சமாதானம் பேணுவோம்!
فَمَنْ عَفَا وَأَصْلَحَ فَأَجْرُهُ عَلَى
اللَّهِ إِنَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
(பிறரின் அநியாயத்தை) மன்னித்து சமாதானமாக செல்வோருக்கு அவரது
கூலி அல்லாஹ்விடம் உள்ளது. அவன் அநியாயம் செய்பவர்களை விரும்பமாட்டான். திருக்குர்ஆன்:- 42:40
உலகெங்கும் அமைதி நிலவ சமாதானம் தேவைப்படுகிறது.
சண்டை, வழக்கு ஆகியவற்றில்
ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் அமைதிப்படுத்துவதை அரபியில் "அல்இஸ்லாஹ்"
(சமாதானம்) என்பர். சமாதானம் பல வகைப்படும். முஸ்லிம் - முஸ்லிம் அல்லாதவர் இடையே சமாதானம்,
கணவன் - மனைவி இடையே சமாதானம், நீதியை விரும்புவோர் - அநீதியை விரும்புவோர் இடையே
சமாதானம், கோபத்தில் உள்ள இருவரிடையே
சமாதானம், காயங்களுக்கு சமாதானம்
ஆகியவை அவ்வகைகளில் அடங்கும்.
மனிதர்கள் பல்வேறு உணர்வுகளையும் எண்ணங்களையும் கொண்டவர்கள்.
அவர்களிடையே கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு,
வழக்கு போன்றவை ஏற்படுவது இயல்பு. ஆனால்,
அமர்ந்து பேசி, சீர்தூக்கிப் பார்த்து அமைதிக்கான வழியை தேடினால் நிச்சயம் வழி
பிறக்கும். இவ்வாறு சமாதானம் அடைவதும் சமாதானப்படுத்துவதும் மனித வாழ்க்கைக்கு மிகவும்
அவசியம் என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம் என்பதால் சமாதானத்திற்கு
முதலிடம் அளிக்கிறது. அதை ஒரு அறச்செயலாக கருதுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரீ ஆறாம் ஆண்டு துல்கஅதா மாதம்
உம்ரா செய்வதற்காக சுமார் 1500 முஸ்லிம்களுடன் மக்கா
நகர் நோக்கி வந்தார்கள். மக்காவிலிருந்து சற்று தூரத்தில் உள்ள "ஹுதைபியா" எனும் இடத்தில் தங்கினார்கள்.
தமது நோக்கத்தை மக்காவாசிகளிடம் தெரிவித்து வருமாறு உஸ்மான் (ரலி) அவர்களை நபியவர்கள்
அனுப்பிவைத்தார்கள். ஆனால், மக்காவாசிகள் முஸ்லிம்களை
மக்கா நகருக்குள் நுழைய அனுமதிக்கவில்லை இறுதியில் ஹுதைபியா எனும் அந்த இடத்தில் முஸ்லிம்களுக்கும்
மக்காவாசிகளுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது.
முஸ்லிம்கள் சார்பாக நபியவர்களும் மக்கா குறைஷியர் சார்பாக சுஹைல்
பின் அமர் என்பவரும் இதில் கலந்துகொண்டனர். பின்னர், அதே இடத்தில் தாம் கொண்டு வந்திருந்த குர்பானி பிராணியை அறுத்து
தலையை மழித்துக்கொண்ட நபியவர்கள் மதீனா திரும்பினார்கள். அடுத்த ஆண்டு உம்ரா செய்தார்கள்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த சமாதான ஒப்பந்தம் தான், மக்கா வெற்றிக்கு வழிகோலியது. பலர் இஸ்லாத்தைத் தழுவிடக் காரணமானது.
நபியவர்களின் இராஜதந்திரம் இதில் பளிச்சிட்டது.
சான்றோர்களின் கூற்று
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்கள், ( أَلاَ
أُخْبِرُكُمْ بِأَفْضَلَ مِنْ دَرَجَةِ الصِّيَامِ وَالصَّلاَةِ وَالصَّدَقَةِ
) "நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றின்
அந்தஸ்தைவிட மிகச்சிறந்த நற்செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று (எங்களிடம்) கேட்டார்கள். நாங்கள்,
ஆம் (அறிவியுங்கள்)" என்று கூறினோம்.
நபியவர்கள், ( صَلاَحُ ذَاتِ الْبَيْنِ فَإِنَّ فَسَادَ ذَاتِ الْبَيْنِ
هِيَ الْحَالِقَةُ (“(பகைமை கொண்ட) இருவருக்கிடையே
சமாதானத்தை ஏற்படுத்துவதே அது. ஏனெனில், இருவருக்கிடையே பிணக்கை ஏற்படுத்துவதானது, மழிக்ககூடியதாகும்" என்று கூறினார்கள். மீண்டும் நபியவர்கள்,
( هِيَ الْحَالِقَةُ لاَ أَقُولُ تَحْلِقُ
الشَّعْرَ وَلَكِنْ تَحْلِقُ الدِّينَ ) "அது மழிக்கக்கூடியதாகும். தலைமுடியையும் மழிக்கும் என்று நான் சொல்லவில்லை. மாறாக,
மார்க்கத்தையே மழித்து அழித்துவிடக் கூடியதாகும்"
என்று கூறினார்கள் நூல்:- அபூதாவூத்-4273, திர்மிதீ-2433
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். இருவருக்கும் இடையில் சமாதானத்தை
ஏற்படுத்தியவருக்கு, ஒவ்வொரு வார்த்தைக்கும்
அல்லாஹ் ஒரு அடிமையை விடுவிப்பதற்கான வெகுமதியை வழங்குகிறான்.
அபூ உமாமா (ரலி ) கூறினார்கள். நோயாளியைப் பார்க்க ஒரு மைல்
(ஆனாலும்) நடந்து செல்லுங்கள். அல்லாஹ்வுக்காக உங்கள் சகோதரரைப் பார்க்க இரண்டு மைல்கள்
(ஆனாலும்) நடந்து செல்லுங்கள். இருவருக்குமிடையே சமாதானத்தை ஏற்படுத்த மூன்று மைல்கள்
(ஆனாலும்) நடந்து செல்லுங்கள்.
இருவரிடையே அல்லது இரு சமூகங்களுக்கிடையே சமாதானத்துவமும் புரிந்துணர்வும்
நிலவுவது அமைதியான வாழ்க்கைக்கு துணை நிற்கும். அமைதியான சூழல் நிலவினால்தான் பிழைப்பு
மற்றுமின்றி வழிபாடுகளும் சீராக நடைபெறும். சமாதானத்தை கெடுப்பதானது நல்லுறவையும் அமைதியையும்
பாதிக்கும். இறுதியில் அது மார்க்கத்தையே அழித்துவிடும்.
பொய் சொல்லலாம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ بِالْكَاذِبِ مَنْ أَصْلَحَ بَيْنَ
النَّاسِ فَقَالَ خَيْرًا أَوْ نَمَى خَيْرًا ) (பிணக்கு கொண்ட
இரு தரப்பாரிடையே நல்லதைப் புனைந்து சொல்லி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தியவர்
பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொன்னார். அறிவிப்பாளர்:- உம்மு குல்ஸும் பின்த் உக்பா
(ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-2692,
முஸ்லிம்-5079 திர்மிதீ-1861
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَحِلُّ الْكَذِبُ إِلاَّ فِي ثَلاَثٍ
يُحَدِّثُ الرَّجُلُ امْرَأَتَهُ لِيُرْضِيَهَا وَالْكَذِبُ فِي الْحَرْبِ
وَالْكَذِبُ لِيُصْلِحَ بَيْنَ النَّاسِ ) மூன்றில் தவிர வேறு
எதிலும் பொய்யுரைப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவை: 1) மனைவியைத் திருப்திப்படுத்துவதற்காக கணவன் அவளிடம் சொல்லும்
(பொய்ச்) செய்தி. 2) (எதிரியை வீழ்த்த) போரில் சொல்லப்படும்
பொய். 3) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக
சொல்லப்படும் பொய். அறிவிப்பாளர்:- அஸ்மா பின்த்
யஸீத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5079, திர்மிதீ-1862
சண்டைக்காரர்களுக்கிடையே நற்பேச்சை பேசிய தீய கருத்துக்களை களைபவர்
பாராட்டுக்குரியவர் ஆவார். எடுத்துக்காட்டாக: இன்னார் உமக்கு சலாம் கூறினார். உன்மீது
அன்பு வைத்துள்ளார் உம்மைப்பற்றி நல்ல விதமாக பேசுகிறார். என்பன போன்ற சமாதான வாக்கியங்களை
அவரிடமிருந்து செவியுற்றிருக்காவிட்டாலும் எடுத்துக்கூறி இருவருடைய சமாதானத்தை ஏற்படுத்துபவர்
பொய்யர் அல்லர்.
பெரும் பிரளயம் தடுக்கப்பட்டது
ஹிஜ்ரீ ஐம்பதாம் ஆண்டு ஹசன் (ரலி) அவர்கள் இந்த உலகை விட்டு
பிரிந்ததும் அவர்களின் உடலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருகில் அடக்கம் செய்திட
ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுமதி கோரப்பட்டது. அன்னையவர்களும் பெருந்தன்மையுடன் அனுமதி
அளித்தார்கள்.
ஹசன் (ரலி) அவர்கள் உயிருடன் இருந்தபோது எண்ணியது போலவே இதற்கு
எதிர்ப்பு கிளம்பியது. அதாவது, அப்போது மதீனா நகரில்
இருந்த மர்வான் என்பவருக்கு இச்செய்தி கிடைத்தது. அவர், "ஹசன் (ரலி) அவர்களுடைய உடலை நபியவர்களின் அருகில்
அடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். காரணம், ஹசன் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை நபியவர்களுக்கு அருகில் அடக்கப்பட
அனுமதி வழங்க தடையாக இருந்தார். எனவே, ஹசன் (ரலி) அவர்களை மட்டும் எப்படி அங்கே அனுமதிக்கலாம். இது கூடாது இதற்கு நான்
எதிர்ப்பு தெரிவிப்பேன்" என்று அடம் பிடித்தார்.
ஹுசைன் (ரலி) அவர்கள் மர்வானுடன்
போர் புரிய தயாராகிவிட்டார்கள். மர்வானும் போருக்கு தயாராகிவிட்டார். மதீனா வீதியில்
முஸ்லிம்களின் இரத்தம் ஆறாக ஓடும் நிலை ஏற்பட்டுவிட்டது. இத்தருணத்தில் நபித்தோழர்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கு வருகை தந்து விவரத்தை கேட்டறிந்த பிறகு,
"இது என்ன அநியாயம்?
நபியவர்களின் பேரர் தங்கள் பாட்டனார் அருகே அடக்கப்படும்
விஷயத்தில் மறுக்கப்படுகிறது?" என்று கூறினார்.
பிறகு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஹுசைன் (ரலி) அவர்களை நோக்கி! "என்னை அடக்கம் செய்யும்
விஷயத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்படுமாயின், எனது பாட்டனார் அருகில் அடக்க வேண்டும் என்று வற்புறுத்தாமல்,
பொதுமக்கள் அடக்கப்படும் ஜன்னத்துல் பகீஉ என்ற பொதுமையவாடியில்
அடக்கம் செய்துவிட வேண்டும் என்று ஹசன் (ரலி) அவர்கள் கடைசியாக உபதேசம் செய்திருப்பதை
யாரும் மறந்துவிட வேண்டாம்" என்று ஹசன் (ரலி) அவர்களின் இறுதி உபதேசத்தை (மரண
வசியத்தை) நினைவு படுத்தினார்.
தக்க தருணத்தில் இதை நினைவுபடுத்தியதும் ஹுசைன் (ரலி) அவர்களின்
கோபம் சட்டென தனிந்தது. பிறகு ஹசன் (ரலி) அவர்களை மதீனாவில் உள்ள ஜன்னத்துல் பகீஉ என்ற பொதுமையவாடியில்
தமது தாயார் பாத்திமா (ரலி) அவர்களுக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதனால் பனூ உமையா -
பானு ஹாஷிம் ஆகிய இரு குலத்தார்களிடையே ஏற்படவிருந்த மிகப்பெரிய போர் அடங்கிவிட்டது.
ஹசன் (ரலி) அவர்கள் உயிரோடிருந்தபோதும், இறந்த பின்பும் முஸ்லிம் சமுதாயம் பிளவுபடாமல்,
இரத்தம் சிந்தாமல் அவரால் ஒற்றுமை ஏற்பட்டது.
பொய் சொல்வது ஹராமாக இருந்தாலும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களை நீக்கவும்
அல்லாஹ் பொய் சொல்வதை அனுமதித்திருப்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், மோதல்கள் மற்றும் வாதங்கள் தனி மனிதர் மற்றும் சமூகங்களின்
மத உறுதிப்பாட்டின் மீது ஏற்படுத்தும் பெரும் எதிர்மறையான விளைவுகளே இதற்குக் காரணம்.
ஒதுங்கிச்செல்லக் கூடாது
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம்,
‘‘தாங்கள் அப்துல்லாஹ் பின்
உபையிடம் வந்தால் (நன்றாயிருக்கும்)” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அவரிடம்
செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள்.
அவர்கள் சென்ற பாதை உவர் நிலமாக இருந்தது. அவரை நபி (ஸல்) அவர்கள் சென்றடைந்தபோது அவர்,
( إِلَيْكَ عَنِّي، وَاللَّهِ لَقَدْ آذَانِي
نَتْنُ حِمَارِكَ ) “தூர விலகிப் போ!
அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கழுதையின் துர்நாற்றம் எனக்குத் தொல்லை தந்துவிட்டது”
என்று கூறினார்.
அப்போது அவர்களிடையே இருந்த அன்சாரி (தோழர்) ஒருவர்,
( وَاللَّهِ لَحِمَارُ رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم أَطْيَبُ رِيحًا مِنْكَ )
“அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களின் கழுதை உன்னைவிட நல்ல வாசனையுடையதுதான்” என்று கூறினார்.
அப்துல்லாஹ்வுக்காக அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் ஆத்திரமடைந்து
அந்த அன்சாரியை ஏச, அன்சாரியும் ஏசினார்.
அந்த இருவருக்காகவும் அவரவருடைய நண்பர்கள் கோபமடைந்தார்கள். அவர்கள் தங்களுக்கிடையே
ஈச்சங் (கிளையின்) குச்சியாலும் கைகளாலும் செருப்புகளாலும் அடித்துக்கொண்டார்கள். அப்போது,
‘‘இறைjநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால்,
அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள்” (49:9)
எனும் வசனம் அருளப்பட்டது என்ற செய்தி எங்களுக்கு
எட்டியது. நூல்:- புகாரீ-2691
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் மீதொருவர்
கற்கள் வீசிக் கொள்ளுமளவிற்கு 'குபா' வாசிகள் (தமக்கிடையே) சண்டையிட்டனர். அண்ணல் நபி
(ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நபியவர்கள், ( اذْهَبُوا بِنَا نُصْلِحُ بَيْنَهُمْ
) "நம்மை அழைத்துச் செல்லுங்கள்.
நாம் அவர்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்போம்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2693
யாரோ இருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள் நமக்கு ஏன் வந்தது
வம்பு? என்ற அடிப்படையில் ஒதுங்கிச்
செல்வது முறையல்ல. அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சண்டையால் பிறருக்கு பாதிப்பு
வரக்கூடும் என்று தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து, அவர்களை சமாதானத்திற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
மக்கள் நலனில் அக்கறை
அபூபக்ரா (ரலி) அவர்கள்கூறியதாவது. (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீதிருக்க,
அவர்களின் ஒரு பக்கத்தில் (பேரர்) ஹசன் பின் அலீ
(ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் ஒருமுறை மக்களை நோக்கியும், மற்றொரு முறை ஹசன் (ரலி) அவர்களை நோக்கியும் (உரை நிகழ்த்திய வண்ணம்),
( إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ، وَلَعَلَّ اللَّهَ
أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ مِنَ الْمُسْلِمِينَ ) ‘‘இந்த என் (புதல்வியின்) புதல்வர் தலைவர் ஆவார். முஸ்லிம்களின்
இரு பெரும் கூட்டத்தாரிடையே இவர் மூலமாக அல்லாஹ் சமாதானம் செய்துவைக்கவிருக்கிறான்”
என்று கூறிக்கொண்டிருந்தை நான் பார்த்தேன். நூல்:- புகாரீ-2704
ஹிஜ்ரி 40 ஆம் ஆண்டு (கி.பி.
660) ரமளான் மாதம் ஆட்சித் தலைவர்
(கலீஃபா) அலீ (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட பிறகு, அவர்களின் மூத்த மகனார் ஹசன் (ரலி) அவர்களுக்கு சிலர் விசுவாசப்
பிரமாணம் (பைஅத்) செய்து வாக்களித்தனர். கூஃபாவாசிகள் இவ்வாறு ஹசன் (ரலி) அவர்களுக்கு
பைஅத் செய்து கொடுக்க, (ஷாம்) சிரியாவாசிகள்
முஆவியா (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்தனர்.
இந்நிலையில் கூஃபாவில் ஓரிடத்தில் இருவரும் சந்திக்கும் நிலை
உருவானது. முஆவியா (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ள
விரும்பி, இருவரைத் தமது சார்பாக
அனுப்பினார்கள். முஆவியா (ரலி) அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு,
சமாதானத்திற்கு ஹசன் (ரலி) அவர்கள் இசைந்தார்கள்.
இதன் மூலம் இருபெரும் கூட்டத்தாரிடையே நடைபெறவிருந்த பெரும்போர் தவிர்க்கப்பட்டு,
அமைதி திரும்பியது. ஹசன் (ரலி) அவர்கள் பதவி விட்டுக்
கொடுத்தார்கள். முஆவியா (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவரானார்கள். நூல்:- உம்தத்துல் காரீ
இரு நாட்டுக்கு மத்தியில் போர் மேகம் சூழ்ந்த போதிலும்,
அந்த நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாதானத்தை விரும்புவது
தான், தமது குடிமக்கள்மீதுள்ள அக்கறை
உள்ள சிறந்த தலைமைப் பண்பிற்குரிய அடையாளமாகும்.
பெரிய மனசு
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்களின் காலத்தில் எனக்கு இப்னு அபீ ஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த
ஒரு கடனை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் வைத்துத் திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன்.
(எங்கள்) இருவரின் குரல்களும் உயர்ந்தன. வீட்டிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
அதைக் கேட்டு விட்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர்
(ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். தமது அறையின் திரையை விலக்கி,
‘கஅபே!’ என்றழைத் தார்கள்.
நான், ‘‘இதோ வந்துவிட்டேன்,
அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ( فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ ) "பாதிக்கடனைத் தள்ளுபடி
செய்துவிடு" என்று தம் கரத்தால் சைகை காட்டினார்கள். ‘‘அவ்வாறே செய்து விட்டேன்,
அல்லாஹ்வின் தூதரே!” என்று நான் கூற, இப்னு அபீஹத்ரத் (ரலி) அவர்களிடம், ( قُمْ فَاقْضِهِ ) ‘‘நீங்கள் எழுந்து சென்று
அவரது கடனை அடையுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்:-
புகாரீ-2710
கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்படும்போது பொருள்வளம் உள்ளவர்
சிறிது விட்டுக்கொடுப்பது மூலம் சமாதானம் ஏற்படக்கூடும்.
சமயோசிதமாக
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்ரவேலர்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து
அவருடைய நிலம் ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தமது நிலத்தில் தங்கம்
நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம்,
‘‘என்னிடமிருந்து உன் தங்கத்தை
எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான்
நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை”
என்று கூறினார்.
நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், ‘‘நிலத்தை, அதிலிருப்பவற்றுடன்
சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான் உரியது)” என்று கூறினார்.
(இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம்
தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக்கேட்டு சென்ற அந்த மனிதர்,
( أَلَكُمَا وَلَدٌ ) ‘‘உங்கள் இருவருக்கும் பிள்ளை இருக்கிறதா?”
என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், (
لِي غُلاَمٌ ) ‘‘எனக்குப் பையன் ஒருவன்
இருக்கிறான்” என்று சொன்னார். மற்றொருவர், ( لِي
جَارِيَةٌ ) ‘‘எனக்கு மகள் ஒருத்தி
இருக்கிறாள்” என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், ( أَنْكِحُوا الْغُلاَمَ الْجَارِيَةَ،
وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ، وَتَصَدَّقَا
) ‘‘அந்தப் பையனுக்கு அந்தச் பெண்ணை
மணமுடித்துவையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தானதர்மமும் செய்யுங்கள்” என்று தீர்ப்பளித்தார்.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3472, முஸ்லிம்-3544
சமாதானம் என்பது பலவிதமான பிரச்சினைகளையும், பலவிதமான சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் ஒரு
கேடயமாக விளங்குகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சமாதானத்தில்தான் அமைந்துள்ளது.
சமாதானம் ஏற்படுத்துவது சாதாரணமானது அல்ல. அது சாதுர்யமாக, சமயோசிதமாக நடப்பவர்களின் கைகளில் உள்ளது.
மத்தியஸ்த்தார்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தையின் சகோதரி ருபய்யிஉ பின்த் நள்ர், ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தாரிடம்
என் குலத்தார், ‘‘இழப்பீட்டுத் தொகையைப்
பெற்றுக் கொள்ளுங்கள்; அல்லது (ருபய்யிஉவை)
மன்னித்துவிடும்படி சொல்லுங்கள்” என்று கோரினார்கள். அவர்கள் (இரண்டில் எதற்குமே ஒப்புக்கொள்ள)
மறுத்துவிட்டார்கள். ஆகவே, எங்கள் குலத்தார்
நபி (ஸல்) அவர்களிடம் (விவரம் கூறி, தீர்ப்புப் பெற) வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (ருபய்யிஉவைப்) பழிவாங்கும்படி அவர்களுக்கு
உத்தர விட்டார்கள். அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள்,
‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி)
ருபய்யிஉவின் முன்பல் உடைக்கப்படுமா? அப்படி நடக்காது. தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்தவனின் மீது சத்தியமாக!
அவளது முன்பல் உடைக்கப்படாது” என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ( يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ
) "அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும். (ஆகவே,
அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள்.
பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை)
மன்னித்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ( إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ
عَلَى اللَّهِ لأَبَرَّهُ ) "அல்லாஹ்வின் அடியார்களில்
சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின்மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின்
அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகின்றான்” என்று சொன்னார்கள். நூல்:- புகாரீ-2703
ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கணவர் தன் தந்தையின் பெயரான
"முஹம்மது" என்பதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறினார். அவரின் மனைவி
இல்லை, தன் தந்தையின் பெயரான
"அப்துல்லாஹ்" என்பதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறினாள். ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து கொள்ளாமல் சண்டையிட்டுக் கொண்டனர். காரசாரமாக சண்டை முற்றியது.
இந்த சண்டையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வந்து
என்னவென்று விசாரித்துவிட்டு, உங்களுக்கு மத்தியில் சமாதானம் ஏற்பட நான் அழகான
யோசனை சொல்கிறேன். அதாவது, “முஹம்மது சலீம்
அப்துல்லாஹ் என்று பெயர் வையுங்கள்” என்று கூறினார். சரி, “என் தந்தை பெயர்
முஹம்மது. என் மனைவியின் தந்தை பெயர் அப்துல்லாஹ். இடையில் சலீம் என்று ஒரு பெயர்
வருகிறது. அது யாருடையது?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர், “அது என்
தந்தையின் பெயர்” என்றார்.
மத்தியஸ்த்தார் இயன்றவரை சண்டையிட்ட அந்த இரண்டு பேருக்கும்
மத்தியில் சமாதானமாகும் அளவுக்கு அழகிய தீர்வைச் சொல்லவேண்டும். மாறாக, எரியும் தீயில்
எண்ணெய் வார்ப்பது போல், அவர்களை மேலும் மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது
தீயவர்களின் குணமாகும். சமாதானம் ஏற்படுத்த வருகின்றவன் விஷமியாக இருந்துவிட்டால், மேலும், பிரச்சினையை பெரிதாக்கி, அதில் அவன் ஆதாயம் பார்த்துவிடுவான்.
"ஆனது ஆகிவிட்டது பெரிது படுத்தாதீர்கள். அவரவர் வேலையை போய்
பாருங்கள்" என்று வெற்று வார்த்தையில் சமாதானம் கூறுவது சரியல்ல. பாதிப்புக்குள்ளானவன்
இந்த சமாதானத்திற்கு ஒத்து வர மாட்டான். சமாதானத்தை ஏற்படுத்த வருபவர், பாதிப்பை உண்டாக்கியவருக்கு
முறையாக புரியவைத்து, பாதிக்கப்பட்டவருக்குரிய இழப்பீட்டை பெற்றுத்தர
வேண்டும்.
உலக மக்கள், பிறர் உரிமைகளைப்
பேணி, சண்டை சச்சரவின்றி நிம்மதியாக
வாழ, அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ
இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment