்து போக தொடங்கி மறைந்துவிட்டன. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்அஹ்காஃப் வசனம்-29


ஒட்டுக் கேட்டனர்


(ஜின்னுகள் கூறினர்:) நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தீண்டிப் பார்த்தோம். (வானவர்கள் எனும்) பலமான காவலர்களாலும் தீப்பந்தங்களாலும் வானம் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டோம்.


மேலும் நிச்சயமாக நாங்கள் (இதற்கு முன்) அதிலிருந்து (வானவர்கள் பேசுவதை ஒட்டுக்) கேட்பதற்காகப் பல இடங்களில் அமர்ந்து கொண்டிருந்தோம். பிறகு இப்போது யாரேனும் ஒருவன் (வானத்தின் செய்தியை) ஒட்டுக்கேட்க நாடினால் அவனுக்கென ஓர் தீப்பந்தம் (அவனை அழிப்பதற்காகக்) காத்திருப்பதைக் காண்பான்.


(இதன்மூலம்) பூமியில் இருப்பவர்களுக்குத் தீமை நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நேர்வழிகாட்ட நாடியுள்ளனா? என்பதை நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம். திருக்குர்ஆன்:- 72: 8,9,10


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜின்னு இனத்தார் ஒட்டு கேட்பதற்கென (வானில்) அமரும் இடங்கள் இருந்தன. இறைச்செய்தி அருளப்படும் போது அஸ்ஸஃபா மலை மேல் இரும்பு போடப்பட்ட சப்தத்தைப் போன்று சப்தம் ஒன்றை வானவர்கள் வானில் செவியுறுவர். அவ்வாறு வானவர்கள் செவியுறும் போது சிரம் பணிந்தவர்களாக (சஜ்தாவில்) வீழ்வர். இறைச்செய்தி அருளப்படும்வரை தம் தலையை உயர்த்த மாட்டர். இறைச்செய்தி அருளைப் பெற்றுவிட்டால் (தலையை உயர்த்தி) அவர்களில் சிலர் சிலரிடம், "உங்கள் இறைவன் என்ன கூறினான்" என்று வினவுவர். அருளப்பெற்றது வான் சம்பந்தப்பட்ட செய்தியாக இருக்குமானால், "சத்தியத்தையே கூறினான்; அவன் உயர்வானவன்; பெரியவன்" என்று அவர்கள் கூறுவர்.


அருளப்பெற்றது பூமி சம்பந்தப்பட்ட மறைவான செய்தி, அல்லது மரணச்செய்தி அல்லது உலகத்துடன் தொடர்புள்ள அம்சம் ஆகியவையாக இருக்குமானால் அது குறித்து, 'இவ்வாறு இவ்வாறு ஏற்படும்' என கூறினான் என்று பேசிக் கொள்வர். அப்போது இதை ஷைத்தான்கள் ஒட்டுக்கேட்டு தம் (சோதிடர்களான) நண்பர்களிடம் (சொல்வதற்காக) வருகைத்தருவர்.


ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட  பிறகு (ஒட்டு கேட்க வரும்) ஷைத்தான்கள், ஜின்கள் எரிக் கற்களால் (விரட்டப்பட்டு) இழிநிலைக்கு ஆட்படுத்தப்பட்டனர். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா


அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜின்னுகள் வேத அறிவிப்பை ஒட்டுக் கேட்பதற்காக வான் நோக்கி உயர செய்பவர்களாக இருந்தனர். அங்கு அவர்கள் ஒரு வார்த்தையைச் செவியுற்றால், அதனுடன் ஒன்பது வார்த்தையை சேர்த்து கூடுதல் படுத்தி விடுவர். (அதில்) ஒரு வார்த்தை உண்மையாக இருக்கும். (அதில்) அவர்கள் கூடுதல் படுத்திய ஒன்பது வார்த்தைகள் அசத்தியமாக இருக்கும். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். அண்ணலார், ( لَيْسُوا بِشَيْءٍ )  "அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்" என்று கூறினார்கள்.


மக்கள், ( يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّيْءِ يَكُونُ حَقًّا ) "நாயகமே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள். அது உண்மையாகி விடுகிறதே!" என்றனர். அண்ணலார், ( تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ، فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلِيِّهِ قَرَّ الدَّجَاجَةِ، فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِائَةِ كَذْبَةٍ ) "அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின்னு எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகிறான்" என்று பதிலளித்தார்கள். நூல்:-  புகாரீ-6213, முஸ்லிம்-4486


வசீகரம் செய்ய இயலுமா?


அவருடைய (நபி சுலைமானுடைய) இறைவனின் ஆணையின்பேரில் அவருக்கு முன்னால் வேலை செய்யும் ஜின்னுகள் சிலரும் இருந்தனர். அவர்களில் யார் நமது ஆணையிலிருந்து பிறழ்கிறாரோ அவரை நரக வேதனையைச் சுவைக்கச் செய்வோம். அவர் விரும்புகிற வழிபாட்டுத்தலங்கள், சிற்பங்கள், நீர் தொட்டிகள் போன்ற கொப்பரைகள், உறுதி வாய்ந்த பெரிய (சமையல்) பாத்திரங்கள் ஆகியவற்றை அவருக்காக அவர்கள் செய்து கொடுப்பார்கள். திருக்குர்ஆன்:- 34:12,13


அல்லாஹுத்தஆலா நபி சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்னுகளை வசப்படுத்தித் தந்தான். அன்னார், அவர்களைக்கொண்டு பல பிரமாண்டமான வேலைகளை வாங்கி கொண்டார்கள் என்று திருக்குர்ஆன் இயம்புகிறது.


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மதீனா நகரில் ஃபாத்திமா என்ற பெண்ணிடம் ஒரு ஜின்னு நேசமாக இருந்தது. ஒருநாள் அது, வெள்ளைப் பறவை வடிவத்தில் வந்து, அப்பெண்ணுக்குரிய சுவற்றில் அமர்ந்தது. அப்போது அப்பெண் அதனிடம், ( لِمَ لَا تَنْزِلُ إِلَيْنَا فَتُحَدِّثَنَا وَنُحَدِّثَكَ، وَتُخْبِرَنَا وَنُخْبِرَكَ؟ ) "(இப்போதெல்லாம் எங்களிடம் நீ அடிக்கடி வருவதில்லையே!) ஏன்? எங்களிடம் வந்து நீ எங்களுக்கு (ஏதாவது) தகவல் சொல்லுவதும், நாங்கள் உனக்கு (ஏதாவது) தகவல் சொல்வதும் இல்லாமல் போய்விட்டது" என்று கேட்டாள். அதற்கு அந்த ஜின்னு, ( فَقَالَ لَهَا: إِنَّهُ قَدْ بُعِثَ نَبِيٌّ بِمَكَّةَ حَرَّمَ الزِّنَا، وَمَنَعَ مِنَّا الْقَرَارَ )  "மக்காவில் இறைத்தூதர் ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார். அவர் விபச்சாரத்தை தடை செய்துவிட்டார். அவர் நமக்கு (முறையில்லாமல்) தங்குவதையும் தடுத்துவிட்டார்" என்று கூறியது. நூல்:- முஸ்னத் அஹ்மத், அல்பிதாயா வந்நிஹாயா


ஒரு மனிதன் ஒரு ஜின்னை மந்திர தந்திரம் மூலம் அதை அடிமைப்படுத்தி, தான் நினைத்த காரியங்களை அதன்மூலம் நிறைவேற்றிக் கொள்ள இயலாது. காரணம், மனிதனைவிட ஜின் பலமானது. எனவே, அதை அடிமைப்படுத்த இயலாது. ஜின்னு சொல்லுக்கு மனிதன் அடிபணிந்தால் அவனுக்கு சில காரியங்களை அது செய்து தரக்கூடும்.


சில தீயோர் கெட்ட ஜின்களுக்கு கோழி, ஆடு போன்றவற்றை அறுத்து பலியிட்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து, அதன் ஆசையை நிறைவேற்றி வைத்து, அதனை குறிசொல்லுதல், ஜோதிடம், செய்வினை, சூனியம் செய்தல் போன்ற தீய காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.


சில மார்க்க அறிஞர்களிடம் முஸ்லிமான நல்ல ஜின்கள் மார்க்க ஞானங்களை கற்றுக்கொள்ள வந்து போனது உண்டு.


மனித உடலில் புகும்


யார் வட்டியை உண்பார்களோ அவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியங்களாக மறுமையில் எழுப்பப்படுவார்கள். திருக்குர்ஆன்:- 2:275


ஜின்னு இனத்தைச் சேர்ந்த ஷைத்தான் தாக்கி பைத்தியமாவார்கள் என்றால் ஜின் தாக்கும், அதனால் மனநிலையும் பாதிக்கப்படும் என்று இமாம் குர்துபீ, இமாம் இப்னு கஸீர் ஆகியோர் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் விளக்கம் எழுதுகிறார்கள்.


பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا تَثَاوَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ عَلَى فِيهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ ) உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.  அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5719


இமாம் அப்துல்லாஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். என் தந்தை (இமாம் அஹ்மத்) அவர்களிடம், "தந்தையே! ஜின்னு மனித உடலில் புகாது என்று சிலர் கூறுகிறார்களே?" என்று வினவினேன். அதற்கு அவர்கள், "மகனே! அவர்கள் பொய்யுரைக்கிறார்கள். ஜின்னு மனித உடலில் புகுந்து பேசும்" என்று கூறினார்கள்.


இமாம் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் "யார் ஜின்னு மனித உடலில் புகாது என்று கூறுகிறார்களோ அவர்கள் இஸ்லாத்தின் மீது பொய் சொல்லி விட்டார்கள்" என்கிறார்கள்.


கெட்ட ஜின்னு மனித உடலுக்குள் புகுந்துக்கொள்வதைத்தான் "பேய் பிடித்துவிட்டது. பேய் ஆடுகிறது" என்கின்றனர்.


பாதுகாப்புப் பெற


(நபியே) நீர் கூறுவீராக: விடியலின் இறைவனிடம்அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன். திருக்குர்ஆன்:- 113:1,2


நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். குழந்தை பிறந்ததும் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் கூறவேண்டும். அப்படிக் கூறினால் "உம்முஸ்ஸிஃப்யான்" எனும் ஜின்னு மற்றும் ஷைத்தான்களின் தீங்குகள் அக்குழந்தைகளை அணுகாது. நூல்:- பைஹகீ


உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். நான் ஒரு பையில் பேரீத்தம் பழங்கள் போட்டு வைத்திருந்தேன். அதில் உள்ள பழங்கள் தினமும் குறைந்து கொண்டிருந்தன. ஒரு நாள் நான் இரவு கண்விழித்து கவனித்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறுவனின் தோற்றத்தில் ஒரு மிருகம் வந்தது. நான் அதற்கு சலாம் கூறினேன். அது என் ஸலாத்திற்கு பதில் கூறியது.


நான் அதை நோக்கி! நீ மனிதனா? ஜின்னா? என்று கேட்டேன். அதற்கு அது, நான் 'ஜின்னு' என்று கூறியது. உன்னுடைய கைகளை கையை கொடு என்று நான் கேட்க, அது தன் கையை கொடுத்தது. நான் அதன் கையைப் பிடித்துப் பார்த்தேன். அது நாயின் காலை போன்றிருந்தது. நாய்க்கு இருப்பதைப் போன்ற முடியும் இருந்தது. எல்லா ஜின்னுகளும் இதே போன்று தான் படைக்கப்பட்டுள்ளதா? என்று நான் கேட்டேன். அதற்கு அது, "நான் எல்லா ஜின்னுகளை விட சக்தி வாய்ந்தவன்" என்று கூறியது.


நீ என்னுடைய பொருளை திருடுவதற்கு எப்படி துணிவு கொண்டாய்? என்று நான் கேட்டேன். நீங்கள் தர்மம் செய்வதை விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அந்த தர்மத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் வந்தேன் என்று கூறியது.


உங்களின் தீங்கிலிருந்து நாங்கள் எதன் மூலம் பாதுகாப்பு பெறுவது? என்று நான் கேட்டேன். அதற்கு அது, ஆயத்துல் குர்ஸீ (அதாவது அல்பகரா அத்தியாயத்தின் 255 வது வசனம்) என்றது. மறுநாள் காலை நான் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று இரவில் நடந்தவற்றை கூறினேன். அதற்கு அண்ணலார், ( صَدَقَ الْخَبِيثُ"தீயவன் (இந்த விஷயத்தில் முற்றிலும்) உண்மையாக கூறியுள்ளான்" என்று கூறினார்கள். நூல்:- ஹாகிம், தப்ரானீ, தஃப்சீர் இப்னுகஸீர் அத்தியாயம் அல்பகரா  வசனம்-255, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-3, பக்கம்-409


தீய ஜின்னுகளின் கெடுதியிலிருந்து பாதுகாப்புப் பெற அல்ஃபாத்திஹா, அல்பகரா, அல்இக்லாஸ், அல்ஃபலக், அந்நாஸ் போன்ற சில அத்தியாயங்கள், ஆயத்துல் குர்சீ போன்ற சில குறிப்பிட்ட வசனங்கள், மேலும் நபிமொழிகளில் வரும் சில துஆக்கள் ஆகியவற்றை ஓதிக் கொள்ளலாம். இவற்றை ஓதி தண்ணீரில் ஊதி அந்தத் தண்ணீரைப் பருகலாம். இவைகளை எழுதி தாவீஸாகக் கட்டிக்கொள்ளலாம். இவை நல்ல பலன் தரும்.


நம் கண்களுக்கு ஜின்னுகள் தெரியாவிட்டாலும் அவர்கள் இருப்பது உண்மை என குர்ஆனும், நபிமொழிகளும் எடுத்துரைகிறது. எனவே, அவர்களின் இருப்பை ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கை ஆகும். ஒருவன், “ஜின்னுகள்” என்று ஒரு இனம் இல்லை என்றால் கூறிவிட்டால் அவன் (காஃபிராக) இறைமறுப்பாளனாக ஆகிவிடுவான்.


ஜின்னுகள் இருப்பதும் உண்மை. அவர்களின் தீயோர்களால் கெடுதிகள் ஏற்படும் என்பதும் உண்மை. எனவே, நாம் அவ்வபோது தீய ஜின்னுகளின் கெடுதிகளை விட்டும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். நம்மையும் நம்முடைய குடும்பத்தினரையும் அல்லாஹுத்தஆலா ஜின்னுகள் போன்ற அவனுடைய பிற படைப்புகளின் தீங்கிலிருந்து பாதுகாப்பானாக! ஆமீன்!


மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 



No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...