பரிபூரணத்துவம் பெற்ற நாற்பது
إِذَا بَلَغَ أَشُدَّهُ وَبَلَغَ أَرْبَعِينَ
سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ
عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي
فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ
அவன் தனது வாலிபத்தை முழுமையாக அடைந்து, நாற்பதாவது வயதை அடையும்போது, "என் இறைவா! நீ எனக்கும் எனது பெற்றோருக்கும் செய்த அருட்கொடைகளுக்கு
நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் புரிவதற்கும்
எனக்கு நற்பாக்கியம் வழங்குவாயாக! எனக்கு உதவியாக இருக்கும்படி என்னுடைய குடும்பத்தை
சீர்திருத்தி வைப்பாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்.
நிச்சயமாக நான் (உனக்கு கீழ்படிந்து வாழும்) முஸ்லிம்களில் உள்ளவனாகவும் இருக்கின்றேன்"
என்று கூறுவான். திருக்குர்ஆன்:- 46:15
நாற்பது என்ற எண்ணிக்கை ஓரளவு பரிபூரணத்துவம் பெற்றதாக இஸ்லாம் கருதுகிறது. எனவே
தான், இஸ்லாமிய பார்வையில் நாற்பது என்பதற்கு தனி முக்கியத்துவம் தரப்படுகிறது.
இதுகுறித்த இஸ்லாமிய தகவல்களை பார்ப்போம் வாருங்கள்.
அவ்விரண்டுக்குமிடையே
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்,
( يَا رَسُولَ اللَّهِ، أَىُّ مَسْجِدٍ وُضِعَ فِي الأَرْضِ أَوَّلُ
) “நாயகமே! பூமியில் முதன்முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல்
எது? என்று வினவினேன். அதற்கு அண்ணலார், ( الْمَسْجِدُ الْحَرَامُ
) “மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவில் உள்ள புனித கஅபா) என்ற
இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான் பிறகு எது? என்று வினவினேன். அண்ணலார், ( الْمَسْجِدُ الأَقْصَ
) “(ஜெருசலத்தில் உள்ள) அல்மஸ்ஜிதுல் அக்சா” என்று பதிலளித்தார்கள்.
நான் அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் என்று (இடைவெளி) இருந்தது?
என்று வினவினேன். அண்ணலார், أَرْبَعُونَ سَنَةً ) ) நாற்பது ஆண்டுகள் (மஸ்ஜிதுல்
ஹராம் அமைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கழித்து அல்மஸ்ஜிதுல் அக்சா அமைக்கப்பட்டது.)”
என்று பதிலளித்தார்கள். நூல்:- புகாரீ-3366
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்), இமாம் சுயூத்தீ (ரஹ்) ஆகியோர் கூறுகிறார்கள். கஅபாவை
முதன் முதலில் ஆதம் (அலை) அவர்கள் கட்டினார்கள். பின்னர் அவர்களின் வழித்தோன்றல்களுள்
ஒருவர் நாற்பது ஆண்டுகள் கழித்து 'மஸ்ஜிதுல் அக்ஸா'வைக் கட்டினார். பிறகு இறைத்தூதர் சுலைமான் (அலை)
அவர்கள் தமது ஆட்சியின்போது மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலைப் புதுப்பித்து கட்டியிருக்கலாம்.
(நூல்:- கிதாபுத் தீஜான் இப்னு ஹிஷாம்) ஆதம் (அலை) அவர்கள் கஅபாவை கட்டிய பின் அவர்களை
அல்லாஹ் பைத்துல் முகத்தஸ்க்கு பயணம் செய்யும்படி கட்டளையிட்டான். அவர்கள் அவ்வாறே
அங்கு சென்று அதை கட்டினார்கள். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட கால அளவு நாற்பது ஆண்டுகள்
என்றும் கூறப்பட்டுள்ளது. நூல்:- தகீரத்துல் உக்பா
விடுதலைப் பத்திரம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ
يُدْرِكُ التَّكْبِيرَةَ الأُولَى كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ بَرَاءَةٌ مِنَ النَّارِ
وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ ) யார்
அல்லாஹ்வுக்காக ஆரம்பத் தக்பீரிலேயே கூட்டுத் தொழுகையில் சேர்ந்து நாற்பது நாள்கள்
தொழுகிறாரோ அவருக்கு இரண்டு விடுதலைகள் எழுதப்படுகின்றன. (ஒன்று) நரக விடுதலை; (மற்றொன்று) நயவஞ்சகத்திலிருந்து விடுதலை. அறிவிப்பாளர்:-
அனஸ் (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-224
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً،
لَا يَفُوتُهُ صَلَاةٌ، كُتِبَتْ لَهُ بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَنَجَاةٌ مِنَ الْعَذَابِ،
وَبَرِئَ مِنَ النِّفَاقِ ) எந்த ஒரு மனிதர் என்னுடைய
பள்ளிவாசலில் (மஸ்ஜிதுந் நபவியில்) ஒரு வேளை தொழுகைக்கூட தவறாமல் தொடர்ந்து நாற்பது
வேளை தொழுகைகளை (பேணுதலுடன்) தொழுவாரோ அவருக்கு நரக வேதனையைவிட்டு விடுதலை பெற்றவர்
என்று எழுதப்படுவதுடன் அவர் (நிஃபாக் எனும்) நயவஞ்சகத்தன்மையை விட்டும் நீங்கியவராகிவிடுவார்.
அறிவிப்பாளர்:- அனஸ் (ரலி) அவர்கள் நூல்:-
முஸ்னது அஹ்மத், தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் இமாம் பைஹகீ, இப்னு அதீ, மஜ்மஉஸ் ஸவாயித்,
தண்டிக்கப்பட்ட காலம்
அல்லாஹுத்தஆலா, புனித பூமியான பைத்துல் மக்திஸ் (ஜெருசலம்) பகுதியில் வசித்து வந்த
அமாலிக்கா ரவுடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, பனூ இஸ்ரவேலர்களை குடியமர்த்த வேண்டும் என்று இறைத்தூதர் மூசா
(அலை) அவர்களுக்கு உத்தரவிட்டான்.
இதைப்பற்றி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ரவேலர்களிடம் கூறினார்கள். கோழைகளாக இருந்த
பனூஇஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம், "நீர் எங்களை எந்த ஊருக்குள் நுழைந்து அந்த ஊர்காரர்களுடன் போரிட வேண்டும் என கட்டளையிடுகிறீரோ
அந்த ஊரில் அடக்குமுறையாளர்கள் உள்ளனர். அவர்கள் அச்சமூட்டும் தோற்றமுடையவர்களாகவும், பலம் மிக்கவர்களாகவும் உள்ளனர். அவர்களை எதிர்க்கவோ, ஒடுக்கவோ எங்களால் இயலாது. அவர்கள் அங்கு இருக்கின்றவரை எங்களால்
அதற்குள் நுழைய முடியாது. அவர்கள் அங்கிருந்து அவர்களாக வெளியேறிவிட்டால் மட்டுமே எங்களால்
அங்கு நுழைய முடியும். இல்லாவிட்டால் அவர்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால், நீரும் உம்முடைய இறைவனும் சென்று அவர்களுடன் போரிடுங்கள். நாங்கள்
இங்கேயே அமர்ந்திருக்கிறோம்" என்று கூறிவிட்டனர்.
அப்போதுதான் மூசா (அலை) அவர்கள், "என் இறைவா! என்னையும் என் சகோதரரையும் தவிர, வேறெவரையும் என்னால்
கட்டுப்படுத்த இயலாது. எனவே, எங்களுக்கும் பாவிகளான
இக்கூட்டத்தாருக்குமிடையே நீ தீர்ப்பளிப்பாயாக!" என்று அவர்களுக்கெதிராக இவ்வாறு
பிரார்த்தித்தார்கள்.
அப்போது அல்லாஹ், "இனி நாற்பதாண்டுகள்
அந்தப் பூமிக்குள் செல்வது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கும்" என்று அறிவித்தான்.
இதையடுத்து அவர்கள் "தீஹ்" பாலைவனத்திற்குள் சிக்கி, அதிலிருந்து வெளியேற வழி தெரியாமல் நாடோடிகளாய் அங்கே நாற்பதாண்டுகள்
சுற்றித் திரிந்தவாறு இருந்தனர். அவர்கள் எந்த இடத்திலும் நிலையாகத் தங்காமல் பயணத்திலேயே
அவர்களின் நாள்கள் எல்லாம் கழிந்தன. இந்த நாற்பதாண்டுகளில் விந்தையான பல நிகழ்வுகளும்
அற்புதங்களும் நிகழ்ந்தன. இந்த காலகட்டத்தில் "தீஹ்" பாலைவனத்தில் ஏராளமான
பனூஇஸ்ரவேலர்கள் இறந்துவிட்டனர். இதுகுறித்து அல்மாயிதா அத்தியாயத்தின் சில வசனங்கள்
(5:23-26) விவரிக்கிறது.
அல்லாஹ்வின் உத்தரவு விஷயத்தில் அவர்கள் எல்லை மீறி நடந்ததன் விளைவாகவே இத்தண்டனைக்கு
உள்ளாயினர். அல்லாஹ் ஒரு சமுதாயத்தாரைத் தண்டிப்பதற்கு நாற்பதாண்டுகளைத் தேர்ந்தெடுத்துள்ளான்.
அறிவு பரிபூரணத்துவம் பெறும்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நாற்பதாவது வயதின் தொடக்கத்தில் அவர்களை அல்லாஹ்
தன் தூதராக அனுப்பினான். நூல்:- முஸ்லிம்-4685
அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( الْعَبْدُ الْمُسْلِمُ إِذَا بَلَغَ أَرْبَعِينَ
سَنَةً خَفَّفَ اللَّهُ حِسَابَهُ، وَإِذَا بَلَغَ سِتِّينَ سَنَةً رَزَقَهُ اللَّهُ
الْإِنَابَةَ إِلَيْهِ، وَإِذَا بَلَغَ سَبْعِينَ سَنَةً أَحَبَّهُ أَهْلُ السَّمَاءِ،
وَإِذَا بَلَغَ ثَمَانِينَ سَنَةً ثَبَّتَ اللَّهُ حَسَنَاتِهِ وَمَحَا سَيِّئَاتِهِ،
وَإِذَا بَلَغَ تِسْعِينَ سَنَةً غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
وَمَا تَأَخَّرَ، وشفَّعه اللَّهُ فِي أَهْلِ بَيْتِهِ، وَكُتِبَ فِي السَّمَاءِ: أَسِيرَ
اللَّهِ فِي أَرْضِهِ ) ஒரு முஸ்லிம் (நல்லறம் பேணியவராக) நாற்பது வயதை அடைந்தால் அவனிடம்
கேள்வி விசாரணை செய்வதை அல்லாஹ் எளிதாக்குகின்றான். அவன் அறுபது வயதை அடைந்தால் தன்
பக்கம் மீளுகின்ற நறுப்பேற்றை அவனுக்கு அல்லாஹ் அருளுகிறான். அவன் எழுபது வயதை அடைந்தால், வானத்திலுள்ள வானவர்கள் அவன் மீது நேசம் கொள்கிறார்கள். அவன்
எண்பது வயதை அடைந்தால், அவனுடைய நன்மைகளை அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்.
அவனுடைய தீமைகளை அழிக்கின்றான். அவன் தொண்ணூறு வயதை அடைந்தால் தன் தன்னுடைய குடும்பத்தினர்
விஷயத்தில் அவனது பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். மேலும், அல்லாஹ்வின் (கட்டளைக்குக் கட்டுப்பட்ட) சிறைக்கைதியாக பூமியில்
வாழ்ந்தான் என்பதாக வானத்தில் (வானவர்களிடத்தில்) எழுதிவைக்கச் செய்கின்றான். அறிவிப்பாளர்:-
உஸ்மான் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர்
பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
( إِنَّهُ
لَا يَتَغَيَّرُ غَالِبًا عَمَّا يَكُونُ عَلَيْهِ ابْنُ الْأَرْبَعِينَ ) பெரும்பாலும் நாற்பது வயதின்போது (அறிவாற்றலின்)
எந்நிலையில் அவன் இருந்தானோ (அதன் பிறகு) அந்நிலை
பெரும்பாலும் மாற்றம் அடைவதில்லை. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்
தலைப்பில் காணும் திருவசனத்தில் இடம்பெறும் "என் இறைவா! எனக்கு நற்பாக்கியம்
வழங்குவாயாக" என்றால், "எனது மனதில் இந்த நல்லெண்ணத்தை
உதிக்கச் செய்வாயாக" என்று பொருள்.
"நிச்சயமாக நான் பாவமன்னிப்புக்கோரி உன் பக்கம் மீளுகிறேன். மேலும், நிச்சயமாக
நான் (உனக்குக்) கீழ்ப்படிந்து வாழ்வோரில் (முஸ்லிம்களில்) உள்ளவனாக இருக்கிறேன்"
என்றால்,
"இது நாற்பது வயதை அடைந்த மனிதனுக்கு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, பாவமன்னிப்புக்கோருவதில்
உறுதியுடன் இருப்பதன் பக்கம் வழிகாட்டுதலாகும்" என்று பொருள். நூல்:- தஃப்சீர்
இப்னு கஸீர்
பெரும்பாலானோருக்கு நாற்பது வயது தாண்டிய பின்னர்தான் பெற்றோரின் பெருமை புரிகின்றது.
தனது பிள்ளை தனக்கு மாறு செய்யும்போது தாய், தந்தையின் கவலை தெரிகின்றது. தனது பிள்ளைகள் சீராக
இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏக்கமும் எழுகின்றது.
ஒரு மனிதன் நாற்பது வயதை அடைந்த பிறகு அவனது அறிவு பரிபூரணத்துவம்
பெறுகிறது. எனவே, அதன் பிறகாவது அவனுக்கு நல்லறங்களின் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும். பெற்றோர் மற்றும் சந்ததியினர் குறித்து இறைவனிடம்
அழகிய முறையில் பிரார்த்திக்க வேண்டும் என்று தலைப்பில் காணும் திருவசனம் கூறுகிறது.
வேதத்தை வழங்க
(தவ்ராத் வேதத்தைக் கொடுக்க)
மூசாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். திருக்குர்ஆன்:- 2:51
(சினாய் மலைக்கு வந்து தவ்ராத் வேதத்தைப் பெற்றுச் செல்வதற்காக) மூசாவுக்கு நாம்
முப்பது இரவுகளை வாக்களித்தோம். பின்னர் பத்தைச் சேர்த்து அவற்றை (நாற்பதாக) நிறைவு
செய்தோம். எனவே, அவருடைய இறைவன் நிர்ணயித்த கால அளவு மொத்தம் நாற்பது
இரவுகளானது. திருக்குர்ஆன்:- 7: 142
மூசா (அலை) அவர்கள் தமது சமுதாயத்தினரிடம், "நீங்கள் அனைவரும் ஹாரூன் (அலை) அவர்களுக்கு பணியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அவரை
உங்களுக்கு பிரதிநிதியாக ஆக்கியுள்ளான். நான் என் இறைவ(னைச் சந்திக்க அவ)னிடம் செல்கிறேன்.
நான் உங்களிடம் திரும்பி வர முப்பது நாள்களாகும்" என்று கூறிச் சென்றார்.
அவர்தம் இறைவன் குறிப்பிட்ட இடத்துக்கு வந்தபோது, முப்பது நாள்களுக்குள் தம் இறைவனிடம் பேச வேண்டும் என்று நாடினார்.
அந்த முப்பது நாள்கள் (இறைவனின் கட்டளைப்படி) இரவு பகலாக நோன்பு நோற்றார். அவர் இறைவனிடம்
பேசும்போது ஒரு நோன்பாளிக்கு இயற்கையாக வருகின்ற வாய்வாடையோடு பேசுவதை விரும்பவில்லை.
எனவே, ஒரு மரத்தின் பட்டையால் பல் துலக்கினார்.
அதன்பின் அவர் தம் இறைவனிடம் பேச நாடி வந்தபோது, ( لِمَ أَفْطَرْتَ؟ ) "நீர் ஏன் நோன்பை முறித்தீர்? (அதாவது, நீர் ஏன் பல் துலக்கிவிட்டு வந்தீர்?) என அல்லாஹ் அதற்கான காரணத்தை அறிந்துகொண்டே வினவினான்.
அதற்கு அவர், ( يَا
رَبِّ إِنِّي كَرِهْتُ أَنْ أُكَلِّمَكَ إِلَّا وَفَمِي طَيِّبُ الرِّيحِ ) "இறைவா! நான் என்னுடைய வாய்வாடையின்றி தூய்மையாக
உள்ள நிலையில் உன்னோடு பேச வேண்டும் என்று நாடினேன்" என்று பதிலளித்தார்.
அதற்கு அல்லாஹ் அவரிடம், ( أَنَّ رِيحَ فَمِ الصَّائِمِ أَطْيَبُ مِنْ رِيحِ الْمِسْكِ
ارْجِعْ فَصُمْ عَشْرًا، ثُمَّ ائْتِنِي ) "ஒரு நோன்பாளியின் வாய்வாடை என்னிடம், கஸ்தூரி மணத்தைவிட மிகவும்
நறுமணமானது. எனவே நீர் திரும்பிச் சென்று, இன்னும் பத்து நாள்கள்
நோன்பு நோற்றுவிட்டு என்னிடம் வாரீர்" என்று கூறினான். பிறகு மூசா (அலை) அவர்கள்
தம்முடைய இறைவன் ஏவியவாறே செய்தார். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா
அல்லாஹுத்தஆலா தமது தூதருக்கு வேதத்தை வழங்க நாற்பது நாள்கள் வழிபாடுகள் புரியுமாறு
கூறியுள்ளான்.
மனித உருவாக்கம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( اِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ
يَوْمًا، ثُمَّ عَلَقَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ يَكُونُ مُضْغَةً مِثْلَ ذَلِكَ، ثُمَّ
يَبْعَثُ اللَّهُ مَلَكًا فَيُؤْمَرُ بِأَرْبَعٍ بِرِزْقِهِ، وَأَجَلِهِ، وَشَقِيٌّ،
أَوْ سَعِيدٌ ثُمَّ يُنْفَخُ فِيهِ الرُّوحُ ) உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது
நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே (நாற்பது நாள்கள்) அந்தக்
கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக் கட்டியாக
மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் நாற்பது நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு
சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது.
பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு
பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், (செயல்பாடு),
அவன் நற்பேறுபெற்றவரா, அல்லது நற்பேறு அற்றவரா (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள்
உயிர் ஊதப்படும். நூல்:- புகாரீ-6594
உள்ளத்தின் மாற்றம்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஒரு மனிதர் அழகிய பெண்ணொருத்தியைக்
காதலித்தார். அப்பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்றெண்ணி, ஒரு நாள் அவளிடம் தமது எண்ணத்தை கூறினார். இறையச்சம்
நிறைந்த அப்பெண் அவரிடம், "என்னை அடைய வேண்டுமானால்
எனது நிபந்தனை ஒன்றை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அதாவது, நீங்கள் நாற்பது நாள்கள்
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு பின்னால் நின்று "தக்பீர் தஹ்ரீமா" தவறாமல் (முதல் ரக்அத் ஆரம்பத்தில்) தொழுகையை நிறைவேற்ற
வேண்டும். அதன் பிறகு நாற்பத்தியோராவது நாள் என்னிடம் வாருங்கள். உங்கள் ஆசைக்கு நான்
இணங்குவேன்" என்று கூறினாள்.
அவளின் நிபந்தனையை ஒப்புக்கொண்டு அந்த மனிதரும், ஐந்து நேரத் தொழுகைகளை தக்பீர் தஹ்ரீமா தவறாமல் உமர் (ரலி) அவர்களுக்கு
பின்னால் நின்று ஜமாஅத்துடன் தொழ ஆரம்பித்தார். தொழுகையின் மகத்துவத்தால் அவரது மனம்
அப்பெண்ணை நினைப்பதை தவிர்த்துக்கொண்டது. அவரது மனம் தொழுகையிலேயே இன்பம் காண ஆரம்பித்துவிட்டது. அப்பெண்ணை அடையும் நினைப்பு கொஞ்சம்கூட அவருக்கில்லை.
சில நாள்களுக்குப் பிறகு அந்தப் பெண் ஒரு மனிதரை அனுப்பி, "இப்போது நீங்கள் என்னை அடைய விரும்புகிறீர்களா?"
என்று கேட்டுவருமாறு கூறினாள். அதற்கு அவர்,
"என்னுடைய நினைவெல்லாம் தொழுகையிலேயே இருக்கிறது.
வேறு எந்த பொருளின் மீதும் எனக்கு ஆசையில்லை. இதற்கு முன் நான் அப்பெண்ணை அடைய விரும்பியதற்காக
இறைவனிடம் பாவமன்னிப்பு தேடிக்கொண்டேன்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
ஆம்! நாம், நல்லது கெட்டது என எதையும் நாற்பது நாள்கள் தொடர்ந்து செய்து
பழகிவிட்டால், அதுவே, நமது வாழ்க்கையில் வழமையாகிவிடும்.
தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَىْءٍ لَمْ
تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ لَيْلَةً ) ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாள்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை. அறிவிப்பாளர்:-
ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4488
பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَكَلَ لُقْمَةً مِنْ حَرَامٍ ، لَمْ تُقْبَلْ
لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ يَوْمًا وَلَمْ يُقْبَلْ لَهُ دُعَاءٌ أَرْبَعِينَ يَوْمًا ) யார் (ஹராம் எனும்) தடுக்கப்பட்ட வழியில் சம்பாதித்த
ஒரு கவள உணவைச் சாப்பிட்டாலும் அவரின் நாற்பது நாள்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
மேலும், அவரிடமிருந்து நாற்பது நாள்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாது. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள்
நூல்:- முஸ்னது ஃபிர்தௌஸ் இமாம் தைலமீ, பஹ்ருத் துமூஉ இமாம் இப்னு ஜவ்ஸீ, லிசானுல் மீஸான் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ, கன்ஸுல் உம்மால்
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَن شَرِبَ الْخَمْرَ لَمْ يَرْضَ اللَّهُ عَنْهُ أَرْبَعِينَ
لَيْلَةً، إِنْ مَاتَ مَاتَ كَافِرًا، وَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ ) ஒருவர் மது அருந்தினால் நாற்பது நாள்கள் வரை அவர்மீது
அல்லாஹ் பிரியம் கொள்ளமாட்டான். (அந்நாள்களில்) அவர் இற(க்க
நேர்ந்)தால் இறைமறுப்பாளராகவே இறப்பார். அவர் பாவமன்னிப்புக் கோரினால் அவரது பாவமன்னிப்புக்
கோரிக்கையை அல்லாஹ் ஏற்பான். அறிவிப்பாளர்:-
அஸ்மா பின்த் யஸீத் அஸ்ஸகன் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னுகஸீர் அல்மாயிதா வசனம்-93
கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ شَرِبَ الْخَمْرَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ
صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا ) ஒருவர் மது அருந்தினால் அவரது நாற்பது நாள்கள் தொழுகையை
அல்லாஹ் ஏற்கமாட்டான். அவர் பாவமன்னிப்புக் கோரினால், அவரது பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்பான். அண்ணலார் இவ்வாறு மூன்று முறை
கூறிவிட்டு, நான்காவது தடவை அவர் மீண்டும் மது அருந்தினால், ( لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ
تَابَ لَمْ يَتُبِ اللَّهُ عَلَيْهِ وَسَقَاهُ مِنْ نَهْرِ الْخَبَالِ ) அப்போது அவரது நாற்பது நாள்கள் தொழுகையை அல்லாஹ்
ஏற்பதில்லை. மேலும், அவர் பாவமன்னிப்புக் கோரினால், அவரது பாவமன்னிப்புக் கோரிக்கையையும் அல்லாஹ் ஏற்பதில்லை. 'கபால்' நதியிலிருந்து அவருக்கு
அல்லாஹ் புகட்டுவான்.
இந்த நபிமொழியை கூறிய அப்துல்லாஹ் பின் உமர் ரலி அவர்களிடம், "கபால் நதி என்றால் என்ன என்று வினவப்பட்டது. அதற்கு
அன்னார், (
نَهْرٌ مِنْ صَدِيدِ أَهْلِ النَّارِ ) "அது நரகவாசிகளின் (உடலிலிருந்து வழியும்) சீழால்
ஆன நதியாகும்" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்:- உபைத் பின் உமைர் (ரஹ்)
அவர்கள் நூல்:- அபூதாவூத், திர்மிதீ-1785, இப்னுமாஜா
அவரது நாற்பது நாள்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்
என்பதன் பொருள்: அதற்குரிய நற்கூலியை வழங்கமாட்டானே தவிர, நீ ஏன் நாற்பது நாள்கள் தொழவில்லை
என அல்லாஹ் அவனிடம் மறுமையில் விசாரிக்கமாட்டான்.
தண்டனை
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மது அருந்திய ஒரு மனிதர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால்
ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-3512
மது அருந்துதல் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒரு குற்றமாகும்
என்பது ஒருமித்த கருத்தாகும். போதை தரும் பொருளை சிறிதளவு அதிக அளவு பயன்படுத்துவது
குற்றம் ஆகும். இது தண்டனைக்குரிய (கிரிமினல்) குற்றமாகும். இந்தக் குற்றத்திற்கு மரண
தண்டனை கிடையாது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களது காலத்தில், ஆரம்பத்தில் குடிக்கு
ஒரு குறிப்பிட்ட தண்டனை இருக்கவில்லை. பேரீச்ச மட்டை, செருப்பு, துணி போன்ற பொருட்களால்
குடிகாரனை அடிப்பர். பின்னர் அண்ணலார் நாற்பது முறை பேரீச்ச மட்டையால் அடிக்குமாறு
உத்தரவிட்டார்கள். ஜனாதிபதி அபூபக்கர் (ரலி) அவர்களது ஆட்சி காலத்திலும் இது தொடர்ந்தது.
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் குடிப்பழக்கம் அதிகரித்த போது அவர்கள்
கலந்தாலோசனை செய்து எண்பது சாட்டையடிகளாக உயர்த்தினார்கள். நூல்:- முஸ்லிம்-3513, அல்மின்ஹாஜ்
சிலர் துணிச்சலாக மது அருந்தினர். இந்நிலையை மாற்றி அமைக்கவே, அதற்கு அதிக தண்டனை வழங்குவதுதான் உகந்தது என்று கருதியதால்
எண்பது சாட்டையடி என்று சட்டம் மாற்றப்பட்டது.
நபிமொழிகளைப் பாதுகாத்தவர்
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் தமது "கிதாபுல் அர்பயீனன் நவவிய்யா"
எனும் நபிமொழி நூலின் முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்கள்.
அலீ பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊது
(ரலி), முஆது பின் ஜபல் (ரலி), அபுத்தர்தா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), அப்துல்லாஹ் பின் அப்பாஸ்
(ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோரின் அறிவிப்புடன் பின்வரும் நபிமொழி நமக்குக் கிடைத்துள்ளது.
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا
مِنْ أَمْرِ دِينِهَا، بَعَثَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ فِي زُمْرَةِ الْفُقَهَاءِ
وَالْعُلَمَاءِ ) என்னுடைய
சமுதாயத்தினருக்காக மார்க்கம் சம்பந்தப்பட்ட நாற்பது நபிமொழிகளை எவர் மனனம் செய்து பாதுகாத்து வைக்கின்றாரோ அவரை அல்லாஹ் மறுமைநாளில் மார்க்க அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோர்களின் கூட்டத்தில் எழச்
செய்வான்.
மற்றொரு அறிவிப்பில், ( وَكُنْتُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا وَشَهِيدًا
) ''மறுமைநாளில் நான் அவருக்கு பரிந்துரைப்பவராகவும்,
நற்சான்று கூறுபவராகவும் இருப்பேன்" என்று
வருகிறது.
அபுத்தர்தா (ரலி) அவர்கள் அவர்களின் அறிவிப்பில் ''இறுதித் தீர்ப்பு நாளில் நான் அவருக்கு (நாற்பது
நபிமொழிகளை மனனம் செய்து ஏனையோருக்கு தெரிவிப்பவர்) ''மறுமைநாளில் நான் அவருக்கு பரிந்துரைப்பவராகவும், நற்சான்று கூறுபவராகவும் இருப்பேன்" என்றும்,
அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரலி) அவர்களின் அறிவிப்பில்,
"நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து எனது சமுதாயத்தினருக்காக
சேகரித்து வைப்பவர்களிடம், 'சொர்க்கத்தில் நீங்கள்
விரும்பும் வாசல் வழியே நுழையுங்கள் என்றும் சொல்லப்படும்" என்றும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் அறிவிப்பில்,
''அவர் (நாற்பது நபிமொழிகளை மக்களுக்கு சேகரித்து
வைப்பவர்) மார்க்க அறிஞர்கள் கூட்டத்தில் குறித்து வைக்கப்படுவார். மேலும்,
அவர் இறைவனின் பாதையில் உயிர்நீத்த தியாகிகளின்
வரிசையில் எழுப்பப்படுவார்" என்றும் வருகிறது.
இந்த நபிமொழி, பல அறிவிப்புக்கள் மூலம்
வந்திருந்தாலும் இந்த நபிமொழி பலவீனமான நபிமொழிகளின்
பட்டியலில் இடம் பெறுவதாக மார்க்க அறிஞர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர்.
நல்லவற்றை செய்வதற்காக பலவீனமான நபிமொழியை செயல்படுத்துவதும்
அனுமதிக்கப்பட்டதே என்று மார்க்க அறிஞர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
மார்க்கக்கல்வியை கற்றுத்தேர்ந்த அறிஞர்கள் பல்லாயிரம் இருக்கிறார்கள்.
அவர்கள், சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான நபிமொழி நூல்களை
இயற்றியுள்ளனர். "நபிமொழிகளை பாதுகாத்தல்" என்பது அவற்றை மனனம் செய்துக்கொள்வது,
அல்லது எழுதி வைத்துக்கொள்வது ஆகிய இரண்டையும் குறிக்கும்.
இவற்றை மேற்கண்டவாறு பாதுகாத்து, அவற்றின்படி செயலாற்றி,
பிறரிடமும் உபதேசம் செய்ய வேண்டும் என்பது இந்த
நபிமொழியின் கருத்தாகும். அவ்வாறு செய்தால்தான், அவர் மேற்காணும் நபிமொழி கூறிய சோபனத்திற்கு உரியவர் ஆவார்.
பிரேதத் தொழுகை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ فَيَقُومُ
عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلاً لاَ يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا إِلاَّ
شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ ) ஒரு முஸ்லிம் இறந்தவுடன் அல்லாஹ்விற்கு எதையும்
இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காக (பிரேதத் தொழுகை) தொழுதால் அவர்களின் பரிந்துரையை
அல்லாஹ் ஏற்காமல் இருப்பதில்லை. அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்
நூல்:- முஸ்லிம்-1730
(ஜனாஸா தொழுகை எனும்) பிரேதத் தொழுகையின் நோக்கம் என்னவெனில் இறந்தவரின் நல்வாழ்வுக்காக
இறைவனிடம் பிரார்த்திப்பதாகும். நாற்பது பேர் என்பது ஓரளவு
நிறைவான கூட்டம். ஒருவரது பிரேதத் தொழுகையில் சுமார் நாற்பது பேர் கலந்து கொள்வது அவர்
ஒரு இறைநம்பிக்கையாளர் என்பதற்கு அவர்கள் சாட்சியம் அளிப்பதை போன்று உள்ளது. அத்துடன்
அவர்களெல்லாம் அவருக்காக இறைவனிடம் பரிந்துரை செய்கின்றனர். ஆகவே, அவர்களின் பரிந்துரையை இறைவன் ஏற்றுக்கொள்வான்.
தஜ்ஜாலின் நாள்கள்
நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
நாங்கள், ( يَا رَسُولَ اللَّهِ وَمَا لَبْثُهُ فِي الأَرْضِ ) "நாயகமே! அவன் பூமியில் எத்தனை நாள்கள் தங்கியிருப்பான்?" என்று கேட்டோம். அதற்கு
நபியவர்கள், ( أَرْبَعُونَ يَوْمًا يَوْمٌ كَسَنَةٍ وَيَوْمٌ كَشَهْرٍ وَيَوْمٌ كَجُمُعَةٍ وَسَائِرُ
أَيَّامِهِ كَأَيَّامِكُمْ )
"நாற்பது நாள்கள் (என்று கூறிவிட்டு), அன்றைய ஒரு
நாள் ஓர் ஆண்டைப் போன்றும், மறுநாள் ஒரு மாதத்தைப்
போன்றும், அதற்கு அடுத்த நாள்
ஒரு வாரத்தைப் போன்றும், மற்ற நாள்கள் உங்களின்
(சாதாரண) நாள்களைப் போன்றும் இருக்கும்" என்று குறிப்பிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-5629
ஈசா (அலை) அவர்கள் வாழ்நாள்
நபிகள் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். உலக அழிவுக்கு முன்னர் வானத்திலிருந்து இறைத்தூதர் ஈசா
(அலை) அவர்கள் இறங்கி வரவிருக்கிறார். அவரது காலத்தில் மசீஹுத் தஜ்ஜாலை அல்லாஹ் அழிப்பான்.
( ثُمَّ
تَقَعُ الْأَمَنَةُ عَلَى الْأَرْضِ، حَتَّى تَرْتَعَ الْأُسُوَدُ مَعَ الْإِبِلِ،
وَالنِّمَارُ مَعَ الْبَقَرِ، وَالذِّئَابُ مَعَ الْغَنَمِ، وَيَلْعَبَ الصِّبْيَانُ
بِالْحَيَّاتِ لَا تَضُرُّهُمْ، فَيَمْكُثُ أَرْبَعِينَ سَنَةً، ثُمَّ يُتَوَفى وَيُصَلِّي
عَلَيْهِ الْمُسْلِمُونَ ) பின்னர் பூமியெங்கும் அமைதி நிலவும். எந்த அளவுக்கெனில்
சிங்கங்களும் - ஒட்டகங்களும், சிறுத்தைகளும் - பசுக்களும், ஓநாய்களும் - ஆடுகளும் ஒன்றாக மேய்ந்து திரியும்.
சிறுவர்கள் பாம்புகளை வைத்து விளையாடுவார்கள். அவை அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யாது.
இப்படியே நாற்பது ஆண்டுகள் ஈசா (அலை) அவர்கள் தங்கியிருப்பார்கள். பின்னர் இறந்துபோவார்கள்.
அவர்களுக்கான இறுதி (ஜனாஸா)த் தொழுகையில் முஸ்லிம்கள் பங்கேற்பர். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா
(ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அந்நிசா வசனம-159
இறுதி காலத்தில்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ وَيُرَى الرَّجُلُ
الْوَاحِدُ يَتْبَعُهُ أَرْبَعُونَ امْرَأَةً، يَلُذْنَ بِهِ مِنْ قِلَّةِ الرِّجَالِ
وَكَثْرَةِ النِّسَاءِ ) மக்களுக்கு
ஒரு காலம் வரும். (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்துவிடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்து
வந்து, அவனைச் சார்ந்திருக்கும்
நிலை காணப்படும். அறிவிப்பாளர்:- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-1414, முஸ்லிம்-1838
இவ்வாறு ஒரு ஆணை நம்பி அவனிடம் தமது பராமரிப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் அபயம்
தேடும் பெண்கள் அவனுடைய மனைவி மக்களாகவும் இருக்கலாம்; இரத்த உறவுடைய மாமி, சித்தி, உடன் பிறந்த சகோதரி, ஒன்றுவிட்ட சகோதரி போன்றவர்களாகவும்
இருக்கலாம்; அவனுடைய மற்ற உறவுக்காரப் பெண்களாகவும் இருக்கலாம்; பணிப்பெண்களாகவும் இருக்கலாம். நூல்:- உம்தத்துல் காரீ
தொழுபவருக்கு குறுக்கே நடக்கலாகாது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَىِ الْمُصَلِّي
مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ
يَدَيْهِ ) தொழுது கொண்டிருப்பவருக்குக்
குறுக்கே செல்பவர் அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால்
அவருக்கு முன்னால் கடந்துசெல்வதைவிட நாற்பது (நாள்கள்/மாதங்கள்/வருடங்கள் அப்படியே
காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள்
கூறுகின்றார்கள்:
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாள்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது மாதங்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது வருடங்களில் நாற்பது என்று சொன்னார்களா? என்று எனக்குத்
தெரியவில்லை. அறிவிப்பாளர்:- புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நூல்:-புகாரீ-510, முஸ்லிம்-878
தொழுபவருக்கு குறுக்கே நடப்பது, தொழுபவரின் கவனத்தைத்
திசை திருப்பி, தொழுகையில் அவருக்குள்ள ஈடுபாட்டை குலைத்துவிடும்.
இது பாவமான செயலாகும். அதனால் ஏற்படும் பாவத்தின் கடுமையை உணர்ந்தால், அவ்வாறு யாரும் குறுக்கே செல்ல மாட்டார்கள். நாற்பது ஆண்டுகளானாலும்
நின்று பொறுமை காத்து, அவர் தொழுது முடித்த பிறகு அந்த இடத்தை கடப்பார்கள்.
அது நாற்பது ஆண்டுகளா, நாற்பது மாதங்களா, நாற்பது நாள்களா என்பது முக்கியமல்ல. அதனால் ஏற்படும் பாவத்தின்
உச்சத்தை உணர்த்துவதே இங்கு நோக்கமாகும். எனவே, தொழுதுகொண்டிருப்பதற்கு
முன்னால் குறுக்கே நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தொழுபவருக்கு முன்னால் எவ்வளவு தூரத்தில் நடக்கக்கூடாது என்பது தொடர்பாக பல்வேறு
தகவல்கள் காணப்படுகின்றன. தொழுபவர் சஜ்தா செய்யும் இடத்திற்குள் செல்வது கூடாது என்று
சிலரும், தொழுபவருக்கு முன்னால் மூன்று முழங்கள் வரையிலான
இடத்தில் செல்வது கூடாது என்றும் சிலரும் கூறுகின்றனர். நூல்:- ஃபத்ஹுல் பாரீ
ஏழை முஸ்லிம்கள்
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( يَدْخُلُ فُقَرَاءُ الْمُسْلِمِينَ الْجَنَّةَ قَبْلَ
أَغْنِيَائِهِمْ بِأَرْبَعِينَ خَرِيفًا ) ஏழை
முஸ்லிம்கள் தம்மிலுள்ள செல்வந்தர்களுக்கு நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்திற்குள்
நுழைந்து விடுவார்கள். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:-
திர்மிதீ-2278
செல்வந்தர்கள் தங்களின் செல்வத்திற்கான கணக்கு வழக்குகளை முடித்துக்கொண்டு சொர்க்கம்
செல்வதற்கு தாமதம் ஏற்படலாம். அத்துடன் அவர்கள் உலகிலும் வசதியான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
ஆனால், ஏழைகளுக்கு அத்தகைய விசாரணை இருக்க வாய்ப்பில்லை.
அவர்களிடம் செல்வம் இல்லாததே காரணம். அதனால் விரைவாகவே சொர்க்கம் சென்று உலகில் அனுபவிக்காத
வசதிகளை சொர்க்கத்தில் அனுபவிப்பார்கள். இதுதான் இறைவனின் நீதியாகும்.
சுத்தம் பேணவேண்டும்
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ( وُقِّتَ لَنَا فِي قَصِّ الشَّارِبِ وَتَقْلِيمِ
الأَظْفَارِ وَنَتْفِ الإِبْطِ وَحَلْقِ الْعَانَةِ أَنْ لاَ نَتْرُكَ أَكْثَرَ مِنْ
أَرْبَعِينَ لَيْلَةً ) மீசையைக் கத்தரிப்பது,
நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது, மர்ம உறுப்பின் முடிகளை மழிப்பது ஆகியவற்றில் நாற்பது நாள்களுக்கு
மேல் விட்டு வைக்கக்கூடாதென எங்களுக்கு கால வரம்பு விதிக்கப்பட்டிருந்தது. நூல்:- முஸ்லிம்-431
மீசை, நகம், அக்குள் முடி, மர்ம உறுப்பை சுற்றியுள்ள முடி ஆகியவற்றை நாற்பது நாள்களுக்குள்
மிகாமல் அகற்றிவிட வேண்டும். அதாவது நாற்பது நாள்களுக்குள் அகற்றிவிட வேண்டும். அதற்கு
மேல் வளரவிடக் கூடாது என்பதுதான் இந்த நபிமொழியின் கருத்தாகும். நாற்பது நாளுக்கு ஒருமுறை
அகற்றுவதையே வழக்கமாக்கிக் கொள்வது என்று இதற்குப் பொருள் அல்ல. நீளமாக வளரவிடாமல்
அவ்வபோது அவற்றை அகற்றி விடுவதே சிறந்த முறையாகும்.
அல்லாஹுத்தஆலா நம்மை, இஸ்லாம் கூறுகின்ற அறிவுரைகளை ஏற்று செயல்படும்
நல்லொழுக்கமுள்ள முஸ்லிம்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்:
நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு உஸ்தாத். வித்தியாசமான தலைப்பில் வித்தியாசமான கோணத்தில் இந்த ஆக்கத்தை வழங்கியுள்ளீர்கள். جزاكم الله خير الجزاء يا استاذ الكريم 💖🎉
ReplyDelete