Search This Blog

Saturday, 13 July 2024

இதயங்களை இணைப்பவன்

 

இதயங்களை இணைப்பவன்

 

وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ

 

அவன் அவர்களின் (சிதறிக்கிடந்த) உள்ளங்களை ஒன்றிணைத்தான். பூமியிலுள்ள அனைத்தையும் நீங்கள் செலவு செய்தபோதிலும் அவர்களின் உள்ளங்களை நீர்  ஒன்றிணைத்திருக்க  முடியாது. எனினும், அல்லாஹ்தான் அவர்களை (அன்பின் மூலம்) ஒன்றிணைத்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். திருக்குர்ஆன்:- 8:63

 

அன்பு என்பது ஓர் உணர்வு. அது மிகவும் அழகானது. அன்பு இல்லாமல் எவ்வளவு முயன்றாலும் நிம்மதி இல்லை. ஒருவர் மற்றவரை நேசிப்பதன் மூலம்தான் அமைதி ஏற்படும். நமது வாழ்க்கையில் அன்பு இல்லாதபோது எதுவும் சமநிலையில் இருக்காது

 

பிறர் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதும், அதற்கான காரணங்களைக் கட்டமைப்பதுமே அன்பாகும்.

 

மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் ஒரு நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. மேலும், மற்றொருவரின் நன்மைக்காக பரிபூரணமான அக்கறையும் தன்னலமற்ற விசுவாசம் கொண்ட ஒரு ஒழுக்கமான மனநிலையை அன்பு எனலாம். மற்ற மனிதர்களிடம் அல்லது விலங்குகளிடம் சுயநலமின்றி செலுத்தப்படும் கருணை மற்றும் பாசமுள்ள செயல்களையும் அன்பு என்று விவரிக்கலாம்.

 

மனிதர்கள் மனிதர்களுக்கு எதிராக ஈடுபடும் கெடுதல்களை மன்னித்து அவர்களை ஒன்றாக இணைக்கவும், இனங்களாக ஒன்றுபட்டு ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ்வதை எளிதாக்கும் ஒரு செயல்பாடாகவும் அன்பை புரிந்துகொள்ளலாம்.

 

பெரும் பெரும் வியப்புக்களை உண்டாக்குகின்ற அன்பு என்பது இறைவன் வசம் உள்ளது. அதை தாம் நாடுவோருக்கு வழங்குகின்றான். அதாவது, ஒருவர் மற்றொருவரை உளமார நேசிக்க வைப்பது இறைவனின் செயல்.

 

அவன் செயல்

 

அறியாமைக் காலத்தில் மதீனத்து அன்சாரிகள் "அவ்ஸ்" மற்றும் "கஸ்ரஜ்" என இரு பிரிவினர்களாக பிளவுபட்டிருந்தனர். அப்போது அவர்களிடையே ஏராளமான போர்கள் நடைபெற்று வந்தன. இறுதியாக அல்லாஹ், இறைநம்பிக்கை எனும் பேரொளியால் அந்தப் பகைமையை அகற்றி அன்பால் அவர்களின் உள்ளங்களை ஒன்றிணைத்தான். இவர்கள் குறித்தே தலைப்பில் காணும் திருவசனம் எடுத்துரைக்கிறது.

 

நமது ஆற்றல், மனவலிமை, உடல்வலிமை இவற்றிற்கு உறுதுணையாக நிற்பது அன்பே ஆகும். மனிதன் தனது வாழ்நாளில் மகிழ்வுடன் வாழ அன்பு அவசியமாகும். வசதியாய் வாழப் பணம் தேவை. ஆனால், அந்த வாழ்வை மகிழ்வாகவும், நிறைவாகவும் வாழ அன்பு மட்டுமே போதும் என்றாகிறது.

 

சமாதானமாகவும், ஒற்றுமையாகவும், சண்டை சச்சரவின்றி அமைதியாகவும், வாழ பிறரிடம் அன்பு கொள்வது அவசியமாகின்றது.

 

ஆபத்தின் போதும், அவசர நிலையின் போதும் பிறருக்கு உதவிட அன்பு முக்கியம் பெறுகின்றது. அன்பு மனதில் இருந்தால் மட்டுமே அவற்றை செய்திட முடியும்.

 

அபதா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. நான் ஒரு நாள் பிரபலமான திருக்குர்ஆன் விரிவுரையாளர் பேரறிஞர் முஜாஹித் (ரஹ்) அவர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் என் கையைப் பற்றிக்கொண்டு, ( إِذَا تَرَاءَى الْمُتَحَابَّانِ فِي اللَّهِ، فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ، وَضَحِكَ إِلَيْهِ، تَحَاتَّتْ خَطَايَاهُمَا كَمَا يَتَحَاتُّ وَرَقُ الشَّجَرِ )  "அல்லாஹ்வுக்காகவே நேசித்துக்கொள்ளும் இருவர் சந்தித்து, அவர்களில் ஒருவர் தம் தோழரின் கரத்தைப் பற்றிக்கொண்டு, அவரைப் பார்த்து சிரிப்பாரானால் மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவ்விருவரின் பாவங்களும் உதிர்ந்து விடும்" என்று கூறினார்கள்.

 

அப்போது நான் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம், ( إِنَّ هَذَا لَيَسِيرٌ ) "இது எளிதாயிற்றே!" என்று கூறினேன். அதற்கு அவர்கள், ( لَا تَقُلْ ذَلِكَ ) "அப்படி சொல்லாதீர்!" என்று சொல்லிவிட்டு, தலைப்பில் காணும் திருவசனத்தை ஓதினார்கள். நூல்:-  தஃப்சீர் தபரீ, தப்சீர் இப்னு கஸீர்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمُسْلِمَ إِذَا لَقِيَ أَخَاهُ الْمُسْلِمَ، فَأَخَذَ بِيَدِهِ، تَحَاتَّتْ عَنْهُمَا ذُنُوبُهُمَا، كَمَا يَتَحَاتُّ الْوَرَقُ عَنِ الشَّجَرَةِ الْيَابِسَةِ فِي يَوْمِ رِيحٍ عَاصِفٍ، وَإِلَّا غُفِرَ لَهُمَا وَلَوْ كَانَتْ ذُنُوبُهُمَا مِثْلَ زَبَدِ الْبِحَارِ ) ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமைச் சந்தித்து அவரது கரத்தை (வாஞ்சையுடன்) பற்றிக்கொண்டால், சூறைக்காற்று வீசும் நாளில் காய்ந்து போன மரத்திலிருந்து இலைகள் உதிர்வதைப் போன்று அவ்விருவரின் பாவங்களும் உதிர்ந்து விடும். கடல்களின் நுரையளவு இருந்தாலும் அவ்விருவரின் பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பாளர்:- சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் நூல்:- தப்ரானீ, மஜ்மஉஸ் ஸவாயித்

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ( إِنَّ اللَّهَ إِذَا قَارَبَ بَيْنَ الْقُلُوبِ لَمْ يُزَحْزِحْهَا شَيْءٌ ) அல்லாஹ் இதயங்களுக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்திவிட்டால், அதை எதனாலும் அசைத்துவிட முடியாது. நூல்:- தஃப்சீர் இப்னு கஸீர்

 

தம்பதிகள்

 

அபூபக்ர் (ரலி) அவர்கள் தன் மரணப்படுக்கையில் கூறினார்கள். “என் மரணத்திற்கு பிறகு என் (ஜனாஸாவை) உடலை என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் குளிப்பாட்ட வேண்டும்” அப்போது  தோழர்கள்,  “ஏன்?” என்று வினவினர். அபூபக்ர் (ரலி) அவர்கள், ”என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்”  என்று பதிலளித்தார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஜனாஸாவை) உடலை அவர்களின் மனைவியார் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் தான் குளிப்பாட்டினார்கள். நூல்:- மாலிக் முவத்தா-782

 

உள்ளங்கள் அல்லாஹ் வசம் இருப்பதால் தான், திருமணத்தால் இணையும் தம்பதிகளின் வாழ்வு சிறக்க, திருமண வைபவத்தில், "இறைவா! இந்தந்த இறைத்தூதர்கள் தமது மனைவியருடன் உள்ளங்கள் ஒன்றிணைந்து இணக்கமாக வாழ்ந்தது போன்று இவர்களின் உள்ளங்களையும் ஒன்றிணைத்து இணக்கமாக வாழச் செய்வாயாக!" என்று பிரார்த்திப்பதை வழக்கமாக்கியுள்ளோம்.

 

எத்தனையோ வயது முதிர்ந்த தம்பதிகள் எலியும் பூனையுமாக இருக்கும்போது இந்த சிறுவயது தம்பதிகள் எப்படி இவ்வளவு இணக்கமாக இருக்கிறார்கள்? என்று நாம் சிலரைக் கண்டு ஆச்சரியப்படுவோம். அங்கே ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை அன்பால் ஒன்றிணைத்து வைத்திருக்கிறான் அவ்வளவு தான்.

 

நண்பர்கள்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து) மதீனாவுக்கு வந்தபோது அவருக்கும் (மதீனாவாசியான) சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்குமிடையே அருமை நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.

 

அப்போது சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம், ( هَلُمَّ أُقَاسِمْكَ مَالِي نِصْفَيْنِ وَلِي امْرَأَتَانِ فَأُطَلِّقُ إِحْدَاهُمَا فَإِذَا انْقَضَتْ عِدَّتُهَا فَتَزَوَّجْهَا )  "வாருங்கள். எனது செல்வத்தை சரிபாதியாகப் பிரித்து உங்களுக்கு (ஒரு பாகத்தை)த் தருகிறேன். எனக்கு துணைவியர்கள் இருவர் உள்ளனர். அவர்களின் (நீர் விரும்பும்) ஒருவருக்கு மணவிலக்கு அளிக்கிறேன். அவருடைய காத்திருப்புக் காலம் (இத்தா) முடிந்ததும் அவரை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

 

அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ( بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ دُلُّونِي عَلَى السُّوقِ ) "அல்லாஹ் உங்கள் குடும்பத்தாரிலும் செல்வத்திலும் உங்களுக்கு (பரக்கத் எனும்) அருள்வளம் வழங்குவானாக. கடைத்தெரு எங்குள்ளது? என்று (மட்டும்) எனக்கு சொல்லுங்கள்" என்றார்கள். நூல்:- திர்மிதீ-1856

 

அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் சென்று ( أَىُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ ) "மக்களிலேயே உங்களுக்கு பிரியமானவர்கள் யார்?" என்று கேட்டேன். நபியவர்கள், "ஆயிஷா" என்று பதிலளித்தார்கள். நான், "ஆண்களில் மிகப்பெரியமானவர்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ( أَبُوهَا ) "ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)" என்று பதிலளித்தார்கள். பிறகு யார் (பிரியமானவர்)?" என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "பிறகு உமர் பின் கத்தாப் தான் (எனக்கு மிகப்பிரியமானவர்)" என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளை குறிப்பிட்டார்கள். நூல்:- புகாரீ-3662

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள், ( وَبَيْنَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً قَدْ حَمَلَ عَلَيْهَا، فَالْتَفَتَتْ إِلَيْهِ فَكَلَّمَتْهُ فَقَالَتْ إِنِّي لَمْ أُخْلَقْ لِهَذَا، وَلَكِنِّي خُلِقْتُ لِلْحَرْثِ ) “(இஸ்ரவேலர்களில்) ஒரு மனிதர் ஒரு மாட்டின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு அதை ஓட்டிக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது, அது அவரைத் திருப்பிப் பார்த்துப் பேசியது. "நான் இதற்காக (சுமை சுமப்பதற்காக)ப் படைக்கப்படவில்லை. மாறாக, நான் (நிலத்தை) உழுவதற்காகத்தான் படைக்கப்பட்டுள்ளேன்" என்று அது கூறிற்று என கூறினார்கள்.

 

உடனே மக்கள், "(சுப்ஹானல்லாஹ்) அல்லாஹ் தூயவன்" என்று (வியந்து) கூறினார்கள். நபியவர்கள், ( فَإِنِّي أُومِنُ بِذَلِكَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ بْنُ الْخَطَّابِ ) "நானும் அபூபக்ரும், உமர் பின் கத்தாபும் இதை (இந்நிகழ்ச்சியை) நம்புகிறோம்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:- அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3663

 

நண்பர்களில் சிலர் எதையும் ஒன்றாகவே சிந்திப்பார்கள். ஒன்றாகவே செயல்படுவார்கள். ஏதோ கணவன் மனைவியைப் போன்று பெரும்பாலும் ஒன்றாகவே இருப்பார்கள்.

 

இவர்கள் போன்றோரை தான், "ஒரு சங்கில் பால் குடித்தவர்களைப் பேசுகிறார்களே!" என்று கிராமத்தில் சொல்வார்கள்.

 

பிள்ளைகள் மீது

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது அருமை நாயகம் (ஸல்) அவர்கள் (சிறுவராக இருந்த) உஸாமாவின் மூக்குச்சளியை துடைக்க நாடினார்கள். அப்போது நான், ( دَعْنِي دَعْنِي حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَفْعَلُ ) "என்னிடம் விடுங்கள். நானே (அவ்வேலையை) செய்கிறேன்" என்று கூறினேன். அப்போது நபியவர்கள், ( ‏يَا عَائِشَةُ أَحِبِّيهِ فَإِنِّي أُحِبُّهُ ) "ஆயிஷா! நீ இவரை விரும்பு; ஏனெனில், நான் இவரை விரும்புகிறேன்" என்று கூறினார்கள். நூல்:- திர்மிதீ-3744

 

பெண்களில் சிலர் தமது மகள் வழி பேரன் பேத்திகள் மீது அளவற்ற பாசம் வைத்திருப்பார்கள். ஆனால், மகன் வழி பேரன் பேத்திகள் மீது அவ்வளவாக பாசம் இருக்காது. சிலர் இதற்கு எதிர்மறையாக இருக்கலாம். அதற்காக, அவர்கள் ஓரவஞ்சனை செய்கிறார்கள் என்று குறைசொல்லக்கூடாது. மனித உள்ளங்களில் பற்று பாசத்தை அல்லாஹ்தானே ஏற்படுத்துகிறான்.

 

பெற்றோர் மீது

 

அலீ (ரலி) அவர்களின் மற்றொரு மனைவிக்கு பிறந்த மகனார் முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் தமது தாயின் தலைமுடிக்கு மருதாணி சாயம் பூசுவது தலைவாரி சடை பின்னுவதென அனைத்தையும் தானே செய்வார்கள். ஒருமுறை அன்னார் வெளியில் சென்றபோது கையில் தெரிந்த மருந்தாணி சிவப்பைக் கண்டு மக்கள் காரணம் கேட்டனர். அதற்கு அன்னார், "தமது தாய்க்கு மருதாணி பூசியதால் ஏற்பட்ட சிவப்பு" என்று கூறினார்கள்.

 

பெற்றோரில் சிலர், "என் பிள்ளைகளை நன்றாகத்தான் வளர்த்தேன். ஆனாலும் என் மீது அவனுக்கு போதிய பாசம் உண்டாகவில்லை. அதோ அந்த பையனைப் பார்! அவன் தமது பெற்றோர் மீது அளவற்ற பாசத்துடன் இருக்கின்றான்" என்று புலம்புவது பலன் தரப்போவதில்லை.

 

பிள்ளைகளுக்கு பெற்றோர் மீது பாசத்தை அல்லாஹ் தான் ஏற்படுத்த வேண்டும். இதை நாம் உணரவேண்டும். இதற்காக பிரார்த்திக்கலாம்.

 

முதலாளி மீது

 

ஸைத் (ரலி) அவர்களின் சகோதரர் ஜபலா பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது. நான் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! என்னுடன் எனது சகோதரர் ஸைதை அனுப்பிவையுங்கள்" என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு நபியவர்கள், ( هُوَ ذَا فَإِنِ انْطَلَقَ مَعَكَ لَمْ أَمْنَعْهُ ) "அதோ அங்கிருக்கிறார். அவர் உன்னுடன் வந்தால் அவரை தடுக்கமாட்டேன்" (ஏனெனில், அவரை நான் விடுதலை செய்துவிட்டேன். முடிவெடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது) என்று கூறினார்கள்.

 

அந்நிலையில் ஸைத் (ரலி) அவர்கள், ( يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ لاَ أَخْتَارُ عَلَيْكَ أَحَدًا ) "நாயகமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களைவிட வேறொருவரையும் தேர்ந்தெடுக்கமாட்டேன். (அதாவது, உங்களை விட்டும் செல்லமாட்டேன்.)" என்று கூறினார். ஜபலா பின் ஹாரிஸா (ரலி) அவர்கள், ( فَرَأَيْتُ رَأْىَ أَخِي أَفْضَلَ مِنْ رَأْيِي ) "எனது முடிவைவிட எனது சகோதரரின் முடிவே சாலச்சிறந்தது. என (பின்னர்) தெரிந்துகொண்டேன்" என்று கூறினார். நூல்:- திர்மிதீ-3741

 

சிறு குழந்தையாக இருந்த ஸைத் பின் ஹாரிசா (ரலி) அவர்களை ஒரு கூட்டம் அவரை கடத்திச் சென்று அடிமையாக விற்றுவிட்டார்கள். இறுதியில் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அடிமையாக வந்து சேர்ந்தார். இதனை அறிந்த அவரின் சகோதரர் ஜபலா பின் ஹாரிஸா மக்கா வந்து அண்ணலாரை, சந்தித்து “உங்களின் அடிமையாக இருக்கும் ஸைத் எனது சகோதரர் ஆவார். எனவே, நான் அவரை அழைத்து செல்ல அனுமதி தாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அப்போது தான் மேற்காணும் நிகழ்வு நடைபெற்றது.

 

பணியாளர் மீது

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பணியாளர்களில் ஒருவரான ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது. (ஒருநாள்) நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். நபியவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் (உளூ எனும்) அங்கத்தூய்மை செய்து கொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன்.

 

அப்போது நபியவர்கள், "என்னிடம் (ஏதேனும்) கோருவீராக!" என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், ( أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ ) "சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும்" என்று கோருகிறேன்" என்றேன். அதற்கு நபியவர்கள், ( أَوَغَيْرَ ذَلِكَ ) "வேறு ஏதேனும் (கோருவீராக!)" என்றார்கள். நான், "(இல்லை) அதுதான்" என்றேன். அதற்கு நபியவர்கள், ( فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ ) "அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் (சஜ்தா எனும்) சிரவணக்கம் செய்து எனக்கு உதவிவீராக!" என்று கூறினார்கள். நூல்:- முஸ்லிம்-843

 

அருமை நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு பணிவிடை புரிந்த அனைத்து பணியாளர்கள் மீதும் அன்பு கொள்வார்கள். அவ்வபோது அவர்களின் தேவையறிந்து அவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் அருள்வளம் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு பிரார்த்திப்பார்கள்.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்கள். தான் பெற்றெடுத்த பிள்ளையைப் போல் அவர்மீது அன்பு மழை பொழிந்தார்கள். தமது மாமி மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை, ஸைத் (ரலி) அவர்களுக்கு தாமே பெண் பேசி, முன்நின்று  மணமுடித்து வைத்தார்கள். அது மட்டுமல்ல; ஸைத் (ரலி) அவர்களின் மகனார் உசாமா (ரலி) அவர்கள் மீதும்  அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்கள்.

 

மனிதனால் முடியாது

 

மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் ஷைத்தான் உங்களுக்கிடையே பகைமையையும் குரோதத்தையும் உருவாக்க விரும்புகிறான். திருக்குர்ஆன்:- 5:91

 

அல்லாஹ், அன்பின் மூலம் இதயங்களை இணைக்கிறான். ஷைத்தான், இணைந்திருக்கும் இதயங்களை போட்டி, பொறாமை, பகைமை, குரோதம், சந்தேகம்  போன்ற கெட்ட எண்ணங்கள் மூலம் பிரித்து விடுகின்றான்.

 

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது. பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (தமது பரீரா தம்மை பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுதவண்ணம் பரீராவுக்கு பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருப்பதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

 

அப்போது கண்மணி பெருமானார் (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி! ( يَا عَبَّاسُ أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا ) "அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?" என்று கேட்டார்கள்.

 

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபியவர்கள் (பரீராவை நோக்கி!) ( لَوْ رَاجَعْتِهِ ) "நீ முஃகீஸிடம் திரும்பிச் செல்லக்கூடாதா?" என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, "நாயகமே! எனக்கு தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?" என்று கேட்டார். நபியவர்கள், ( إِنَّمَا أَنَا أَشْفَعُ ) "(இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்" என்றார்கள். அப்போது பரீரா "(அப்படியானால்,) அவர் எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிட்டார். நூல்:-  புகாரீ-5283

 

இப்பூவுலகில் விலைமதிப்பற்றது அன்பாகும். இல்லறம் நல்லறமாக மாற அன்பு இன்றியமையாதது. அன்பினால் கிடைக்கக்கூடிய பயன்கள் எண்ணிலடங்காதவை ஆகும். அன்பு ஏற்பட்டு விட்டால் குறைகள் காணாமல் போய்விடுகிறது. மாறாக, அன்பு இல்லையெனில் அனைத்தும் கசந்து போகும். அதன் பிறகு சிறிய குறைகள்கூட பெரியதாகிவிடும். பெரிய உபகாரங்கள்கூட சிறு துரும்பாகிவிடும் என்பதுதான் யதார்த்தம்.

 

"பிடிக்காத மருமகள், கால் பட்டாலும் குற்றம்; கை பட்டாலும் குற்றம்" என்பது கிராமத்து சொல் வழக்கு.

 

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்த தம்பதியினர் உள்ளத்தை ஒன்றிணைக்க முயற்சித்தும் போதிய பலன் கிட்டவில்லை. உள்ளத்தை ஒன்றிணைக்கும் ஆற்றலை அல்லாஹ் தன் வசம் வைத்துள்ளான்.

 

பிரார்த்தனை

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை நான், கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களிடம் ( يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يُحَبِّبَنِي أَنَا وَأُمِّي إِلَى عِبَادِهِ الْمُؤْمِنِينَ وَيُحَبِّبَهُمْ إِلَيْنَا ) "நாயகமே! இறைநம்பிக்கையுள்ள அடியார்களுக்கு என்மீதும் என் தாயார்மீதும் நேசம் ஏற்படவும் அவர்கள் மீது எனக்கும் என் தாயாருக்கும் நேசம் ஏற்படவும், தாங்கள் பிரார்த்தியுங்கள்" என்று கேட்டேன்.

 

அப்போது நபியவர்கள், ( اللَّهُمَّ حَبِّبْ عُبَيْدَكَ هَذَا  يَعْنِي أَبَا هُرَيْرَةَ وَأُمَّهُ إِلَى عِبَادِكَ الْمُؤْمِنِينَ وَحَبِّبْ إِلَيْهِمُ الْمُؤْمِنِينَ ) "இறைவா! உன்னுடைய இந்தச் சிறிய அடியார் (அபூஹுரைரா) மீதும் அவருடைய தாயார்மீதும் இறைநம்பிக்கையாளர்களான உன் அடியார்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக! இறைநம்பிக்கையாளர்கள்மீது இவர்களுக்கு நேசத்தை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.

 

எனவேதான், என்னைப் பார்க்காவிட்டாலும் என்னைப் பற்றிக் கேள்விப்படும் எந்த ஓர் இறை நம்பிக்கையாளரும் என்னை நேசிக்காமல் இருப்பதில்லை. நூல்:- முஸ்லிம்-4904

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் 'தவ்ஸ்' எனும் குலத்தைச் சேர்ந்தவர்கள். அறியாமைக் காலத்தில் அவரது பெயர் 'அப்து ஷம்ஸ் பின் ஸகர்' என்று இருந்தது. அவருக்கு 'அப்துர் ரஹ்மான்' என்று அருமை நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் மாற்றினார்கள். ஆனாலும் 'அபூஹுரைரா' எனும் குறிப்பு பெயரிலேயே அவர் அறியப்படுகிறார்.

 

இவர், கைபர் போர் நடந்த ஹிஜ்ரீ ஏழாம் ஆண்டு இஸ்லாத்தில் இணைந்தார். நபியவர்களுடன் சேர்ந்து கைபரில் போரில்  கலந்து கொண்டார். திண்ணைவாசிகளில் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா)  ஒருவரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபியவர்களுடனே இருந்து கல்வி அறிவை பெருக்கிக்கொண்டார். அவரது நினைவாற்றலுக்கு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அதனால் தான் நபித்தோழர்களிலேயே அதிகமான நபிமொழிகளை (5374) அறிவித்தவர் என்ற சிறப்பு அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு கிடைத்தது. ஹிஜ்ரி 57 ஆம் ஆண்டு மதீனாவில் தமது 78வது வயதில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் மரணம் அடைந்தார். நூல்:- அல்இஸாபா, உசுதுல்ஙாபா

 

நமக்கு, மார்க்க அறிஞர்கள் மற்றும் நல்லடியார்களின் பிரார்த்தனை கிடைக்கும்போது நாம் பிறரால் நேசிக்கப்படும் சிறந்த மனிதனாக ஆகிவிடுவோம். எனவே, நாம் நல்லடியார்களின் தோழமையில் இருக்க முயற்சிக்க வேண்டும்.

 

"பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்" என்பது கிராமத்துச் சொல் வழக்கு.

 

அல்லாஹ்வின் திருநாமம்

 

அல்வதூத் ( الودود ) என்ற அல்லாஹ்வின் திருநாமத்தை 1001 தடவை ஓதி உணவுப் பொருளில் ஊதி பகைவனிடம் கொடுத்து உண்ண செய்யின், இன்ஷாஅல்லாஹ் அவன் நண்பனாகி விடுவான்.

 

இந்த திருநாமத்தை ஆயிரம் தடவை ஓதி உணவுப் பொருளில் ஊதி கணவனும் மனைவியும் உண்டால் ஒருவருக்கொருவர் பிரியத்துடன் இருப்பார்கள். இருவருக்கும் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருப்பின் ஒருவர் மற்றொருவருக்கு உண்ண கொடுத்து உண்ணச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தம்பதிகளுக்கிடையே இன்ஷாஅல்லாஹ் மன ஒற்றுமை ஏற்படும்.

 

இந்த திருநாமத்தை ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகு 400 தடவை வழக்கமாக ஓதி வந்தால் இன்ஷாஅல்லாஹ் அவருக்கு சுகமும் நலமும் குவியலாக வரும். அனைவரும் அவர் மீது அன்பு செலுத்துவார்கள்.

 

நல்லடியார்களால் நேசிக்கப்படுகின்ற நற்பண்பாளர்களாக அல்லாஹுத்தஆலா நம்மை வாழச் செய்வானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...