Search This Blog

Friday, 25 April 2025

சுயமரியாதை

 

சுயமரியாதை

 

(அவர்களின் வறுமையைப் பற்றி) அறியாதவர், அவர்களின் சுயமரியாதையால் அவர்களை செல்வந்தர்கள் என்றே எண்ணுவார். திருக்குர்ஆன்:- 2:273

 

சுயமரியாதை (தன்மானம்) என்பது ஒரு மனிதன் தன்னை எப்படி பார்க்கிறான் என்பதை குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதையை விரும்புகிறான். அதைக் காத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறான். ஏனெனில், ஒருவன் தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மதிப்பு - அதுதான் சுயமரியாதை.

 

தங்கள்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் பார்வையில் துணிச்சல் இருக்கும். வார்த்தைகளில் உறுதியும் உண்மையும் இருக்கும்.

 

அவர்கள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் செயல்படுவார்கள். அதனால்தான், சுயமரியாதையைக் குறித்து எந்தவொரு மனநல நிபுணரிடம் கேட்டாலும், அவர் சொல்கின்ற அறிவுரை 'உங்களை நம்புங்கள்' என்பதே.

 

பிள்ளைகளுக்கும் சிறுவயதிலிருந்தே சுயமரியாதை என்ற நற்பண்பை ஊட்டி வளர்க்க வேண்டும். மரியாதையைப் பெறுகின்றவர்களாய் மட்டுமல்ல, மற்றவர்களையும் மரியாதையுடன் பார்க்கின்ற குணம் மேலோங்க வேண்டும். சுயமரியாதை எல்லோருக்கும் உண்டு. அதை எல்லோரும் மனதில் கொள்வதே சிறப்பு.

 

அறப்போருக்குச் சமம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஒரு மனிதர் கடந்து சென்றார். அப்போது அவரின் வலுவையும், சுறுசுறுப்பையும் கண்ட நபித்தோழர்கள் நபியவர்களிடம், ( يا رَسُولَ اللَّهِ، لَوْ كانَ هَذا في سَبِيلِ اللَّهِ ) "நாயகமே! இவர் அல்லாஹ்வின் பாதையில் (போராடுவதற்கு) வந்திருந்தால் நன்றாய் இருக்கும்" என்றனர்.

 

அதற்கு நபியவர்கள், ( إنْ كانَ خَرَجَ يَسْعى عَلى ولَدِهِ صِغارًا فَهو في سَبِيلِ اللَّهِ، وإنْ كانَ خَرَجَ يَسْعى عَلى أبَوَيْنِ شَيْخَيْنِ كَبِيرَيْنِ فَهو في سَبِيلِ اللَّهِ، وإنْ كانَ خَرَجَ يَسْعى عَلى نَفْسِهِ يُعِفُّها فَهو في سَبِيلِ اللَّهِ، وإنْ كانَ خَرَجَ يَسْعى رِياءً ومُفاخَرَةً فَهو في سَبِيلِ الشَّيْطانِ ) "இவர் தமது சிறு பிள்ளைகளுக்காக உழைக்க புறப்பட்டு சென்றால், இவர் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். இவர் தமது வயதான பெற்றோருக்காக உழைக்க புறப்பட்டுச் சென்றால், இவர் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். தான் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக உழைக்க புறப்பட்டு சென்றால், இவர் அல்லாஹ்வின் பாதையில் தான் இருக்கிறார். முகஸ்துதிக்காகவும் பெருமையடிப்பதற்காகவும் புறப்பட்டுச் சென்றால் இவர் ஷைத்தானின் பாதையில் இருக்கிறார்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, தஃப்சீர் துர்ருல் மன்ஸூர் அல்பகரா வசனம்-262

 

ஒரு முஸ்லிம் தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்துவதைப்போன்று தமது பெற்றோரையும் மனைவி மக்களையும் காப்பாற்றுவதற்காகவும், பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் உழைக்கச் செல்வது சிறந்த அறப்போர் என்கிறது இந்த நபிமொழி.

 

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பது தமிழ் பழமொழி. (அதாவது, கடல் கடந்து சென்றாவது செல்வத்தை தேடு.)

 

எதிர்பாராமல் ஏற்படுகின்ற அதிகப்படியான செலவுகளைச் சமாளிப்பதற்கு, சிலர் தங்கள் இடம், வீடு, நகை போன்றவற்றை  விற்கிறார்களே, ஏன்? இடம், வீடு, நகை போனால் மீண்டும் சம்பாதித்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால், நம் சுயமரியாதையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது என்ற எண்ணம் தான்.

 

கடைவீதி எங்கே?

 

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது. (முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ( إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالاً، فَأَقْسِمُ لَكَ نِصْفَ مَالِي، وَانْظُرْ أَىَّ زَوْجَتَىَّ هَوِيتَ نَزَلْتُ لَكَ عَنْهَا، فَإِذَا حَلَّتْ تَزَوَّجْتَهَا‏ ) ‘‘நான் அன்சாரிகளிலேயே அதிகமான செல்வம் உடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக மணவிலக்குச் செய்கிறேன். அவரது (இத்தா எனும்) காத்திருப்புக் காலம் முடிந்ததும் அவரை உமக்கு மணமுடித்துத் தருகிறேன்” எனக் கூறினார்.

 

அப்போது நான், ( لاَ حَاجَةَ لِي فِي ذَلِكَ، هَلْ مِنْ سُوقٍ فِيهِ تِجَارَةٌ ) ‘‘இது எனக்குத் தேவையில்லை. வணிகம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், ‘‘கைனுகா எனும் சந்தை இருக்கிறது” என்றார். நான் (அடுத்த நாள்) காலை அங்கு சென்று, (சம்பாதித்து) பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (இலாபமாகக்) கொண்டுவந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) அடையாளத்துடன் (அண்ணல் நபி - ஸல் அவர்களிடம்) வந்தேன்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( تَزَوَّجْتَ ) ‘‘நீர் மணமுடித்துவிட்டீரா?” என்று கேட்டார்கள். நான் ‘‘ஆம்” என்றேன். ‘‘யாரை?” என்றார்கள். ‘‘ஓர் அன்சாரிப் பெண்ணை” என்றேன். ( كَمْ سُقْتَ ) ‘‘எவ்வளவு (மஹ்ர் எனும்) மணக்கொடை கொடுத்தீர்?” என்று கேட்டார்கள். ‘‘ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்கு அளவுக்கு தங்கம்” என்றேன். அப்போது நபியவர்கள் ( أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ ) ‘‘ஓர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) அளிப்பீராக!” என்றார்கள். நூல்:- புகாரீ-2048, முஸ்லிம், திர்மிதீ

 

ஒருவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட, அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடு! சீன பழமொழி.

 

நம்மீது உள்ள மரியாதையால் அன்பளிப்பாக பிறர் தருவதையே பெற்று வாழ்வதைவிட, சம்பாதிக்கும் ஆற்றல் உள்ளவர், சுயமாக சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறுவதே சிறந்தது. இதுவே சுயமரியாதைக்குரியவருக்கு அழகாகும்.

 

நாம் பிறருக்கு தர்மம் வழங்குவதைவிட அவர்களின் சுயமரியாதை பாதிக்காத வகையில் அவர்களாகவே சுயமாக பிழைத்துக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு வழியைக் காட்ட வேண்டும். அதாவது, அவர்கள் திறம்பட கல்விக் கற்க, அல்லது சுயதொழில் தொடங்க என எதற்காவது வழிகாட்ட வேண்டும். நாம் ஒருவருக்கு காலம் முழுவதும் வழங்கிக் கொண்டிருப்பது சாத்தியமாகாது. காலம் முழுவதும் பிறரின் நிழலில் வாழ்வது சுயமரியாதையற்ற கேவலமான வாழ்க்கையாகிவிடும்.

 

சுய முன்னேற்றம்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளுள் ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யாசகம் கேட்டு வந்தார். (அவருக்கு யாசகம் கொடுப்பதற்குப் பதிலாக) ( أَمَا فِي بَيْتِكَ شَىْءٌ ) "உம்முடைய வீட்டில் ஏதேனும் (பொருள்) இருக்கிறதா?" என்று அவரிடம் வினவினார்கள். அதற்கு அவர், "ஆம் ஒரு போர்வை இருக்கிறது. அதில் ஒரு பகுதியை நாங்கள் அணிந்துகொண்டு, ஒரு பகுதியை விரித்துக் கொள்கிறோம். மேலும், நாங்கள் தண்ணீர் பருகின்ற ஒரு குவளையும் உள்ளது" என்று கூறினார்.

 

நபியவர்கள், ( ائْتِنِي بِهِمَا ) "அவ்விரண்டையும் எடுத்துவருவீராக" என்று கூறினார்கள். எனவே அவர் இரண்டையும் நபியவர்களிடம் எடுத்து வந்தார். நபியவர்கள் அவற்றை தமது கையில் வாங்கி ( مَنْ يَشْتَرِي هَذَيْنِ ) "இவ்விரண்டையும் யார் விலைக்கு வாங்கிக்கொள்கிறார்?" என்று கேட்டார்கள். ஒருவர், "நான் இவ்விரண்டையும் ஒரு வெள்ளிக்காசுக்கு வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார். அப்போது நபியவர்கள், ( مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ ) "ஒரு வெள்ளிக்காசைவிட அதிகத் தொகைக்கு யார் வாங்கிக்கொள்கிறார்?" என்று இரண்டு அல்லது மூன்று தடவை கேட்டார்கள். அப்போது ஒருவர், "நான் அவ்விரண்டையும் இரண்டு வெள்ளிக்காசுகளுக்கு(ப் பகரமாக) வாங்கிக் கொடுக்கிறேன்" என்று கூறினார். எனவே, நபியவர்கள் அவ்விரண்டையும் அவரிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் வாங்கிக்கொண்டார்கள்.

 

நபியவர்கள், அந்த இரண்டு வெள்ளிக்காசுகளையும் அந்த அன்சாரி தோழரிடம் கொடுத்து, ( اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ ) "இவ்விரண்டில் ஒன்றின் மூலம் உணவுப் பொருளையும் வாங்கி, அதை உன் குடும்பத்தாருக்கு கொடுப்பீராக! மற்றொன்றின் மூலம் ஒரு கோடாரியை வாங்கிக்கொண்டு என்னிடம் வருவீராக" என்று கூறினார்கள்.

 

அவ்வாறே அவர் செய்தார். (அவர் வாங்கிக் கொண்டு வந்த கோடாரியை) நபியவர்கள் எடுத்து அதில் தமது கையால் ஒரு (கைப்பிடிக்) கம்பை இணைத்தார்கள். (பின்னர் அதை அவரிடம் கொடுத்து) ( اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلاَ أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا ) "நீர் சென்று விறகு வெட்டி விற்பீராக! நான் உம்மை பதினைந்து நாள்களுக்குப் பார்க்கக் கூடாது" என்று கூறினார்கள். அவ்வாறே அவர் (சென்று) விறகு வெட்டி விற்கத் தொடங்கினார். (பின்னர் பதினைந்து நாள்கள் கழித்து) பத்து வெள்ளிக்காசுகளை சம்பாதித்துக் கொண்டு வந்தார்.

 

நபியவர்கள், ( فَاشْتَرَى بِبَعْضِهَا  طَعَامًا وَبِبَعْضِهَا ثَوْبًا ) "அவற்றுள் சிலவற்றின் மூலம் உணவையும் மேலும் சிலவற்றின் மூலம் ஆடைகளையும் வாங்கிக்கொள்வீராக!" என்று கூறிவிட்டுப், பின்னர், ( هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَةِ ) "நீர் யாசகம் கேட்டு வருவதைவிட இதுவே சிறந்தது. யாசகம் கேட்பது மறுமையில் உமது முகத்தில் உள்ள (கரும்)புள்ளியாகும்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1398, நசாயீ-4432, இப்னுமாஜா-2089, முஸ்னது அஹ்மத்

 

இந்நிகழ்வின் மூலம் நபியவர்கள் உடல் வலிமையுள்ளவர்கள் யாசிப்பதை தடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உழைப்பின் அருமையை புரியவைத்துள்ளார்கள் எனத் தெரிகிறது.

 

யாரையும் அலட்சியமாக எண்ணிவிடக்கூடாது. இன்று நம்மிடம் உதவி கேட்டு நிற்பவர்கள், நாளை நம்மைவிட பலமடங்கு பெரிய நிலைக்கு வந்துவிடலாம். யாருக்குத் தெரியும்! அல்லாஹ்வே அறிந்தவன்.

 

நம்மிடம் கேட்டு வருபவர்களிடம், “ஆலோசனை சொல்கிறேன்” என்ற பெயரில் அவர்கள் மனம் நோகும்படியோ அல்லது  அவர்களை அவமானப்படுத்தும்படியோ நாம் நடந்துவிடக் கூடாது.

 

உடல் திடகாத்திரமானவர் யாசிப்பதை நாம் காணும்போது, "பிறரிடம் யாசிப்பது உமது சுயமரியாதையைப் பாதிக்கும். எனவே, நீ யாசிக்கும் பழக்கத்தை தவிர்த்திடு. மாறாக, ஏதேனும் சுயதொழில் செய்வதைப்பற்றி யோசி. அப்படி ஏதேனும் யோசனை இருந்தால் சொல். அதற்கு நான் ஏதேனும் உதவி செய்கிறேன். அல்லது வேலை வேண்டும் என்றால் சொல். அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி, அதற்குரியதை அவருக்கு நாம் செய்துகொடுக்க வேண்டும். அவரின் சுயமரியாதையை நாம் நினைவூட்ட வேண்டும்.

 

கொடுக்கும் கரம்

 

ஒருமுறை பல்க் தேசத்தைச் சேர்ந்த இறைநேசர் ஷகீக் அல்பல்கி (ரஹ்) அவர்கள் வியாபார நோக்கமாக ஒரு பயணத்தை மேற்கொண்டார்கள். பயணிப்பதற்கு முன்னர் தனது நண்பர் இறைநேசர் இப்ராஹீம் பின் அத்ஹம் (ரஹ்) அவர்களைக் கண்டு பிரியாவிடை பெற்றுக்கொண்டார்கள். இவரது இந்த பயணம் நீண்ட நாள் பயணமாக அமைய இருந்தது. ஆனால், ஓரிரு நாட்களுக்குள் அவர் ஊர் திரும்பினார்கள். அவரை பள்ளியில் சந்தித்த இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஆச்சரியப்பட்டு, “என்ன நடந்தது? ஏன் அவசரமாக ஊர் திரும்பினீர்கள்” என்று வினவினார்கள்.

 

அதற்கு ஷகீக் (ரஹ்) அவர்கள், “நான் எனது பயணத்தின் பொழுது இடையில் ஓரிடத்தில் தங்கி ஓய்வெடுத்தேன். அது பாழடைந்த ஒரு இடமாக இருந்தது. அங்கே நான் குருடான, முடமான ஒரு பறவையைக் கண்டேன். கண் பார்வையற்ற, பறக்கவோ அசையவோ முடியாத அந்த பறவை இந்த ஒதுக்குப்புறமான இடத்தில் எப்படி உயிர் வாழ்கிறது? என்று நினைத்து ஆச்சரியம் அடைந்தேன். சற்று நேரத்தின் பின் அங்கு மற்றொரு பறவை வந்தது. அது இந்த பறவைக்கு தன் அலகுகளால் உணவளித்தது.  இவ்வாறு ஒரே நாளில்  பல தடவை உணவளித்தது. இதை பார்த்த நான், ஏன் நமக்கும் அல்லாஹ் இவ்வாறு உணவு அளிக்கமாட்டான்? என்ற எண்ணம் தோன்றவே, உழைப்பை நோக்காக கொண்ட எனது பயணத்தை இடைநிறுத்தி உடனே நான் ஊர் திரும்பிவிட்டேன்” என்று காரணத்தை விவரித்தார்கள்.

 

இதனை கேட்ட இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், “ஷகீக்! உமது இந்த நிலைப்பாடு எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. பிறரின் தயவில் வாழ்கின்ற அந்த குருடான, முடமான பறவையாக நீர் இருக்க விரும்புகிறீரா? ஏன் தனக்காகவும் குருடர்களுக்காகவும்  முடவர்களுக்காகவும் உழைக்கும் அந்த (உழைப்பாளி)  பறவையாக நீர் இருக்கக்கூடாது? (கொடுக்கும்) மேல் கரம் (வாங்கும்) கீழ் கரத்தைவிட சிறந்தது என்பதை நீர் அறியமாட்டீரா?” என்று வினவினார்கள். இதனைக் கேட்ட ஷகீக் (ரஹ்) அவர்கள், இப்ராஹீம் (ரஹ்) அவர்களின் கரங்களில் முத்தமிட்டு, “அபூஇஸ்ஹாக்! நீர் எமது ஆசானல்லவா?” என்று கூறிவிட்டு, மீண்டும் தனது தொழிலை மேற்கொள்வதற்காக கிளம்பினார்கள். நூல்:- தாரீக் திமிஷ்கு இமாம் இப்னு அசாகிர், முகாஷபத்துல் குலூப்

 

நாம் பிறரிடம் தேவையாகாமலும், பிறருக்கு  கொடுப்பவராகவும் இருப்பதே சுயமரியாதை ஆகும்.

 

பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர்கள் திடீர் விபத்தால், பெரும் நோயால் பாதிப்படைந்து இருந்ததெல்லாம் செலவாகி போகுதல், அல்லது இயற்கை பேரிடர் மூலம் இருந்ததை இழந்து நிற்பது, அல்லது எதிர்பாராத விதமாக வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்படுதல் ஆகியவற்றால் தமது வாழ்க்கை தலைகீழாக புரண்டு, பிறரிடம் தேவையாகும் அளவுக்கு வரும்போது தமது சுயமரியாதை பாதிக்கப்படுகிறதே என்று அவர்கள் மிகவும் சஞ்சலப்படுவார்கள். இதுவே யதார்த்தம். (இந்த நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!) (பேரலை எனும்) சுனாமி மற்றும் நிலச்சரிவுகளின் போது பல செல்வந்தர்கள் இந்த நிலைக்கு ஆளானதை இந்த உலகம் கண்டது.

 

(வாழ்ந்து கெட்டவர்கள் எனும்) செல்வந்தராக இருந்து ஏழையாகிவிட்ட சிலர் மிகவும் தன்மானத்தோடு இருப்பார்கள். ஒரு காலத்தில் நாம் பிறருக்கு அள்ளி அள்ளி கொடுத்தோம். இப்போது நாம் எப்படி பிறரிடம் உதவி கேட்பது? என்று தயங்குவார்கள்.

 

எண்ணம் போல்

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அன்சாரிகளில் சிலர் வள்ளல் பெருமானார் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும், செலவுக்கு பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு நபியவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்டபோதும் நபியவர்கள் கொடுத்தார்கள்.

 

இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்துவிட்டபோது, ( مَا يَكُونُ عِنْدِي مِنْ خَيْرٍ فَلَنْ أَدَّخِرَهُ عَنْكُمْ، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ) "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்என்று கூறினார்கள்.  நூல்:- புகாரீ-1769, முஸ்லிம்-1902, அபூதாவூத்-1401, திர்மிதீ-1947, நசாயீ-2541, முஸ்னது அஹ்மத்

 

சிலர் வறுமை நிலையில் இருந்தபோதும், தன்மானத்தை இழந்து அவர்கள் தாழ்ந்து போனதில்லை. எந்த ஒன்றைப் பெறுவதற்கும் தன்மானத்தை நாம் விலையாகக் கொடுத்துவிடக் கூடாது. தன்மானத்தை விற்றுப் பெறுகின்ற எந்தவொரு பொருளாயினும் அது அவமானத்திற்குரியதுதான். சுயமரியாதையை இழக்காமல் வாழ்வதே மகத்தான வாழ்க்கை.

 

தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் பின்னால் சென்று, அவர் செய்யும் உதவியைப் பெற்று உயிர் வாழ்வதைவிட இறந்துவிட்டான் என்று பேசப்படுவதே நல்லது.

 

நம் சுயமரியாதையை இழந்துதான் ஒருவரின் அன்பையும் நட்பையும் பெற முடியுமென்றால், அந்த அன்பும் நட்பும் நமக்குத் தேவையில்லை. தன்மானம்தான் தலை. அது இல்லையெனில், தலையின்றித் திரிவதாகத்தான் அர்த்தம்.

 

வெட்கப்படுவார்கள்

 

நபிகள் நாயகம் )ஸல்( அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ الْمِسْكِينُ بِالَّذِي تَرُدُّهُ التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلاَ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ إِنَّمَا الْمِسْكِينُ الْمُتَعَفِّفُ اقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏{‏ لاَ يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا‏} ) ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரிச்சம் பழங்களுக்காக அலைபவன் ஏழையல்லன். ஏழை என்பவன் (தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு, இருப்பதைக்கொண்டு போதுமாக்கி) தன்மானத்துடன் நடந்து கொள்பவனே ஆவான். நீங்கள் விரும்பினால் "அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்" (2:273) எனும் இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1880

 

சுயமரியாதையைப் பேணக்கூடியவர்கள் தாம் எவ்வளவு சிரமப்பட்டாலும் தமது சிரமத்தை வெளியே சொல்லி எங்கும் உதவிதேட மாட்டார்கள். அப்படியே யாரேனும் அறிந்து ஏதேனும் உதவி செய்யட்டுமா? என்று வலிய வந்து கேட்டாலும்கூட, தற்போது வேண்டாம்; இன்ஷாஅல்லாஹ் பிறகு பார்க்கலாம்; அல்லது தேவையுள்ள நேரத்தில் நானே கேட்டு வாங்கிக்கொள்கிறேன் என்று ஏதேனும் சொல்லி சமாளித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வற்புறுத்தியேனும் ஏதேனும் நாம் உதவி செய்துவிட வேண்டும்.

 

தமக்குத் தேவை இருந்தும் தேவையற்றவரைப் போல் காட்டிக் கொள்ளும் சுயமரியாதைக்காரர்களை தேடிச் சென்று வழங்க வேண்டும் என்கிறது திருக்குர்ஆன்.

 

சுயமரியாதைக்காரர்கள் சிரமப்படும் பொழுது உதவி வேண்டுமா? என்று கேட்பதைவிட, உடனே உதவி செய்வது சிறந்ததாகும்.

 

நாம் சுயமரியாதையை பேணக்கூடியவர்கள் என்பதற்காக, நாம் சிரமப்படுவதைக் கண்டு நமது நேசத்திற்குரியவர்கள் வலிய வந்து செய்கின்ற உதவியை மறுப்பதும் சிறந்ததல்ல. மேலும், கேட்காமலேயே கிடைக்கிறது என்பதற்காக கிடைத்ததையெல்லாம் வாங்கி நிரப்பிக்கொள்வதும் சரியல்ல. தமக்குத் தேவையானதை மட்டும் வாங்கிக்கொள்வதே சிறந்தது.

 

சிலர் தங்கள் பதவி உயர்வுக்காக, சுயமரியாதையைத் தாரை வார்த்துவிடுகிறார்கள். பணத்திற்காக சாஷ்டாங்கமாய் விழுந்து, யாரோ ஒருவரின் கால் விரல்களின் நகங்களை முத்தமிட்டு நாணமே இல்லாமல் எழும்புகிறார்கள்.

 

அப்படி ஒரு வாழ்க்கை எதற்கு! மானத்தோடு வாழ்வதுதான் மானிட வாழ்க்கை. பச்சை மிளகாயைக் கடித்துக் கொண்டு பழைய சோறு சாப்பிட்டாலும், அதனைத் தன் உழைப்பினால் சாப்பிடுகிறவன் கம்பீரமாய் நிமிர்ந்து நிற்கின்றான். குடிசையோ, கோபுரமோ வாழ்கிறோமா? என்பதுதான் முக்கியம்.

 

சுயமரியாதை என்பது ஓர் அற்புதமான உணர்வு. அது எல்லோருக்குள்ளும் இருக்கிறது.

 

எனவே, அல்லாஹுத்தஆலா நம்மை என்றென்றும் சுயமரியாதையைப் பேணி வாழும் பண்பளார்களாய் வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...