Search This Blog

Sunday, 4 May 2025

பாதுகாவல் தேடுகிறேன்

 

பாதுகாவல் தேடுகிறேன்

 

فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் (அதற்கு முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. திருக்குர்ஆன்:- 16:98

 

ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுவதற்கு இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தந்த பிரார்த்தனை, "அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" என்பதாகும்.

 

இந்த வார்த்தையின் பொருளாவது: சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன். அதாவது, என் மார்க்க விஷயங்களிலோ இம்மை விஷயங்களிலோ ஷைத்தான் எனக்கு இடரளிப்பதிலிருந்து அல்லாஹ்வின் சன்னிதானத்தில் பாதுகாப்புக் கோருகிறேன் அல்லது எனக்கு இடப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றவிடாமல் என்னை அவன் தடுப்பதிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். ஏனெனில், ஷைத்தானின் தீங்கிலிருந்து மனிதனை காக்கும் சக்தி அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு.

 

'ஜின்னு' இனத்தைச் சேர்ந்தவனான ஷைத்தானின் தீங்கிலிருந்து தன்னிடம் பாதுகாப்பு கோருமாறு உயர்ந்தோன் அல்லாஹ் மனித இனத்திற்கு வழிகாட்டுகின்றான். ஏனெனில், மனிதனின் சாதுரியம் ஷைத்தான்களிடம் எடுபடாது. அவர்கள் நன்மைக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனவே, அவர்களின் தீங்கை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோருவதே பயனளிக்கும்.

 

ஷைத்தானைப் பொறுத்தவரை நன்மை செய்வதால் அவனது தீங்கை தடுக்க இயலாது. அவன், நல்ல மனிதனை அடியோடு அழித்து நாசமாக்கிவிட வேண்டும் என்றே விரும்புவான். அவன் மனிதனுக்கும் மனித இனத்தின் தந்தைக்கும் எதிரி ஆவான்.

 

தீண்டல்

 

(நபியே!) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதேனும் ஊசலாட்டம் ஏற்பட்டால், உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவான். திருக்குர்ஆன்:- 7:200

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً بِابْنِ آدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فَإِيعَادٌ بِالْخَيْرِ وَتَصْدِيقٌ بِالْحَقِّ فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللَّهِ فَلْيَحْمَدِ اللَّهَ وَمَنْ وَجَدَ الأُخْرَى فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ) மனிதனுக்கு ஷைத்தானின் தீண்டல் ஒன்றும் வானவரின் தீண்டல் ஒன்றும் உண்டு. ஷைத்தானின் தீண்டல் என்பது, தீங்கு நேரும் என அச்சுறுத்துவதும், உண்மையை மறுக்கச் செய்வதும் ஆகும். வானவரின் தீண்டல் என்பது, நன்மை ஏற்படும் என நம்பிக்கையூட்டுவதும், உண்மையை ஏற்கச் செய்வதும் ஆகும். ஆகவே, வானவரின் தீண்டலை உணரும்போது அது அல்லாஹ்விடமிருந்து ஏற்பட்டதென அறிந்து அவனைப் புகழவேண்டும். ஷைத்தானின் தீண்டலை உணர்கின்ற ஒருவர் ஷைத்தானிடமிருந்து காக்குமாறு (அல்லாஹ்விடம்) கூற வேண்டும். இவ்வாறு கூறிவிட்டு, கீழ்காணும் வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.

 

ஷைத்தான் உங்களுக்கு வறுமையைப் பற்றி அச்சத்தை ஏற்படுத்தி தீமைகள் புரியுமாறு உங்களை ஏவுகிறான். ஆனால், அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும் அருளையும் வாக்களிக்கிறான் அல்லாஹ் தாராளமானவனும் அறிவோனும் ஆவான் (திருக்குர்ஆன்:- 2:268) அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2904, இப்னு ஹிப்பான்

 

மனிதர்களுக்கு மானக்கேடான தீமைகளை அலங்காரமாக்கி காண்பிக்கும் ஒரு ஷைத்தான் அவர்கள் மீது சாட்டப்படாமல் இல்லை. குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயத்தில் எவ்வித குறைவும் வைக்காமல் தீவிர முயற்சி செய்யக் கூடிய ஷைத்தான்கள் அவர்கள்.

 

யாருக்கு அல்லாஹ் பாதுகாப்பு அளித்தானோ அவர் மட்டும்தான் அந்த குழப்பத்தில் இருந்து பாதுகாப்பு பெற்றவர் ஆவார்.

 

ஒவ்வொரு மனிதனுக்கும் வானவர் ஒருவரும், ஷைத்தான் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வானவர் நல்லதையே எண்ணுமாறும் நல்லதையே செய்யுமாறும் மனிதனுக்கு கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறார். அதுதான் அவனது மனசாட்சியாகும் என்பர் சிலர்.

 

அவ்வாறே அந்த ஷைத்தான் கெட்டதே எண்ணுமாறும், கெட்டதையே செய்யுமாறும் மனிதரை தூண்டிக்கொண்டிருக்கிறான். அதுதான் அவனது மன இச்சை என்பவர் சிலர்.

 

எப்படியோ ஒரு குற்றத்தை செய்ய முனையும்போது உள்மனம் மனிதனை தடுக்கிறது. ஆனால், மன விருப்பமும், பேராசையும் மேலோங்கிவிட்டால் மனிதன் அதற்கு அடிமையாகி தவறிழைத்துவிடுகிறான். மன உறுத்தலுக்கு அஞ்சி தவறியிருந்து விலகிக்கொள்வோரும் உள்ளனர். இவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களே. அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

 

தொழுகையில் நின்றால்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையில் நின்றால் முதலில் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். பிறகு (இறைவனைப் புகழும்) ஸனா உரைப்பார்கள். பின்பு (குர்ஆன் ஓதுவதற்கு முன்பாக)

 

( أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ ) “(பொருள்:) நன்கு செவியேற்பவனும் நன்கு அறிகின்றவனுமான அல்லாஹ்விடம் சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். ஷைத்தானின் ஊசலாட்டம், அவனது ஊதல், துப்பல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன்” என்று ஓதுவார்கள்.  அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத், திர்மிதீ-225 முஸ்னத் அஹ்மத்,  நஸாயீ, இப்னுமாஜா

 

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( أنَّ النَّبِيَّ ﷺ لَمّا دَخَلَ في الصَّلاةِ كَبَّرَ، ثُمَّ قالَ: ”أعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطانِ الرَّجِيمِ ) பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் முதலில் தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். பிறகு"அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" என்று கூறுவார்கள். நூல்:- இப்னு அபீஷைபா, சுனன் இமாம் பைஹகீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அந்நஹ்ல் வசனம்-98

 

கோபத்தின்போது

 

சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருகில் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர். அந்நிலையில் அவ்விருவரில் ஒருவரது முகம் சிவந்துவிட்டிருக்க கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அண்ணலார், ( إِنِّي لأَعْلَمُ كَلِمَةً لَوْ قَالَهَا لَذَهَبَ عَنْهُ مَا يَجِدُ لَوْ قَالَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ) "எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள  (கோப) உணர்ச்சி விலக்கிவிடும். 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்பதே அவ்வார்த்தையாகும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6115, முஸ்லிம்-5087, அபூதாவூத்-4149, திர்மிதீ-3364, முஸ்னது அஹ்மத்

 

அழிக்கவோ, அகற்றவோ முடியாத எந்த ஒன்றையும் பலவீனப்படுத்த முடியும். கோபத்தை முற்றிலும் அகற்றமுடியாது. எனினும் பலவீனப்படுத்த முடியும். பலவீனப்படுத்தப்பட்ட ஒன்றை லேசாக ஒதுக்கிவிடலாம். கோபத்தை பலவீனப்படுத்த பல வழிகள் இருந்தாலும் 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்று ஓதிக்கொள்வதும் அதில் உள்ள ஒன்று தான்.

 

எல்லாத் தீமைகளுக்கும் கோபமே அடிப்படைக் காரணமாக இருப்பதாலேயே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கோபத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்கள். தன் விருப்பத்திற்கு மாற்றான ஒன்று நடக்கும்போதே மனிதன் கோபமடைகிறான். இது அகம்பாவத்தால் விளைவதாகும். எல்லாம் தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஆணவத்தின் அடையாளமாகும். கோபத்தை அடக்கிக்கொள்ளும்போது மனதைக் கட்டுப்படுத்தி, மன இச்சையை வெல்கின்ற அற்புதம் நிகழும். இதையடுத்து பல்வேறு தீமைகள் ஒளியவும் நன்மைகள் பல வாழவும் வழிபிறக்கும்.

 

கொட்டாவி  ஏற்படும்போது

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( إِنَّ اللَّهَ يُحِبُّ الْعُطَاسَ، وَيَكْرَهُ التَّثَاؤُبَ وَأَمَّا التَّثَاوُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ، فَإِذَا قَالَ هَا‏.‏ ضَحِكَ مِنْهُ الشَّيْطَانُ ) அல்லாஹ் தும்மலை விரும்புகின்றான். கொட்டாவியை வெறுக்கின்றான். (ஏனெனில்) கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) "ஹா" என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6223, அபூதாவூத்-4373 திர்மிதீ-

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ عَلَى فِيهِ فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ ) உங்களில் எவருக்கேனும் கொட்டாவி ஏற்பட்டால் அவர் தமது வாயின் மீது (கையை வைத்து) அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் அப்போது வாய்க்குள் நுழைகின்றான். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம் 5719, அபூதாவூத்-4372,  முஸ்னது அஹ்மத், தாரிமீ

 

கொட்டாவி சோம்பலுக்கும் களைப்புக்கும் அடையாளமாகும். இப்படி மனிதன் உற்சாகம் குன்றிவிடும்போது நல்ல காரியங்கள் பல தடைபடும். அளவுக்கதிகமாக உண்பது பருகுவதாலே இந்த தேக்கநிலை உருவாகிறது. எனவே, இது ஷைத்தானின் தூண்டுதலால் நேரும் சோதனையாகும். அதிலும் அடக்கமின்றி "ஹா" என்று நெட்டுயிர்க்கும்போது, மனிதன் தன் வலையில் சிக்கிவிட்டான் என்று ஆனந்தத்தில் ஷைத்தான் சிரித்து மகிழ்கின்றான். எனவே, கொட்டாயை இயன்றவரை அடக்கி விட வேண்டும்.

 

பொதுவாக, எல்லா நிலைகளிலும் கொட்டாவி வெறுப்புக்குரியது. அது ஷைத்தானால் தூண்டப்படுகிறது. எனவே, அப்போது "அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்" (விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்)  என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.

 

கழுதை கத்தும்போது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا سَمِعْتُمْ صِيَاحَ الدِّيَكَةِ فَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ، فَإِنَّهَا رَأَتْ مَلَكًا، وَإِذَا سَمِعْتُمْ نَهِيقَ الْحِمَارِ فَتَعَوَّذُوا بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ، فَإِنَّهُ رَأَى شَيْطَانًا ) நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்; ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால்தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சப்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்; ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது (அதனால்தான் கத்துகிறது.) அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-3303, முஸ்லிம்-5275, அபூதாவூத்-5102, திர்மிதீ-3371, முஸ்னது அஹ்மத்-8064

 

பிரார்த்தனைகள்

 

(நபியே!) கூறுக: என் இறைவா! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! ஷைத்தான்கள் என்னை அண்டாமல் இருப்பதற்கும் உன்னிடம் நான் பாதுகாப்பு கோருகிறேன். திருக்குர்ஆன்:- 23:97,98

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَرَم، وَأَعُوذُ بِكَ مِنَ الهَدْم وَمِنَ الْغَرَقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِيَ الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ ) "இறைவா! நான் தள்ளாமையிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன்; இடிபாடுகளில் சிக்குவதிலிருந்தும், நீரில் மூழ்கி போவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன்; இறக்கும்போது ஷைத்தான் என்னை குழப்பத்தில் ஆழ்த்துவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு கோருகிறேன்" என்று பிரார்த்திப்பவராக இருந்தார்கள். அறிவிப்பாளர்:- அபுல்யசர் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்1328, நசாயீ, தஃப்சீர் இப்னு கஸீர் அல்முஃமின் வசனம்-98

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ( إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي النَّوْمِ فَلْيَقُلْ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ ‏.‏ فَإِنَّهَا لَنْ تَضُرَّهُ ) “உங்களில் ஒருவர் தூக்கத்தின்போது திடுக்கமடைந்தால், ‘பரிபூரணமான அல்லாஹ்வுடைய வார்த்தையைக் கொண்டு அவனுடைய கோபம், தண்டனை, அவனுடைய அடியார்களால் விளையும் தீங்குகள், ஷைத்தான்களின் தூண்டுதல்கள், அவை என்னை அண்டுவது ஆகியவற்றிலிருந்து நான் பாதுகாப்பு கோருகிறேன்’ என்று ஓதிக் கொள்ளவும். நிச்சயமாக அந்த கனவு அவருக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்தாது" என்று கூறினார்கள்.

 

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் தனது பிள்ளைகளில் (சொல்வதை விளங்கிக் கொள்ளும்) வயது வந்தவர்களுக்கு இந்த பிரார்த்தனையை   கற்றுக்கொடுப்பார்கள். விவரம் அறியாத சிறு பிள்ளைகளுக்கு இந்த  பிரார்த்தனையை எழுதி அவர்களின் கழுத்துகளில் (தாயத்து போன்று) தொங்கவிடுவார்கள்.   அறிவிப்பாளர்:- அம்ரு பின் ஷுஐப் (ரலி) அவர்கள்   நூல்:- அபூதாவூத்-3893, திர்மிதீ-3441, தஃப்சீர் இப்னு கஸீர் அல்முஃமின் வசனம்-98

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் நமது வாழ்க்கையில் ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டிய இதுபோன்ற  பிரார்த்தனைகளை  ஏராளம் கற்றுத் தந்துள்ளார்கள்.

 

நமது வாழ்க்கையில் பல தருணங்களில், அதிலும் குறிப்பாக (அங்கத் தூய்மை எனும்) உளூ செய்ய ஆரம்பிக்கும்போது, குர்ஆனை ஓத ஆரம்பிக்கும்போது, உடலுறவின்போது, கழிப்பறைக்கு செல்லும்போது ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடவேண்டும்.

 

அல்லாஹுத்தஆலா நம்மை ஷைத்தானின் அனைத்து தீங்கிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...