Search This Blog

Friday, 1 November 2024

கெட்ட சகவாசம்

 

கெட்ட சகவாசம்

 

يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا لَقَدْ أَضَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنْسَانِ خَذُولًا

எனக்கு வந்த கேடே! (பாவம் செய்யும்படித் தூண்டிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக்கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா?  நல்லுபதேசம் என்னிடம் வந்த பிறகும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பிவிட்டானே!   திருக்குர்ஆன்:- 25:28,29

 

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முக்கிய உறவாக இருக்கும் நட்பு, வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்றும் கூறலாம்.

 

பலருக்கு பல சூழ்நிலைகளில் ஆதரவாக, உதவியாக நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியான நேரங்களில் கொண்டாடவும், துக்கமான நேரங்களில் தேற்றவும், கடினமான நேரங்களில் உதவி புரியவும் என ஒட்டுமொத்தமாக குடும்பத்தினரைத் தாண்டி, உறவினர்களைத் தாண்டி, வாழ்வில் ஒரு சிறந்த துணையாக ஒவ்வொருவரின் வாழ்விலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.

 

மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுவதே நட்பு என்று கூறுவது உண்மைதான். எனினும் நட்புலகில் சில  (Evil friends) தீய நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நல்ல நண்பர்களால் எந்தளவுக்கு நன்மையோ, அதைவிட பன்மடங்குதீமை தீய நண்பர்களால் ஏற்படுத்தமுடிகிறது. இன்றைய காலகட்டத்தில் புகை, மது போன்ற தீய பழக்கங்களில் இளைஞர்கள் ஈடுபட நண்பர்களே காரணமாக இருக்கின்றனர்.

 

சிந்திக்கட்டும்

 

(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் வரம்பு மீறுபவர்கள் பக்கம் (பிரியத்தின் அடிப்படையில் சிறிதும்) சாய்ந்து விடாதீர்கள். (அவ்வாறாயின்) நரக நெருப்பு உங்களையும் பிடித்துக்கொள்ளும். அதிலிருந்து உங்களை பாதுகாப்பவர் அல்லாஹ்வையன்றி (வேறு) யாருமில்லை; பின்னர், எவருடைய உதவியும் உங்களுக்குக் கிடைக்காது. திருக்குர்ஆன்:- 11:113

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ ) ஒருவன் அவனது நண்பனின் மார்க்கத்தில் உள்ளான். எனவே, நண்பனாக எவனைத் தேர்ந்தெடுப்பது என்பதை உங்களில் ஒருவர் சிந்திக்கட்டும். நூல்:- அபூதாவூத்-4833, திர்மிதீ-2378

 

நபிகள் பெருமானார்  (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ ) மனிதன் யார்மீது அன்பு கொண்டுள்ளானோ அவருடன்தான் இருப்பான். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ- 6168

 

"ஒருவர் எந்த சமூகத்தை நேசிக்கிறாரோ அந்த சமூகத்துடன் தான் மறுமையில் எழுப்பப்படுவார்." என்கிறது இந்த நபிமொழி.

 

உங்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, வெறும் நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. நீ இறந்த பிறகு உனக்கு ஜனாஸா தொழுகை தொழுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறாய்! மறுமையில் உன்னுடன் எழுப்பப்படுபவர்களைத் தேர்ந்தெடுக்கிறாய்! என்கிறது இந்த நபிமொழி.

 

தவறான தேர்வு

 

ஒருநாள் உக்பா பின் அபீமுயீத் என்பவன் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களை தனது வீட்டிற்கு விருந்திற்காக அழைத்தான். அங்கு சென்ற நபியவர்கள், ( ما أنا بِالَّذِي آكُلُ مِن طَعامِكَ حَتّى تَشْهَدَ أنْ لا إلَهَ إلّا اللَّهُ، وأنِّي رَسُولُ اللَّهِ ) "அல்லாஹ் ஒருவன் என்றும், நான் அவனுடைய தூதர் என்றும் நீர் உறுதிமொழி கூறாத வரை உணவு உண்ண மாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். அவனும் அவ்வாறே கூறிவிட்டான். பிறகு நபியவர்கள் உண்டார்கள்.

 

இச்செய்தி, அவனுடைய உற்ற நண்பனான உபை பின் கஅபுக்கு தெரிந்தது. அவன் உக்பாவிடம் வந்து, ( أصَبَوْتَ يا عُقْبَةُ؟ ) "உக்பா! நீ மதம் மாறிவிட்டாயா?" என்று கேட்டான். அதற்கு உக்பா, "நான் மதம் மாறவில்லை; அவ்வாறு மொழியாவிட்டால் என்னிடம் வந்து உணவருந்த மாட்டேன் என்று முஹம்மது கூறினார். ஆகவே, அவர்  என்னிடத்தில் வந்து உணவு உண்ணாமல் செல்வது எனக்கு வெட்கமாக இருந்தது. அதனால் அவ்வாறு கூறினேன்" என்றான்.

 

அப்போது உபை பின் கஅப், ( ما أنا بِالَّذِي أرْضى عَنْكَ حَتّى تَأْتِيَهُ فَتَبْزُقَ في وجْهِهِ ) “இந்த பதிலில் நான் திருப்தியடைய மாட்டேன். நீ உடனே முஹம்மதிடம் சென்று அவருடைய பிடரியை மிதித்து, அவருடைய முகத்தில் உமிழ்ந்துவிட்டு வந்தால்தான் நான் திருப்தியடைவேன்" என்று கூறினான். உக்பா அவ்வாறே செய்தான். (உக்பா உமிழ்ந்த எச்சில் நபியவர்கள் முகத்தில் விழாதவாறு அல்லாஹுத்தஆலா பாதுகாத்தான்.)

 

இந்த இரு தீயவர்களின் நட்பு குறித்தே தலைப்பில் காணும் திருவசனம் அருளப்பெற்றது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்   நூல்:- தஃப்சீர் துர்ருல் மன்ஸூர்

 

உக்பா பின் அபீமுயீத், அருமை நாயகம் (ஸல்) அவர்களின் சகவாசத்தைவிட உபை பின் கஅப் என்ற தீயவனின் சகவாசத்தையே தேர்ந்தெடுத்தான். அதாவது, நேர்வழியில் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தும்கூட தீய நட்பால் வழிகெட்டுப் போனான். இவன் பத்ருப்போரில் கொல்லப்பட்டு, கேவலத்தை அடைந்தான். சில நேரங்களில் தீய நட்பு, தீய மரணத்தைக்கூட தந்து விடக்கூடும். எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


சீரழிந்து போகும் 


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களிடம் எகிப்து தேசத்தின் கவர்னர் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், "ஜனாதிபதி அவர்களே! எங்கள் பகுதிக்கு குர்ஆனை நன்கு கற்றறிந்த ஒருவரை அனுப்பி வையுங்கள்" என்று கேட்டுக்கொண்டார். அதற்கு ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் என்பவரை அனுப்பிவிட்டு, இவ்வாறு கடிதம் எழுதினார்கள். இவர் குர்ஆனை கற்றறிந்த அறிஞர் ஆவார். இவர் மதீனாவுக்கு தேவையானவராக இருந்தபோதும், நீங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இவரை நான் எகிப்து தேசத்திற்கு அனுப்பி வைக்கிறேன். இவர் குர்ஆனை போதிக்கும் ஆசிரியர் என்பதால் இவருக்குரிய தங்கிமிடம் வழங்கி, இவரிடம் கண்ணியம் பேண வேண்டும்.


ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களால் குர்ஆன் உடையவர் என்று கண்ணியப்படுத்தப்பட்ட அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் என்பவர் தான் இஸ்லாத்தின் முதல் குழப்பவாதிகளான கவாரிஜிய்யாக்களுடன் சகவாசம் கொண்டு வழிக்கெட்டுப்போனார்.


வழி கெட்டுப்போன இந்த அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் என்பவர் தான், ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களை தமது விஷம் தோய்ந்த வாளால் வெட்டிக் கொன்றார்.


மரண தண்டனை கொடுப்பதற்காக இவரை இழுத்துச் சென்றபோது இவரது இரண்டு முட்டுக்கால்களும் நெற்றியும் கருத்து காய்ந்து போய் இருந்தது. அது அவர் அதிகமாக குர்ஆன் ஓதுவதிலும் தொழுவதிலும் ஏற்பட்ட அடையாளம் ஆகும். அழகாக முறையில் குர்ஆனை தானும் கற்று, பிறருக்கும் கற்றுக்கொடுத்து வந்த மனிதர், கெட்ட சகவாசத்தால் தம்முடைய அழகிய வாழ்க்கையைத் தொலைத்து, கெட்டு சீரழிந்து போனார்.

 

அறிஞர்களின் அமுத மொழிகள்

 

இறைநம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கன்றி எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். (நீங்கள்) அல்லாஹ்விடம் தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது.  திருக்குர்ஆன் : 3:28

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَثَلُ الْجَلِيسِ السَّوْءِ كَنَافِخِ الْكِيرِ، وَنَافِخُ الْكِيرِ إِمَّا أَنْ يُحْرِقَ ثِيَابَكَ، وَإِمَّا أَنْ تَجِدَ رِيحًا خَبِيثَةً )  கெட்ட நண்பனின் நிலையானது, (உலைக்களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையுடன் ஒத்திருக்கிறது. உலை ஊதுபவன், ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்துவிடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய். அறிவிப்பாளர்:- அபூ மூசா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5534, முஸ்லிம்-5124

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْوَحْدَةُ خَيْرٌ مِنْ جَلِيسِ السُّوءِ ) தீயவர்களுடன் இருப்பதைவிட தனிமை சிறந்தது. அறிவிப்பாளர்:- அபூதர் (ரலி) அவர்கள் நூல்:- ஹாகிம்ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ

 

அலீ (ரலி) அவர்களிடம் “கெட்ட நண்பன் யார்?” என்று கேட்கப்பட்டது . அன்னார் ( اَلْمُزَيِّنُ لَكَ مَعْصِيَةَ اَللَّه )  "இறைவனுக்கு மாறுசெய்வதை உனக்கு அழகுபடுத்துபவன்" என்று கூறினார்கள். நூல்:- மன் லா யஹ்ழுருகுல் பகீஹ்: 4/381

 

ஒருமுறை அலீ (ரலி) அவர்கள் தமது மகனார் ஹசன் (ரலி) அவர்களுக்கு கூறிய அறிவுரை. ( إيَّاكِ وَمُصَاحَبَةَ الْأَحْمَقِ ؛ فَإِنَّهُ يُرِيدُ أَنْ يَنْفَعَك فَيَضُرَّك ، وَإِيَّاكَ وَمُصَادَقَةَ الْكَذَّابِ ؛ فَإِنَّهُ يُقَرِّبُ عَلَيْك الْبَعِيدَ وَيُبْعِدُ عَلَيْك الْقَرِيبَ ، وَإِيَّاكَ وَمُصَادَقَةَ الْبَخِيلِ ؛ فَإِنَّهُ يَقْعُدُ عَنْك أَحْوَجَ مَا تَكُونُ إلَيْهِ ، وَإِيَّاكَ وَمُصَادَقَةَ الْفَاجِرِ ؛ فَإِنَّهُ يَبِيعُك بِالتَّافِهِ )

1. முட்டாளுடன் நட்புக்கொள்ளாதே! ஏனென்றால், அவன் உனக்கு நன்மை செய்ய முயன்று அவன் உனக்குத் தீங்கு விளைவிப்பான்.

2. பொய்யனுடன் நட்புக்கொள்ளாதே! ஏனென்றால், அவன் உனக்கு தொலைவில் உள்ள விஷயங்களை மிக நெருக்கமாகவும், நெருக்கமாக உள்ளதை தொலைவில் இருப்பதாகவும் கற்பனை செய்து, பார்க்க வைப்பான்.

3. கஞ்சனுடன் உன் நட்புக்கொள்ளாதே, ஏனென்றால், அவன் உன்னுடைய கடினமான நேரத்தில் உன்னை விட்டு ஓடிவிடுவான்.

4. பாவியுடன் நட்புக்கொள்ளாதே!  பொல்லாதவன் அவன் உன்னையும் உனது நட்பையும் மலிவான விலையில் விற்று விடுவான். நூல்:- தாரீக் அல்குலஃபா இமாம் சுயூத்தீ


அலீ பின் ஹஸன் (ரஹ்) அவர்கள் தனது மகனிடம் கூறினார்கள்: ( لَا تَصْحَبُ فَاسِقًا فَإِنَّهُ يَبِيعُكَ بِأَكْلَةٍ وَأَقَلَّ مِنْهَا ) ஒரு பாவியுடன் பழகாதே, ஏனென்றால், அவன் உன்னை ஒரு கவளம் உணவுக்காகவும் அதைவிட குறைவானதிற்கும் விற்றுவிடுவான்.

 

இறைநேசர் பிஷ்ருல் ஹாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். தீயவர்களிடம் தோழமை வைப்பதால், நல்லடியார்களைப்பற்றிகூட நமது உள்ளத்தில் தீய எண்ணத்தை உண்டாக்கும். நல்லவர்களிடம் தோழமை வைப்பதால், தீயவர்களைப்பற்றி கூட நமது உள்ளத்தில் நல்ல எண்ணத்தை உண்டாக்கும். நிச்சயமாக இறைவன் மனிதர்களிடம் நீ ஏன் எனது அடிமைகளைப்பற்றி நல்லதை நினைத்தாய்? என விசாரிக்கமாட்டான். நூல்:- தபகாத்துல் குப்ரா-1/73

 

ஜுனைத் அல்பக்தாதி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். எனது ஞானாசிரியர் ஸிர்ரீயுல் ஸிக்தீ (ரஹ்) அவர்கள் தமது இறுதிநேரத்தில் இருந்தபோது நான் அவர்களை நலம் விசாரிக்க சென்று, அன்னாரின் தலைக்கு அருகில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்தேன். அப்போது எனது கண்ணீர்த்துளிகள் அன்னாரின் கன்னத்தில் விழுந்தன. அதனால் அன்னார் கண்விழித்து என்னைப் பார்த்தார்கள்.

 

அப்போது நான், “எனக்கு ஏதேனும் இறுதி உபதேசம் செய்யுங்கள்'' என்றேன். அன்னார், ( لاَ تَصْحَبِ الأَشْرَارَ، وَلاَ تَشْتَغِلَنَّ عَنِ اللهِ بِمَجَالِسَةِ الأَخيَارِ ) "தீயவர்களுடன் நட்புறவு கொள்ளாதீர்! நல்லவர்கள் சபைகளில் அமர்ந்துகொண்டு அல்லாஹ்வை விட்டும் (உமது சிந்தனையை) திசைதிருப்பாதீர்!" என்று உபதேசித்தார்கள்.


அஷ்ஷைக் முஸ்தஃபா அஸ்ஸிபாஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‌ வீண்விரயம் செய்பவனுடன் நட்புறவு கொள்ளாதே! அவன் உன் செல்வத்தை அழித்துவிடுவான். கஞ்சனுடன் நட்புறவு கொள்ளாதே! அவன் உன் பெருந்தன்மையை அழித்துவிடுவான்.

 

மூன்று வகையினர்

 

கலீஃபா மஃமூன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( اَلْأَصْحَابُ ثَلَاثَةٌ، الْأَوَّلُ مِثْلُ الْغَذَاءِ لَا يُسْتَغْنَى عَنْهُ، وَالثَّانِي مِثْلُ الدَّوَاءِ يَحْتَاجُ إِلَيْهِ فِي حَالِ الْمَرَضِ، وَالثَّالِثُ مِثْلُ الدَّاءِ مَكْرُوهٌ عَلَى كُلِّ حَالٍ ) நண்பர்கள் மூன்று வகையினர் ஆகும்.

1) உணவைப் போன்றவர்கள். உணவின்றி வாழ இயலாததைப் போன்று அவர்கள் இல்லாமல் வாழ இயலாது.

2) மருந்தை போன்றவர்கள். அதாவது, சில அத்தியாவசிய தருணங்களில் மட்டும் தேவைப்படுபவர்கள்.

3) நோயைப் போன்றவர்கள். ஒருபொழுதும் நமக்குத் தேவையற்றவர்கள். (அவர்களின் நட்பு பாதிப்பை உண்டாக்கும்.) நூல்:- உயூனுல் அஹ்பார்-3/5

 

முதல் தரப்பினர் இம்மையிலும் மறுமையிலும் நமக்குத் தேவை உடையவர்கள் ஆகும். மேலும் நம்முடைய அனைத்து  இன்ப துன்ப தருணங்களிலும் முழுமையாக நமக்கு ஒத்துழைப்பு அளிக்க கூடியவர்கள். இவர்கள்தான் உணவைப் போன்றவர்கள்.

 

இரண்டாம் தரப்பினர் நோயைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவரைப் போன்று நம்முடைய குறைகளை கண்டறிந்து நமக்கு அதற்கான அறிவுரைகளை வழங்கி நம்மை நேரான வழியில் செலுத்தக்கூடிய நல்லுள்ளம் படைத்த நண்பர்கள். இவர்கள்தான் மருந்தை போன்றவர்கள்.

 

நோய்களிலிருந்து நாம் விலகி இருப்பதை போன்று தீய பழக்கவழக்கங்களை கொண்ட நண்பர்களிடமிருந்து நாம் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களிலுள்ள தீய பழக்கங்கள் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.

 

(மேலும், ஒரு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒரு சிறந்த மருத்துவ நிபுணரை போன்று அறிவாளிகளான நல்ல நண்பர்கள் தவறான வழிகளில் செல்லக்கூடிய தமது உற்ற தோழர்களை நல்ல முறையில் தேவையான அறிவுரைகளை வழங்கி அவர்களை நேரான பாதையில் செலுத்த வேண்டும்.)

 

மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள். யாருக்கு முன்னால் பாவம் செய்வதை வெட்கக்கேடாகக் கருதுவாயோ அவரின் நட்பைத் தேர்ந்தெடு! யாருக்கு முன்னால் வழிபாடு செய்வதை வெட்கக்கேடாகக் கருதுவாயோ அவரின் நட்பைத் தவிர்த்து விடு!

 

சிறிது காலம்

 

ஜனாதிபதி உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு மனிதரை ஓரிடத்திற்கு அதிகாரியாக நியமித்தார்கள். அந்த மனிதர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்ற கொடுங்கோலனிடம் அதிகாரியாக பணியாற்றியவர் என்று அவரைப் பற்றி கூறினர்.

 

உடனே ஜனாதிபதி அவர்கள் அந்த மனிதரை பதவிநீக்கம் செய்து விட்டார்கள். உடனே அந்த மனிதர், "நான் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடம் கொஞ்ச காலம் தான் வேலை பார்த்தேன். அதற்காக நீங்கள் என்னை பதவி நீக்கம் செய்வது முறை தானா?" என்று கேட்டார். ஜனாதிபதி அவர்கள், "நீ கெட்டவனாக ஆவதற்கு அவனுடன் ஒருநாள் அல்லது அதைவிட குறைவாக இருந்தாலே போதுமானது" என்று பதிலளித்தார்கள்.

 

சகவாசத்தின் பலன் அவசியம் ஏற்படவே செய்யும். நல்லோருடன் சேர்ந்திருப்பவருக்கு அவர் அறியாமலே இறையச்சம் ஏற்படக்கூடும். பாவம் புரிபவருடன் சேர்ந்திருப்பவருக்கு பாவத்தின் தன்மை ஏற்படவே செய்யும். இதனால் தான் தீயவர்களுடன் சேரக்கூடாது என்ற தடுக்கப்படுகிறது.

 

ஒதுக்கிவிடு

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( سَيَكُونُ فِي آخِرِ الزَّمَانِ قَوْمٌ يَكُونُ حَدِيثُهُمْ فِي مَسَاجِدِهِمْ لَيْسَ لِلَّهِ فِيهِمْ حَاجَةٌ ) மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது அவர்களின் பள்ளிவாசல்களில் அவர்களின் பேச்சு அவர்களின் உலக விஷயங்கள் தொடர்பாகவே அமைந்திருக்கும். அந்நிலையில் அவர்களுடன் நீங்கள் உட்கார வேண்டாம். ஏனெனில், அவர்கள் (பள்ளிவாசலுக்கு வந்து வழிபாடு செய்யும்) விஷயத்தில் அல்லாஹ்வுக்கு எவ்வித தேவையும் இல்லை. நூல் :- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, மிஷ்காத்-743

 

அப்படிப்பட்டவர்களின் வழிபாடுகளுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த விதமான மரியாதையும் இருப்பதில்லை என்று இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது. நாமும் அவருடன் சேர்ந்த அமரும்போது நமக்கும் அந்த நிலை ஏற்பட்டு விடும். எனவே இதுபோன்று பள்ளிவாசலில் உலக காரியங்களை பேசும் பழக்கமுடையவர்களின் சபையில் நாம் அமர்ந்துவிடலாகாது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தீயவர்களின் நட்பைவிட தனிமை மேலானது. தனிமையைவிட நல்லவர்களின் நட்பு மேலானது. நூல்:-  பைஹகீ

 

தீய நண்பன் கெட்டவனைவிட மோசமானவன். அவன் மறைமுக எதிரி. தீயநட்பு வாழ வைக்காது; வீழ வைக்கும். இதனால் தீய நண்பர்களை விடத் தனிமையே சுகமானது.

 

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை

பெருகலிற் குன்றல் இனிது. திருக்குறள்-811

 

விளக்கம்: நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதைவிடக் குறைந்து போவதே இனியது.

 

தொற்றிவிடும்

 

தீய நட்பை நாம் தேர்வு செய்தால், தீயவர்களின் கெட்ட பழக்க வழக்கம் நம் மீதும் தொற்றிவிடும்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يُوشِكُ أَنْ يَكُونَ خَيْرَ مَالِ الْمُسْلِمِ غَنَمٌ، يَتْبَعُ بِهَا شَعَفَ الْجِبَالِ وَمَوَاقِعَ الْقَطْرِ، يَفِرُّ بِدِينِهِ مِنَ الْفِتَنِ ) ஒரு முஸ்லிமின் செல்வங்களிலேயே ஆடு ஒன்றுதான் சிறந்த செல்வமாக மாறக்(கூடிய காலம் வரக்)கூடும். குழப்பங்களிலிருந்து தமது மார்க்க(விசுவாசத்)த்தைக் காப்பாற்றிக்கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர் மலை உச்சிக்கும் மழைத்துளிகள் விழும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் சென்று வாழ்வார். அறிவிப்பாளர்:- அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-7088

 

நாம் வசிக்கும் இடத்தில் நம்மைச்சுற்றி உள்ளவர்கள் தீய பழக்க வழக்கங்களில் மூழ்கியிருக்கும்போது, அந்த தீய பழக்கம் நம்மிடமும் தொற்றிக்கொள்ளக்கூடாது என்று நினைத்து, அந்த இடத்தை விட்டு அகன்று மலைப்பகுதியில் தனிமையான வாழ்வது சிறந்தது என்று இந்த நபிமொழி இயம்புகிறது.

 

மது அருந்துதல், புகைப்பிடித்தல், பொய் கூறுதல், திருடுதல், மோசடி செய்தல், கொள்ளையடித்தல், கொலை செய்தல், பாலியல் ரீதியிலான குற்றங்களை புரிதல், அபகரித்தல் போன்ற அனைத்து அயோக்கியத்தனமும் அவனுடன் பழகுபவனிடமும் குடி கொண்டுவிடும்; தொற்றிக்கொள்ளும் ஆபத்தும் உள்ளது.

 

தீய நண்பன் தீமையின் தூதுவன் ஆவான். நன்மைக்கும், நல்லொழுக்கத்திற்கும் எதிரி ஆவான். தீய நட்பு என்பது கொடிய விஷத்தைப் போன்றது. அது அனைத்தையும் பாழாக்கிவிடும். தீய நட்பு என்பது புற்றுநோயைப் போன்றது. அது தொற்றிக்கொண்டால், நற்சிந்தனைகளையும், நல்லொழுக்க விழுமியங்களையும் ஒன்றுமே இல்லாமல் அரித்துவிடும். தீய நட்பு என்பது நல்லவற்றை தகர்க்கும் சாதனமாகும். 'கூடா நட்புக் கேடாய் முடியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவனை துன்பத்தில் தள்ளிவிடும்.

 

பால் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது. பாத்திரமும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பால் கெடாமல் இருக்கும். அதுபோலத்தான், நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது. நமது சேர்க்கையும் சரியாக இருக்க வேண்டும்.

 

பகுப்பாய்வு செய்தல்

 

இறைநேசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். உனது உள்ளத்தில் ஒருவர் மீது நேசமோ அல்லது வெறுப்போ ஏற்பட்டால் அவனுடைய செயல்பாடுகளை குர்ஆன் மற்றும் நபிமொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அவனது செயல்பாடுகள் குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு ஏற்றவாறு அமைந்திருந்தால் நீ அவன்மீது நேசம் கொள். குர்ஆன் மற்றும் நபிமொழிகளுக்கு முரணாக அவனது செயல்பாடுகள் அமைந்திருந்தால் நீ அவனை வெறுத்துவிடு. மாறாக, உமது மனோ இச்சைக்கு ஏற்றவாறு யாரையும் நேசிக்கவோ, வெறுக்கவோ வேண்டாம். நூல்:- தபகாத்துஷ் ஷஃரானி 1/113

 

அளவுக்கு அதிகமாக நண்பர்களை வைத்திருப்பதைவிட, நமக்கு உண்மையாக இருக்கக்கூடிய ஒரு சில நண்பர்களைக் கொண்டிருப்பது நல்லது. நல்ல நண்பர்களுடன் பழகும்போது, நம் குணாதிசயங்கள் மேம்படும். நல்ல நண்பனை நாம் எதிர்பார்ப்பது போல, நம்மிடமும் மற்றவர்கள் நல்ல நட்பை எதிர்பார்ப்பார்கள். நாமும் மற்றவர்களுக்கு நல்ல நண்பனாக இருக்க முற்பட வேண்டும்.

 

அடையாளங்கள்

 

அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகிவிடுவர். ஆனால், இறையச்சமுடையவர்களைத் தவிர. திருக்குர்ஆன்:- 43:67

 

தீய நண்பர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? அவர்களிடம் இருந்து எப்படி ஒதுங்கிக் கொள்வது? என்று அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

 

எதிர்மறையாளர்: முழுக்க முழுக்க எதிர்மறை கருத்துகளை மட்டும் கொண்டிருப்பவர்கள் எந்த நேரத்திலும் நம்மிடமும் எதிர்மறை கருத்துகளை மட்டுமே பேசுவார். அப்படி இருந்தால் அவர் தீய நண்பர். எனவே, தன்னம்பிக்கை ஊட்டும் நேர்மறையான எண்ணங்களைக் கொண்டவர்களிடமே நட்பு கொள்வது நல்லது.  

 

நாம் ஒரு செயலை செய்ய முற்படும்போது "இது உன்னால் முடியாது” என்று எதிர்மறையாகப் பேசுபவர், நம்முடைய தன்னம்பிக்கையை குலைப்பவர், நாம் என்ன செய்தாலும் நம்மைப் பாராட்டத் தயங்குபவர், நம்முடைய பேச்சு மற்றும் செயல்களிலுள்ள குறைகளை மட்டுமே கண்டுபிடித்து அதையே பிடித்துக்கொண்டு பேசுபவர், எப்போதும் நமது தரத்தை தாழ்த்திச் சொல்லி நம்மை சோம்பேறியாக்குபவர் எப்படி நமக்கு நல்ல நண்பராக இருக்க முடியும்?

 

தேவைக்கு பழகுபவர்: நம்மை மெச்சுவது போல நம்மிடம் ஒன்றிப்பழகி அவர்களுக்குத் தேவையானவற்றை முழுவதுமாக நிறைவேற்றிக்கொள்வார்கள். அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக நம்மை நண்பராக வைத்திருப்பார்கள்.

 

நம்முடைய நண்பர் அழைக்கும்போதெல்லாம் நம்முடைய அனைத்து வேலைகளையும் பற்றி கவலைப்படாமல் நாம் அவருடன் சென்று அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வோம். ஆனால், அந்த நண்பரை நாம் அழைக்கும்போது வராமல், தன் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்கிறார் என்றால், அவர் நம்மைப் பயன்படுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அதைவிட ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அவர் நம்மை நிறுத்தி வைத்திருக்கிறார் என்றே கருத வேண்டும். அவர்களின் பிரச்னைகளை நம்மிடம் கூறுவார்கள். நம்மிடம் உதவிகளைப் பெறுவார்கள். ஆனால், நம்முடைய பிரச்னைகளை காது கொடுத்து கேட்க மாட்டார்கள். நாம் உதவி கேட்கும்போது தட்டிக்கழிப்பார்கள். நமக்கு ஊக்கம் தேவைப்படுகிற சிக்கலான சூழ்நிலைகளில் அவர்கள் ஊக்கப்படுத்தத் தயங்குவார்கள். அவரின் சொல்லுக்கு நாம் கட்டுப்படுவதைப் போலவே நம்முடைய சொல்லுக்கும் அவர்கள் கட்டுப்பட மாட்டார்கள். ஆகவே, இவ்வகையான தீய நண்பர்களிடம் இருந்து விலகாவிட்டால் நம்முடைய நேரமும் ஆற்றலும் தேவையின்றி செலவாகும்.

 

ஒருவரிடம் குறிப்பிட்ட சில விஷயங்கள் மட்டும் பிடித்திருக்கிறது என்பதற்காக அவரை நண்பர்களாக்கிக் கொண்டவர்கள் ஏராளம். ஆனால், நாம் மேற்கூறிய தீய பண்புகளில் ஏதேனும் ஒன்றிருந்தாலும் அவரை விலக்கி வைப்பதே நமக்கு நல்லது.

 

தீய நட்பை விட்டும் நம்மையும், நம்முடைய சந்ததிகளையும், நம்முடைய உறவினர்களையும் அல்லாஹுத்தஆலா பாதுகாப்பானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

1 comment:

  1. தோழமை குறித்த உங்களது இந்த ஆக்கம் தற்போது சமூகத்தில் தேவையான அவசியமான விஷயத்தை முன் வைக்கிறது.
    அல்ஹம்துலில்லாஹ். ஜஸாகுமுல்லாஹ் கைரா உஸ்தாத்

    ReplyDelete

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...