Search This Blog

Monday, 5 May 2025

பெற்றோரின் பிம்பங்கள்

 

பெற்றோரின் பிம்பங்கள்

 

أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

(யூதர்களே! நபி) யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (அவருக்கு) அருகாமையில் இருந்தீர்களா? அவர் தன் சந்ததியை நோக்கி எனக்குப்பின் எதை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு "உங்களுடைய இறைவனும், உங்களுடைய மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே இருப்போம்" என்றே கூறினார்கள். திருக்குர்ஆன்:- 2:133

 

உலக குழந்தைகள் தினம் முதன்முதலில் 1954 ஆம் ஆண்டு உலகளாவிய குழந்தைகள் தினமாக நிறுவப்பட்டது மற்றும் சர்வதேச ஒற்றுமை, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள் நலனை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது.

 

நாம் சொல்வதையெல்லாம் நம்முடைய பிள்ளைகள் கடைபிடிப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை; ஆனால், உறுதியாக நாம் செய்வதைத் தான் அவர்கள் செய்வார்கள்.

 

குழந்தைகளுக்கு எதிரில் எப்போதும் செயல்ரீதியான மாதிரியை வைக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை குழந்தைகளுக்கு எந்நேரமும் எதிரில் உள்ள ஒரு மௌனமான ஆசிரியர் போன்றதாகும். அதிலிருந்து குழந்தைகள் எப்போதும் பயின்றுகொண்டு இருக்கின்றார்கள். எனவே, குழந்தைகள் எதிரில் விளையாட்டுக்காகக்கூட தவறான எந்த காரியத்தையும் செய்துவிடக் கூடாது.

 

பிள்ளைகளிடம் தொழு! நோன்பு வை! குர்ஆன் ஓது! என்று நாம் சொல்வதைவிட அவர்கள் பார்க்க நாம் இதனை தொடர்ந்து செய்தால் அவர்களுக்கு இதனை செய்ய முயற்சிப்பார்கள்.

 

தந்தை கூறினார்: மகனே! நீ செல்லும் வழியில் கவனமாக செல்!

மகன் கூறினான்: தந்தையே! நீங்களும் கவனமாக இருங்கள். நான் உங்கள் கால்தடங்கள்மீது தான் நடக்கிறேன்.

 

வீட்டுச்சூழல்

 

(இறைத்தூதர் இப்ராஹீம்-அலை அவர்கள்) என் இறைவா! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள்புரிவாயாக!" என்றார். திருக்குர்ஆன்:- 37:100

 

பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களது மனைவி இறைமறுப்பாளராக இருந்ததால் அவரது மகனும் இறைமறுப்பாளராக ஆகிவிட்டார்.

 

இமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களுடைய தாயார் தனது மடியில் குழந்தை பால் குடிக்கும்போதும் தூங்கும்போதும் பேசும்போதும் எல்லா நிலையிலும் குர்ஆனைக் கற்றுக்கொடுத்தார்கள். இமாமவர்கள் பெரியவர் ஆனதும் ஏழு வயதிலேயே குர்ஆனை மனனமாக ஓதுபவர்களாக மாறிவிட்டார்கள்.

 

இது எப்படி சாத்தியமானது? குழந்தையை வளர்த்த தாயின் மும்முரமான முயற்சி என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்?

 

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தங்களுடைய தாயிடமிருந்து குர்ஆனைக் கற்றுக்கொண்டார்கள். நூல்:- அஹ்வாலுத் தாபியீன்

 

பேரறிஞர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். நான் குர்ஆன் மனனம் செய்ததற்கு என் தாயார் தான் காரணம். நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, என் தாயார் என்னை இரவில் எழுப்புவார்கள்; பாக்தாதின் குளிர்ந்த இரவு நேரங்களில் தண்ணீரை சுட வைப்பார்கள்; எனக்காக அனைத்து வசதிகளையும் செய்து தருவார்கள்; ஆடையை அணிவித்து என்னை ஃபஜ்ர் தொழுகைக்காக தயார் செய்வார்கள். இருட்டு காரணமாகவும் பள்ளிவாசல் தூரமாக இருந்த காரணத்திற்காகவும் பள்ளிவாசல் வரை என்னோடு வருவார்கள்.

 

இஸ்லாத்தின் பெரும் பெரும் மேதைகளெல்லாம் தன் தாயிடமே நல்லொழுக்கத்தையும், குர்ஆனையும் கற்றுத் தேர்ச்சிப்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நமது  மரணத்திற்குப் பிறகு நாம் நன்மைகள் பெற, நமது பிள்ளைகள் காரணமாக அமைய வேண்டும் என்று விரும்பினால், பிள்ளைகள் தொழுதல், குர்ஆன் ஓதுதல் போன்ற விஷயத்தில் நாம் அக்கறைகொள்ள வேண்டும்.  

 

அவர்கள் உலக காரியங்களை செய்துகொள்வதற்கு நாம் உதவுவதுபோல், அவர்கள் ஐவேளை தொழுவதற்கும், மார்க்க ஞானங்களை கற்றுக்கொள்வதற்கும், பண்பாளர்களாக திகழ்வதற்கும், நாம் உதவி செய்தாக வேண்டும். இது பெற்றோர்களாகி நம்மீது கடமையாகும். இந்த கடமைகளை நாம் செய்ய தவறும்போது, அவர்கள் நம்மை, இம்மையிலும், மறுமையிலும் நம்மை கேவலத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

குழந்தைகள் வீட்டுச்சூழல் மூலமாகத்தான் நல்லது கெட்டது எவை? என்பதைப் புரிந்துகொள்கின்றனர். பெற்றோர் மற்றும் வீட்டுப் பெரியவர்களின் சொல், செயல்களைப் பார்த்து தான் தன்னை வடிவமைத்துக் கொள்கின்றனர். எனவே, இறைவணக்கத்தின் மீதுள்ள ஆர்வமும், நற்பண்புகளும் நம்மிடம் இருந்தால் தான் நமது பிள்ளைகளிடமும் அதனை எதிர்பார்க்க முடியும்.

 

வீட்டில் வழிபாடு

 

(இறைத்தூதர் இப்ராஹீம்-அலை அவர்கள்) என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக! (என்று பிரார்த்தித்தார்கள்.) திருக்குர்ஆன்:- 14:40

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை என்னுடைய சின்னம்மா அன்னை மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கினேன். அந்த இரவில் அருமை நாயகம் (ஸல்) அவர்கள் இரவு தொழுகைக்காக எழுந்து (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்துவிட்டு தொழுகைக்கு தயாரானார்கள். நானும் அண்ணலாரைப் போன்று அங்கத்தூய்மை செய்துவிட்டு அண்ணலாரின் இடதுபுறத்தில் நின்றேன். அப்போது அண்ணலார் என்னை பிடித்து இழுத்து வலது புறத்தில் நிற்க வைத்தார்கள். பிறகு நான் அண்ணலாருடன் தொழுகையை நிறைவேற்றினேன். நூல்:- அபூதாவூத்-610

 

 "தாய் சட்டியில் சோறு ஆக்கினால், பிள்ளை சுட்டியில் சோறு ஆக்கும்" என்பது கிராமத்து சொல்வழக்கு.

 

பிள்ளைகள் தம் வீட்டு பெரியவர்களின் ஒவ்வொரு நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக  இருக்கிறார்கள். ஆம்!  சிறியவர்கள் பெரியவர்களை பின்பற்றக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

 

எனவே, நாம் வீட்டில் இறைவழிபாடுகள் புரிகின்றபோது, நம் வீட்டு பிள்ளைகளிடமும் அது பிரதிபலிக்கின்ற வாய்ப்பிருக்கிறது. மேலும், அதன்மூலம் நம் வீட்டில் இறையருளும், மன அமைதியும் கிடைக்கப் பெறலாம்.

 

துருக்கியில் பள்ளிவாசல் ஒன்றில் எழுதப்பட்டுள்ள  ஒரு வாசகம்: அன்பின் சக முஸ்லிமே, நீ தொழும்போது உன்  பின்னாலிருந்து சிறுவர் சிறுமியரின் சப்தம் கேட்கவில்லையெனில், உனது அடுத்த சந்ததியின் வாழ்வு,எதிர்காலம் பற்றி  நீ அச்சப்படு!

 

பழக்கப்படுத்துதல்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا نَحَلَ وَالِدٌ وَلَدًا مِنْ نَحْلٍ أَفْضَلَ مِنْ أَدَبٍ حَسَنٍ ) தந்தை ஒருவர், தம் பிள்ளைக்கு நல்லொழுக்கத்தைவிட சிறந்த ஒரு அன்பளிப்பை தந்திட இயலாது. அறிவிப்பாளர்:- அம்ரு பின் சயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் நூல்:-திர்மிதீ-1875, முஸ்னது அஹ்மத்

 

அபூதைய்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் நோயால் பீடிக்கப்பட்டு வாழ்க்கையின் இறுதியில் இருந்தபோது, ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்கள் நலம் விசாரிக்க வந்தார்கள். நலம் விசாரித்துவிட்டு பிறகு, "பொது நிதியிலிருந்து உங்களுக்கு ஏதேனும் நன்கொடையை அனுப்பி வைக்கட்டுமா?" என்று கேட்டார்கள். இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள், "எனக்கு அதன் தேவை இல்லை" என்று கூறினார்கள். ஜனாதிபதி அவர்கள், "உங்களுக்கு தேவைப்படவில்லை என்றாலும் உங்களுக்கு பின்பு உங்களின் பெண் பிள்ளைகளுக்கு அது பயன்படுமல்லவா? என்றார்கள்.

 

உடனே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "எனது பெண் பிள்ளைகளுக்கு ஏழ்மை வந்துவிடும் என்று நீங்கள் அஞ்சுகிறார்களா?” என்று கேட்டுவிட்டு,  ( اِنِّي اَمُرتُ بَنَاتِي يَقرَأنَ کُلَّ لَيلَةٍ سُورَةَالوَاقِعَةِ اِنِّي سَمِعتُ رَسُولَ اللَّهِ صلعم يَقُولُ مَن قَرَأَ سُورَةَالوَاقِعَةِ کُلَّ لَيلَةٍ لَّم تُصِبهُ فَاقَةٌ اَبَدًا ) நான் எனது பெண் பிள்ளைகளுக்கு ஒவ்வொரு இரவிலும் வாகிஆ (எனும் திருக்குர்ஆனின் 56-வது) அத்தியாயத்தை ஓதுமாறு கட்டளையிட்டுள்ளேன். ஏனெனில், 'எவரொருவர் ஒவ்வொரு இரவிலும் ‘வாகிஆ’ அத்தியாயத்தை ஓதி வருவாரோ அவருக்கு வறுமை ஏற்படாது' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். நூல்:- இப்னு கஸீர், ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-2 பக்கம்-823

 

மனிதன் தமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றிக்கொள்ள, அல்லாஹ்விடம் எவ்வாறு கேட்டுப்பெற வேண்டும் என்பதை அருமை நாயகம் (ஸல்) அவர்கள் அழகிய வழிமுறைகளில் கற்றுத்தந்துள்ளார்கள். அந்த வழிமுறைகளை பெற்றோர்களும் கற்று, தமது பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டும்.

 

பேணுதல்

 

ஒருநாள் மதிய நேரம், லுஹர் தொழுகைக்குப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனதருமை மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டிற்கு பேரப்பிள்ளைகளைக் காணச் சென்றிருந்தார்கள். அங்கே இருவரும் இல்லை. மகளிடம் விசாரித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், “வெளியே  விளையாடச் சென்றிருப்பார்கள். இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள்” என்று கூறினார்கள்.

 

நீண்ட நேரமாகியும் இருவரும் வீட்டிற்கு வராததால் கலக்கமடைந்த நபியவர்கள் பேரக்குழந்தைகளை ஊருக்குள் தேடிப் பார்த்துவிட்டு, மதீனாவிற்கு வெளியே பாலைவனத்தை நோக்கி ஒரு வித பதற்றத்தோடு அங்கு வருவோர் போவோரிடம் விசாரித்தவாறு சென்றார்கள். அங்கு ஆடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இடையர் ஒருவர் நபியவர்களின் பதற்றத்தைக் கண்டு, அருகில் வந்து என்ன ஏது? என்று விசாரித்தார். நபியவர்கள் விஷயத்தைக் கூறினார்கள்.

 

அப்போது அவர், “நாயகமே! நீங்கள் அச்சப்பட வேண்டாம். சற்று முன்னர் தான் அந்த இருவரும் இங்கே வந்தனர். அவர்கள் முகத்தில் நான் பசியின் ரேகை படர்ந்திருந்ததை பார்த்து விட்டு, என் ஆட்டிலிருந்து பால் கறந்து தரட்டுமா? என்று இருவரிடமும் கேட்டேன்.

 

அப்போது அவ்விருவரும், “நீங்கள் இந்த ஆடுகளின் உரிமையாளரா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அவ்விருவரும், “அப்படியென்றால் உங்களுக்கு உரிமையில் இல்லாத இந்த ஆட்டில் இருந்து பால் அருந்துவது எங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல (ஹலால் அல்ல)” என்று கூறி மறுத்துவிட்டு, அதோ அங்கிருக்கிற பேரீத்தம் மரம் நிறைந்த தோட்டத்தை நோக்கி இருவரும் சென்றார்கள்” என்றார். 

 

நபியவர்கள், அந்த தோட்டத்திலுள்ள ஓர் மர நிழலில் தமது பேரப்பிள்ளைகள் இருவரும் பசி மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். பிறகு, நபியவர்கள் அவ்விருவரையும் எழுப்பி, வாரி அணைத்து முத்தமிட்டு இருதோள் புஜங்களிலும் இருவரையும் சுமந்தவர்களாக தங்களது மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து, “ஃபாத்திமா! மிக அழகிய முறையில் குழந்தைகளை உருவாக்கியிருக்கின்றாய்” என ஆனந்தக் கண்ணீரோடு கூறினார்கள்.  நூல்:- துர்ரியத்துத் தாஹிரா

 

காபூலுடைய அரசர் தோஸ்து முஹம்மத் கான் என்பவர் தம்முடைய எதிரிகள் மீது படையெடுப்பதற்காக தன்னுடைய மகனான இளவரசனை தூரமாக அனுப்பிவைத்தார். ஒற்றர்கள் மூலமாக தினந்தோறும் நடக்கும் விஷயங்களை அவர் ஆய்வு செய்து செவியேற்றும் வந்தார். அவ்வாறு ஒருநாள் ஒரு ஒற்றன் வந்து, "உங்களுடைய மகன் இளவரசன் தோற்று புறமுதுகிட்டு ஓடிவிட்டார்" என்று கூறினான். அரசர் மிகவும் கவலைகொண்டவராக சோகத்தோடு வீட்டுக்கு வந்து தமது மனைவியிடம் விஷயத்தைக் கூறினார். அப்போது அவருடைய மனைவி, "விஷயம் பொய்யாக இருக்கும்; கவலையை விடுங்கள்" என்று ஆறுதல் கூறினார்.

 

சில நாள்களுக்கு பிறகு மற்றொரு ஒற்றன் வந்து, "அரசரே! உங்கள் மகன் தோற்று புறமுதுகிட்டு ஓடவில்லை. முதலில் சொன்ன செய்தி தவறானது. அவர் வெற்றிவாகை சூடியவராக ஊர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்" என்று கூறினான்.

 

உடனே அரசன் மிகவும் சந்தோஷப்பட்டவராக தன்னுடைய மனைவியிடத்தில் வந்து, "நான் உன்னிடம் உமது மகன் குறித்து கூறியபோது, அந்த விஷயம் பொய்யானது என்று கூறினாயே! அது குறித்து நீ எவ்வாறு தெரிந்துகொண்டாய்? என்று வினவினார்.

 

மனைவி, "என் பிள்ளை கருவுற்ற நாளில், இறைவா! இன்றிலிருந்து எனக்கு பிள்ளை பிறந்து அந்தப் பிள்ளையின் பால்குடி காலம் வரை, நான் அனுமதிக்கப்படாத (ஹராமான) அல்லது சந்தேகத்திற்குரிய உணவு எதையும் உண்ணமாட்டேன்" என்று அல்லாஹ்விடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

 

எனவே, அன்றிலிருந்து நான் ஒவ்வொரு நாளும் தொப்பிகளை தைத்து என்னுடைய பணிப்பெண் மூலமாக அதை விற்றுவந்தேன். அதன் மூலமாக கிடைத்த சிறிய தொகையை வைத்து தனியாக சமைத்து சாப்பிட்டுவந்தேன். அரசாங்கத்தின் மூலமாக கிடைத்த தொகைகளை நான் பயன்படுத்தவில்லை. எனவே, அந்த காலகட்டத்தில் அனுமதிக்கப்படாத (ஹராமான), அல்லது சந்தேகத்திற்குரிய  உணவை விட்டு பரிபூரணமாக தவிர்ந்திருந்தேன். மேலும், பிள்ளைக்கு பாலூட்டும்போதெல்லாம் (உளூ எனும்) அங்கத்தூய்மையுடன் தான் பாலூட்டினேன்.                      

 

ஆகையால், இவ்வாறு நான் பேணுதலைக் கடைப்பிடித்து, பெற்று வளர்க்கப்பட்ட என் மகன் நல்ல தன்மைகள், சிறந்த ஒழுக்கங்கள் கொண்டவனாக இருப்பான் என்று நான் நம்பினேன். என் பிள்ளை யுத்தத்தில் வீர மரணம் அடையலாமே தவிர,  புறமுதுகிட்டு ஓடமாட்டான். அல்லது வெற்றியுடன் திரும்பிவருவான் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன்” என்று கூறினார். நூல்:- தர்பியத்தே அவ்லாது - அல்லாமா துல்ஃபிகார் அஹ்மது நக்சபந்தி (ரஹ்) அவர்கள்

 

நாம் வாழ்க்கையில் ஹலால் - ஹராம் குறித்து பேணுதலைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், நமது பிள்ளைகளும் அவ்வாறு வாழ்வதற்கு அல்லாஹ் போதுமானவன். பெற்றோரின் பேணுதல் பிள்ளைகளிடம் பிரதிபலிக்கும்.

 

இன்று பெற்றோர் பிள்ளைகளை ஒழுக்க சீலர்களாக ஆக்குவதற்காக படாதபாடுபடுகின்றனர். இஸ்லாம், குழந்தை பிறந்துவிட்டால் முதலாவதாக குழந்தையின் வலது காதில் பாங்கும் இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்கிறது. காரணம், குழந்தை பிறந்தவுடனேயே ஓரிறைக் கொள்கையையும், இஸ்லாமிய மாண்புகளையும் கற்றுத் தர துவங்கவேண்டும்.

 

பொறுப்புகளில் கவனம்

 

உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஜனாதிபதி பொறுப்பேற்ற முதல் நாளன்று அரசு பணிகளையெல்லாம் முடித்துவிட்டு களைப்புடன் வீட்டுக்கு வந்து காலை உணவை முடித்துவிட்டு படுத்துவிட்டார்கள். இறையச்சமும் நல்லொழுக்கமும் நிறைந்த அன்னாரின் மகனார் அப்துல் மலிக் (ரஹ்) அப்போது அங்கு வந்தார். வந்தவர் தமது தந்தைக்கு சலாம் கூறிவிட்டு, "(முன் சென்ற ஆட்சியாளர்களான) பனூ உமையாக்கள் பொதுமக்களிடமிருந்து அபகரித்து வைத்துள்ள பொருள்களைத் திருப்பிக் கொடுக்கும்முன் தாங்கள் தூங்க விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.

 

அன்னார், "லுஹர் தொழுகைக்குப் பின் அந்த வேலையைச் செய்கிறேன்" என்று கூறினார்கள். மகனார், லுஹர் வரையில் தாங்கள் உயிருடன் இருப்பீர்கள் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?" என்று கேட்டார்.

 

இதை கேட்டதும் அன்னார் துள்ளி எழுந்தார்கள். மகனை ஆரதழுவியவர்களாய், "மார்க்க காரியங்களில் எனக்கு உதவி செய்யக்கூடிய பிள்ளையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி!" என்று கூறினார்கள்.

 

எந்த ஒரு நற்காரியத்தையும் உடனுக்குடன் செய்துமுடிக்க வேண்டும். அதை காலதாமதப்படுத்துவது நல்லதல்ல என்ற சிறந்த பண்பை அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் தமது தந்தை உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டார்கள். ஆம்! உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் நீதி நேர்மைக்கும் நற்பண்புகளுக்கும் சொந்தக்காரர் திகழ்ந்தார்கள். எனவே, அவரின் பிள்ளைகளிடத்திலும் அந்த நற்பண்பு இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

 

"நூலைப்போல சேலை, தாயைப்போல பிள்ளை” என்பது கிராமத்துச் சொல்வழக்கு.

 

இமாமின் அறிவுரை

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ ) ஒருவர் தம்  பிள்ளைக்கு (ஒரேயொருமுறை) நல்லொழுக்கம் போதிப்பதானது. ஒரு ஸாஉ அளவு தர்மம் கொடுப்பதைவிடச் சிறந்தாகும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள்  நூல்:- திர்மிதீ-1874

 

இமாம் முகாத்தில் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் அப்பாசிய கலீஃபா அபூஜஅஃபர் அல்மன்சூர் அவர்களிடம் சென்றார்கள். அப்போது கலீஃபா, “எனக்கு ஏதேனும் அறிவுரை கூறுங்கள்” என்றார்.

 

அதற்கு இமாம், ( أَعِظُكَ بِمَا رَأَيْتَ أَمْ بِمَا سَمِعْتَ ؟ ) “நான் செவியுற்றதை கூறவா அல்லது பார்த்தவற்றைக் கூறவா?” என்று கேட்டார்கள். கலீஃபா, “நீங்கள் கண்ணால் பார்த்தவற்றையே கூறுங்கள்” என்றார்.

 

இமாம் அவர்கள், ( يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ الْخَلِيفَةَ الْأُمَوِيَّ : عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَنْجَبَ أَحَدَ عَشَرَ وَلَدًا وَتَرَكَ ثَمَانِيَةَ عَشَرَ دِينَارًا ، كَفِنَ بِخَمْسَةِ دَنَانِيرَ ، وَاشْتُرِيَ لَهُ قَبْرٌ بِأَرْبَعَةِ دَنَانِيرَ وَوُزِّعَ الْبَاقِي عَلَى أَبْنَائِهِ ) “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமய்யா கலீஃபாக்களில் ஒருவரான உமர்பின் அப்தில்அஜீஸ் (ரஹ்) அவர்களுக்கு பதினோறு பிள்ளைகள். ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற சொத்து பதினெட்டு தங்க காசுகள் மட்டுமே. அவற்றில் ஐந்து காசுகள் அவர்களின் அடக்கம் செய்வதற்காக செலவிடப்பட்டது.  அவர்களை அடக்கம் செய்திட மண்ணறை வாங்குவதற்கு நான்கு காசுகள் செலவாகிவிட்டன. மீதியிருந்தவை (ஒன்பது காசுகள் பத்து) மகன்களுக்கு பங்கிட்டுத் தரப்பட்டன.

 

( الْخَلِيفَةُ الْأُمَوِيُّ : هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ أَنْجَبَ أَحَدَ عَشَرَ وَلَدًا ، وَكَانَ نَصِيبُ كُلِّ وَلَدٍ مِنْ التَّرِكَةِ الْفَ الْفَ دِينَارٍ ) உமய்யா கலீஃபாக்களில் மற்றொருவரான ஹிஷாம் பின் அப்தில்மலிக் என்பவருக்கு பதினோறு பிள்ளைகள். அவர் இறந்தபின் அவரின் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் பத்து லட்சம் தங்கக்காசுகள் கிடைத்தன.

 

மேலும், ( وَاللَّهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ ، لَقَدْ رَأَيْتُ فِي يَوْمٍ وَاحِدٍ أَحَدَ أَبْنَاءِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ يَتَصَدَّقُ بِمِائَةِ فَرَسٍ لِلْجِهَادِ فِي سَبِيلِ اللَّهِ ، وَأَحَدَ أَبْنَاءِ هِشَامٍ يَتَسَوَّلُ فِي الْأَسْوَاقِ  ) இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அல்லாஹ்வின் மீதாணையாகச் சொல்கிறேன். உமர்பின் அப்தில்அஜீஸ் (ரஹ்) அவர்களின் மகன்களில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போருக்காக  நூறு குதிரைகள் வழங்கியதை நான் பார்த்தேன். ஹிஷாம் அவர்களின் பிள்ளைகள் கடைவீதிகளில் மக்களிடம் கையேந்திக் கொண்டிருப்பதையும் பார்த்தேன்.

 

உமர்பின் அப்தில்அஜீஸ் (ரஹ்) அவர்கள் மரணப்படுக்கையில இருந்தபோது ஒருவர், ( مَاذَا تَرَكْتَ لِأَبْنَائِكَ يَا عُمَرُ؟ ) “உமர்! உங்கள் பிள்ளைகளுக்கு (சொத்தாக) எதை கொடுத்துவிட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டார்.

 

அதற்கவர்கள் ( تَرَكْتُ لَهُمْ تَقْوَى اللَّهِ ، فَإِنْ كَانُوا صَالِحِينَ فَاَللَّهُ تَعَالَى يَتَوَلَّى الصَّالِحِينَ ، وَإِنْ كَانُوا غَيْرَ ذَلِكَ فَلَنْ أَتْرُكَ لَهُمْ مَا يُعِينُهُمْ عَلَى مَعْصِيَةِ اللَّهِ تَعَالَى ) “(தக்வா எனும்) இறையச்சத்தை கொடுத்துவிட்டுச் செல்கிறேன். அவர்கள் நல்லவர்களாக வாழ்ந்தால் அல்லாஹ் அவர்களுக்கு பொறுப்பேற்பான். அப்படி இல்லையெனில் அவர்களுடைய (‘இறையச்சத்திற்கு முரணான) பாவச்செயலுக்கு உதவிடும் வகையில் எதையும் நான் கொடுத்துவிட்டுப் போகமாட்டேன்” என்று கூறினார்கள்.

 

இமாம் அவர்கள், இவ்வாறு தான் கண்ணால் பார்த்தவற்றை அறிவுரையாக வழங்கினார்கள். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

இறையச்சமே சிறந்த வாரிசு சொத்து. ஓர் இறையச்சமுள்ள தந்தை தமது பிள்ளைகளுக்கு பெரிதாக சொத்து சுகங்களை சேர்த்து கொடுப்பதைவிட, இறையச்சமுள்ள வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பது சாலச் சிறந்ததாகும்.

 

கெட்ட வார்த்தைகளா? கேட்ட வார்த்தைகளா?

 

மகன் தந்தையிடம் சொன்னான். அப்பா உன்னை என் கணக்கு டீச்சர் பார்க்கணுமாம். நீ ஸ்கூலுக்கு வரணும்.

தந்தை: எதுக்குடா என்னை வரச் சொல்றாங்க"

மகன்: கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க. 9 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு 63 ன்னு சொன்னேன. பிறகு, 7 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க.

தந்தை: அதே எழவு தானே  வரும். சரி, நீ என்ன சொன்ன?

மகன்: அதே எழவு தானே வரும்னு சொன்னேன். உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க.

தந்தை: சரி சரி நாளைக்கு வரேன்.

அடுத்த நாள் தந்தையிடம் மகன் கேட்டான். அப்பா, ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா?

தந்தை: இல்லடா நாளைக்கு வரேன்.

மகன்: சரி, நாளைக்கு கணக்கு டீச்சர பார்த்துட்டு அப்படியே பி.டி. டீச்சரையும் பார்த்துடு.

தந்தை: எதுக்குடா?

மகன்: பி.டி. டீச்சர் முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன். அப்றம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன். ரெண்டு கையயும் தூக்கிட்டே, வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன். அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு.

தந்தை: ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசா அவன்? சரி நீ என்ன பண்ணுன.

மகன்: ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசு-ன்னு சொன்னேன். அதுக்கு உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு.

தந்தை: சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன்.

அடுத்தநாள் தந்தையிடம் மகன் கேட்டான். "இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா?

தந்தை: இல்லடா நாளைக்கு வரேன்.

மகன்: நீ போக வேணாம் பா!

தந்தை: ஏண்டா?

மகன்: என்னை ஸ்கூலேர்ந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க.

தந்தை: என்னாச்சுடா?

மகன்: ப்ரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார். அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க.

தந்தை: சயின்ஸ் டீச்சரா! அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான்?

மகன்: அதே தான் பா நானும் கேட்டேன். அதுக்கு என்னை டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

குழந்தைகள் கெட்ட வார்தைகள் பேசுவதில்லை. கேட்ட வார்தைகளையே பேசுகிறார்கள்.

 

வீடும் அதன் சுற்றுப்புறமும் பிள்ளைகளின் சீர்திருத்தத்தின் முதல் தளமாகும். வீட்டின் சுற்றுச்சூழல் எவ்வளவு சீர்திருத்தமாக உள்ளதோ அவ்வாறே பிள்ளைகளின் சீர்திருத்தமும் சிறந்ததாக ஆகிவிடும்.

 

எனவே, அல்லாஹுத்தஆலா, நம்மை நமது சந்ததிகளுக்கு அழகிய முன்மாதிரியாக திகழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...