Search This Blog

Wednesday, 30 October 2024

மாற்றுத்திறனாளிகள்

 

மாற்றுத்திறனாளிகள்

 

وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي وَاجْعَلْ لِي وَزِيرًا مِنْ أَهْلِي

(என் இறைவா!) என் நாவில் உள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்ப்பாயாக. அப்போது தான் என் சொல்லைப் புரிந்துகொள்வர். மேலும், எனக்கொரு உதவியாளரை என் குடும்பத்திலிருந்தே நியமிப்பாயாக. திருக்குர்ஆன்:- 20:27, 28,29

 

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளை உலக மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்குரிய இடத்தையும், உரிமைகளையும் வழங்குவதில் யாரும் தடையாக இருக்ககூடாது என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதே இந்த தினத்தின் பிரதான நோக்கம்.

 

அல்லாஹ்வின் படைப்புகளில் சில சமயங்களில் படிப்பினைக்காக அவன் மாற்றங்கள் செய்வதுண்டு. அதுவும் அந்த குறிப்பிட்ட படைப்பிற்கு ஏதேனும் நலவை உத்தேசித்ததாகத்தான் இருக்கும். அந்த மாற்றம் ஏன்? அது தேவையா? போன்ற காரணங்கள் மனித அறிவிற்கு உட்பட்டதாக இருக்குமென்று சொல்ல முடியாது. அப்படி மனிதர்களில் அல்லாஹ் செய்யும் மாற்றம் தான் உடல் ஊனம்.

 

'உடல் ஊனம்' என்று சொல்லக்கூடாது. உடல் ஊனம் என்பது அது ஊனமே அல்ல. அல்லாஹ் அந்த படைப்பில் ஒரு திறனைக் குறைத்து இன்னொரு திறனை அதிகப்படுத்துவான். கண் பார்வையற்றோர்களுக்கு ஞாபகசக்தி மற்றும் குரலாற்றல் அபரிமிதமாக இருப்பது போல. ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு இருக்கும் ஏதேனும் அபார ஆற்றல் போல (இன்ன ஆற்றல் என்று குறிப்பிட முடியாது). வாய் பேச முடியாதவர்களுக்கு இருக்கும் கற்பனைத்திறன் போல. இப்படி ஏதேனும் ஒரு திறன் அவர்களுக்கு குறைக்கப்பட்டு வேறொரு திறனை அல்லாஹ் அபாரமாக தந்திருப்பான்.

 

ஊனமுற்றவர்கள் குறித்து மருத்துவ அறிக்கையைப் பார்த்த தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, "அவர்களை இனி யாரும் ஊனமுற்றவர்கள் என்று அழைக்க வேண்டாம். மாற்றுத் திறனாளிகள் என்று அழையுங்கள். மனம் முடமானவர்களே ஊனமுற்றவர்கள்" என்று அரசு ஆவணங்களில் மாற்று வார்த்தையை 2007-ல் வழக்கில் கொண்டு வந்து, அவர்களுக்கென தனி நலவாரியத்தையும், கூடவே இவர்களுக்கென தனி துறையையும் 2007-ல் ஏற்படுத்தினார். (மேலதிக விபரங்களுக்கு http://www.murasoli.in/details.php?news_id=788 - நன்றி: முரசொலி)

 

உலக மக்களில், சுமாா் 15 % போ் ஏதேனும் ஒரு வகையில் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாா்கள். பிறவியிலேயே உடல் ஊனம் இருப்போா், இளம் வயதில் ஏற்பட்ட நோயால் ஊனமானோா், விபத்து, முதுமை போன்ற காரணங்களால் ஊனமுற்றோா், இவை தவிர மன நோய்க்கு ஆளானோர்கள் உண்டு.

 

அல்லாஹுத்தஆலா இறைத்தூதர் மூசா (அலை) அவர்களிடம் கொடியோன் ஃபிர்அவ்னிடம் சென்று ஓரிறைக்கொள்கை எடுத்துரைக்குமாறு கூறினான். அப்போது தான் மூசா (அலை) அவர்கள் சொல்ல விரும்பும் கருத்தை மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக பேச முடியாத திக்குவாய் என்ற குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியாக இருந்தார்கள். எனவே,  தம்மிடமிருந்த திக்குவாய் குறைப்பாட்டை அகற்றுமாறு அல்லாஹ்விடம் கூறினார்கள். இதுகுறித்து தலைப்பில் காணும் திருவசனம் தெளிவுப்படுத்துகிறது.

 

மாற்றுத்திறனாளிகள், யாரும் விரும்பி ஊனமடைவதில்லை. பிறப்பாலோ, வியாதியாலோ, விபத்தாலோ ஊனம் ஏற்பட்டுவிடுகிறது. அதற்காக அவர்கள் சோர்ந்து அமர்ந்து விடக்கூடாது. முயற்சி உடையவர்களுக்கு ஊனமென்பது தடையாக அமைவதில்லை. முயற்சியுடைய பல மாற்றுத்திறனாளிகள் உலக அளவில் பல்வேறு வியத்தகு சாதனைகளை புரிந்துள்ளனர். ஊனம் என்பதை ஒரு தடையாக பார்க்காமல் அதை ஒரு படிக்கல்லாக பார்க்க வேண்டும். இழந்ததை மறந்து, தன்னிரக்கத்தை தூக்கி எறிய வேண்டும். ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமைகள் உள்ளன. மாற்றுத்திறமைகளும் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து பட்டை தீட்ட வேண்டும். தடைகளையும் தோல்விகளையும் கண்டு பயந்துவிடாமல், முயன்றால் வாழ்க்கை வசப்படும்.

 

மாற்றுத்திறனாளிகள் குறித்து இரண்டு முக்கியமான பிரச்னைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒன்று, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படக்கூடிய தாழ்வு மனப்பான்மை, மற்றொன்று, அவா்கள் மீது ஏனையோருக்கு ஏற்படக்கூடிய அலட்சியப்போக்கு. இவ்விரண்டும் உளவியல் ரீதியில் அணுகித் தீா்க்கப்பட வேண்டியவை. இது குறித்த விழிப்புணா்வும், புரிதலும், நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட வேண்டும்.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு, ‘நாம் தனித்திருக்கிறோம்’ என்ற உணா்வு ஏற்படாத வண்ணம் அவா்கள் பிறரால் அரவணைத்துச் செல்லப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அவா்கள் மனத்தளா்வுக்கு பிறா் காரணமாகிவிடக்கூடாது. இதனை நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்று செயல்பட வேண்டும்.

 

சோதனைக்குட்பட்டவரை காணும்போது

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ رَأَى مُبْتَلًى، فَقَالَ: الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا، لَمْ يُصِبْهُ ذَلِكَ البَلَاء


(நோய் அல்லது சோதனைகளால்) பாதிப்புக்குள்ளானவரைப் பார்த்தவர். ( الحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَاكَ بِهِ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلًا ) (பொருள்: உமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து எனக்கு நிவாரணம் தந்த, அவனுடைய படைப்புகளில் அதிகமானோரைவிட என்னைச் சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக!) என்று ஓதினால், அவர் வாழும் காலமெல்லாம் அந்தப் பாதிப்பிலிருந்து பாதுகாப்புப் பெறுவார். அறிவிப்பாளர்:- உமர் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-3343

 

உடல் ஊனத்தால் சிரமப்படுவோரை நாம் காணும்போது அவர்களைக் கேலி செய்வதோ, அவர்களின் மனம் வேதனைப்படுமாறு பேசுவதோ, அவர்களின் குறைகளைக் குத்திக் காட்டிப் பேசுவதோ கூடாது. மாறாக, அந்நேரத்தில் நாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து, நம்மை ஆரோக்கியமாகப் படைத்துள்ள அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும்; அவனைப் புகழ வேண்டும். அதுவே நாம் அவனுக்குச் செய்யும் நன்றிக் கடனாகும். 

 

அரசு ரீதீயான உதவிகள்

 

சயீது பின் யர்ஃபூ (ரலி) அவர்களுக்கு பார்வை குறைபாடு இருந்ததால் அவர் ஜும்ஆ தொழுகைக்கு வருவதில்லை. இதையறிந்த ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அவரை அழைத்து விசாரித்தார்கள். அவர், "என்னை தொழுகைக்கு அழைத்து கொண்டு வர உதவியாளர் யாரும் இல்லை" என்றார். ஜனாதிபதி அவர்கள், அவர் தேவையான இடங்களுக்கு சென்று வர வழிகாட்டியாக ஒருவரை நியமித்தார்கள். அந்த பணியாளர் எப்போதும் அவர் கூடவே இருந்து வந்தார். நூல்:- உஸ்துல் ஙாபா

 

ஒருமுறை ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் இடக்கரத்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அதைக்கண்ட  ஜனாதிபதி அவர்கள்,  ( يَا عَبْدَ اللَّهِ كُلْ بِيَمِينِكَ ) “அல்லாஹ்வின் அடிமையே! நீர் உமது வலக்கரத்தால்  சாப்பிடுவீராக” என்றார்கள்.

 

அதற்கு அவர், ( أُصِيبْتُ يَوْمَ مُؤْتَةَ فَعَجَزَتْ عَنْ الْحَرَكَةِ  ) “மூத்தா போரில் என் வலது கையில் காயப்பட்டுவிட்டது. அதனால் இயங்க இயலாத நிலைக்குப் போய்விட்டது” என்றார். இதைக் கேட்டவுடன் ஜனாதிபதி அவர்கள் அவர் நிலை கண்டு அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

 

பிறகு, ( مَنْ يُوَضِّئُكَ ؟ ) “நீர் உளூ செய்வதற்கு யார் உதவி செய்கிறார்?” ( وَمَنْ يُغْسَلُ لَكَ ثِيَابُكَ ؟ ) “உமது துணிகளை யார் துவைத்து தருகிறார்?” ( وَمَنْ يُغْسَلُ لَكَ رَأْسُكَ ؟ ) “நீங்கள் குளிப்பதற்கு யார் உதவுகின்றார்?” ( وَمَنْ . . . وَمَنْ . . . ؟ ) இதற்கு யார்? அதற்கு யார்?” என்று (அன்றாட அலுவல்களை) விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு, அவருக்கு ஒரு பணியாளர், (முறையான) வாகனம், உணவு ஆகியவற்றை கொடுக்க உத்தரவிட்டார்கள். நூல்:- அல்ஃபாரூக் - அல்லாமா ஷிப்லி நுஅமானீ,  இன்த மா இல்தகைத்து உமர் இப்னு கத்தாப் (ரலி) ( عند ما التقيت عمر بن الخطاب ) டாக்டர் அத்ஹம் ஷர்காவீ

 

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள், ஊக்கத்திட்டங்கள், வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அவை குறித்த தெளிவை மாற்றுத்திறனாளிகள் அறிய வேண்டும். அதன் மூலம் பயனடைய வேண்டும். சக மனிதராய் அதற்கு நாம் உதவ வேண்டும்.

 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறையை உணராத அளவிற்கு அங்கீகரிக்கப்படுகிறாா்கள். அவா்களும் அதனை சவாலாக எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்படுகின்றனா். உதாரணமாக, சுய தொழில் தொடங்க சகலவிதமான வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

 

நம் நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள், சேவைகள் தரத்தை உயா்த்த ஒரு சிறந்த வழி, வளா்ந்த நாடுகள் பலவற்றின் செயல்பாடுகளை ஆய்ந்தறிந்து அவற்றில் உள்ள மிகச்சிறந்த கூறுகளை நம் நாட்டுக்கேற்ப தகுந்த முறையில் வடிவமைத்துக் கொள்வதாகும்.

 

வரவேற்க வேண்டும்

 

அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி) அவர்கள் கடும் கால் ஊனமுற்றவராக இருந்தார்கள். அவருக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர். அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் போர்க்களங்களில் கலந்து கொள்வார்கள். உஹுத் போர் நாள் வந்தபோது, புதல்வர்கள் தம் தந்தையிடம் "அல்லாஹ், (ஊனமுற்ற) உங்களுக்கு (போரில்) விதிவிலக்கு அளித்துள்ளான்" என்று கூறி, அவரைப் (போருக்குச் செல்லாமல்) தடுப்பதற்கு நாடினர்.

 

உடனே அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, ( إِنَّ بَنِيَّ يُرِيدُونَ أَنْ يَحْبِسُونِي عَنْ هَذَا الْوَجْهِ وَالْخُرُوجِ مَعَكَ فِيهِ، فَوَاللَّهِ إِنِّي لَأَرْجُوَ أَنَّ أَطَأَ بِعَرْجَتِي هَذِهِ فِي الْجَنَّةِ ) "என் புதல்வர்கள் உங்களுடன் போருக்குப் புறப்படுவதற்கு இந்த (ஊனம்) காரணத்தால் என்னைத் தடுப்பதற்கு விரும்புகின்றனர். அல்லாஹ் மீதாணையாக! இந்த ஊனமுற்ற காலுடனே சொர்க்கத்தை மிதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று கூறினார்.

 

பிறகு நபியவர்கள், ( أَمَّا أَنْتَ فَقَدَ عَذَرَكَ اللَّهُ، فَلَا جِهَادَ عَلَيْكَ ) "அல்லாஹ் உங்களுக்கு விதிவிலக்கு அளித்துள்ளான். எனவே, உங்கள் மீது அறப்போர் கடமையில்லை என்பதை தெரிந்து கொள்க!" என்று கூறினார்கள். (பிறகு) அவரின் புதல்வர்களிடம், ( مَا عَلَيْكُمْ أَنْ لَا تَمْنَعُوهُ لَعَلَّ اللَّهَ أَنْ يَرْزُقَهُ الشَّهَادَةَ ) "நீங்கள் அவரை போரில் கலந்து கொள்ளாமல் தடுப்பது உங்களுக்கு அவசியமில்லை. அல்லாஹ் அவருக்கு உயிர்த்தியாகத்தை வழங்கக்கூடும்" என்று கூறினார்கள். பிறகு அம்ர் பின் ஜமூஹ் (ரலி) அவர்கள் நபியவர்களுடன் புறப்பட்டு உஹுது போரில் (போரிட்டு) கொல்லப்பட்டார். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம், அல்பிதாயா வந்நிஹாயா

 

மனிதாபிமான நோக்குடன் மாற்றுத்திறனாளிகளை மதிக்க வேண்டும். அவர்களின் திறமைகளை கண்டுணர்ந்து, அவற்றை வெளிக்கொணர்ந்து அவர்கள் பல சாதனைகள் புரிய உதவ வேண்டும்.

 

உலகத்தில் சாதாரண மனிதர்கள் படைக்கும் சாதனையைவிட மாற்றுத் திறனாளிகள் படைக்கும் சாதனைகள் பல என்றே சொல்லலாம். சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் உலகில் பலர் திகழ்ந்தனர்; திகழ்கின்றனர்.


கேலி கிண்டல் கூடாது

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை ஒரு மரத்தில் ஏறி அதன் கிளை ஒன்றை ஒடித்து வர கட்டளையிட்டார்கள். (உடனே அன்னார் மரத்தில் ஏறியபோது) நபித்தோழர்களில் சிலர், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய கெண்டைக்கால் மெலிந்திருப்பதைப் பார்த்து சிரித்துவிட்டார்கள். அப்போது அண்ணலார், ( مَا تَضْحَكُونَ‏؟‏ لَرِجْلُ عَبْدِ اللهِ أَثْقَلُ فِي الْمِيزَانِ مِنْ أُحُدٍ‏ ) "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்? அப்துல்லாஹ்வின் கால் (நன்மை தீமைகளை நிறுக்கப்படும்) தராசில் உஹது மலையைவிட கனமிக்கது" என்று கூறினார்கள். நூல்:- அல்அதபுல் முஃப்ரத்-237

 

யாருடைய தோற்றத்தையும் உருவத்தையும் கிண்டலடிக்கக்கூடாது. காரணம், மனிதர்களை மனிதர்கள் படைக்கவில்லை. படைப்புகளுக்குக் கண்ணியம் கொடுக்காவிட்டாலும் படைத்தவனுக்குக் கண்ணியம் கொடுக்க வேண்டும்.

 

ஒருவருடைய உடல் ஊனத்தை குறித்து கேலி கிண்டல் செய்து அவரை தாழ்வுமனப்பான்மைக்கு ஆளாக்கக்கூடாது. மாறாக, அவரிடமுள்ள ஏதேனும் ஒரு திறமையை வைத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும். அவர் திறமையை அவருக்கும், வெளி உலகத்திற்கும் புரியவைக்க வேண்டும். இதையே இஸ்லாம் விரும்புகிறது. மாற்றுத்திறனாளிகள் சாதித்தவை ஏராளம் என்பதை உலகம் அறியும்.

 

செவிடன் காதில் ஊதிய சங்கு, நொண்டிச்சாக்கு, யானை தடவிய குருடன் போல், முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?, ஊமை ஊரைக் கெடுக்கும் போன்ற பழமொழிகளை சர்வ சாதாரணமாக மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் அவர்கள் மனம் புண்படும்படியாக நேரிலும் மேடைகளிலும் உதாரணம் காட்டி பலரும் பேசுவது சரியல்ல.

 

திரைப்படங்களிலும், நாடகங்களிலும், செவித்திறன் குறைந்தவர்களை, திக்கித்திக்கி பேசுவோரை, கால் தாங்கி நடப்போரை ஒரு பாத்திரமாக வைத்து நகைச்சுவை காட்சிகளை அமைப்பது மிகப்பெரிய தவறாகும். அவையும் கண்டிக்கத்தவையே.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி ஆகியவை அத்தியாவசியத் தேவையாகும். அவர்களுக்கு தேவைப்படும் சான்றிதழ் எதுவாயினும் தாமதமின்றி இணையதளம் மூலம் பெறவும், அவர்களை நேரில் வரச்சொல்லி அலைக்கழிக்காமல் இல்லத்திற்கே சென்று உதவிடும் நிலையும் உருவாக வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விரும்புவது சம வாய்ப்புகளையும், சம உரிமைகளையும் தான்; பரிதாபத்தை அல்ல.

 

தகுதி இருந்தால்

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தார்கள். (ஒருவர்) பிலால் (ரலி) அவர்கள். (மற்றொருவர்) கண் பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ( إِنَّ بِلاَلاً يُؤَذِّنُ بِلَيْلٍ فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ ) "பிலால் (பின்) இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். எனவே, இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்காக) அறிவிப்புச் செய்யும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்" என்று சொன்னார்கள். நூல் :- முஸ்லிம்-1993

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சஹ்ர் மற்றும் தஹஜ்ஜுத் உடைய நேரத்தை அறிவிப்பு செய்வதற்காக பின்னரவில் பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்வதற்கும், அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் பஜ்ரு தொழுகைக்காக பாங்கு சொல்வதற்கும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

 

பாங்கு சொல்லுதல் என்பது அன்றைக்கு உயர்ந்த பொறுப்பாக இருந்தது. இன்று போல் அன்று பாங்கு சொல்லும் பணி மட்டமான பணியாக பார்க்கப்படவில்லை.

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு செல்வதற்கு முன்பே முதலாவதாக முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களையும் அதன் பிறகு இரண்டாவதாக அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களையும் இஸ்லாமிய பரப்புரைக்காக மதீனாவிற்கு அனுப்பி வைத்தார்கள். மதீனா வந்த இந்த இருவரும், மதீனாவாசிகளுக்கு அனுதினமும் குர்ஆன் மற்றும் மார்க்க விஷயங்களைக் கற்றுக்கொடுப்பவர்களாக இருந்துள்ளனர்.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் சுமார் 13 யுத்தங்களுக்கு மதீனாவைவிட்டு கிளம்பி வெளியே செல்லும் சமயங்களில் தன்னுடைய பிரதிநிதியாய், ஆட்சியாளராய் தன்னுடைய வேலைகளை செய்வதற்காக அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களிடம் தான் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றார்கள்.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்லும்போது இவர் தான் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தவர் ஆவார். (அதாவது நபியவர்கள் மதீனாவில் இல்லாத போது கண் பார்வையற்றவராக இவர்தான் மக்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தவர்.)

 

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் கண் பார்வையற்றவராக இருந்தும்கூட பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் நற்போதனை செய்யும் ஆசிரியர் பொறுப்பு,  பாங்கு சொல்லும் பொறுப்பு, ஆட்சியாளரின் பிரதிநிதி பொறுப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்தார்கள். காரணம், நபியவர்கள் அவரிடம் அதற்குரிய தகுதி இருந்ததைக் கண்டு கொண்டு, அவரை கௌரவப்படுத்தினார்கள்.

 

ஒருவரிடம் தகுதியும், திறமையும் இருந்தால் அதற்குரிய பொறுப்புக்களை அவரிடம் ஒப்படைக்கலாம். அவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சரியே. தகுதியும், திறமையும் இருந்து அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்ற ஒரே காரணத்திற்காக அவரிடம் பொறுப்பை கொடுக்க மறுப்பது மிகப்பெரிய தவறாகும்.

 

உதவிகள் புரிதல்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ قادَ أَعْمَى أربعينَ ذِرَاعًا أوْ خمسينَ ذِرَاعًا  كتبَ اللهُ  تباركَ وتعالى لهُ عِتْقُ رَقَبَةٍ ) எவர் கண் பார்வையற்ற ஒருவரை நாற்பது அல்லது ஐம்பது முழம் கைபிடித்து அழைத்துச் செல்கிறாரோ அவருக்கு, மகத்துவமிக்க அல்லாஹுத்தஆலா ஒரு அடிமையை உரிமையிட்டதிற்குரிய நன்மையை பதிவுசெய்கிறான். அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, முஅஜமுல் அஸ்வத் இமாம் தப்ரானீ,  அல்மத்தாபுல் ஆலியா இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ

 

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உத்தாசைகள் புரிவதின் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்தும் நல்லடியார்களாக அல்லாஹுத்தஆலா, நம்மை வாழச்செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...