ஏற்றம் பெறும் ஏழைகள்
اللَّهُ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ
مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
அல்லாஹ் தன்னுடைய
அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் நாடியவர்களுக்குக்)
குறைத்தும் விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் (மனிதர்களின் தகுதி) அனைத்தையும் நன்கறிந்தவனாக
இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 29:62
மனிதன் எதிர்கொள்ள
விரும்பாத விஷயங்களில் ஏழ்மையும் உள்ளடங்கும். எனவே, வறுமையைப் பொறுமையுடன் சகித்துக்கொண்டு நல்லெண்ணத்தோடு வாழும்
முஸ்லிம் மிகப்பெரிய நற்கூலியை மறுமைநாளில் பெறுவார். இறையச்சத்தின் அடிப்படையில் இறைகடமைகளை
நிறைவேற்றி நல்லொழுக்கம் பேணி வாழும் ஏழைகளை இஸ்லாம் சிலாகித்து கூறுகிறது.
சிலர் முறையாக உழைத்து
முன்னேற வழித்தெரியாமல் வாழ்க்கையில் சிரமப்படுவார்கள். அவர்கள் பொருளாதார ரீதியாக
வளம் காணமுடியாமல் இருப்பார்கள். காரணம், அல்லாஹ் அவர்களுக்கு அவ்வளவுதான் நாடியுள்ளான்.
மேலும், சிலர் முறையாக உழைக்க முடியாத சூழ்நிலையில் போதிய வருமானமின்றி ஏழைகளாக வாழ்வார்கள்.
இஸ்லாமியப் பார்வையில் இவர்கள்தான் உண்மையான ஏழைகள் ஆவர். இது போன்றவர்களுக்கு அவசியம்
உதவ வேண்டும்.
ஏழ்மையில் பொறுமை
காத்து, தமது சொல்லாலோ செயலாலோ இறைவனை கோபப்படுத்திவிடாமலும்
மக்களிடம் கையேந்தாமலும் இயன்றவரை உழைத்து வாழக்கூடிய ஏழைகள் உயர்ந்தவர்கள். இத்தகைய
ஏழைகள் தான் சிறந்தவர்கள்.
சிலர் கடுமையாக உழைத்தால்
வளம் காணும் நிலையில் இருப்பார்கள். இருந்தாலும்கூட அவர்கள் சோம்பேறித்தனத்தின் காரணமாக
உழைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து ஏழைகளாக வாழ்வார்கள். இஸ்லாமியப் பார்வையில் இவர்களின்
நிலைப்பாடு தவறானது.
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( إِنَّ اللَّهَ يُحِبُّ عَبْدَهُ الْمُؤْمِنَ الْفَقِيرَ الْمُتَعَفِّفَ
أَبَا الْعِيَالِ ) ஏழையாகவும்
பிறரிடம் கையேந்தாதவராகவும் பிள்ளை குட்டிகரராகவும் இருக்கும் இறைநம்பிக்கையாளரான தனது
அடியாரை அல்லாஹ் நேசிக்கிறான். அறிவிப்பாளர்:-
இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-4111 தப்ரானீ, ஷுஅபுல் ஈமான் லில்பைஹகீ
அல்லாஹ்வே அறிந்தவன்
உயர்ந்தோன் அல்லாஹ்
கூறியதாக பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ مِنْ عِبَادِي مَنْ لَا يُصْلِحُهُ
إِلَّا الْفَقْرُ، وَلَوْ أَغْنَيْتُهُ لَأَفْسَدْتُ عَلَيْهِ دِينَهُ، وَإِنَّ
مِنْ عِبَادِي لَمَنْ لَا يُصْلِحُهُ إِلَّا الْغِنَى، وَلَوْ أَفْقَرْتُهُ
لَأَفْسَدْتُ عَلَيْهِ دِينَهُ ) என் அடியார்களில்
சிலர் உள்ளனர். அவர்களுக்கு வறுமையே நல்லது. அவர்களை நீர் செல்வராக்கினால் அவர்களின்
மார்க்கத்தை அழித்தவராவீர். என் அடியார்களில் வேறு சிலர் உள்ளனர். அவர்களுக்கு செல்வமே
நல்லது. அவர்களை நீர் வறியவராக்கினால் அவர்களின் மார்க்கத்தை அழித்தவராவீர். நூல்:-
ஷரஹுஸ்ஸுன்னா இமாம் அல்பஙவி, தஃப்சீர் இப்னு கஸீர் பனீஇஸ்ராயீல்
வசனம்-30
பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( وَقَدْ يَكُونُ الْغِنَى فِي حَقِّ بَعْضِ النَّاسِ اسْتِدْرَاجًا، وَالْفَقْرُ عُقُوبَةً عِيَاذًا بِاللَّهِ مِنْ هَذَا وَهَذَا ) மனிதர்களில் சிலருக்குச் செல்வம் என்பது சிறிது காலம் விட்டுப்பிடிப்பதற்காகவும் வறுமை என்பது, ஒரு தண்டனையாகவும் இருக்கலாம். இந்த இரண்டிலிருந்தும் அல்லாஹ் நம்மை காப்பானாக! நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் பனீஇஸ்ராயீல் வசனம்-30
மனிதர்களில் சிலர்
பொருள் வளமிக்கவர்களாகவும், சிலர் வளமில்லாதவர்களாகவும் இருந்தால்தான் உலகம் இயங்கும் என்பது
இயக்கவியல் தத்துவமாகும். எல்லோரும் செல்வந்தர்களாக இருந்துவிட்டால் உழைப்பதற்கு ஆள்கள்
இருக்கமாட்டார்கள். எல்லோரும் ஏழைகளாக இருந்துவிட்டால் வளம் இராது. சிலரை அண்டி சிலர்
வாழும் நிலை இருப்பதால்தான் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது.
யார் செல்வந்தர்; யார் ஏழை என்பதை நிர்ணயிப்பது
படைத்தவன் அதிகாரத்தில் உள்ள ஒன்றாகும். இவரை ஏன் செல்வந்தராக்கினாய்? இவரை ஏன் ஏழையாக்கினாய்?
என்று கேட்டால் அதற்கு பதில் அவனிடம் கிடைக்கும்.
சிலர் நல்ல மனிதராக
இருப்பதற்கு வறுமைகூட காரணமாக இருக்கலாம். அவருக்கு செல்வம் வந்தால் மனிதர் தலைகீழாக
மாறிவிடக்கூடும். இன்னும் சிலர் நல்லவராக இருப்பதற்கு அவர் செல்வந்தர் என்பதே காரணமாக
இருக்கலாம். அவர் வறுமையில் சிக்கினால் நிலை தடுமாறி மாபாவியாகி மாறிவிடக்கூடும். சிலருக்கு
செல்வம் கண்களை மறைத்து படுகுழியில் அவர்கள் விழக் காரணமாகலாம். அவர்களை விட்டுப் பிடிப்பதற்காக
அவர்களுக்கு இறைவன் செல்வத்தை வாரி வழங்கலாம். சிலருக்கு வறுமை, அவர்கள் செய்த பாவத்திற்கு
தண்டனையாககூட இருக்கலாம். இப்படி பல காரணங்கள் உண்டு. அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவன்
ஆவான்.
இறைவனின் கோபம்
ஆயித் பின் அம்ர்
(ரலி) அவர்கள் கூறியதாவது. சல்மான் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு ஏழை குழுவினர்
(அதுவரை இஸ்லாத்தை ஏற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்த போது அக்குழுவினர், ( وَاللَّهِ
مَا أَخَذَتْ سُيُوفُ اللَّهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللَّهِ مَأْخَذَهَا ) "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இறைவிரோதியின் கழுத்தில்
(இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாள்கள் பதம் பார்க்கவில்லையே!" என்று கூறினர்.
அப்போது அவர்களிடம்
அபூபக்ர் (ரலி) அவர்கள், ( أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهِمْ ) "குறைஷியரில் மூத்தவரும்
அவர்களின் தலைவருமான ஒருவரை பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள்? என்று (கடிந்து) கேட்டார்கள்.
பிறகு நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களிடம் சென்று அதைப்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தபோது, ( يَا
أَبَا بَكْرٍ لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ لَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ لَقَدْ أَغْضَبْتَ
رَبَّكَ )
"அபூபக்ரே! நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களைக்
கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்! அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால், உங்கள் இறைவனை நீங்கள்
கோபப்படுத்திவிட்டீர்கள்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, ( يَا
إِخْوَتَاهْ أَغْضَبْتُكُمْ ) "என் சகோதரர்களே! நான் உங்களைக் கோபப்படுத்திவிட்டேனா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள், (
لاَ يَغْفِرُ اللَّهُ
لَكَ يَا أُخَىَّ ) "இல்லை, எங்கள் அருமை சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!"
என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4916
ஏழைத்தோழர்களான சல்மான்
(ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோர்
ஆகியோர் மதீனாவில் பேசிக் கொண்டிருந்தபோது மக்கத்து குறைஷிகளின் தலைவரான அபூசுஃப்யான்
அண்ணல் நபி (ஸல்) அவர்களை சந்திக்க வந்தார். அவரைப் பார்த்ததும் இவ்விருவருக்கு கோபம்
வந்தது. ஏனெனில், அவர்கள் அபூசுஃப்யான் மற்றும் அவரது கூட்டாளிகள்
ஆகியோரால் மக்காவில் கடும் சித்திரவதைகளையும் துன்பங்களையும் அனுபவித்தவர்கள்.
எனவே, அவர்கள் அபூசுஃப்யானை பார்த்ததும் இஸ்லாத்தின் எதிரியான இவரை
இன்னும் நமது வாள்கள் பதம் பாக்காமல் பார்க்கவில்லையே என்று கூறினர். இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு
தானே அதன் வேதனை புரியும். எனவே, இவ்வாறு இவர்கள் கூறியது தவறொன்றுமில்லை.
ஆனால், இதைக் கேட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் சினமுற்றவராக
அவர்களை கடிந்து கொண்டார்கள். அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வாறு கடிந்து கொண்டது
சரியல்ல என்று நபியவர்கள் உணர்த்துகிறார்கள்.
ஏழைகளின் உள்ளங்களைக்
காயப்படுத்துவதை அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் ஒருபோதும் விரும்புவதில்லை.
முந்திக்கொண்டோர்
இஸ்லாத்தின் ஆரம்ப
காலத்தில் அருமை நாயகம் (ஸல்) அவர்களை பின்பற்றியவர்களில் அதிகமானோர் ஏழை மக்களான ஆண்கள், பெண்கள், அடிமைகள் ஆகியோராகவே
இருந்தனர். செல்வாக்கு பெற்ற பிரமுகர்களில் சிலர் மட்டுமே நபியவர்களை பின்பற்றினர்.
இஸ்லாத்தின் ஆரம்பத்தில்
அபூசுஃப்யான் இஸ்லாமிய விரோதியாக இருந்தார். அப்போது தமக்கு ஆதரவை எதிர்பார்த்து ரோம
பேரரசர் ஹிர்கலை சந்தித்தார்.
அப்போது ரோமப் பேரரசர்
ஹிர்கல் அபூசுஃப்யான் அவர்களிடம், ( فَهَلِ اتَّبَعَهُ ضُعَفَاءُ النَّاسِ أَوْ
أَشْرَافُهُمْ؟
) "மக்களில் அவரை (முஹம்மத்
- ஸல் அவர்களை) பின்பற்றுபவர்கள் செல்வந்தவர்களா? அல்லது ஏழைகளா?" என்று கேட்டார். அதற்கு அபூசுஃப்யான், ( بَلْ
ضُعَفَاؤُهُمْ ) "ஏழைகள் தான்" என்று பதிலளித்தார். அப்போது மன்னர் ஹிர்கல், ( هُمْ
أَتْبَاعُ الرُّسُلِ ) "பெரும்பாலும் அவர்கள் தான் (ஆரம்பமாக) இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர்
ஆவர்" என்று கூறினார். நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர் அல்அன்ஆம் வசனம்-52
அல்லாஹ், இஸ்லாமிய மார்க்கத்தை
ஏழைகளைக் கொண்டே துவங்கினான். அதாவது, இஸ்லாத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டு அதில் நிலைத்திருந்தவர்களில்
பெரும்பாலானோர் ஏழைகள் தான். இஸ்லாமிய வளர்ச்சிக்கு அன்றைய ஏழைகளின் பங்கே பெரும்பான்மையாகும்.
இறைத்தூதர் நூஹ்
(அலை) அவர்கள் தமது சமுதாயத்தாரிடம் ஏகத்துவ பிரச்சாரம் செய்தபோது அவர்கள் இவ்வாறு
தான் கூறினர்.
எங்களில் சாமானிய
சிந்தனை உடைய மிகவும் தாழ்ந்தவர்களாக உள்ளவர்களைத் தவிர, வேறு ஒருவரும் உம்மை பின்பற்றியதாக
நாங்கள் காணவில்லை. திருக்குர்ஆன்:- 11:27
எனவே, அனைத்து இறைத்தூதர்களையும் முதன் முதலில் பின்பற்றியது ஏழை மக்கள் தான்.
ஓர் இயக்கம், கட்சி துவங்கப்படும்போது எந்த எதிர்பார்ப்புமின்றி முதலில் ஆர்வமாக
இணைந்து கொள்பவர்கள் ஏழைகளும் அடித்தட்டும் மக்களுமே! ஆனால், அவ்வியக்கம் வேர்விட்டு கிளைகள் பரப்பி வளர்ந்த பிறகு அவ்வியக்கத்தின்
மூலம் பலன்களை அனுபவிக்க வசதி படைத்தவர்களும், பதவி வெறியர்களும் அதில் இணைவார்கள். அவ்வேளையில் அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு
துவக்கத்தில் பாடுபட்ட சாமானியர்கள் மெல்ல ஓரம் கட்டப்படுவார்கள். அவர்கள் தாம் வளர்த்த
இயக்கத்தின் தலைவனைச் சந்திப்பதே பெரும்பாடாக ஆகிவிடும். தலைவர்களும் ஒப்புக்காக ஏழைகளை
நேசிப்பது போல் பாவனை செய்து நாடகங்கள் நடத்துவார்கள். ஆனால், கொள்கைக்காகவும் மக்களுக்காகவும் வாழ்பவர் ஒருபோதும் சாதாரண
மக்களைவிட்டு விலகி நிற்க மாட்டார். அதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்வில்
காண முடிந்தது.
பழகலாம் வாங்க
கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாவது. அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ, உயைனா பின் ஹிஸ்ன்
அல்ஃபஸாரீ ஆகிய குறைஷித் தலைவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது
நபியவர்கள் சுஹைப் (ரலி), பிலால் (ரலி), அம்மார் (ரலி), கப்பாப் (ரலி) ஆகியோருடனும் வேறு சில ஏழை முஸ்லிம்களுடனும்
அமர்ந்திருந்தார்கள். நபியவர்களைச் சுற்றி ஏழை முஸ்லிம்கள் அமர்ந்திருப்பதை குறைஷித்
தலைவர்கள் கண்டபோது அவர்களை இழிவாகக் கருதினர்.
பின்னர் அவர்கள் நபியவர்களிடம்
வந்து தனியாக உரையாடினர். "எங்களது சிறப்பை அரபியர் அறியும் வகையில் எங்களுக்கு
தனி இடத்தை நீங்கள் ஒதுக்கித் தர வேண்டும். ஏனெனில், அரபியக் குழுக்கள் உங்களிடம் வருவார்கள். அப்போது
இந்த அடிமைகளுடன் சேர்ந்து எங்களை அரபியர் காண்பதை நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம்.
எனவே, நாங்கள் உங்களிடம்
வரும்போது அவர்களை எங்களிடமிருந்து எழுந்து சென்று விடுமாறு நீங்கள் உத்தரவிட வேண்டும்.
நாங்கள் சென்ற பின்னர் நீங்கள் விரும்பினால் அவர்கள் உங்களுடன் சேர்ந்து உட்கார்ந்து
கொள்ளட்டும்" என்று கூறினர்.
அதற்கு நபியவர்கள், 'சரி' என்று சொன்னார்கள்.
அப்போது அவர்கள், "உங்கள் சார்பாக எங்களுக்கு இதை நீங்கள் எழுதித்தாருங்கள்"
என்று கூறினர். அப்போது நபியவர்கள் ஓர் ஏட்டைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டார்கள். பின்னர்
எழுதுவதற்காக அலீ (ரலி) அவர்களை அழைத்தார்கள். நாங்கள் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து இருந்தோம்.
அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள்
தம் இறைவனின் உவப்பை
நாடி காலையிலும் மாலையிலும் அவனை அழைப்பவர்களை நீர் விரட்டாதீர். அவர்களிடம் கணக்கு
கேட்க உமக்கு எந்த அதிகாரமும் இல்லை; உன்னிடம் கணக்கு கேட்க அவர்களுக்கு எந்த அதிகாரமும்
இல்லை. எனவே, அவர்களை நீ விரட்டினால் அநீதியாளர்களில் ஒருவராக ஆகிவிடுவீர். (திருக்குர்ஆன்:-
6:52)
இந்த வசனத்தை கொண்டு
வந்தார்கள். உடனே நபியவர்கள் தமது கையில் இருந்த அந்த ஏட்டை வீசியெறிந்துவிட்டு எங்கள்
அழைத்தார்கள். நாங்கள் அவர்களுக்கருகில் சென்று அமர்ந்தோம். நூல்:- இப்னுமாஜா-4117, தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், தஃப்சீர் இப்னு கஸீர்
ஒருமுறை நபிகள் நாயகம்
(ஸல்) அவர்களின் சபையில் செல்வந்தர் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஏழை
ஒருவர் அந்த செல்வந்தரின் அருகில் போய் உட்கார்ந்தார். உடனே அந்த செல்வந்தர் தமது விலை
மதிப்புள்ள ஆடையை அவர் தொடாதவாறு ஒதுக்கிக்கொண்டு நகர்ந்து உட்கார்ந்தார். நபியவர்கள், "ஏன்? அந்த ஏழையின் வறுமை
உம்மைப் பற்றிக் கொள்ளும் என்று பயப்படுகிறீரா?" என்று கேட்டார்கள்.
எளிமையாக வாழ்ந்த
நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் ஏழைகளை அதிகம் நேசித்தார்கள். ஏழைகள் மத்தியில் அமரவும்
அவர்களுடன் சேர்ந்து உண்ணவும் பருகவும் செய்தார்கள். பெரும்பாலும் நபியவர்களைச் சுற்றி
ஏழைகளே இருந்தனர். எதிரிகளான குறைஷிகள் நபியவர்கள் மீது கூறிய குற்றச்சாற்றுகளில் ஒன்று, அவர் எப்போதும் ஏழைகளுடனே அமர்ந்திருக்கிறார் என்பதாகும்.
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள். ( اللَّهُمَّ، إِنِّي أَسْأَلُكَ الْخَيِّرَاتِ وَتَرْكَ
الْمُنْكَرَاتِ، وَحُبَّ الْمَسَاكِينِ ) "இறைவா! நன்மைகள்
செய்வதையும், தீமைகளை விட்டு விடுவதையும், ஏழை எளியோரை நேசிப்பதையும் எனக்கு வழங்கிவிடுவாயாக! நூல்:- முஸ்னது
அஹ்மத், தஃப்சீர் இப்னு கஸீர் அந்நஜ்ம் வசனம்-12
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள், ( يَا
عَائِشَةُ أَحِبِّي الْمَسَاكِينَ وَقَرِّبِيهِمْ فَإِنَّ اللَّهَ يُقَرِّبُكِ
يَوْمَ الْقِيَامَةِ ) “ஆயிஷா!
ஏழைகளை நேசிப்பாயாக. உனக்கு அருகில் அவர்களுக்கு இடமளிப்பாயாக. அவ்வாறாயின், மறுமைநாளில் அல்லாஹ்
தனக்கு அருகில் உனக்கு இடமளிப்பான்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2275
இன்றும்கூட பள்ளிவாசல்
இமாம்கள் மற்றும் ஆலிம்பெருமக்களிடம் நெருங்கி பழகுவோரில் பெரும்பாலானோர் ஏழை எளிய
மக்களாகத்தான் இருப்பார்கள்.
உதவவேண்டும்
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஏழைகளை நேசித்து வந்தார்கள். அவர்களிடம்
அமர்ந்து அவர்களோடு உரையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களும் அவரிடம் உரையாடுவார்கள்.
எனவே, அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் அவருக்கு ( أَبَا
الْمَسَاكِينِ ) “ஏழைகளின் தந்தை”
என்று குறிப்பு பெயர் சூட்டினார்கள். நூல்:- திர்மிதீ-3689,
இப்னுமாஜா-4115
அபூஹுரைரா (ரலி) அவர்கள்
கூறியதாவது. ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்வதில் சிறந்து
விளங்கினார். எனவே, நாங்கள் அவரை 'ஏழைகளின் தந்தை' என்று அழைத்து வந்தோம். அவர் எங்களை அழைத்துச் சென்று
தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு வழங்குவார். எந்த அளவுக்கென்றால் அவர் எதுவுமில்லாத
(காலியான) நெய்ப் பையை எங்களிடம் கொண்டுவந்து அதைப் பிழிந்துவிடுவார். நாங்கள் அதில்
(ஒட்டிக்கொண்டு) இருப்பதை நக்கி உண்போம். நூல்:- புகாரீ-3708,
திர்மிதீ-3690, இப்னுமாஜா-4116
முந்திச்செல்வார்கள்
அப்துல்லாஹ் பின்
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஏழை முஹாஜிர்கள் தங்களின் உள்ள செல்வந்தர்களை அல்லாஹ்
தங்களைவிட சிறப்பாக்கி வைத்துள்ளது பற்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர்.
அப்போது நபியவர்கள், ( يَا
مَعْشَرَ الْفُقَرَاءِ أَلاَ أُبَشِّرُكُمْ أَنَّ فُقَرَاءَ الْمُؤْمِنِينَ
يَدْخُلُونَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ بِنِصْفِ يَوْمٍ خَمْسِمِائَةِ
عَامٍ ) "ஏழை மக்களே! நான் உங்களுக்கு ஒரு நற்செய்தி கூறட்டுமா? நிச்சயமாக இறைநம்பிக்கையாளர்களில் உள்ள ஏழைகள் அவர்களிலுள்ள
செல்வந்தர்களைவிட (அதாவது, உலக நாள்களோடு மறுமை நாள்களை ஒப்பிடும்போது) அரை நாள், ஐநூறு
ஆண்டுகள் முன்பாகவே சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார்கள்" என்று கூறினார்கள். நூல்:-
இப்னுமாஜா-4114, அஸ்ஸுஹ்த் இப்னு முபாரக்-1477, இப்னு அபீஷைபா, அப்து பின் ஹமீத்
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( يَدْخُلُ فُقَرَاءُ الْمُسْلِمِينَ الْجَنَّةَ قَبْلَ أَغْنِيَائِهِمْ
بِنِصْفِ يَوْمٍ وَهُوَ خَمْسُمِائَةِ عَامٍ ) ஏழை முஸ்லிம்கள் தம்மிலுள்ள செல்வந்தர்களைவிட அரை நாளுக்கு முன்பே
சொர்க்கத்துக்குள் நுழைந்துவிடுவார்கள். அ(ரை நாள் என்ப)து (உலகத்தின் நாள்களோடு ஒப்பிடுகையில்)
ஐநூறு ஆண்டுகளாகும். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-2277,
இப்னுமாஜா-4112, முஸ்னது அஹ்மத் முஸன்னஃப் இப்னு அபீஷைபா, இப்னு ஹிப்பான்
பேராசான் பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். ( قُمْتُ عَلَى باب الْجَنَّةِ فَكَانَ عَامَّةَ مَنْ
دَخَلَهَا الْمَسَاكِينُ، وَأَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ ) நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன்.
அதில் நுழைவோரில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர். செல்வந்தர்கள் (சொர்க்கத்தின்
வாசலில் விசாரணைக்காக) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். அறிவிப்பாளர்:- உசாமா பின்
ஸைத் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-5196, முஸ்லிம்-5286
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கண்ட இந்த காட்சி (மிஃராஜ் எனும்) விண்வெளிப் பயணத்தில் நடந்திருக்கலாம். அல்லது
நபியவர்களுக்கு கனவில் இது காட்டப்பட்டிருக்கலாம். அல்லது நபியவர்களின் காலத்தில் ஒருமுறை
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது சொர்க்கமும் நரகமும் அவர்களுக்கு காட்டப்பட்டது. அப்போது
அவர்கள் இக்காட்சிகளை கண்டிருக்கலாம். நூல்:- தக்மிலா
செல்வந்தர்கள் தங்களின்
செல்வத்திற்காக கணக்கு வழக்குகளை முடித்துக்கொண்டு சொர்க்கம் செல்வதற்கு தாமதம் ஏற்படலாம்.
அத்துடன் அவர்கள் உலகிலும் வசதியான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். ஆனால், ஏழைகளுக்கு அத்தகைய
விசாரணை இருக்க வாய்ப்பில்லை. அவர்களிடம் செல்வம் இல்லாததே காரணம். அதனால் விரைவாக
சொர்க்கம் சென்று, உலகில் அனுபவிக்காத வசதிகளைச் சொர்க்கத்தில் அனுபவிப்பார்கள்.
இதுதான் நீதமாகும்.
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ( احْتَجَّتِ النَّارُ وَالْجَنَّةُ فَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِي
الْجَبَّارُونَ وَالْمُتَكَبِّرُونَ . وَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِي
الضُّعَفَاءُ وَالْمَسَاكِينُ ) நரகமும் சொர்க்கமும்
வாக்குவாதம் செய்து கொண்டன. நரகம், "அக்கிரமக்காரர்களும்
ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது. சொர்க்கம், "பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது.
அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5469
மேலானவர்கள்
சஹ்ல் பின் சஅத்
(ரலி) அவர்கள் கூறியதாவது. ஒரு (பணக்கார) மனிதர் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அருகில்
சென்றார். அப்போது நபியவர்கள் (தம் தோழர்களிடம்), ( مَا تَقُولُونَ فِي هَذَا ) "இவரைப் பற்றி நீங்கள்
என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். தோழர்கள்,
"இவர் பெண் கேட்டால் இவருக்கு
மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும்
தகுதியான மனிதர்" என்று கூறினர். பிறகு நபியவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்தார்கள்.
பிறகு நபியவர்கள்
அருகில் முஸ்லிம்களில் ஒரு ஏழை மனிதர் சென்றார். அப்போது நபியவர்கள், "இவரை குறித்து நீங்கள்
என்ன கருதுகின்றீர்கள்?" என்று கேட்டார்கள். தோழர்கள்,
"இவர் பெண் கேட்டால் இவருக்கு
மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும்
இருக்க தகுதியானவர்" என்று கூறினர்.
அப்போது நபியவர்கள், ( هَذَا
خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا ) "அவரைப் போன்ற வசதி படைத்தவர்கள் இந்த பூமி நிரம்ப
இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர்" என்று கூறினார்கள்.
நூல்:- புகாரீ-5091, முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் மிகவும் எளிமையோடு வாழ்ந்தார்கள். அதற்கு காரணம் நபித்தோழர்களில் பலரும் ஏழைகளாக
இருந்தனர். நபியவர்கள் தமது தோழர்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்ள விரும்பினார்கள்.
நபியவர்களுக்கு எது கிடைத்தாலும் அதை தமது தோழர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். எதிலும்
அவர்கள் தோழர்களையும்விட தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை. எப்போதும் அவர்களில்
ஒருவராகவே இருந்தார்கள்.
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள் ஏழைகளை நேசித்தாலும் ஏழ்மை ஒழிப்பதற்காக பல வழிமுறைகளை கையாண்டார்கள். கடின
உழைப்பின் அவசியத்தை உணர்த்துதல், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு
வழங்க வேண்டிய கட்டாயக்கொடை (ஸக்காத்), உழைப்பவர்களுக்கு வட்டி இல்லா
கடன் வழங்குதல், உழைப்பும் முதலீடும் இணைத்து தொழில் தொடங்கி இலாப
நஷ்டத்தை பகிர்ந்து கொள்ளும்முறை, தரிசாக கிடக்கும் நிலங்களை
பண்படுத்த முன் வருவோருக்கு வழங்குதல், விவசாய பொருள்களை இடைத்தரகர்
இன்றி நேரடியாக விற்பனை செய்யும்முறை என பல வழிகளில் ஏழ்மையை அகற்ற அரும்பாடுபட்டார்கள்.
முறையான விளக்கம்
அனஸ் (ரலி) அவர்கள்
கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ( اللَّهُمَّ
أَحْيِنِي مِسْكِينًا وَأَمِتْنِي مِسْكِينًا وَاحْشُرْنِي فِي زُمْرَةِ
الْمَسَاكِينِ يَوْمَ الْقِيَامَةِ ) "இறைவா! என்னை ஏழையாக
வாழச்செய்வாயாக! ஏழையாக இறக்கச்செய்வாயாக! மறுமைநாளில் ஏழைகளின் கூட்டத்திலேயே என்னை
எழுப்புவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள் கூறினார்கள். நூல்:- திர்மிதீ-2275
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் ஏழைகளை விரும்பினார்கள். ஏழ்மையை அல்ல.
இந்த நபிமொழி பலவீனமானது
ஆகும். நூல்:- ஃபத்ஹுல் முல்ஹிம்
இதன் அறிவிப்பாளர்களில்
ஒருவரான “ஹாரிஸ் பின் நுஅமான் அல்லைஸீ” என்பவர் ஹதீஸ் அறிவிப்பில் நிராகரிக்கப்பட்டவராவார் என இமாம் புகாரீ (ரஹ்), உகைலீ (ரஹ்), அஸ்தீ (ரஹ்) இப்னு
ஹிப்பான் (ரஹ்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
(நபியே!) உம்மை அவன்
வறியவராகக் கண்டு செல்வந்தராக்கினான். (திருக்குர்ஆன்:- 93:8)
அறிஞர் யூசுஃப் அல்கர்ளாவீ
(ரஹ்) அவர்கள் மேற்காணும் நபிமொழிக்கு இவ்வாறு விளக்கம் கூறுகிறார்: இந்த நபிமொழியை
வாசித்த சிலர் இங்கு "மிஸ்கீன்" என்று குறிப்பிடப்பட்டதை "ஏழ்மை"
என்றும், "மக்களிடம் யாசித்தும் வாழும் நிலை" என்றும் பொருள் கொள்கின்றனர். ஆனால், இப்பொருள் அண்ணல்
நபி (ஸல்) அவர்கள் வறுமைத் துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரியதற்கும், செல்வத்தையும் யாசிக்காமல்
வாழும் நிலைமையும் கேட்டுப் பிரார்த்தித்ததற்கும் (முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா) முரணானதாகும்.
அது மட்டுமின்றி, சஅத் (ரலி) அவர்களைப்
பார்த்து நபியவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்: செல்வநிலையும், இறையச்சமும், பகட்டின்றி வாழும்
இயல்பும் கொண்ட அடியானை நிச்சயமாக அல்லாஹ் விரும்புகிறான். (முஸ்னது அஹ்மத், முஸ்லிம்)
மேலும், அம்ர் பின் அல்ஆஸ்
(ரலி) அவர்கள் அவர்களை நோக்கி, நற்பண்புள்ள ஒரு மனிதரிடம் இருக்கும் நல்ல செல்வம் எவ்வளவு சிறந்தது.
(முஸ்னது அஹ்மத், ஹாகிம்) என்றும் நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
மேலும் நபியவர்கள்,
“இறைவா! இறைநிராகரிப்பிலிருந்தும் வறுமையிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்”
(இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, ஹாகிம்) என்றும் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
ஆனால், இத்தனைக்கும் மாற்றமாக
நபியவர்கள் வறுமையைக் கேட்டுத்தான் பிரார்த்தித்தார்கள் என்று பொருள்கொள்வது எப்படி
பொருந்தும்? உண்மையில் இப்பிரார்த்தனையின் மூலம் நபியவர்கள் நாடிய பொருள், பணிவும் எளிமையும் ஆகும். இதனை பேரறிஞர் இப்னுல் அஸீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு
விளக்குகிறார்: பெருமையோ அடக்கியாளும் அகம்பாவமோ இன்றி, பணிவாகவும் எளிமையாகவும் இருப்பதையே நபியவர்கள்
இந்த நபிமொழியின் மூலம் கூற விரும்புகிறார்கள். நூல்:- கைஃப நத்தஆமல் மஅஸ்ஸுன்னா ( كيف نتعامل مع السنه )
நபிகள் நாயகம் )ஸல்( அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ الْمِسْكِينُ بِالَّذِي تَرُدُّهُ
التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلاَ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ إِنَّمَا
الْمِسْكِينُ الْمُتَعَفِّفُ اقْرَءُوا إِنْ شِئْتُمْ { لاَ يَسْأَلُونَ
النَّاسَ إِلْحَافًا} ) ஒரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரிச்சம் பழங்களுக்காக அலைபவன் ஏழையல்லன். ஏழை என்பவன் (தன் தேவைகளைப்
பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு, இருப்பதைக்கொண்டு போதுமாக்கி) தன்மானத்துடன் நடந்து கொள்பவனே ஆவான். நீங்கள் விரும்பினால்
"அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்" (2:273) எனும்
இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-1880
இந்த நபிமொழி, போதிய பொருளாதாரம் இல்லாவிட்டாலும் சுயமரியாதை அல்லது தன்மானத்துடன் வாழ்பவரை தான் "மிஸ்கீன்" என்கிறது.
நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதற்கும், நாம் விரும்பும் தனிப்பட்ட முன்னேற்றத்தை அடைவதற்கும் சுயமரியாதை ஒரு சிறந்த வழியாகும்.
மனிதன் தன்னைத்தானே மதிப்பிடுவதை விட முக்கியமான மதிப்பு எதுவும் இல்லை. சுயமரியாதையை வலுப்படுத்த முடிந்தால், மன அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்க முடியும்.
எம்மைப் பற்றிய உணர்வு பூர்வமாக நாம் என்ன மதிப்பீடு வைத்திருக்கின்றோமோ அதுவே சுயமரியாதை ஆகும். சுயமரியாதை எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அவ்வளவு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும்.
மனிதன் தமக்குரிய சுயமரியாதையை இழந்து இந்த உலகத்தில் வாழ்வதென்பது மோசமான வாழ்க்கையாக இருக்கும். அதனால், பிற மக்களால் எள்ளி நகையாடக்கூடிய, கேலி கிண்டலுக்கு உள்ளாகக்கூடிய வாழ்க்கையாக மாறிவிடும்.
ஒரு மனிதன் சுயமரியாதையோடு வாழ்கின்றபோது தான், வெட்க உணர்வோடும், தன்மானத்தோடும், மரியாதையோடும் வாழ முடியும் என்பதனை உணர்ந்து சுயமரியாதையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அருமை நாயகம் (ஸல்)
அவர்கள், "உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் மனமே உண்மையான
செல்வம்" என்று கருதினார்கள். அதையே சமுதாயத்திற்கும் போதித்தார்கள். "வறுமை
தான் என் பெருமை" என்ற நபிமொழியும், "வறுமை இறைமறுப்புக்கு
இட்டுச்செல்லலாம்" என்ற நபிமொழியும் ஆதாரமற்றவை; தவறானவை ஆகும் என பேரறிஞர்களான இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்), மற்றும் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) போன்றோர் தெரிவித்துள்ளனர். நூல்:-
துஹ்ஃபத்துல் அஹ்வதீ
அல்லாஹுத்தஆலா நம்மை, ஏழைகளுக்கு உதவி ஒத்தாசைகள் புரிவது மூலம் அவர்களை கண்ணியப்படுத்தும்
நற்பண்பாளர்களாக வாழச் செய்வானாக! ஆமீன்!
மௌலவி, மு.முஹம்மது
ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951
No comments:
Post a Comment