Search This Blog

Wednesday, 18 September 2024

குறிப்பறிந்து செயல்படுவோம்!

 

குறிப்பறிந்து செயல்படுவோம்!

 

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

அங்குதான் ஸக்கரியா தம் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார். "என் இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய்மையான வழித்தோன்றலை அருள்வாயாக. நீ பிரார்த்தனைச் செவியுறுபவன் ஆவாய்" என்று கூறினார். திருக்குர்ஆன்:-  3:38

 

உலகில் அறிவின் திறன்கள் ஒருபக்கம் பெருகிக்கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம், மக்களோடு மக்களாகப் பழகும் கலை என்பது அருகிக்கொண்டே வருகின்றது. மனிதர்கள் ஒருவரையொருவர் நல்லவிதமாக புரிந்துகொண்டு வாழ்வது என்பது அரிதாகி வருகிறது.

 

“இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுக” என்பது நமது பேச்சு வழக்கில் உள்ள ஒன்று. ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத்தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் விதமாக சொல்ல அல்லது செயல்படவேண்டும். இதற்குப்பெயர் தான் குறிப்பறிந்து செயல்படுதல் ஆகும்.

 

எந்தவொரு செயலைத் தொடங்குவதற்கு முன்பும் அதற்குரிய இடம் சரியானதுதானா? என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் செயலில் இறங்கக்கூடாது. அதேபோல், முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் ஏளனமாய் இகழவும் கூடாது.

 

நாம் பிறரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது நம்ம தாய், நம்ம தந்தை, நம்ம சொந்தம், நம்ம வியாபாரம், நம்ம ஊர் என்று பேசுதல் சிறந்தது தான். ஆனால்,  மனைவி அல்லது கணவன் என்று பேச்சு வரும்போது நம்ம மனைவி, நம்ம கணவன் என்று பேசினால், அது நாகரீகமற்றதாகிவிடும். அல்லவா? அதுபோல் தான் எதைப் பேசுவதாக அல்லது செய்வதாக இருந்தாலும் நிலை அறிந்து செயலாற்ற வேண்டும்.

 

அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை

 

இறைத்தூதர் ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு 120 வயது அவரது மனைவிக்கு 80 வயது – அவர்களுக்கு குழந்தை இல்லை. இத்தனை வயதான பிறகு எப்படி குழந்தையை கேட்பது என்று தயங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த சூழ்நிலையில் தான் சிறுமி மர்யம் (அலை) அவர்களின் அறையில் அந்த காலகட்டத்தில் கிடைக்காத பழங்கள் இருந்தன. ஸகரிய்யா (அலை), “இவை எப்படி?” என்று ஆச்சரியமாக கேட்டார்கள்.

 

மர்யம் (அலை) அவர்கள் “இது இறைவனது கொடை” என்று பதிலளித்தார்கள். பருவம் கடந்தும் (சீசன் இல்லாதபோதும்) பழங்களை அல்லாஹ்வால் தரமுடியும் என்ற வார்த்தையில் தனது மனக்குறையை கேட்க அல்லாஹ் அனுமதிக்கிறான் என்று புரிந்துகொண்ட ஸகரிய்யா (அலை) அவர்கள் ஓடிச்சென்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ், உடனே குழந்தையை  தருவதாக கூறியது மட்டுமல்ல, அந்த குழந்தை அவர் விரும்பும் ஆண் குழந்தை என்று அவருக்கு “யஹ்யா” என்று பெயர் வைக்குமாறும் கூறினான். இதையே திருக்குர்ஆனின் வசனங்கள் (3:37,38,39) கூறுகிறது.

 

பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேரங்கள் மற்றும் இடங்களை அறிந்து பிரார்த்திக்கும்போது அந்த பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கக்கூடும்.

 

தொழுவிக்கின்ற இமாம்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ فَلْيُخَفِّفْ، فَإِنَّ مِنْهُمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالْكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ ) நீங்கள் மக்களுக்குத் தொழ வைத்தால் (தொழுகையை) சுருக்கிக்கொள்ளுங்கள். ஏனெனில், மக்களில் பலவீனமானவர், நோயாளி, வயதானவர் என பலரும் இருப்பார்கள். தனியாகத் தொழுதால் நீங்கள் விரும்பிய அளவு நீளமாகத் தொழுதுகொள்ளுங்கள் அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-703, முஸ்லிம்-800, அபூதாவூத்-673, திர்மிதீ-219, நசாயீ-814

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் தம் கூட்டத்தாருக்கு இஷாவைத் தொழுவித்தார்கள். அதில் (பெரிய அத்தியாயமான) அல்பகரா எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகி சலாம் கொடுத்தார். பின்னர் தனியாகத் தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். மக்கள் அவரிடம், "இன்னாரே, நீர் நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிவிட்டீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (நான் நயவஞ்சகன் அல்லன்). நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது குறித்து) தெரிவிப்பேன்" எனக் கூறினார்.

 

அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பகல் நேரங்களில் வேலைவெட்டிகளில் ஈடுபடுகின்றவர்கள். நாங்கள் ஒட்டகங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் (நேற்றிரவு) உங்களுடன் இஷாத் தொழுதுவிட்டு வந்து (எங்களுக்குத் தொழுவித்தார். அதில் பெரிய அத்தியாயமான) அல்பகரா அத்தியாயத்தை ஓதலானார். (எனவேதான் விலகிச் சென்று தனியாகத் தொழுதேன்) என்று கூறினார்.

 

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, ( يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ اقْرَأْ بِكَذَا وَاقْرَأْ بِكَذَا ) "முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?" என்று கேட்டுவிட்டு, "(நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும்போது சற்று சிறிய அத்தியாயமான) இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக; இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக" என்று சொன்னார்கள். புகாரீ-6106, முஸ்லிம்-795, அபூதாவூத்-671, நசாயீ-826, முஸ்னது அஹ்மத்

 

மக்களுக்கு தொழுவிக்கின்ற இமாம், இடம் பார்த்து மக்களின் நிலை அறிந்து சடைவு ஏற்படாதவாறு தொழுவிக்கவேண்டும்.

 

பதிலளிப்பதா? தொழுவதா?

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இஸ்ரவேலர்களால் ‘ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டுவந்த (நல்ல) மனிதர் ஒருவர் இருந்தார். (ஒருமுறை) அவர் தொழுதுகொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்), ( أُجِيبُهَا أَوْ أُصَلِّي ) ‘‘அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?” என்று கூறிக்கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், ( اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ‏ ) ‘‘இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச்செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறிவிட்டார்.

 

(ஒருமுறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள்.

 

உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கிவரச்செய்து அவரை ஏசினார்கள். உடனே ஜுரைஜ் அங்கத்தூய்மை செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, ( مَنْ أَبُوكَ يَا غُلاَمُ ) ‘‘குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, ‘‘(இன்ன) இடையன்” என்று பேசியது.

 

அதைக் கண்டு (உண்மையை உணர்ந்துகொண்ட) அந்த மக்கள், ‘‘தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், ( لاَ إِلاَّ مِنْ طِينٍ ) ‘‘இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே போதும்” என்று கூறிவிட்டார்.  நூல்:- புகாரீ-3436

 

(ஃபர்ளு எனும்) கட்டாயத் தொழுகை அல்லாமல் (நஃபில் எனும்) உபரியான தொழுகைகளை நிறைவேற்றும்போது பெற்றோர் அழைத்தால் தொழுகையை விட்டு விட்டு அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்பதே மார்க்கச் சட்டம்.

 

நாம், பள்ளிவாசல் போன்ற பொது இடத்தில் ஃபர்ளு, நஃபில் என எந்தத் தொழுகையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும்போதும் நம்முடைய செல்போன், வாட்ச், மணிபர்ஸ் போன்ற மதிப்புள்ள பொருள்களைத் திருடப்படுவதை அறிந்தால், உடனே அந்த தொழுகையை விட்டு விட்டு அந்தப் பொருள்களைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். பிறகு தொழுதுக்கொள்ளலாம். இதுவே மார்க்கச் சட்டம்.

 

காலங்களுக்குத் தோதுவாக

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنِّي كُنْتُ نَهَيتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا ، وَنَهَيتُكُمْ أَنْ تَحْبِسُوا لُحُومَ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ فَاحْبِسُوا ، وَنَهَيتُكُمْ عَنِ الظُّرُوفِ فَانْبِذُوا فِيهَا ، وَاجْتَنِبُوا كُلَّ مُسْكِرٍ ) அடக்கத்தலங்களை (கப்ருகளை) சந்திக்க வேண்டாமென்று உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அவற்றைச் சந்தியுங்கள். குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் சேமித்து வைக்க வேண்டாமென்று உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் (விருப்பம் போல்) சேமித்துக் கொள்ளுங்கள். (பழஊறல் ஊற்றிவைப்பதற்கு) சில பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாமென்று உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி அந்தப் பாத்திரங்களில் பழஊறலை ஊற்றிவைத்துக் கொள்ளுங்கள். ஆனால், போதையூட்டுகின்ற ஒவ்வொன்றையும் தவிர்த்துவிடுங்கள். அறிவிப்பாளர்:- அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்னது அஹ்மத்-4092

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் அப்போதிருந்த சூழ்நிலை, மக்கள் மனநிலை முதலானவற்றைக் கருத்தில் கொண்டு சில பழக்கங்களுக்கு முதலில் தடை விதித்திருந்தார்கள். இத்தடை அப்போது தேவையாகவும் இருந்தது. பின்னர் சூழ்நிலையும் மக்களின் மனநிலையும் சீரானபிறகு அத்தடையைத் திரும்ப பெற்றுக்கொண்டு அவற்றிற்கு அனுமதி வழங்கினார்கள்.

 

இஸ்லாத்திற்கு புதியவர்களாக இருந்த மக்கள், முன்னோர்களின் அடக்கத் தலத்திற்கு செல்கையில் பழைய வழக்கப்படி அங்கு வழிபாடு செய்யவும் அவர்களிடம் பிரார்த்திக்கவும் வாய்ப்பு இருந்தது. அத்துடன் நெருங்கியவர்களின் அடக்கத்தலத்தைச் சந்திக்கையில் அழுது புலம்பி, தலையில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழ வாய்ப்பு இருந்தது. எனவே, அதற்கு நபியவர்கள் தடை விதித்தார்கள்.

 

ஆயினும் ஓரிறைக்கொள்கை மக்களுக்கு மத்தியில் ஆழமாக பதியத் தொடங்கிய பின்னர் அடக்கத்தலங்களைச் சந்திப்பதற்கான தடையை நபியவர்கள் விலக்கிக்கொண்டார்கள். அடக்கத் தலங்களை சந்திக்கும் போது அது மறுமையை நினைவுபடுத்தும் என்றும் கூறினார்கள்.

 

ஆரம்பக்காலத்தில் முஸ்லிம்களிடையே வறியவர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களால் இறைச்சி போன்ற உணவு வகைகளை உண்ண முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் குர்பானி கொடுப்பவர்கள் அதன் இறைச்சியை பல நாள்கள் உண்ணும் நோக்கத்தில் சேமித்து வைத்தால் ஏழை எளியவருக்குத் தானமாக வழங்குவது குறைந்துப்போகும்.

 

எனவேதான் மூன்று நாள்களுக்குள் குர்பானி இறைச்சியை தாமும் உண்டு, பிறருக்கும் வழங்கி தீர்த்துவிடுங்கள் என நபியவர்கள் வழிகாட்டினார்கள். மக்களிடம் வசதி வாய்ப்புகள் வந்த பின்னர் நீங்களும் உண்ணுங்கள்; பிறருக்கு உண்ணக் கொடுங்கள்; சேமித்தும் வையுங்கள் என்று அனுமதி வழங்கினார்கள்.

 

முழு மதுவிலக்கு சட்டம் செயல்பாட்டிற்கு வந்த புதிதில் மதுவுக்காக பயன்படுத்திய  அப்பாத்திரங்களை வேறு நோக்கத்திற்காக புழங்கினாலும் மதுவின் நினைவு தலை தூக்கி விடலாம்; பழைய பழக்கம் தொற்றிக் கொண்டுவிடலாம். இதனாலேயே நபியவர்கள் அப்பாத்திரங்களைத் தவிர்க்குமாறு கூறினார்கள். பின்னர் காலப்போக்கில் மதுமீதான மோகம் மங்கிவிட்டபோது, அப்பாத்திரங்களை நீங்கள் வேறு பயன்பாட்டிற்கு புழங்கிக் கொள்ளலாம் என்று அனுமதியளித்தார்கள்

 

மார்க்கத் தீர்ப்பு வழங்கும்போது

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தமது மாணவர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு ஒருவர் வந்து, "ஒரு முஸ்லிமை கொன்றவனுக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை! அவனுக்கு நரகம் தான் கிடைக்கும்" என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் வந்த வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டார். இந்தப் பதிலை செவியுற்ற மாணவர்கள் அதிர்ந்து போனார்கள். "இதுபோன்ற தீர்ப்பை ஒருபோதும் உங்களிடமிருந்து நாங்கள் கேட்டதில்லையே! இன்று உங்களுக்கு என்ன ஆயிற்று?" என்று வினவினார்கள்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "நான் அவனுடைய கண்களில் கொலை வெறியைக் கண்டேன். அவன் யாரையோ கொலை செய்ய துடித்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பின்தொடர்ந்து சென்று பாருங்கள்" என்று கூறி, சிலரை அவன் சென்ற வழியில் அனுப்பிவைத்தார்கள். "ஆசிரியரின் கணிப்பு சரியானதே!" என்று சென்று வந்த மாணவர்கள் உறுதி செய்தனர்.

 

மார்க்கத் தீர்ப்பு வழங்கும்போது நடைமுறை சிக்கலை மிகத் துல்லியமாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அலசி பார்க்கிறார்கள். கொலை செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் வெறியனுக்கு பாவமன்னிப்பின் வாசலை திறந்துவைக்க முடியாது. செய்த பாவத்தை எண்ணி வருந்திக் கொண்டிருப்பவனுக்கு பாவமன்னிப்பின் வாசலை அடைத்து வைக்கவும் முடியாது. அந்த மனிதனின் கண்களில் பாவத்தின் துன்ப உணர்வு காட்சியளித்திருந்தால் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் மார்க்க தீர்ப்பு நேர்மாறாக இருந்தது.

 

இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து உளூவில் உறுப்புக்களை ஒரு தடவை கழுகினால் போதும்தானே என்று கேட்டார். (சட்டரீதியாக அது கூடும். ஆனால் மூன்று தடவை கழுவுவது சுன்னத்தாகும்.) இமாம் அவர்கள் (அம்மனிதரிடம் அதைக்கூறாமல்) உறுப்புக்களை ஒரு தடவை கழுகினால் கூடாது என்றார்கள். ஏனெனில், அவரோ வணக்க வழிபாடுகளில் மிகவும் பொடுபோக்கானவர். அவரிடம் அவ்வாறு கூறினால் முழு உறுப்பிலும் தண்ணீர் படுவதில் கவனக்குறைவாக இருந்துவிடுவார். என்பதை அறிந்துகொண்ட இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தூரநோக்காக தீர்ப்பு கூறினார்கள்.

 

மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞர், இடம் பொருள் பார்த்து, ஆள் பார்த்து மார்க்கத் தீர்ப்பு வழங்கவேண்டும். அதுதான் முறையான மார்க்கத் தீர்ப்பாகவும் இருக்கும்.

 

திக்ரு, தஸ்பீஹ்களாக இருந்தாலும்

 

இறைநேசர் ( سري السقطي ) அஸ்சிர்ரிய்யுஸ் சிக்தீ (ரஹ்) அவர்கள், (ஹிஜ்ரி 160:257) ( حَمِدْتُ اللهَ مَرَّةً، فَأَنَا أَسْتَغْفِرُ مِنْ ذَلِكَ الحَمْدِ مُنْذُ ثَلاَثِيْنَ سَنَةً ) நான் ஒருமுறை “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறியதற்காக முப்பது ஆண்டுகளாக பாவமன்னிப்பு கோரிக்கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்கள். அன்னாரிடம், ( وَكَيْفَ ذَاكَ؟ ) "அது எதற்கு?" என்று வினவப்பட்டது.

 

அன்னார், ( كَانَ لِي دُكَّانٌ فِيْهِ مَتَاعٌ، فَاحْتَرَقَ السُّوْقُ، فَلَقِيَنِي رَجُلٌ، فَقَالَ: أَبْشِرْ، دُكَّانُكَ سَلِمَتْ. فَقُلْتُ: الحَمْدُ للهِ، ثُمَّ فَكَّرْتُ، فَرَأَيْتُهَا خَطِيئَةً ) “(பக்தாதில் உள்ள) கடைவீதியில் எனக்கொரு கடை இருந்தது. அதில் சரக்குகள் இருந்தன. ஒருநாள் கடைவீதியிலுள்ள கடைகள் தீக்கிரையாயின. அப்போது என்னைச் சந்தித்த ஒருவர் “வாழ்த்துகள். உங்கள் கடை எரியவில்லை. பத்திரமாக இருக்கிறது” என்றார். உடனே நான் “அல்ஹம்துலில்லாஹ்” (புகழனைத்தும் அல்லாஹ்விற்கே) என்று கூறினேன். பிறகு சிந்தித்து பார்த்தேன். (பிறரைத் தீண்டிய அந்த துன்பம் என்னைத் தீண்டவில்லை என்பதால் மகிழ்ச்சி ஏற்படுவது) எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது. (அதாவது, என் கடை தீப்பற்றி எரியவில்லை. ஆனால், மற்றவர்கள் கடைகள் தீப்பற்றி எரிந்து நாசம் ஆகிவிட்டதே! என்னைச் சுற்றியிருந்தவர்கள் நஷ்டப்பட்டிருக்கும்போது அதை எண்ணி வருத்தப்படாமல் என் கடை காப்பாற்றப்பட்டுவிட்டதை எண்ணியவாறு மட்டும் "அல்ஹம்துலில்லாஹ்" என்று சந்தோஷத்தால் சொல்லிவிட்டேனே! என்று மனம் வருந்தியது. எனவே, நான் அதற்காகத்தான்  முப்பது ஆண்டுகள் பாவமன்னிப்பு கோரிக்கொண்டிருந்தேன்.)” என்றார்கள். அறிவிப்பாளர்:- அபூபக்ர் அல்ஹர்பீ (ரஹ்) அவர்கள் நூல்: சியரு அஃலாமின் நுபலா

 

ஏதேனும் இயற்கை பேரிடரின்போது நம்மை சுற்றி இருப்பவர்கள் பாதிக்கப்பட்டிருக்க, நாம் மட்டும் பதிக்கப்படாமல் இருந்தால் அதை எண்ணி நாம் சந்தோசமடைந்தவாறு "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொல்வது சரியல்ல என்பதை தான் சிர்ரி சிக்தீ (ரஹ்) அவர்கள் உணர்த்துகிறார்கள். அல்ஹம்துலில்லாஹ் என்பது நல்ல சொல்லாக இருந்தாலும் அதை சொல்லக்கூடாத இடங்களும் உண்டு.

 

"அல்ஹம்துலில்லாஹ்" என்பது நன்மைக்குரிய (திக்ரு எனும்) இறைதியானமாக இருந்தாலும் அதை எல்லா இடங்களிலும் சொல்லக்கூடாது. உதாரணமாக: இறப்பு, வியாபாரத்தில் நஷ்டம் போன்ற செய்திகளைக் கேட்டவுடன் "அல்ஹம்துலில்லாஹ்" என்று சொன்னால், அது விதர்ப்பமாகிவிடும். இது போன்ற செய்திகளை கேட்டவுடன் "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினால், "இன்னார் மரணம் அடைந்தது உனக்கு சந்தோசமா? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது உனக்கு மகிழ்வு  தருகின்றதா?" என்று மக்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.

 

நன்மைகள் தரும் திக்ரு தஸ்பீஹ்களாக இருந்தாலும் இடம் பொருள் பார்த்து தான் சொல்ல வேண்டும்.

 

பிரச்சனை ஏற்படாதவாறு

 

முகலாய மன்னர்களில் கடைசி மன்னராக திகழ்ந்த பகாதுர்ஷா டெல்லி ஆட்சி புரிந்த காலத்தில் 1847ல் பிரிட்டிஷ் அதிகாரி “கெய்த்” தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "நாளை முஸ்லிம்களுக்குரிய பக்ரீத் பெருநாள். எனவே, முஸ்லிம்கள் மாடுகளை குர்பானி (பலி) கொடுப்பார்கள். இந்துக்களின் புனித வழிபாட்டுக்குரியதான மாடுகளை முஸ்லிம்கள் வெட்டுவதா? என்று இந்துக்கள் கொதித்தெழும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளேன். எனவே, நாளை டில்லியிலிருந்து இந்து முஸ்லிம் கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நான் எதிர்பார்க்கும் நல்ல செய்தியும் அதுவாகத்தான் இருக்கும்" என்று மன்னர் பகாதுர்ஷா (ரஹ்) அவர்களின் ஆட்சியை சீர்குலைக்க இந்து-முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிடும் தன் எண்ணத்தை வடித்திருந்தான்.

 

இந்த நாசப் பின்னணியை அறிந்த மன்னர் பகாதூர்ஷா (ரஹ்) அவர்கள், பக்ரீத் பெருநாளுக்கு முந்திய நாள் இரவு, "ஆடுகளை மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும்; மாடுகளை வெட்டக்கூடாது" என்று பிரகடனப்படுத்தினார். நடக்க இருந்த “கெய்த்”தியின் சூழ்ச்சி கானல் நீரானது. ஏமாற்றமடைந்த கெய்த் தமது மனைவிக்கு எழுதிய அடுத்த கடிதத்தில், "என் எண்ணம் ஈடேறவில்லை. பகாதூர்ஷா என்னை முந்திக்கொண்டார்" என்று எழுதினான்.

 

சகோதர சமயத்தவர்களின் உணர்வுகளுக்கும் சமயம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் பகாதூர்ஷா வழங்கிய மரியாதையை இச்செய்தி உறுதிப்படுத்துகின்றன.

 

பால் கிதாபைப் பார்த்துச்  சொல்லுங்க...

 

கணியூர் முஹம்மத் இஸ்மாயீல் நாஜி மன்பயீ ஹள்ரத் அவர்கள் கூறுகிறார்கள். நான் நீடூர் மத்ரசாவில் ஆசிரியராகப் பணியாற்றும்போது  ஓய்வுநேரங்களில் மத்ரசாவின் முதல்வர் ஹள்ரத் S.R.ஷம்சுல்ஹுதா பாகவி (ரஹ்) அவர்களின் அறைக்குச் சென்று  நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.

 

அவர் நகைச்சுவையுடன் பல செய்திகளை என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள். அவ்வாறு ஒருநாள் நான் பேசிக்கொண்டிருக்கும் போது, பார்ப்பதற்கு அப்பாவியான தோற்றம் கொண்ட  ஒருவர் வந்து, “நாங்கள் புதிதாக வீடு கட்டியுள்ளோம். அதில் குடிபுக நல்ல நாள், நல்ல நேரத்தை பால் கிதாபைப் பார்த்து  குறித்துத் தரும்படி என் அம்மா கேட்டு வரச் சொன்னார்” என்று கூறினார்.

 

'உட்காருங்கள்' எனச் சொன்ன ஹள்ரத் அவர்கள், என்னை புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டே அங்கிருந்த கிதாபுகள் வரிசையிலிருந்து ஒரு கிதாபை  எடுத்து, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் புரட்டிப் பார்த்துவிட்டு, “வெள்ளிக்கிழமை சுப்ஹு தொழுகைக்குப் பின்னால், நல்ல அருமையான நேரம் இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது பரக்கத்தான நேரம் என்று சொல்லியிருக்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோரும் சுப்ஹு தொழுதுவிட்டு புதிய வீட்டில் குடியேறுங்கள். அல்லாஹ் பரக்கத் செய்வான் என்று நான் சொன்னதாக அம்மாவிடம் சொல்லுங்கள்” எனச் சொன்னார்கள். அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஒளி பரவியது. “சரிங்க ஹள்ரத்” என்று சொல்லிவிட்டு, மகிழ்ச்சியுடன் சென்றார்.

 

நான் நகைச்சுவையாக, “ஹள்ரத்! பால் கிதாபெல்லாம் பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் போல் தெரிகிறதே” என்றேன்.

 

ஹள்ரத் அவர்கள் சத்தமிட்டு சிரித்தவர்களாக, “வந்தவர் மார்க்கம் தெரியாத ஓர் அப்பாவி மனிதர். அவரது தாயாரும் பழங்காலத்து மனுஷி. பழமையான நம்பிக்கையில் ஊறித் திளைத்தவர். அவர்கள் நல்ல நேரத்தில் வீடு குடி புக வேண்டும் எனும் நோக்கத்தில் என்னிடம் அனுப்பியிருக்கிறார். இப்போது நாம் ‘எல்லா நாளும் நல்ல நாள்தான். எப்ப வேண்டுமானாலும் குடி புகலாம். அது ஒண்ணும் பிரச்சனை இல்லை’ என்று சொன்னால், அவர்களுக்கு அது புரியாது. நம்பிக்கை இல்லாமல், மாயவரத்திலுள்ள ஒரு பிரபலமான ஜோசியரிடம்  சென்று நாள் குறித்து வருவார்கள். இதன்மூலம் அவர்கள் பணத்தையும் இழந்து, ஈமானையும் அவர்கள் அறியாமலேயே இழக்கின்ற சூழல் ஏற்படுகின்றது. இதுபோன்ற நேரத்தில் ஒரு பெரிய பாவத்தை தடுக்கும் நோக்கோடு, அவர்களுக்கு நாம் அறிவுரை செய்வதைவிட, அதை மடைமாற்றம் செய்து, சுன்னத்தான வழியில் அந்த காரியத்தை செய்வதற்கு  நாம் வழிவகை காணவேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் இது போன்று சொல்லி அனுப்பினேன்.

 

நான் சொன்னது ஏதும் தவறு இல்லையே! வெள்ளிக்கிழமை பரக்கத்தான நாள். 'அதிகாலை நேரத்தில் பரக்கத் செய்வாயாக' என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். சுப்ஹுத் தொழுதாலே அன்று பரக்கத்தான நாள்தான்! இந்நிலையில் அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட நேரம் எனும் நம்பிக்கையுடன் ஸுப்ஹு தொழுதுவிட்டு குடிபோவார்கள். நல்லெண்ண அடிப்படையிலேயே இதைச் செய்தேன்” என்றார்கள். அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக!

 

உதாரண கதைகள்

 

சினம் தவிர்ப்பது எப்படி? என்று பயிற்சி அளிக்கும் மனநல பேராசிரியர் ஒருவர் விமான நிலையம் சென்றார். அப்போது அங்கே ஒரு காட்சி: ஜப்பானுக்கு போக வேண்டிய ஒரு பயணி அதிகமான பொருள்களுடன் வந்தார். விமான நிலையத்தில் பொருள்களை ஏற்றக்கூடிய ஒரு பணியாளரிடம் அவர் ஏதோ தகராறு செய்கிறார். அவர் கடுமையான கோபத்துடன் அந்தப் பணியாளரை மிகவும் ஏசி பேசுகிறார். அப்போது பணியாளர் சிரித்துக்கொண்டே இருக்கிறார். பிறகு அந்தப் பயணி ஜப்பான் சென்றுவிட்டார்.

 

இதனை கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பேராசிரியர் அந்த பணியாளரை அழைத்து, "தம்பி! சினம் தவிர்ப்பது எப்படி என்று நான் பல வருடங்களாக பயிற்சி அளித்து வருகிறேன். ஆனால், இப்போதுதான் அதை நடைமுறையில் கண்டேன். அது எப்படி? அவர் உன்னை ஏசும்போது அதற்கு கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் சிரித்துக்கொண்டே இருந்தாய்? உனக்கு கோபமே வராதா? அதன் இரகசியம் என்ன?" என்று வினவினார்.

 

அதற்கு அந்தப் பணியாளர், "மனிதன் என்றால் கோபம் வரத்தான் செய்யும். ஒவ்வொருவருக்கும் அவர் அவர்கள் வழியில் அதனை கையாளுகிறார்கள்" என்று பதிலளித்தார். அதற்கு அந்த பேராசிரியர், "தம்பி! நீ எந்த முறையில் அதனை கையாண்டாய்!" என்று மீண்டும் வினவினார். அதற்கு அவர், "ஒன்றும் இல்லை! அந்தப் பயணி ஜப்பான் போகிறார்; அவரது அனைத்து பொருள்களும் அமெரிக்கா போய்க் கொண்டிருக்கிறது" என்று மிகவும் அமைதியாக பதிலளித்தார்.

 

நாம், இடம் பொருள் அறியாமல், யாரென்றும் பாராமல் கோபப்பட்டால் அதன் பலாபலனை நாம் தான் அனுபவிக்க நேரும்.

 

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒருமுறை ஒரு கூட்டத்தில் பேசும்போது: "நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாள்களே என் வாழ்வில் மிகச் சிறந்த நாள்களாக நான் கருதுகிறேன்” என்றார்.

 

இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். யாரும் எதுவும் பேசவில்லை. பேச்சாளர் தொடர்ந்தார். அந்த இன்னொருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார். கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.

 

இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த நினைத்தார்.

 

வீட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு உண்ட பின், தன் மனைவியை நோக்கி, "நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாள்களே என் வாழ்வில் மிகச் சிறந்த நாள்களாக நான் கருதுகிறேன்” என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.

 

கண்விழித்து பார்த்தபோது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவர் மனைவி வீசியெறிந்த வெந்நீரால் ஏற்பட்ட கொப்புளங்களுடன்.

 

ஒருவர் ஒன்றை செய்து வெற்றி கண்டுவிட்டார் என்பதற்காக நாம் அதே செயலை இடம் பொருள் அறியாமல், யார் என்றும் பாராமல் செய்துவிட்டால், இப்படி தான் நாம் கஷ்டப்படவேண்டிய நிலை ஏற்படும். அதனால் எதையும் கொஞ்சம் யோசித்தே செய்யவேண்டும்.

 

இடம் பொருள் ஏவல் அறியாதவனை அறிய வைத்தலும் அறிந்தவன் கடமை! இடம் பொருள் அறிந்து பேசுவதும் செயலாற்றுவதுமே புத்திசாலித்தனமாகும். அல்லாஹுத்தஆலா, நம்மை புத்திசாலிகளாக வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...