Search This Blog

Monday, 23 September 2024

அழகிய பெயர் சூட்டுவோம்!

 

அழகிய பெயர் சூட்டுவோம்!

 

يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَى لَمْ نَجْعَلْ لَهُ مِنْ قَبْلُ سَمِيًّا

ஸகரிய்யா! நிச்சயமாக நாம் யஹ்யா என்ற பெயர்கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உமக்கு சுபச்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை. திருக்குர்ஆன்:- 19:7

 

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் தனக்கு குழந்தைகள் பிறக்கிறபோது அந்த பிஞ்சுக்குழந்தையை பார்த்து மகிழ்ச்சி கொள்வது போன்று, அவர்களுக்கு பெயர் சூட்டுவதில் மகிழ்ச்சி கொள்கிறான். எனினும், அப்பெயர்கள் சிறந்த பெயர்களாக, அழகிய பேர்களாக, நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பெயர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அப்படிப்பட்ட சிறந்த பெயர்களை வைத்து அழைப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறான்.

 

பெயரின் மூலம் தான் ஒரு மனிதன் பிற மனிதனைப் பிரித்தறிய முடிகிறது. குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது பெற்றோர்களின் கடமைகளில் மிக முக்கியமானதாக இஸ்லாம் கருதுகிறது. உயிரும் உடலும் மறைந்த பிறகும் நிலைத்து நிற்பது அவருடைய பெயர் தான். ஆகவே, பெயரில் என்ன இருக்கிறது? என்று ஏதாவது வாயில் வந்த பெயரை வைக்கக்கூடாது. நல்ல பெயர் சூட்டுவதில் அலட்சியமாகவும் இருக்கக்கூடாது.

 

அழகிய வழிமுறை

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மகளார் ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழந்தையின் செவியில் பாங்கு கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூ ராபிஉ (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத், திர்மிதீ

 

அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது. எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதைத் தூக்கிக்கொண்டு நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபியவர்கள் அக்குழந்தைக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டுப் பேரீச்சம்பழத்தை மென்று அதன் வாயில் ஊட்டினார்கள். அதனை வாழ்த்தி, அதற்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள். பின்பு அதனை என்னிடம் தந்துவிட்டார்கள். நூல்:- புகாரீ-5467

 

பிறந்துவிட்ட குழந்தை செவியுறும் முதல் வார்த்தை இறைவனுக்கு மிகவும் பிரியமான ஏகத்துவத்தை போதிக்கின்ற வார்த்தையாக இருக்க வேண்டும். அதனால் தான் ஏகத்துவ வார்த்தையை பொதிந்துள்ள பாங்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குழந்தையின் செவியில் முதலில் கூறினார்கள். இந்த நபிவழியை இஸ்லாமியர்களாகிய நாம் அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். இன்றைய பெற்றோர்களின் சிலர் இந்த நபிவழியை பின்பற்றுவதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும்.

 

மேலும், நம்முடைய ஊரிலுள்ள, பகுதியிலுள்ள மார்க்க அறிஞரை அழைத்து அல்லது நம்முடைய குழந்தையை தூக்கிக் கொண்டு போய் அவர்களிடம் கொடுத்து, அந்த குழந்தைக்கு அழகிய பெயரைச் சூட்டுவதற்கும், அதனுடைய வருங்காலம் செழித்தோங்க அழகிய பிரார்த்தனை செய்வதற்கும் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். அன்றைய காலத்தில் பல நபித்தோழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மூலமாக பெயர் சூட்டுவதை தான் விரும்பினார்கள்.

 

அல்லாஹ்வுக்குப் பிரியமானது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ وَأَسْمَاءِ آبَائِكُمْ فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ ) நிச்சயமாக நீங்கள் மறுமைநாளில் உங்களின் பெயராலும் உங்களின் தந்தையின் பெயராலும் அழைக்கப்படுவீர்கள். எனவே, அழகான பெயர்களைச் சூட்டிக்கொள்ளுங்கள். அறிவிப்பாளர்:- அபூதர்தா (ரலி) அவர்கள் நூல்:- அபூதாவூத்-4297

 

நாளையத் தீர்ப்பு நாளில் இறைவனின் உத்தரவுக்கிணங்க வானவர்கள் மனிதர்களின் பெயரைக் கூறி அழைத்து இறைவனின் சமூகத்தில் அவர்கள் நிறுத்துகின்றபோது அம்மனிதர்களின் பெயர்கள் அழகானதாக இருந்தால் அவற்றைகொண்டு அல்லாஹ் சந்தோஷமடைவான் என்பதை நபியவர்கள் சூசகமாகச் சுட்டிக்காட்டி, இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் அழகான பெயரைச் சூட்டிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறுகிறார்கள்.

 

எனக்கு பின்னர் அஹ்மத் எனும் பெயர் கொண்ட ஒரு தூதர் வருவதைப் பற்றியும், நான் உங்களுக்கு நற்செய்த கூறுகிறேன் என்று கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. திருக்குர்ஆன்:- 61:6

 

மார்க்க மேதைகள் கூறுகின்றார்கள். அல்லாஹ் உலகத்தை படைத்தது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகத்தில் ஜீவித்த காலம் தொட்டு யாருக்கும் "அஹ்மத்" என்று யாரும் பெயர் சூட்டவில்லை என்கிறார்கள். இதனால் தான் அல்லாஹ் "அஹ்மத்" என்ற சிறப்புப் பெயரை தனது தூதர்கள் எவருக்கும் சூட்டாமல் இறுதித்தூதருக்கு மட்டும் அப்பெயரைச் சூட்டி சிறப்பித்து, அவர்களின் வருகையை நற்செய்தி என்று கூறுகிறான். இக்கருத்தை தான் மேற்காணும் திருவசனம் தெளிவுபடுத்துகிறது.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( تَسَمَّوْا بِأَسْمَاءِ الأَنْبِيَاءِ وَأَحَبُّ الأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وَهَمَّامٌ وَأَقْبَحُهَا حَرْبٌ وَمُرَّةُ ) உங்களின் குழந்தைகளுக்கு இறைத்தூதர்களின் பெயரைச் சூட்டுங்கள். மேலும், பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது அப்துர் ரஹ்மான், அப்துல்லாஹ் என்பதும், பெயர்களில் மிகவும் உண்மையானது ஹாரிஸ், ஹம்மாம் என்பதும், பெயர்களில் மிகவும் அருவருப்பானது ஹர்பு (யுத்தம்) முர்ரா (கசப்பு) என்பதாகும். அறிவிப்பாளர்:- அபூ வஹப் (ரலி) அவர்கள் நூல்: அபூதாவூத்-4299, நசாயீ-3909, முஸ்னது அஹ்மத் 

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ ) ‏ (மறுமைநாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர் உலகில் ஒரு மனிதன் மலிக்குல் அமலாக் (மன்னாதி மன்னன்) என்று பொய் பெயர் சூட்டிக் கொள்வதாகும்.

 

மேலும், சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (பாரசீக மொழியில்) "ஷாஹான் ஷாஹ்" என்றாலும் மன்னாதி மன்னன் என்றுதான் பொருளாகும். நூல்:- புகாரீ-6206, முஸ்லிம்-4338

 

இதுபோன்ற நபிமொழிகளிலிருந்து இறைத்தூதர்கள், நபித்தோழர்கள், நல்லோர்கள் மற்றும் இறைவனின் தன்மைகள் தாங்கிய பெயர்களைக் கவனித்து பெயர் சூட்ட வேண்டும் என்று தெரிகிறது. இஸ்லாமிய அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பெயராகவும், நாம் வைக்கும் பெயர் அமைய வேண்டும். இதோ திருமறையில் சில சிறப்பான பெயர்களைக் கூறுகிறது.

 

நபியவர்களின் விருப்பும் வெறுப்பும்

 

ஒருமுறை பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் இரு மலைகளுக்கிடையே செல்ல நேர்ந்தது. அப்போது அவர்கள், "இம்மலைகளின் பெயர் என்ன?"என்று வினவினார்கள். அதற்கு "பாலிஹ் முக்ஸ்" (துன்பத்தைக் கொடுப்பவை என்ற பொருள் கொண்ட) பெயரைக் கூறப்பட்டது. உடனே அவ்வழியை விட்டும் விலகி விட்டார்கள்.

 

அருவருப்பான பெயர்களை மனிதனுக்கு மட்டும் சூட்டக்கூடாது என்பதல்ல. பிற வஸ்துகளுக்கும் பெயர் சூட்டுவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை என்று தெளிவாகிறது.

 

கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு ஊருக்கு வந்தால் அதன் பெயரை விசாரிப்பார்கள். நல்ல பெயராக தோன்றினால் மகிழ்ச்சியடைவார்கள். இல்லையாயின், வெறுப்படைவார்கள் என்கிறது ஒரு நபிமொழி.

 

இந்தக் கொள்கை வேண்டாம்

 

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது. "தூமத்துல் ஜந்தல்" பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு பட்டுத்துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபியவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, ( شَقِّقْهُ خُمُرًا بَيْنَ الْفَوَاطِمِ ) "இதை முக்காடுகளாக வெட்டி ஃபாத்திமாக்களுக்களிடையே பங்கிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-4209

 

அப்போது அலீ (ரலி) அவர்கள் குடும்பத்தில் மூன்று ஃபாத்திமாக்கள் இருந்தனர். 1) அலீ (ரலி) அவர்களின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத் (ரலி), 2) அலீ (ரலி) அவர்களின் மனைவியார் ஃபாத்திமா பின்த் முஹம்மத் (ரலி), அலீ (ரலி) அவர்களின் உடன்பிறவா சகோதரி (சாச்சா மகள்) ஃபாத்திமா பின்த் ஹம்ஸா (ரலி)

 

இதுபோன்று வலீத் என்றவர் தன் மகனுக்கும் வலீத் என்று பெயர் சூட்டியுள்ளார் என்று நபிமொழி நூல்கள் கூறுகிறது.

 

நம்முடைய குடும்பத்தார்களுக்கு மத்தியில் ஒரு நல்ல பெயரை ஏற்கனவே ஒருவருக்கு சூட்டப்பட்டுவிட்டதென்றால் அதே பெயரை தன் குடும்பத்தில் பிறந்துவிட்ட மற்றொரு குழந்தைக்கு பெயராக சூட்டுவதை (ஒரே பெயரை குடும்பத்தில் பலருக்கு சூட்டுவதை) சிலர் விரும்புவதில்லை. நல்ல கருத்துள்ள பெயர் என்றால் அதே பெயரை நம்முடைய குடும்பத்திலுள்ள எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் சூட்டலாம்; அதில் தவறில்லை என்று இந்த நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

 

நம்முடைய குழந்தைக்கு சூட்டுகின்ற பெயரில் நல்ல கருத்துக்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பெயர் பெரும் வரலாற்றைப் பெற்றதாகவும் இருக்க வேண்டும். பெயர் சூட்டுகின்றபோது "யா அல்லாஹ்! உனது நேசர்களில் இன்னார் பெயரை தான் என் குழந்தைக்கு சூட்டுகிறேன். அந்த இறைநம்பிக்கையாளரை நீ பொருந்திக்கொண்டதைப் போன்று என் குழந்தையையும் நீ பொருந்திக் கொள்வாயாக" என்று நாம் பிரார்த்திப்போமானால் இன்ஷா அல்லாஹ் அந்த இறைநேசரிடமிருந்த அனைத்து நற்பண்புகளும் நம்முடைய குழந்தைகளிடம் பிரதிபலித்து, நம்முடைய குழந்தைக்கும் இறைப்பொருத்தத்தை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

 

சிலர், நம்முடைய குழந்தைகளுக்கு என் தாய் அல்லது தந்தை அல்லது உறவினரில் இன்னாரின் பெயரைத்தான் சூட்டுவேன் என்று அடம்பிடிப்பார்கள். அந்தப் பெயரில் நல்ல கருத்துக்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்பார்கள். இவர்கள் சொல்வதைப் போன்று தன் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினால் தன் தாய் அல்லது தந்தை அல்லது உறவினரில் இன்னாரிடமிருந்த கெட்ட குணங்கள் பிரதிப்பலித்துவிட்டால் நாம் என்ன செய்ய முடியும்? அல்லது அவர்களிடம் கெட்ட குணங்கள் அறவே இல்லை என்று சொல்ல முடியுமா? சற்று யோசிக்க வேண்டுமல்லவா?

 

தலைவிதியை நிர்ணயிக்கும்

 

முஸய்யிப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தை ஹஸ்ன் பின் அபீவஹப் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபியவர்கள், ( مَا اسْمُكَ ) "உங்கள் பெயரென்ன?" என்று வினவினார்கள். அவர், "ஹஸ்ன்" (முரடு) என்று கூறினார். நபியவர்கள், ( أَنْتَ سَهْلٌ ) (இல்லை) நீங்கள் இனிமேல் சஹ்ல் (மென்மை)" என்று கூறினார்கள். அவர், ( لاَ أُغَيِّرُ اسْمًا سَمَّانِيهِ أَبِي ) "என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்" என்றார். அதற்குப் பின்பு எங்கள் குடும்பத்தாரிடையே (அவருடைய குண நலங்களில்) முரட்டுத்தனம் நீடித்தது. நூல்:- புகாரீ-6190, அபூதாவூத்-4305

 

உமர் (ரலி) அவர்கள் ஒருவரிடம் உமது பெயரென்ன? என்று வினவினார்கள். அதற்கு அவர் "ஜம்ரதுன்" (தீப்பொறி) என்றார். நீ யாருடைய மகன்? என்று வினவினார்கள். அவர் 'ஷிஹாப்'பின் (தீக்கங்கு) மகன் என்றார். நீ எந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்? என்று வினவினார்கள். அவர் "ஹர்கா" (தீ எரிபவர்) கூட்டத்தைச் சேர்ந்தவர் என்றார். உங்களது இருப்பிடம் எது? என்று வினவினார்கள். அவர் "ஹர்ரத்துந் நார்" (தீயின் சூடு) என்றார். எப்பகுதியில் வாழுகின்றீர்கள்? என்று வினவினார்கள். அவர் "ஸாதுள்ளலா" (கொழுந்து விட்டெரியும் தீ) என்றார். உடனே உமர் (ரலி) அவர்கள் அவரை நோக்கி, "உம்முடைய குடும்பத்தினர், உற்றார் உறவினரைச் சென்று பார். அவர்களெல்லாம் எரிந்து சாம்பலாகிவிட்டார்கள்" என்று கூறினார்கள். உண்மையில் அவ்விதமே ஆகியிருந்தது. அறிவிப்பாளர்:- யஹ்யா பின் சஅத் (ரஹ்) அவர்கள் நூல்:- முஅத்தா மாலிக்

 

பெயர்களுக்கேற்ற பிரதிபலிப்பு நம்மிடம் ஏற்படும். நமது குழந்தைகளுக்குச் சூட்டும் பெயர்கள் அவர்களது தலைவிதியையும் நிர்ணயிக்கும் தன்மைகொண்டது. அபத்தமான பெயர்களைச் சூட்டிவிட்டால், எதிர்காலத்தில் குழந்தைகள் குற்றம் புரிபவர்களாக, கடின சித்தம் உடையவர்களாக தலையெடுத்துவிடும் அபாயம் உண்டு. பெயருக்கேற்ற தன்மைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

அர்த்தத்தை பாருங்கள்

 

உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை, உடுத்தும் உடையிலிருந்து உள்ளாடை வரை நாகரீகம் ஃபேஷனாக மாறி மாறி நம் கண்களை மயக்கும்போது, நாம் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு ஏன் நாகரீகமாக, ஃபேஷனாக பெயரைச் சூட்டக்கூடாது? என்று எழுந்த எண்ணம்தான் புதுக் கண்டுபிடிப்புகளை தம் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்கின்றோம்.

 

நகைச்சுவையாக கதை ஒன்று கூறுவார்கள். ஒரு ஆலிம் குழந்தைக்கு பெயர் வைக்க ஒரு வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டினர், "ஹஸ்ரத் ஒரு நல்ல பெயரைச் சொல்லுங்கள்" என்றனர். ஹஸ்ரத், வரலாறு படைத்த பல நபிமார்கள், நபித்தோழர்கள், நல்லோர்கள் பெயர்களையெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார். இதை செவியுற்ற வீட்டினர், "இந்த பெயரெல்லாம் வேண்டாம். ஒரு புதுமையான பெயரைச் சொல்லுங்கள்" என்றனர்.

 

ஹஸ்ரத் கோபத்தோடு "ஹுமைய்யர், ஹுனைஸீர்" இந்தப் பெயர்கள் எப்படி இருக்கிறது? என்றார். அதற்கு வீட்டினர், ஆஹா... மிக புதுமையான, அழகான பெயராக இருக்கிறதே! இந்த பெயரில் ஒன்றை சூட்டலாம்" என்றனர்.

 

ஹஸ்ரத், "ஹுமைய்யர் என்றால் கழுதைக்குட்டி என்றும், ஹுனைஸீர் என்றால் பன்றிக்குட்டி என்றும் அதன் பொருளாகும். பரவாயில்லையா? என்று கூறினார்.

 

உடனே வீட்டினர், "சரி ஹஸ்ரத்! இந்த பெயர்கள் வேண்டாம். குர்ஆனில் உள்ள பெயராகவும் இதுவரை அந்தப் பெயரை யாரும் சூட்டியிருக்கக் கூடாது. அப்படிப்பட்ட ஒரு பெயரைக் கூறுங்கள்" என்றனர். ஹஸ்ரத், குர்ஆனில் உள்ள நற்பெயர்களை பரவலாக, அதிகமானோர் சூட்டியிருப்பார்கள். இதை யோசித்துவிட்டு, சரி! யாரும் சூட்டாக பெயர் என்றால் "ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் இந்தப் பெயர்கள் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். வீட்டினர், "இதுவரை இந்த பெயரை செவியேற்றதில்லையே! இந்த பெயரில் ஒன்றை சூட்டலாம்" என்று கூறினர். ஹஸ்ரத், இந்த பெயருடையவர்களின் வரலாற்றை எடுத்துரைத்தார். அப்போதுதான் வீட்டினருக்கு பெயர்களின் எதார்த்தம் புரிந்தது.

 

இதை கதை என்று ஒதுக்கவிடமுடியாது. மார்க்க ஞானம் இல்லாதவர்களின் நிலைகள் இப்படித்தான் இருக்கிறது. இது போன்று பலருக்கும் அர்த்தமற்ற பாதகமான பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. பெற்றோர்களே! பெயரில் அழகைப் பார்க்காதீர்கள். அர்த்தத்தைப் பாருங்கள்.

 

மாற்றிக்கொள்ள வேண்டியவை

 

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது. அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்களின் புதல்வர் ‘முன்திர்’ என்பவர் பிறந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது நபியவர்கள், அக்குழந்தையைத் தமது மடியில் வைத்துக்கொண்டார்கள். ( مَا اسْمُهُ ) “அக்குழந்தையின் பெயரென்ன?” என நபியவர்கள் கேட்க, ‘இன்னது’ என (தம் மகனுக்கு வைக்கப்பட்ட பெயரை) அபூஉசைத் கூறினார்கள்.

 

(அப்பெயர் பிடிக்காததால்) நபியவர்கள் ( وَلَكِنْ أَسْمِهِ الْمُنْذِرَ ) “அல்ல; (இனிமேல்) அவர் பெயர் ‘முன்திர்’ (எச்சரிப்பவர்) ஆகும்” என்று கூறினார்கள். ஆகவே, அன்று அவருக்கு நபியவர்கள் தான் ‘முன்திர்’ எனப் பெயர் சூட்டினார்கள். நூல்:- புகாரீ-6191

 

அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது. என் தந்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஆஸியா (பாவி) எனப்படும் மகள் ஒருவள் இருந்தாள். அவளுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஜமீலா (அழகி) என்று (மாற்றுப்) பெயர் சூட்டினார்கள். நூல்:- முஸ்லிம்-4333, திர்மிதீ

 

அருமை நாயகம் (ஸல்) அவர்களின் துணைவிரான ஜுவைரியா (ரலி) அவர்களுக்கு முதலில் பர்ரா (நல்லவள்) என்று பெயர் இருந்தது. அவர்களுக்கு நபியவர்கள் ஜுவைரியா (இளையவள்) என்று பெயர் மாற்றினார்கள். ( خَرَجَ مِنْ عِنْدِ بَرَّةَ ) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பர்ராவிடமிருந்து (நல்லவளிடமிருந்து) புறப்பட்டுவிட்டார்கள்” என்று சொல்லப்படுவதை அவர்கள் வெறுத்தார்கள். அறிவிப்பாளர்:-  அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4334

 

சிறுவயதில் அர்த்தமில்லாத கெட்ட பெயர்களை மற்றும் தம்மைத் தானே தூய்மைப்படுத்தி பாராட்டிக்கொள்ளும் பெயர்களை சூட்டிவிட்டாலும், அதனை மாற்றி நல்ல பெயரை சூட்டிக்கொள்ள தயங்கக் கூடாது. அருவருப்பான பொருள் கொண்ட பெயரை கேட்டுவிட்டால் உடனே அதை மாற்றி நல்ல அர்த்தமுள்ள பெயரை சூட்டுவது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‏ ( لاَ تُسَمِّ غُلاَمَكَ رَبَاحًا وَلاَ يَسَارًا وَلاَ أَفْلَحَ وَلاَ نَافِعًا ) உங்கள் அடிமைக்கு ரபாஹ் (லாபம்) என்றோ, யசார் (சுலபம்) என்றோ, அஃப்லஹ் (வெற்றியாளன்) என்றோ, நாஃபிஉ (பயனளிப்பவன்) என்றோ பெயர் சூட்ட வேண்டாம். அறிவிப்பாளர்:- சமூரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-4329 அபூதாவூத்-4958

 

ஏனெனில், அந்தப் பெயரில் உள்ள ஒருவரைக் குறிப்பிட்டு அவர் இருக்கிறாரா? என்று கேட்க, இல்லை என்று பதில் கூறும்போது, அந்த நல்ல பொருள் அங்கு இல்லை என்று சஞ்சலமான கருத்து உருவாக வாய்ப்பு உண்டு. (ரபாஹ்) இலாபம் இருக்கிறாரா? என்று கேட்க, ரபாஹ் வீட்டில் இல்லை என்று பதில் வரும்போது, வீட்டில் இலாபமே கிடையாது என்ற விரும்பத்தகாத கருத்து இழையோட வேண்டுமா? பெரும்பாலும் அடிமைகளுக்கே இப்பெயர்களை அக்கால மக்கள் சூட்டி வந்தனர். அதனாலேயே அடிமைகள் என நபிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி இந்தத் தடை பொதுவானதாகும்.

 

நாகரீகம் என கருதுவது

 

வீட்டில் பெரியவர்கள் சூட்டிய பெயரை தவிர்த்துவிட்டு, செல்லமாக பாபு, சேட்டு, பாஷா, ராஜா, பிச்சை, ராசாத்தி, பாப்பா, செல்லம்மா என்று அழைக்கிறார்கள். அன்பை வெளிப்படுத்தும் விதமாக கொஞ்சலோடு அழைத்தாலும் பிறகு பொருத்தமில்லாமலும் பரிகாசத்திற்குரியதாகவும் அப்பெயர் ஆகிவிடும். அசல் பெயர் தெரியாத அளவுக்கு செல்லப் பெயர் முன்னிலைப்படுத்துவது தவறாகும்.

 

அப்துர் ரஹ்மான், அப்துர் ரஹீம் என்று பெயரிட்டு விட்டு வெறுமனே ரஹ்மான், ரஹீம் என்று அழைப்பதை நாகரீகமென கருதுகிறார்கள். மறுமைநாளில் ரஹ்மான் ரஹீம் என்று அழைக்கும்போது இவர் தான் அளவற்ற அருளாளனோ, இவர் தான் நிகரற்ற அன்புடையோனோ என்று ஏளனமாக கூறப்பட்டால் கூனிக்குறுகி நிற்கவேண்டிய நிலை வராதா? எப்போதும் அசல் பெயரை முழுமையாகக் கூப்பிட வேண்டும்.

 

செல்லப்பெயர் சொல்லி அழைப்பதில் குற்றமில்லை. அர்த்தமும் நல்ல கருத்தும் அந்த பெயரில் இல்லையே! பொருளும் புகழும் அந்த பெயரில் இல்லையே என்பதில் தான் வருத்தம். உலகில் மிக இனிமையான பதம் அவரவர் பெயர் தான். நமது அன்பு குழந்தைகளுக்குச் சூட்ட அர்த்தமுள்ள ஆயிரம் பெயர்கள் இருக்கிறது. அதில் சிறந்த கருத்துள்ள மற்றும் நமது தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பிடித்தமான நற்பெயர்களைச் சூட்டி, இறையருளை பெறுவோமாக! ஆமீன்!

 

(இந்தக் கட்டுரை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.)

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை.  செல்: 9840535951

 

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...