திருக்கலிமா
إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا
إِلَهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ
"அல்லாஹ்வைத்
தவிர வேறு இறைவன் இல்லை" என்று அவர்களிடம் சொல்லப்பட்டபோது, நிச்சயமாகக் கர்வம் கொள்வோராகவே அவர்கள் இருந்தனர்.
திருக்குர்ஆன்:- 37:35
இஸ்லாத்தின் பார்வையில்
"லா இலாஹ இல்லல்லாஹ்" (வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு
யாருமில்லை.) என்ற வார்த்தை மகத்துவமிக்கவையாகும். அதைவிட உயரிய வார்த்தை வேறொன்றுமில்லை.
அதை ஓதி வருவோருக்கு எண்ணிலடங்கா நன்மைகள் பதிவு செய்யப்படுகிறது. தமது வாழ்நாளில்
அதை அதிகமாக ஓதி வருபவரின் இறுதிநிலை மிகச் சிறப்பாக இருக்கக்கூடும்.
இப்லீஸ்
அழிவுக்குள்ளாக்கிவிடுகிறான்
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( عَلَيْكُمْ بِلَا إلَهَ إِلَّا اللهُ والاسْتِغْفَار، فأكْثرُوا
مِنْهُمَا، فإنَّ إبْليسَ قَالَ: أهْلَكْتُ النَّاسَ بالذُّنُوبِ، وأهْلَكُونِي بِلَا
إلَهَ إِلَّا اللهُ والاسْتِغْفَار ) 'லா இலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறுவதையும் பாவமன்னிப்பு கோருவதையும்
வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவற்றை அதிகமாக செய்யுங்கள். ஏனெனில் இப்லீஸ், நான் மக்களைப் பாவங்கள் மூலம் அழிக்கிறேன்; ஆனால், அவர்களோ 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுவதன் மூலமும் பாவமன்னிப்பு கோருவதன் மூலமும் என்னை அழிக்கிறார்கள். அறிவிப்பாளர்:-
அபூபக்ர் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அபீயஅலா, தஃப்சீர் இப்னு கஸீர் ஆலுஇம்ரான் வசனம்-134
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( عَلَيْكُمْ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَالِاسْتِغْفَارِ، فَأَكْثِرُوا
مِنْهُمَا، فَإِنَّ إِبْلِيسَ قَالَ: أَهْلَكْتُ لنَّاسَ بِالذُّنُوبِ، وَأَهْلَكُونِي
بِ "لَا إِلَهَ إِلَّا اللَّهُ"، وَالِاسْتِغْفَارِ فَلَمَّا رَأَيْتُ
ذَلِكَ أَهْلَكْتُهُمْ بِالْأَهْوَاءِ، فَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ ) “லா இலாஹ இல்லல்லாஹ்”
எனும் கலிமாவையும், பாவமன்னிப்பு கோருதலையும் விடாப்பிடியாகப் பற்றிக்கொள்ளுங்கள்.
இவ்விரண்டையும் அதிகம் அதிகமாக கூறுங்கள். இப்லீஸ் இவ்வாறு கூறியுள்ளான்: மக்கள் அழிந்ததென்பது
பாவங்களினால் தான். "லா இலாஹ இல்லல்லாஹ்" எனும் கலிமாவின் மூலமும் பாவமன்னிப்புத்
தேடலின் மூலமும் அவர்கள் என்னை அழிவுக்குள்ளாக்கிவிட்டார்கள். இதை நான் பார்த்தபோது, மன இச்சைகளின் மூலம் அவர்களை அழிவுக்குள்ளாக்கிவிட்டேன். ஆனால்
(மன இச்சைகளின் வீழ்ந்த) அவர்கள், தாங்கள் நேர்வழியில் இருப்பதாக
எண்ணிக் கொள்கிறார்கள். நூல்:- அபூ யஃலா, தஃப்சீர் இப்னு கஸீர் முஹம்மது
வசனம்-19
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( مَنْ حَلَفَ فَقَالَ فِي حَلِفِهِ وَاللاَّتِ وَالْعُزَّى. فَلْيَقُلْ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ) யாரேனும் சத்தியம்
செய்யும்போது "லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸா சிலைகளின் மீது சத்தியமாக!"
என்று கூறினார் எனில், (அவர் அதற்குப் பரிகாரமாக) "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத்
தவிர வேறு யாரும் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லன்) என்று சொல்லிவிடட்டும். அறிவிப்பாளர்:-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-4860
கனத்தால் தாழ்ந்துவிடும்
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள், ( يَارَبِّ
عَلِّمْنِي شَيْئًا أُذَكُرُكَ بِهِ وَأَدْعُوكَ بِهِ ) "இறைவா! நான் உன்னை (திக்ர் எனும்) இறைதியானம் செய்வதற்கும்
உன்னிடம் பிரார்த்திப்பதற்குரிய ஒன்றை எனக்கு கற்றுத்தருவாயாக" என்று கேட்டார்கள்.
அல்லாஹ் "நீர், லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை கூறுவீராக!" என்று கூறினான்.
மூசா (அலை) அவர்கள், ( يَا رَبِّ كُلُّ عِبَادِكَ يَقُولُونَ هَذَا ) "இறைவா! உனது அடியார்கள்
அனைவருமே இதைத்தானே கூறுகிறார்கள்" என்றார்கள். அல்லாஹ், "நீர் லா இலாஹ இல்லல்லாஹ்
என்பதை கூறுவீராக!" என்று கூறினான். மூசா (அலை) அவர்கள், ( اِنَّمَا
اُرِيدُ شَيْئًا تَخُصُّنِي بِهِ ) "எனக்கு மட்டும் பிரத்தியேகமான ஒன்றை வழங்க வேண்டும் என்று நான்
விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
அல்லாஹ், ( يَا
مُوسَى ، لَوْ أَنَّ السَّمَوَاتِ السَّبْعَ وَالْأَرَضِينَ السَّبْعَ فِي كِفَّةٍ
، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ فِي كِفَّةٍ ، مَالَتْ بِهِنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ) "மூசா! ஏழு வானங்களும்
ஏழு பூமிகளும் தராசின் ஒரு தட்டிலும் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவை தராசின் மற்றொரு தட்டிலும் வைத்து நிறுத்தால் அவற்றில் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்ற (திருக்கலிமா
வைக்கப்பட்ட) தட்டு கனத்தால் தாழ்ந்துவிடும்" என்று கூறினான். அறிவிப்பாளர்:-
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- இப்னு ஹிப்பான்,
ஹாக்கிம், ஷரஹுஸ் ஸுன்னா இமாம்
பஙவீ, அல்ஹில்யா இமாம் அபூநயீம், அல்அஸ்மாஉஸ் ஸிஃபாத்
இமாம் பைஹகீ, தாரீக் திமிஷ்க் இமாம் இப்னு அசாகிர், ஹயாத்துஸ் ஸஹாபா 3/411
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் (அருமை நாயகம் - ஸல் அவர்களிடம்) ( يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَسْعَدُ
النَّاسِ بِشَفَاعَتِكَ يَوْمَ الْقِيَامَةِ ) "நாயகமே! மறுமைநாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம்
நற்பேறு பெறுகின்றவர் யார்?" என்று கேட்டேன்.
அப்போது அருமை நாயகம்
(ஸல்) அவர்கள், ( لَقَدْ ظَنَنْتُ
يَا أَبَا هُرَيْرَةَ أَنْ لاَ يَسْأَلَنِي عَنْ هَذَا الْحَدِيثِ أَحَدٌ أَوَّلُ
مِنْكَ، لِمَا رَأَيْتُ مِنْ حِرْصِكَ عَلَى الْحَدِيثِ، أَسْعَدُ النَّاسِ
بِشَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، خَالِصًا
مِنْ قَلْبِهِ أَوْ نَفْسِهِ ) "அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் (ஹதீஸ்)மீது உமக்கு இருக்கும்
பேராவல் எனக்குத் தெரியும். அதனால் இந்த செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு
யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன்" என்று கூறிவிட்டு, மறுமைநாளில் மக்கள்
அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார் எனில், உளப்பூர்வமாக தூய்மையான
எண்ணத்துடன் யார் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறினாரோ அவர்தான்" என்றார்கள். நூல்:-
புகாரீ-99
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள், ( جَدِّدُوا إِيمَانَكُمْ ) "நீங்கள் உங்களுடைய
இறைநம்பிக்கையை புதுப்பித்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அப்போது ( يَارَسُولَ اللَّهِ وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا ) "நாயகமே! எங்களுடைய
இறைநம்பிக்கையை எவ்வாறு நாங்கள் புதுப்பித்துக் கொள்வது?"
என்று கேட்கப்பட்டது. நபியவர்கள், ( أَكْثِرُوا
مِنْ قَوْلِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ) "நீங்கள் 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று கூறுவதை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்"
என்று கூறினார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத், அத்தர்ஙீபு வத்தர்ஹீபு, மஜ்மஉஸ் ஸவாயித், ஹயாத்துஸ் ஸஹாபா 3/13
மார்க்கத்தின்
மீதான ஊசலாட்டம் நீங்க
உஸ்மான் (ரலி) அவர்கள்
கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மரணமடைந்தபோது நபித்தோழர்கள் மிகுந்த
கவலையுற்றனர். எந்த அளவுக்கெனில் அவர்களில் சிலருடைய உள்ளங்களில் (மார்க்கத்தின் நிலைப்பாடு
குறித்து) ஊசலாட்ட சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தன. அந்தச் சிலரில் நானும் ஒருவனாக இருந்தேன்.
அப்போது அங்கு அமர்ந்திருந்த என்னை உமர் (ரலி)
அவர்கள் கடந்து சென்றபோது எனக்கு சலாம் கூறினார்கள். அதனை நான் உணரவே இல்லை. எனவே உமர்
(ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அது குறித்து முறையிட்டார்கள். பிறகு இருவருமே
வந்து எனக்கு சலாம் கூறினர். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "உமது சகோதரர் உமக்கு
உமர் சலாம் கூறியபோது அதற்கு பதில் சலாம் கூறாமல் இருந்தீரே என்ன காரணம்?" என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "அப்படிச் செய்யவில்லையே!"
என்று கூறினேன். அப்போது உமர், "இல்லை" அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பதில்
சலாம் கூறாமல் இருந்துவிட்டீர்" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் மீதாணையாக!
நீர் என்னை கடந்துச் சென்றதாகவோ, சலாம் கூறியதாகவோ எந்த உணர்வும் எனக்கு ஏற்படவில்லை" என்று
கூறினேன்.
அப்போது அபூபக்ர்
(ரலி) அவர்கள், "உஸ்மான் கூறியது உண்மைதான். அந்த உணர்வு ஏதும் ஏற்படாதவாறு ஏதோ
ஒன்று உன்னை திசை திருப்பிவிட்டது" என்று கூறினார்கள்.
அதற்கு நான், "ஆம் உண்மைதான்"
என்றேன். "அது என்ன?" என்று அவர் கேட்டார்கள். அதற்கு நான், ( تَوَفَّى اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى
نَبِيَّهُ قَبْلَ أَنْ أَسْأَلَهُ عَنْ نَجَاةِ هَذَا الْأَمْرِ ) "இத்தகைய (ஊசலாட்ட) சிந்தனையில் தோன்றுவதிலிருந்து தப்பிப்பதற்கான
வழி குறித்து நாம் நபியவர்களிடம் கேட்பதற்கு முன்பே அல்லாஹ் தனது நபியை மரணிக்கச் செய்து
விட்டானே" என்று கூறினேன்.
அப்போது அபூபக்ர்
(ரலி) அவர்கள், "அது குறித்து நபியவர்களிடம் நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன்"
என்று கூறிவிட்டு, (ஒருமுறை) நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம், "நாயகமே! இத்தகைய ஊசலாட்ட
சிந்தனைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழி என்ன?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( مَنْ قَبِلَ مِنِّي الْكَلِمَةَ الَّتِي
عَرَضْتُ عَلَى عَمِّي فَرَدَّهَا فَهِيَ لَهُ نَجَاةٌ ) "எனது சிறிய தந்தை (அபூதாலிபு)க்கு நான் எந்த வாக்கியத்தை முன்மொழிமாறு
கூற, அவர் அதற்கு மறுப்பு
தெரிவித்தாரோ அந்த (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற) வாக்கியத்தை யார் என்னிடமிருந்து (மனமார)
ஏற்றுக்கொண்டாரோ அவருக்கு அது ஈடேற்றம் அளிக்கும்" என்று கூறினார்கள். நூல்:-
முஸ்னது அஹ்மத், மிஷ்காத்-41
மார்க்கத்திற்கு முரணாக
எழும் ஊசலாட்ட சிந்தனையிலிருந்து விடுதலை பெறுவதற்கு "லா இலாஹ இல்லல்லாஹ்"
என்ற திருக்கலிமாவை அதிகமதிகம் ஓதி வருவதே தீர்வாகும் என்கிறது இந்த நபிமொழி.
நரக விடுதலை
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( فَإِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ لا إِلَهَ إِلَّا اللَّهُ
يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ ) அல்லாஹ்வின் அன்பை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' என்று யார் கூறினாரோ
அவர்மீது அல்லாஹ் நரகத்தை தடை செய்துவிட்டான். அறிவிப்பாளர்:- முஹ்மூத் பின் ரபீஉல் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-425, முஸ்லிம்
அபூஸைத் அல்குர்துபீ
(ரஹ் ) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَالَ لَا الْهُ إِلَّا اللَّهُ سَبْعِينَ أَلْفَ
مَرَّةٍ كَانَتْ لَهُ فِدَاءٌ مِنْ النَّارِ ) "யார் ‘லா
இலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவை எழுபதினாயிரம் தடவை ஓதினாரோ, அவருக்கு அது நரக நெருப்பிலிருந்து மீட்கும் தொகையாக
இருக்கும்” என்று நல்லோர்களில் சிலர் கூற கேட்டுள்ளேன். எனவே, இதை ஆதரவு வைத்தவாறு, நான் என் மனைவிக்காக எழுபதினாயிரம் தடவை ஓதி அன்பளிப்புச் செய்தேன்.
எனக்காகவும் அதுபோன்று பல தொகைகளை ஓதி மறுமைக்காகச் சேமித்து வைத்துக் கொண்டேன்.
இந்நிலையில் எங்களுடன்
வாலிபர் ஒருவர் இரவு தங்கினார். அவர் (கஷ்ஃப் எனும்) அகப்பார்வை உள்ளவர் என்பதாகவும், சுவர்க்கம், நரகம் சம்பந்தமான
காட்சிகளும் அவருக்குத் தெரிகின்றன என்பதாகவும் அவரைப் பற்றிப் பிரபலமாகப் பேசப்பட்டு
வந்தது. அது பற்றி எனக்குச் சந்தேகம் இருந்து வந்தது. ஒருநாள் அந்த வாலிபர் எங்களுடன்
சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென வேகமாகச் சப்தமிட்டு அலறினார். அவருக்கு
மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது. ( يَا عَمِّ هَذِهِ أُمِّي فِي النَّارِ، وَهُوَ يَصِيحُ
بِصِيَاحٍ عَظِيمٍ )
“என்னுடைய சிறிய தந்தையே! என்னுடைய தாயார் நரகத்தில் இருக்கிறார். அவர் அங்கிருந்து
மிகவும் சப்தமிட்டு அலறுகிறார். (அக்காட்சி
எனக்குத் தெரிகிறது)” என்று கூறினார்.
அவ்வாலிபருடைய திடுக்கத்தை
நான் பார்த்தபோது, நான் ஓதி வைத்திருந்த கலிமாவிலிருந்து ஒரு எழுபதாயிரத்தை அவருடைய
தாயாருக்கு (ஈஸால் ஸவாப்) அன்பளிப்புச் செய்துவிட்டால், எழுபதாயிரம் தடவை கலிமாவை ஓதுவதினால் நரக விடுதலை
கிடைக்கும் என்ற விஷயத்தின் உண்மையும், அவ்வாலிபருடைய அகப்பார்வை சம்பந்தமான சந்தேகத்தையும்
நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று எண்ணியவாறு, ( اللَّهُمَّ إِنَّ السَّبْعِينَ أَلْفًاً
فِدَاءَ هَذِهِ الْمَرْأَةِ أُمّ هَذَا الشَّابُّ )
"இறைவா! (நான்) எழுபதாயிரம்
தடவை ஓதி வைத்திருக்கும் கலிமா, இந்த வாலிபரின் தாயாரின் நரக விடுதலைக்கு பரிகாரமாக ஆகட்டும்"
என்று பிரார்த்தித்தேன். அவ்வாறு நான் அன்பளிப்புச் செய்ததை எவரிடமும் கூறவில்லை; அது குறித்து அல்லாஹ்வுக்கும்
எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதன் பிறகு, அவ்வாலிபர், ( يَا عَمِّ هَا هِيَ أَخْرَجْتِ الْحَمْدُ لِلَّهِ ) “என்னுடைய சிறிய தந்தையே!
இப்பொழுது என் தாயார் நரக (வேதனையிலிருந்து) விடுதலை செய்யப்பட்டுவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்"
என்று கூறினார்.
இச்சம்பவத்தினால்
எனக்கு இரண்டுவிதப் பலன்கள் கிடைத்தன. முதலாவது, எழுபதாயிரம் தடவை கலிமா ஓதினால் நரக விடுதலை கிடைக்கும்
என்று நான் கேள்விப்பட்டிருந்ததை அனுபவத்தில் தெரிந்துகொண்டேன். இரண்டாவது, அவ்வாலிபரின் அகப்பார்வை
குறித்தும் உறுதிநிலை ஏற்பட்டது. நூல்:- அல்முகஃப்பல் கபீர் ( المقفّى الكبير ) இமாம் தகியுத்தீன் அல்மிக்ரீஸீ
ஹிஷாம் பின் அம்மார்
(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இறைத்தூதர் ஈசா (அலை) அவர்கள், ( يَا رَبِّ، أَنْبِئْنِي عَنْ هَذِهِ
الْأُمَّةِ الْمَرْحُومَةِ ) "இறைவா அருள்பாளிக்கப்பட்ட அந்த சமுதாயத்தைப் பற்றி எனக்கு தெரிவிப்பாயாக!"
என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அல்லாஹ், ( أُمَّةُ أَحْمَدَ، هَمْ عُلَمَاءُ حُكَمَاءُ
كَأَنَّهُمْ أَنْبِيَاءُ، يَرْضَوْنَ مِنِّي بِالْقَلِيلِ مِنَ الْعَطَاءِ،
وَأَرْضَى مِنْهُمْ بِالْيَسِيرِ مِنَ الْعَمَلِ، وَأُدْخِلُهُمُ الْجَنَّةَ بِلَا
إِلَهَ إِلَّا اللَّهُ، يَا عِيسَى، هُمْ أَكْثَرُ سُكَّانِ الْجَنَّةِ ;
لِأَنَّهُ لَمْ تَذِلَّ أَلْسُنُ قَوْمٍ قَطُّ بِلَا إِلَهَ إِلَّا اللَّهُ كَمَا
ذَلَّتْ أَلْسِنَتُهُمْ، وَلَمْ تَذِلَّ رِقَابُ قَوْمٍ قَطُّ بِالسُّجُودِ كَمَا
ذَلَّتْ بِهِ رِقَابُهُمْ ) "அஹ்மத் நபி (ஸல்) அவர்களின் சமுதாயம். அவர்களில்
உள்ள அறிஞர்கள், ஞானிகள் நபிமார்களை போன்றவர்கள். என்னிடமிருந்து கிடைக்கின்ற குறைவான அருட்கொடைகளை வைத்துக்கொண்டு
திருப்தியடைவார்கள். அவர்களுடைய குறைவான நற்செயல்களால் அவர்களிடம் நான் திருப்தியடைவேன்; "லா இலாஹ இல்லல்லாஹ்"
எனும் கலிமா மூலம் அவர்களை நான் சொர்க்கத்தில் நுழைய அனுமதிப்பேன். ஈசாவே! அவர்கள்தான்
சொர்க்கத்தின் மிக அதிகமாக வசிக்கக் கூடியவர்கள். ஏனென்றால், லா இலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமா கூறி அவர்களின் நாவுகள்
பணிந்தது போல் வேறு எந்த கூட்டத்தினரின் நாவுகளும் பணிந்ததில்லை. சிரம் பணிதல் மூலமாக
அவர்களின் பிடரிகள் பணிந்தது போல் மற்ற எந்த கூட்டத்தினரின் பிடரிகளும் பணிந்ததில்லை"
என்று கூறினான். நூல்:- இப்னு அசாகிர், அல்பிதாயா வந்நிஹாயா
பாவங்கள் மன்னிக்கப்படலாம்
அப்துல்லாஹ் பின்
அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருமுறை) இரண்டு பேர் கண்மணி பெருமானார் (ஸல்)
அவர்களிடம் ஒரு வழக்கைக்
கொண்டுவந்தனர். அப்போது நபியவர்கள் வாதியிடம் ஆதாரத்தைக் கோரினார்கள். (ஆனால்,) அவரிடம் ஆதாரம் எதுவும்
இல்லை. எனவே, யாரிடம் உரிமை கோரப்பட்டதோ அவரை (பிரதிவாதியை) நபியவர்கள் சத்தியம் செய்யச் சொன்னார்கள்.
உடனே அவர், "யாரைத் தவிர வேறு
இறைவன் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(கிறேன் என்று சொல்லி, பொய்ச் சத்தியம் செய்)துவிட்டார்.
(அவர் பொய்யுரைக்கிறார் எனும் தகவல் வானவர் ஜிப்ரீல் - அலை அவர்கள் மூலமாக நபியவர்களுக்கு
கிடைத்தது.) அப்போது நபியவர்கள், நீர் (பொய்ச் சத்தியம்) செய்துவிட்டீர். ஆயினும், அல்லாஹ்வைத் தவிர
வேறு இறைவனில்லை என்று உளத்தூய்மையோடு நீ கூறிய காரணத்தால் உனக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டது"
என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-2850, முஸ்னது அஹ்மத்-2167
அண்ணல் நபி (ஸல்)
அவர்களுக்கு, இவர் பொய் சத்தியம் செய்கிறார் என்பது இறைச்செய்தி மூலம் தெரிய வந்தது. இருப்பினும், "யாரைத் தவிர வேறு
இறைவன் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறேன்" என அந்த மனிதர் 'கலிமா'வை மொழிந்த காரணத்தால்
அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. 'லா இலாஹ இல்லல்லாஹ்' எனும் ஓரிறை கலிமாவை தூய எண்ணத்தோடு (இக்லாஸ்) கூறுவதால்
பாவமன்னிப்புக் கிட்டும் என இதிலிருந்து தெரிகிறது. நூல்:- ஹாஷியத்துஸ் ஸின்தீ
"லா இலாஹ இல்லல்லாஹ்" எனும் ஓரிறை கலிமாவை தூய எண்ணத்தோடு
கூறுவதால் (அல்லாஹ் சம்பந்தப்பட்ட) பாவங்கள் மன்னிக்கப்படக்கூடும் என்பது தெளிவாகிறது.
வேதனை இலேசாக்கப்படும்
நபிகள் நாயகம் முஹம்மது
(ஸல்) அவர்களின் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் நரகத்தில் வேதனைச் செய்யப்படுவார்கள்.
அவர்கள் வேதனை தாங்க முடியாமல் நரகத்தின் காப்பாளர் மாலிக் (அலை) அவர்களிடம், "தங்கள் இன்னும் எங்களை
வேதனைச் செய்ய நாடுகிறீர்களா? எங்கள் மீது இரக்கம் காட்டக் கூடாதா?" என்று ஓலமிட்டு கதறுவார்கள்.
அப்போது மாலிக் (அலை) அவர்கள், "உங்கள் இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டவில்லையே!
அவன் கோபமாக இருக்கின்றபோது, நான் எப்படி உங்கள்
மீது இரக்கம் காட்ட முடியும்?" என்று கூறுவார். அப்போது அவர்கள், "கருணையாளனுக்கெல்லாம்
கருணையாளனே" என்று அழைப்பார்கள். அது கேட்ட மாலிக் (அலை) அவர்கள் நீங்கள் ஷஹாதத்
கலிமாவை கூறுங்கள்" என்று சொல்லி கொடுப்பார். உடனே அவர்கள் எல்லோரும் பெரும் சப்தமாக
ஷஹாதத் கலிமாவை கூறுவார்கள்.
இந்தச் சப்தம் அதிகமாகவே
அல்லாஹ் வானவத் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தைச்
சேர்ந்த சிலர் நரகத்திலிருந்து தவ்ஹீத் கலிமாவையும் ஓதிக்கொண்டிருக்கின்றனர். எனவே, "நீ சென்று மாலிக்
(அலை) அவர்களிடம் அவர்களின் வேதனையை இலேசாக்க சொல்வாயாக" என்று கூறுவான். உடனே
ஜிப்ரீல் (அலை) அவர்கள் மாலிக் (அலை) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் கட்டளையை தெரியப்படுத்துவார்.
உடனே, அவர்களுக்கு வேதனை
இலேசாக்கப்படும். நூல்:- தப்ரானீ
நினைவுபடுத்த வேண்டும்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( لَقِّنُوا
مَوْتَاكُمْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ) உங்களில் இறப்பின்
நெருக்கத்தில் இருப்பவருக்கு லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு
வேறு இறைவன் இல்லை) எனும் கலிமாவை நினைவுபடுத்துங்கள். அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ
(ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1672, அபூதாவூத்-2710, திர்மிதீ-898
கண்மணி பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ
كَانَ آخِرُ كَلاَمِهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ دَخَلَ الْجَنَّةَ ) எந்த மனிதனின் இறுதிப் பேச்சு
"லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற கலிமாவாக அமைந்துவிட்டதோ அவர் சொர்க்கம் சென்று
விடுவார். அறிவிப்பாளர்:- முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-2709, திர்மிதீ-899
மரணத்தை நெருங்கிக்
கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று ஆறுதலாக அவருக்கு அருகில் அமர்ந்து திருக்கலிமாவை
நினைவுபடுத்துவது நபிவழியாகும்.
ஏனெனில், இறப்பவரின் இறுதி பேச்சு "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற
கலிமாவாக இருந்துவிட்டால் அவர் சொர்க்கம் சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அந்நேரத்தில் அவரை கலிமாவை கூறுமாறு வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ
கூடாது. அவர், ஒருமுறை கலிமாவை மொழிந்துவிட்டால் போதும். மீண்டும் மீண்டும் கூறும்படி
வற்புறுத்தக் கூடாது.
இறுதிக்கட்டத்தில்
உள்ள ஒருவர் எத்தகைய துன்பத்தில் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது. நாம் கலிமாவை
சொல்லுமாறு வற்புறுத்த,
அவர் எரிச்சலடைந்து அதை வெறுத்துவிடக்கூடும்.
எனவே, அவருக்கு அருகிலிருந்து அமர்ந்து அவர் செவியுறுமாறு
நாம் சப்தமாக அந்த கலிமாவை ஓதிக் கொண்டிருக்க வேண்டும். இதுவே கலிமாவை அவருக்கு நினைவுபடுத்துவதாகும்.
இதில் நமக்கு கவனம் தேவை.
எனவே, நாம் வாழ்நாளில் அதிகமாக
"லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற திருக்கலிமாவை ஓதும் நற்பாக்கியத்தையும், நமது இறுதிநேரத்தில்
திருக்கலிமாவை ஓதியவாறு இறக்கும் நற்பாக்கியத்தையும் அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்குவானாக!
ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment