Search This Blog

Friday, 11 April 2025

மனக்குழப்பம்

 

மனக்குழப்பம்

 

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்துகொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்.)  திருக்குர்ஆன்:- 114:4,5

 

மனித கண்களுக்குப் புலப்படாத ஷைத்தான் மறைந்திருந்து மனித மனங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவான். அதன்மூலம் ஏற்படும் அதிக ஆர்வக்கோளாறால் அறிவு மங்கும்போதும், தடுமாறும்போதும் ஏற்படும் குழப்பத்திற்கே வஸ்வாஸ்" (மனகுழப்பம்) எனப்படுகிறது.

 

அங்கத்தூய்மையில்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا يُقَالُ لَهُ وَلَهَانُ فَاتَّقُوا وَسْوَاسَ الْمَاءِ ) அங்கத்தூய்மை(யின் போது மனக்குழப்பத்தை ஏற்படுத்துவதற்)கென்றே ஒரு ஷைத்தான் இருக்கிறான். அவன் "வலஹான்" எனப்படுவான். அவன் தண்ணீர் (பயன்படுத்தும்) விஷயத்தில் மனக்குழப்பத்திற்கு இடமளிக்காதீர்கள். அறிவிப்பாளர்:- உபைப்பின் கஅப் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-52 இப்னுமாஜா-415, முஸ்னது அஹ்மத்

 

அதிக ஆர்வக்கோளாறால் அறிவு மங்கும் போதும் தடுமாறும் போதும் ஏற்படும் குழப்பத்திற்கு "வலஹான்" என்பர். இதையே அங்கத்தூய்மையின் போது மன ஊசலாட்டம் ஏற்படுத்தும் ஷைத்தானுக்குப் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.

 

காரணம், அங்கத்தூய்மையை முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் அறிவையே மங்கச்செய்து தன்னில் ஷைத்தான் எவ்வாறு விளையாடுகின்றான் என்பதை அறியாதவாறு மனிதனை ஷைத்தான் குழப்பிவிடுகிறான். அப்போது உறுப்பில் நீர் போய் சேர்ந்ததா? இல்லையா? எத்தனை முறை கழுவினோம்? என்று தெரியாமல் போய்விடும்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( جَاءَنِي جِبْرِيلُ فَقَالَ يَا مُحَمَّدُ إِذَا تَوَضَّأْتَ فَانْتَضِحْ ) என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "முஹம்மத்! நீர் அங்கத்தூய்மை செய்த பிறகு (இன உறுப்பையொட்டியுள்ள ஆடை மீது) தண்ணீரை தெளித்துக்கொள்வீராக!" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:-  அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-46

 

சிறுநீர் கழித்து சுத்தம் செய்த பின்னர் இன உறுப்பிலிருந்து சிறுநீர் கசிந்திருக்குமோ என்ற மனக்குழப்பத்தை இது அகற்றிவிடும் என இதற்குக் காரணம் கூறப்படுகிறது.

 

தொழுகையில்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ حَتَّى لاَ يَسْمَعَ التَّأْذِينَ، فَإِذَا قَضَى النِّدَاءَ أَقْبَلَ، حَتَّى إِذَا ثُوِّبَ بِالصَّلاَةِ أَدْبَرَ، حَتَّى إِذَا قَضَى التَّثْوِيبَ أَقْبَلَ حَتَّى يَخْطُرَ بَيْنَ الْمَرْءِ وَنَفْسِهِ، يَقُولُ اذْكُرْ كَذَا، اذْكُرْ كَذَا‏.‏ لِمَا لَمْ يَكُنْ يَذْكُرُ، حَتَّى يَظَلَّ الرَّجُلُ لاَ يَدْرِي كَمْ صَلَّى ) தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறியவாறு (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் இகாமத் சொல்லப்பட்டால் பின்வாங்கி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிக்கப்பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அவரிடம் 'இன்ன இன்னதை நினை' என்று தொழுகைக்கு முன்பு அவரது நினைவில் வராதவற்றையெல்லாம் (தொழுகையில் நினைத்துப் பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-608, முஸ்லிம்-636

 

அபுல்அலாஉ அல்ஆமிரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (நான் தொழுது கொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்" என்று கூறினார்கள்.

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خِنْزِبٌ فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ وَاتْفِلْ عَلَى يَسَارِكَ ثَلاَثًا ) "அவன்தான் "கின்ஸப்" எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான். நூல்:- முஸ்லிம்-4431

 

 தொழுகையில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் ஷைத்தான் ஒருவன் உள்ளான். அவன் பெயர் "கின்ஸப்" ஆகும். அங்கத்தூய்மையில் மனக்குழப்பத்தை உருவாக்கும் ஷைத்தான் ஒருவன் உள்ளான். அவன் பெயர் "வலஹான்" ஆகும் என நபிமொழிகள் தெளிவுபடுத்துகிறது.

 

சுத்தத்தில் 

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து, அங்கத்தூய்மை செய்வதைப்பற்றி வினவினார்.

 

நபியவர்கள் அவருக்கு (ஒவ்வொரு உறுப்பையும்) மும்மூன்று முறை கழுவி அங்கத்தூய்மை செய்து காட்டினார்கள். பின்னர், ( هَذَا الْوُضُوءُ فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ وَتَعَدَّى أَوْ ظَلَمَ ) "இதுவே அங்கத்தூய்மை செய்யும் முறையாகும். யார் இதைவிட அதிகப்படுத்தினாரோ அவர் (மார்க்க விதிகளைப் பேணுவதில்) கேடு விளைவித்துவிட்டார்; வரம்பு மீறிவிட்டார்; அநீதியிழைத்துவிட்டார்" என்று கூறினார்கள். நூல்:- நசாயீ-140, இப்னுமாஜா-416

 

அதாவது, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை பின்பற்றாமல் அதற்கு மாறு செய்ததன் மூலம் தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டார். அல்லது மூன்றுக்கும் அதிகமான தடவை உறுப்புக்களை கழுவியதன் மூலம் வேண்டாத சிரமம் எடுத்து தண்ணீரையும் விரயம் செய்து நன்மையையும் அடையாமல்போய் அநீதி இழைத்துக்கொண்டார்.

 

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. சஅத் (ரலி) அவர்கள் அங்கத்தூய்மை செய்து கொண்டிருந்தபோது அவரை கடந்து சென்ற நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், ( مَا هَذَا السَّرَفُ ) "(சஅத்!) இது என்ன விரயம் (செய்கிறீரே!)?" என்று வினவினார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், ( أَفِي الْوُضُوءِ إِسْرَافٌ ) "(நாயகமே!)  அங்கத்தூய்மை செய்வதிலும் விரயம் ஏற்படுமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ( نَعَمْ وَإِنْ كُنْتَ عَلَى نَهَرٍ جَارٍ ) "ஆம், ஓடும் நதியின் கரையில் நீர் இருந்(து அங்கத்தூய்மை செய்)தாலும் (மார்க்க வரம்பு மீறினால் விரயம் ஏற்படவே செய்யும்)" என்று பதிலளித்தார்கள். நூல்:- இப்னுமாஜா-419, முஸ்னது அஹ்மத், ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ

 

தண்ணீரைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதும் மூன்று தடவைக்கு மேல் அங்கத்தூய்மையின் உறுப்புக்களை கழுவுவதும் வீண்விரயத்தில் அடங்கும். எனவே, தான் அதைத் தவிர்க்குமாறு இந்த நபிமொழி இயம்புகிறது.

 

மனக்குழப்பம் உள்ளவர்கள் சில வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். உதாரணமாக: ஓரிரு நிமிடங்களில் செய்யவேண்டிய உளூவை அரைமணி நேரம் செய்வார்கள். ஒவ்வொரு உறுப்பையும் நீண்ட நேரம் கழுவிக்கொண்டே இருப்பார்கள். எந்த ஒன்றையும் செய்துவிட்டு திருப்தி காண மாட்டார்கள். முழுமையாக செய்துவிட்டோமா? இல்லையா? என்று ஐயம் கொள்வார்கள். இவருக்குத்தான் "வஸ்வாஸ்" உடையவர் என்று சொல்லப்படும்.

 

பேரறிஞர் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் சுத்தம் குறித்து (வஸ்வாஸ் எனும்) மனக்குழப்பம் உள்ளவர். அந்தக் காலத்தில் தினந்தோறும் குளிக்கும் பழக்கம் கிடையாது. ஆனால், அவர்கள் தினந்தோறும் குளித்துவிடுவார். அவர்கள் தினந்தோறும் குளிப்பது சுத்தத்திற்கு அல்ல; வஸ்வாஸிற்காக குளிப்பார். அசுத்தத்தின் சிறிதளவுகூட தமது மேனியிலும் ஆடையிலும் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருப்பார்.

 

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களின் தோழர் இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் தமது காலை நீண்ட நேரம் காலைக் கழுவிக்கொண்டே இருப்பார்கள். கணுக்கால் வரை கழுவிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் கொஞ்சம் மேலே கழுவிக்கொண்டே இருப்பார்கள். மூட்டுக்கு சற்று கீழே வரை கழுவிக்கொண்டே இருப்பார்கள். நூல்:- தபக்காத் இப்னு சஅத்

 

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் உளூவின்போது உறுப்புக்களை மூன்று முறை கழுவிவிட்டோம் போதும் என்ற மனநிலைக்கு அவ்வளவு சீக்கிரமாக வரமாட்டார்கள். இவர் இந்த வஸ்வாஸில் மிகவும் பிரபலமானவர் ஆவார்.

 

இப்னு மஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களின் சகோதரி ஹஃப்சா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் மரணமடைந்துவிட்டார். மைய்யத் ஜனாஸா தொழுகைக்காக கொண்டுவரப்பட்டுவிட்டது. அந்நேரத்தில் ஹஸன் (ரலி) அவர்கள், ( أَيْنَ هُوَ؟ ) அவர் எங்கே? (அதாவது, இந்த பெண்ணுக்கு ஜனாஸா தொழுவிப்பதற்கு இவளின் சகோதரர் முஹம்மத் பின் சீரீன் எங்கே?)என்று கேட்டார்கள்.

 

அப்போதுதான் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் உளூ செய்ய சென்றார்கள். அப்போது மக்கள், ( يَتَوَضَّأُ صَبًّا صَبًّا دَلْكًا دَلْكًا عَذَابٌ عَلَى نَفْسِهِ وَعَلَى أَهْلِهِ ) "அவர் ஒவ்வொரு சொட்டாக ஊற்றி, ஒவ்வொரு உறுப்பையும் தேய்த்துக் கழுவிக்கொண்டே இருக்கிறார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நோவினையாக இருக்கிறது" என்று கூறினர். நூல்:- சியரு அஃலாமுந் நுபலா இமாம் அத்தஹபீ

 

முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் உளூச் செய்துவிட்டு வருவதற்குள் எத்தனை சடலங்களுக்கு வேண்டுமானாலும் தொழுவித்து, அடக்கமே செய்துவிடலாம். அந்தளவிற்கு வஸ்வாஸ் காரணமாக இவர் நீண்ட நேரம் உளூ செய்வார் என்பதை மக்கள் அனைவரும் அறிவர். அதனால் அவ்வாறு கூறினர்.  

 

மனக்குழப்பம் உள்ளவர்கள் அங்கத்தூய்மை செய்யும்போது மூன்று முறைக்கும் அதிகமாக உறுப்புகளை கழுவிக் கொண்டே இருப்பார்கள். எத்தனை முறை கழுவினோம் என்று அவர்களுக்கும் தெரியாது. தண்ணீர் விரயமாகின்றதே என்று அவர்கள் யோசிப்பதும் இல்லை.

 

அங்கத்தூய்மையில் உறுப்புக்களை சுத்தமாகவும் முழுமையாகவும் கழுவ வேண்டும் என்ற எண்ணத்தில் அளவையும் கடந்து விரயமாகத் தண்ணீரை அதிகமாக செலவழிப்பார்கள். தண்ணீரும், நேரமும் விரயமாகுவது அவர்கள் கவனத்திற்கே வராது. அவ்வாறே அவர்கள் மலஜலம் கழிக்க சென்றாலும், குளித்தாலும் நேரத்தையும் தண்ணீரையும் விரயமாக்குவார்கள். அதாவது, அவர்கள் நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்திருப்பதையும், நீண்ட நேரம் குளித்துக் கொண்டிருப்பதை தவறாகவே எண்ண மாட்டார்கள்.

 

மனக்குழப்பம் ஏற்படாமல் இருக்க, நீண்ட நேரம் கழிப்பறையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இன்று, கழிப்பறைக்குச் சென்ற பிறகு புகைப்பதும், கைப்பேசியை தேய்த்துக்கொண்டிருப்பதும், செய்தித்தாள்களை வாசித்துக் கொண்டிருப்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. இந்தக் கெட்டப்பழக்கம் தவிர்க்கப்பட வேண்டியது என்று சிலர் எண்ணுவதுகூட இல்லை.

 

அல்லாஹ்வைப் பற்றி

 

(நபியே!) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதேனும் மனக்குழப்பம் ஏற்பட்டால், உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுவோனும் நன்கறிவோனும் ஆவான். திருக்குர்ஆன்:- 7:200

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا مَنْ خَلَقَ كَذَا حَتَّى يَقُولَ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ، وَلْيَنْتَهِ ) உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, ‘‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘‘உன் இறைவனைப் படைத்தவர் யார்?” என்று கேட்பான். இந்தக் கட்டத்தை அவன் அடையும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்! (இத்தகைய சிந்தனை’லிருந்து) விலகிக்கொள்ளட்டும்! அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3276

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لاَ يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ فَمَنْ وَجَدَ مِنْ ذَلِكَ شَيْئًا فَلْيَقُلْ ‏{‏ اللَّهُ أَحَدٌ  اللَّهُ الصَّمَدُ  لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ  وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ ‏}‏ ثُمَّ لْيَتْفُلْ عَنْ يَسَارِهِ ثَلاَثًا وَلْيَسْتَعِذْ مِنَ الشَّيْطَانِ  ) மக்கள் (இதைப் படைத்தவன் யார்? இதைப் படைத்தவன் யார்?  என்று ஒவ்வொன்றாக) தங்களுக்கிடையில் கேள்வி கேட்டுக்கொண்டே வந்து இறுதியில், இந்தப் படைப்புகளையெல்லாம் அல்லாஹ் படைத்தான்; அல்லாஹ்வைப் படைத்தது யார்?" என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் எவருக்கேனும் ஏற்பட்டால் அவர் உடனே "அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் எந்தத் தேவையும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை; எவராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை. அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன்:- 112:1-4) இவ்வாறு கூறி இடது புறத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  அபூதாவூத்-4098,4099, ஸஹீஹ் ஜாமிஉ-8182

 

இறைநிராகரிப்பின் பக்கம் கொண்டு செல்லும் இத்தகைய மனக்குழப்பத்தை ஷைத்தான் உருவாக்கினால் அவனிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று இந்த நபிமொழி அறிவுறுத்துகிறது.

 

மரண நேரத்தில்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பார்கள். ( وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ ) இறைவா! இறக்கும்போது ஷைத்தான் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். அறிவிப்பாளர்:- அபூ யஸர் (ரலி) அவர்கள்     நூல்:- அபூதாவூத்-1328, நசாயீ

 

பேரறிஞர் இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மனிதனின் உயிர் கைப்பற்றப்படும் நேரத்தில்தான் பெரும்பாலும் இறைநம்பிக்கை பறிபோகிறது.

 

இறைநேசச் செல்வர் அபா ஸகரிய்யா (ரஹ்) அவர்களுக்கு இறுதிநேரம் நெருங்கியது. இதை அறிந்த அன்னாருடைய நண்பர் ஒருவர், அன்னாரின் அருகில் அமர்ந்து "லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்று கலிமா சொல்லிக் கொடுத்தார். கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்ட உடன் அன்னார் தனது முகத்தை வெறுப்போடு சுளித்து திருப்பிக் கொண்டார்கள்.

 

கொஞ்ச நேரம் சென்றது. மீண்டும் நண்பர் கலிமாவை சொல்லிக் கொடுக்கிறார். இப்போதும் அப்படியே அன்னார் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இன்னும் கொஞ்ச நேரம் சென்று மீண்டும் கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டபோதும், அன்னார் முன் செய்தது போலவே முகத்தைச் சுளித்துகொண்டு, "நான் சொல்லமாட்டேன்" என்றார்கள்.

 

இதைக்கண்டு அச்சப்பட்ட அந்த நண்பர் மிகுந்த கவலையுடன் அன்னாரின் அருகில் காத்திருந்தபோது, அன்னாருக்கு கொஞ்சம் தெளிவு ஏற்பட்டு கண்களைத் திறந்து சுற்றுமுற்றும் பார்க்க தொடங்கினார்கள்.

 

தன் அருகே அமர்ந்திருந்த நண்பரை பார்த்து புன்முறுவல் செய்தவராக, "சற்று முன் நீங்கள் என் காதருகில் எதையாவது சொல்லிக் கொடுத்தீர்களா?" என்று கேட்டார்கள். ஆமாம்! கலிமாவை முதலிரண்டு தடவை சொல்லிக்கொடுத்தேன் அப்போதெல்லாம் நீங்கள் முகத்தை சுளித்து வெறுப்புடன் திரும்பிக்கொண்டீர்கள். ஆனால் மூன்றாவது தடவை சொல்லிக் கொடுத்தபோது "ஊஹும்... சொல்லமாட்டேன்" என்று சொல்லிவிட்டீர்கள். அதைக் கேட்டு எனக்கு மிகுந்த கவலையாகிவிட்டது. என்று அந்த நண்பர் கூறினார்.

 

"விஷயம் அப்படியல்ல. சற்று முன்னால் இப்லீஸ் என் முன் தோன்றினான். அவனிடம் தண்ணீர் துருத்தி காணப்பட்டது. அவன் வந்து, எனது வலப் பக்கம் அமர்ந்து கொண்டு, தன்னிடம் இருந்த தண்ணீர் துருத்தியை அசைத்துக் காண்பித்து, "இதோ குளிர்ச்சியான தண்ணீர் என்னிடம் இருக்கிறது உனக்கு வேண்டுமானால் தருகிறேன்" என்றான். நான், வேண்டாம் என்று தலையை திருப்பிக்கொண்டேன்.

 

அதைத்தொடர்ந்து அவன், "ஈசா அல்லாஹ்வின் குமாரர்" என்பதாக சொல். உன்னுடைய வேதனை நீங்கும்" என்றான் அப்போதும் வெறுப்புடன் எனது தலையைத் திருப்பிக் கொண்டேன்

 

எனது கால் பகுதிக்கு எழுந்து வந்து நின்ற அவன், "அல்லாஹ் என்று ஒருவன் இல்லை" என சொல் உனக்கு சொர்க்கம் கிடைக்கும்" என்று ஏமாற்றப் பார்த்தான். அப்போது தான், நான் "அப்படி சொல்லமாட்டேன்" என்று கூறினேன்.

 

அதைக்கேட்ட அவன், தன்னிடம் இருந்த தண்ணீர் துருத்தியை கீழே போட்டு உடைத்துவிட்டு என்னை விட்டும் வெருண்டோடி விட்டான். இப்லீஸிடம் நான் கூறியதை தான் நீங்கள், நான் கலிமா சொல்ல மறுத்ததாக கருதிக்கொண்டீர்கள். எனவே, இதோ இப்போது நான் கலிமா சொல்லுகிறேன் என்று கலிமாவை சொன்னார்கள். அன்னாரின் உயிரும் பிரிந்தது. நூல்:- ஜுஹ்ரதுர் ரியாள்

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الشَّيْطَانَ وَاضِعٌ خَطْمَهُ عَلَى قَلْبِ ابْنِ آدَمَ، فَإِنْ ذَكَرَ خَنَس، وَإِنْ نَسِيَ الْتَقَمَ قَلْبَهُ، فَذَلِكَ الْوَسْوَاسُ الْخَنَّاسُ ) நிச்சயமாக ஷைத்தான் தன்னுடைய மூக்கையும் வாயையும் மனிதனின் உள்ளத்தின் மீது வைத்திருக்கின்றான். அல்லாஹ்வை மனிதன் (நினைவு கூர்ந்து) திக்ர் செய்தால் ஷைத்தான் மறைந்துவிடுகிறான். அவர் இறைதியானத்தை மறந்து விடுகின்றபோது அவருடைய உள்ளத்தை ஷைத்தான் விழுங்கிவிடுகின்றான். அவன்தான் மீண்டும் மீண்டும் வந்து ஊசலாட்டத்தை போடுபவன். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அபீயஅலா, தஃப்சீர் இப்னு கஸீர் அந்நாஸ்

 

மனிதன் அல்லாஹ்வை  நினைவுகூர்ந்து கொண்டிருக்கும் வரை ஷைத்தான் அவனிடம் நெருங்குவதில்லை; மனிதன் அல்லாஹ்வை நினைவு கூறுவதைவிட்டும் மறந்துவிடுகின்றபோது அவனை ஷைத்தான் ஆக்கிரமித்து விடுகின்றான்.

 

ஒரு மனிதன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் இறைநம்பிக்கையை பலவீனப்படுத்தும் ரீதியில் ஷைத்தான் மனக்குழப்பத்தைப் போட்டு சிந்தனையை குழப்புகின்றான். பிறகு பாவங்கள் செய்வதற்கு தூண்டுவான். இதற்காக மனிதனின் சூழ்நிலைகளை கவனிக்கின்றான். அதாவது, மனிதன் மன கஷ்டம் அல்லது மகிழ்ச்சியடையும்போது அல்லது தீய நண்பர்களுடன் நட்பு வைக்கும் நேரங்களை எதிர்பார்த்துக்கொண்டே வந்து, சரியான தருணத்தில் அவனுடைய மனதில் ஊசாட்டத்தை போட்டு குழப்புகிறான். ஆனால் அதனை அந்த மனிதனால் உணர்ந்துகொள்ள முடிவதில்லை.

 

இறைமறுப்புச் சிந்தனை, பாவச் சிந்தனை, தொழுகை போன்ற இறைக்கடமைகளை புறக்கணிக்கும் சிந்தனை ஆகிய ஷைத்தானிய சிந்தனைகள் நமது மனதில் எழும்போது பதறித் துடித்தவாறு, ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோர வேண்டும். அதன் மூலம் அல்லாஹ் அந்த தவறான சிந்தனைகளை வலுவிழக்கச் செய்வான்.

 

உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வின் மீது உறுதியான இறைநம்பிக்கை கொண்டு தூய வழி நின்று அவனை வணங்கி வழிபட வேண்டுமெனில், குர்ஆன் மற்றும் நபிமொழிகள் கூறும் பிரார்த்தனைகளை அதிகம் ஓத வேண்டும் அதன் மூலம் ஷைத்தான்களின் மனக்குழப்பத்தில் இருந்து பாதுகாப்பு தேட வேண்டும்.

 

ஓத வேண்டியவை 

 

(நபியே!) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதேனும் மனக்குழப்பம் (தீய காரியங்களை செய்யும்படியான எண்ணம்) ஏற்படுமாயின், உடனே அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியேற்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 41:36

 

அபூ ஸுமைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் எனது உள்ளத்தில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றுவதாக உணர்கிறேன். இது எதனால்?" என்று கேட்டேன். அதற்கு அன்னார், ( مَا هُوَ ) "என்ன அது?" என வினவினார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! அது குறித்து என்னால் எதுவும் கூற இயலாது" என்றேன். அதற்கு அன்னார், ( أَشَىْءٌ مِنْ شَكٍّ ) "ஐயத்தை ஏற்படுத்தும் விஷயமா?" என்று கேட்டார்கள். பிறகு சிரித்துவிட்டு, ( مَا نَجَا مِنْ ذَلِكَ أَحَدٌ ) "யாரும் அதில் இருந்து தப்பியதில்லை" என்று கூறினார்கள்

 

மேலும், நாம் உம்மீது அருளியவற்றில் உமக்கு ஏதேனும் ஐயமிருந்தால் உமக்கு முன்பிருந்தே வேதத்தை ஓதிக்கொண்டிருப்பவர்களிடம் (நபியே!) நீங்கள் கேளுங்கள். உமது இறைவனிடமிருந்து உமக்கு சத்தியமே வந்துள்ளது. எனவே, ஐயம் கொள்வோரில் ஒருவராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்" (10:94) என்ற இறைவசனம் அருளப்படும் வரை (அந்நிலை இருந்தது) என்று கூறினார்கள்.

 

பிறகு என்னிடம், ( إِذَا وَجَدْتَ فِي نَفْسِكَ شَيْئًا فَقُلْ ‏هُوَ الأَوَّلُ وَالآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ) "உமது உள்ளத்தில் அத்தகு (சந்தேக) எண்ணம் ஏதையேனும் நீர் உணர்ந்தால், "அவனே முதலாமானவன்; இறுதியானவன்; வெளிப்படையானவன்; அந்தரங்கமானவன்; அவன் அனைத்து விஷயங்களையும் அறிபவன்" என்று கூறுவீராக" என்று அறிவுறுத்தினார்கள். நூல்:- அபூதாவூத்-4446

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! எங்களில் ஒருவர் தமது உள்ளத்தில் சில (ஊசலாட்ட) சிந்தனைகள் தோன்றக் காண்கிறார். பிறகு அவர் அவற்றை (வெளிப்படையாக) பேசுவதைவிட, அடுப்புக்கரியாக ஆவதை விரும்புகிறார்" என்று கூறினார்.

 

அதற்கு நபியவர்கள், (اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ  ) “அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன். அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தான் ஷைத்தானுடைய சூழ்ச்சியை ஊசலாட்டத்தின் பக்கம் திருப்பினான்" என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் இப்னு குதாமா (ரஹ்) அவர்கள், "ஷைத்தானின் சூழ்ச்சியைத் திருப்பினான் என்பதற்கு பதிலாக ஷைத்தானின் காரியத்தைத் திருப்பினான்" என்று கூறியுள்ளார்கள். நூல்:- அபூதாவூத்-4448

 

இறைநம்பிக்கையாளரின் உள்ளத்தில் கொள்கை விஷயத்தில் எழும் ஐயங்களையும் ஊசலாட்டங்களையும் களைவதற்கு இதில் தீர்வு கூறப்பட்டுள்ளது.

 

ஷைத்தான் மனதில் விதைக்கும் ஊசலாட்ட சிந்தனைகளை ஏற்காமல் அதனை புறந்தள்ளி மனதைத் தூய்மைப்படுத்திக் கொள்வது இறைநம்பிக்கையாளர்களின் அவசிய பண்பாகும். அதுவே, தெளிவான இறைநம்பிக்கையாகும். ஊசலாட்ட எண்ணங்களிலிருந்து விடுபட அவர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை இந்த நபிமொழிகள் கற்பிக்கின்றன.

 

அல்லாஹுத்தஆலா நம்மை ஷைத்தானின் ஊசலாட்டத்தைவிட்டும் காப்பாற்றி, மனக்குழப்பமற்றவர்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...