Search This Blog

Monday, 23 September 2024

மக்கள் ஏமாறும் வரை

 

மக்கள் ஏமாறும் வரை

 

عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا إِلَّا مَنِ ارْتَضَى مِنْ رَسُولٍ

(என் இறைவனாகிய அவன்) மறைவானவற்றை அறிந்தவன். அவன் மறைத்து வைத்திருப்பவற்றை எவருக்கும் அவன் வெளிப்படுத்த மாட்டான். ஆயினும், (தன்னுடைய) தூதரில் தான் பொருந்திக்கொண்டவரைத் தவிர. அதை அவருக்கு வெளிப்படுத்தக் கூடும். திருக்குர்ஆன்:- 72:26, 27 

 

1993 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஜோதிட தினம் (International Astrology day) பெரும்பாலும் மார்ச் 20 அல்லது மார்ச் 21 ஆகிய தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது.

 

மூடநம்பிக்கையின் ஒட்டுமொத்த உருவம் தான் சோதிடம் என்பது பகுத்தறிவுள்ள யாரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

 

வியாபார விருத்திக்காக, நல்ல வரன் அமைவதற்காக, காணாமல் போன பொருளை மீட்பதற்காக என்றெல்லாம் காரணம் கற்பித்துக்கொண்டு, வியக்கத்தக்க பல அறிவியல் முன்னேற்றங்களைக் கண்ட 21 ஆம் நூற்றாண்டிலும் ஜோதிடர்களிடம் ஏமாறும் மக்களை பார்க்கும்போது வேதனையாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.

 

உழைத்துச் சாப்பிட மனமில்லாத சோம்பேறிகள் பணம் பார்ப்பதற்கு ஏற்படுத்திய வழி தான் இந்த சோதிடம்.

 

ஊராரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவன்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ ) சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை உண்மையென ஏற்றவர் முஹம்மத் (ஆகிய என்) மீது அருளப்பெற்ற (வேதத்)தை நிராகரித்து விட்டவர் ஆவார் அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- இப்னுமாஜா-631, திர்மிதீ-125, தாரிமீ, முஸ்னது அஹ்மத்

 

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மயிலாடுதுறைக்கு அருகே இரண்டு சோதிடர்கள் சில ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் நாடி சோதிடம் சொல்லி வந்தார்கள். பெரும் தொழில் அதிபர்கள் செல்வ சீமான்கள் எல்லாம் இந்த சோதிடர்களை நாடி வந்து தங்கள் எதிர்காலம் குறித்து கேட்டார்கள். இந்த ஊரே இந்த சோதிடர்களால் பிரபலமானது.

 

ஒருநாள் வருமான வரித்துறையின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த சோதிடர்களின் வீடுகளைத் தேடி வந்து திடீர் சோதனை நடத்தினார்கள். கணக்கில் வராத கறுப்புப் பணம் என்று கூறி அவர்கள் அதுவரை சம்பாதித்த பல இலட்சக்கணக்கான ரூபாய்களை அள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.

 

ஊராரின் எதிர்காலத்தை நிர்ணயித்துச் சொன்ன இந்த சோதிடர்களால் வருமானவரி அதிகாரிகளின் வருகையை முற்கூட்டியே தமது நாடி சோதிடம் மூலம் அறிந்து, அதற்கு ஏற்ப பரிகாரம் செய்துகொள்ள முடியவில்லை ஏன்? சோதிடம் என்பது பகிரங்கமான பித்தலாட்டமே தவிர வேறொன்றும் இல்லை.

 

திகைப்புற்றுக் குழம்பினான்

 

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காம் ஜனாதிபதி அலீ (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவ சோதிடர் ஒருவர், தாம் அனைவருடைய வருங்காலத்தையும் சரியாக கணித்துச் சொல்பவர் என்று கூறி பலர் நம்புகிறவாறு செய்து கொண்டிருந்தார். முஸ்லிம்களில் சிலரும் அவரின் வாக்குவன்மையிலும், மாயசக்தியிலும் மதியிழந்து அவரைச் சுற்றித்திரிவதைக் கண்ட அலீ (ரலி) அவர்களுக்கு பெரும் வருத்தம் ஏற்பட்டது. எனவே, சோதிடரின் கூற்று ஆதாரமற்றது என்பதை அம்பலப்படுத்தி, அந்த சில முஸ்லிம்களின் உறுதியிலேயே படிந்திருக்கும் மாசை போக்க தமக்குள் ஒரு திட்டம் தீட்டி கொண்டார்கள்.

 

அன்று அலீ (ரலி) அவர்களின் இல்லத்தில் விருந்தோன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சோதிடரும் அவருடைய அபிமானிகளும் அவ்விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தனர். தன் சோதிட கலாஞானத்திற்கு ஜனாதிபதி அவர்கள் கண்ணியமளிக்கிறார் போலும் என்று கருதிய சோதிடரின் முகத்தில் ஆனந்தம் பொங்கி வழிந்தது.

 

விருந்தில் ரொட்டி உட்பட பல பண்டங்கள் பரிமாறப்பட்டன. அவற்றின் நடுவே பெரியதொரு காலிப் பாத்திரமும் வைக்கப்பட்டிருந்தது. பற்பல பண்டங்களையும் ருசித்துவிட்டு ரொட்டி உண்ணும் முறை வந்ததும் விருந்தினர்கள் தமக்கு முன் வைக்கப்பட்டிருந்த ரொட்டியைத் துண்டிக்க ஆரம்பித்தனர். அப்போது அலீ (ரலி) அவர்கள், "ஒவ்வொருவரும் தமது ரொட்டித் துண்டுகளை அந்த காலிப் பாத்திரத்தில் வீசுங்கள்" என்று கூறினார்கள்.

 

நான் முந்தி, நீ முந்தி என்று சோதிடர் உட்பட விருந்தினர்கள் அனைவரும் ரொட்டித் துண்டுகளையும் மடமடவென வீசினர். அலீ (ரலி) அவர்களும் ரொட்டித் துண்டுகளை வீசினார்கள். விசித்திரமான இந்நிகழ்விற்கு பின்பு அடுத்து என்ன நிகழப் போகிறதோ? என்று விருந்தினர் ஆவலுடன் காத்திருந்தனர்.

 

அலீ (ரலி) அவர்கள், "இப்போது உன் ரொட்டித் துண்டை மட்டும் தனியாக பிரித்து எடு" என்று சோதிடரிடம் கூறினார்கள்.

 

எந்தத் துண்டு எப்போது விழுந்தது. அது எவருக்குரியது என்று யாருக்கும் தெரியும் ?பாத்திரம் முழுவதும் நிரம்பிக் கிடந்த ரொட்டித்துண்டுகளில் தன்னுடையதை மட்டும் தனியாக எப்படி பிரித்தெடுப்பது? என்று திகைப்புற்றுக் குழம்பிய சோதிடர், "இவற்றுள் என் ரொட்டித்துண்டு எதுவென்று எனக்கு எப்படி தெரியும்? என்று பரிதாபமாக கேட்டார்.

 

இதையே ஏற்கனவே எதிர்பார்த்த அலீ (ரலி) அவர்கள், "கேவலம் ஒரு ரொட்டித் துண்டு, அதுவும் உன் கையால் சற்று நேரத்திற்கு முன்னே வீசப்பட்டு, இதோ பாத்திரத்தினுள் நிச்சயமாகக் கிடக்கிறது. இதைக் கண்டுபிடிக்க முடியாத நீ, இதுவரை தோன்றாத, இனிமேல் தோன்றவிருக்கும் எதிர்காலத்தைப் பற்றியும், அதில் நடக்கபெறப்போகும் நிகழ்வுகளைப் பற்றியும் தெரியும் என்று தம்பட்டம் படித்துக் கொள்வது நியாயமா?" என வினவினார்கள். பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாக வந்த வழியை நோக்கிச் சென்றார் சோதிடர்.

 

இக்காலத்தில் உள்ள முஸ்லிம்களில் சிலருக்கு போதிய அளவு மார்க்க ஞானம் இல்லாத காரணத்தால் இறைநம்பிக்கை குறைந்து சோதிடத்தை நாடிச் செல்கின்றனர். இது மாபெரும் குற்றமாகும்.

 

அல்லாஹ்வையன்றி எதிர்காலத்தின் மறைவான விஷயங்களை யாரும் அறிய முடியாது. ஆனால், அல்லாஹ்வால் அறிவித்துக் கொடுக்கப்பட்டதன் பேரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதிநாள் வரை நடைபெறக்கூடிய சில விஷயங்களைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்துள்ளார்கள். அந்த விஷயங்கள் நிச்சயமாக நடைபெறும் என்பதை சந்தேகமில்லை. நபியவர்கள் கூறியதை நம்புவது சோதிடமாக ஆகாது. சாமானிய மனிதர்களுக்கு இறைவன் எதிர்கால விஷயங்களை அறிவித்துக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு எதிர்கால விஷயங்கள் தெரியாது. அவர்கள் கூறுவதை நம்புவதும் தவறாகும் என்று கருத்தை தலைப்பில் கண்ட திரு வசனம் தெளிவுபடுத்துகிறது.

 

உலகில் எத்தனையோ சோதிடர்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் யாராவது அமெரிக்கா அதிபர் கென்னடி, எகிப்து அதிபர் நாசர், இலங்கை அதிபர் பிரேமதாசா, நம் தேசத்தலைவர் காந்தியடிகள், இந்திய பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் படுகொலைகளைப் பற்றியோ, சுனாமி நிலநடுக்கம் குண்டுவெடிப்பு போன்றவற்றை முன்கூட்டியே அறிந்து அந்தத் துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெறவில்லையே!

 

சோதிடம் பல ரகம்

 

வருங்காலத்தைக் கணித்து கூறுவதற்கு பல வழிமுறைகள் கையாளப்படுகிறது. அவற்றில் நட்சத்திரங்களின் அசைவு, கைரேகை, பகுத்தறிவே இல்லாத கிளி, மனிதக் கண்டுபிடிப்பான கணினி போன்ற பல வகைகள் உள்ளன.

 

ஒரு சவால்! ஒரே சமயத்தில் ஒரு மனிதர் பத்து கிளிசோதிடர்களை சந்தித்து, பலன் கேட்கட்டும். பத்து கிளிகளும் ஒரே பலனைச் சொல்லும் அட்டையை எடுத்துக் கொடுக்குமா? தேசங்கள் தோறும் நேரங்கள் வித்தியாசப்படுவது போல், தேசங்கள் தோறும் பேசப்படும் மொழிகள் வித்தியாசப்படுவது போல், ஒவ்வொரு கிளியும் எடுத்து கொடுக்கும் அட்டைகளும் வித்தியாசப்பட்டு, வேறு பலன்களையே காட்டும். ஒவ்வொரு சோதிடனும் சரி, ஒவ்வொரு சோதிட பலன் கூறும் இயந்திரங்களும் சரி வித்தியாசமாகவே இருக்கும்.

 

உள்ளங்கை ரேகை என்பது அடிக்கடி மாறக்கூடியது என்பது கைரேகை நிபுணத்துவம் பெற்றவர்களின் கூற்றாகும். அடிக்கடி மாறக்கூடியதை வைத்து எதிர்காலத்தின் விஷயங்களை எப்படி நிர்ணயிக்க முடியும்? சிந்தியுங்கள்.

 

இன்னும் அவனிடமே (அல்லாஹ்விடமே) மறைவானவற்றின் சாவிகள் உள்ளன. அவனைத் தவிர வேறு யாரும் அதை அறிய மாட்டார்கள். திருக்குர்ஆன்:- 6:59

 

ஒட்டுக்கேட்டனர்

 

(ஜின்னுகள் கூறினர்:) நிச்சயமாக நாங்கள் வானத்தைத் தீண்டிப் பார்த்தோம். (வானவர்கள் எனும்) பலமான காவலர்களாலும் தீப்பந்தங்களாலும் வானம் நிரப்பப்பட்டிருப்பதைக் கண்டோம்.

 

மேலும், நிச்சயமாக நாங்கள் (இதற்கு முன்) அதிலிருந்து (வானவர்கள் பேசுவதை ஒட்டுக்) கேட்பதற்காகப் பல இடங்களில் அமர்ந்து கொண்டிருந்தோம். பிறகு இப்போது யாரேனும் ஒருவன் (வானத்தின் செய்தியை) ஒட்டுக்கேட்க நாடினால் அவனுக்கென ஓர் தீப்பந்தம் (அவனை அழிப்பதற்காகக்) காத்திருப்பதைக் காண்பான்.

 

(இதன்மூலம்) பூமியில் இருப்பவர்களுக்குத் தீமை நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு நேர்வழிகாட்ட நாடியுள்ளனா? என்பதை நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம். திருக்குர்ஆன்:- 72: 8,9,10

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜின்னு இனத்தார் ஒட்டு கேட்பதற்கென (வானில்) அமரும் இடங்கள் இருந்தன. இறைச்செய்தி அருளப்படும்போது அஸ்ஸஃபா மலை மேல் இரும்பு போடப்பட்ட சப்தத்தைப் போன்று சப்தம் ஒன்றை வானவர்கள் வானில் செவியுறுவர். அவ்வாறு வானவர்கள் செவியுறும்போது சிரம் பணிந்தவர்களாக (சஜ்தாவில்) வீழ்வர். இறைச்செய்தி அருளப்படும்வரை தம் தலையை உயர்த்தமாட்டர். இறைச்செய்தி அருளைப் பெற்றுவிட்டால் (தலையை உயர்த்தி) அவர்களில் சிலர் சிலரிடம், "உங்கள் இறைவன் என்ன கூறினான்" என்று வினவுவர். அருளப்பெற்றது வான் சம்பந்தப்பட்ட செய்தியாக இருக்குமானால், "சத்தியத்தையே கூறினான்; அவன் உயர்வானவன்; பெரியவன்" என்று அவர்கள் கூறுவர்.

 

அருளப்பெற்றது பூமி சம்பந்தப்பட்ட மறைவான செய்தி, அல்லது மரணச்செய்தி அல்லது உலகத்துடன் தொடர்புள்ள அம்சம் ஆகியவையாக இருக்குமானால் அது குறித்து, 'இவ்வாறு இவ்வாறு ஏற்படும்' என கூறினான் என்று பேசிக் கொள்வர். அப்போது இதை ஷைத்தான்கள் ஒட்டுக்கேட்டு தம் (சோதிடர்களான) நண்பர்களிடம் (சொல்வதற்காக) வருகைத்தருவர்.

 

ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட  பிறகு (ஒட்டு கேட்க வரும்) ஷைத்தான்கள், ஜின்கள் எரிக் கற்களால் (விரட்டப்பட்டு) இழிநிலைக்கு ஆட்படுத்தப்பட்டனர். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஜின்னுகள் வேத அறிவிப்பை ஒட்டுக் கேட்பதற்காக வான் நோக்கி உயர செய்பவர்களாக இருந்தனர். அங்கு அவர்கள் ஒரு வார்த்தையைச் செவியுற்றால், அதனுடன் ஒன்பது வார்த்தையை சேர்த்து கூடுதல்படுத்தி விடுவர். (அதில்) ஒரு வார்த்தை உண்மையாக இருக்கும். (அதில்) அவர்கள் கூடுதல்படுத்திய ஒன்பது வார்த்தைகள் அசத்தியமாக இருக்கும். நூல்:- அல்பிதாயா வந்நிஹாயா

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். அண்ணலார், ( لَيْسُوا بِشَيْءٍ )  "அவர்கள் (பொருட்படுத்தத்தக்க) ஒரு பொருள் அல்லர்" என்று கூறினார்கள்.

 

மக்கள், ( يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّيْءِ يَكُونُ حَقًّا ) "நாயகமே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள். அது உண்மையாகி விடுகிறதே!" என்றனர். அண்ணலார், ( تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ، فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلِيِّهِ قَرَّ الدَّجَاجَةِ، فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِائَةِ كَذْبَةٍ ) "அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின்னு எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகிறான்" என்று பதிலளித்தார்கள். நூல்:-  புகாரீ-6213, முஸ்லிம்-4486

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் சோதிடரிடம் சென்று ஏதேனும் ஒரு விஷயத்தைப்பற்றி கேட்டால், அவருடைய நாற்பது நாள்களின் தொழுகைகள் அங்கீகரிக்கப்படாது. அறிவிப்பாளர்:- ஸஃபிய்யா (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4488

 

மூடப்பழக்கங்கள்

 

வீட்டை விட்டு வெளியேறும்போது பூனை குறுக்கே சென்றாலும், விதவை, மலடி, குறுக்கே சென்றாலும், முகடு முட்டிக் கொண்டாலும், கால் இடறினாலும், சகுனம் சரியில்லை என்பார்கள். இது போன்ற மூடநம்பிக்கை அன்றைய அறியாமைக் கால அரபியரிடம் அதிகமாகக் காணப்பட்டது.

 

அறியாமைக் கால அரபியரில் ஒருவர் தன் காரியமாக வெளியே புறப்படும்போது அவருக்கு வலப்புறம் பறவை பறந்தால் நல்ல சகுனம் என்றும், இடப்புறம் பறந்தால் அதைக் கெட்ட சகுனம் என்றும் கருதி திரும்பி விடுவார்கள்.

 

மனிதர்களின் வாழ்க்கைக்கும் பறவைகள் பறப்பதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எதிர்காலத்தில் நிகழப் போவதை தெரிவிக்கும் ஆற்றலும் பறவைகளுக்கு இல்லை என்று ஆணித்தரமாக கூறி மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்கள்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

 

ஒருமுறை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஹுதைபியா என்ற இடத்தில் காலை (ஸுப்ஹு) தொழுகையை தொழ வைத்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுகையை முடித்தவுடன் மக்களை முன்னோக்கி, ( هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ ) "உங்களது இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா?" என்று வினாவினார்கள். நபித்தோழர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று கூறினர்.

 

அப்போது ( أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ، فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي وَكَافِرٌ بِالْكَوْكَبِ، وَأَمَّا مَنْ قَالَ بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ ) “எனது அடியார்களில் என்னை நம்பிக்கைக்கொண்டவரும் என்னை மறுத்தோரும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் கருணையாலும் அவனது அருளாலும் நமக்கு மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை நம்பிக்கைக்கொண்டு நட்சத்திரங்களை மறுத்தவர் ஆவார். இன்ன இன்ன நட்சத்திரத்தின் காரணமாக மழை பொழிந்தது என்று கூறுபவர் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை நம்பிக்கைக்கொண்டவர் ஆவார்” என அல்லாஹ் கூறுகிறான் என்று நபியவர்கள் தெரிவித்தார்கள். அறிவிப்பாளர்:- ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-846, முஸ்லிம்-125

 

நட்சத்திரங்களின் அசைவின் மூலம் நன்மை தீமை நிகழும் என்று நம்புவதும், சிம்ம ராசி உள்ளவருக்கு இன்றைக்கு இன்ன பலன், கடக ராசி உள்ளவருக்கு இன்றைக்கு இன்ன பலன் என்று ராசிபலன்களை நம்புவதும், இறைநிராகரிப்பின் பக்கம் நம்மை சேர்த்து விடும். தினசரி, வார, மாத இதழ்களில் வரும் இந்த விஷயங்களை படிப்பதும், அது சம்பந்தப்பட்ட டிவி சேனல்களைப் பார்ப்பதும் பெரும் பாவமாகும்.

 

வருங்காலத்தை முழுமையாக அறிந்தவன் அல்லாஹுத்தஆலா ஒருவன் மட்டுமே. மனிதர்களால் வருங்காலத்தை அறிய முடியாது என்பதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். சோதிடத்தை அறவே நம்பாமல், நிகழ்பவை அனைத்தும் இறைநாட்டம் என்பதை உளமாற நம்புவோமாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...