Search This Blog

Sunday, 8 December 2024

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்

 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்

 

وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ

அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்தையும் நீரால் படைத்தான். அவற்றில் தம் வயிற்றால் ஊர்ந்து செல்பவையும் உள்ளன. திருக்குர்ஆன்:- 24:45

 

பாம்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி சர்வதேச பாம்புகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்பார்கள். மனிதர்கள் பாம்புகளுக்கு இடையூறு செய்யும்போது அதாவது, பாம்புகளை மிதிக்கும்போது அல்லது அதை அடிக்க முயற்சி செய்யும்போது மட்டுமே, அவை தன்னை தற்காத்துக்கொள்ள மனிதர்களை தாக்குகின்றன. 

 

பாம்புகள் ஒருபோதும் மனிதர்களை தேடி துரத்தி தாக்குவதில்லை. ஏனென்றால், மனிதர்கள் பாம்புகளுக்கு இயற்கை இரையல்ல. மனிதர்களை தாக்கும் அனைத்து பாம்புகளும் நஞ்சுடையதல்ல. பாம்புக்கு பல்லில் தான் விஷம். நாக்கில் இல்லை.

 

நல்ல பாம்பு மனிதர்களை கடிப்பதற்கு முன் படம் எடுத்து எச்சரிக்கும். அடிப்பதற்கு முற்படும்போது கடிக்கும். கடிப்பதற்கு முன் படம் காட்டி எச்சரிக்கை செய்வதால் "நல்ல பாம்பு" என்று நமது முன்னோர் பெயர் வைத்துள்ளனர்.   

 

"பாம்பைக் கண்டால் படை நடுங்கும்" என்பார்கள். ஆனால், தேள்களைக் கண்டால் பாம்பு நடுங்கும். அது கொட்டினால் பாம்பு செத்துப் போகும்.

 

இந்தியாவில் பாம்பு - மனித மோதல்கள் அதிகம். வருடத்திற்கு ஒரு லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 50 ஆயிரம் பேர் பலி ஆகின்றனர். உலகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இந்தியாவில் 280-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள 52 விஷப்பாம்புகளில், 4 இனங்கள் மட்டுமே மனித குடியிருப்புகளைச் சுற்றி வாழ்கின்றன.

 

அவை: நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன். பெரும்பான்மையான உயிர்ப்பலிகளுக்கு இந்த நான்கு பாம்புகள், மட்டுமே காரணம். நல்லபாம்பு, கட்டுவிரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். கண்ணாடி, சுருட்டை விரியன் போன்றவை கொடிய நஞ்சுடைய பாம்புகள். விஷம் இரத்த மண்டலத்தை பாதிக்கும்

 

பேரற்புதம்

 

இறைத்தூதர் மூசா (அலை) அவர்கள் தம்முடன் எப்போதும் கைத்தடி ஒன்றை வைத்திருப்பது வழக்கம். ஒருமுறை அல்லாஹ், "மூசா! உமது வலக்கையில் இருக்கிறதே அது என்ன?" என்று வினவினான். அதற்கு மூசா (அலை) அவர்கள், "இது எனது கைத்தடி; இதை ஊன்றுகோலாக பயன்படுத்துவேன்; இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு (இலைகளை) உதிர்த்து விடுவேன்; இதில் எனக்கு வேறு பல பயன்பாடுகளும் உள்ளன" என்றார்கள். அதற்கு அல்லாஹ், "மூசா! அதை(க் கீழே) போடுவீராக" என்றான். எனவே, அவர் அதை(க் கீழே) போட்டார். உடனே அது விரைவாக நெளியும் பாம்பாயிற்று. அப்போது அல்லாஹ், "அதை பிடிப்பீராக; பயப்படாதீர்; அதை மறுபடியும் அதன் முந்திய நிலைக்கு நாம் கொண்டு வருவோம்" என்றான். இது குறித்து திருக்குர்ஆனின் தாஹா அத்தியாயம் (17 - 21) விவரிக்கிறது.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். மூசா (அலை) அவர்களின் கைத்தடி அதற்கு முன்பாக முன்னர் பாம்பாக மாறியதில்லை. அல்லாஹ்வின் உத்தரவின்படி கைத்தடி பாம்பாக மாறிய பிறகு, அந்தப் பாம்பு ஒரு மரத்தின் அருகில் சென்றது. அதை அப்படியே தின்று முடித்தது. அடுத்து ஒரு பாறைக்கு அருகே சென்று அதையும் விழுங்கியது. பாம்பின் வயிற்றுக்குள் பாறை விழும் சத்தத்தை மூசா (அலை) அவர்கள் செவியற்றார்கள். அப்போதுதான் மூசா (அலை) அவர்கள் புறமுதுகிட்டு ஓடினார்கள். அதையடுத்து, "மூசா! அதைப் பிடிப்பீராக" என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அவர் (பயத்தால்) அதை பிடிக்கவில்லை. இவ்வாறு மூன்று முறை அறிவிக்கப்பட்ட பிறகு மூசா (அலை) அவர்கள் அதை பிடித்தார்கள். அது பழையபடியே கைத்தடியாக மாறிற்று. நூல்:- தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்

 

இறைத்தூதர் மூசா (அலை) அவர்களால் நிகழ்த்தப்பட்ட (முஃஜிஸா எனும்) அற்புதங்களை முறியடிக்க எண்ணிய ஃபிர்அவ்ன் நாட்டிலுள்ள சூனியக்காரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து, மூசா (அலை) அவர்களுக்கும் சூனியக்காரர்களுக்கும் மத்தியில் போட்டிக்கு ஏற்பாடு செய்தான். அதன் மூலம் மூசாவை தாம் வென்றுவிடலாம் என்றெண்ணினான்.

 

அதன் அடிப்படையில் போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் தம்மிடம் வைத்திருந்த சூனியக்கயிறுகள் மற்றும் கைத்தடிகள் அனைத்தையும் மக்களின் பார்வைக்கு வீசினர். அவைகள் பாம்புகளைப் போன்று வளைந்து நெளிந்து ஓடின. அல்லாஹ்வின் உத்தரவின்படி மூசா (அலை) அவர்களும் தம்மிடம் வைத்திருந்த கைத்தடியை வீசினார்கள். அது மிகப்பெரிய பிரமாண்டமான பாம்பாக உருவெடுத்து, பாம்பைப் போன்று நெழிந்துக்கொண்டிருந்த அந்த சூனியக்காரர்களின் கயிறுகள் மற்றும் கைத்தடிகள் அனைத்தையும் விழுங்கிவிட்டது. மூசா (அலை) அவர்கள் மூலமாக இறைவனின் அற்புதத்தைக் கண்ட அந்த சூனியக்காரர்கள் அனைவரும் சிரவணக்கம் புரிந்தவாறு, மூசா (அலை) அவர்களை இறைத்தூதராகவும், அல்லாஹ்வை இறைவனாகவும் ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களாக மாறினர். இதுகுறித்து திருக்குர்ஆனின் அல்அஃராப் அத்தியாயம் (109 - 122) விவரிக்கிறது.

 

மூசா (அலை) அவர்கள் வைத்திருந்த கைத்தடியே பேரற்புதமாக மாற்றி, விரைந்து செல்லும் பாம்பாக ஆக்கி, சூனியம் நிறைந்திருந்த அம்மக்களிடையே அன்னார் ஒரு இறைத்தூதர் என்பதற்கு சான்றாக அமைத்தான் வல்லோன் இறைவன்.

 

கொல்லுங்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اقْتُلُوا الْحَيَّاتِ وَذَا الطُّفْيَتَيْنِ وَالأَبْتَرَ فَإِنَّهُمَا يَلْتَمِسَانِ الْبَصَرَ وَيُسْقِطَانِ الْحَبَلَ ) பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும், குட்டை வால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், இவை இரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும். கருவைக் கலைத்துவிடும். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3308, முஸ்லிம்-4491, அபூதாவூத்-4572, திர்மிதீ-1403

 

அபுல் அஹ்வஸ் அவ்ஃப் பின் மாலிக் அல்ஜுஷமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருநாள் அன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் பாம்பொன்று சுவரின் மேல் ஊர்ந்து சென்றது. உடனே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் தமது உரையை நிறுத்திவிட்டு, தமது மூங்கில் குச்சியால் அல்லது ஒரு கம்பால் அதை அடித்துக் கொன்றார்கள். பின்னர், ( مَنْ قَتَلَ حَيَّةً فَكَانَمَاقَتَلَ رَجُلًا مُشْرِكًا قَدْ حَلَّ دَمُهُ ) "ஒரு பாம்பைக் கொன்றவர் கொல்வதற்கு அனுமதியளிக்கப்பெற்ற இணைவைப்பாளர் ஒருவரைக் கொன்றவர் போன்றவராவார்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள். நூல்:- முஸ்னது அஹ்மத்-3559

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடையே குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்கள்.

 

அப்போது பாம்பு ஒன்று (தன் புற்றிலிருந்து வெளிவந்து) எங்களை நோக்கிச் சீறியது. உடனே நபியவர்கள், “அதைக் கொல்லுங்கள்!” என்றார்கள். நாங்கள் அதைக் கொல்ல விரைந்தபோது அது சென்றுவிட்டது. அப்போது நபியவர்கள், ( وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا ) “அதன் தீங்கிலிருந்து நீங்கள் காப்பாற்றப்பட்டதைப் போன்றே, உங்கள் தீங்கிலிருந்து அதுவும் காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-1830, முஸ்லிம்-4500, முஸ்னது அஹ்மத்-3393

 

பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கண்டால் அடித்துக் கொன்றுவிட வேண்டும். அவை எந்த நேரத்தில் யாரை தீண்டும் என்று சொல்லமுடியாது. இது வருமுன் காக்கும் வகையைச் சேர்ந்ததுதான்.

 

மூடநம்பிக்கை

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ تَرَكَ الْحَيَّاتِ مَخَافَةَ طَلَبِهِنَّ فَلَيْسَ مِنَّا مَا سَالَمْنَاهُنَّ مُنْذُ حَارَبْنَاهُنَّ ) தங்களைப் பழிவாங்கும் என அச்சத்தால் யார் பாம்புகளை (கொல்லாமல்) விட்டு விடுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர். அவற்றிடம் நாம் சண்டை போட ஆரம்பித்த நாளிலிருந்து அவற்றோடு நாம் இணங்கிப் போனதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4570, முஸ்னது அஹ்மத்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قَتَلَ حَيَّةً فَلَهُ سَبْعُ حَسَنَاتٍ وَمَنْ قَتَلَ وَزَغًا فَلَهُ حَسَنَةٌ وَمَنْ تَرَكَ حَيَّةً مَخَافَةَ عَاقِبَتِهَا فَلَيْسَ مِنَّا ) ஒரு பாம்பைக் கொன்றவருக்கு ஏழு நன்மைகள் உண்டு. ஒரு பல்லியைக் கொன்றவருக்கு ஒரு நன்மை உண்டு. பின் விளைவை அஞ்சி, பாம்பை (கொல்லாமல்) விட்டவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத் -3787

 

பாம்புகளைக் கொன்றால் அவற்றின் ஜோடிகள் வந்து தீண்டி பழிவாங்கும் என்பது அறியாமைக் கால ஐதீகம்‌. அந்த மூடநம்பிக்கையை தகர்த்தெறியும் விதமாக இந்த நபிமொழி அமைந்துள்ளது. பாம்புக்கும் மனிதருக்குமிடையிலான சண்டை இயற்கையானது. அவை ஒவ்வொன்றும் மற்றதை கொல்லும் நோக்கத்தை இயல்பிலேயே கொண்டுள்ளன. அவற்றைக் கொல்லாமல் விட்டவர் நபிவழியை கடைபிடிக்க தவறிவிட்டார்.

 

இந்தியாவில் பொதுவாக பாம்புகளை பற்றிய தவறான வதந்திகளை பொதுமக்கள் நம்பி வருகின்றனர்.

 

1. பாம்புகள் பால்குடிக்கும் என்பது தவறு. பாலூட்டிகள் மட்டுமே பால்குடிக்கும். அவற்றிற்கு மட்டுமே பால் செரிமானம் ஆகும்.

2. மகுடி இசைக்கு பாம்புகள் ஆடும் என்பதும் இசைப்பவரின் அசைவுக்கு ஏற்றவாறுதான் பாம்பு ஆடும். என்பதும் தவறு. அவற்றுக்கு செவிப்புலன் கிடையாது. பாம்பு அடிக்கடி நாக்கை வெளியில் நீட்டி சுற்றுப்புறத்தை உணர்ந்துக்கொள்ளும்.

3. பாம்புகள் பழிவாங்கும் என்பதும் தவறு. அவற்றிற்கு நினைவாற்றல் கிடையாது.

4. பச்சைப் பாம்பை "கண்கொத்திப் பாம்பு" என்று அழைக்கின்றனர். மனிதரின் கண்ணை கொத்தும் என்பதும் தவறான தகவல்.

5. விஷத்தை இறக்கி வைக்கும் என்பதும், பாம்பின் தலை பகுதியில் மாணிக்க கல் உள்ளது. அவ்வபோது அந்த மாணிக்கக்கல் கக்கிவிடும் வதந்தியே.

6. மண்ணுளிப் பாம்பை வீட்டில் வளர்த்தால் செல்வம் பொங்கும் என்பது மூடநம்பிக்கை.

7. நல்லபாம்பும் சாரைபாம்பும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் என்பதும் சுத்தமான  பொய். நல்ல பாம்புகளில் ஆண் மற்றும் பெண் இனப் பாம்புகள் உள்ளன. அதேபோல் சாரை பாம்பிலும் ஆண், பெண் இனம் உள்ளன.

 

கவனம் தேவை

 

அபூ உமாமா அல்பாஹிலி (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோலாலான தமது இரு காலுறைகளை எடுத்து வரச் சொன்னார்கள். அவற்றில் ஒன்றை அணிந்து மற்றொன்றை எடுப்பதற்குள் ஒரு காகம் வந்து அதை தூக்கிச் சென்று தலைகீழாக கவிழ்த்துப்போட்டது. அப்போது அதிலிருந்து குட்டி பாம்பொன்று விழுந்ததைப் பார்த்தார்கள். அப்போது நபியவர்கள், ( مَنْ كَانَ يُؤْمِنُ بِاَللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ، فَلَا يَلْبَسْ خُفَّيْهِ حَتَّى يَنْفُضَهُمَا )  "அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிய எவரும் தங்களின் காலுறைகளை உதறாமல் (தட்டாமல்) அணிந்துகொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள். நூல்:-  தாரகுத்னீ, தப்ரானீ, ஜாமிஉஸ் ஸஙீர்-8964 இமாம் சுயூத்தீ

 

நாம் அணியும் ஷு போன்றவைகளை வீட்டில் பாதுகாப்பான இடத்தில் கழற்றிவிட்டாலும் அதை மீண்டும் அணியும்போது ஒருமுறை அதை தட்டிவிட்டு அணிவது நல்லது. அது தற்காப்பு ஆகும்.

 

கட்டுவிரியன் இரவில் வெளியே வரக்கூடியது. விவசாயிகள் களைப்பால் வயல் வரப்பு மரத்தடியில் உறங்குவது வழக்கம். அப்போது கட்டுவிரியன் கடிக்க நேரலாம். இப்பாம்பு கடியை பெரும்பாலும் உணர முடியாது. வீட்டிற்கு வெளியே வயல்வெளியில் உறங்க நேர்ந்தால் கட்டில், கொசு வலை பயன்படுத்துவது நல்லது. கண்ணாடிவிரியன் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளியே வரும்.

 

நாம் நடக்கக்கூடிய பாதைகளை செடி குப்பை இல்லாமல் வைக்க வேண்டும். இரவில் டார்ச் லைட் எடுத்துச் செல்வது நல்லது. சுருட்டை விரியன் பாம்பு தரிசனப் பகுதிகள் குளங்களில் காணப்படும். மிகச்சிறியதாக இருந்தாலும் தொட்டவுடன் மின்னல் வேகத்தில் கடித்துவிடும்.

 

கொஞ்சம் பொறு

 

சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார். என் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் கண்ணில் படும் எந்தப் பாம்பையும் கொன்றுவந்தேன். இந்நிலையில் ஒருநாள் வீட்டில் வசிக்கும் பாம்பொன்றை நான் விரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை கடந்து சென்ற அபூ லுபாபா (ரலி) அவர்கள் "அப்துல்லாஹ்! நிறுத்துங்கள் (அதைக் கொல்லாதீர்கள்)" என்று கூறிவிட்டு, அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ( إِنَّهُ قَدْ نُهِيَ عَنْ ذَوَاتِ الْبُيُوتِ ) 'வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்ல வேண்டாம்' எனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார். நூல்:- முஸ்லிம்-4492, அபூதாவூத்-4572

 

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு அறிவிப்பில் அபூலுபாபா (ரலி) அவர்கள் (மேற்கண்ட) இச்செய்தியை கூறியதற்குப் பின்னர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது வீட்டில் (மெல்லிய வெண்ணிறப்) பாம்பு ஒன்றைக் கண்டார்கள். அப்போது அவர்கள் அதை வெளியேற்றுமாறு கட்டளையிட்டார்கள். அதற்கிணங்க 'அல்பகீஉ' எனும் இடத்திற்கு அது வெளியேற்றப்பட்டது. நூல்:- அபூதாவூத்-4573

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْهَوَامَّ مِنَ الْجِنِّ فَمَنْ رَأَى فِي بَيْتِهِ شَيْئًا فَلْيُحَرِّجْ عَلَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ فَإِنْ عَادَ فَلْيَقْتُلْهُ فَإِنَّهُ شَيْطَانٌ ) பாம்பு (போன்ற சில விஷச் ஜந்துக்)கள் ஜின்னுகளாக இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றை எவரேனும் தமது வீட்டில் கண்டால் (மீண்டும், வராதிருக்குமாறும், அப்படி வந்தால் தாக்கிய அழிப்பதாகவும்) மூன்று தடவை அதனை எச்சரிக்க வேண்டும். மீண்டும் அது வந்தால் அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தானாகும். நூல்:- அபூதாவூத்-4574, திர்மிதீ-1404

 

அபூலைலா (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வீடுகளில் தென்படும் பாம்புகளைப் பற்றி வினவப்பட்டது. நபியவர்கள், ( إِذَا رَأَيْتُمْ مِنْهُنَّ شَيْئًا فِي مَسَاكِنِكُمْ فَقُولُوا أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ نُوحٌ أَنْشُدُكُنَّ الْعَهْدَ الَّذِي أَخَذَ عَلَيْكُنَّ سُلَيْمَانُ أَنْ لاَ تُؤْذُونَا فَإِنْ عُدْنَ فَاقْتُلُوهُنَّ ) "அவற்றில் எதையேனும் நீங்கள் உங்களுடைய வீடுகளில் கண்டால், அதனிடம் (இறைத்தூதர்) நூஹ் (அலை) அவர்கள் உங்களிடம் பெற்ற உறுதிமொழியின் படியும், இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்கள் உங்களிடம் பெற்ற உறுதிமொழியின் படியும் கேட்கிறோம். எங்களுக்கு தீங்கிழைக்க வேண்டாம் என்று கூறுங்கள். அவை மறுபடியும் வந்தால் அவற்றை கொல்லுங்கள்" என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்-4576, திர்மிதீ-1405

 

இமாம் அபூதாவூத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( فَقَالَ لِي إِنْسَانٌ الْجَانُّ لاَ يَنْعَرِجُ فِي مِشْيَتِهِ فَإِذَا كَانَ هَذَا صَحِيحًا كَانَتْ عَلاَمَةً فِيهِ إِنْ شَاءَ اللَّهُ ) ஒருவர் என்னிடத்தில் "ஜின்னு வளைந்து நெளிந்து செல்லாது" என்று கூறினார். அது சரியாக இருக்குமானால் அல்லாஹ் நாடினால் இதுதான் ஜின்னு என்பதற்கான அடையாளமாகும். நூல்:- அபூதாவூத்-4577

 

அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களும் இதே கருத்தையே கூறுகிறார்கள். நூல்:- திர்மிதீ -1403

 

வீடுகளில் இருக்கும் பாம்புகளை அடிப்பதற்கு நபிமொழிகளில் தடை வந்துள்ளது. அவை ஏதேனும்  ஜின்களாக இருந்துவிடலாம் என்பதே காரணம். எனவே, வீடுகளில் பாம்பைக் கண்டால் அது தானாக வெளியேறிச் செல்ல வழி காண வேண்டும். அதன் பின்னரும் வீட்டிலேயே அது தங்கினால் அதை அடித்துக் கொன்றுவிட வேண்டும். வீடுகளிலுள்ள பாம்புகளைக் கொல்லக்கூடாது எனும் தடை மதீனா நகர் எல்லைக்குள் இருக்கும் வீடுகளுக்கே பொருந்தும் என்றும் அறிஞர்கள் சிலர் கூறியுள்ளனர். நூல்:- அல்மின்ஹாஜ்

 

தண்டிப்பதற்கு

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ آتَاهُ اللَّهُ مَالاً، فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ، لَهُ زَبِيبَتَانِ، يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ، ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ ـ يَعْنِي شِدْقَيْهِ ـ ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ، أَنَا كَنْزُكَ ) அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தை அளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின், (மறுமையில்) அவரது செல்வம் (தலை வழுக்கையான) கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்குக் காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக்கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை - அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக்கொண்டு, “நான்தான் உனது செல்வம்; நான்தான் உனது கருவூலம்என்று சொல்லும்.

 

இவ்வாறு கூறிவிட்டு, அதை மெய்ப்படுத்தும் விதமாக மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் வேதத்திலிருந்து, தமக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருளில் கஞ்சத்தனம் செய்வோர், அது தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்(து சேமித்)தார்களோ அது மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் சுற்றப்படும் (3:180) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1403, திர்மிதீ-2928,  நசாயீ-2298, இப்னுமாஜா-1774,  இப்னு குஸைமா

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَا يَمْنَعُ عَبْدٌ زَكَاةَ مَالِهِ إِلَّا جُعِلَ لَهُ شُجَاعٌ أَقْرَعَ يَتْبَعُهُ ، يَفِرُّ مِنْهُ وَهُوَ يَتْبَعُهُ ، فَيَقُولُ : أَنَا كَنْزُكَ ) தமது செல்வத்திற்கான (கட்டாய தர்மத்தை) ஸகாத்தை (செலுத்தாமல்) தடுத்து வைத்துக் கொண்ட எந்த ஒரு அடியாருக்கும் தலை வழுக்கையான (கொடிய நஞ்சுள்ள) பெரிய பாம்பொன்று ஏற்படுத்தப்படாமல் இராது. அது அவரைத் துரத்தும். அவர் அதனிடமிருந்து விரண்டோடுவார். (மீண்டும்) அது அவரைத் துரத்தவே செய்யும். அப்போது அது, "நான்தான் உனது கருவூலம்" என்று கூறும். பிறகு அவரைத் தொடர்ந்து (கடித்து வேதனை செய்தவாறே) சென்று கொண்டிருக்கும். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:-  முஸ்னது அஹ்மத்-3396, முக்தஸர் அத்தர்ஙீபு வத்தர்ஹீபு -214

 

ஸகாத் எனும் கட்டாய தர்மம் என்பது ஏழைக்குச் செலுத்த வேண்டிய தொகையாகும். அதை நிறைவேற்றாதபோது ஏழையின் உரிமை பறிக்கப்படுகிறது. எனவே அந்தச் செல்வம் மறுமையில் பாம்பாக மாறி, அதுவும் விஷம் அதிகமுள்ள காரணத்தால் வழுக்கை தலையாகிவிட்ட, அல்லது தலை வெள்ளையாகிவிட்ட பாம்பாக மாறி அவரது கழுத்தைச் சுற்றிக்கொண்டு தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى قَوْمٍبُطُونُهُمْ كَالْبُيُوتِ فِيهَا الْحَيَّاتُ تُرَى مِنْ خَارِجِ بُطُونِهِمْ ) ஓர் இரவில் நான் (மிஃராஜ் எனும்) இரவு பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மக்களில் சிலரைக் கடந்து சென்றேன். அவர்களின் வயிறுகள் வீடுகளைப்போன்று (பெரிதாக) இருந்தன அவற்றினுள் பாம்புகள் இருந்தன. அவர்களின் வயிறுகளுக்கு வெளியிலிருந்தே அவை தெரிந்தன. ( مَنْ هَؤُلاَءِ يَا جِبْرَائِيلُ ) நான், "ஜிப்ரீல்! இவர்கள் யார்?" என்று கேட்டேன். அவர், ( هَؤُلاَءِ أَكَلَةُ الرِّبَا ) "இவர்கள் தான் வட்டி வாங்கி உண்டவர்கள்" என்று கூறினார். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா2264, முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அல்பகரா வசனம்-275 

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُسَلَّطُ عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا ، تَلْدَغُهُ حَتَّى تَقُومَ السَّاعَةُ ، فَلَوْ أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَ فِي الْأَرْضِ مَا أَنْبَتَتْ خَضْرًا ) ஒரு இறைமறுப்பாளனுடைய மண்ணறையில் அவனுக்கு எதிராக தொண்ணூற்று ஒன்பது பாம்புகள் சாட்டப்படும். அவை அவனை மறுமைநாள்வரை தீண்டிக்கொண்டே இருக்கும். அவைகளில் உள்ள ஒரு பாம்பு இந்த பூமியில் மூச்சுவிட்டால் எந்தப் பசுமை செடியும் விளையாது. அறிவிப்பாளர்:- அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- தாரிமீ, மிஷ்காத்

 

அல்லாஹ் மண்ணறையிலும், மறுமைநாளையிலும் தீயோரைத் தண்டிப்பதற்கு பாம்பையே சாட்டுவான் என்பது தெளிவாகிறது.

 

பயன்கள்

 

பாம்புகள் மனிதர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க பல வகையில் உதவி புரிகின்றன. அனைத்து பாம்பு இனங்களும் அசைவ பிரியர்கள் தான். புழு, பூச்சிகள், தவளை, பல்லி, ஓணான், எலி, முயல் போன்றவை பல்கி பெருகிவிடாமல் தின்று தீர்த்துவிடுகின்றன. சில வகைச் செடிகொடிகள் வெளியிடும் விஷவாயுகளையும் சுவாசித்துக்கொள்கின்றன.

 

பாம்புகள் விவசாயிகளின் நண்பன். ஒரு சாரைப்பாம்பு ஆண்டுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளை உணவாக உட்கொள்ளும். விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தக்கூடிய எலிகளை கட்டுப்படுத்தி விவசாய பயிர்களை பாதுகாக்கின்றன.

 

சாரைப்பாம்பு, எலிகளை உணவாக கொள்கிறது. ஒரு எலி வருடத்திற்கு 10 கிலோ தானியங்களை தின்னும். ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு 1000 எலிகள் வரை வேட்டையாடும். ஒரு சாரைப்பாம்பு வருடத்திற்கு 10 டன் தானியங்களை நமக்கு காப்பாற்றி தருகிறது. பாம்புகளால் மட்டுமே எலிகளின் வளைக்குள் புகுந்து வேட்டையாட முடியும். 'உயிரியல் பொறி'யாக விவசாயிகளுக்கு நன்மைகளை செய்கின்றன.

 

மண்ணுளிப் பாம்பை "உழவன் பாம்பு" என அழைக்கலாம். இவை மண்ணுக்குள் புகுந்து செல்லும் துளைகளில் காற்று செல்கிறது. இதனால் மண் இலகுவாக மாறி, தாவரங்களின் வேர் எளிதாகச் செல்ல உதவும். பச்சைப்பாம்பு பூச்சிகளை உண்டு கட்டுப்படுத்துகின்றன. பாம்புகள் பிற உயிரினங்களுக்கு உணவாக உள்ளன. பிணம் திண்ணி கழுகுக்கு, பாம்பு முதன்மை உணவு. நீரோடைகளில் காணப்படும் தண்ணீர் பாம்பு, நாரை போன்ற பறவைகளுக்கு உணவாகிறது. இயற்கை சூழல் அமைப்பில் பாம்புகளின் பங்கு முக்கியமானது.

 

வீடுகளில் எலிகள் இருக்கும் பட்சத்தில் வீடுகளுக்குள் நல்ல பாம்பு வரும். அதுவே அதன் பிரதான உணவாகும்.

 

பாம்பு எதையும் மென்று தின்னாது. அப்படியே விழுங்கிவிடும். தனக்குரிய உணவு கிடைக்காவிட்டால் பசியை பொறுத்துக்கொண்டு பல நாள்களானாலும் பட்டினியாகவே இருக்கும். எத்தனை நாள் பசித்திருந்தாலும் (கருவாடு, உப்புக் கண்டம் போன்ற) செத்துப்போனவற்றை உண்ணாது.

 

மனிதர்கள் பாம்புகளை (அது எந்த இனமானாலும்) உண்ணுவது  தடுக்கப்பட்டுள்ளது.

 

அதன் விஷம்

 

ராஜ நாகங்கள், (KING COBRA) ஆசியாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொடிய விஷமுள்ள ராஜநாகங்கள் வசிக்கின்றன. பாம்பு இனங்களில் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொறிக்கும் திறன்கொண்ட இந்த பாம்புகள் சுமார் 15 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இவை தாக்கினால் கட்டாயம் மரணம் ஏற்படும். இதன் நஞ்சு, ஒரு யானையை அரைமணி நேரத்தில் கொல்லும் திறன் உடையது. ராஜநாகங்கள் பொதுவாக மற்ற பாம்புகளை இரையாக உட்கொள்கின்றன. இவ்வளவு வீரியமிக்க இவற்றின் விஷம் மிகச்சிறிய 'கீரிப்பிள்ளை'யை (MONGOOSE) கொல்லச் சக்தியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் ஸீரம் பாம்புக் கடிக்கு மருந்தாகும். பாம்பின் விஷத்திலிருந்து தயாரிக்கப்பட்ட "ரிஸர்பின்" போன்ற மருந்துகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. நல்ல பாம்பின் விஷம் "நியோரோபாக்ஸின்" வகைப்பட்டது. கட்டுவிரியனின் விஷத்தில் "ஹுமோடாக்ஸின்" உள்ளது. மாரடைப்பு, (ஸ்ட்ரோக் எனும்) பக்கவாதம் போன்றவற்றுக்கு பாம்பு விஷம் சிறந்த மருந்து என கண்டறிந்துள்ளனர். (அளவில் குறைந்தால் நஞ்சும் அமுதமாகும். அளவுக்கு அதிகமானால் அமுதமும் நஞ்சாகும்.) நன்றி:- சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?

 

பொதுவாக மழைக் காலங்களில் பாதுகாப்பான இடம் தேடி பாம்புகள் வெளியே வரும். பாம்பை பார்த்ததும் அதனிடம் வம்பு பண்ணாமல் அமைதியாக நின்றால் போதும். அதுவும் அமைதியாக சென்றுவிடும். பாம்புக்கு காது கிடையாது. ஆனால் நம் நடந்து செல்லும் அதிர்வுகளை துல்லியமாக உணரும். எந்த பாம்பும் உடனே கடிக்காது. ஒன்றிரண்டு முறை படம் எடுத்து எச்சரிக்கும்.

 

பூபாம்பு மிகச் சிறியது. ஷூ கயிறு அளவுக்குதான் இருக்கும். விஷத்தன்மை அதிகம் உண்டு. சென்னையில் அரிதாகத் தான் காணகிடைக்கும்.

 

வயது முதிர்ந்த பாம்புகள் தன்னிடம் சுரக்கும் விஷத்தை வீணாக்க  விரும்பாது. இரையை எடுப்பதற்காகத்தான் பயன்படுத்தும். குட்டி பாம்புகள் தான் தெரியாமல் அதிக அளவு கடிக்கும்போது விஷத்தை பயன்படுத்தி விடும். அதனால்தான் குட்டி பாம்புகள் கடித்தால் அதிக விஷம் உடலில் ஏறுவதுண்டு.

 

தரையில் மட்டுமல்ல. தண்ணீரிலும் பாம்புகள் வாழ்கின்றன. குறிப்பாக, கடலிலும் 'கடல் பாம்பு' உண்டு. மற்ற பாம்புகளைவிட இந்த பாம்புதான் அதிக விஷத்தன்மை கொண்டது. இதற்கு தடுப்பு மருந்துகூட கிடையாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 

மனித குடியிருப்பு பகுதியில் அதிகமாக காணப்படக்கூடிய பச்சைபாம்பு, பூனைபாம்பு போன்ற பாம்புகள் குறைந்த நஞ்சுடையவை. சாரைப்பாம்பு, மலைப்பாம்பு, மண்ணுளிபாம்பு, தண்ணீர்பாம்பு, கொம்பேரி மூக்கன் போன்றவை நஞ்சற்ற பாம்புகளாகும்.

 

கடித்துவிட்டால்

 

பாம்பு கடித்தால் பதட்டப்படாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். கடித்த இடத்தில் கயிற்றை கொண்டு கட்டக்கூடாது. அவற்றால் கட்டுவதால் அந்த உறுப்பை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பிளேடு, கத்தியால் வெட்டி இரத்தத்தை எடுப்பதும் வாயை வைத்து இரத்தத்தை உறிஞ்சுவதும் தவறான வழிமுறை. கடித்த இடத்தை ஆட்டாமல் அசையாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பதட்டப்பட்டால் இரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் வேகமாக பரவும்.

 

விஷப்பாம்பு கடித்தால் டாக்டரின் அறிவுரைக்கு ஏற்ப "ஆன்டி ஸ்நேக் வெனம்" (விஷ முறிவு மருந்து) கொடுக்கப்படும். நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் பாம்புகளில் எது கடித்தாலும் மருத்துவமனைகளில் ஒரே விஷமுறிவு மருந்து தான் கொடுக்கப்படுகிறது. இதை "பாலிவெனம்" என்று அழைக்கின்றனர். எனவே, கடித்த பாம்பைத் தேடி நேரத்தை வீணடிக்க கூடாது. எந்த மருத்துவமனையில் ஆன்டிவெனம் மருந்து இருக்கிறது என தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் இந்த மருந்து கட்டாயம் இருக்கும்.

 

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாம்புகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதி இல்லாமல் பாம்புகளை தனி மனிதர்கள் பிடிக்கக் கூடாது. வேறு இடத்துக்கு கடத்துவது குற்றமாகும்.

 

பாம்புகள் மனிதர்களுக்கும், விவசாயிகளுக்கும், மருத்துவத் துறையிலும் முக்கிய பங்களித்து வருகின்றன. எனவே, பாம்புகளை பாதுகாக்க வேண்டும்.

 

கனவில் கண்டால்

 

கனவுகளுக்கு விளக்கம் கூறுவதில் பேரறிஞராகத் திகழ்ந்த முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பாம்பை கனவில் காண்பது எதிரிகள் உண்டாயிருப்பதற்கு அடையாளமாகும். சிலவேளை அந்த எதிரி நம் குடும்பத்திலிருந்து அல்லது நமது மனைவிடமிருந்து அல்லது நம் பிள்ளைகளிடமிருந்து உண்டாகலாம். அல்லது மிகவும் பொறாமைப்படக்கூடிய பக்கத்து வீட்டுக்காரர்களும் எதிரிகளாக அமையலாம்.

 

ஒருவன் பாம்பை அடக்குவதாகக் கண்டால், ஒரு பெரிய பதவியை அடைவதாக அமையலாம். ஒருவன் பாம்பு தன் ஆண்குறியை கொத்துவதாகக் கண்டால், அவனது மனைவி வழி தவறிவிட்டதைக் காட்டுவதாக இருக்கும். நூல்:- தலீலுல் ஹைரானி ஃபீ தஃப்சீரில் அஹ்லாம் - முஹம்மத் பின் அலீ குத்ப்

 

1. பாம்பை கனவில் காண்பது மறைந்திருக்கும் எதிரியைக் குறிக்கும். பெரிய அளவிலான பாம்பைக் கண்டால் சக்தி வாய்ந்த எதிரியை குறிக்கும்.

2. கனவில் பாலைவனத்தில் பாம்புகள் இருப்பதாகக் கண்டால், வெறிச்சோடிய சாலையில் நெடுஞ்சாலை கொள்ளையர்களை சந்திப்பதற்கான அடையாளமாகும்.

3. பாம்பு நம்மை பிடிப்பதாகக் கண்டால், எதிரி நம்மை பிடித்துவிடுவான் என்று பொருள்.

4. பாம்பிடம் இருந்து நம்மை காப்பாற்றிக்கொண்டதாகக் கண்டால், எதிரியால் நம்மை பிடிக்க இயலாது.

5. நமது வீட்டிற்குள் பாம்பு இருப்பதாகக் கண்டால், நமது குடும்பத்தில் உள்ள ஒருவர் நமது நலன்களுக்கு (எதிரி) எதிராக செயல்படுகிறார் என்று பொருள்.

6. நமது வீட்டை விட்டு பாம்பு வெளியேறுவதாகக் கண்டால், நமது தூரத்து உறவினர் சிலர் நமக்கு எதிரிகளாக இருப்பார்.

7. நமது வீட்டுத் தோட்டத்தில் பாம்புகள் நிறைந்திருப்பதாகக் கண்டால், நமது வயல்களில் வழக்கமான விளைச்சலை மிஞ்சும் வகையில் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என்று பொருள்.

8. கனவில் பாம்பு நம்மை தீண்டவில்லை என்றால் எதிரியிடமிருந்து நம்மை தற்காத்துக் கொண்டோம் என்று பொருள்.

9. பெரிய பாம்பு விழுங்குவதாகக் கண்டால், அது காண்பவரின் மரணத்தைக் குறிக்கும்.

10. பாம்பை கொல்வதாகக் கண்டால், எதிரியை வெல்வது என்று பொருள்.

11. ஒரு தங்கப் பாம்பின் தோலை கண்டுபிடிப்பதாகக் கண்டால், மறைக்கப்பட்ட புதையலை கண்டுபிடிப்பதாகும்.

12. பாம்பை உண்பதாகக் கண்டால், எதிரியிடமிருந்து பொருளாதாரத்தை பெறுவதாகும்.

13. பாம்பை பயமுறுத்தாமல் வைத்திருப்பதாகக் கண்டால், பெரிய நிலம் மற்றும் சொத்துக்களின் அதிகாரத்தையும் உரிமையையும் குறிக்கும். பாம்பு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ அவ்வளவு நிலமும் சொத்தும் சொந்தமாக இருக்கும். இந்த வகை பாம்பு எதிரியை குறிக்காது.

14. பாம்பு நம்மிடம் அன்பாக பேசுவது மகிழ்ச்சியை குறிக்கும். மாறாக, கடுமையாகப் பேசினால் தோல்வியை குறிக்கும்.

15. நோய்வாய்பட்ட ஒருவர் பாம்புகளுடன் அமர்ந்திருப்பதாகக் கண்டால், அவர் தமது நோயிலிருந்து குணமடைந்து நீண்ட வயதுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வார்.

16. தலைக்கு மேல் பாம்பு நிலைநிறுத்தப்படுவதாகக் கண்டால், அரசு பதவிகளில் இருப்பவர்களிடமிருந்து மரியாதை கிடைக்கும்.

17. பல பாம்புகளால் மூடப்பட்ட வயலைக் கண்டால், அழிவு மழையைக் குறிக்கும்.

18. தாம் பாம்பாக மாறுவதைக் கண்டால், தமது மார்க்கத்திற்கு எதிராக இழிவாக இருப்பதைக் குறிக்கும்.

19. பாதி பாம்பாகவும் பாதி மனிதனாகவும் இருப்பதைக் கண்டால், எதிரியின் சக்தியில் பாதியை நடுநிலையாக்க முடியும் என்பதைக் குறிக்கும்.

சுருங்கக்கூறின்: கனவில், பாம்பு நம்மை தீண்ட வருவதைப் போலவும் நாம் பயப்படுவது போலவும் கண்டால், நமக்கு தொல்லை தரும் எதிரிகள் இருக்கின்றார்கள். மேலும், அதைப் பிடிப்பது போலவும் அடிப்பதைப் போலவும் கண்டால் அஞ்சாமல் மிகப்பெரிய சைசில் பார்த்தால் வசதி வாய்ப்புகள் உண்டாகும் என்ற விளக்கம் கூறப்பட்டுள்ளது.

 

பாம்பின் நிறத்தை பொறுத்து கனவின் அர்த்தமும் வேறுபடுகிறது.

பச்சை பாம்பு -  நேர்மையான எதிரி.

கருப்பு பாம்பு - ராணுவம் / சிப்பாய் / போலீஸ் பிரிவு.

மஞ்சள் பாம்பு - நோய்வாய்ப்பட்ட எதிரி.

சிவப்பு பாம்பு - மதம் சாராத எதிரி.

வெள்ளைப் பாம்பு - பலவீனமான எதிரி.

 

இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "தமது வீட்டில் ஒரு பாம்பு கடித்துவிட்டது. அதனால் மிகுந்த வலி ஏற்பட்டது" இவ்வாறு கனவு கண்டதாக கூறினார். அன்னார், "உமக்கு ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இருக்கின்றார்களா?" என்று வினவினார்கள். அதற்கு அவர், "ஆம்" என்றார்.

 

அன்னார், "உமது வீட்டிலுள்ள யாரோ ஒருவர் அல்லது உமது உறவினர் உமக்கு தீங்கிழைத்துவிட்டார்கள்" என்றார்கள். அதன் பிறகு அவருக்கு, தமது மாற்றாந்தாய் தமது சொத்தைத் திருடியதாகவும், மூன்று நாள்களாக காணாமல் போனதாகவும் தெரிய வந்தது.

 

இமாம் இப்னு சீரீன் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "தாம் கனவில் பாம்புகள் தேள்கள் நிரப்பப்பட்ட பை ஒன்றை எடுத்துச் செல்வதாக கண்டேன்" என்றார். அன்னார், பொல்லாதவர்கள் உம்மை வெறுக்கக்கூடிய செயல்பாடு ஏதேனும் உம்மிடம் உள்ளதா?"  என்று கேட்டார்கள். அவர், "ஆம்! அரேபியர்களிடமிருந்து வரிவசூலிப்பதற்காக நான் மன்னரால் நியமிக்கப்பட்டுள்ளேன். இது மக்கள் என்னை வெறுக்கச் செய்தது” என்றார்.

 

கலஃப் அஸ்பஹானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பாம்பு வாயிலிருந்து வெளியேறி நிலத்திற்குள் செல்வதாகக் கண்டால், காண்பவர் விரைவில் இறந்துவிடுவார்.

 

கலஃப் அஸ்பஹானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். படுக்கையில் ஒரு பாம்பை காயப்படுத்துவதாகக் கண்டால், காண்பவரின் மனைவியின் மரணத்தைக் குறிக்கும்.

 

ஜாபர் மங்ரபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மூக்கு, காது, மார்பகம், பிறப்புறுப்பு ஆகியவற்றிலிருந்து பாம்பு வெளியேறுவதாகக் கண்டால், அவருடைய பிள்ளைகள் அவருக்கு எதிரிகளாக இருப்பார்கள்.

 

(கனவின் விளக்கங்கள் அனைத்தும் இணையத்தில் வாசித்தவையே!

 

பாம்புகள் போன்ற விஷ ஜந்துகள் மற்றும் பிற விலங்குகளின் தீங்கிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

 

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...