Search This Blog

Friday, 20 September 2024

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்

 

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள்

 

وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

அறிவாளிகளே! பழிக்குப் பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழி வாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்ய கருதுபவனும், அவனால் கொலை செய்யப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்) நீங்கள் உங்களை (இத்தீமைகளிலிருந்து) காத்துக்கொள்ளலாம். திருக்குர்ஆன்:- 2:179

 

இன்றைய நவீன உலகில் தண்டனைகள் குற்றங்களை களைய வல்லவையாக இல்லாத காரணத்தால் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றன. குற்றங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இஸ்லாம் பல சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

மது அருந்தினாலோ அல்லது வதந்தியை பரப்பிவிட்டாலோ அல்லது திருமணமாகாதவர் விபச்சாரம் செய்து விட்டாலோ சாட்டையடி கொடுக்க வேண்டும். திருடினால் கையை வெட்ட வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் வெளியேறி வன்முறைகளில் ஈடுபட்டாலோ அல்லது திருமணமானவர் விபச்சாரம் செய்து விட்டாலோ அல்லது ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுவிட்டாலோ அல்லது ஒரு மனித உயிரை அநியாயமான முறையில் கொலைசெய்து விட்டாலோ மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் குற்றவியல் தண்டனைகளை விவரிக்கிறது.

 

இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடுமையானவை மனித நேயமற்றவை என்று பரவலாக விமர்சிக்கின்றனர். தண்டனைகளால் குற்றவாளிகள் பாதிக்கப்படுவதை மட்டும் பார்ப்பவர்கள், அவர்கள் செய்த குற்றங்களால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையோ அந்தப் பாதிப்பு எவ்வளவு கடுமையானது என்பதையோ கவனிப்பதில்லை.

 

கொலையாளிகளை கொல்வதால் கொல்லப்பட்டவரின் உயிர் திரும்பப் போவதில்லை. கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்பி வரப்போவதில்லை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டுப் போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறிபோனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர, பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்கு பயனேதும் கிடையாது.

 

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கமல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதின் நோக்கம் இதுவே:

1) குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனை தடுக்க வேண்டும்.

2) ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3) குற்றவாளியால் பாதிப்புக்குள்ளானவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக நம்ப வேண்டும். அதன் மூலம் அவன் மன அமைதி பெற வேண்டும்.

 

மது அருந்தினால்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. மது அருந்திய ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவரை பேரிச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சி காலத்தில்) அவ்வாறே செய்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது (கிராமங்கள் உட்பட பல பகுதிகளில் இஸ்லாம் பரவியது. மக்களின் வாழ்க்கை வசதிகள் பெருகி குடிப்பழக்கம் அதிகரித்தது. அப்போது) மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள) குற்றவியல் தண்டனைகளிலேயே குறைந்தபட்ச தண்டனையாக எண்பது (சாட்டையடிகள் வழங்கலாம்) என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். நூல்:- முஸ்லிம்-3512, அபூதாவூத்-3883

 

மது அருந்துதல் இஸ்லாத்தில் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாகும். போதை தரும் ஒரு பொருளை சிறிதளவு அதிகளவு பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டது. மது அருந்தியவன் தன் அறிவையும், சுய சிந்தனையையும் கெடுத்து தன் நிலையை மறந்துவிடுகிறான். அறிவு மங்கி, சிந்தனையோட்டம் தடை பட்டால் அல்லாஹ்வை நினைவு கூர்வதும் இறைவழிபாடுகளும் தடைபட்டுவிடும். உடல் நிலையும் கெட்டுப்போகும்.

 

மருத்துவ நிபுணர் "சர் விக்டர் ஹார்ஸ்லி" கூறுகிறார். மதுப்பழக்கத்தால் மயக்கம், புலம்பல், பைத்தியம், நரம்புத்தளர்ச்சி, வலிப்பு, பக்கவாதம், இரைப்பைப் புண், கல்லீரல் வீக்கம், ஆண்மை குறைவு, இதய நோய், மூளை பாதிப்பு, இரத்தக்குழாய் தடித்தல் இது போன்ற இன்னும் பல நோய்கள் உண்டாகும்.

 

மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி. ஆனால், ஒரு மனிதன் போதைப் பொருளை உட்கொள்ளும்போது இந்த தடை செய்யும் மையம் வேலை செய்வதில்லை.

 

எனவே தான், குடி போதையில் இருக்கும் மனிதன் சம்பந்தமில்லாமல் தன் மனம்போன போக்கில் செயல்படுகிறான். குடிபோதையில் இருப்பவன் தன் பெற்றோர் மற்றும் மனைவி மக்களை ஏசுவதையும் அடிப்பதையும் அவர்களிடம் மோசமாக நடந்துகொள்வதையும் காணப்படுகிறது.

 

குடிபோதையில் இருப்பவன் தன் ஆடையிலேயே சிறுநீர் கழிப்பதையும் சாக்கடை என்றும் பாராமல் அதில் படுத்துறங்குவதையும் சரியாக நடக்கவும் பேசவும் முடியாமல் இருப்பதையும் காணமுடிகிறது.

 

போதைக்கு அடிமையானவர்கள் அதனை உட்கொள்வதற்காக திருடவோ, பிச்சை எடுக்கவோ தயங்குவதில்லை. பெண்களானால் கற்பை விற்கக் கூட தயாராகி விடுகின்றனர். கற்பழிப்பு சம்பந்தமாக கைதான 207 பேர்களில் மது குடித்தவர்கள் 69% ஆகும் என்றும் அதிகமான சாலை விபத்துக்கள் போதைப்பொருள் உட்கொண்டவர்களால் தான் நிகழ்கிறது என்றும் ஓர் ஆய்வு கூறுகிறது.

 

உலகில் மது அருந்தும் குற்றம் நிகழாமல் இருப்பதற்கு தான் மது அருந்துபவனுக்கு தண்டனையாக எண்பது சாட்டையடிகள் அடிக்க வேண்டும் என்கிறது இஸ்லாமிய குற்ற அவையில் சட்டம்.

 

அவதூறு கூறினால்

 

எவனேனும் கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறி, அதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால், அவனை எண்பது சாட்டையடிகள் அடியுங்கள். பின்னர் அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்,) நிச்சயமாக இத்தகையவர்கள் பெரும் பாவிகள். திருக்குர்ஆன்:- 24:4

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் தூய்மையானவள் என்று எடுத்துரைக்கும் இறைவசனம் அருளப்பட்டதும் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அதனை மக்களிடம் தெரிவித்துவிட்டு பின்னர் என் மீது அவதூறு கூறிய இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் (ஹஸ்ஸான் பின் ஸாபித் - ரலி, மிஸ்தஹ் - ரலி, ஹம்னா பின்த் ஜஹ்ஷ் - ரலி) அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள். அவர்களுக்கு சாட்டையடிகள் கொடுக்கப்பட்டது. நூல்:- அபூதாவூத்-3880, திர்மிதீ-3105, இப்னுமாஜா-2557, முஸ்னது அஹ்மத்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஹிலால் பின் உமையா (ரலி) அவர்கள் (கர்ப்பிணியான) தன் மனைவியை ஷரீக் பின் ஸஹ்மா என்பவருடன் இணைத்து (விபச்சாரக்) குற்றம் சாட்டினார். அருமை நாயகம் (ஸல்) அவர்கள், ( اَلْبَيِّنَةَ وَإِلَّا فَحَدٌّ فِي ظَهْرِكَ ) "அதற்கு சாட்சி கொண்டு வா! இல்லையெனில் உமது முதுகில் சாட்டையடிகள் தான் விழும்" என்று கூறினார்கள். நூல்:- அபூயஅலா, புலூகுல் மராம்-1251

 

இன்றைக்கு கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது நினைத்தவனெல்லாம் இஷ்டத்துக்கு அவதூறை அள்ளி வீசுவதையும் அந்த அவதூருக்கு கண் காது வைத்து மக்களிடையே பரப்புவதையும் காணுகிறோம்.

 

இஸ்லாமிய ஆட்சியில் ஏதேனும் ஒரு அப்பாவி பெண் மீது போகிற போக்கில் அவதூறு குற்றச்சாட்டை அள்ளி வீசிவிட்டு அவ்வளவு எளிதாகச் சென்றுவிட முடியாது. இது போன்ற செயலை ஒருவன் செய்தால் இதற்கு நான்கு சாட்சிகளை கொண்டு வந்து நீதிமன்றத்தின் நிறுத்தியாக வேண்டும். அவ்வாறு சாட்சிகளை கொண்டு வர முடியவில்லையெனில், அந்தக் குற்றத்திற்கு தண்டனையாக அவனுக்கு எண்பது சாட்டையடிகள் வழங்கப்படும். அது மட்டுமல்ல இனி எக்காலத்திலும் அவன் கூறும் சாட்சியத்தை மார்க்கச் சட்டம் ஒப்புக்கொள்ளாது.

 

அந்த நான்கு சாட்சிகளில் எவனாவது ஒருவன் ஒழுங்காக சாட்சியளிக்காவிட்டாலும் நான்கு பேர்களுக்கும் தண்டனை கொடுக்கப்படும். யார் மீது எந்த வகையான அவதூறை கூறினாலும் முறையாக நான்கு சாட்சிகள் கொண்டுவராவிட்டால் அவனுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுக்கப்படும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

திருமணமாகாதவர் விபச்சாரம் செய்துவிட்டால்

 

(திருமணமாகாத) பெண்ணோ, ஆணோ விபச்சாரம் செய்து விட்டால் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடிகள் அடியுங்கள். திருக்குர்ஆன்:- 24:2

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( خُذُوا عَنِّي الْبِكْرُ بِالْبِكْرِ جَلْدُ مِائَةٍ وَنَفْىُ سَنَةٍ ) "(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்து விட்டால் நூறு சட்டையடிகள் அடித்து, ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-3489, அபூதாவூத்-3834

 

விபச்சாரம் என்பது தனிமனித ஒழுங்கீன மட்டுமல்ல. அது சமூகத்தையும், நாட்டையும் பாதிக்கின்ற மிகப்பெரிய சமூகத் தீமையாகும். விபச்சாரத்தால் குடும்ப உறவு, இல்லற அமைதி, மானம், பொருளாதாரம், சுகாதாரம் என எல்லா மட்டங்களிலும் பாதிப்பு உண்டாகும். எய்ட்ஸ் என்ற உயிர்க் கொல்லி நோய்க்கும் பாலியல் குற்றங்களே காரணம். எனவே, விபச்சாரத்தை பெரும் பாவப்பட்டியலில் சேர்த்து அதை தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாக இஸ்லாம் அறிவித்துள்ளது.

 

திருமணமாகாத பெண்ணோ, ஆணோ விபச்சாரம் செய்துவிட்டால் அவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடிகள் வழங்கப்படும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

திருடிவிட்டால்

 

ஆணோ பெண்ணோ எவர் திருடினாலும் (இத்)தீயச்செயலுக்கு தண்டனையாக அவர்களின் கைகளை துண்டித்துவிடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனையாகும். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவராகவும் இருக்கிறான். திருக்குர்ஆன்:- 5:38

 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் மூன்று வெள்ளிக்காசுகள் விலைமதிப்புள்ள ஒரு தோள் கேடயத்தை திருடியவனின் கையை துண்டித்துள்ளார்கள். நூல்:- புகாரீ-6795, முஸ்லிம்-3483

 

அபூ உமையா அல்மக்ஸூம் (ரலி) அவர்கள் கூறியதாவது. அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு திருடர் கொண்டுவரப்பட்டார். அவர் தமது திருட்டை ஒப்புக்கொண்டார். ஆனால், அவரிடம் பொருள் ஏதும் காணப்படவில்லை. அவரிடம் நபியவர்கள், ( مَا إِخَالُكَ سَرَقْتَ ) "நீ திருடியிருப்பாய் என நான் கருதவில்லை" என்று கூறினார்கள்.

 

அதற்கு அவர், "ஏன் இல்லை! (நான் திருடினேன்)" என்றார்.‌ ஆனால் நபியவர்கள் அதே போன்று இரண்டு அல்லது மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார்கள். (ஒவ்வொரு தடவையும் அவர் தான் திருடியதை வலியுறுத்திக் கூறியே வந்தார்) இறுதியாக, அவரது கையை வெட்டுமாறு உத்தரவிட்டார்கள். உடனே (கை) வெட்டப்பட்டது. நூல்:-  அபூதாவூத்-3807, நசாயீ-4794, இப்னுமாஜா-2587, முஸ்னது அஹ்மத்

 

எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவச்செயல் என்று போதிக்கின்றன. அப்படியெனில், மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கு உள்ள வேறுபாடு தான் என்ன? திருடுவது ஒரு பாவச்செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்குவது எப்படி? என்றும் வழிகாட்டுகிறது இஸ்லாம்.

 

பாவம்! திருட்டுக்கு கையை வெட்டுகிறீர்களே! என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகிறார்கள். மனித உரிமை மீறல் என்று இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை சிலர் விமர்சிக்கின்றனர்.

 

திருட்டு செயலானது சந்தேக வலையை விரித்து விடுகிறது. தன் சகோதரனையும், உற்ற தோழனையும், விசுவாசத்திற்குரிய வேலைக்காரனையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தூண்டுகிறது. திருட்டுச் செயலால் எத்தனையோ உறவுகள் சின்னாபின்னமாக சிதைந்து போயிருக்கிறது.

 

மரணப்படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிரைக் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் திருடிவிடுகிறான். இதன் விளைவு பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கின்றானே அவனுக்காக யார் பரிதாபப்படுவது.

 

நேர்மையும் ஒழுக்கத்தையும் விரும்பக்கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தரவில் நிற்பதை பார்த்து பரிதாபப்படாமல் அவனை நடுத்தெருவில் நிறுத்திய அயோக்கியனுக்கு பரிதாபப்படுகிறார்கள். பணத்தை பறிகொடுத்தவனிடம் போய் கேட்டால் கையை என்ன காலையும் சேர்த்துத் துண்டிக்க வேண்டும் என்பான்.

 

இப்படியே கையை வெட்டிக்கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

 

திருடுவோருக்கு தண்டனையாக கை வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தும்போது திருடுவதை தொழிலாக வைத்திருப்போர்கூட திருடுவதுப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள். சிந்திக்க ஆரம்பித்தாலே திருட்டு குற்றம் குறைய ஆரம்பித்துவிடும். முதன்முதலாக திருட எண்ணுபவனும் அதற்கு கிடைக்கும் தண்டனையை அறியும்போது திருட துணிவு பெறமாட்டான்.

 

அதையும் மீறி ஒரு சிலர் திருட்டுத் தொழிலை தொடர்ந்தால் அவர்கள் பிடிபடும்போது அவர்களின் கைகள் மட்டும் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வெட்டப்படலாமே தவிர, நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. இலட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழ முடியும்.

 

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும்போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள இயலும். எனவே, அவனிடம் தங்கள் பொருள்களை பறி கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்துகொள்ளலாம்.

 

ஐம்பது முறை திருடியவன் கைது, நூறு முறை திருடியவன் கைது என்று செய்திகள் மூலம் அறிகிறோம். 99 முறை திருடியவனுக்கு சரியான தண்டனை கொடுக்காத காரணத்தாலேயே நூறாவது முறை திருடுகிறான். முதல் திருட்டிலேயே சரியான தண்டனையை கிடைத்திருந்தால் மீதி 99 பேர் தங்கள் பொருள்களை இழந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.

 

குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில்போட்டு அவனை பராமரித்து பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதார செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப்பணம் வீணாகாமல் இந்த சட்டம் தடுக்கின்றது.

 

திருடியவர்களை சரியான சாட்சிகளோடு நிரூபிக்கப்பட்டால் தான் அவர்களின் வலது கை மணிக்கட்டு வரை துண்டிக்க வேண்டும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. மரத்தில் தொங்கும் கனி (வகை)களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு நபியவர்கள், ( مَنْ أَصَابَ بِفِيهِ مِنْ ذِي حَاجَةٍ غَيْرَ مُتَّخِذٍ خُبْنَةً فَلاَ شَىْءَ عَلَيْهِ ) "எவன் தன் மடியில் அள்ளி எடுத்துக்கொண்டு செல்லாமல் வயிற்று தேவைக்காக சாப்பிட்டுவிடுகிறானோ அவனுக்கு தண்டனை இல்லை" என்று கூறினார்கள். நூல்:- அபூதாவூத்-3816, திர்மிதீ-1210, நஸாயீ-4872, முஸ்னது அஹ்மத்

 

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறபோது திருட்டு குற்றத்திற்கு கையை வெட்டக்கூடாது என்று உத்தரவிட்டார்கள்.

 

திருட்டு குற்றத்திற்கு இஸ்லாமியச் சட்டம் வழங்கும் தண்டனை கையை வெட்டுதல் என்றாலும், ஒருவன் தாங்கமுடியாத பசிக்காகவோ, தவிர்க்க முடியாத தேவைகளுக்காகவோ இக்குற்றம் புரிந்தால் தண்டனை கிடையாது. ஏனென்றால், பசியும் மற்ற தீர்க்கப்படாத தேவைகளும் சமுதாயத்தின் குற்றம் என்று இஸ்லாமியச் சட்டம் கூறுகிறது.

 

தத்துவ கதை

 

நீதிபதி: திரும்பத் திரும்ப பிக்பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?

 

பிக்பாக்கெட் காரன்: எத்தனை தடவை பிக்பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?

 

நீதிபதிக்கு சுருக்கென்றது. உடனே நீதிபதி, பிக்பாக்கெட் காரனை ஜெயிலுக்கு அழைத்துப்போகச் சொல்லிவிட்டு ஜெயிலரைத் தனியாக அழைத்து ஏதோ பேசினார்.

 

ஜெயிலர், பிக்பாக்கெட் அடித்த மற்ற பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். அந்த பிக்பாக்கெட் காரனை தனியாக அழைத்து,இந்த பிளாக்கில் இரு. உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அந்தக் காசை கொண்டுபோய் கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு” என்று சொன்னார். அந்த பிக்பாக்கெட் காரன் சந்தோஷமாக ஒப்புக்கொண்டான்.

 

ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்து,அந்த பிக்பாக்கெட் காரன் கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனிடம் பிக்பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக்கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.

 

அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள். முதல் நாளே அந்த பிக்பாக்கெட் காரன், பிக்பாக்கெட்டில் காசை திருடுகொடுத்தான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரப்படவில்லை. பசியில் அவனைத் துடிக்கவிட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சவிட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.

 

அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ஒன்பது பேரும் பட்டினி! அதைவிட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!

 

நீதிபதி, எல்லோரும் விடுதலைபெறும் நாளில் வந்து, “சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.

.

அந்த பிக்பாக்கெட் காரன்,ஒருநாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான்.

 

அந்த ஒன்பது பேரும்,பிக்பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்கமாட்டோம்” என்றார்கள்.

 

குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்கவேண்டும் அது தான் சிறந்த அரசாகும்.

 

பயங்கரவாதத்தில் ஈடுபட்டால்

 

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக போர் தொடுத்து, பூமியில் கலகம் விளைவித்து கொண்டிருப்போரின் தண்டனை இது தான். அவர்கள் கொல்லப்பட வேண்டும். அல்லது சிலுவையில் அறையப்பட வேண்டும். அல்லது மாறு கை மாறு கால் வெட்டப்பட வேண்டும். அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். திருக்குர்ஆன்:- 5:33

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. உகல் குலத்தைச் சேர்ந்த சிலர் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து இஸ்லாத்தை தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை நபியவர்கள் முஸ்லிம்களின் பொதுச்சொத்தான தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல்நலம் பெற்றனர்.

 

பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல் அந்த ஒட்டகங்களை மேய்ப்பவரை கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டி சென்றுவிட்டனர். ஆகவே, நபியவர்கள் அவர்களைப் பிடித்து வரச் செய்து அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்ததற்காக) அவர்களின் கண்களை தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அதே நிலையிலேயே சாகும் வரை விட்டுவிடச் செய்தார்கள். நூல்:- புகாரீ6802, முஸ்லிம்-3447

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ ) எவர் தமது மார்க்கத்தை (இஸ்லாத்தை விட்டும்) மாற்றிக்கொள்கிறாரோ அவருக்கு மரண தண்டனை அளியுங்கள். அறிவிப்பாளர்:- இக்ரிமா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-6922, அபூதாவூத்-3787, திர்மிதீ-1378, நாசாயீ-3991, இப்னுமாஜா-2526, முஸ்னது அஹ்மத்   

 

அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இஸ்லாத்தை விட்டு (வெளியேறி) மதமாறி விட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அவருக்கு ஏறத்தாழ இருபது இரவுகள் இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள். யமன் தேச கவர்னர் முஆத் (ரலி) அவர்களும் அவனிடம் வந்து இஸ்லாத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள். ஆனால், அவன் அதை மறுத்துவிட்டான் ஆகையால் அவனுடைய கழுத்தை வெட்டினார்கள். நூல்:- அபூதாவூத்-3791

 

வன்முறையிலும் பயங்கரவாதத்திலும் ஈடுபட்டு பொதுமக்களின் உயிருக்கும் உடமையிக்கும் சேதங்களை விளைவிப்போருக்கும் இஸ்லாத்தைவிட்டு வெளியேறி தேசத்தின் நலனுக்கு துரோகம் விளைவிப்போருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

சில அறிஞர்கள் கூறுகிறார்கள். மேற்கண்ட இறைவசனத்தில் இடம்பெறும் தண்டனைகளில் எது ஏற்றதென இஸ்லாமிய ஆட்சியாளர் கருதுகிறாரோ அந்த தண்டனையை வழங்கலாம். நூல்:- அல்மின்ஹாஜ்

 

இஸ்லாம் இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட சத்திய மார்க்கமாகும். இம்மையும் மறுமை என இரு உலகிலும் மனிதன் மோட்சம் பெற இஸ்லாமே வழிவகுக்கிறது. இத்தகையப் புனித மார்க்கத்திலிருந்து ஒருவர் வெளியேறுவது தம்மைத்தானே அழித்துக்கொள்வதற்கு சமமாகும். இஸ்லாத்தை அறிந்து அதன் உண்மைகளைப் புரிந்து கொண்ட பிறகு இஸ்லாத்திலிருந்து ஒருவர் வெளியேறுகிறார் என்றால், தெரிந்து கொண்டே உண்மையை மறுக்கிறார் என்று தான் பொருள்.

 

இஸ்லாமிய நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் அந்த நாட்டின் அரசியல் முடிவுகள், இராணுவ இரகசியங்கள், அரசின் திட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள்கூட முஸ்லிம்களாக இருந்த அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இந்நிலையில் உயிரினும் மேலான இஸ்லாமிய மார்க்கத்தையே துறந்து மதம் மாறிய அவர்கள் அந்த தேசத்தின் பலம் மற்றும் பலவீனங்களை எதிரிகளுக்குக் காட்டி கொடுக்கவும் தயங்கமாட்டார்கள். அது, அந்த நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கே அறை கூவலாக அமைந்துவிடும்.

 

அதுமட்டுமின்றி மார்க்க ரீதியாக அந்நாட்டு முஸ்லிம்களுக்கு தொழுகை, நோன்பு, ஸக்காத் போன்ற கட்டாயக் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். முஸ்லிமாக இருந்தால் தானே இக்கடமைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என எண்ணி ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறலாம்.

 

தேச விரோத மற்றும் மார்க்க விரோத செயலில் ஈடுபட்ட இவர்களை அணுகி மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டும் இஸ்லாத்தில் இணைந்து வாழ வழி காண வேண்டும். இறுதி வரை அவர்கள் பிடிவாதமாக மறுத்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாகவும் அமையும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

திருமணம் முடித்தவர் விபச்சாரம் செய்துவிட்டால்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது முஸ்லிம்களில் ஒருவர் வந்து, "நாயகமே! நான் விபச்சாரம் செய்து விட்டேன்" என்று கூறினார். நபியவர்கள் தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபியவர்களின் முகத்துக்கு நேராக வந்து அதையே சொன்னார். அப்போதும் நபியவர்கள் தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக் கொண்டார்கள். அவர் திரும்பத் திரும்ப அதையே நான்கு தடவை சொல்லி தமக்கெதிராக தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

 

அப்போது நபியவர்கள், ( أَبِكَ جُنُونٌ ) "உமக்கு பைத்தியமா?" என்று கேட்டார்கள். அவர், "(எனக்கு பைத்தியம்) இல்லை" என்றார். நபியவர்கள், ( فَهَلْ أَحْصَنْتَ ) "உமக்கு திருமணமாகி விட்டதா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (திருமணமாகி விட்டது.)" என்றார். எனவே நபியவர்கள், ( اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ ) "இவரைக் கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-6815, முஸ்லிம்-3493

 

திருமணமான ஒருவர் விபச்சாரம் செய்துவிட்டால் கல்லெறி (ரஜ்ம்)  எனும் மரண தண்டனை வழங்கப்படும். தானாக விரும்பி இந்த குற்றத்தை செய்தாலும் கட்டாயப்படுத்தி செய்தாலும் தண்டனை உண்டு. ஆனால், நிர்பந்தப்படுத்தி கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனை கிடையாது. விபச்சார குற்றத்தை குற்றவாளி ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது நான்கு சாட்சிகள் கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் அப்போதுதான் இந்த தண்டனை வழங்கப்படும்.

 

ஆண் பெண்ணுக்கிடையே நடக்கும் சட்ட விரோதமான இனச்சேர்க்கையினால் எண்ணற்ற தீமைகள் விளைகின்றன. தவறிழைக்கும் மனிதனை மட்டுமின்றி அவன் வாழும் சமூகத்தையும் தீமைகள் வெகுவாக பாதிக்கிறது. விபச்சாரத்தினால் விளையும் சமூக கேடுகளால் கருக்கொலை முதலிடத்தை பிடிக்கிறது.

 

விபச்சாரம் புரிவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறிய இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தை அநாகரிகம் என்றும் காட்டுமிராண்டித்தனம் என்றும் விமர்சனம் செய்வோர், விரும்பி செய்யும் விபச்சாரத்தை அவர்கள் குற்றமாகவே கருதுவதில்லை. கற்பழிப்பு மட்டும் இவர்களின் பார்வையில் குற்றமாகும். இந்திய குற்றவியல் சட்டம் 37வது பிரிவின் கீழ் கற்பழிப்பில் ஈடுபடுபவருக்கு ஏழு ஆண்டு அல்லது பத்து ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அதில் அதிகபட்சமாக ஆயுள் தன்னை வழங்கப்படும் என்கிறது.

 

இப்படி விமர்சனம் செய்வோர் இவ்விதமாக சிந்திக்கட்டும்: அவர்களது மனைவி அல்லது சகோதரி அல்லது அவர்களது குடும்பப் பெண்களை ஒருவன் கற்பழித்துவிட்டான். இந்நிலையில் நீதிமன்றத்தில் கற்பழித்தவனுக்கு தீர்ப்பு வழங்கக்கூடிய நீதிபதியாக அவர்கள் இருந்தால், நிச்சயமாக அவன் மரணிக்கும் வரை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும் என்று தான் தீர்ப்பளிப்பார்களே தவிர, அவனை சிறையில் அடைத்து மூன்று வேலை உணவு கொடுத்து அவனை நல்ல முறையில் பராமரியுங்கள் என்று அவர்கள் கூற மாட்டார்கள். அதில் சந்தேகமில்லை. உலக அளவில் கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் தீர்ப்பு இதுதான்.

 

கற்பழிக்கப்பட்டவள் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனையை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை சீர்தூக்கி பார்த்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

ஓரினச்சேர்க்கை செய்தால்

 

நம்முடைய (தண்டனையாகிய) கட்டளை வந்தபோது (ஓரினச்சேர்க்கையாளர்கள் வசித்து வந்த) அவ்வூரின் மீது கல் மழை பொழிந்து அதன் மேற்பகுதியைக் கீழ் பகுதியாக்கினோம். திருக்குர்ஆன்:- 11:82

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ ) ஓரினச்சேர்க்கை செய்பவனை நீங்கள் கண்டால் செய்பவனையும் செய்யப்படுபவனையும் கொன்றுவிடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-3869, திர்மிதீ-1376, இப்னுமாஜா-2551

 

( مَنْ أَتَى بَهِيمَةً فَاقْتُلُوهُ وَاقْتُلُوهَا مَعَهُ ) "எவன் கால்நடைகளுடன் கலவி புரிகின்றானோ அவனையும் அந்த கால்நடையையும் கொன்றுவிடுங்கள்" என்ற நபிமொழியை அறிவித்த அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "கால்நடை என்ன தவறு செய்தது?" என்று வினவப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ( مَا أُرَاهُ إِلاَّ قَالَ ذَلِكَ أَنَّهُ كَرِهَ أَنْ يُؤْكَلَ لَحْمُهَا وَقَدْ عُمِلَ بِهَا ذَلِكَ الْعَمَلُ ) "அதனுடைய இறைச்சியை உண்ணக்கூடாது அதைக்கொண்டு வேறு எத்தகைய பலனும் அடையக்கூடாது என்பது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நோக்கமாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்” என்றார்கள். நூல்:- அபூதாவூத்-3871, திர்மிதீ-1374  

 

இஸ்லாத்தின் முதல் ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவர் மீது சுவரை விழச் செய்(து சாகடித்)தார்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- ரஸீன், தஃப்சீர் குர்துபீ

 

ஓர் ஆண் மற்றொரு ஆணுடனும் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடனும் தவறான உறவு கொள்வதையே ஓரினச்சேர்க்கை எனப்படும். மாணவ மாணவியர் தங்கும் விடுதிகள், தொழிலாளர்கள் விடுதிகள், சிறைச்சாலைகள் போன்ற ஓரினம் தங்கும் இடங்களில் இப்பழக்கம் அதிகமாக காணப்படுகிறது.

 

அமெரிக்காவில் 1982 ஆம் ஆண்டு வயிற்றுப்போக்கு போன்ற அபூர்வ நோயுடன் அதிகமான பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் என தெரிய வந்தது. இந்த நோய்க்கு க்ரிட். (Grid - Grid related  immune deficiency) அதாவது, "ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பலகீனம் அடைந்த நிலை" என்று பெயர் சூட்டப்பட்டது அதன் பின்பு க்ரிட் என்ற இந்த நோயின் பெயரை மாற்றி "எய்ட்ஸ்" (AIDS) என்று பெயர் சூட்டினர்.

 

இறைவன், மனிதன் உட்பட உலகில் படைக்கப்பட்டுள்ள எல்லா உயிரினங்களுடன் கிளர்ச்சியையும் இணைத்து அதற்கு வடிக்கால்களாக அதன் ஜோடிகளையும் படைத்துள்ளான். மனிதன் திருமணத்திற்கு பின்பு தாம்பத்தியத்தின் மூலம் உடல் இச்சையை தணிப்பதுடன் இறைவனின் நாட்டமான சந்ததிகளை உற்பத்தி செய்வதையும் பிரதான நோக்கமாக கொண்டுள்ளதால் தாம்பத்தியம் புனிதமடைகிறது.

 

ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் இத்தகைய இச்சையை அனுபவிப்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளதால், ஓரினச்சேர்க்கை என்பது சாபக்கேடான காரியமாகவும், ஆட்கொல்லி நோய்கள் பரவுவதற்கு காரணமாகவும் இருக்கிறது. அதனால் இதில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்கிறது இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

பழிக்குப் பழி

 

உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்கு பல் மற்றும் காயங்களுக்கு பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத் வேதத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். திருக்குர்ஆன்:- 5:45

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. யூதனொருவன் ஒரு சிறுமியை அவளது வெள்ளி நகைக்காக கல் எறிந்து கொன்றுவிட்டான். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. நபியவர்கள் அவளிடம், ( أَقَتَلَكِ فُلاَنٌ ) "இன்ன மனிதரா? உன்னை தாக்கினார்" என்று கேட்டார்கள். அவள், "இல்லை" என்று தலையால் சைகை செய்தாள்.

 

இது போன்ற இரண்டு முறை கேட்டுவிட்டு மூன்றாவது முறை (ஒரு மனிதரின் பெயரை குறிப்பிட்டுக்) கேட்டபோது அவள், "ஆம்!" என்று தலையால் சைகை செய்தாள். ஆகவே, அந்த யூதனை அழைத்து வந்து விசாரித்து அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் இரு கற்களுக்கிடையே வைத்து அவனது தலையை நசுக்கி கொல்லுமாறு நபியவர்கள் உத்தரவிட்டார்கள். நூல்:- புகாரீ-2413, முஸ்லிம்-3453

 

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலைக்கு மரண தண்டனை வழங்கப்படும். எந்த ஆயுதத்தால் எந்த முறையில் கொலை நடந்ததோ அதே முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்கிறதே இஸ்லாமிய குற்றவியல் சட்டம்.

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தையின் சகோதரி ருபய்யிஉ பின்த் நள்ரு (ரலி) அவர்கள் ஒரு அன்சாரி இளம்பெண்ணின் முன் பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் இந்த வழக்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். நபியவர்களும் பழிக்குப் பழி வாங்கும்படி உத்தரவிட்டார்கள். இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர். நூல்:- புகாரீ-4611, முஸ்லிம்-3462

 

குற்றம் செய்தவர்களை கண்டிப்பதற்கும், தண்டிப்பதற்கும் தான் உலகமெங்கும் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் எல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களை குறைக்க இயலவில்லை.

 

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறை தண்டனை வழங்கப்படுகிறது. பெரும்பாலான நாடுகளின் தண்டனை அளவு இது தான். சிறை தண்டனை என்பதில் வெளியே வர முடியாத என்ற ஒரு அம்சத்தை நீக்கிவிட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வைவிட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

 

நீதி நேர்மையோடு வாழும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. ஆனால், பொறுக்கித்தனத்தோடு நடந்துகொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவு தரப்படுகிறது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களை எதுவும் செய்துவிடாத அளவுக்கு பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்படுகிறது.

 

இதில் வேதனையான அம்சம் என்னவெனில் எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகின்றானோ, எந்த மக்களை கொலை செய்கின்றானோ, எந்த பெண்களை கற்பழிக்கின்றானோ அந்த மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகிறது.

 

சிறைச்சாலையில் கிடைக்கும் வசதிகளை பற்றி மற்றவர்கள் தெரிந்துகொண்டால் நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்கு ஏன் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்து சிறைச்சாலைக்கு சென்றுவிட்டால், அங்கு மூன்று வேளை உணவு கிடைக்குமே என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபட தொடங்கிவிடுவர்.

 

மேலும், குற்றவாளிகள் சிறைச்சாலைகள் கூட்டமாக திட்டமிடவும் வாய்ப்பு கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுத்திகள் வகுக்கின்றனர். சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக்கழகங்களாக திகழ்வதை அனைவரும் அறிவர்.

 

மன்னித்துவிட்டால்

 

கொலையாளிக்கு (கொல்லப்பட்டவனின் வாரிசாகிய) அவனது சகோதரன் மூலம் மன்னிக்கப்படுமானால் மிக்க கண்ணியமான முறையை பின்பற்றி (அவனை கொலை செய்யாது விட்டு)விட வேண்டும். (பழிவாங்குவதற்கு பதிலாக கொலையாளி ஒரு தொகையை தருவதாக ஒப்புக்கொண்டிருந்தால், அந்த நஷ்டஈட்டை) தயக்கமின்றி நன்றியோடு அவன் செலுத்திவிட வேண்டும். இ(வ்வாறு நஷ்டஈட்டை அனுமதித்திருப்ப)து உங்கள் இறைவனுடைய சலுகையும் அருளும் ஆகும். திருக்குர்ஆன்:- 2:178

 

பாதிக்கப்பட்ட எவரேனும் பழிவாங்குவதை மன்னித்து தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்கு பரிகாரமாகிவிடும். திருக்குர்ஆன்:- 5:45

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ادْرَءُوا الْحُدُودَ عَنِ الْمُسْلِمِينَ مَا اسْتَطَعْتُمْ فَإِنْ كَانَ لَهُ مَخْرَجٌ فَخَلُّوا سَبِيلَهُ ) இயன்றவரை முஸ்லிம்களை விட்டும் தண்டனைகளை தடுத்துக் கொள்ளுங்கள். எனவே குற்றவாளியை விடுவிக்க ஏதேனும் வழியிருப்பின் அவரை விட்டுவிடுங்கள். அறிவிப்பாளர்:- ஆயிஷா (ரலி) அவர்கள் நூல்:- திர்மிதீ-1344, ஹாகிம்

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( ادْرَأُوا اَلْحُدُودَ بِالشُّبُهَاتِ ) சந்தேகம் வந்துவிடுமானால் தண்டனையைத் தவிர்ந்து கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அலீ (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, புலூகுல் மராம்-1248

 

கொல்லப்பட்டவனின் வாரிசுகள் கொலையாளியை மன்னித்துவிட்டாலும் அல்லது அந்த வாரிசுதாரர்களில் இருந்து ஒரே ஒருவர் மன்னித்தாலும்கூட கொலையாளிக்கு மரண தண்டனை வழங்க முடியாது. ஆனால், அதற்கான இழப்பீட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்.

 

ஒரு குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் அதற்கு பழிக்குப் பழி வாங்காமல் மன்னித்துவிட்டால் அது அவருடைய பாவத்திற்கு பரிகாரமாகிவிடும் என்று கூறி மன்னிப்பதே சிறந்த தர்மம் என்கிறது இஸ்லாம்.

 

மேலும், "எடுத்தேன் - கவிழ்த்தேன்" என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்களை நேரடி சாட்சிகள் மூலம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட பின்பு தான் தண்டனை வழங்குமாறு கூறுகிறது.

 

கொலையாளிக்கு மரண தண்டனை வழங்குவதைச் சட்டமாகக் கொண்டுள்ள பல நாடுகளில் கொலையாளியை மன்னிக்கும் அதிகாரத்தை கருணை மனு என்ற அடிப்படையில் நாட்டின் அதிபருக்கு (குடியரசு தலைவருக்கு) வழங்கி இருப்பதை காண்கிறோம். கொல்லப்பட்டவனுக்கு நாட்டின் அதிபர் மாமனோ, மச்சானோ அல்ல. ஒருவன் கொல்லப்பட்டதால் எந்த பாதிப்பும் அடையாத அதிபர்களிடம் இந்த அதிகாரத்தை அளித்திருப்பது மாபெரும் அநீதமாகும்.

 

ஒருவன் கொல்லப்படும்போது அதனால் அவனது வாரிசுகள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் ஏற்படும் கஷ்டமும், வேதனையும், வலியும் அவர்களுக்குத்தான் தெரியும். எனவே, இந்த மன்னிக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்டவனிடம் தான் இருக்க வேண்டும். இதுவே, அறிவுபூர்வமான நியாயமான சட்டம் என்று இஸ்லாம் இயங்குகிறது.

 

 

அல்லாஹ் விதித்த இக்கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை இறைநம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். திருக்குர்ஆன்:- 24:2

 

குற்றவியல் தண்டனைகள் நிறைவேற்றும்போது மக்களுக்கு தெரியாமல் இரகசியமாக நிறைவேற்றுவதை இஸ்லாம் விரும்புவதில்லை. ஏனெனில், தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில் அதை பார்த்து மக்கள் திருந்த வேண்டும் என்பதும் ஒன்றாகும். எனவே, மக்கள் முன்னிலையில் இது போன்ற தண்டனைகளை நிறைவேற்றப்பட்டால் தான் தண்டனை வழங்கப்படுவதின் நோக்கத்தை எட்ட முடியும். இதனால் தான் "மக்கள் பார்த்துக்கொண்டிருக்கட்டும்" என்று மேற்காணும் வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத நிலையில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதை கவனத்தில் கொண்டே சட்டம் இயற்றியுள்ளது. இந்தப் பூமியில் இஸ்லாமியச் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வருவதற்கு அல்லாஹுத்தஆலா அருள் புரிவானாக! ஆமீன்!

 

(இந்த கட்டுரை பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு. முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை,  சென்னை. செல்- 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...