Search This Blog

Monday, 9 December 2024

தம்பதியரின் தகராறு

தம்பதியரின் தகராறு

 

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا

(கணவன் மனைவி ஆகிய) அவ்விருவருக்குமிடையே (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால், அவனுடைய குடும்பத்தாரில் ஒரு நடுவரையும், அவளுடைய குடும்பத்தாரில் ஒரு நடுவரையும் (தீர்வு காண) அனுப்பி வையுங்கள். திருக்குர்ஆன்:- 4:35

 

உலகமே உறவுகளாலும் அன்பாலும் நிறைந்திருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் உலக தம்பதியர் தினம் மே 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

தம்பதியரின் அன்பு என்பது சண்டை போடாமல் வாழ்வதில் இல்லை. எவ்வளவு சண்டை போட்டாலும் திரும்பவும் வந்து மனதை சமாதானப்படுத்துவதில் தான் இருக்கிறது.

 

தம்பதியர் இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வருவது இயற்கையே! அது பெரும் பிரளயமாக மாறும் அளவுக்கு விட்டுவிடக் கூடாது. உடனுக்குடன் அவர்களுக்குள் சமாதானமாகிவிட வேண்டும். அல்லது அவர்களின் குடும்பப் பெரியவர்கள் ஒன்று சேர்ந்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும்.

 

அவ்வப்போது எழும் மனஸ்தாபங்களை ஊதி பெரிதாக்கி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்வதே வசந்தமான வாழ்க்கையாகும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். சுருங்கக்கூறின், கணவனின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தமும், சொர்க்கமும் இருக்கிறது. மனைவியிடம் சிறந்தவரே மக்களில் சிறந்தவர் ஆவார்(நபிமொழி) என்பதை கணவன் - மனைவி கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

நீயா நானா என்பதல்ல! நீயும் நானும் என்பதே! இல்வாழ்க்கை.

 

அதிகமான அன்பைவிட, சரியான புரிதல் தான் எந்த உறவையும் நீண்டகாலம் வாழ வைக்கும்.

 

சகிப்புத்தன்மை வேண்டும்

 

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரிடம் இருந்(து கொண்டிருந்)தார்கள். இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவ(ரான நபியவர்களுடைய மற்றொரு துணைவி யா)ர் உணவுப் பண்டமுள்ள தட்டு ஒன்றை (நபியவர்களுக்காகப் பணியாள் ஒருவரிடம்) கொடுத்தனுப்பினார்கள்.

 

(அப்போது) நபியவர்கள் யாரது வீட்டில் தங்கியிருந்தார்களோ அந்தத் துணைவியார் (ரோஷத்தில்) அந்தப் பணியாளின் கையைத் தட்டிவிட்டார். அந்தத் தட்டு (கீழே விழுந்து) உடைந்துவிட்டது. உடனே (ஆத்திரப்படாமல்) நபியவர்கள் உடைந்த அந்தத் தட்டின் துண்டுகளை ஒன்று சேர்த்தார்கள். பிறகு தட்டிலிருந்த உணவை (மீண்டும்) அதிலேயே ஒன்று சேர்க்கலானார்கள். மேலும், (அங்கிருந்த தோழர்களை நோக்கி), ( غَارَتْ أُمُّكُمْ ) ‘‘உங்கள் தாயார் ரோஷப்பட்டுவிட்டார்” என்று சொன்னார்கள்.

 

பின்னர் அந்தப் பணியாளை (அங்கேயே) நிறுத்திவிட்டு தாமிருந்த வீட்டுக்கார (துணைவியா)ரிடமிருந்து மற்றொரு தட்டைக் கொண்டுவரச்செய்து, உடைபட்ட தட்டுக்குரியவரிடம் நல்ல தட்டை (மாற்றாக)க் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். உடைந்த தட்டை உடைக்கப்பட்ட வீட்டிலேயே வைத்துவிட்டார்கள். நூல்:- புகாரீ-5225, அபூதாவூத்

 

அபுத்தர்தா (ரலி) அவர்கள் தனது மனைவியிடம் கூறினார்கள். ( إِذَا رَأَيْتَنِي غَضِبْتُ فَرَضَنِي وَإِذَا رَأَيْتُكِ غَضْبَى رَضِيتُكَ وَإِلَّا لَمْ نَصْطَحِبْ ) நான் கோபம்கொண்டால், என்னை நீ பொருந்திக்கொள். அதே தருணம், நீ கோபம்கொண்டால் நான் உன்னை பொருந்திக்கொள்கின்றேன். இல்லையெனில் நாம் இணைந்து வாழ முடியாது.

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் மரணித்துவிட்ட தமது அன்பு மனைவிப்பற்றி கூறுகிறார்கள். 20 வருட திருமண வாழ்க்கையில் ஒரு தடவைகூட நாங்கள் சண்டை பிடித்ததில்லை.

 

"அது எவ்வாறு சாத்தியம்?" என்று வினவப்பட்டது. அன்னார் "எனக்குக் கோபம் வரும்போது, அவள் மௌனமாய் இருப்பாள். அவளுக்கு கோபம் வரும்போது, நான் மௌனமாய் இருப்பேன்" என்றார்கள்.

 

தம்பதியர் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ, அவர்கள் தமக்கிடையே விட்டுக் கொடுப்பது, மன்னிப்பது, மறப்பது ஆகிய குணங்கள் அவசியம். அதற்கு பெயர் தான் சகிப்புத்தன்மை ஆகும். சகிப்புத்தன்மையைப் பேணுவோருக்கு தான் இல்லறம் நல்லறமாகும்.

 

கனிவாகப் பேசும் தம்பதியர் இடையே சண்டைகள் வருவதில்லை அவர்களின் வார்த்தைகள் ஒருபோதும் காயப்படுத்துவதில்லை. ஒருவரை ஒருவர் மதிக்கின்ற குடும்பத்தில் தான் சமத்துவம் இருக்கும்; சந்தோஷம் பெருகும். அப்படிப்பட்ட குடும்பங்களில் பிறக்கின்ற பிள்ளைகள் நல்ல பண்புகளுடன் வளர்வார்கள்.

 

மனைவி: (கோபமாக) முட்டாள் நீங்களா? நானா?

கணவன்: (அமைதியாக) நீ புத்திசாலி என்று எல்லோருக்குமே தெரியும். அதனால், கண்டிப்பாக நீ ஓர் முட்டாள் கணவனை தேர்ந்தெடுக்க மாட்டாய்.

 

விட்டுக்கொடுக்கக் கூடாது

 

நுஃமான் பின் பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது. அபூபக்ர் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் (வீட்டிற்குள் வர) அனுமதி கோரினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) குரலை உயர்த்திப் பேசிக்கொண்டிருந்ததை செவியுற்றார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்ததும், ஆயிஷா (ரலி) அவர்களின் கன்னத்தில் அறைவதற்காக அவரைப் பிடித்தார்கள். மேலும் நபியவர்களைவிட உன் குரல் ஓங்கி ஒலிக்கக் காண்கின்றேனே (உனக்கு என்னவாயிற்று?)  என்று கடிந்து கூறினார்கள்.

 

அப்போது நபியவர்கள் அவரை (அடிக்கவிடாமல்) தடுத்து நிறுத்தினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் வெளியேறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியே சென்றபோது, நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ( كَيْفَ رَأَيْتِنِي أَنْقَذْتُكِ مِنَ الرَّجُلِ ) "இந்த மனிதரிடமிருந்து உன்னை எவ்வாறு காப்பாற்றினேன் பார்த்தாயா?" என்று (நகைச்சுவையாக) கேட்டார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் சில நாள்கள் (நபியவர்களிடம் வராமல்) தங்கி விட்டார்கள். பிறகு (வந்து) நபியவர்களிடம் (வீட்டிற்குள் வர) அனுமதி கோரினார்கள். (அனுமதிப்பெற்று உள்ளே சென்றபோது) அவ்விருவரும் இணக்கமாக இருக்கக் கண்டார்கள். அப்போது அவ்விருவரிடமும், ( أَدْخِلاَنِي فِي سِلْمِكُمَا كَمَا أَدْخَلْتُمَانِي فِي حَرْبِكُمَا ) "உங்களின் சண்டையில் நீங்கள் இருவரும் என்னை சேர்த்து கொண்டதுபோல், உங்களின் சமாதானத்திலும் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், ( قَدْ فَعَلْنَا قَدْ فَعَلْنَا ) "சேர்த்துக் கொள்கிறோம்; சேர்த்துக் கொள்கிறோம்" என கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-4347, முஸ்னது அஹ்மத்-17,668

 

பிறரிடம், நமது ஜோடியை (கணவன் அல்லது மனைவியை) விட்டுக் கொடுத்து பேசவும் கூடாது. மட்டமானவராக  காட்டவும் கூடாது. அது, தமக்கு தாமே அவமானத்தை ஏற்படுத்திக்கொள்வதாகும். நாங்கள் சில நேரங்களில் எங்களுக்கிடையே சண்டையிட்டுக்கொண்டாலும், சிறிது நேரத்திற்குள் சமாதானமாகிவிடுவோம் என்பதை வெளிக்காட்ட வேண்டும்.

 

அழகிய உபதேசம்

 

ஒருமுறை அலீ (ரலி) அவர்களுக்கு அவரது மனைவி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. உடனே அலீ (ரலி) அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி பள்ளிவாசலுக்கு வந்து படுத்துவிட்டார்கள். அந்நேரத்தில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். அம்மையாரிடம்  தனது மருமகனைப் பற்றி விசாரித்தபோது அம்மையார் அண்ணலாரிடம் நடந்ததை எடுத்துரைத்துவிட்டு தனது கணவர் பள்ளிவாசலில் இருப்பார் என்று கூறினார்கள்.

 

அண்ணலார் பள்ளிவாசலுக்கு சென்றபோது அங்கு அலீ (ரலி) அவர்கள் தனது முதுகில் மண் ஒட்டிக்கொண்டிருக்கும் நிலையில் படுத்திருந்தார். அப்போது அண்ணலார், ( اِجْلِسْ يَا اَبَا تُرَاب ) "(எழுந்து) “அமருங்கள் அபூதுராப் (மண்ணின் தந்தை) அவர்களே!" என்று கூறினார்கள். பிறகு அண்ணலார் அலீ (ரலி) அவர்களை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

 

பிறகு தம்பதியரை அமர வைத்து தனது அருமை மகளை நோக்கி "மகளே! உனது பேச்சால் புண்பட்டுப் போயிருக்கும் உன் கணவரிடம் மன்னிப்பு கேள்! உன் கணவர் அதிருப்தி கொண்ட நிலையில் உனக்கு மரணம் வந்துவிடுமாயின் நீ சொர்க்கத்தின் நறுமணத்தைக்கூட நுகர்ந்து பார்க்க இயலாதவளாய் ஆகியிருப்பாய்! அல்லாஹ் உன்னை மன்னித்து விட்டான்" எச்சரித்தார்கள்.

 

தம்பதியர் தமக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் செய்துகொள்வது நல்லதல்ல. அதுவே, பிரிவினைக்கு காரணமாகிவிடும். சில நேரங்களில் மனைவி காச்மூச்சு என்று கத்தும்போது கணவன் சற்றுநேரம் வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவது நல்லது. அவள் பேச நாம் பேச எனும்போது, கை நீட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு, பிரச்சினை பெரிதாகிவிடும்.

 

வாழ்க்கை எத்தனை அழகானது என்பதைக் குடும்பம் தான் நமக்குக் காட்டுகிறது இல்லறம் எத்தனை இன்பமானது என்பதைத் தாம்பத்தியம் நமக்கு உணர்த்துகிறது. முதலில் வாழ்வை ரசிக்கின்ற பண்பு வேண்டும் ஏனெனில் ரசனை தான் நம் வாழ்விற்குச் சுவையூட்டுகிறது.

 

குடும்பத்தின் மகிழ்ச்சி நம் கையில் தான் இருக்கிறது இந்த உண்மையைச் சிலர் உணர்வதே இல்லை அற்ப விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டு வீட்டையே சிலர் போர்க்களமாக்கி விடுவார்கள். அப்படியே நாளும், பொழுதும் போராடிக் கொண்டிருப்பதில் என்ன மகிழ்ச்சி.

 

தேவையற்ற வாக்குவாதங்களும், விட்டுக்கொடுக்காத பிடிவாதங்களும் வீட்டை நரகமாக்கிவிடும். அன்பான வார்த்தைகளே இல்லத்தை சொர்க்கமாக்கும்.

 

கணவன்மார்கள் தமது மனைவியர்களுக்கு எவ்வளவு உபகாரங்கள் புரிந்தாலும் இன்றைய மனைவிகளிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சிப்பது, “அவிச்ச முட்டையை ஆம்லேட் போட நினைப்பது போன்றது” என்று புரிந்துக்கொள்ள வேண்டுமே!

 

பலதாரமணம் கொண்டவர்

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களுக்காக "ஹஸீரா" ( خَزِيرَة ) என்ற உணவை சமைத்தேன். நான் அப்போது அங்கு வந்து அமர்ந்த சவ்தா (ரலி) அவர்களிடம்  "சாப்பிடுங்கள்" என்று கூறினேன். நபியவர்கள் எனக்கும் சவ்தா (ரலி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். ஆனால், சவ்தா (ரலி) அவர்கள் சாப்பிட்ட மறுத்துவிட்டார்.

 

அப்போது நான், ( لَتَأْكُلِنَّ، أَوْ لَأُلَطِّخَنَّ وَجْهَكِ ) "கண்டிப்பாக நீங்கள் அதை சாப்பிட்டே ஆகவேண்டும். அல்லது அதை உங்களது முகத்தில் பூசி விடுவேன்" என்று கூறினேன். அப்போதும் அவர் சாப்பிட மறுத்துவிட்டார். நான் ஹரீராவில் எனது கையை வைத்து அவரது முகத்தில் பூசிவிட்டேன். இதை பார்த்த நபியவர்கள் சிரித்தவர்களாக ஹஸீராவில் சவ்தாவிற்காக தனது கரத்தை வைத்து சவ்தாவிடம், ( الْطَخِي وَجْهَهَا ) "ஆயிஷாவின் முகத்தில் நீ இதைப் பூசிவிடு!" என்று கூறினார்கள்.

 

அவ்வாறே அவர் என் முகத்தில் பூசிவிட்டார். அப்போது மீண்டும் நபியவர்கள் சிரித்தார்கள். அச்சமயம் உமர் (ரலி) அவர்கள் யாரோ ஒருவரை அழைத்துக்கொண்டே சென்றார். அப்போது நபியவர்கள், அவர் தமது வீட்டுக்குள் வர வாய்ப்புள்ளது என்று எண்ணியவர்களாக, ( قُومَا فَاغْسِلَا وُجُوهَكُمَا ) "நீங்கள் இருவரும் எழுந்துச் சென்று உங்கள் முகங்களைக் கழுவிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- சுனனுல் குப்ரா இமாம் நசாயீ, முஸ்னது அபூயஅலா, மஜ்மஉஸ் ஸவாயித் இமாம் அல்ஹைஸமீ, தக்ரீஜுல் இஹ்யா ( تخريج الإحياء ) இமாம் இராக்கீ, சில்சிலத்தில் அஹாதீஸ் இமாம் அல்பானீ

 

இன்றைய பெரும்பாலான ஆண்கள் தமக்கு ஒரு மனைவி இருந்தாலும் மற்றொரு மனைவி இருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறார்கள். அது மார்க்கம் அனுமதித்த ஒன்று தான். ஒரு மனைவியை வைத்து சமாளிப்பதே மிகச் சிரமமாக இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியை வைத்து, சண்டை சச்சரவின்றி சமாளிப்பது என்பது மிகப்பெரிய சாதனை தான். இது எல்லோருக்கும் வசப்படாது.

 

சக்காளத்தி சண்டையில் மாட்டிக்கொள்ளும் கணவனின் பாடு திண்டாட்டம் தான். அவர்களுக்கு மத்தியில் நீதி நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்கிறது இஸ்லாம்.


"ஒரு பொண்டாட்டிக்காரனுக்கு உறியில சோறு. இரண்டு பொண்டாட்டிக்காரனுக்கு தெருவுல சோறு" என்பது கிராமத்துச் சொல்வழக்கு.

 

போலித் தகராறுகள்

 

ஒருமுறை அகீல் பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் தம் மனைவி ஃபாத்திமா பின்த் உத்பா பின் ரபீஆ (ரலி) அவர்களிடம் சென்றபோது அவருடைய மனைவி, ( أَيْنَ عُتْبَةُ بْنُ رَبِيعَةَ وَشَيْبَةُ بْنُ رَبِيعَةَ؟ )"(என் தந்தை) உத்பாவும் (தந்தையின் சகோதரர்) ஷைபாவும் எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டார் அப்போது அகீல் (ரலி) அவர்கள், ( عَلَى يَسَارِكِ فِي النَّارِ إِذَا دَخَلْتِ ) "நீ நரகத்திற்குள் நுழைந்(து பார்த்)தால் உனது இடப்பக்கத்தில் அவர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்கள். உடனே ஃபாத்திமா (ரலி) அவர்கள் கோபமடைந்து தமது ஆடையை அணிந்துகொண்டு ஜனாதிபதி உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று அதை தெரிவித்தார்கள்.

 

இதைக் கேட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பின்னர் விசாரணைக்காக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களையும் முஆவியா (ரலி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள். பின்னர் அவர்கள் இருவரும் தம்பதியரை சந்திக்க சென்றபோது அவர்களின் வீட்டுக்கு கதவு உள்ளே தாளிடப்பட்டிருப்பதை கண்டார்கள். (தம்பதியர் சமாதானம் அடைந்து விட்டிருந்தனர்.) எனவே, அவ்விருவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். நூல்:- முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம்-35

 

கணவன்:- நீ இறந்த பிறகு எங்கேப்போவாய்?

மனைவி:- சொர்க்கத்திற்கு தான்.

கணவன்:- நான் இறந்த பிறகு எங்கே போவேன்?

மனைவி:- நரகத்திற்கு தான்.

கணவன்:- நீ சொர்க்கத்திற்கு சென்ற பிறகு உனக்கு அங்கே என்ன கிடைக்கும்?

மனைவி:- ஆணழகன் கிடைப்பான்.

கணவன்:- நரகத்தில் எனக்கு என்ன கிடைக்கும்?

மனைவி:- குரங்கு தான்

கணவன்:- அதெப்படி டி... உனக்கு மட்டும் இங்கேயும் ஆணழகன்; அங்கேயும் ஆணழகனா? எனக்கு மட்டும் இங்கேயும் குரங்கு; அங்கேயும் குரங்கா?

 

தம்பதியரின் தகராறுகள் சில நேரங்களில் போலியானதாக இருக்கும். அதைப் பெரிதுபடுத்திக் பேசக்கூடாது. தம்பதியரின் பகல் தகராறு இரவு வந்தால் சரியாகிவிடும். இதுவே பல குடும்பங்களின் யதார்த்தம்.


"புருஷன் பொண்டாட்டி சண்டை பொழுதுப்போனால் சரியாகிவிடும்" என்பது கிராமத்துச் சொல்வழக்கு.

 

நேசத்தை வெளிப்படுத்த வேண்டும்

 

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் தன் மகனின் திருமணத்தின் போது, அவருக்குக் கூறிய அறிவுரை. ( فَإِنَّ النِّسَاءَ يُحْبِبْنَ الدِّلَالَ وَيُحْبِبْنَ التَّصْرِيحَ بِالْحُبِّ ، فَلَا تَبْخَلْ عَلَى زَوْجَتِكَ بِذَلِكَ ، فَإِنْ بَخِلْتَ جَعَلْتَ بَيْنَكَ وَبَيْنَهَا حِجَابًا مِنْ الْجَفْوَةِ وَنَقْصًا فِي الْمَوَدَّةِ )  (நான் உன்னை நேசிக்கிறேன் என்று உன் மனைவியிடம் சொல். ஏனெனில்,) பெண்கள் வெளிப்படைத்தன்மையை விரும்புவர். நேசத்தைத் தெளிவாகச் சொல்வதை விரும்புவர். எனவே, இவ்விஷயத்தில் நீ கஞ்சத்தனம் செய்யாதே. அவ்வாறு செய்தால், உனக்கும் அவளுக்குமிடையில் வெறுப்புத் திரையொன்றை நீ ஏற்படுத்திவிட்டாய். கருத்தொற்றுமையில் குறைவு செய்துவிட்டாய்.

 

"பெண்ணின் உள்ளம் அவள் காதுகளில் உள்ளது. எனவே அழகிய வார்த்தைகளுக்கு முக்கியத்தும் வழங்கு!" என்கிறது அரபிப் பழமொழி.

 

"நான், இதை உனக்காகவே விரும்பி வாங்கி வந்துள்ளேன். இதை வைத்துக்கொள்!" என்று கணவன் சொல்லும்போது, "நான், இதை உங்களுக்காகவே விரும்பி சமைத்து வைத்திருக்கிறேன். இதை உண்ணுப்பாருங்கள்" என்று மனைவி சொல்லும்போது அங்கே நேசம் வெளிப்படுகிறது.

 

தம்பதியர் அவ்வபோது தமக்கு மத்தியில் நேசத்தை வெளிப்படுத்துவதின் மூலம்  தகராறுகள் தவிர்க்கப்படலாம்.

 

வெளியிடங்கள் மற்றும் நாம் பணிபுரியும் இடங்களில் எல்லாரிடமும் சிரித்துச் சிரித்துப் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழையும்போது முகத்தில் இறுக்கத்தையும் பேச்சில் கடுகடுப்பையும் வெளிப்படுத்தக்கூடாது.  அது, நம் வாழ்விற்கு நாமே செய்கின்ற துரோகம்.

 

நம்முடைய குடும்பத்தை அதிகதிகமாக நேசிக்க வேண்டும். அது தான் மிகப் பெரிய பலம். குடும்பத்தை நேசிக்கின்றவர்களால் தான், நல்ல உறவுகளை உருவாக்க முடியும்.

 

மூன்றாம் மனிதர்

 

நபிமொழி களஞ்சியம் அல்லாமா அஃமஷ் (ரஹ்) அவர்களுக்கும் இவர் மனைவிக்கும் அவ்வபோது சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும்.

 

ஒருமுறை இவருக்கும் இவரின் மனைவிக்கும் மத்தியில் மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டது. அப்போது இவர் தம்மோடு இருந்தவரிடம், "நீ என் மனைவியிடம் பேசி எங்களுக்கு மத்தியில் இருக்கும் மனஸ்தாபம் நீங்க, முயற்சி செய்" என்று கூறினார்.

 

அந்த மனிதர், அன்னாரின் மனைவியிடம் சென்று, ( إِنَّ أَبَا مُحَمَّدٍ شَيْخَنَا وَفَقِيهِنَا ، فَلَا يُزَهِّدَنَّكَ فِيهِ عَمْشُ عَيْنِهِ وَحُمُوشَةُ سَاقَيْهِ ، وَضَعْفَ رُكْبَتَيْهِ ، وَقَزْلَ رِجْلَيْهِ ، وَنُتُوءَ جَبِينِهِ ، وَبَخْرَ فِيهِ ) “அபூ முஹம்மத் எங்கள் ஆசிரியர் மற்றும் சட்ட வல்லுநர். எனவே அவர் குருடராக இருக்கிறார் என்பதற்காக நீ அவரை வெறுத்துவிட வேண்டாம். அவரின் கால்கள் சூம்பிய நிலையில் இருக்கிறது என்பதற்காக அவரை நீ வெறுத்துவிட வேண்டாம். அவரின் மூட்டுக்கள் தேய்ந்துவிட்டது என்பதற்காக அவரை நீ வெறுத்துவிட வேண்டாம். அவரின் கால்கள் பலவீனமாகிவிட்டது என்பதற்காக நீ அவரை வெறுத்து விட வேண்டாம். அவர் மீது வேர்வை நாற்றம் வீசுகிறது என்பதற்காக அவரை நீ வெறுத்துவிட வேண்டாம். அவர் வாய் நாற்றம் எடுக்கிறது என்பதற்காக அவரை நீ வெறுத்துவிட வேண்டாம். அவருக்கு தொப்பை விழுந்துவிட்டது என்பதற்காக நீ அவரை வெறுத்துவிட வேண்டாம். " என்று கூறினார்.

 

இதை அறிந்த அஃமஷ் (ரஹ்) அவர்கள் அந்த மனிதரை நோக்கி!, ( قُمْ عَنَّا قَبَّحَكَ اللَّهُ فَقَدْ أَرَيْتُهَا مِنْ عُيُوبِي مَا لَمْ تَكُنْ تَعْرِفُهُ وَتُبَصِّرُهُ ) "ஏய்! நீ எங்களிடமிருந்து எழுந்து சென்றுவிடு. அல்லாஹ் உன்னை அசிங்கப்படுத்தட்டும். ஏனென்றால், அவள் (என்னைப்பற்றி) அறியாத அல்லது பார்க்காத சில குறைகளையெல்லாம் அவளுக்குச் சுட்டிக்காட்டுகிறாய்" என்று கூறினார்கள். நூல்:- அத்தத்கிரத்துல் ஹம்தூனிய்யா - இமாம் இப்னு ஹம்தூன் ( التَّذْكِرَةُ الْحَمْدُونِيَّةُ ابْنُ حَمْدُونَ )

 

ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு கணவர் தன் தந்தையின் பெயரான "முஹம்மது" என்பதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறினார். அவரின் மனைவி இல்லை, தன் தந்தையின் பெயரான "அப்துல்லாஹ்" என்பதைத்தான் வைக்க வேண்டும் என்று கூறினாள். ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து கொள்ளாமல் சண்டையிட்டுக் கொண்டனர். காரசாரமாக சண்டை முற்றியது.

 

இந்த சண்டையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வந்து என்னவென்று விசாரித்துவிட்டு, நான் அழகான யோசனை சொல்கிறேன். அதாவது, “முஹம்மது சலீம் அப்துல்லாஹ்” என்று பெயர் வையுங்கள் என்று ஆலோசனை கூறினார். கணவர், “சரி என் தந்தை பெயர் முஹம்மது, என் மனைவியின் தந்தை பெயர் அப்துல்லாஹ், இடையிலே சலீம் என்று ஒரு பெயர் வருகிறது. அது யாருடையது?” என்று கேட்டார். அதற்கு அந்த மனிதர் அது என் தந்தையின் பெயர் என்றார்.

 

தம்பதியர் கவனிக்க வேண்டிய விஷயம்: குடும்பம் என்றால் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரத்தான் செய்யும் அப்போது பதற்றமடைய கூடாது. கணவன் மனைவியாகிய இருவரும் அமர்ந்து நிதானமாகப் பேசினால் பிரச்சினைகள் காணாமல் போய்விடும்.

 

அதை விட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே (மார்க்கம் அறியாத) மூன்றாம் மனிதரிடம் நம்  வீட்டுப் பிரச்சினைகளைப் பேசுவது சரியல்ல. நம்மைச் சுற்றி இருப்பவர்களில் சிலர் தங்கள் காதுகளைத் தீட்டிக்கொண்டு ஆவலாய்க் கேட்பார்கள். நம்முடைய குடும்பத்தை இரண்டு துண்டாக்க என்னென்ன யோசனைகள் தர முடியுமோ அதையெல்லாம் தருவார்கள். அப்படி தான் பல குடும்பங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகி சிதைந்து போகின்றன. மூன்றாவது நபர் ஒருவர் நம்முடைய பிரச்னைக்குள் வந்தாலே நாம் வேறு ஒரு பிரச்னைக்குள் சிக்க தயாராகி வருகிறோம் என்பதுதான் மறைமுகப் பொருள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

 

“குடும்ப நண்பர்கள்” என்று கண்டவர்களையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது. முன், பின் அறியாதவர்களை வீட்டிற்குள் வரவழைக்கக்கூடாது. பேசுவதை மட்டுமே வைத்து யாரையும் நல்லவர்கள் என்று நம்பிவிடக்கூடாது. அப்படிப்பட்டவர்களால் கணவன்,மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு பல குடும்பங்கள் தரைமட்டமாகிப் போயிருக்கின்றன. நம்முடைய குடும்பத்தின் நிம்மதிக்குக் கேடு விளைவிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் அனுமதிக்கக்கூடாது.

 

தம்பதியரின் தகராறு என்பது இறைத்தூதர்கள் முதல் இறுதி நிலையில் இருக்கும் மனிதர்கள் வரை இருக்கக்கூடியது தான். இதுவும் கடந்து போகும் என்று போய்விட வேண்டும்.

 

குடும்ப வாழ்வைக் கொண்டாடும்போது தாம்பத்திய சுகத்தை இணைந்து அனுபவிக்கலாம். ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவராய் இருக்க வேண்டும். அப்போது தான் நம்முடைய  இல்லறம் செழிக்கும்; வாழ்வில் இன்பங்கள் தழைக்கும்.

 

நமது ஜோடிகளுடன் நிம்மதியாக வாழ அல்லாஹுத்தஆலா அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 


No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...