Search This Blog

Tuesday, 9 July 2024

பொய் சொல்லப்போறேன்

 

பொய் சொல்லப்போறேன் 

 

قَالُوا أَأَنْتَ فَعَلْتَ هَذَا بِآلِهَتِنَا يَا إِبْرَاهِيمُ قَالَ بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا فَاسْأَلُوهُمْ إِنْ كَانُوا يَنْطِقُونَ

 

"இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை நீர் தான் இவ்வாறு செய்தீரா?" என்று கேட்டனர். அவர், "இல்லை! இவர்களில் பெரிய சிலை தான் இதை செய்தது. அவை பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றிடமே கேட்டுப்பாருங்கள்" என்று கூறினார். திருக்குர்ஆன்:-  21:62,63  

 

இஸ்லாத்தில், பொய் சொல்வது தடை செய்யப்பட்ட கடுமையானப் பாவச்செயல் தான்  என்றாலும், சில சமயங்களில் சில நிபந்தனைகளுடன் அது அனுமதிக்கப்படுகிறது.

 

பேரறிஞர் இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மதிப்பிற்குரிய எந்த நோக்கமும் பொய் சொல்லாமல் அடைய முடியும் எனில் அதில் பொய் சொல்லுவது கூடாது. பொய் சொல்லாமல் அதை அடைய இயலாது என்றிருந்தால் பொய் சொல்லுவது கூடும். பின்பு அந்த நோக்கம் ஆகுமானதாக இருந்தால் பொய்யும் கட்டாயமாகிவிடும்.

 

ஒரு அநியாயக்காரன் ஒரு மனிதனைக் கொல்ல நினைக்கின்றபோது அல்லது ஒரு பொருளை அபகரிக்க நினைக்கின்றபோது அந்த அநியாயக்காரனிடமிருந்து அந்த மனிதனை அல்லது அந்த பொருளை மறைத்து வைத்துவிட்டு, அதன் பிறகு அந்த அநியாயக்காரன் அது குறித்து நம்மிடத்தில் விசாரித்தால், "தெரியாது; காணவில்லை" என்று பொய் சொல்வது கட்டாயமாகி விடுகிறது. (சுருங்கக் கூறின்: அநியாயச் செயலை செய்யவிடாமல் தடுப்பதற்கு பொய் சொல்வது கட்டாயமாகிவிடுகிறது.) நூல்:- அல்அத்கார், ரியாலுஸ் ஸாலிஹீன்

 

சில காரியங்களில்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( لَيْسَ الْكَذَّابُ الَّذِي يُصْلِحُ بَيْنَ النَّاسِ وَيَقُولُ خَيْرًا وَيَنْمِي خَيْرًا ) (பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடையே நல்லதைப் புனைந்து சொல்லி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தியவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொன்னார். அறிவிப்பாளர்:- உம்மு குல்ஸும் பின்த் உக்பா (ரலி) அவர்கள் நூல்:-  புகாரீ-2692, முஸ்லிம்-5079 திர்மிதீ-1861

 

நபிமொழி அறிவிப்பாளரான பேரறிஞர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ( وَلَمْ أَسْمَعْ يُرَخَّصُ فِي شَىْءٍ مِمَّا يَقُولُ النَّاسُ كَذِبٌ إِلاَّ فِي ثَلاَثٍ الْحَرْبُ وَالإِصْلاَحُ بَيْنَ النَّاسِ وَحَدِيثُ الرَّجُلِ امْرَأَتَهُ وَحَدِيثُ الْمَرْأَةِ زَوْجَهَا ‏ ) மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர. 1) போர் (தந்திரத்திற்காக சொல்லப்படும் பொய்). 2) மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்குச் சொல்லப்படும் பொய்.  3) (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடம், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய். அறிவிப்பாளர்:-  அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் நூல்:- முஸ்லிம்-5079, திர்மிதீ-1862


பெரிய சிலையிடம் கேட்டுப்பாருங்கள்

 

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள், சிலைவணங்கிகளாக இருந்த தம் சமூக மக்களுக்கு உண்மையை உணர்த்துவதற்காக ஒரு வேலை செய்தார்கள். அதாவது, ஒருநாள் மக்கள் எல்லோரும் பண்டிகை விழாவிற்குச் சென்ற பின்னர், அந்த மக்கள் வணங்கி வந்த எல்லாச் சிலைகளையும் அடித்து நொறுக்கிவிட்டு ஒரு பெரிய சிலையை மட்டும் விட்டு விட்டார்கள்.

 

விவரம் தெரிந்து மக்கள் விசாரித்தபோது, இந்தப் பெரிய சிலை தான் இவ்வாறு செய்தது; அடி வாங்கிய சிலைகள் பேசும் என்றால் அவற்றிடமே கேட்டுப்பாருங்கள் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள். (இது குறித்தே தலைப்பில் காணும் திருவசனம் பேசுகிறது.)

 

அதாவது, "அவை பேசக்கூடியதாக இருந்தால் அவற்றிடமே கேட்டுப்பாருங்கள்" என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் கூறினார்கள்.

 

அந்த மக்கள் தமக்குத் தாமே தீவிரமாக யோசிக்க வேண்டும்; சிலைகள் பேசாது; ஜடப்பொருளான சிலையால் அது இயலாது என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே இப்ராஹீம் (அலை) அவர்களின் விருப்பமாகும்.

 

இது செயல் பூர்வமான நிரூபணமாகும். தர்க்க ரீதியான பதிலாகும். தெய்வம் அடி வாங்குமா? அடி வாங்கினாலும் அடித்தவர் யார் என்றாவது சொல்ல வேண்டும் அல்லவா? இப்படி தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒன்று மற்றவர்களை காக்கும் தெய்வமாக எப்படி இருக்க முடியும்? என்பது இப்ராஹீம் (அலை) அவர்களின் வாதமாக இருந்தது.

 

சுருங்கக்கூறின்: மக்கள் வணங்கிக் கொண்டிருக்கும் சிலைகள் உண்மையான இறைவன் அல்லர் என்பதை அவர்ளுக்கு உணர்த்த  வேண்டும் என்பதற்காக இப்ராஹீம் (அலை) அவர்கள் பொய் கூறினார்கள்.

 

தமது மனைவியிடம்  

 

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. ஒருமுறை கவிஞர் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் தமது மனைவியின் அருகில் ஒருக்கணித்துப் படுத்திருந்தார்கள். இந்நிலையில் அவர்கள் எழுந்து வீட்டின் ஒரு பகுதியில் இருந்த தனது அடிமை பெண்ணுடன் உறவு கொண்டார்கள். அப்போது திடுக்கூற்று விழித்தெழுந்த அன்னாரின் மனைவி தம்முடன் படுத்திருந்த கணவரைக் காணாது எழுந்து வெளியே வந்தார். அங்கே அன்னார் தனது அடிமை பெண்ணுடன் உறவு கொள்வதை கண்டார். உடனே அவர் வீட்டிற்குள் திரும்பிச் சென்று அகலமான கத்தியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அதற்குள் அன்னார் தமது தேவையை நிறைவு செய்துவிட்டு எழுந்து விட்டார்கள். கத்தியை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அன்னார் தமது மனைவியை கண்டு, "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ( مَهْيَمْ ، لَوْ أَدْرَكْتُكَ حَيْثُ رَأَيْتُكَ لَوَجَأْتُ بَيْنَ كَتِفَيْكَ بِهَذِهِ الشَّفْرَةِ ) "என்ன விஷயமா?, நான் உங்களை அப்போது கண்டதைப் போன்று இப்போது கண்டிருந்தால் இந்த கத்தியால் உங்களை குத்தியிருப்பேன்" என்று கூறினார்.

 

அன்னார், ( وَأَيْنَ رَأَيْتِنِي ) "நீ எங்கே என்னை கண்டாய்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், ( رَأَيْتُكَ عَلَى الْجَارِيَةِ ) "அந்த அடிமைப்பெண் மீது உங்களைக் கண்டேன்" என்றார். அன்னார், ( مَا رَأَيْتِنِي ) "நீ அந்த நிலையில் என்னை கண்டிருக்க மாட்டாய். ( قَدْ نَهَى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَنْ يَقْرَأَ أَحَدُنَا الْقُرْآنَ وَهُوَ جُنُبٌ ) 'எங்களில் ஒருவர் குளிப்பு கடமையானவராக இருக்கும் நிலையில் திருக்குர்ஆன் ஓதுவதை விட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களைத் தடுத்துள்ளார்கள்" என்று கூற, உடனே அவர், "அப்படியானால் நீங்கள் ஓதுங்கள் பார்க்கலாம்" என்றார். உடனே அன்னார்,

 

كَمَا لَاحَ مَشْهُورٌ مِنَ الْفَجْرِ سَاطِعٌ     أَتَانَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ

بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ        أَتَى بِالْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا

إِذَا اسْتُثْقِلْتْ بِالْمُشْرِكِينَ الْمَضَاجِعُ    يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ



"அதிகாலை வேலையில் உயர்ந்து வெளிச்சமாகும் காலைப்பொழுது பிரகாசித்தது போன்று, அல்லாஹ்வுடைய தூதர் அவனுடைய வேதத்தை ஓதியவர்களாக எங்களிடம் வந்தார்கள் / வழிகேட்டில் இருந்தபோது நேர்வழியைக் கொண்டு வந்தார்கள். எனவே, எமது உள்ளங்கள் அவர்கள் கூறியது நடக்கும் என அவர்கள் விஷயத்தில் உறுதியுடன் இருக்கின்றன / படுக்கைகள் இணைவைப்போரின் உடல்களால் சுமை பெற்றிருக்கும்போது அன்னார் தனது படுக்கையில் இருந்து தனது விலாப்பகுதியை விலக்கிய நிலையில் தொழுகையில் இரவைக் கழிக்கின்றார்கள்.

 

என்ற கருத்தைக் கொடுக்கும் கவிதைகளை கூறினார்கள். இதை கேட்டதும் அன்னாரின் மனைவி, ( آمَنْتُ بِاللَّهِ وَكَذَّبْتُ الْبَصَرَ ) "நான் அல்லாஹ்வை நம்புகிறேன். எனது பார்வையை பொய்ப்பித்துவிட்டேன்" என்று கூறினார்.

 

பிறகு காலையில் அன்னார் அருமை நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்த விஷயத்தை கூற, நபியவர்கள் கடவாய் பற்கள் தெரியுமளவிற்கு சிரித்தார்கள். நூல்:- தாரகுத்னீ, ஹயாத்துஸ் ஸஹாபா பாகம்-3 பக்கம்-15

 

மார்க்கம் அனுமதித்த ஒன்றை நாம் பயன்படுத்துவது மனைவிக்கு பிடிக்காது என்றால் அதை பயன்படுத்திவிட்டு, அதை நான் பயன்படுத்தவே இல்லை என்று மனைவியிடம் பொய் சொல்வது தவறில்லை.

 

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்கு இரண்டு மனைவியர் இருந்தனர். அந்தக் காலத்தில் அஷ்ரஃபீ தங்க நாணயத்திற்கு தனி மதிப்பு இருந்தது. முகீரா (ரலி) அவர்கள் தமது இரு மனைவியரையும் சந்தோஷப்படுத்த எண்ணியவராக அந்த நாணயத்தில் ஒன்றை ஒரு மனைவியிடம் கொடுத்துவிட்டு, "உனக்கு மட்டும் தான் இந்த நாணயத்தைத் தருகிறேன். (அவளுக்கு கொடுக்கவில்லை)" என்றார்கள். மற்றொரு மனைவியிடம் சென்று அவ்வாறே கூறினார்கள். காரணம், என் சக்காளத்தியைவிட என்னைத்தான் என் கணவர் அதிகம் நேசிக்கிறார் என்று தன் கணவனை அந்த மனைவியர்கள் திருப்தியடைந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு தந்திரத்தைக் கையாண்டார்கள் .

 

ஒருமுறை இரு மனைவியர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது அங்கு வந்த ஒருவர் முகீரா (ரலி) அவர்களிடம், "உங்களுடைய இந்த இரு மனைவியர்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த மனைவியர் யார்?" என்று கேட்டார். உடனே முகீரா (ரலி) அவர்கள், "இவர்களில் எவளிடம் அந்த அஷ்ரஃபீ தங்க நாணயம் இருக்கிறதோ அவள் தான் எனக்கு மிகவும் பிடித்தமானவள்" என்று சாதுரியமாக பதிலளித்தார்கள்.

 

குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்பட சிறுசிறு பொய்கள் சொல்லிக் கொள்ளலாம் என்கிறது இஸ்லாம்.

 

கணவன் மனைவியை சந்தோஷப்படுத்த, மனைவியிடம் தேவைக்குத் தகுந்த மாதிரி பொய் சொல்லிக் கொள்ளலாம். அதேபோன்று மனைவியும் கணவனைச் சந்தோஷப்படுத்தும் அளவுக்கு உள்ள விஷயங்களில் பொய் சொல்லிக் கொள்ளலாம்.

 

வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் விதமாகப் பொய் சொல்வது கூடாது. மோசடி செய்வதற்காகவெல்லாம் பொய் சொல்லக்கூடாது. வேலைக்கு போகாமல் சோம்பேறித்தனமாக ஊதாரித்தனமாக இருப்பதற்காக, மனைவியின் நகைகளை வாங்கிச் செல்வதற்காக பொய் சொல்லக் கூடாது. இது மோசடி, ஏமாற்றுதல் என்ற குற்றமாகிவிடும்.

 

கணவன் மனைவிக்கிடையே ஏமாற்றாமல், மோசடிக்குள்ளாக்காமல், காதலை வளர்த்துக் கொள்ளும் வகையில் பொய்களைச் சொல்லிக் கொள்ள அனுமதியுள்ளது.

 

உதாரணமாக: மனைவி சமைத்த உணவு சுவையாக இல்லாவிட்டாலும், கணவன், "நீ சமைத்த உணவு ருசியாக இருக்கிறது. உன் கைப்பக்குவம் யாருக்கு வரும்?" என்று மனைவியிடம் பொய் சொல்லலாம். மேலும், ஒரு சில ஆடை மனைவிக்கு அழகாக இல்லாவிட்டாலும், கணவன், "இந்த ஆடை உனக்கு அழகாக இருக்கிறது" என்று மனைவியிடம் பொய் சொல்லலாம். இப்படியெல்லாம் சொல்லும்போது மனைவி தன் கணவனைப் பற்றி அகமகிழ்ந்து கொள்வாள். இதனால் அவள் கணவனின் உறவில் மானசீகமாக நடந்துகொள்வாள். இல்லறக் கடமைகளை ஈடுபாட்டுடன் செய்வாள்.

 

குடும்ப வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட பொய் சொல்வது தவறில்லை. ஆண்கள் இதை சரியாகப் புரிந்து கொண்டால், மாமியார் மருமகளுக்கிடையே சண்டை சச்சரவே ஏற்படாது. அப்படி சமாளிக்கத் தெரியாமல் பலபேர் வெகுளித்தனமாக நடப்பதினால் தான் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேருகிறது.

 

தாய்க்கும் தாரத்திற்கும் மத்தியில் ஏதேனும் சண்டை சச்சரவு ஏற்பட்டால், ஓர் ஆண், தமது தாயிடம், “நான் அவளை எப்படி கண்டித்து வைத்திருக்கிறேன் தெரியுமா? உங்க மருமகளை சும்மா விடமாட்டேன். எப்படி திட்டுகிறேன் பாருங்கள்" என்று கூட்டிக் குறைத்து மனைவியை எச்சரித்த மாதிரியும், கண்டித்த மாதிரியும் சொல்லிக் கொள்ளலாம். அதேபோன்று மனைவியின் கோபத்தைத் தணிப்பதற்காக, “அம்மாவை மூத்தவர்கள் என்று பார்க்கிறேன். இருப்பினும், நான் சும்மா விடவில்லை. கடுமையாகக் கண்டித்தேன்” என்றும், "அம்மாவுக்காக சும்மா உன்னை சபையில் திட்டுவேன். நீ அமைதியாக அடங்கிப் போய் நின்றுகொள்ள வேண்டும்" என்று முன்கூட்டியே மனைவியிடம் சொல்லிவைத்துக் கொள்ளலாம். இவ்வாறு கூட்டிக் குறைத்து சொல்லிக் கொள்ளலாம்.

 

பெற்றோர் மனைவி என இருவரின் திருப்திக்காக அங்கே ஒரு பொய் சொல்லிக் கொள்வதில் எந்தத் தவறும் இல்லை.

 

இப்படி ஒரு ஆண் நடந்து கொண்டால் பெற்றோரையும் மகிழ்வித்துவிடலாம். மனைவியும் நம்மை புரிந்துகொண்டு நமது சந்தோஷத்திற்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்வாள். இந்த வழிமுறைகளை கையாள தெரிந்த ஆண்களுக்கு மாமியார் மருமகள் பஞ்சாயத்தெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. மாமியார் மருமகள் பிரச்சனைகளை இலகுவாகத் தீர்த்துவிடலாம்.

 

ஆனால் நம்மில் பலர், அதெப்படி பொய் சொல்வது? பொய் சொல்வது பாவக்காரியம் என்று நினைத்தால், பிரச்சனைகளைத் தீர்க்கமுடியாமல், கடைசிவரை சண்டையோடு தான் வாழவேண்டும். எனவே, குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் களைவதற்கும் சந்தோஷமாக வாழ்வதற்கும் இந்த அனுமதிக்கப்பட்ட பொய் முக்கியமான அம்சமாக இடம்பெற்று விடுகிறது. அதாவது, நன்மையைப் பெற்றுத் தரும் காரியத்திற்காக குடும்பத்தில் பொய்கூட சொல்லிக் கொள்வதற்கு இஸ்லாம் நமக்கு அனுமதியளிக்கிறது என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

ஒரு வீட்டில் பண்டிகையின்போது மருமகள் விலையுயர்ந்த ஆடையை தனக்காகவும் விலைகுறைந்த ஆடையை மாமியாருக்காவும் வாங்கிக்கொண்டு வந்தாள். பிறகு, அந்த ஆடையில் ஒட்டியுள்ள விலை ஸ்டிக்கரை மாற்றி ஒட்டிவிட்டு, "மாமி! எனக்கு விலைகுறைந்த ஆடையையும், உங்களுக்கு விலையுயர்ந்த ஆடையையும் வாங்கி வந்துள்ளேன்; எனவே இதை வாங்கிக்கொள்ளுங்கள்" என்று கூறினாள்.

 

உடனே மாமியார், "வயதான எனக்கு விலையுயர்ந்த ஆடை எதற்கம்மா? வேண்டாம்; இளம்பெண்ணான நீயே அதை உடுத்திக்கொள்! விலை குறைந்த அந்த ஆடையையே எனக்கு தந்துவிடு!" என்றாள்.

 

ஆம்! இந்த மாமியார் ஒரு காலத்தில் மருமகளாக இருந்தவள் தானே! பொய்யால் எல்லோரையும், எல்லா நேரங்களிலும் ஏமாற்றிவிட முடியாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

மார்க்கத்திற்காக

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் ஒருபோதும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை:

1. (இணைவைக்கும் திருவிழாவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களை மக்கள் அழைத்தபோது) "நான் நோயுற்றிருக்கிறேன்" என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.

2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டிவிட்டு, மக்கள் "இப்படிச் செய்தது யார்?"என்று கேட்டபோது) "ஆயினும், இவர்களில் பெரியதான சிலைதான் இதைச் செய்தது" என்று கூறியது.

3. இன்னொரு பொய் (தம் துணைவி) சாரா விஷயத்தில் அவர்கள் சொன்னதாகும்: (அதன் விவரம் வருமாறு:)

 

(ஒருநாள்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியார்) சாரா (அலை) அவர்களுடன் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய நாட்டுக்குச் சென்றார்கள். சாரா (அலை) அவர்கள் மக்களிலேயே மிகவும் அழகிய பெண்மணியாக இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் சாரா அவர்களிடம், "இந்தக் கொடுங்கோல் மன்னன், நீ என் துணைவி என அறிந்து கொண்டால் உன்னை என்னிடமிருந்து கைப்பற்றிக்கொள்வான். (நீ யார் என) அவன் உன்னிடம் கேட்டால் "நீ என் சகோதரி" என்று கூறிவிடு. ஏனெனில், இஸ்லாத்தில் நீ என் சகோதரிதான். மேலும், பூமியில் உன்னையும் என்னையும் தவிர முஸ்லிம்கள் வேறெவரும் இருப்பதாக நான் அறியவில்லை" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-3358, முஸ்லிம்-4726

 

இம்மூன்றும் கண்டிக்கப்படும் அளவுக்கு உண்மையான பொய்யல்ல. அல்லாஹ் பாதுகாப்பானாக! மாறாக, மார்க்கம் சார்ந்த நோக்கத்திற்காக சிலேடையாக பேசியவற்றில் இவை அடங்கும்.

 

போர் சூழலில்

 

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ( الْحَرْبُ خُدْعَةٌ ) போர் என்பது சூழ்ச்சியாகும். அறிவிப்பாளர்:- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் நூல்:- புகாரீ-3030

 

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவது யார்?” என்று கேட்டார்கள். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ( أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ ) ‘‘நான் அவனைக் கொல்வதைத் தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று நபியவர்களிடம் கேட்க, அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், “அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்க, நபியவர்கள் ( قَدْ فَعَلْتُ ) ‘‘அவ்வாறே செய்தேன்” என்று பதிலளித்தார்கள்.

 

உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, ( إِنَّ هَذَا ـ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم ـ قَدْ عَنَّانَا وَسَأَلَنَا الصَّدَقَةَ ) ‘‘இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தர்மம் (செய்யும்படி) கேட்டார்” என்று (அண்ணல் நபி - ஸல் அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள். கஅப் பின் அல்அஷ்ரஃப், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்” என்று கூறினான்.

 

அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ( فَإِنَّا قَدِ اتَّبَعْنَاهُ فَنَكْرَهُ أَنْ نَدَعَهُ حَتَّى نَنْظُرَ إِلَى مَا يَصِيرُ أَمْرُهُ )  ‘‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்பதைப் பார்க்காமல் அவரை விட்டுவிட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) சொன்னார்கள். இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்தவுடன் அவனைக் கொன்றுவிட்டார்கள். நூல்:- புகாரீ-3032, 3031

 

கஅப் பின் அஷ்ரஃப் என்ற யூதன் கவிஞன் ஆவான். முஸ்லிம்கள் மீது கடும் பகைமை கொண்டிருந்த அவன் அருமை நாயகம் (ஸல்) அவர்களை தாக்கியும் மக்கா இணைவைப்பாளர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டியும் கவிதை பாடி வந்தான். யூதர்கள், இணை வைப்பாளர்கள் ஆகிய அனைவருடனும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு சகவாழ்வு வாழவே நபியவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால், கஅப் பின் அஷ்ரஃப் தன் கொடுஞ்செயலையும் தேசத் துரோக குற்றங்களையும் நிறுத்தவே இல்லை. மாறாக, பத்ர் போரில் முஸ்லிம்கள் வெற்றி கண்ட பிறகு கஅபின் வஞ்சகச் செயல்கள் அதிகமாகின. இறுதியாக, வேறு வழியின்றி கஅபை  பிடித்து மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக முஹம்மது பின் மஸ்லமா (ரலி) அவர்களின் தலைமையில் அன்சாரிகளின் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இது ஹிஜ்ரீ மூன்றாம் ஆண்டு நிகழ்ந்தவை.

 

இஸ்லாமிய வளர்ச்சிக்கு கேடுவிளைப்பவர்களை வேரறுப்பதற்கு, பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கின்றது என்பது தெளிவாகிறது.

 

பிரச்சனையை தடுக்க

 

ஹிஜ்ரீ ஐந்தாம் ஆண்டு அகழ் யுத்தம் நிகழ இருந்தபோது ஃகத்ஃபான் குலத்தாரைச் சேர்ந்த நுஅய்ம் பின் மஸ்ஊத் என்பவர் பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களிடம் வந்து, "நாயகமே! நான் முஸ்லிமாகிவிட்டேன். நான் முஸ்லிமானது பற்றி எனது சமூகத்தினருக்கு தெரியாது. எனவே, நீங்கள் விரும்பியபடி (முஸ்லிம்களுக்கு சாதகமாக எதிரிகளுக்கிடையே) போர் (மூளும் வேலை) செய்வதற்கு எனக்கு உத்தரவு கொடுங்கள்" என்று கூறினார்.

 

அப்போது நபியவர்கள், ( إِنَّمَا أَنْتَ فِينَا رَجُلٌ وَاحِدٌ فَخَذِّلْ عَنَّا إِنِ اسْتَطَعْتَ، فَإِنَّ الْحَرْبَ خَدْعَةٌ ) "நீர் நம்மிடையே உள்ள ஒருவராக இருக்கிறீர். எனவே, நம் சார்பாக உன்னால் இயலுமானால் (எங்களை விட்டும் எதிரிகளைத் திசை திருப்பும்) தந்திரம் ஏதேனும் செய்து கொள். ஏனெனில், போர் என்பதே ஒரு சூழ்ச்சி தான்" என்று கூறினார்கள்.

 

உடனே நுஅய்ம் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பனூ குறைழா குலத்தினரிடம் வந்து, நான் உங்களிடம் கொண்டிருக்கும் நட்பை நீங்கள் அறிவீர்கள். எனவே, (உங்களுடன் சேர்ந்து போர் புரிய வந்துள்ள) குறைஷியரும் ஃகத்ஃபான் குலத்தினரும் உங்களைப் போன்றோர் அல்லர்.

 

(ஏனெனில், மதீனா மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள) இந்த நாடு, உங்கள் நாடு. (உங்கள்) இந்த நாட்டில் தான் உங்கள் செல்வங்களும் உங்கள் (வீட்டுப்) பெண் பிள்ளைகளும் உள்ளனர். நீங்கள் இந்த நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு உங்களால் இயலாது. ஆனால் குறைஷி மற்றும் ஃகத்ஃபான் குலத்தினரும் உங்களைப் போன்றோர் இல்லை.

 

அவர்கள் முஹம்மதிடமும் அவர்களின் தோழர்களிடமும் போரிடுவதற்காக (வேறு நாட்டிலிருந்து) வந்துள்ளனர். அவர்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள். அவர்களது (வீட்டுப்) பெண்களும் அவர்களது செல்வங்களும் இந்நாட்டில் கிடையாது. எனவே, அவர்கள் (போரில் நல்ல) தாக்கும் வாய்ப்பைக் கண்டால் தாக்குவர். அது இல்லாத போனால் அவர்கள் தங்கள் நாட்டிற்கு(த் தப்பித்து)ச் சென்று விடுவர். (பிறகு நீங்கள் முஹம்மதிடம் வசமாக மாட்டிக் கொள்வீர்கள்.) அவர்கள் உங்கள் நாட்டில் உங்களை தனியே விட்டு(ச் சென்று) விடுவர். முஹம்மத் உங்களுடன் தனித்து விடப்பட்டிருக்கும்போது (அவர் உங்களிடம் பழி தீர்த்துக் கொள்வார்) அவரை எதிர்க்க உங்களுக்கு ஆற்றல் கிடைக்காது.

 

ஆகவே, நீங்கள் அவர்களுக்கு உதவுவதாக இருந்தால், இவர்களில் சில பிரமுகர்களை வெற்றி பெறும் வரை அடமானமாக பிடித்து உங்கள் கைவசத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு பிடித்து வைத்துக் கொள்ளாத வரை அந்த குலத்தாருடன் சேர்ந்து போரிடாதீர்கள். ஏனெனில், நீங்கள் (சிலரை அடமானமாக பிடித்து வைத்தால் தான்) அந்தக் குலத்தாருடன் சேர்ந்து முஹம்மதிடம் போரிட்டு அவரை வெற்றி கொள்ளும் வரை அக்குலத்தார் உங்களுக்கு நம்பகமானவர்களாக அமைவார்" என்று கூறினார்.

 

அதற்கு பனூ குறைழா குலத்தார், "நீ நமக்கு நல்ல ஆலோசனை அளித்தாய்" என்றனர்.

 

பிறகு நுஅய்ம் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறைஷியர் மற்றும் ஃகத்ஃபான் குலத்தாரிடம் சென்று நான் முஹம்மதின் மீது கொண்டிருக்கும் வெறுப்பை நீங்கள் அறிவீர்கள். உங்கள் நலனில் அக்கறை கொண்டவனாக ஒரு தகவலை நான் சொல்லுகிறேன். அதை நீங்கள் மறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, "யூத கூட்டத்(தினரான பனு குறைழா குலத்)தார் முஹம்மதுக்கும் அவரின் தோழர்களுக்கும் செய்து கொடுத்த உடன்படிக்கையை முறித்தது பற்றி மிகவும் கைசேதம் அடைந்துள்ளனர்.

 

அதனால் பனூ குறைழா குலத்தார், முஸ்லிம்களிடம் ஆட்களை அனுப்பி நாங்கள் மேற்கொண்ட உடன்படிக்கை முறிவுக்காக கை சேதம் அடைந்துள்ளோம். ஆகவே, நாங்கள் (அதற்குப் பரிகாரமாக) குரைஷியர் மற்றும் ஃகத்ஃபான் ஆகிய இரு குலத்தாரிடமிருந்து சில பிரமுகர்களை (அடமானமாக) வாங்கி அவர்களை உங்களிடம் அளிக்கிறோம். நீங்கள் அவர்களின் கழுத்தை வெட்டி விடுங்கள். பிறகு நாங்கள் உங்களுடன் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு எதிராக போரிடுவோம். இது உங்களுக்கு திருப்தி தானா? என்று கூறியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

 

ஆகவே, (பனூ குறைழா குலத்தைச் சேர்ந்த) யூதர்கள் உங்களிடம் உங்களின் ஆட்களை அடமானமாகக் கேட்டு அனுப்பினால் அவர்களிடம் உங்களில் ஒருவரையும் கொடுத்து விடாதீர்கள்" என்று கூறினார்.

 

பனூ குறைழா குலத்தார் குறைஷியர் மற்றும் ஃகத்ஃபான் குலத்தாரிடம், "நாங்கள் முஹம்மதிடம் உங்களுடன் சேர்ந்து போரிடுவதாக இருந்தால் நாங்கள் முஹம்மதிடம் போரிட்டு வெற்றி பெறும் வரை எங்களுக்கு உங்களுடைய சில ஆட்களை எங்கள் கரங்களில் நம்பிக்கைக்குரியவர்களாக அடமானம் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கும் வரை நாங்கள் போராட மாட்டோம்.

 

ஏனெனில், போர் உங்களை கடுமையாக தாக்கி பாதித்துவிட்டால் எங்களை கைவிட்டு விட்டு நீங்கள் உங்கள் நாட்டுக்கு விரைந்து சென்று விடுவீர்கள் என்று அஞ்சுகிறோம். அப்போது (நாங்கள் அவரிடம் வசமாக மாட்டிக் கொள்வோம்) அவரை எதிர்ப்பதற்கு எங்களுக்கு ஆற்றல் இருக்காது. (அதனால் தான் அடமானம் கோருகிறோம்) என்று சொல்லி அனுப்பினார்.

 

இந்தச் செய்தியை  செவியுற்றபோது குறைஷியர் மற்றும் ஃகத்ஃபான் குலத்தாரும், "அல்லாஹ்வின் மீதாணையாக! நுஅய்ம் பின் மஸ்ஊத் நமக்கு தெரிவித்த செய்தி உண்மைதான்" என்றனர். எனவே, எங்கள் ஆட்களில் ஒருவரையும் உங்களுக்கு நாங்கள் (அடமானமாக) அளிக்க மாட்டோம்" என்று தூது சொல்லி அனுப்பினர்.

 

இதை செவியற்ற பனூ குறைறா குலத்தார் நுஅய்ம் பின் மஸ்ஊத் கூறிய செய்தி உண்மைதான். அல்லாஹ்வின் மீதாணையாக! நமக்கு நீங்கள் அடமானமாக சிலரை எங்களுக்கு வழங்காதவரை உங்களுடன் சேர்ந்து நாங்கள் முஹம்மதிடம் போரிட மாட்டோம்" என்று கூறிவிட்டனர்.

 

அடுத்த நாள் வீசிய பனிப்புயலை தாங்க முடியாத கூட்டணிப் படையினர் சிதறி ஓடினர். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்,  அல்பிதாயா வந்நிஹாயா

 

அரபு தீபகற்பத்திலிருந்த முஸ்லிம்களின் எதிரிகள் அனைவரையும் யூதர்கள் ஒன்று திரட்டி அழைத்து வந்திருந்தனர். அதனால் அந்த யுத்தத்தை அஹ்ஸாப் கூட்டணிப்படையினரின் யுத்தம் என்று திருக்குர் ஆன் கூறுகிறது. இந்த பெயரில் ஒரு அத்தியாயமே இருக்கிறது.

 

எதிரிகள் சுமார் 10 ஆயிரம் பேர் இருந்தனர். அவர்கள் மதீனாவை நெருங்கியும் விட்டனர். முஸ்லிம் போராளிகளின் எண்ணிக்கை வெறும் மூவாயிரமாக இருந்தது. கடுமையான பனிக்காலமாகவும் இருந்தது. முஸ்லிம்களை அவர்களுடைய நிலத்திலேயே நீர்மூலமாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் எதிரிகள் திரண்டிருந்தனர். முஸ்லிம்கள் பீதியில் உறைந்து போயினர். சல்மான் பார்சீ (ரலி) அவர்களின் ஏற்பாட்டின் படி மதீனாவை சுற்றி ஒரு அகழி வெட்டப்பட்டிருந்தது.

 

மதீனாவிற்குள் முஸ்லிம்களைத் தவிர பனூ குறைழா என்ற ஒரு யூத குடும்பமும் இருந்தது. அவர்களோடு நபியவர்கள் உடன்படிக்கை செய்திருந்தார்கள். இந்த அகழி தோண்டும் பணிக்காக அவர்களிடமிருந்து மண் வெட்டி போன்ற ஆயுதங்களை  இரவலாக கூட வாங்கியிருந்தார்கள்.

 

மதீனாவிற்கு வெளியே படையோடு நின்ற யூதர்கள் உள்ளிட்ட எதிரிகள் விசயத்தில் கவலை கொண்டிருந்த போதும், உள்ளே இருந்த யூதர்கள் விசயத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் அவநம்பிக்கை கொள்ளவில்லை.

 

ஆனால், வெளியிலிருந்த யூதர்கள் இரகசியமாக இரவின் இருட்டில் அகழியை கடந்து வந்து மதீனாவிற்குள்ளே இருந்த யூதர்களை, “நீங்கள் உள்ளிருந்து சண்டையை ஆரம்பியுங்கள். உங்களை நோக்கி முஸ்லிம்களின் கவனம் திரும்பும்போது நாங்கள் வெளியிலிருந்து பாய்ந்து வந்து விடுகிறோம்” என்றார்கள்.

 

அதற்கு பனூ குறைழா யூதர்கள் உடன்பட்டார்கள். இந்த செய்தி நபியவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தெரிய வந்தபோது தான், அன்றிரவு ஒரு அதிசயம் நிகழ்ந்த்து. எதிரிகளோடு எதிரியாக யுத்தத்திற்கு வந்த நுஅய்ம் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் இதயத்தில் அல்லாஹ் ஈமானிய வெளிச்சத்தை பாய்ச்சினான். ஆச்சரியகரமான முறையில் அவர் இரவின் இருட்டைப் பயன்படுத்தி பெருமானாரை சந்தித்து இஸ்லாமை தழுவினார். அதன் பிறகு மேற்கண்ட நிகழ்வு நடைபெற்றது.

 

பகைமை கொண்ட இருவருக்கும் மத்தியில் நல்லுறவு மேம்பட, அல்லது இருவருக்கும் மத்தியில் ஏற்படயிருக்கும் மோதலை தவிர்ப்பதற்கு தாராளமாக பொய் சொல்லலாம். அது நன்மையான காரியமே. இது நாட்டிற்கும் பொருந்தும்.

 

சாந்தப்படுத்துவதற்கு

 

அஸ்மா பின்த் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது ஹிஜ்ரத் பயணத்தின்போது தாம் சம்பாத்தியம் முழுவதையும் எடுத்துச் சென்று விட்டார். அது ஏறக்குறைய 5000 முதல் 6000 வெள்ளிக்காசுகள் இருக்கலாம். பிறகு எங்களிடம் கண் பார்வையற்ற நிலையில் எங்கள் பாட்டனார் (அபூபக்ர் - ரலி அவர்களின் தந்தை) அபூ குஹாஃபா அவர்கள் தமது மகனைத் தேடி வீட்டுக்கு வந்தார். மகன் சென்றுவிட்டார் என்பதை அறிந்ததும் அவர், ( وَاللَّهِ إِنِّي لَأَرَاهُ قَدْ فَجَعَكُمْ بِمَالِهِ مَعَ نَفْسِهِ ) "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கென்று எதையும் விட்டுவைக்காமல் அவருடைய முழு செல்வத்தையும் உடன் எடுத்து சென்று விட்டதாகவே நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

 

அப்போது நான், ( كَلَّا يَا أَبَتِ إِنَّهُ قَدْ تَرَكَ لَنَا خَيْرًا كَثِيرًا ) "என் பாட்டனாரே! அவ்வாறல்ல; அவர் எங்களுக்கு நிறைய செல்வத்தை விட்டுச் சென்றுள்ளார்" என்று கூறிவிட்டு, என் தந்தை தம் செல்வத்தை வைக்கும் அறையின் மாடத்தில் (வெள்ளிக் காசுகளைப் போன்ற) கற்களை எடுத்து வைத்தேன். பிறகு அதன் மேல் துணிகளைப் போட்டேன்.

 

பிறகு நான் பாட்டனாருடைய கரத்தை பிடித்து, ( يَا أَبَتِ ضَعْ يَدَكَ عَلَى هَذَا الْمَالِ ) "என் பாட்டனாரே! உங்கள் கரத்தை இந்த செல்வத்தின் மீது வையுங்கள்" என்றேன். அவர் தமது கரத்தை அதன் மேல் வைத்த போது, ( لَا بَأْسَ إِذْ كَانَ قَدْ تَرَكَ لَكُمْ هَذَا فَقَدَ أَحْسَنَ، وَفِي هَذَا بَلَاغٌ لَكُمْ ) "பரவாயில்லை; இதை உங்களுக்கு விட்டுச் சென்றிருந்தால் அவர் நல்லது புரிந்துள்ளார். இதில் உங்களுக்கு (போதுமானத்) தொகை இருக்கிறது" என்று கூறினார். ஆனால், ( وَلَا وَاللَّهِ مَا تَرَكَ لَنَا شَيْئًا، وَلَكِنْ أَرَدْتُ أَنْ أُسَكِّنَ الشَّيْخَ بِذَلِكَ ) அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எதையும் விட்டுச் செல்லவில்லை. எனினும், நான் இதன் மூலம் நாம் அம்முதியவரை சாந்தப்படுத்துவதற்கு விரும்பினேன். (அதனால் அவ்வாறு செய்தேன்.) நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்,  அல்பிதாயா வந்நிஹாயா

 

இந்நிகழ்வு அஸ்மா (ரலி) அவர்களின் புத்திக்கூர்மைக்கு ஓர் சான்றாகும். அதாவது, அஸ்மா (ரலி) அவர்கள் தமது தந்தை அபூபக்ர் (ரலி) அவர்கள் குறித்து மனைவி மக்கள் மீது பொறுப்பில்லாதவர் என்று தமது பாட்டனார் தவறாக எண்ணி விடக்கூடாது. மேலும், தமது பாட்டனார், "இனிமேல் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்?" என்றெண்ணி கவலைப்பட்டு உடல்நலம் குன்றி விடக்கூடாது என்பதற்காக தான் இல்லாததை இருப்பதாகக் காட்டி, தமது பாட்டனாரை ஆசுவாசப்படுத்தினார்கள்.

 

ஆம்! சில நேரங்களில் பொய்யால் நன்மை விளையும். நமது வீட்டின் மூத்தவர்களிடம், "உள்ளதை சொல்வதின் மூலம் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அச்சம்கொள்ளும்போது, அவர்களிடம் உள்ளதைச் சொல்லாமல் மறைத்துவிடலாம். அது தவறொன்றுமில்லை. அது, பொய் சொன்ன குற்றமாக ஆகாது.

 

சிலேடைகள்

 

பேராசான் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( إِنَّ الْمَعَارِيضِ لَمَنْدُوحَةً عَنِ الْكَذِبِ ) சிலேடைகள் (பொய் ஆகாது) பொய்க்கு மாற்றாகும். அறிவிப்பாளர்:- இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் நூல்:- பைஹகீ, அல்கபீர் தப்ரானீ, முஸன்னஃப் இப்னு அபீஷைபா, தஃப்சீர் இப்னு கஸீர் வசனம்-90

 

ஹிஜ்ரத் பயணத்தின் போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பாதையில் ஒருவர் அருமை நாயகம் (ஸல்) அவர்களை சுட்டிக்காட்டி, "இவர் யார்?" என்று கேட்டார். அபூபக்ர் (ரலி) அவர்கள், "இவர் வழிகாட்டி; எனக்கு நேரான பாதையைக் காட்டுபவர்" என்றார்கள். கேள்வி கேட்டவர் மதீனா செல்வதற்காக பாதையை காட்டும் வழிகாட்டி என்று கருதி இருப்பார். ஆனால், உண்மையில் அபூபக்ர் (ரலி) அவர்கள், அண்ணல் நபி (ஸல்) அவர்கள் குறித்து "இறைவனின் மார்க்கத்தின் பக்கம் வழிகாட்டுபவர்" என்பதையே கூறினார்கள்.

 

அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பதில் எச்சரிக்கை உணர்வுடன் சொல்லப்பட்ட ஒன்று. பொய் சொல்லவும் கூடாது. உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது. அபூபக்ர் (ரலி) அவர்களின் பதிலைக் கேட்டு அருமை நாயகம் (ஸல்) அவர்களும் அதற்கு எந்த மறுப்பும் சொல்லவில்லை.

 

பத்ரு போர் நடைபெறுவதற்கு முன்பு பேராசான் பெருமானார் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் எதிரிகளின் போர் ஏற்பாடுகளைக் கண்டறிய புறப்பட்டு சென்றபோது, சுஃப்யான் அள்ளம்ரீ என்ற ஒரு முதியவரைச் சந்தித்தார்கள். தங்களை வெளிக்காட்டாமல் நபியவர்கள் அவரிடம் குறைஷிப்படை மற்றும் முஹம்மத் அவருடைய தோழர்கள் ஆகியோரை குறித்து விசாரித்தார்கள்.

 

முதியவர்: நீங்கள் இருவரும் யார் என்று அறிவிக்காத வரை அவர்களை குறித்து உங்களுக்கு நான் எதுவும் கூற மாட்டேன்.

நபியவர்கள்: ( إِذَا أَخْبَرْتَنَا أَخْبَرْنَاكَ ) “(அவர்களைக் குறித்து) நீர் எங்களுக்கு அறிவித்தால், (எங்களைக் குறித்து) நாங்கள் உமக்கு அறிவிப்போம்.”

முதியவர்: அதைக் கூறினால் தான் இதைக் கூறுவீர்களா?

நபியவர்கள்: ஆம்!

முதியவர்: முஹம்மதும் அவருடைய தோழர்களும் இந்த நாளில் புறப்பட்டு விட்டதாக எனக்குச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையெனில் அவர்கள் இப்போது இந்த இடத்தில் இருப்பார்கள். (அவர் கூறிய இடத்தில் தான் அப்போது முஸ்லிம் படையினர் போருக்காக முகாமிட்டிருந்தனர்.) மேலும், குறைஷிகளும் இந்த நாளில் புறப்பட்டு விட்டதாக எனக்குச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையெனில் அவர்கள் இப்போது இந்த இடத்தில் இருப்பார்கள். (உண்மையில் குறைஷிப் படையினர் அப்போது அந்த இடத்தில் தான் முகாமிட்டிருந்தனர்.) நீங்கள் கேட்டதை நான் கூறிவிட்டேன். இப்போது நீங்கள் இருவரும் யார்? என்று கூறுங்கள்.

நபியவர்கள்: ( نَحْنُ مِنْ مَاءٍ ) “நாங்கள் தண்ணீரில் இருந்து வந்தவர்கள்” என்று கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து திரும்பிவிட்டனர்.

 

பின்பு முதியவர் இவ்வாறு சொல்லிக் கொண்டே இருந்தார். ( مَا مِنْ مَاءٍ؟! أَمِنْ مَاءِ الْعِرَاقِ؟ ) என்ன? தண்ணீரிலிருந்து வந்தவர்களா? (எந்தத் தண்ணீரிலிருந்து?) ஈராக் நாட்டுத் தண்ணீரில் இருந்தா? என்று கேட்டு (புலம்பிக்) கொண்டிருந்தார். நூல்:- சீரத் இப்னு ஹிஷாம்,  அல்பிதாயா வந்நிஹாயா

 

மனிதர்கள் அனைவரும் விந்து மற்றும் திரவத்தால் நிரம்பிய கருப்பை என்ற தண்ணீரிலிருந்து வந்தவர்களே தானே! அந்த அடிப்படையில் நபியவர்கள் அவ்வாறு பதிலளித்தார்கள்.

 

சிலவேளை நமது எதிரி அல்லது அறிமுகம் இல்லாதவர்களிடம் உண்மையையும் சொல்லாமல் பொய்யையும் சொல்லாமல், இரு கருத்துக்கள் உள்ளதை சொல்லிவிட்டுச் செல்வது நல்லது. அதுதான் நமக்கு பாதுகாப்பு.

 

சிலேடை (மஆரிள் அல்லது தவ்ரியா) என்பது இரு பொருள் கொண்ட ஒரு வார்த்தையைக் கூறி, அதன் நெருக்கமான பொருளை விடுத்து, தொலைவானப் பொருளைக் கருத்தில் கொள்வதாகும். இதற்கு இரு பொருள் மயக்கம் (Equivocal) என்ற பெயரும் உண்டு.

 

வெளிப்படைக்கு மாறான பொருளைத் தருவதாலும் பொருள் ஒன்றிருக்க நோக்கம் வேறொன்றாக இருப்பதாலும் இதைப் பொய் என்று கருதிவிடலாகாது. உண்மையை மறைக்கும் நோக்கம் இல்லாததால் இது பொய் ஆகாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் கூட இவ்வாறு சிலேடையாகப் பேசி இருப்பதற்கு ஆதாரங்கள் ஏராளம் உண்டு.

 

இப்னு அபிஸ்ஸனாத் (ரஹ்) அவர்கள் ( ابن أبي الزّناد ) கூறுகிறார்கள். அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடத்தில் கண்மணி பெருமானார் (ஸல்) அவர்களின் சட்டை ஒன்று இருந்தது. அன்னாரின் மகனார் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட போது அந்த சட்டையையும் கொள்ளையடித்துச் கொண்டு செல்லப்பட்டது.

 

அப்போது அஸ்மா (ரலி) அவர்கள் ( لِلْقَمِيصِ أَشَدّ عَلَيّ مِنْ قَتْلِ عَبْدِ اللَّهِ ) (என் மகன்) அப்துல்லாஹ் கொல்லப்பட்டதைவிட அந்த சட்டை காணாமல் போனது எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறதுஎன்று கூறினார்கள். அந்தச் சட்டை ஷாம் நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் இருந்தது. (அவன் தான், அப்துல்லாஹ் பின் ஜுபைர் - ரலி அவர்களை படுகொலை செய்தவர்களில் ஒருவனாகும். அவன் பெயரும் அப்துல்லாஹ் என்பதேயாகும்.)

 

அவன், ( لَا أَرُدّهُ أَوْ تَسْتَغْفِرُ لِي أَسْمَاءُ ) “அஸ்மா (ரலி) அவர்கள் எனக்காக மன்னிப்பு தேடாதவரை அந்தச் சட்டையை நான் கொடுக்க மாட்டேன்என்று கூறினான்.

 

இச்செய்தியை அஸ்மா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டபோது, ( كَيْفَ اسْتَغْفِرَ لِقَاتِلِ عَبْدِ اللَّهِ؟ ) “(என் மகன்) அப்துல்லாஹ்வை கொன்றவனுக்கு நான் எப்படி மன்னிப்பு கேட்பேன்? என்றார்கள். உடனே அங்கிருந்தவர்கள் “அப்படியானால் அந்த சட்டையை உங்களுக்கு அவன் திரும்ப தரமாட்டான்” என்று கூறினார்கள். உடனே அஸ்மா (ரலி) அவர்கள்,  ( قُولُوا لَهُ فَلْيَجِيءْ ) “அவனை அந்த சட்டையை கொண்டு வர சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அவன் அந்தச் சட்டையை கொண்டு வந்தான். அவனுடன் அப்துல்லாஹ் பின் உர்வா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். (இவர்  அஸ்மா - ரலி அவர்களின் பேரராகும்)

 

அஸ்மா (ரலி) அவர்கள், ( ادْفَعْ الْقَمِيصَ إِلَى عَبْدِ اللَّهِ ) “அந்தச் சட்டையை (தமது பேரன்) அப்துல்லாஹ்விடம் கொடுத்து விடு!” என்று அவனிடம் கூறினார்கள். அவன் அப்துல்லாஹ்விடம் கொடுத்தான். அஸ்மா (ரலி) அவர்கள், ( قَبَضْتُ الْقَمِيصَ يَا عَبْدَ اللَّهِ؟ ) “அப்துல்லாஹ்! நீ சட்டையை  வாங்கிவிட்டாயா? என்றார்கள். அதற்கு அவர், ஆம்என்றார். அஸ்மா (ரலி) அவர்கள், ( غَفَرَ اللَّهُ لَكَ يَا عَبْدَ اللَّهِ ) அப்துல்லாஹ்! அல்லாஹ் உன்னை மன்னிப்பானாக” என்றார்கள்.

 

அஸ்மா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் என்று (தம்முடைய பேரன்) அப்துல்லாஹ் இப்னு உர்வா (ரலி) அவர்களை நாடினார்கள். கொலையாளியோ தன்னை தான் என்று நினைத்துக் கொண்டான். நூல்:- அஹ்பாருள் ளராஃபி வல்மத்தமாஜினீன் ( اخبار الظّراف والمتماجنين ) இமாம் இப்னு ஜவ்ஸீ

 

மார்க்கம் கூறும் சட்டங்களையும், சலுகைகளையும் அறிந்து அதன்படி செயலாற்றும் அறிவுத்திறனை அல்லாஹுத்தஆலா நமக்கு வழங்குவானாக! ஆமீன்!

 

மௌலவி, மு.முஹம்மது ஹைதர்அலீ இம்தாதி, இமாம்: நீலாங்கரை, சென்னை. செல்: 9840535951

 

No comments:

Post a Comment

சமிக்ஞை போதும்!

  சமிக்ஞை போதும்! اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ ...