மறைத்துக் கொள்ளுங்கள்
يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ
الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ
يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ
நபியே உம்முடைய துணைவியர், உம்முடைய புதல்வியர், இறைநம்பிக்கையாளர்களின் பெண்கள் ஆகியோரிடம் கூறுவீராக:
அவர்கள் தங்களின் துப்பட்டிகளைத் தம்மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும். அதுதான் (அவர்கள்
குடும்பப் பெண்கள் என) அறியப்படுவதற்கும் தொல்லை தரப்படாமல் இருப்பதற்கும் ஏற்றதாகும். திருக்குர்ஆன்:- 33:59
2013 –ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 1 –ஆம் தேதி உலக ஹிஜாப் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பங்களாதேஷை பூர்வீகமாகக் கொண்டு தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும்
நஸ்மா கான் என்ற இளம் பெண் ஹிஜாப் அணிவதை
வழமையாக்கிக் கொண்டதால் அப்பெண்மணி சந்தித்த அவமானங்கள் ஏராளம்! தாராளம்!
எனவே, அப்பெண்மணி ஹிஜாப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிப்ரவரி முதல்
நாளை தேர்ந்தெடுத்து, 2013 ஆண்டு முதல் ஹிஜாபின் அவசியத்தையும் அதன் பலன்களையும்
விவரித்து பிரச்சாரம் செய்து வருகிறாள். அதன் பலனாக தற்போது சுமார் 116 நாடுகள் இதனை கடைபிடித்து வருகின்றன.
( حجاب
) "ஹிஜாப்” என்ற அரபி சொல்லுக்கு மறைத்தல், திரையிடுதல் என்று பொருளாகும். அதாவது ஒரு
பெண் அந்நிய ஆண்களுக்கு தெரியாத வகையில் மார்க்க முறைப்படி அணியும் ஆடையே ஹிஜாப் ஆகும். “பர்தா” என்ற உருது சொல்லுக்கு இது போன்றதொரு பொருளாகும்.
அரபி மொழியில் ( خمار ) "ஹிமார்"
என்றால் தலையையும் முகத்தையும் மூடுவதற்கு பயன்படுத்தும் ஒரு ஆடைக்குச் சொல்லப்படும்.
அரபிமொழியில் ( نقاب ) ‘நிக்காப்” என்றால்
முகத்தை மட்டும் மூடி அணியும் துணிக்கு சொல்லப்படும்.
பாலியல் தவறுகளுக்குப் பெரும்பாலும் காரணமாக அமைவது, பெண்கள் அணியும் அரைகுறை ஆடையே. கொண்டவனுக்கு மட்டுமே தன் உடல் அழகையும் உடை அலங்காரத்தில் காட்டவேண்டிய ஒரு பெண், ஊருக்கே விளம்பரப்படுத்துவதை போல அரைகுறை ஆடைகளால் அலங்கரித்துக் கொண்டு வெளியே சுற்றும் போது, ஒழுக்கச் சீரழிவு குற்றங்கள் நிகழ்கின்றன.
இதைத் தடுப்பதற்குப் பெண்கள் முழு ஆடை அணிந்து, அந்நியர்களின் பார்வையிலிருந்து அழகையும் அலங்காரத்தையும்
மறைத்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் இயம்புகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( وَأَقْرَب مَا تَكُون بِرَوْحَةِ رَبّهَا وَهِيَ فِي قَعْر بَيْتهَ الْمَرْأَةُ عَوْرَةٌ فَإِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ) “ஒரு பெண் மறைக்கப்பட வேண்டியவள் ஆவாள். அவள் வெளியேறிவிட்டால், ஷைத்தான் அவளை ஏறெடுத்துப் பார்க்க வைக்கிறான். ஒரு பெண் தனது இல்லத்தின் உள் அறைக்குள் இருக்கும் போது தான், தன் இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறாள்”. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1093, தப்ரானீ, இப்னு ஹிப்பான், ஸஹீஹ் இப்னு குஸைமா, அல்பஸ்ஸார், இப்னு அபீஷைபா
ஒருபெண் தனது இருப்பிடத்திலிருந்து வெளியேறி பலருக்கு முன்னால் வந்துவிட்டாலே,
பார்ப்போருக்கு அவளை ஷைத்தான்
அலங்கரித்துக் காட்டுவான். பார்ப்போரின் உள்ளத்தில் சபலத்தையும் கெட்ட எண்ணத்தையும்
உருவாக்குவான். இதையடுத்து தவறுகள் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும். அல்லது மனித ஷைத்தான்கள்
அவளிடம் வரம்பு மீறி நடக்க முனைவார்கள் என்றும் விளக்கம் கூறலாம்.
அறியாமைக் கால பழக்கம்
(நபியின் துணைவியரே) உங்கள் இல்லங்களிலேயே நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் பெண்கள் (தங்களை அலங்கரித்துக்கொண்டு வெளியே சுற்றி) திரிந்தது போன்றுப் திரியாதீர்கள். திருக்குர்ஆன்:- 33:33
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் கூறுகிறார்கள். (இந்த வசனம்) நபியவர்களின் துணைவியருக்கு மட்டுமே பொருந்தும்; மற்றவர்களுக்கு பொருந்தாது என்பதல்ல. (உலக பெண்கள் அனைவருக்கும் பொருந்தும்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உமைய்யா பிந்த் ருகைய்யா என்கிற பெண் இஸ்லாத்தை
தழுவுவதற்காக வந்தார். அப்போது அண்ணலார் அப்பெண்ணிடம்“நீர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்கக்கூடாது.
திருடக்கூடாது, விபச்சாரம் செய்யக்கூடாது,
உமது பெண் குழந்தைகளைக் கொல்லக்கூடாது,
அவதூறு கூறக்கூடாது,
ஒப்பாரி வைத்து அழக்கூடாது,
நீர் அறியாமைக் காலத்தில்
இருந்தது போல ”தபர்ருஜ்”
எனும் உடல் அழகையும்,
அலங்காரத்தையும் காட்டுவது போன்று பகட்டு ஆடை அணியக் கூடாது.” என்று கூறி உறுதிமொழி வாங்கினார்கள்.
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தமது திருக்குர்ஆன் விரிவுரையில் கூறுகிறார்கள். அறியாமைக்கால பெண்கள் அந்நிய ஆடவர்களுக்கு முன்னே தனது நெஞ்சை காட்டியவாறு நடந்து செல்வார்கள். அவர்களது நெஞ்சுப்பகுதியை எதுவும் மறைத்திருக்காது. சில நேரங்களில் கழுத்தையும், தொங்கும் கூந்தலையும், காதுகளின் கம்மல்களையும் கூட வெளியில் காட்டியவாறு செல்வார்கள்.
பெண்ணியவாதிகள் மலிந்து காணப்படும் மேற்கத்திய நாடுகளில் தான் இன்றைய காலத்தில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதையும் மேலும் கற்பழிப்பு கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறைந்திருப்பதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்று உலகிலேயே பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் நாடாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விளங்குகிறது. இங்கெல்லாம் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு காரணம் ஆண்களை கிளர்ச்சியூட்டும் ஆடைகளை பெண்கள் அணிவதாலேயாகும் என்று ஓர் ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது.
பெண்ணின் முகம் மட்டுமல்ல; அவளது குரல், நடை, உடை, பாவனை... என ஒவ்வொன்றும் அழகானது தான். ஆணை தவறான எண்ணத்திற்கு இட்டுச் செல்லக் கூடியது. உலக நடப்புகள் நாள்தோறும் இதை மெய்ப்பித்து வருகின்றன. பெண்ணின் ஆபரணங்கள், அழகு, சுகம் ஆகியவற்றை அடைவதற்காகக் கடத்திச் செல்வதும் கொலை செய்வதும் சர்வசாதாரணமாகி விட்டது. எனவே தான் பெண்கள் அவசியத் தேவைக்காக வெளியே செல்லும் போது கூட தன்னை முழுமையாக மறைத்துக் கொள்ளும் ஆடை அணிந்து செல்வதை இஸ்லாம் அவசியம் என்கிறது.
நபித்தோழிகள்
கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி)அவர்கள். கூறியதாவது. உம்மு ஹல்லாத் என்ற பெண் (நிகாப் மூலமாக) முகத்தை மறைத்த நிலையில் அறப்போரில் வீரமரணமடைந்த தன் மகனைப்பற்றி கேட்பதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அப்பெண்ணிடம் ஒரு நபித்தோழர் "நீயோ (நிகாப் மூலமாக) முகத்தை மறைத்த நிலையில் உம் மகனைப்பற்றி கேட்க வந்திருக்கிறாயே" என்று வினவினார். அதற்கு அப்பெண் ( إِنْ أُرْزَإِ ابْنِي فَلَنْ أُرْزَأَ حَيَائِي ) "நான் என் மகனை இழந்தாலும் என் மானத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன்." என்று பதிலளித்தார். நூல்:- அபூதாவூத்-2488
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. அந்நூர் அத்தியாயத்தில் "அவர்கள் தம் முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்" என்ற இந்த (31வது) வசனம் அருளப்பெற்றது. உடனே அன்சாரித் தோழர்கள் ஒவ்வொருவரும் இந்த வசனத்தை தன் மனைவி, மகள், சகோதரி மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஓதிக் காட்டினார்கள்.
உடனே அப்பெண்கள் அல்லாஹ் அருளிய இறைவேதத்தை உண்மை படுத்துவதற்காகவும் நம்புவதற்காகவும் வேலைப்பாடு செய்யப்பட்ட கீழாடையில் ஒரு பகுதியைக் கிழித்து அதன் மூலம் தங்கள் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டனர்; மறுநாள் காலை (ஃபஜ்ர் தொழுகையில்) தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு அருமை நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தனர்.
( كَأَنَّ عَلَى رُءُوسهنَّ الْغِرْبَان ) “அவர்களின் தலைகள்மீது (கருநிற முக்காடுகள் இருந்ததால்) காகங்கள் இருப்பதைப் போன்று இருந்தது”. நூல்:- அபூதாவூத்-4101, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (எனதருமை கணவர்) அருமை நாயகம் (ஸல்) அவர்களையும், என் தந்தை அபூபக்ர் (ரலி) அவர்களையும் நல்லடக்கம் செய்யப்பட்ட (எனது) வீட்டுக்குள்ளே நான் நுழையும்போது உடலைப் போர்த்திக்கொள்ளும் ஹிஜாப் இல்லாமல் நுழையும் பழக்கமுள்ளவளாக இருந்தேன். அதே இடத்தில் பின்னர் உமர் (ரலி) அவர்களும் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அவர்களுக்கு வெட்கப்பட்டவளாக நான் ஹிஜாப் அணியாமல் அங்கு நுழைந்ததில்லை. நூல்:- முஸ்னது அஹ்மத், மிஷ்காத் பக்கம்-154
முகமே அழகு
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் தேவையை முன்னிட்டு தம் இல்லத்தில் இருந்து வெளியே செல்லும் போது, துப்பட்டிகளால் தலைக்கு மேலிருந்து முகத்தை மூடிக் கொள்ளுமாறு கண்கள் மட்டும் திறந்து கொள்ளுமாறும் அல்லாஹ் கட்டளையிட்டான். நூல்:- தஃப்சீர் தபரீ, இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் அத்தியாயம் அல்அஹ்ஸாப் வசனம்-59
முஹம்மது பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் உபைதா அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்களிடம்
(அல்அஹ்ஸாப் 59-வது) வசனம் குறித்து விளக்கம் கேட்டேன். அதற்கு அன்னார் (தனது மேலாடையை
எடுத்து) தமது முகத்தையும் தலையையும் மறைத்தார்கள். கண் மட்டும் வெளியே தெரியுமாறு
வைத்துக் கொண்டார்கள். (இதுவே இவ்வசனத்தின் செயல்விளக்கம் என்று காட்டினார்கள்) நூல்:-
தஃப்சீர் தபரீ, இப்னு அபீஹாத்திம்,
இப்னு கஸீர்
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது. நாங்கள் ஆண்களைவிட்டும் எங்களது முகங்களை மறைப்பவர்களாக இருந்தோம். நூல்:- இப்னு குஸைமா-2690, ஹாகிம்-1668
மார்க்க அறிஞர்களில் பெரும்பாலோர் முகத்தை மூடவேண்டும் என்கிறனர். சில அறிஞர்கள் மட்டும் முகத்தை மூடத் தேவையில்லை என்கின்றனர். என்றாலும் முகத்தை மூடுவது கட்டாய விதியல்ல என்று வாதிப்பவர்களும்கூட இன்றைய சமுதாயத்தில் நிலவி வரும் ஒழுக்கக்கேட்டை கவனத்தில் கொண்டு சில சமுதாய தீமைகளை தவிர்க்க முகத்தை மூடுவதே சிறந்தது என்று கருதுகின்றனர்.
ஒரு பெண்ணின் அழகை அவளது முகத்தை பார்த்து கணித்து விடலாம். எனவே பார்ப்பவர்களை கவரும் அவளது முகத்தையும் மறைத்து கொள்வது தான் முழுமையான ஹிஜாபாகும்.
எனவேதான், திருமணம் முடிக்க நாடிய ஒரு ஆணுக்கு பெண்ணின் முகத்தை பார்க்க இஸ்லாம்
அனுமதிக்கிறது. அவற்றை பார்க்குமாறு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிலருக்கு கூறியிருக்கிறார்கள்.
ஏனெனில் பெண்ணின் முழு உடலின் அழகை எடுத்துக் காட்டுவதே அவளின் முகம்தான். ஆண் அல்லது
பெண்ணின் தோற்றத்தை எடுத்துக் காட்டுவது முகம் தான். எல்லோருக்கும் மத்தியிலும் வித்தியாசத்தை
காட்டுவதும் முகம்தான். இவள் தாய், இவள் மகள்,
இவள் மனைவி என்றெல்லாம் பிரித்துக்
காட்டுவதும் அந்த முகம் தான்.
ஆதலால் தான் ரேசன் அட்டை, ஆதார் அட்டை,
வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளில் இவை போன்ற எத்தனையோ
காரியங்களில் முகத்தின் புகைப்படத்தையே கேட்கப்படுகிறது. கை கால்களின் படத்தையோ உடலின்
பிற உறுப்புகளின் படத்தையோ அல்ல.
ஒரு வாலிபன் ஒரு பெண்ணின் பின் தோற்றத்தை கண்டு விட்டால் அல்லது முகம் அல்லாத வேறு
ஏதேனும் உறுப்பை கண்டு விட்டால் அவளின் முகத்தை காண வேண்டும் என்று தான் ஆசைப்படுவான்.
பெரும்பாலும் ஆண்கள் காதல் வசப்படுவது பெண்களின் முகத்தை பார்த்த பிறகு தான் என்பது
அனைவரும் அறிந்த உண்மை. எனவேதான் பெண் அவள் முகத்தையும் மறைக்க வேண்டும் என்கின்றனர்
பெரும்பாலான அறிஞர்கள்.
அவர்கள் தம் அலங்காரத்தில் தாமாக வெளியே தெரிகின்றவைத் தவிர மற்றதை வெளியே காட்ட வேண்டாம். திருக்குர்ஆன்:-24:31
"தாமாக வெளியே தெரிகின்றவை" என்பதற்கு மேல் துண்டு, கீழாடை ஆகியவற்றை அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் எடுத்துக்காட்டுகளாகக் கூறினார்கள்.
அதாவது ஆடை முழுவதையும் மறைக்கும் வகையில் அரபு பெண்கள் அணிந்து வந்த மேலாடையின் கீழ்ப்பகுதியில் தெரியக்கூடியவை ஆகியவை வெளியே தெரிவதால் குற்றமில்லை ஏனெனில் இவற்றை மறைப்பது முடியாத ஒன்றாகும். நூல்:- தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. (இஹ்ராம் கட்டிய) பெண் துணியால் வாயை மூடவோ, (முகத்திரையால்) முகத்தை மறைக்கவோ வேண்டாம். நூல்:- புகாரீ அத்தியாயம் ஹஜ், பாடம்-23
ஒரு பெண் ஹஜ் அல்லது உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிவிட்டால் முகத்தை மறைக்கக் வேண்டாம் என்றால் மற்ற நேரத்தில் பெண் முகத்தை மறைக்க வேண்டும் என்பதுதான் பொருளாகும். மற்ற நேரங்களிலும் முகம் திறந்திருக்கலாம் என்றிருப்பின் இஹ்ராம் கட்டிய பின்னர் முகத்தை மறைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இறையருளுக்குரியவர்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்கள் பெண்கள் வெளியே செல்ல நேரிட்டால், ஹிஜாப் அணிவிப்பது கொண்டு அவர்களைப் பாதுகாத்திடுங்கள். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு அதீ
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹிஜாப் அணியும் பெண்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்து விட்டான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ
அல்ஜீரியாவில் பிறந்து பிரான்ஸில் வசிக்கும் ஒரு தொழிலதிபர் Rachid Nekkaz என்ற வர்த்தகர். பிரான்சில் புர்கா அணிந்தால் அதற்கு தண்டப் பணம் விதிக்கப்படும் என்று சட்டம் அமுலாக்கப்பட்டபோது “யாரெல்லாம் புர்கா அணிவதன் மூலம் தண்டம் விதிக்கப்படுகிறார்களோ அத்தனை பேருக்கும் பணம் செலுத்த நான் தயார். பயமில்லாமல் புர்கா (ஹிஜாப்) அணியுங்கள்” என்று பிரான்ஸ் நாட்டு இஸ்லாமியப் பெண்களுக்கு அறிவித்தார். பிறகு ஒரு மில்லியன் யூரோக்களை மூலதனமிட்டு ஒரு கணக்கொன்றை ஆரம்பித்தார்.. “பெண்களே சுதந்திரமாக நடமாடுங்கள். எந்த நாட்டிலாவது அந்த அரசு உங்களுக்கு புர்கா அணிந்ததற்கு தண்டம் விதிக்கப்பட்டால் அதனை நான் செலுத்த தயார்” என்று அறிவித்தார்.
ஹிஜாபை முழுமையாகப் பேணி அந்நிய ஆண்களை விட்டும் தன்னுடைய அழகு, அலங்கரித்தை முழுமையாக
மறைத்து வாழும் பெண்கள் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
பெண்களை போகப் பொருளாக பார்ப்பவர்கள் தான், இஸ்லாம் கூறும் ஹிஜாபை “பெண்ணடிமைத்தனம்” என்று கூச்சலிடுவார்கள். ஆனால், பெண்களின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் உண்மையாகவே பாடுபடுபவர்கள் ஹிஜாபின் நன்மையையும் அவசியத்தையும் உணர்வார்கள்.
குளிரூட்டப்பட்ட ஒரு வாகனத்தின் உள்ளே பிரயாணம் செய்வோர் கண்ணாடிகளை எல்லாம் உயர்த்தி சிறிதும் வெயில், வெளிக்காற்று, தூசி என்பன உள்ளே செல்லவிடாமல் மறைத்துக்கொண்டு பிரயாணம் செய்யும்போது, A/C பற்றி எதுவுமே தெரியாத ஒருவர் அல்லது ஒரு சிலர் வெளியில் இருந்து பார்த்துவிட்டு இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது. கொதிக்கும் வெயிலில் வாகனத்தின் கதவுத் துவாரங்களையும் அடைத்து கண்ணாடிகளையும் உயர்த்தி மூடிக்கொண்டு பிரயாணம் செய்கின்றார்களே. உள்ளே எவ்வளவு உஷ்ணமாக இருக்கும். வியர்த்து கொட்டதா? சுட்டெரிக்கும் வெயில் அல்லவா வெளியே அடிக்கிறது" என்று அங்கலாய்ப்பார்கள். குளிரூட்டப்பட்ட வாகனத்தில் அவர்கள் அனுபவிக்கும் சுகம் இவர்களுக்கு எங்கே எப்போது எப்படி தெரியவரும்?
இப்படித்தான் ஹிஜாப் உடை அணிந்தவர்கள் காமப் பார்வையைவிட்டும், கேலி கிண்டல் செய்வோரின் தொல்லைகளை விட்டும், திருடர்களின் அச்சத்தைவிட்டும் பாதுகாப்பு பெற்று நிம்மதியோடு சென்று வருகிறார்கள் என்பதை ஹிஜாபின் அருமை விளங்காதோர் பேசி திரிகின்றனர்.
மேற்கு நாட்டவர் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்கு "ஹிஜாப்" ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அனுமதி உண்டு
அவர்கள் தம் கணவர்கள், தம் தந்தையர், தம் கணவர்களின் தந்தையர், தம் புதல்வர்கள், தம் கணவர்களின் புதல்வர்கள், தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள்... ஆகியோரைத் தவிர மற்றவர்களிடம் தம் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். திருக்குர்ஆன்:-24:31
இவர்கள் அனைவரும் ஒரு பெண்ணுக்கு மணம் முடிக்கத் தகாத நெருங்கிய உறவினர்கள் (மஹ்ரம்) ஆவர். இவர்கள் முன் ஒரு பெண் ஹிஜாப் இல்லாமல் தன் அலங்காரத்துடன் வெளிப்படலாம். ஆயினும் வேண்டுமென்றோ அங்கங்கள் தெரியும் விதமாக விகாரமாகவோ வெளிப்படலாகாது.
தம் (மார்க்கப்) பெண்கள்..... தவிர மற்றவர்களிடம் தன் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். திருக்குர்ஆன்:- 24:31
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் மேற்கண்ட வசனத்திற்கு கூறிய விளக்கமாவது: அதாவது ஒரு முஸ்லிமான பெண் பிற முஸ்லிம் பெண்களிடம் அவள் (ஹிஜாப் இல்லாமல்) தன் அலங்காரத்துடன் வெளிப்படலாம். ஆனால், மாற்றுமத பெண்கள் முன் அவ்வாறு வெளிப்படலாகாது. ஏனெனில், அவர்கள் தங்கள் கணவர்களிடம் இவர்களின் அழகை வர்ணித்து சொல்லிவிடலாம். அவர்களைப் பொறுத்தவரையில் இவ்வாறு வர்ணிப்பதற்கு அவர்களின் கலாச்சாரம் அனுமதிக்கலாம். ஆனால் முஸ்லிமான பெண், இது (மார்க்கத்தில்) தடை செய்யப்பட்ட செயல் என்பதை அறிவாள். எனவே அவ்வாறு செய்வதை தவிர்த்து விடுவாள்.
தன்னுடைய அலங்காரத்தை இவள், பிறரிடம் சொல்லி விடுவாள் என்ற அச்சம் இருக்குமானால், அப்படிப்பட்ட பெண்ணிடத்திலும் (அவள் யாராக இருந்தாலும் சரியே) ஒரு முஸ்லிம் பெண்
தன் அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.
கண்டிக்க வேண்டும்
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் புனித மறைவுக்குப் பின்பு பனூதமீம் கோத்திரத்தைச் சார்ந்த சில பெண்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்திக்க வருகை தந்திருந்தனர்.
அவர்கள் மெல்லிய ஆடைகளை அணிந்திருந்தனர். இதனைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் “உண்மையில் நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பெண்களாக
இருப்பின் (இப்படியான ஆடைகளை நீங்கள் அணிந்திருக்க மாட்டீர்கள்.) அணிந்திருக்கும் இந்த
ஆடைகள் ஈமான் கொண்டவர்கள் அணிகின்ற ஆடைகள் அல்ல. நீங்கள் இறைநம்பிக்கை இல்லாத பெண்களாக
இருந்தால் இது போன்ற ஆடைகளை அணியுங்கள்.” என்று கூறிக் கண்டித்தார்கள்.
உம்மு அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அபூபக்ர் (ரலி) அவர்களின் மகன் அப்துர்
ரஹ்மான் (ரலி) அவர்களின் மகளாகிய ஹஃப்சா (ரஹ்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம்
சென்றதை நான் பார்த்தேன். அப்போது ஹஃப்சா (ரஹ்) அவர்கள் நெற்றிப் பகுதி வெளியே தெரியும்
விதமாக மெல்லிய ஒரு துணி (ஹிமார்) அணிந்திருந்தார்.
(அதைப் பார்த்ததும்) ஆயிஷா (ரலி) அவர்கள் அதனை கிழித்து எறிந்துவிட்டு, "அல்லாஹ் நூர் எனும் அத்தியாயத்தில் என்ன இறக்கி இருக்கிறான் என்பது உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள். பின்பு வேறொரு ஹிமாரை வரவழைத்து அதனை ஹஃப்சா (ரஹ்) அவர்களுக்கு அணிவித்தார்கள். நூல்:- இப்னு ஸஅது, பைஹகீ, முவத்தா மாலிக்-1660
உம்முள் ளியாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "பெண்கள் மருதாணி, சாயம் மங்கிய ஆடை, சாயமிடப்பட்ட ஆடை, காதணிகள், கால்கொலுசு, பொன் மோதிரம், மெல்லிய ஆடைகள் ஆகியவற்றை அணிவது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அன்னையர், ( يَا مَعْشَرَ
النِّسَاءِ، قِصَّتُكُنَّ كُلُّهُا وَاحِدَةٌ، أَحَلَّ اللَّهُ لَكُنَّ الزِّينَةَ
غَيْرَ مُتَبَرِّجَاتٍ ) "மங்கையர்களே! உங்களின் எல்லாக் கேள்விகளுக்கான பதில்
ஒன்றுதான். உங்களுக்கு அல்லாஹ் அலங்காரத்தை அனுமதித்துள்ளான். ஆனால், அதை (அந்நியருக்கு முன்) வெளிக்காட்டக் கூடாது"
என்று கூறினார்கள். நூல்:- தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், இப்னு கஸீர் அந்நூர் வசனம்-60
நம் வீட்டுப் பெண்கள் மனதார ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு, ஹிஜாபைப்பற்றி அழகான முறையில்
எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அவர்களிடம் ஹிஜாப் விஷயத்தில் மெத்தனப்போக்கு
இருந்தால் உடனே அவர்களை கண்டிக்க வேண்டும். மேலும் பெண் பிள்ளைகளிடம் அவர்களின் சிறுவயதிலிருந்தே
ஹிஜாபைப் பற்றி வலியுறுத்தி வரவேண்டும்.
இமாம் அல்பானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். "ஹிஜாபாக அணியும் ஆடை (கண்ணைக் கவரும் விதமாக வேலைப்பாடு செய்யப்பட்டு) கவர்ச்சி ஊட்டுவதாக அமையக்கூடாது. மேலும் திருக்குர்ஆன் 'தபர்ருஜ்' எனக் குறிப்பிடுவது போல் அது பகட்டு ஆடையாக ஆகிவிடக்கூடாது. உள்ளுடலைக் காட்டும் வகையில் மெல்லியதாகவும் இருக்கக்கூடாது. உடலோடு ஒட்டியவாறு இறுக்கமானதாகவும் இருக்கக்கூடாது. வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டதாகவும் இருக்கக்கூடாது. நூல்:- ஹிஜாப் அல்மராஅஹ் அல்முஸ்லிமாஹ் ஃபில் கிதாப்
விலைமதிப்பற்ற பொருட்கள் வெளியே கிடப்பதில் எந்த ஆபத்துமில்லை, ஆனால், தங்கம், வைரம், மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள் வெளியே
கிடந்தால் அவை கள்வர்களின் கண்களில் பட்டு களவு போகும் சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே, அவை மறைவில் இருக்கவேண்டியவை- பாதுகாக்கப்பட வேண்டியவை என்று உலகம் ஏற்றுக்கொள்கிறது. இக்கண்ணோட்டத்தில் பெண்களைக் காணும் இஸ்லாம் அவர்களை
மறைத்து ஹிஜாபில் இருக்கவேண்டும் என்று சமூகத்திற்கு கட்டளையிடுகின்றது.
கவர்ச்சிகரமான ஆடையின் மீது மோகம் கொண்டுள்ள ஒரு பெண்ணுக்கு அவளின் தந்தை கூறிய அறிவுரை.
"செல்ல மகளே! இந்த உலகில் மி்க மதிப்பு மிக்கதாக இறைவன் படைத்த அனைத்தும் மறைக்கப்பட்டவையாகவும், இன்னும் பெறுவதற்கு மிகக் கடினமாகவும் தான் உள்ளது.
வைரங்களை எங்கு எடுப்பாய்? பூமியின் ஆழமான பகுதியில் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும்
தான் வைரங்கள் உள்ளன.
முத்துக்களை எங்கு எடுப்பாய்? கடலின் ஆழமான பகுதியில் அழகான சிப்பிக்குள் மறைக்கப்பட்டதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும்
தான் முத்துக்கள் உள்ளன.
தங்கத்தை எங்கு எடுப்பாய்? சுரங்கத்தினுள்ளே, அடுக்கடுக்கான பாறைகளுக்குள்ளே
மறைக்கப்பட்ட நிலையில், அதை எடுப்பதற்கு நீ மிகக் கடினமாக உழைக்க வேண்டும்.
"
"பெண்ணின் உடல் புனிதமானது.
வைரங்கள், முத்துக்களை விட நீ புனிதமானவள். உன் உடலை முறையாக
நீ மறைத்துக்கொள்ள வேண்டும்". பெண்களின் உடலமைப்பு என்பது இறைவன் தந்த பொக்கிஷம்.
பொக்கிஷங்களை பொத்திப் பாதுகாப்பதே அறிவார்ந்தவர் செயல். அதைவிடுத்து பொக்கிஷம்
உள்ள வீட்டை திறந்து போட்டால்... பொறுக்கிகளால் உங்கள் பொக்கிஷம் சூறையாடத்தான்படும்.
பொக்கிஷமாய் போற்றி வளர்த்த தாய் தந்தைக்கு அழகு என்ற போர்வையில் அசிங்கத்தை பரிசளிக்காதீர்கள்.
நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்...
ஹிஜாப் என்ற ஆடை முஸ்லிம் பெண்களுக்கு மட்டும் தான் என்பதல்ல. பாலியல் தொல்லைகளிலிருந்து
பாதுகாப்புப் பெற வேண்டும் என்று எண்ணும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹிஜாப் ஒரு உன்னத ஆடையாக
விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.
பெண்கள் பர்தா நடைமுறையை பேணவேண்டும். பர்தா
என்பது முஸ்லிம் பெண்களின் அடையாள ஆடை அல்ல, அது பெண்னினத்தை காமக்
கொடூரர்களிடமிருந்து பாதுகாக்கும் வழிமுறையாகும்.
ஹிஜாப் முறை கடைப்பிடிக்கப்படும் நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்து இருப்பதும், அது கடைப்பிடிக்கப்படாத நாடுகளில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பல்கிப் பெருகி வருவதையும் நாம் உணர முடியும் என்கிறது ஒரு சர்வதேசப் பார்வை.
இஸ்லாமைத் தழுவியவர்களின் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் பெண்கள்தான் அதிகம். இதற்கான காரணம் என்ன என்பதை யூத, கிறிஸ்தவ ஆய்வாளர்கள், பிரச்சார பீரங்கிகள் கண்டறியப்பட்ட போது அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி ஹிஜாப் சட்டங்களைப் பெண்கள் ஆதரிக்கின்றார்கள். அது மானத்தைக் காக்கும் ஒரு சிறந்த பாதுகாப்பு கவசம் என பெண்கள் கருதுகின்றனர் என்றும் அவர்களின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஹிஜாபின் சிறப்பம்சத்தை உணர்ந்து கூட்டம் கூட்டமாக பெண்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து
கொண்டிருக்க, ஹிஜாபை முறையாக கடைப்பிடிக்க
வேண்டிய முஸ்லிம் பெண்கள் சிலர், அதை அணிந்து கொள்வதை பிற்போக்குத்தனம் என்று எண்ணுவதை
என்னவென்று சொல்ல?
இஸ்லாம் கூறும் பர்தா போன்ற ஒழுக்க நெறிகளை முறையாக விளங்கி செயல்படுத்துவோமாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.
No comments:
Post a Comment