Search This Blog

Sunday, 29 September 2024

முற்றிலும் விரித்துவிடாதீர்

 

முற்றிலும் விரித்துவிடாதீர்

 

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَى عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ الْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَحْسُورًا

(நபியே! உமது பொருள்களில் ஒன்றையுமே செலவு செய்யாது) உமது கையைக் கழுத்தில் மாட்டிக்கொள்ளாதீர்கள்! மேலும் (உம்மிடம் இருப்பதை எல்லாம் கொடுத்து) உம்முடைய கையை முற்றிலும் விரித்தும் விடாதீர்! (அவ்வாறு செய்தால்) தூற்றப்பட்டவராகவும் முடக்கப்பட்டவராகவும் நீர் அமர்ந்துவிடுவீர். திருக்குர்ஆன்:- 17:29

 

யாருக்கும் ஒன்றும் தரமாட்டேன் என்று கையை இறுக மூடிக்கொள்ளவும் கூடாது. அப்படிச் செய்தால், மக்களின் தூற்றலுக்கு ஆளாக நேரும். இருக்கிறதே என்பதற்காக எல்லாவற்றையும் வாரி இறைத்துவிடவும் கூடாது. அப்படி செய்தால் தனக்கே ஒன்றும் இல்லாமல் முடங்க வேண்டியதுதான்.

 

இவ்வாறு, தர்மம் செய்வதன் சரியான முறையை தலைப்பில் காணும் திருவசனம் எடுத்துரைக்கிறது.

 

இந்த இறைவசனம் தர்மம் செய்வதற்கான அளவுகோலை மட்டும் குறிப்பிடவில்லை.  நம்முடைய வாழ்க்கையில் தொழுகை, நோன்பு போன்ற இறைவழிபாட்டிற்காக முழுமையாக நேரம் ஒதுக்கிவிட்டு, உலகத்திற்காக நேரம் ஒதுக்காமல் (அதாவது, சம்பாதிக்கச் செல்லாமல்) இருப்பதும் தவறு. உலகத்திற்காக (அதாவது, பணம் சம்பாதிப்பதிலும் சொத்து சுகங்கள் சேர்த்து குவிப்பதிலும் கவனம் செலுத்திவிட்டு, இறைவழிபாட்டிற்கு நேரம் ஒதுக்காமல்) மறுமையை முற்றிலும் தவிர்ப்பதும் தவறு. மேலும், மனைவி மக்களுக்காக பெற்றோரை தவிர்ப்பதும் அல்லது பெற்றோருக்காக மனைவி மக்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதும் தவறு என்ற கருத்தையும் சுட்டிக் காட்டுகிறது.

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ خَيْرَ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنًى أَوْ تُصُدِّقَ بِهِ عَنْ ظَهْرِ غِنًى وَابْدَأْ بِمَنْ تَعُولُ  ) தர்மம் செய்த பின்பும் தன்னிறைவு பெற்றவனாக, அல்லது தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவைபோக எஞ்சியதை) தர்மம் செய்வதே சிறந்ததாகும். உமது வீட்டாரிடமிருந்தே (உமது தர்மத்தை) தொடங்குவீராக அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-1426 அபூதாவூத்-1427, நசாயீ-2487, தாரிமீ-1592 முஸ்னது அஹ்மத்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا عَالَ مَنِ اقْتَصَدَ ) நடுநிலையுடன் செலவிடுபவர் வரியவராகமாட்டார். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் பனீ இஸ்ராயீல் வசனம்-29

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ لِكُلِّ شَيْءٍ شِرَّةً وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةً فَإِنْ كَانَ صَاحِبُهَا سَدَّدَ وَقَارَبَ فَارْجُوهُ ) நிச்சயமாக ஒவ்வொன்றுக்கும் ஒரு வேகம் உண்டு; ஒவ்வொரு வேகத்திற்கும் ஒரு தேக்கம் உண்டு. எனவே, வேகமுடையவர் சீராகவும் நடுநிலையோடும் நடந்துகொண்டால், அவருக்கு நான் (வெற்றியை) எதிர்பார்க்கிறேன். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2377

 

வாரிசுகளுக்கு

 

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான், "நாயகமே! என் செல்வம் முழுவதையும் நான் (அறக்காரியங்களுக்காக) இறுதி விருப்பம் தெரிவித்துவிடட்டுமா?" என்று கேட்டேன். பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், 'வேண்டாம்' என்று கூறிவிட்டு, ( إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ ) "நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவுடையவர்களாக விட்டுச்செல்வது அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட நல்லதாகும்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2742, முஸ்லிம்-3349, திர்மிதீ-897, நசாயீ-3567

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ ‏ ) (நீங்கள் இறந்த பின்) உங்கள் செல்வங்கள் உங்களுக்கு பின்னால் உங்கள் குடும்பத்தாருக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தினான். (அவ்வாறானால், உங்கள் செல்வத்தை நீங்கள் சேமித்து வைப்பது குற்றமில்லை) என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-1417

 

ஒரு குடும்பத்தலைவன் தம்முடைய சொத்தில் இருந்து ஒரு பகுதியை தமது மண்ணறை வாழ்க்கைக்காக அறக்கொடை வழங்கலாம். ஆனால்,  அதிலிருந்து கொஞ்சமாவது தமது வாரிசுகளுக்கு விட்டுச்செல்லவேண்டும்.  அதற்காக கொஞ்சம் சேமித்து வைப்பது தவறல்ல. அவ்வாறு சேமித்து வைப்பதன் மூலமாக தான் இஸ்லாம் கூறும் வாரிசுரிமை சட்டத்தை நிலைநாட்ட முடியும்.

 

கொஞ்சமாக இருந்தால்  

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நாங்கள் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது ஒருவர் முட்டை அளவு தங்கத்தைக் கொண்டு வந்து, "நாயகமே! சுரங்கத்திலிருந்து இதை நான் எடுத்தேன். எனவே, நீங்கள் இதில் வாங்கிக்கொள்ளுங்கள். இது தர்மமாகும். இதைத்தவிர வேறுபொருள் என்னிடம் எதுவும் இல்லை" என்று சொன்னார். அப்போது நபியவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.

 

அப்போது அவர் நபியவர்களின் வலப்பக்கம் வந்து முன்பு சொன்னது போன்றே சொன்னார். அப்போதும் நபியவர்கள் முகத்தை திருப்பிக்கொண்டார்கள். மீண்டும் அவர் நபியவர்களின் இடப்பக்கம் வந்தார். அப்போதும் நபியவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டார்கள் மீண்டும் அவர் நபியவர்களின் பின் பக்கமாக வந்தார். அப்போது நபியவர்கள் அந்தத் தங்கத்தை வாங்கி தூக்கி எறிந்தார்கள். அப்போது அது அவர்மீது பட்டிருந்தால் அவருக்கு வலியை ஏற்படுத்தி இருக்கும்; அல்லது காயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

 

பிறகு நபியவர்கள், ( يَأْتِي أَحَدُكُمْ بِمَا يَمْلِكُ فَيَقُولُ هَذِهِ صَدَقَةٌ ثُمَّ يَقْعُدُ يَسْتَكِفُّ النَّاسَ خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى ) "உங்களில் ஒருவர் நம்மிடம் உள்ள முழு செல்வத்தையும் கொண்டு வந்து இது தர்மம் என்கிறார். பிறகு அவர் மக்களிடம் யாசிப்பார். தர்மத்தில் சிறந்தது, தர்மம் செய்த பின்பும் (யாரிடமும் யாசிக்காமல்) தேவையற்றவராக இருப்பதுதான்" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1425, தாரிமீ-1600, இப்னுகுஸைமா-2441, ஹாகிம்

 

உம்மிடமிருந்து தொடங்குவீராக!

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. பனூ உத்ரா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் தான் இறந்த பிறகு தம்முடைய அடிமை ஒருவர் விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று (பின் தேதியிட்டு விடுதலை) அறிவித்திருந்தார். இந்த விஷயம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (அவரிடம்), ( أَلَكَ مَالٌ غَيْرُهُ ) “அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் உன்னிடம் இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார்.

 

அப்போது நபியவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), "இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?" என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்துல்லாஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் அந்த அடிமையை எண்ணூறு வெள்ளிக்காசுகளுக்கு வாங்கிக்கொண்டார். நுஐம் (ரலி) அவர்கள் அந்தக் காசுகளை நபியவர்களிடம் கொண்டுவர, நபியவர்கள் அந்த அடிமையின் உரிமையாளரிடம் அவற்றை கொடுத்து, ( ابْدَأْ بِنَفْسِكَ فَتَصَدَّقْ عَلَيْهَا فَإِنْ فَضَلَ شَىْءٌ فَلأَهْلِكَ فَإِنْ فَضَلَ عَنْ أَهْلِكَ شَىْءٌ فَلِذِي قَرَابَتِكَ فَإِنْ فَضَلَ عَنْ ذِي قَرَابَتِكَ شَىْءٌ فَهَكَذَا وَهَكَذَا ‏"‏ ‏.‏ يَقُولُ فَبَيْنَ يَدَيْكَ وَعَنْ يَمِينِكَ وَعَنْ شِمَالِكَ ) "உமது தர்மத்தை முதலில் உம்மிடமிருந்து தொடங்குவீராக! பிறகு உமது தேவைபோக ஏதேனும் மிஞ்சினால் அது உன்னுடைய குடும்பத்தாருக்கு உரியதாகும். உன் வீட்டிற்கு வழங்கியது போக ஏதேனும் மிஞ்சினால், அது உறவினர்களுக்கு உரியதாகும். உன் உறவினர்களுக்கு வழங்கியது போக ஏதேனும் எஞ்சினால், அது இவ்வாறு இவ்வாறு உமக்கு முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் (அறவழிகளின் அனைத்து முனைகளிலும் செலவு செய்வீராக!)" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-1820, அபூதாவூத்-3446, நசாயீ-2499

 

குலுக்குச்சீட்டுப் போடலாம்  

 

இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருவர் தமது மரணத்தருவாயில் தமக்குச் சொந்தமான ஆறு அடிமைகளை விடுதலை செய்துவிட்டார். அந்த அடிமைகளைத் தவிர வேறு செல்வங்கள் எதுவும் அவரிடம் இருக்கவில்லை. இச்செய்தி பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவரைக் கடுமையாக கண்டித்தார்கள். பிறகு அந்த அடிமைகளை அழைத்து அவர்களை (இரண்டு, இரண்டு அடிமைகளாக) மூன்று பிரிவாகப் பிரித்தார்கள். பிறகு அவர்களிடையே சீட்டுக் குலுக்கிப்போட்டு, அவர்களில் இருவருக்கு மட்டுமே விடுதலையளித்தார்கள். நால்வரை அடிமைகளாகவே நீடிக்கச் செய்தார்கள். நூல்:- அபூதாவூத்-3447, திர்மிதீ-1284, இப்னுமாஜா-2236, முஸ்னது அஹ்மத்

 

அன்றைக்கு அடிமைகள் என்பது மிகப்பெரிய சொத்தாக கருதப்பட்டது. தம்முடைய அடிமைகளைத் தவிர வேறு செல்வம் எதுவும் பெற்றிராத ஒருவர் தமது மரணத்தருவாயில் அந்த அடிமைகளுக்கு விடுதலை வழங்க விரும்பினால் சட்டப்படி அவர்களின் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே விடுதலை தர முடியும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகிறது.  வாரிசுதாரர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை இதற்குக் காரணமாகும். அன்பளிப்பு உள்ளிட்ட உதவிகளுக்கும் இது பொருந்தும் தானதர்மத்திற்கும் இதுவே சட்டமாகும்.

 

இந்த நிகழ்வில் விடுதலை வழங்கப்பட்ட ஒவ்வொருவரும் விடுதலைக்கான தமது வாய்ப்பை இழக்க விரும்பவில்லை. மூன்றில் ஒரு பாகத்தினருக்கு மட்டுமே விடுதலை கிடைக்கமுடியும். அவர்களில் யாரைத் தேர்வு செய்வது? யாரை விடுவது? இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண நபியவர்கள் குலுக்கல் முறையை தேர்ந்தெடுத்தார்கள். ஆறு பேரை மூன்று பாகத்தினராகப் பிரித்து அவர்களில் ஒரு பாகத்தினரை அதாவது, இருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவர்களின் விடுதலைக்கு ஏற்பளித்தார்கள். மற்ற நால்வரின் விடுதலையை ரத்து செய்தார்கள்.

 

ஒரு திரண்ட சொத்துக்காரருக்கு தமது சொத்தில் எதை பொது நிறுவனங்களுக்கு அறக்கொடையாக வழங்குவது என்று குழப்பம் வரும்போது அவற்றை குலுக்குச்சீட்டுப்போட்டு பார்த்து அதற்குத் தோதுவாக செயல்படலாம்.

 

ஒரு தந்தை தனது பிள்ளைகளை வெறுத்த நிலையில் தமது சொத்துக்கள் அனைத்தையும் பள்ளிவாசல், மதரசா போன்ற பொதுநிறுவனத்திற்கு உயில் எழுதிக் கொடுப்பது இஸ்லாமியச் சட்டப்படி செல்லாது.

 

அப்படியே அவர் கொடுப்பதாக இருந்தாலும் அந்தச் சொத்தில் இருந்து மூன்றில் ஒரு பாகத்தை தான் அவர் விருப்பப்படி கொடுக்க முடியுமே தவிர, அனைத்தையும் கொடுக்க இயலாது.

 

தேவையுடையவராக இருக்கும்போது  

 

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. வெள்ளிக்கிழமையன்று பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்க, ஒருவர் பள்ளிவாசலில் நுழைந்தார். (அவர் பள்ளி காணிக்கை தொழுகை தொழாமல் அமர்ந்துவிட்டார்.) அப்போது நபியவர்கள், "(அவரிடம்) இரண்டு ரக்அத் தொழுவீராக!" என்று கூறினார்கள்

 

பிறகு (நபியவர்கள் தம் உரையில் அவருக்கு) ( تَصَدَّقُوا ) "தர்மம் செய்யுங்கள்" என்று கூற, மக்கள் (தங்களிடம் கூடுதலாக இருந்த ஆடைகளை) தர்மம் செய்தனர். (அவற்றிலிருந்து) இரண்டு ஆடைகளை அவருக்கு நபியவர்கள் வழங்கினார்கள். பின்னர் நபியவர்கள் (அடுத்த ஜும்ஆவிலும்) "தர்மம் செய்யுங்கள்" என்று (தம் உரையில்) கூறினார்கள். (அடுத்த ஜும்ஆவிலும் கலந்து கொண்ட) அம்மனிதர் தம் இரு ஆடைகளுள் ஒன்றைக் கழற்றி (தர்மமாகப்) போட்டார். இதைக்கண்ட நபியவர்கள், அவரை கண்டித்து ( خُذْ ثَوْبَكَ ) "(நீர் போட்ட) உமது ஆடையை எடுத்துக்கொள்வீராக!" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-1426, திர்மிதீ-469, நசாயீ-2489, முஸ்னது அஹ்மத்

 

அவர் தர்மமாக வழங்கிய ஆடையை அவரே பெற்றுக்கொள்ளும்படிக் கூறி நபியவர்கள் அவரைக் கண்டித்துள்ளார்கள். காரணம், அவர் தேவையுடையவராக இருக்கும் நிலையில் தற்போது தர்மம் வழங்கிவிட்டு மீண்டும் யாசிக்கக்கூடும் என்று நபியவர்கள் எண்ணியிருக்கலாம். தேவையுடையவராக இருக்கும் நிலையில் எவரும் தர்மம் செய்ய வேண்டியதில்லை; அது தவறுமில்லை. மக்கள் நம்மை கஞ்சன் என்று சொல்லிவிடக் கூடாது என்று எண்ணியவாறு வழங்குவதும் தவறு. தனக்குப்போக மிஞ்சியதே தர்மம் என்கிறது இந்த நபிமொழி.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( طُوبَى لِمَنْ عَمِلَ بِعِلْمٍ وَأَنْفَقَ الْفَضْلَ مِنْ مَالِهِ، وَأَمْسَكَ الْفَضْلَ مِنْ قَوْلِهِ ) (கற்ற) ஞானத்தை கொண்டு செயல்படுபவனுக்கும், மேல் மிச்சமானதை (நற்காரியங்களுக்கு) செலவழிப்பவனுக்கும், அதிகமாக பேசுவதைவிட்டும் தவிர்ந்து கொள்பவனுக்கும் சோபனம் உண்டாகட்டும். நூல்:- தப்ரானீ

 

உமக்கு நல்லது

 

அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள்; கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அ(வர்களின் தானமான)து அதற்கிடையே நடுநிலையானதாக இருக்கும். திருக்குர்ஆன்:- 25:67

 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம், ( يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ) "நாயகமே! நான் செய்த தவறு மன்னிக்கப்பட்டதற்காக எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டு கொள்வதற்காக) தர்மமாக ஒப்படைத்துவிடுகிறேன்" என்று கூறினேன். அதற்கு நபியவர்கள், ( أَمْسِكْ عَلَيْكَ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ ) "உமது செல்வத்தில் சிறிதளவை உமக்காக நீர் வைத்துக்கொள்ளும். அதுவே உமக்கு நல்லது" என்றார்கள். அதற்கு நான், "கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்" என்று கூறினேன். நூல்:- புகாரீ- 4418, முஸ்லிம்-5346, நசாயீ-3763

 

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் தமக்கு அனைத்து வசதிகளும் இருந்தும்கூட தபூக் போருக்கு செல்லாமல் பொடுபோக்காக இருந்துவிட்டார். பிறகு அவர், தாம் செய்த தவறை எண்ணி மிகவும் வருத்தப்பட்டு கண்ணீர்விட்டு பாவமன்னிப்புக் கோரினார். அதைத்தான் (இந்த நபிமொழியில்) தாம் செய்துவிட்ட தவறு சொல்கிறார்.

 

சில நிபந்தனைகள்

 

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அண்ணல் நபி (ஸல்)அவர்கள் (தபூக் செல்வதற்கு முன்பு ஒருநாள் நிதி திரட்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அப்போது என்னிடம் செல்வம் அதிகமாக இருந்தது. எனவே,  என்னுடைய செல்வத்தில் பாதியை நபியவர்களிடம் கொண்டு வந்தேன்.

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் தங்களிடம் இருந்த அனைத்து பொருள்களையும் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது நபியவர்கள், ( يا أبا بَكرٍ مَا أَبْقَيْتَ لأَهْلِكَ )  "அபூபக்ரே! உம்முடைய குடும்பத்தாருக்கு எதை விட்டு விட்டு வந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், ( أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ ) “அவர்களுக்கு அல்லாஹ்வையும், அவருடைய தூதரையும் (அதாவது அவ்விருவரின் திருப்தியையும்) விட்டு வந்தேன்" என்று கூறினார்கள்.   நூல்:- அபூதாவூத்-1429 திர்மிதீ-3598, தாரிமீ-1601, ஹாகிம்

 

சொத்து முழுவதையும் தர்மம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென்றால் அதற்காகச் சில நிபந்தனைகளை இஸ்லாமியச் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். தர்மம் செய்பவர் ஆரோக்கியமானவராகவும், சம்பாதிக்கும் ஆற்றல் மிக்கவராகவும், பொறுமைசாலியாகவும், கடன்சுமை இல்லாதவராகவும் இருக்கவேண்டும். மேலும் அவருடைய செலவில் கீழ் வாழ்பவர்கள் என்று எவரும் இல்லாமல் இருக்கவேண்டும். இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் ஒருவர் தம்முடைய முழு சொத்தையும் தர்மம் செய்வது (மக்ரூஹ் எனும்) வெறுக்கத்தக்க செயலாகும். இது கைவிடப்பட வேண்டிய செயலே ஆகும்.

 

ஆகவே நாம், இஸ்லாம் கூறும் வரைமுறைகளைப் பேணி வாழ, அல்லாஹ் அருள்புரிவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...